செவ்வாய், மே 28, 2013

உனக்கும் எனக்குமான....





உனக்கும் எனக்குமான....


உனக்கும் எனக்குமான இடைவெளியை 
நான் கவிதைகள் இட்டே நிரப்பி கொண்டிருக்கிறேன் 


உனை பார்க்கும் போது  எனை  பார்க்க மறுக்கிறாய் 
பார்க்காத போதோ  பார்த்த வண்ணமே  இருக்கிறாய்  


நம்மால்  நேர்ந்த நம் காயங்களுக்கு
அன்பால் மருந்திட்டு கொள்கிறோம் 


நான் ஆசை எனும் பேரலைகளால் சூழ்ந்திருக்க
நீ மட்டும் ஆழ் கடல் அமைதியில்


விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள்  பட்டியலில் எனக்காக
நீ விடும் கண்ணீரையும் சேர்த்திருக்கிறேன் 


நீ பேசாத பொழுதுகளில் உன் கொலுசுடன் 
பேசி  கொண்டிருக்கிறேன் 


நீ உனக்குள் பதுக்கிய என் காதலை எப்போது வெளி கொணர்வாய்
என எப் பொழுதும் விழிப்புடன் நான் 


என் வாழ்க்கை பாலைவனமாய் மாறியிருந்த சமயம்
ஒரு வற்றாத ஜீவ நதியாய் நுழைந்தவள் நீ



என்  இதழ் காயத்திற்கு மருந்தாகுமோ
உன் இதழ்களின் ஒத்தடம் 


உன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும்
வா நம் வெற்றியை உலகம்  கொண்டாடட்டும் 


எனது இளமை எழுதும் கவிதை நீ.... தொடர்கதையின் அத்தியாயங்களில் 
நான் குறிப்பிட்டிருந்த கவிதை வரிகள் 


ஆர்.வி.சரவணன் 


படம் :கூகுள் 

ஞாயிறு, மே 19, 2013

ஸ்வீட் காரம் காபி - 19-05-2013








ஸ்வீட் காரம் காபி
-----------------------------------------19-05-2013
(சூது கவ்வினாலும் எதிர் நீச்சலிடு) 


சூது கவ்வும்

நான் ஸ்டாப் காமெடி படம் இது. விமர்சனம் எதையும் படிக்காமல் 
படம் பார்க்க போனதால் படம் பார்க்க நல்ல சுவாரஸ்யமா இருந்துச்சு.
ஆள் கடத்தலை சீரியஸா பார்த்திருக்கோம். இதிலே அதையே நகைச்சுவையா ரூட் போட்டு பண்ணிருக்கார் நலன் குமரசாமி. 
விஜய் சேதுபதி வேலையில்லாத மூன்று  நண்பர்களுடன்  சேர்ந்து 
ஆள் கடத்தி பணம்சம்பாதிக்கிறார்.மந்திரியின் மகனை கடத்தும் போது 
வரும்   சுவாரசிய கலாட்டாக்கள் தான் கதை.விஜய் சேதுபதி கடத்தப்பட்ட பெண்ணின் தந்தையிடம் பணம் வாங்கி கொண்டு நடந்து வரும் இடம் , எம்.எஸ்.பாஸ்கர் மனைவி கணவன் அடிப்பதை கண்டு பயந்து அலறுவது போல் நடித்து, உள்ளே வந்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு இம்சை நீ சாப்பாடை  போடு என்று சாதாரணமாக  சொல்லும் இடம்.  என்று படம் நெடுக நாம் ரசிக்க காட்சிகள் இருக்கிறது. அதே போல் வசனமும் அங்கங்கே பளீரிட்டு நம்மை சிரிக்க வைக்கிறது ."டெய்லி 18 டி குடிக்கிறவனை கடத்த பிளான்  தேவையில்லை ஒரு டீ கடை போட்டா போதும்"  இது ஒரு சாம்பிள் ஹீரோயின் இருக்கு ஆனால் இல்லை என்பது போல் செய்திருக்கும் இயக்குனரின் புத்திசாலிதனம் பளிச்சிடுகிறது.  சந்தோஷ் நாராயண் இசையில் துட்டு மணி..... பாடல் பார்க்கும் போது  நமக்கே ஆடலாம் போல தோணுது. மந்திரி மகன் கடத்தலை எப்படி போலீஸ் கண்டு பிடிக்கவில்லை.

தவறுகளை நியாயபடுத்தும் விதமான கதை இதெல்லாம் மைனஸ் 
என்றாலும் அதையெல்லாம்  தூர வைத்து விட்டு நம்மை ரசிக்க வைத்திருக்கிறது, ஒவ்வொரு காட்சியையும் கேரக்டரையும் கவனம் 
எடுத்து செய்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம்.
(மனசை அள்ளும்  இந்த சூது கவ்வும் )  








எதிர் நீச்சல்

 ஹீரோ  பெற்றோர் வைத்த பெயரை   மாற்றி கொண்டு புது பேரில் வெற்றி பெற ஆசைப்பட்டு வெற்றி பெற்று மீண்டும் தன் பெற்றோர் வைத்த பெயரால் அழைக்கபடுவதை விரும்புவதே கதை. ஹீரோ  சிவ கார்த்திகேயன் தன் பெயரால் அவர் படும்  அவஸ்தை காதல் லட்சியம் என்று அவரது கேரக்டரை ரசிக்க முடிகிறது.பிரியா ஆனந்த் பள்ளி ஆசிரியையாக புடவையிலும்  சுடிதாரிலும்  பார்க்கும் போது மனசை அள்ளுகிறார். இடைவேளைக்கு பின் கதை வேறு உலகத்தில் பயணிப்பதால் முதல் பாதியின் டெம்போ குறைந்தார் போல் ஆகி விடுகிறது. விளையாட்டு வீராங்கனை நந்திதாவுக்காக பழி வாங்க புறப்பட்ட மாதிரி இருக்கிறது 

இதற்கு பதில் இப்படி செய்திருக்கலாம். படம் ஆரம்பிக்கும் போது சிவ கார்த்திகேயன் நந்திதா  விடம்   பயிற்சி பெற வர,  அவர் எதற்காக நீ பயிற்சி பெறுகிறாய் என்று கேட்க சிவா என் புது பெயரில் அறியப்பட ஆசைபடுகிறேன் என்று சொல்ல பெற்றோர் வச்ச பெயர்லயே என்னாலே விண் பண்ண முடியல நீ அப்பா அம்மா வைக்காத புது பெயர் மாற்றி என்ன சாதிக்க 
போறே என்று சொல்லி தன் கதையை அவர் சொல்ல பின்பு சிவா 
தன் கதையை சொல்வதாக அமைத்து பின் ஜெயிக்கும் கட்சிகளை வைத்திருக்கலாம். பாடல்களில் அனிருத்தின் இசையில் , பூமி என்னை சுத்துதே பாடல் நம் காதுகளை சுற்றுகிறது.தனுஷ் வரும் பாடல் வாழை இலை போட்டு பரிமாறிய சைவ சாப்பாட்டில் முட்டை ஆம்லேட் வைத்ததை போன்று தோன்றுகிறது.பள்ளி கூட காட்சிகள்,மாரத்தான் பயிற்சி காட்சிகள்,  நண்பர் கல்யாணத்தில்  நடக்கும் கலாட்டா , ஹீரோவின் நண்பராக வரும் சதீஷ் அடிக்கும் வசனங்கள் என்று படம் முழுவதும் நம்மை ஈர்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் துரை  செந்தில்குமார் 
(சுவாரஸ்ய நீச்சல்)

------


சரிதாயணம் 



வலைபதிவர் நண்பர்  பால கணேஷ் அவர்கள்,  தனது மின்னல் வரிகள் தளத்தில் எழுதி  புத்தகமாக  வெளியிட்ட சரிதாயணம் நூல் படித்தேன். 
எனக்கு  நகைச்சுவையாக எல்லாம் எழுத வராது.ஆனால் நகைச்சுவையாக எழுதப்படும் கதைகளை  விரும்பி படிப்பேன். அந்த வகையில் நான் 
விரும்பி படிப்பது பால கணேஷ் எழுத்துக்களை.   இந்த  புத்தகத்தில் 
வரிகளின் இடையிடையே மின்னலாய் வெளிப்படும் நகைச்சுவை  நம் முகத்தில் புன்னகையை பளீரிட வைக்கிறது. 

அகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த  அந்த பெண் நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாக பார்த்து பார்த்து பெருமூச்சு   விட்டாள்,  சரிதா   குறைவு குறைவு  என்று (அதாங்க லோ லோன்னு ) அலறினாள்,     நான் பொறுமை இழந்து கடுங்கோபம் கொண்டதன் விளைவு முன் மண்டை வீங்கி விட்டது அவளுக்கல்ல எனக்கு சுவரில் மடல் மடேலென்று முட்டி கொண்டால் பின் என்னாகும். 

இப்படி நெடுக வரும் நகைச்சுவையுடன், ஹோட்டல் லில் சரிதாவுடன் சாப்பிட செல்வது, கார் ஓட்ட கற்று கொள்வது, செந்தமிழ் கற்று கொள்வது, நண்பன் குடும்ப வாண்டுகளால் வீட்டில் படும் அவஸ்தை  பகுதிகளை விரும்பி ரசித்தேன். எழுத்தாளர் திரு பட்டுகோட்டை பிரபாகர்  மதிப்புரையில்
வெளி வந்திருக்கிறது இந்த புத்தகம்.  பால கணேஷ் சார் ஒரு கண்டிப்பான வேண்டுகோள் .(சரிதாயணம் தொடர்ந்து எழுதியாகணும்)

------

எனது நண்பரின் நண்பர் ( நமக்கும் நண்பர் தானே)  திரு. ராம் கிருஷ்ணா கடலூரில் வசிக்கிறார். அவர் எடுத்திருக்கும் குறும் படம்  காண நேர்ந்தது. தொழில் நுட்ப வசதிகள் குறைவாய் இருந்த போதும் படம் எடுத்திருக்கும் 
அந்த குழுவினரின்  முயற்சியை  போன் செய்து பாராட்டினேன்.  அதற்கு 
அவர் அடைந்த  சந்தோஷம்  பார்த்து எனக்கே ஆச்சரியமாகி விட்டது.
அவரது கண் மற்றும்  சட்டம் தன் கடமையை செய்யும் குறும் படங்களை 
இங்கே பகிர்ந்திருக்கிறேன். ஸ்டோரி லைன், சீன்கள், மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் ப்ரெசென்ட் பண்ணிய விதத்தில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம். நடிப்பு இன்னும் இயல்பாக இருந்திருக்க வேண்டும்   அதனாலென்ன. குழந்தை நடக்க தொடங்கிய புதிதில் தத்தக்க புத்தக்க என்று நடந்தாலும் அதுவே  அழகு தானே. நண்பர்களே நீங்கள் பார்த்து அவரை ஊக்கபடுத்துங்கள்.(வாழ்த்துக்கள் ராம் கிருஷ்ணா)


சட்டம் தன் கடமையை செய்யும்



கண்


------

  சென்ற வார குமுதத்தில் கோவை மாநகர கமிஷனர் 
திரு.ஏ.கே.விஸ்வநாதன் பற்றிய செய்தி படித்தேன். அதை இங்கே குறிப்பிடுகிறேன். காவல் துறையை சேர்ந்த ஒரு சாதாரண காவலர் குடிபோதையில் சிக்னலுக்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட, அந்த செய்தி பரபரப்பானது. விசாரிக்கிறோம் கமிசன் அமைக்கிறோம் என்றெல்லாம் சொல்லாமல், அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று தன் துறை சார்ந்த ஒருவரின் செயலுக்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார் கமிஷனர். மேலும் சமீபத்தில் கோவையில் நடந்த தீ விபத்தில் துணிச்சலாக செயல்பட்டு பலரது உயிரை காப்பாற்றிய இளைனர்களை போலீசார் சார்பில் முதலில் அழைத்து கௌரவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், எங்கே எது நடந்தாலும் பாராட்டுவதும் உற்சாகபடுத்துவது   காவல் துறையின் கடமை என்கிறார்.   காவல் துறை என்றாலே ஒரு பயம் தோன்றுவது இயற்கை. அதை போக்கும் விதத்தில் செயலாற்றும் கமிஷனர்  காவல் துறை உங்கள் நண்பன் என்ற  வார்த்தைகளுக்கு தனி அர்த்தம்  தருகிறார் 
( கிரேட் சலுட் சார்)

------

செய்திகள் சில வரிகளில்

நடிகை ஹன்சிகா 22 குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு தேவையான அணைத்து செலவுகளையும் அவரே ஏற்றிருக்கிறார்.

நல்ல மனம் வாழ்க  நாடு போற்ற வாழ்க  

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் புதுப்படம்

புல்லட் னு பேர் வைப்பாங்களோ

மக்களின் நலன் கருதி எங்கள் போராட்டத்தை கை விடுகிறோம் வாட்டர் கேன்  உற்பத்தியாளர்கள் 

அதே போல் மக்கள் நலனை  கருத்தில் கொண்டு தண்ணீரையும்  
பசுமை தீர்ப்பாயம் சொல்வது போல் தரமாய் தாருங்கள் 


ஒரு மரம் கூட இல்லாத சிறையில் என்னை அடைத்தார்கள் -ராமதாஸ் 

மரங்கள் தள்ளி நின்றனவோ 

  ------

FINAL PUNCH


நீ உடலில் அணியும் உடையை விட மேலானது 
முகத்தில் அணியும் மலர்ச்சி

  
ஆர்.வி.சரவணன் 


புதன், மே 08, 2013

ஆங்கிலமே அருகில் வா....









ஆங்கிலமே அருகில் வா....


(இத்தனை நாளா நம்ம ப்ளாக் ல தொடர்கதை எழுதினதாலே, வேற எதை பத்தியும் 
எழுத முடியல. இதோ ஒரு அனுபவ பதிவு) 


ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்துட்டு போறப்ப இங்கிலீஷை  மட்டும் ஏன் விட்டுட்டு போனாங்க அதையும் எடுத்துட்டு போக வேண்டியது  தானே. இப்படி தான் நான் ஸ்கூல் படிக்கிறப்ப நண்பர்களிடம்  கடுப்படிப்பேன் . தமிழ் மீடியம் படிச்சதாலே இங்கிலீஷ் எனக்கு அவ்வளவா வராது.  நான் இருக்கிற இடத்திலிருந்து  ஒரு அஞ்சு கிலோ  மீட்டர் தூரம் வரைக்கும் எனக்கும் அதுக்கும் DISTANSE  உண்டுன்னா பார்த்துக்கங்க. ENGLISH  பாடத்துல மார்க் கம்மியா  இருக்கிறதை பார்த்து ஏன் உனக்கு இங்க்லீஷ் வரலே னு  வீட்டில் என்னை அடி பின்னிடுவாங்க நான் தான் வராதுங்கிறேன்ல  அதை ஏன் வர வச்சி பார்க்கணும் னு ஆசைபடறீங்க னு நான் புலம்பாத குறை தான் 

ஆங்கில பாடத்தில் ESSAY  எப்படி படிப்பேன் தெரியுமா. அதில் உள்ள   மீனிங் சுத்தமா புரியாம அப்படியே மனப்பாடம் பண்ணுவேன் . முதல் வரி ஆரம்பிச்சா கடைசி வரி வரைக்கும் சொல்ற மாதிரி நெட்டுரு போடுவேன்.நடுவிலே ஏதோ தடங்கல் வந்துச்சின்னா மறுபடியும் முதல்லேருந்தா கதை தான். காலேஜ் லே நான் அரியர்ஸ் வச்சது  கூட ஆங்கிலத்தில் தான்.   இப்படியே போயிட்டிருக்குமா வாழ்க்கை. படிப்பு முடிஞ்சு நான் சென்னை வந்தப்ப தான் தெரிஞ்சுது   ஆங்கிலத்தின்  சக்தி என்னனு 

வேலைக்கு செல்லும் இடங்களில் அப்ளிகேசன் கேட்கும் போது நான் ஏற்கனவே தயாராய் வைத்திருக்கும் மாடல் பார்த்து அப்படியே எழுதி கொடுப்பேன். ஒரு இடத்தில   டேபிள்க்கு கீழே வச்சி நான் எழுதி கொடுத்ததை அங்கிருந்த லேடி ரிசெப்சனிஸ்ட்  பார்த்துட்டு,  நான் வேலையில்  சேர்ந்த பின்னாடி என் கிட்டே சொல்லி கேலி  பண்ணாங்க 

