வியாழன், டிசம்பர் 27, 2012

இளமை எழுதும் கவிதை நீ-17

இளமை  எழுதும் கவிதை நீ-17





நீ எனக்கிடும் உணவில் அன்பை சேர்க்கிறாயா 
விதைக்கிறாயா அறியும் கணக்கியலில் நான் 



பொழுது புலரும் முன்பே கோவிலில் கல்யாண ஏற்பாடுகள் தடபுடலாய் ஆரம்பித்திருந்தன.சிம்பிளா பண்ணிடலாம் என்று தான் ராஜேஷ்குமார் சொல்லி இருந்தார் . சிம்பிளாக ஆரம்பித்த  கல்யாண ஏற்பாடுகள்  தான் பெரிய அளவில் வந்து நின்றிருந்தது. சொந்தகாரர்கள் அனைவருக்கும் நண்பர்களில் முக்கியமான  சிலருக்கும் அழைப்பு அனுப்பியிருந்தனர்.கட்சிகாரர்கள்  பத்திரிகைகளுக்கு அழைப்பில்லை. காலை ஏழரை டு ஒன்பது முகூர்த்தம் என்பதால் கோவிலில் உள்ள கல்யாண மண்டபத்தில்  மிகுந்த பரபரப்பு இருந்தது. வீடியோ கிராபர் லைட் செட்டிங்கில் பிஸியாக இருந்தார்   

வரவேற்க வாசலில்  ராஜேஷ்குமார்  சிவகுமார் இருவரும்  நின்றிருந்தனர் 

 
தொடரும்

ஆர்.வி.சரவணன் 

The story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

ஞாயிறு, டிசம்பர் 16, 2012

இளமை எழுதும் கவிதை நீ-16


இளமை எழுதும் கவிதை நீ-16




என் மனது ஆசை எனும் அலைகளால் சூழ்ந்திருக்க 
நீ மட்டும் ஆழ் கடல் அமைதியில் 



கீதாவுக்கு, தனக்கு கல்யாணம் நடக்கிறது என்பதை நினைத்தாலே ஆச்சரியமாய்  இருந்தது. அதுவும் கல்லூரியில் முதல் வருடம் படிக்கும் போதே திருமணம் என்பது கொஞ்சம் கூச்சத்தையும் தந்தது 

 சிறு வயது முதல் கார்த்திக் உனக்கு தான் என்று பெற்றோர் முதல் உறவினர் வரை அனைவரும் பால பாடம் போல் அவள் மனதில் பதித்து விட்டனர். அவளது அத்தைக்கு பெண் குழந்தை யின்  மேல் ஆவல் இருந்தும் அவருக்கு பிறந்த இருவருமே பையன்கள் என்பதால், தன் தம்பிக்கு பிறந்த கீதாவை தன்
பெண் போல் பாசத்துடன் கவனித்து கொண்டார்.வீட்டில் மாப்பிள்ளை
 இருக்க  எதற்கு வேறு இடத்தில கொடுப்பது என்பதாலும் அவளை பிரிய வேண்டியிருக்குமே என்பதாலும்  தன் சின்ன பையனுக்கு கீதாவை மணம் முடித்து விட வேண்டும் என்றும் சொன்னார்.  அவர் பேச்சுக்கு அங்கே மறுப்பேது. சோ கார்த்திக் கீதா திருமணம் சிறு வயதிலேயே நிச்சயிக்க பட்ட ஒன்றாயிற்று.

தொடரும்

ஆர்.வி.சரவணன்

The story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

புதன், டிசம்பர் 12, 2012

நான் ரசிக்கும் ரஜினி....

நான் ரசிக்கும் ரஜினி....




ஒரு பத்திரிகை நிருபரின் கேள்விகளுக்கு ரஜினி ரசிகனான 
நான் சொன்ன பதில்கள் இவை 



நீங்கள்  பார்த்த முதல் ரஜினி படம் ?

நான் சிகப்பு மனிதன்

ஈர்த்த படம் ?

மாப்பிள்ளை

பரவசப்படுத்திய படம் ?

ஸ்ரீ ராகவேந்திரர் 

முழு ரசிகனாக ஆனது ?

அண்ணாமலை

ரஜினியின் நடிப்பில் கவர்ந்தது ?

அவரது ஸ்டைல் நகைச்சுவை மற்றும் அதிரடி 

நிஜத்தில் ரஜினியிடம்  கவர்ந்தது ?

