செவ்வாய், ஏப்ரல் 26, 2016

பயணங்கள் முடிவதில்லை








பயணங்கள் முடிவதில்லை
 தொடர் பதிவு


நண்பர் மனசு குமார், அப்பப்ப என்னை தொடர் பதிவுல சிக்க வச்சிடறாரு . ஏன் இந்த கொலை வெறி னு கேட்கலாம்னு நினைச்சா, நாம மாட்டிவிட்டா ஏன் எதுக்கு என்று கேட்காமல் நாலு மாசம் ஆனாலும் எப்படியும் எழுதி முடிக்கும் என் அன்பு அண்ணன் குடந்தையூர் ஆர்.வி. சரவணன் அப்படின்னு ஒரு வார்த்தையை வேற போட்டு விட்டுட்டாரு.  கூடவே எனக்கு  பயணம் செய்ய ரொம்ப பிடிக்கும் என்பதையும் சொல்லியிருக்காரு. அது என்னவோ உண்மை தான். தொடர் பதிவை எழுத அழைத்தமைக்கு நன்றி குமார்.அவர் சொன்ன மாதிரி ஜனவரியில் எழுத சொன்னதை  இதோ இந்த மாசம் தான் என்னாலே எழுத முடிஞ்சிருக்குனா பார்த்துக்குங்க. 
பயணங்கள் முடிவதில்லை பற்றிய இந்த தொடர் பதிவில் கொஞ்சம் பயணிப்போமா 


மனசு குமார் அவர்களின் பதிவு இது 




1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

நன்றாக நினைவிருக்கிறது. சென்னையில் ஒன்றாவது படித்து முடித்து குடும்பத்துடன்  விடுமுறைக்கு  கும்பகோணம்  பகல் நேர ரயிலில்  தான் வந்திருந்தேன். அது தான் எனக்கு தெரிந்த முதல் ரயில் பயணம். அந்த வயதில் ரயிலும் சரி ரயில் பயணமும் சரி மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது. (இது எப்படி உனக்கு ஞாபகம் இருக்குனு நீங்க கேட்கலாம். அதற்கு காரணம் இருக்கு. ஒன்றாவது சென்னையில் படித்த நான் இரண்டாம் வகுப்பு முதல் கும்பகோணத்தில் தான் படிக்க ஆரம்பித்தேன்)



 2.மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

அலுவலக வேலையாக மத்திய பிரதேசம் இந்தோர் நகரத்திற்கு விமானத்தில் 3 வருடங்களுக்கு முன் சென்றிருந்தேன். அதில் என்ன சிறப்பிருக்கிறது எல்லாரும் தானே  செல்கிறார்கள் என்கிறீர்களா?. 36 மணி நேரத்தில்  நான்கு விமானங்களில் தொடர்ந்து பயணம். அதாவது சென்னை டு மும்பை, மும்பை டு இந்தோர்,  அங்கு வேலையை முடித்து விட்டு அன்று மாலையே இன்டோர் டு மும்பை, மும்பை  டு சென்னை என்று பயணித்தது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒன்றாகவும், முதல் விமான பயணம் என்பதால் மகிழ்ச்சியான ஒன்றாகவும் அமைந்தது. (இறக்கை முளைத்து பறந்தது போன்ற ஒரு உணர்வு )


3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

பேருந்தோ ரயிலோ ஆட்டோவோ எனக்கு ஜன்னல் ஓர இருக்கை தான் பிடிக்கும். கார் என்றால் முன் சீட். (டிரைவருக்கு பக்கத்து சீட் )


4.பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

 இளையராஜா, பாக்யராஜ், ரஜினிகாந்த் பாடல்கள் விரும்பி ரசிப்பேன்.
 (பேருந்தில் டிரைவர் வேறு பாட்டை போட்டுட்டா என்ன பண்ணுவீங்கனு கேட்கறீங்களா. விரும்பியது கிடைக்கலை என்றால் கிடைத்ததை விரும்ப வேண்டியது தான் )

5.விருப்பமான பயண நேரம்?

காலை 10 மணி முதல் ஒரு மணி வரையிலான பேருந்து பயணம். பேருந்தில் இரவு பயணத்தில் தூங்காமல் விழித்திருந்து ஒவ்வொரு ஊரையும் பார்த்த படி வருவது விருப்பமான ஒன்று. (ஆனால் பெரும்பாலும் தூக்கம் வந்து விடும்)

ரயிலில் சைடு லோயர் பர்த்  பிடித்தமான ஒன்று. அதில் இரவு பயணங்களில் படுத்திருந்த படி ஜன்னலோரத்தில் செல்லும் மரங்கள் மற்றும் நிலாவை ரசித்த படி இருப்பது பிடிக்கும் (ஆனால் அவ்வளவு சீக்கிரம் அந்த பர்த் கிடைத்து விடுவதில்லை.)

6. விருப்பமான பயணத்துணை?

இசை 

7. பயணத்தில் படிக்க விரும்பும் புத்தகம்?

பயண நேரத்தில் அவ்வளவாக படிப்பதில்லை. இயற்கையையும்  ஊர்களையும்  ரசிப்பதில் மட்டுமே முழு கவனம் செலுத்துவேன். பயணங்களில் வரும் ஒவ்வொரு ஊரின் சிறப்புகளை பற்றி தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டுவேன். (உலகமே ஒரு புத்தகம் தானே)

8.  விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

டூ வீலரில் மிதமான வேகத்தில் தொடர்ந்து ஓட்டி  கொண்டு செல்வது  பிடிக்கும் (எந்த ஒரு டிராபிக் இடைஞ்சலும் இல்லாமல் அப்படிங்கிறதையும் சேர்த்துக்குங்க)

 9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

யாதும் ஊரே யாவரும் கேளிர் அன்பே எங்கள் உலக தத்துவம் ......

உலகம் அழகு கலைகளின் சுரங்கம் பருவ சிலைகளின் அரங்கம் ......

உள்ளம் ரெண்டும் ஒன்றை ஒன்று மிஞ்சும் வண்ணம் ......

(சிச்சுவேசன் சாங் மாதிரி இருக்குனு பார்க்கிறீங்களா. அது என்னவோ தெரியல பாட்டை முணுமுணுக்கணும் னு நான் நினைக்கையில் முந்தி கொண்டு வருவது இந்த பாடல்கள் தான்) 

10. கனவுப் பயணம் ஏதாவது ?

குடும்பத்துடன் காலத்தால் அழியாத வரலாற்று இடங்கள் சிலவற்றையேனும் சென்று பார்த்து ரசித்து வர வேண்டும்.
(கனவுகள் அவ்வளவாக நிறைவேறுவதில்லை என்றாலும் கனவுகள் தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது )

ஆர்.வி.சரவணன்