ஒரு இடத்தில APPLICATION கேட்கிறப்ப நான் அது மாதிரி எழுதலாம்னு நினைச்சா மாடல் பேப்பர் வெளியிலே எடுக்க முடியலை.  காரணம் அந்த  கம்பெனி யின் முதலாளி என் எதிரிலேயே அமர்ந்திருந்து  எழுதி கொடு னு  சொன்னார். எப்படி காப்பி அடிச்சு எழுத முடியும்.  SO நான்  சொந்தமா எழுதி கொடுத்தேன்.அதை பார்த்துட்டு அவர் நீ இங்க்லீஷ் லே ரொம்ப வீக் போலிருக்கே  என்றார். ஆமாம்  சார் என்றேன் பரிதாபமாய் . FIRST IMPRESSION IS A BEST IMPRESSION னு  சொல்வாங்க முதல் சந்திப்பிலேயே என் ஆங்கிலம் பற்றி அவருக்கு தெரிந்து விட்டதால் அதற்கு பிறகு நான் என்ன தான் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டி வேலை செய்து வெற்றி பெற்றாலும் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் நான்    முன்னணியில் இருந்தாலும் அதெல்லாம் பெரிய விசயமாகவே தோன்றவில்லை முதலாளிக்கு 

 நான் ஆங்கில பேப்பரில்  எனக்கு பிடித்த சினிமா நியூஸ் அதிகமாக படிப்பேன். தொடர்ந்து படித்ததால் கொஞ்சம் நல்ல ரிசல்ட் கிடைத்தது. அதாவது வருகின்ற லெட்டர் படித்து புரிந்து கொள்ளவும் ஆங்கிலத்தில்  பேசுபவர்கள் சொல்வதை  புரிந்து கொள்ளவும் முடிந்தது.இப்போது வேலை  பார்க்கும் நிறுவனத்தில் நான் ஒரு DEPARTMENT ஹெட் அதற்கு தேவையான லெட்டர்ஸ் ரெடி செய்ய நான் லெட்டர் அடிப்பவருக்கு  தமிழில் டிக்டேட் செய்வேன் அவர் அடித்து தருவதில் இந்த இடத்தில பொருள் சரியாக வரவில்லை இன்னும் சரியாக வர  வேண்டும் என்று திருத்தும் அளவுக்கு புலமை வந்து விட்டது
(இப்போது இடைவெளி  மூன்று கிலோ மீட்டர் ) 

இருந்தும் ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால்  நான் அடுத்தவரை நாடும் அளவுக்கு தான் இருக்கிறது   நிலைமை. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நபர் என்னுடன் போனில் உரையாடும் போது அவர் கூறுவதை கேட்டு விட்டு நான் அதற்கு பதிலை என் உதவியாளருக்கு அல்லது  சக ஊழியருக்கு தமிழில் சொல்வேன். அவர் அதை ஆங்கிலத்தில்  போனில் மொழி பெயர்ப்பார் இப்படி தான் பொழுது சென்று கொண்டிருக்கிறது(இடைவெளி இரண்டு கிலோ மீட்டர் )


உனது கற்பனை திறனுக்கு ஆங்கிலத்தில் நீ CORRESPONDANCE லெட்டர்ஸ்  சூப்பரா  ரெடி பண்ணலாம் என்று ஊக்கமளிக்கிறார்கள் அலுவலக நண்பர்கள் எல்லாரும் .அப்படி நான் முயற்சித்து ஆங்கிலத்தில் புலமை பெற்றால் கண்டிப்பாக என்னால் கூடுதலாக சம்பளம்  கேட்டு  பெற  முடியும் 

இருந்தும் என்ன செய்ய , இங்கிலீஷ் பேப்பரை வைத்து கொண்டு படிக்க ஆரம்பித்தால் நாலு வார்த்தைக்கு மேல் கடினமான வரிகள் வரும் போது நான் டிக்சனரி கையில் எடுப்பதற்கு பதிலாக சலிப்பை கையில் எடுத்து கொண்டு பேப்பரை தள்ளி வைத்து விடுகிறேன் 


பல இடங்களில் ஆங்கிலம் தெரியாமல்  நான் விழித்ததுண்டு. இருந்தாலும் ஆரம்பத்திலேயே சொல்லி விடுவேன் எனக்கு ஆங்கிலம் வராது என்று இதற்காக வேட்கபடுவதில்லை.(தெரியாததை தெரியும் னு சொல்றதுக்கு தானே வெட்கப்படணும்.) அலுவலக வேலையாக  டெல்லி பாம்பே என்று பல இடங்களுக்கு   செல்லும் போதும் விமானத்தில் சென்ற போதும் ஆங்கிலம் தெரியாமல் நான் பட்ட பாடு இங்க்லீஷ் விங்க்ளிஷ் ஸ்ரீதேவி போல் தான் 

   
வீட்டில்,  நீங்க முயற்சி செய்தால் நல்லா பேச முடியும். ஆனால் நீங்க  அக்கறை எடுக்க மாட்டேங்கறீங்க என்று சொல்கிறார்கள். எனக்கு கூட ஆங்கிலம்  மிக  அருகில்  இருப்பதாக ஒரு பீலிங்  இருந்து கொண்டிருந்தாலும், பேசவோ எழுதவோ இன்னும் தயங்கி கொண்டு தானிருக்கிறேன் 
   
FINAL PUNCH 

செல் போன் க்கு ரீசார்ஜ் பண்ணுவோமே. அது போல் ஆங்கிலத்தை அப்படியே 
மூளைக்குள் சார்ஜ் பண்ற மாதிரி எதுனா இருக்கா சொல்லுங்களேன் 

ஆர்.வி.சரவணன்

(பதிவில் இங்கிலீஷ் விங்க்ளிஷ் படம் பற்றி ரெண்டு வார்த்தை சொன்னதால்   
அந்த படம் போட்டிருக்கேன்)  


ஞாயிறு, மே 05, 2013

இளமை எழுதும் கவிதை நீ-30






இளமை எழுதும் கவிதை நீ-30

உன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும் 
வா நம் வெற்றியை உலகம்  கொண்டாடட்டும் 


ராஜேஷ்குமாருக்கு சொந்தமான கிருஷ்ணா மருத்துவமனை, அந்த அதிகாலை வேலையிலும் சுறுசுறுப்பாய் பதற்றம் தொற்றிய படி இருந்தது. மருத்துவமனையின் உள்ளே ஆட்கள் பரபரப்பாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க  சிவா அம்மா காயத்ரி கத்தி கொண்டிருந்தார்

"ஒழுங்கா இருந்த என் பிள்ளையை ஒழுங்கு படுத்தறேன் னு வீட்டை
விட்டு    வெளில அனுப்பிச்சு இப்படி சீரழிச்சுகொண்டாந்து  ஆஸ்பத்திரியில் போட்டுட்டீங்க.  இப்ப உங்களுக்கு திருப்தி தானே .  நம்ம குடும்பத்துக்கு நேர்மை நாணயம்  மட்டும் இருந்தா போதும். குழந்தைங்க எல்லாம்
தேவையா என்ன. கோடி கோடியா ஏமாத்தி சம்பாதிச்சு குடும்பத்தோட சௌக்கியமா இருக்கிறவங்களை பார்த்து சந்தோசபட்டுக்குவோம் "

ராஜேஷ்குமார் இதற்கு மௌனமே பதிலாய் அமர்ந்திருக்க, சிவகுமார் அதட்டினார்




அவன் வலது கை விரல்கள் மெதுவாக அருகே நின்று பெட்டில் வைத்திருந்த  உமாவின் கை விரல்களை ஆசையுடன் பற்றி கொண்டது. சிவாவின் விரல்கள் தந்த அழுத்தத்திற்கு, உமா  தந்த பதில் அழுத்தம் அவர்களின் அழுத்தமான காதலை அங்கிருந்தோருக்கு உணர்த்தின.

நிறைந்தது


ஓவியம் : மணியம் செல்வன் (ஆனந்தவிகடன் )

                                                          ******


நான் பதிமூன்று வயதில் முதலில் சிறு கதை எழுதிய போது அதை 
பாராட்டி எல்லோரிடமும் சொல்லி பெருமைப்பட்ட என் தாத்தா 
திரு .முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம் 

                                                         ******                                                         

முடிவுரை 

என்னுள் இருபத்தைந்து வருடங்களாக இருந்த இந்த கதையை  எழுத்துக்களில் பார்க்கும் பரவசம் எனக்கு கிடைத்திருக்கிறது.