அவரது எளிமை, தன்னடக்கம்,விளம்பரமில்லாமல் செய்யும் உதவிகள் 

பார்க்க சலிக்காத   படங்கள் ?

 தில்லு முள்ளு, மாப்பிள்ளை, பாட்சா , சந்திரமுகி, எந்திரன்

தியேட்டருக்கு படம் பார்க்க சென்ற வித்தியாசமான அனுபவம் ?

எந்திரன் படம் காலை ஏழு மணி காட்சி  குடும்பத்துடன் சென்று பார்த்தது 

பிடித்த பஞ்ச் டயலாக்  ?

நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி

ரொம்ப பிடிச்ச காட்சி ?

பாட்சா படத்தில் தன் தங்கை யுவராணியை மெடிக்கல் காலேஜில் சேர்க்க ரஜினி பேசும் காட்சி ?


பிடித்த சண்டை காட்சி ?

தளபதி படத்தில் வரும் காட்சிகள் 

பிடித்த காமெடி காட்சி ?

மன்னன் படத்தில் கவுண்டமணியுடன் சேர்ந்து தியேட்டரில் டிக்கெட் எடுக்கும் காட்சி


அவரிடம் நீங்கள் கற்று கொண்டு கடைப்பிடிப்பது ?

நம்மால் யாருக்கும் எந்த நஷ்டமும் கஷ்டமும் வர கூடாது என்ற கொள்கை

அவரிடம் பெற்ற ஏமாற்றம் ?

அவர் 1996 ஆம் வருடம்  அரசியலுக்கு வராதது

ஆசை ?

அவருடன் சில வார்த்தைகளாவது  பேசி ஒரு போட்டோ  
எடுத்து கொள்ள வேண்டும்

அவருடன் ஜோடியாக நடித்த நடிகைகளில்  எந்த பட ஜோடி பிடிக்கும் ?

அப்போது, மாப்பிள்ளை ரஜினி அமலா ,

இப்போது, எந்திரன் ரஜினி ஐஸ்வர்யா ராய் 

நீங்க அவருக்காக எழுதிய பஞ்ச் டயலாக் ?

கெட்டது ஒடுக்க தன்னாலே வருவேன்
நல்லது நடக்க என்னையே தருவேன்

அவர் போட்ட கெட்டப் களில் உங்களுக்கு பிடித்தது ?

வேட்டையன் 

நீங்கள் பெருமைபடுவது ?

ரஜினியுடன்  செல் போனில் பேசுவது போன்று நான் எழுதிய பதிவிற்கு ரஜினி ரசிகர்கள் பாராட்டியது, "ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன்....":


அவரை ரசிப்பதால் உங்களுக்கு வந்த கஷ்டம் ?

என்னை சுற்றியுள்ளவர்களின் மற்றும் அவரை பிடிக்காதவர்களின் கேள்வி கணைகள் மற்றும் கேலி

அவர்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது ?

நீங்கள் விரும்புவதை நான் எப்படி கேலியோ விமர்சனமோ செய்ததில்லையோ நீங்களும் செய்ய வேண்டாம் என்பதே

பிடித்த காதல் பாடல் ?

ராத்திரியில் பூத்திருக்கும் தாமரை தான் பெண்ணோ

அடிக்கடி ஹம் செய்வது ?

வெற்றி நிச்சயம் இது வேத சத்தியம் 

அவர் இனி என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்  ?

எப்போதும், சமுதாய பணிகளை  முன்னின்று செய்து   ஒரு முன்னுதாரண

மனிதராக  ஆக வேண்டும்


இப்போது, பாட்சா படம் போல் நச்சென்று ஒரு சூப்பர் ஹிட் படம் நடிக்க  வேண்டும்

நீஙகள் என்ன செய்ய ஆசைபடுகிறீர்கள் ?

எப்போதும், மாற்று திறனாளிகளுக்கு வாழும் வரை  நான் உதவ வேண்டும் 

இப்போது, சிவாஜி 3 D படம் பார்க்க கிளம்பி கொண்டிருக்கிறேன்



FINAL PUNCH 

ஒரு பத்திரிகை நிருபர் ரஜினி ரசிகனான என்னிடம் ரஜினி பற்றி கேட்டால் 
என் பதில் எப்படி இருக்கும் என்று கற்பனையாக யோசித்ததின் விளைவு 
இந்த பதிவு (பதில்கள் நிஜம்) 

ச்சும்மா அதிருதில்லே



ஆர் .வி.சரவணன் 


வெள்ளி, டிசம்பர் 07, 2012

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் 






படம் நல்லாருக்கு அதுவும் படம் முழுக்க சிரிப்பு என்று கேள்விப்பட்டவுடன் உடனே எனக்கு படம் பார்த்து விடணும் என்ற வேகம் வர அந்த வேகத்திலேயே உடனே  நேற்று தியேட்டர் சென்று படமும்  பார்த்து
விட்டேன் (அந்த வேகத்திலேயே பதிவும் போட்டுட்டேன் )


கதாநாயகன் விஜய் சேதுபதிக்கு நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடும் போது தலையில் அடி பட்டு விடுகிறது.ஷார்ட் டைம் மெமரி லாஸ் வந்து விடுகிறது. அதனால்  கடந்த ஒரு வருடத்தின் நினைவுகள் மறந்து விடுகிறது அதில் முக்கியமானது அவரின் காதலியும், அவருடனான திருமணமும் 

அவரது மூன்று நண்பர்களும் வீட்டுக்கு தெரியாமலும் ஏன் காதலிக்கே தெரியாமலும் இந்த விசயத்தை மறைத்து கல்யாணம் செய்து வைக்கிறார்கள் 
எப்படி முடியும் என்பது தானே உங்கள் கேள்வி? முடியும் என்று  அதை இயக்குனர் பாலாஜி தரணிதரன் முழுக்க முழுக்க காமெடி யில் பின்னி பெடலெடுத்திருக்கிறார் .

படத்தின் ஹீரோ விஜய் சேதுபதி என்னாச்சு என்ற வசனத்தை ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு விதத்தில் சொல்லும் போது தியேட்டரே சிரிப்பில் அள்ளுகிறது (சில நேரங்களில் என்ன திரும்ப திரும்ப பேசறே நீ என்று  நமக்குள் எரிச்சல் எட்டிபார்க்கும் தருணங்களில் ஒரு காமெடி வந்து அதை சரி செய்து விடுகிறது) ஏற்ற இறக்கங்களுடன் அவர் பேசும் வசனங்கள் மாறும் முக பாவங்கள் என்று  விஜய் சேதுபதி நன்றாக செய்திருக்கிறார் 

அடுத்து அவரது நண்பர்களாக வரும்  மூன்று பேரும்  படத்திற்கு முதுகெலும்பு என்றே சொல்லலாம். பக்ஸ் என்ற பெயரில் வருபவர் அதட்டலும் மிரட்டலும் என்றால் இரண்டாமவர் கண்களாலேயே பயத்தை வித விதமாய் காட்டி பம்முகிறார். சரஸ் ஹீரோவை நான் சொன்னா கேட்பியா மாட்டியா என்று கண்களில்  கெஞ்சலும் குரலில் கண்டிப்புமாய் அவரை அடக்கி ஆளுகிறார் 
மூவரும் கன கச்சிதம் 




ரசிக்க வைக்கும் காட்சிகள் படம் முழுக்கவே இருக்கிறது உதாரணத்திற்கு சில காட்சிகள் 

சலூன் கடை காட்சி ,

ரிசப்சன் மேடையில் மணப்பெண்ணை பார்த்து விட்டு, ப்பா என்று சொல்லி முகத்தை திருப்பி  கொண்டு என்னடா பொண்ணு பேய் மாதிரி இருக்கு என்று சொல்லும் காட்சிகள் 

டேய் நீ சொன்னா பில்டிங் மேலேருந்து குதிக்கிறது மட்டுமில்லே முன் பின் தெரியாத பெண்ணுக்கும் தாலி கட்டுவேண்டா என்று கண்களில் நீர் திரள விஜய் சேதுபதி சொல்லும் காட்சி 

கசின் பிரதருடன் சண்டையிட்டது மறந்து போய் என்ன அண்ணே இளைச்சுட்டீங்க என்று பார்க்கும் போதெல்லாம் இவர் கட்டி கொள்ள அவர் நெகிழும் காட்சி 

நண்பன் சரஸ், என் காதலி வந்திருக்கா பேசணும் கொஞ்சம் மேடைக்கு வாங்கடா என்று அழைக்க நண்பர்கள் நீ போ நீ போ என்று ஜகா வாங்குவது