அதற்கு ஊக்கம் தந்த என் அலுவலக நண்பர்களுக்கும், கண்டிப்பாக எழுதுங்கள் என்று சொல்லி  இதோ இந்த அத்தியாயம் வரை ஊக்கபடுத்திய வலைபதிவர் நண்பர் (கரை சேரா அலை) அரசன், அடுத்த அத்தியாயம் எப்போது என்று போனிலும் கருத்துரையிலும் கேட்டு உற்சாகபடுத்திய ( நிசாம் பக்கம் பல்சுவை பக்கம்) நிசாமுதீன் , தன் கருத்துக்களால் எனை அடுத்த அத்தியாயம் நோக்கி செல்ல வைத்த நண்பர் (கிரி ப்ளாக்) கிரி,மற்றும் (திடங்கொண்டு போராடு ) சீனு,  பாலா பக்கங்கள் பாலா,மனசு குமார்,   படங்கள் வரைந்து தந்த,படித்து வந்த இணைய தோழிகள் மற்ற ஏனைய நண்பர்கள்  அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி 

எப்போதும் நான் முணுமுணுக்கும் ஒரு பாடலின் வரிகள் இங்கே 

நன்றி மறவாத நல்ல மனம் போதும் 
என்றும் அதுவே என் மூலதனமாகும் 

ஆர்.வி.சரவணன்

சனி, ஏப்ரல் 27, 2013

இளமை எழுதும் கவிதை நீ-29




இளமை எழுதும் கவிதை நீ-29


தூண்டிலில் மீன்கள் மாட்டுவது அதிசயமல்ல உன் விழி மீன்களில் 
தூண்டிலாய் நான் மாட்டினேன்  இதுவே அதிசயம் 
      

சிவா மேக்கப் கலைத்து விட்டு வெளி வந்த போது அருளும் பாலுவும் பிடித்து கொண்டார்கள்

 "கலக்கிட்ட சிவா சத்தியமா நீ இப்படி நடிப்பே னு நான் எதிர்பார்க்கவே இல்லை.உங்கப்பா கை தட்டினார் னா பார்த்துக்கயேன்"  செல் போனில் எடுத்த படத்தை  காட்டினான் அருள். நிஜம் தான் அவனது அப்பா வின் முகத்தில் இருந்த  பெருமிதம் பார்த்து சிவாவுக்கே ஆச்சரியமாக இருந்தது

(அடுத்த  இதழில் நிறைவுறும்) 

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நன்றி : திரு ஜெயராஜ்  அவர்கள் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

சனி, ஏப்ரல் 20, 2013

இளமை எழுதும் கவிதை நீ-28






இளமை எழுதும் கவிதை நீ-28



உனக்கு வெட்கம்  என்பது அணிகலனா ஆயுதமா
பட்டிமன்ற விவாதம் எனக்குள்ளே 


சிவா, தன் நண்பர்கள்  தம்பி பின் தொடர சுரேஷை பார்க்க வேகமாய் சென்று கொண்டிருந்தான். கார்த்திக் பாலு கீதா விடம்  வருத்தபடுவீங்க னு தான் சொல்லல என்று சொல்லி சமாதான படுத்துவதற்குள் போதும் போதும் என்றாகி விட்டது.மணி சொன்னதை கேட்டு அருளுக்கு தான் அதிக கோபம்   வந்தது. ஆனால்  சிவாவின்  வேகத்தை பார்த்து இப்போது அவனே மிரண்டான்  

உமாவும் கீதாவும் " காலேஜ் முடியற நேரத்தில எதுக்கு வீணா  பிரச்னை" என்றனர்

தொடரும்

(இன்னும் இரு அத்தியாயங்கள்) 

ஆர் .வி.சரவணன்

ஓவியம் :  ஓவியர் திரு.மாருதி அவர்கள்   


the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

ஞாயிறு, ஏப்ரல் 14, 2013

இளமை எழுதும் கவிதை நீ-27



இளமை எழுதும் கவிதை நீ-27
   
உன் சொற்களுக்கு மயங்காவிடினும்  இதழ்களின் அசைவிற்கு 
நான் மயங்கி  தான் ஆக வேண்டும்  

சிவா உமாவுடன்  ஒன்றாக ஸ்கூட்டி யில் வந்து இறங்கிய போது 
அங்கிருந்தவர்களின் கண்கள் அவர்களையே மொய்த்திருந்தன 

 சுரேஷ்  பொறாமையில் தன்   இடது  காலால் சுவற்றில் உதைத்தான்  

  சிவாவின்  சந்தோசம்  அவனது வேகமான நடையில்  இருந்தது



தொடரும்

ஆர்.வி.சரவணன் 

ஓவியம்  நன்றி :  திரு.மணியன்  செல்வம் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

செவ்வாய், ஏப்ரல் 09, 2013

இளமை எழுதும் கவிதை நீ-26







-

இளமை எழுதும் கவிதை நீ-26



என்  இதழ் காயத்திற்கு மருந்தாகுமோ 
உன் இதழ்களின் ஒத்தடம் 



-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நண்பர்களே கதை இன்னும் இரண்டு வாரங்கள் மட்டும் என்று குறிப்பிட்டிருந்தேன் ஆனால் 
பாருங்கள் இன்னும் ஏழு காட்சிகள் இருக்கின்றன அவற்றை இரண்டு அத்தியாயங்களில் கொண்டு வருவது சாத்தியமில்லை என்பதால் (எனது இனிய  நண்பர் கிரி முடிப்பதில் 
அவசரம் வேண்டாம் என்று சொல்லியிருப்பதையும்  கருத்தில் கொண்டு) இந்த தொடர்கதை இன்னும் நான்கு அத்தியாயம் அதாவது முப்பதாவது அத்தியாயம் வரை தொடர்கிறது அனைவரின் ஊக்கத்திற்கும் நன்றி 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------




சிவா காலையில் எழும் போதே அவனை டென்சன் தொற்றியிருந்தது.
காரணம் இன்று தேர்வுகள் ஆரம்பிக்கிறது.  தன்னை நிரூபிக்க இது ஒரு  சான்ஸ்.முதல் ரேங்க் வாங்க முடியவில்லை என்றாலும் அரியர்ஸ் போல் ஒரு 75 பர்சென்ட் மார்க் எடுத்து விட வேண்டும் என்று துடிப்பு அவனிடம் இருந்தது. உமாவின் அசுர படிப்பையும் புத்திசாலி தனத்தையும் பார்க்கும் போது தாம் ஆவலுடன் பரீட்சையில்  மோதுவதாக சவால் விட்டது எவ்வளவு பெரிய முட்டாள் தனம் என்று நினைத்து கொண்டான்.அருளிடம் நான் சீக்கிரமாக செல்கிறேன் அங்கு போய் கொஞ்சம் படிக்க வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்பியவனுக்கு இன்று இப்படி ஒரு அனுபவம் தனக்கு கிடைக்கும் என்று அவன் அறிந்திருக்கவில்லை

தொடரும் 

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நன்றி :திரு இளையராஜா அவர்கள் 

he story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

வியாழன், ஏப்ரல் 04, 2013

இளமை எழுதும் கவிதை நீ-25





இளமை எழுதும் கவிதை நீ-25


பூவினும் மெல்லிய என்ற வரிகளுக்கான அர்த்தம் 
கிடைத்தது நீ என் கரம் பற்றிய போது 


சிவாவின் அம்மா, மாடிப்படி சுவரின் கை பிடியை பிடித்தவாறு படிக்கட்டில் தளர்ந்த தோற்றத்துடன்  நின்று கொண்டிருந்தார் 

இதை பார்த்தவுடன் கார்த்திக் கீதா இருவருக்கும் தாங்கள் காண்பது கனவோ என்று தோன்றிய மறுகணம் கனவல்ல நிஜம் என்பதை உணர்ந்த அவர்கள்  பசுவை கண்டவுடன் ஓடும் கன்று குட்டி போல் சென்றார்கள் 


தொடரும் 

(இன்னும் இரு வாரங்கள்)

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் : வலை பதிவர் தோழி பிரியா அவர்கள் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