எளிமையான வசனங்கள் தான் இருந்தும் காட்சியின் சூழல் காரணமாய்  அவை சிறப்பாய் அமைந்து நம்மை சிரிப்பில் ஆழ்த்துகிறது. உதாரணம் இவன் காதலியை மறந்துட்டான் என் காதலியை ஞாபகம் வச்சிருக்கான்டா  என்று சரஸ் சொல்லும் இடம் 

படத்தின் குறைகள் என்றால்,
 ஒரு டயாலாக் பேச ஒவ்வொரு கேரக்டரும் அதிக நேரம் எடுத்து கொள்வது, பேசிய வசனங்கள் திரும்ப வருவது , ஹீரோ என்னாச்சு என்ற வசனத்தை ஒவ்வொரு சூழ்நிலையில் பேசுவது ரசிக்க வைத்தாலும் சில இடங்களில் அதை கண்டிப்பாக தவிர்த்திருக்கலாம். படத்தின் ஆரம்ப பகுதியில் மெதுவாக நகரும்  காட்சிகள் (பக்கத்தில் அமர்ந்திருந்தவர் என்ன படம் ஷார்ட் பிலிம் பார்க்கிற மாதிரி இருக்கே என்றார்)


ஒளிப்பதிவாளர் பிரேம்குமார் (உண்மை நாயகன்) கிரிக்கெட் ஆடும் காட்சியில் விளையாடியிருக்கிறார் 

ஹீரோயின் படத்தின் நிறைவு பகுதியில் தான் வருகிறார். மருந்துக்கு 

கூட அவரது ஒரு போட்டோ அது வரை காட்டப்படவில்லை . இயக்குனர் தைரியத்தை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் படத்தில் அந்த நண்பர்கள் மூவர் கேரக்டராக நாம் ஒன்றி போய் விடுகிறோம் விளைவு அவர்கள் சிரித்தால்  நாமும் சிரிக்கிறோம் அவர்கள் பயந்தால் நாமும் பயப்படுகிறோம் உண்மை கதையை நம் கதை போல் ரசிக்க வைத்த விதத்தில் இயக்குனர் பாலாஜி தரணிதரன் அடுத்த படம் என்ன பண்ண போறீங்க என்ற எதிர்பார்ப்பை தந்திருக்கிறார் 

FINAL PUNCH 

இது உண்மை கதை என்று சொல்வதோடு மட்டுமில்லாமல் அந்த கேரக்டர்களின் நிஜ மனிதர்களையும் அவர்கள் இப்போது இருக்கும் நிலையையும்  காட்டும் போது நமக்குள் ஒரு நெகிழ்ச்சி வருகிறது 

நன்பேண்டா என்று சொல்ல தோன்றுகிறது 

ஆர்.வி.சரவணன் 





செவ்வாய், டிசம்பர் 04, 2012

இளமை எழுதும் கவிதை நீ-15


இளமை எழுதும் கவிதை நீ-15





நம்மால்  நேர்ந்த நம் காயங்களுக்கு 
அன்பால் மருந்திட்டு கொள்கிறோம் 

நோட்டீஸ் போர்டை படித்து விட்டு ஆச்சரியமும் அதிர்ச்சியுமாய் திரும்பிய மாணவ மாணவிகள், இதற்கு சிவா வின் ரியாக்சன் என்னவாக இருக்கும்   என்று அங்குமிங்கும் திரும்பி பார்த்தனர்.அவன் அங்கே எங்குமே தென் படாது போகவே இதை பற்றி சாதகமாய் சிலரும் பாதகமாய் சிலரும் பேசி கொண்டே கலைந்து  சென்றனர்.  

பேராசிரியர்கள் சிலர் "நம்ம சிவாவோட அப்பாவை  என்னவோ நினைச்சேன்  மனுஷன்  என்னமா  புரட்டி எடுக்கிறார் பார் " என்றனர். கூடவே "பையனையே இந்த பாடு படுத்தறாரே  நாமல்லாம் எம் மாத்திரம்" என்றும் பேசி கொண்டனர் 

உமா, அருள் ,கார்த்திக் ,பாலு நால்வரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவாறு  அதிர்ச்சியை பரிமாறி கொண்டவர்கள் சிவாவை தேடி செல்ல ஆரம்பித்தனர் 

பாலு "டேய் கார்த்திக் உங்க அப்பா ஆனாலும் ரொம்ப மோசம்டா சிவாவை இப்படி ஒதுக்கறது நியாயமே இல்லை "என்றான் 

கார்த்திக் சரியென்று  தலையாட்டினான் 

உமாவும் அருளும் சிந்தனை யுடனே ஒவ்வொரு வகுப்பறை யாக பார்த்தவாறே நடந்து கொண்டிருந்தனர்.  ஒரு கட்டடம் முடிந்து  அடுத்த கட்டடத்தின் திருப்பத்தில் திரும்பும் போது தான் கவனித்தார்கள். அங்கிருந்த தண்ணீர் நீறுற்றின் சுற்று சுவரில்  இருந்த அலங்கார கம்பியில் தன் கைகளை வைத்த படி  அந்த நீறுற்றை பார்த்தவாறே  நின்றிருந்தான் சிவா 


தொடரும்

ஆர்.வி.சரவணன் 


The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

ஞாயிறு, நவம்பர் 25, 2012

இளமை எழுதும் கவிதை நீ-14

இளமை எழுதும் கவிதை நீ-14





உனை பார்க்கும் போது  எனை  பார்க்க மறுக்கிறாய் 
பார்க்காத போதோ  பார்த்த வண்ணமே  இருக்கிறாய்  

மையம் கொண்ட புயல் ஒன்று எந்த திசை நோக்கி திரும்பும் என்று பயத்துடன் எதிர்பார்த்திருக்கையில் அது வலுவிழந்து போனால் எப்படி இருக்கும் அப்படி தான் இருந்தது அந்த வகுப்பறையில் இருந்தவர்களுக்கு. சிவா  எதுவும் நடவாதது போல் டெஸ்க்கிலிருந்து 
தன் புத்தகங்களை எடுத்து கொண்டு கடைசி பெஞ்சுக்கு செல்ல கிளம்பினான்.  தன் கோபத்தை வெளி காட்டாது மறைக்கவும் அதை கட்டுபடுத்தவும் மிகவும் பிரயத்தனப்பட்டான். அந்த பதட்டத்திலேயே  அவன் கையிலிருந்த புத்தகங்கள் நழுவி தரையில் விழுந்து திசைக்கொன்றாய் சிதறின. அதை பார்த்த பயோ டேட்டா பாலு உட்பட சில மாணவர்கள் அவசரமாய் எழுந்து வந்தனர்.

 தொடரும் 

ஆர்.வி.சரவணன் 

 ஓவியம் : நன்றி திரு.இளையராஜா 

 

The content is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

  

ஞாயிறு, நவம்பர் 18, 2012

இளமை எழுதும் கவிதை நீ -13



இளமை எழுதும் கவிதை நீ -13





இளமை எழுதும் கவிதை நீ இது வரை வந்த முன் கதை http://www.kudanthaiyur.blogspot.in/2011/10/blog-post_23.html


உனக்கும் எனக்குமான இடைவெளியை 
நான் கவிதைகள் இட்டே நிரப்பி கொண்டிருக்கிறேன் 


காலையில் சீக்கிரமாகவே விழிப்பு வந்து விட்டது சிவாவுக்கு. அதாவது  ஆறு மணி 
அவனை பொறுத்த வரை  அதுவே சீக்கிரம். விழித்ததும் தான், இருக்கும் இடம் தன் 
இப்போதைய நிலை, நேற்றைய நிகழ்வுகள் என்று ஒவ்வௌன்றும் அவன் மன திரையில் காட்சிகளாக அரங்கேற ஆரம்பித்தன. 

யோசனையுடன் படுக்கையில் அமர்ந்திருந்த சிவாவை ஓர கண்ணால் கவனித்தபடியே கல்லூரிக்கு செல்ல தன் சட்டையை சலவை செய்து கொண்டிருந்தான் அருள் 


சிங்கம் கம்பீரமாக அமர்ந்திருப்பதை  பார்க்கின்றவர்களுக்கு என்ன 
 தோன்றும் .ஒரு பயம் கூடவே அதன் கம்பீரமும் நம்மை கவரும்  .ஆனால் அதே சிங்கம்  அமைதியாக ஒரு ஓரத்தில்  ஒடுங்கி போய் அமர்ந்திருந்தால் எப்படி இருக்கும். அப்படி தான் இருந்தது அருளுக்கு, சிவா வை பார்த்த போது .நிஜமாவே இவன் மாறி விட்டானா இல்லை மாறியது போல் நடிக்கின்றானா என்றும் அவன் மனதுக்குள் ஒரு பட்டிமன்றம் நடந்து கொண்டிருந்தது.