புதன், மார்ச் 27, 2013

இளமை எழுதும் கவிதை நீ-24





இளமை எழுதும் கவிதை நீ-24


உன் கனவு தேசத்தில் குடியேற எங்கு குடியுரிமை 
பெற வேண்டும் கொஞ்சம் சொல்லேன் 


சிவா வருவதற்கு முன்பே வந்து விட்டிருந்த பாலு சிவா மூட்டை தூக்கும் படம் இடம் பெற்றிருந்த அந்த பேனரை பார்த்தவுடன் டென்சன் ஆகி அங்கிருந்தவர்களிடம் கத்தினான்

"எவண்டா இந்த மாதிரி பேனர் வச்சது"

"ஏதாவது கிராபிக்ஸ் வேலையா இருக்குமோ " ஒரு நண்பன் சொன்னான் 

 "எப்படி வேண்ணா இருக்கட்டும் வச்சவனை கொத்து கறி பண்ணனும்" இன்னொருவன் 

"சுரேஷ் வேலையா தான் இருக்கும்" என்று தீர்மானித்த  பாலு உடனே  ஒவ்வொருவரையும்  திசைகொருவராய் அனுப்பினான். மற்ற நண்பர்களை பார்ப்பதற்கு உள்ளே சென்றான்

தொடரும்

ஆர்.வி.சரவணன்

ஓவியம் : எங்கள் மகன் ஹர்ஷவர்தன் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.

ஞாயிறு, மார்ச் 24, 2013

வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா


வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா 




கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது வலங்கைமான்.இங்கு மிகவும் புகழ் வாய்ந்த ஸ்தலம் பாடை கட்டி மகா மாரியம்மன்கோவில்.  இங்கு வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி இரண்டாவது ஞாயிறு அன்று நடைபெறும் பாடை காவடி திருவிழா புகழ் வாய்ந்த ஒன்றாகும். 
08-03-2013 அன்று பூச்சொரிதல் விழாவும்,10-03-2013 அன்று காப்பு கட்டுதலும்,17-03-2013 அன்று திருவிழா தொடக்கமும் நடைபெற்று, இன்று 24-03-2013 கோவிலில் பாடை கட்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக 31-03-2013 அன்று புஷ்ப பல்லக்கு விழாவும்,07-03-2013 அன்று கடை ஞாயிறு விழாவும் நடைபெற உள்ளது  


இந்த கோயிலின் சிறப்பு  என்னவென்றால், உடல் நலம் சரியில்லாதவர்கள், வாழ்க்கையில் கஷ்டபடுபவர்கள் அம்மனிடம் வேண்டி கொண்டு ,தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் ஈமக்ரியை செய்வது போல் பாடை காவடி எடுத்து உறவினர்கள் கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி வர ஆலயத்தை வலம் வந்து அம்மன் சன்னிதானம் முன் தாங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர். இது பார்ப்பவர்களை பரவசம் அடைய வைக்கும்   
அற்புத காட்சி நான் எடுத்த சில படங்களை இங்கே உங்களுக்கு தந்திருக்கிறேன் 





இரவில் மின் வெட்டில் ஜொலிக்கும் கோவில் வாசல்     



பகலில் கோவில் நுழைவாயில் 





அலகு காவடி எடுத்து வரும் பக்தர்கள் 


தெருவில் எங்கும் அலகு காவடி 







ஊரெங்கும் பாடை காவடி 




ஈம கிரியை போன்ற வேண்டுதல் 


மகா மாரியம்மனின் திரு வீதி உலா 

 மகா மாரியம்மனின் அருள் நம் அனைவருக்கும் கிட்டட்டும் என்று உளமார வேண்டுகிறேன் 




ஆர்.வி.சரவணன்  

திங்கள், மார்ச் 18, 2013

இளமை எழுதும் கவிதை நீ -23







இளமை எழுதும் கவிதை நீ -23

என் வாழ்க்கை பாலைவனமாய் மாறியிருந்த சமயம் 
ஒரு வற்றாத ஜீவ நதியாய் நுழைந்தவள் நீ 


தோழி கேட்ட கேள்விக்கு  உடனடியாக  பதில் கொடுத்தாள் உமா 

"எனக்கு தெரியாத  யாரோ ஒருத்தர் பேர்  சொல்லிருந்தா நான் ஏன் அவன் 
கூட வண்டில போகணும் னு சொல்லிருப்பேன். எனக்கு தெரிஞ்ச  சிவா பேரை சொன்னதாலே தான் அது என் இஷ்டம் னு சொன்னேன் புரிஞ்சுதா" என்றாள்.

  "பதிலை சும்மா விசிறி அடிக்கிறே" 
என்று தோழி சிரித்த படி சொல்ல கல்லூரிக்குள் நுழைந்தனர் இருவரும். சில மாணவிகள் சூழ்ந்து கொண்டு அவளிடம் கல்லூரி ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை பற்றியும் அதில் இடம் பெற வேண்டிய நிகழ்ச்சிகள் பற்றி டிப்ஸ் சொல்ல, பிரின்சிபாலிடம் கேட்டு சொல்வதாக சொல்லி விட்டு  வகுப்பறை நோக்கி தோழியுடன் நடந்தாள். 

தொடரும்

ஆர்.வி.சரவணன்

ஓவியம் : வலைபதிவர் பிரியா அவர்கள் 

சனி, மார்ச் 09, 2013

ஹரிதாஸ்-தி மாஸ்



ஹரிதாஸ்-தி மாஸ்

நாம் முற்றிலும் எதிர்பார்க்காத சில படங்கள் வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும். அப்படி ஒரு படம் ஹரிதாஸ். 

என்கௌன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் போலீஸ் அதிகாரி கிஷோர்.அவர் மகன் 
ஒரு ஆட்டிசம் பாதித்த  பையன் என்பதால் அவனை சிறப்பு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் சமுதாயத்தில்  அவனை சாதனையாளனாக்க  அவர் மேற் கொள்ளும் முயற்சிகள் ஒரு பக்கம். தாதாவை வேட்டையாட முனையும் அலுவலக  வேலை இன்னொரு பக்கம். இந்த மென்மையையும் வன்மையையும் ஒன்றாக  சேர்த்து ஒரு அழகிய படைப்பை  தந்திருக்கிறார் இயக்குனர்.

ப்ரித்வி ராஜ்தாஸ் 

 படத்தில் இந்த பையனை பார்க்கும் போது நிஜமாகவே ஆட்டிசம்  
பாதித்த பையன் தானோ என்று நினைக்கும் அளவுக்கு ஹரியாகவே மாறியிருக்கிறான். அவனது அந்த மேல் நோக்கி செருகிய கண்கள், என் நேரமும் கை விரல்களின் அலைவு, சாய்வான ஒரு நடை என்று வசனங்கள் எதுவும் இல்லாமலே  தன் நடிப்பால் நமை ஈர்த்து படத்தையே தூக்கி  நிறுத்தியிருக்கிறான் ப்ரித்வி   

கிஷோர் 

துப்பாக்கி பிடிச்சு மூளை இரும்பாகிடுச்சு என்று சூரி சொல்லுமளவுக்கு 
தன் அலுவலக  வேலையில்  விறைப்பானவராய்,  இப்படிப்பட்ட உன்னை வச்சிகிட்டு நான் என்ன பண்ண போறேன் என்று பையனை கட்டி கொண்டு  கலங்கி நிற்பவராய் என்று கிஷோர் ஜோர் என்று   கை தட்ட வைக்கிறார் கமிட்டியில் தன் பையன் பெயர் இல்லையென்று தெரிந்தவுடன் அவர்களிடம்  போராடி, என் பையன் போட்டில கலந்துகிட்டாலே ஜெயிச்ச மாதிரி சார்  என்று கெஞ்சும் போது அசரடிக்கிறார்  மனிதர்.

சினேகா 

வகுப்பில் கிஷோர் முன்னிலையில் ரைம்ஸ் சொல்ல  சிரமப்படுவதும், 
 தாயின் கத்தலை காதில் வாங்கி கொண்டே பார்வையால் தன் எதிர்ப்பை தெரிவிப்பதும்,  சிறுவனை பைத்தியமா என்று கூட்டம் கிண்டலாய் பார்க்கையில் அவனை அரவணைத்து கொண்டு அழுவதும் என்று சிநேகா அந்த டீச்சர் கேரக்டரில் மிக இயல்பாய் பொருந்தி நிற்கிறார்.  ஸ்பெஷல் சைல்ட் டுக்கு  உரிய டீச்சர் என்றல் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நிறைவை தந்திருக்கிறார்.





சிறுவனின் திறமையை அப்பா கிஷோர் கண்டறிந்து 
நெகிழ்ந்து போய் நிற்கும் இடம்   

கடத்தப்பட்ட நண்பனை அங்கே தேடுவதும் இங்கே ஹரிதாஸ் காணாமல் சிநேகா தேடுவதும் என்று வரும் பரபரப்பான காட்சிகள் 

கோச்  சொல்லும் நெகடிவ் பாயிண்ட்ஸ் அனைத்தையும்    டாக்டர் தன் பாசிடிவ் பாயிண்ட்ஸ் வசனங்களால் உடைக்கும் காட்சி

பள்ளி கூட வகுப்பறை கல கல காட்சிகள்

 சிறுவனுக்கு தாயாக விரும்புவதை சினேகா வெளிபடுத்தும் விதமும்   அதை கிஷோர் மறுப்பதுமான காட்சி 

 பயிற்சி காட்சிகளும்   பந்தயத்தில் சிறுவன் பங்கேற்று   ப்ரித்வி  ஓடும் காட்சிகள் 

காட்சிகளின் இடையிடையே கலகலப்பை தரும் சூரி மற்றும் ஓமகுச்சி பையன் சுவாரஸ்யம் 

இப்படி படமெங்கும் விரவியிருக்கிறது  நிறைவான காட்சிகள். 

குத்துப்பாட்டை தவிர்த்திருக்கலாம். என்கௌன்ட்டர் தீவிரத்தையும்  கொஞ்சம் குறைத்திருக்கலாம்.




துப்பாக்கியை சுற்றி படரும் மெல்லிய பூங்கொடியை போல் படபடப்பும் நெகிழ்ச்சியும்  ஒன்றிணைந்த திரைக்கதைக்கு  அவர் கோச்சா காக்ரோச்சா  என்ற பளிச் வசனங்களில் வெங்கடேசனும், காட்சிகளுகேற்ற ஒளிப்பதிவில்   ரத்னவேலுவும்  படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கிறார்கள் 

 ஆட்டிசம் பாதித்த ஒரு சிறுவனின் உலகத்தில் நம்மை உலவ
விட்டு, அவனை பெற்றவர் படும் வலியை அவஸ்தையை உணரும் 

வண்ணம், ஒரு நெகிழ்ச்சி படைப்பை தந்திருப்பதன் மூலம் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் நம்மிடம்  சபாஷ் பெற்று  கொள்கிறார்  

ஹரிதாஸ் பாராட்டப்பட வேண்டியவன் 

FINAL PUNCH

 படம் தியேட்டரில் பார்த்து கொண்டிருக்கும்  போது 
சிறுவனின் திறமை கண்டறியப்படும் காட்சி யாரையும் நெகிழ வைத்து விடும்     அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞர் தன் உடலை குலுக்குவது கண்டு நான் அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தேன்.அவர் கண்கள் கலங்கி அழும் நிலையில்  இருந்தார். நான் பார்ப்பதை உணர்ந்தவர் அந்த நெகிழ்ச்சியை  என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அவரது அந்த கண்ணீரே இந்த படத்தின் வெற்றிக்கு சாட்சியாகிறது  என்றால்  அது  மிகையல்ல  

ஆர்.வி. சரவணன் 

புதன், மார்ச் 06, 2013

இளமை எழுதும் கவிதை நீ-22






இளமை எழுதும் கவிதை நீ-22

உன் மனதிற்குள் இருப்பதை தெரிந்து சொல்லுமாறு  
கூகுளிடம் கேட்டிருக்கிறேன் 

சிவாவுக்கு, கர்சிப் கொடுத்தா உறவு விட்டு போயிடும் என்று உமா சொன்ன  இந்த வரிகளே அவனை சுற்றி சுழன்று கொண்டிருந்தது.நடைகளில் ஒரு உற்சாக துள்ளலாய் சென்று கொண்டிருந்தவன்  எதிரில் பாலு வந்தான். அவனிடம் பேசுகையில் உமா சொன்னதை சொல்லி  அதற்கு அர்த்தம் என்ன என்று ஆர்வமாய் கேட்டான்

"மச்சான் இதை பிரெண்ட்ஷிப் க்காக சொன்னதாவும்   எடுத்துக்கலாம் இல்ல
காதலுக்குணும்  எடுத்துக்கலாம்"

"என்னடா குழப்பறே"

"டேய் உனக்கு பிடிச்ச மாதிரி நான் எப்படிடா சொல்ல முடியும்  
காதலா மட்டும் இருந்துச்சின்னா, கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா னு நீ பாடலாம். அட இந்த பாட்டே ஏதோ சொல்ற மாதிரி தெரியுதே" 

என்றவனை பார்த்து அவன் கன்னம் தட்டி சிவா சிரித்து கொண்டே  கிளம்பினான். தன் ரூமுக்கு வந்தவன்  உனக்கு என்ன தோணுது  என்று கண்ணாடியை பார்த்து கேட்டான். அது அதையே பிரதிபலிக்க முட்டாள் என்று செல்லமாய் கடிந்து கொண்டான்.டான்ஸ் ஆடியபடியே  தன் சந்தோசத்தை வெளிப்படுத்தி கொண்டான்

தொடரும்

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நன்றி : திரு இளையராஜா 


the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.


புதன், பிப்ரவரி 27, 2013

இது நம்ம பாக்யராஜ்

 இது நம்ம பாக்யராஜ்






(நடிகர்,இயக்குனர்  திரு கே.பாக்யராஜ் அவர்களை நான் சென்று சந்தித்து 
வந்த இனிய நிகழ்வின் அனுபவ பகிர்வு )

குமுதம் வார இதழில் அப்போது மௌன கீதங்கள் திரைக்கதை தொடர் வந்து கொண்டிருந்தது. நான் எட்டாவது படித்து கொண்டிருந்தேன்.  அந்த கதையை படிக்க ஆரம்பித்தவன் அதில் ஈர்க்கப்பட்டு, வீட்டில் அடம் பிடித்து (வீட்டில் வருடத்திற்கு ஒரு படம் தான் அழைத்து செல்வார்கள்  அதுவும் தேசபக்தி,  புராண படங்கள் தான்) சென்று பார்த்தேன். அந்த படம் பார்த்த பின் ஒரு  நாயகன் உதயமாகிறான் என்ற பின்னணி இசைக்க பாக்யராஜ் பிடித்த நடிகராக இயக்குனராக  எனக்குள் உருவெடுத்தார். 

அடுத்து வந்த அந்த ஏழு நாட்கள் படம் அப்போது நான் ரசித்த படமாகவும் ஏன் எப்போதும் ரசிக்கும் ஒரு முக்கியமான படமாக அமைந்து கொண்டது.

அடுத்து வந்த தூறல் நின்னு போச்சு படம் பார்த்த பின்,  அந்த படத்தில் வரும்  என் சோக கதையை கேளு தாய்குலமே பாடலை  நான் பாக்யராஜ் போலவும் என் தம்பி நம்பியார் போலவும் தினமும் மாலையில் பாடுவோம். அதை  கிராமத்தில் உள்ளவர்கள் தினமும் பொழுது போக்காக எங்களை பாட சொல்லி கேட்டு ரசிப்பது வாடிக்கையான ஒன்றானது. அதனால் அவர் மீது  இன்னும் ஈர்ப்பு அதிகமானது.

முந்தனை முடிச்சு பட பாடல்கள் இலங்கை வானொலியில் பட்டைய 
கிளப்ப, கூடவே படமும் வெளி வந்து அது இன்னும் பட்டையை கிளப்பியது. எனக்குள் பாக்யராஜ் படம் வந்தால் உடனே பார்த்தாக வேண்டும் என்ற உத்வேகத்தையும் அது  கிளப்பியது. வீட்டில் அந்த படத்திற்கு அனுப்பவில்லை. படம் வந்து நூறு நாள்களுக்கு பின் தான் நான் சென்று பார்த்தேன். அது வரை தினமும் தியேட்டரை சென்று வேடிக்கை பார்த்து விட்டு வந்தேன்.

தாவணி கனவுகள் படம்  பார்த்த பின்  சினிமாவுக்கு சென்று இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவை இதன் மூலம் எனக்கு விதைத்தார் அந்த திரைக்கதை அரசன். 

எங்க சின்ன ராசா முதற் கொண்டு அடுத்து வந்த ஒவ்வொரு படம் பார்க்கும் போதும்  என் இயக்குனர் கனவு வளர்ந்து விருட்சமாகி நின்றது.

காலேஜ் செல்ல ஆரம்பித்தவுடன் அவர் படம் வெளியானால் முதல் நாள் வீட்டுக்கு தெரியாமல் சென்று பார்க்க ஆரம்பித்தேன்.பாக்யா வார இதழ் வெளி வர ஆரம்பிக்க எங்கள் வீட்டில் வாங்கவில்லை.இருந்தும் நான் பாக்கெட் மணியில் வாங்கி படித்து விட்டு நண்பர்களிடம் கொடுத்து விடுவேன்.காவடி சிந்து பாடல் காசெட் சொந்தமாக வாங்கி நண்பர் கடையில் தினமும் போட்டு கேட்டு பாடல்கள் எனக்கு நெட்டுரு கூட ஆகி விட்டது.ஒரு முறை பாக்யராஜ் ரசிகர் மன்றத்தில் சேர பெயர் கொடுக்க ஆசைப்பட்டு பின் வீட்டை பற்றிய பயத்தினால் பின் வாங்கியது தனி கதை. அவரை பற்றிய செய்திகள் எல்லாவற்றையும் படித்து விடுவேன். நண்பர்கள் இதை பார்த்து பாக்யராஜ் பற்றி ஒரு க்விஸ் போட்டி வைத்தால் நீ தான் வின் பண்ணுவாய் என்று கூட சொன்னார்கள் 

படிப்பு முடிந்த பின் சினிமாவில் நுழைய வேண்டும் என்ற முடிவோடு இருந்த  என்னை வீட்டில் இருந்து கிளம்பிய மிக பெரிய எதிர்ப்பு கனவை அடங்கி போக வைத்தது. உள்ளுக்குள் கனவு மௌன கீதமாய் நித்தம் ஒரு முறை பாட ஆரம்பிக்க அதை இன்று போய் நாளை வா என்று என் சூழ்நிலை அனுப்பி வைத்தது.  சரி  திரையில் பார்த்த பாக்யராஜ் அவர்களை நேரில் சந்தித்து  நாலு வார்த்தைகளாவது பேசலாம் என்ற அடுத்த ஆசை ஒரு கை ஓசை போல உள்ளுக்குள் நாளுக்கு நாள் வலுப்பெற ஆரம்பித்தது.

சென்னை வந்த பின் வள்ளுவர் கோட்டம் செல்லும் போதெல்லாம் எப்போது அவரை பார்ப்போம் என்ற ஏக்கம் எழும்.  ஒரு படம் பார்த்து விட்டு வெளி வந்தவுடன் நேராக பாக்யராஜ் அலுவலகம் சென்று விடலாமா என்ற  வேகம் வரும் .

கல்யாண மாலை பட்டிமன்றம் ஒரு முறை பாக்யராஜ் தலைமையில் நடப்பதை அறிந்து அதற்கான பாஸ் வாங்கி வந்து அவரை சந்திக்க கிளம்பினேன் வீட்டில் முக்கிய வேலை ஒன்று வந்து விடவே தடைபட்டது

ஒரு முறை கட்சி பொது கூட்டத்தில்,பாக்யராஜ் மற்றும் என் கல்லுரி நண்பர் (கட்சி பேச்சாளர்) பேசுவதாக வந்த விளம்பரம் பார்த்து ஆசையுடன் அந்த பொது கூட்டம் சென்றேன் எனது  நண்பர் மூலம் அவரை சந்தித்து விடலாம் என்று ஆனால் அன்று பாக்யராஜ் பொது கூட்டத்திற்கு வரவில்லை


பாக்யா அலுவலகம் ஒரு முறை போன் செய்து விசாரித்தேன் அவர் கேரளா சென்றிருப்பதாக சொன்னார்கள். இன்னொரு முறை போன் செய்த போது காலை பத்து மணிக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.ஆனால் அப்போது என்னால் காலையில் அலுவலகத்தில் பர்மிசன் போட முடியாததால் செல்ல முடியவில்லை. சரி கனவு நனவாகும் நாள் விடியும்  வரை காத்திரு என்று மனதிடம் சொல்லி வைத்தேன் 

இப்படி அவரை பார்க்க முயற்சித்து முடியாத நிலையில் தான், சென்ற மாதம் திரு எஸ் எஸ் பூங்கதிர் (பாக்யா நிருபர்) அவர்கள் முக நூலில் எனக்கு நண்பரானார். அவரின் முயற்சியால் பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் முதல் முறையாக எனது கமெண்ட் மற்றும் படம் வெளியானது அது சிறிய கமெண்ட் தான் என்றாலும் அது எனக்கு கொடுத்த சந்தோஷம் மிக பெரிது.

ஒரு நாள்  அவரிடம் சாரை சந்திக்க வேண்டும் என்று  பொதுவாக 
சொல்லி வைத்தேன் அவரோ உடனடியாக எப்போது பார்க்க போகிறீர்கள் சொல்லுங்கள் நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல ஆடி போய் விட்டேன். உடனே சந்திக்கும் நாளை  அவரிடம் சொல்லி விட்டு பாக்யராஜ் அவர்களுக்கு ஏதேனும் பரிசளிக்க வேண்டும் என்ற ஆவலில் அவரது பழைய குடும்ப படமும்  இப்போதைய  குடும்ப படமும்   இணைத்து லேமினசன் போட்டோ ஒன்று அவசரமாக  ரெடி செய்தேன். என் தம்பிக்கும் பாக்யராஜ் ரொம்ப பிடிக்கும். வரியா என்று கேட்ட அடுத்த நொடி உடனே நான் ரெடி என்றார்.அப்போது வீட்டில் என்னை எதிர்த்தவர்கள் இப்போது அவரிடம் எப்படி பேச வேண்டும் என்ற டிப்ஸ் எனக்கு உதிர்த்தார்கள்.






சந்திக்க வேண்டிய நாள் அன்று காலை சிக்கிரமே விழிப்பு வந்து விட்டது திரையில் பார்த்த வரை நேரில் பார்க்க போகிறோம் என்று ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் என்னை ஆழ்த்தி கொண்டிருக்க கூடவே பார்க்கும் வாய்ப்பு இன்னொரு நாள் என்று தள்ளி போய் விடுமோ என்ற கவலையும் தொடர்ந்த படி இருந்தது

அலுவலக நண்பர் ஒருவரிடம் சோனி டிஜிட்டல் கேமரா கேட்டிருந்தேன்
அவரும் நான் கிளம்பும் தருவாயில் கொண்டு வந்து கொடுத்தார். கூடவே," சார்
கேமரா புல் ஆகிடுச்சு  நீங்க எடுக்க முடியாது கணினியில் சேமித்து விட்டு பின் எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்ல பயங்கர டென்சன் ஆகி விட்டது
எனக்கு.காரணம்  பதினொரு மணிக்கு வருவதாகசொல்லியிருக்கிறோம். இந்த நிலையில் எங்கு போய் கணினியில் சேமிப்பது என்று டென்ஷன் ஆன நான்," எல்லா போட்டோ வும் பார்க்கிறோம் எந்த போட்டோ கலங்கலாக சரியில்லாமல் இருக்கிறதோஅதில்  நாலு போட்டோ  மட்டும்  டெலிட் செய்து விட்டு படம் எடுத்து கொள்கிறோம்  என்று சொல்ல அவர்  பரவாயில்ல  சார் எடுத்துக்குங்க என்றார்

பொக்கே வாங்கி கொண்டு நண்பர்  பூங்கதிர் அவர்களுக்கு போன் செய்து நாங்கள் வந்து கொண்டிருப்பதை சொன்ன போது அவர் பாக்யராஜ் அவர்களிடம் கேட்டு கன்பார்ம் செய்து விட்டு, சார் வருவதற்கு முக்கால் மணி யாகும் நீங்கள் வெயிட் பண்ண முடியுமா என்றார். முப்பது வருசமா வெயிட் பண்ணவன் முக்கால் மணி நேரம் வெயிட் பண்ண மாட்டேனா என்றேன் நான் சிரித்த பூங்கதிர்,  சாரிடம் இதை சொல்லுங்கள் என்றார்

அவரது அலுவலகத்தில் உற்சாக துள்ளலுடன் நுழைந்தோம். ரிசப்சனில் கேட்டார்கள். பூங்கதிர் பெயர் சொன்னவுடன் உடனே  உட்காருங்கள் என்று அமர வைத்து என்ன சாப்பிடுகிறீர்கள் என்றும்  கேட்டார்கள். எனக்கும் என் தம்பிக்கும் இனம் புரியாத படபடப்பு இருந்து கொண்டே இருந்தது. வாசலை பார்த்த படி இருந்தோம் 

திடீரென்று பார்த்தால் பாக்யராஜ் சார் உள்ளே வருகிறார் காத்திருந்த எல்லோரும்எழுந்து நின்றோம். எங்கள் அனைவரையும் பார்த்து சிநேகமாய் சிரித்தவாறே எங்கள் வணக்கத்தை தலையாட்டி ஏற்று கொண்டு வாங்க என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

எங்களுக்கு முன் காத்திருந்தவர்கள் உள்ளே செல்ல நாங்கள் டென்சனில் நகம் கடித்தோம். கொஞ்ச நேரம் கழித்து எங்களை உள்ளே அழைத்தார்கள்
இதற்காக தானே காத்திருந்தோம் என்று பரபரப்புடன் உள்ளே நுழைந்தோம் 

எங்களை பார்த்தவுடன் எழுந்திருந்த பாக்யராஜ் அவர்கள் வாங்க என்று சொல்லி பூங்கதிர் சொன்னார் நீங்க வருவதை பற்றி  என்று சொல்ல அவர்   அருகில் சென்ற  எனக்கு  பரவசத்தில் வார்த்தைகளே எழும்பவில்லை.

பின் ஒருவாறு சமாளித்து நான் மௌன கீதங்கள் படத்திலிருந்து  ரசிகர் ஆனதை பற்றி குறிப்பிட, சிரித்த படி நாங்கள் அளித்த போட்டோ, பொக்கே மற்றும் என் தம்பி இந்த வருடத்திய டைரி யை பேக் செய்து அதில் பாக்யராஜ் ஸ்டில் ஒட்டி ஒரு ரோஜா ஒட்டி வைத்து எடுத்து வந்திருந்தார்.அதையும் 
 பெற்று கொண்டார்.

போட்டோ எடுத்துக்கணும் சார் என்றவுடன் கேமரா இருக்கா என்று கேட்டு விட்டு உடனே உதவியாளரை அழைத்து போட்டோ எடுக்க சொன்னார்.அது போதாது என்று  என் செல்போனிலும் எடுத்துக்கறேன் என்று நான் கேட்க அவர்  முகம் சுளிக்காமலும் சலிக்காமலும் ஓகே சொன்னவர்  லைட்டிங் போதுமா  என்று கேட்டு விட்டு அவரே சென்று இன்னொரு லைட்டின்  சுவிட்ச் ஆன் செய்தார். போட்டோ எடுத்த பின் எப்படி வந்திருக்கிறது என்று
கேமரா வாங்கி ஆவலுடன் பார்த்தார்.

எங்களை அவர் உட்கார சொல்லவும் காபி வந்தது. அதை குடிக்கும் நேரத்தில் கூட அவருடன் பேசுவது தடைபட்டு விடுமோ என்று தண்ணீர் குடிப்பது போல் காபி யை குடித்தேன்

 நான் எழுதிய சில பதிவுகளை கொண்டு சென்றிருந்தேன் ஒரு பைல் 
போட்டுஅதை  கொடுத்து உங்களுக்கு நேரமிருக்கும் போது படிங்க 
இதை மட்டும் எனக்காக இப்ப படிங்க சார்  என்று வேண்டுகோள் விடுத்தேன்  வாங்கி  புரட்டினார். படித்து விட்டு அவருக்கே உரிய  சிரிப்பை உதிர்த்தார் என் எழுத்துக்கு கிடைத்த அசீர்வதமாய் எடுத்து கொண்டு நிறைவானது மனசு 

அவர் படித்த அந்த பதிவு இதோ 


பாக்யராஜ் சார் பட பெயர்களை வைத்து ஒரு மிக சிறிய கதை

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி கன்னி பருவத்திலே காலத்தில்
தாவணி கனவுகள் கண்டு கொண்டிருக்
எங்க சின்ன ராசா அவளை பார்த்து அந்த ஏழு நாட்களில்
இது நம்ம ஆளு என்று முடிவு செய்து அவளிடம்
டார்லிங் டார்லிங் டார்லிங் என்று சொல்ல
அவள் எதிர்ப்பு என்ற தூறல் நின்னு போச்சு ஆகவே
இன்று போய் நாளை வா வந்து விடியும் வரை காத்திரு
முந்தானை முடிச்சுக்கு என்று சொல்ல
அவன் சந்தோசத்துடன் பட்டு வேட்டி மடிச்சு கட்டி
திருமணத்திற்கு தயாரானான்
அவளுடன் ஆராரோ ஆரிராரோ பாட.
ஆம்
இப்ப அவன் வீட்டிலே விஷேசங்க



இணைய தளத்தில் ஒரு தொடர்கதை எழுதி கொண்டிருப்பதையும் இப்படி எழுதுவது உங்கள் படங்கள் மற்றும் எழுத்து தந்த ஈர்ப்பினால் தான் என்றும் அவரிடம் சொன்னேன். அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்டவர் உங்க ப்ளாக் பேரென்ன என்றும் விசாரித்து தெரிந்து கொண்டார்

 என் தம்பி நேற்று ருத்ரா படம் டிவியில் பார்த்தேன் எத்தனை முறை பார்த்திருந்தாலும் நேற்றும் ரசித்து சிரித்தேன்  என்று சொல்ல, எந்த 
டிவியில் என்று ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.அடுத்து 
அவரது படம் பற்றி நான் கேட்க  டிஸ்கசன் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்

 இதற்கு மேல் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவரை பார்க்க இன்னும் ஏனைய பேர் காத்திருந்ததால் கிளம்ப மனசில்லாமலே விடைபெற்று எழுந்தோம்.கிளம்பும் போது அப்பப்ப வாங்க என்று சொன்னதுடன் உங்க பேர் என்ன சொன்னீங்க என்று கேட்டு
தெரிந்து கொண்டார்.

உள்ளே நடந்து சென்ற நான் வெளியில் வரும் போது பறந்த படி வந்தேன் என்பதை சொல்லவும் வேண்டுமா. வெளியில் வந்தவுடன் என் தம்பி என் கைகளை பிடித்து ரொம்ப தாங்க்ஸ் என்றான்.நாம்  தாங்க்ஸ் சொல்ல வேண்டியது நண்பர்  எஸ்.எஸ்.பூங்கதிர் அவர்களுக்கு என்றேன்

மலையின் உச்சியை அடைய கஷ்டப்பட்டு அதையும் இஷ்டப்பட்டு ஏறி கொண்டிருக்கும் போது மேலிருந்து ஒரு லிப்ட் திடீரென்று நம்மருகே வந்து   நம்மை உச்சிக்கு அழைத்து சென்றால் எப்படி இருக்கும் அது போன்று தான் நண்பர் பூங்கதிர் எங்களுக்கு செய்த இந்த உதவி. இந்த உதவியை  நன்றி என்று ஒற்றை சொல்லில் எல்லாம் அடக்கி விட முடியாது

பார்த்து விட்டு வந்த உடன் வீட்டிலும் வெளியில் நண்பர்களும்  என்ன சொன்னார் எப்படி பேசினார் என்று ஆர்வமுடன் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார்கள்.அவரை சந்தித்த அனுபவம் இப்போது நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கிறது 





FINAL PUNCH

சந்தோசத்துல பெரிய சந்தோசமே அடுத்தவங்களை சந்தோசபடுத்தி பார்க்கிறது தான் என்பது பாக்யராஜ் அவர்களின் தாரக மந்திரம்.ஆம் எங்களை சந்தோசபடுத்தி பார்த்திருக்கிறது அவர் மனசு 

அவருக்கு பரிசளித்த போட்டோ வில் நான் குறிப்பிட்டது போல் 
அன்றும் இன்றும் என்றும் அவர்  நலம் நாடி நிற்கிறது என் மனசு 

ஆர். வி.சரவணன்