தொடரும் 

ஆர் .வி.சரவணன் 

படம் நன்றி : ஓவியர் இளையராஜா 




திங்கள், நவம்பர் 12, 2012

தீபாவளி சிறப்பிதழ்

 தீபாவளி சிறப்பிதழ்



 



இணையத்தில் நான் தொடரும் நண்பர்களுக்கும்  என்னை தொடரும் நண்பர்களுக்கும் 
மற்றும் அனைவருக்கும் எனது இதயம் கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.


கடவுள் தரிசனம்

கும்பகோணம் அருகே உள்ளது  தாராசுரம் இங்கே வரலாற்று சிறப்பு மிக்க ஐராவதேஸ்வர் கோவில் உள்ளது எண்ணுறு ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்ட இக் கோவிலின் ஒரு படம்  இங்கே கடவுள்   தரிசனம்  பகுதியில் இக் கோவிலின் தகவல் படங்கள்   பின்  ஒரு  பதிவில்)





------


நகைச்சுவை







ஒருவர் அல்வா கிண்டுவதற்காக சமையல் கலை புத்தகத்தை வைத்து கொண்டு அதில் சொல்லியுள்ள படி அல்வா கிண்டி கொண்டிருந்தார். அல்வா கிண்டி முடித்தவர் தீடீரென்று ஒரு கிலோ நூறு ரூபாய் என்று குரல் கொடுக்க ஆரம்பித்தார். அவர் மனைவி அவர் கத்துவதை   பார்த்து என்னங்க ஏன் இப்படி குரல்  கொடுக்கறீங்க என்று கேட்டார் அதற்கு அவர் புத்தகத்தில் அல்வா கிண்டி முடித்தவுடன் ஏலம் போடவும் னு சொன்னங்க அதான் ஏலம் போட்டுட்டிருக்கேன் என்றார் ( இது எனது அனுபவம் அல்ல எனது உறவினர் தான் கேள்விப்பட்ட இந்த ஜோக்கை என்னிடம் பகிர நான் உங்களிடம் பகிர்ந்து கொண்டேன் )

------


தீபாவளி கவிதைகள் 










செல்வ   சிறார்கள் பட்டாசை வெடித்து மகிழ 
ஏழை சிறுவன் மட்டும் அதை பார்த்து  மகிழ்ந்தான் 


ஏழை பணக்காரன் எனும் பேதம் எல்லாம் பார்த்து  
பட்டாசு வெடிப்பதில்லை 



இரவு எனும் நந்தவனத்தில் இன்று மட்டும் 
ஓராயிரம் வெளிச்ச பூக்களின் மலர்ச்சி 


இரவு  எனும் கரும் பலகையில் வித விதமாய்  மத்தாப்பு கொண்டு
வர்ணம் தீட்டுகிறோம் 



------
என் சமையலறையில்

தீபாவளி சிறப்பிதழ் எனும் போது வீட்டில் உள்ளவர்களுக்கும் ஒரு பங்கு தர வேண்டும் அல்லவா  எனவே இதோ எனக்கு மிகவும் பிடித்த  பலகாரமான சீப்பு முறுக்கு . இதன் செய்முறை பற்றி எனது அம்மா,மனைவி தெரிவித்ததை இங்கு தந்திருக்கிறேன் 

சீப்பு  முறுக்கு 








தேவையான பொருட்கள் 

ஒரு  ஆழாக்கு பச்சரிசி மாவு , கால் ஆழாக்கு வறுத்து அரைத்த பயித்தம்பருப்பு மாவு,வெண்ணெய் 50 கிராம், சர்க்கரை 100  கிராம்,தேங்காய்  ஒரு மூடி, ஏலக்காய் , வெள்ளை எள், உப்பு ,எண்ணெய் தேவையான  அளவு 

 ஒரு  பாத்திரத்தில் அரிசி மாவு பயித்த மாவு  இரண்டையும் கலந்து கொண்டு எள் உப்பு இவற்றுடன் வெண்ணெய் போட்டு  பிசறி வைத்து கொள்ளவும்  அடுத்து தேங்காய் பால்  ஒரு பாத்திரத்தில் எடுத்து கொண்டு   சர்க்கரை ஏலக்காய் போட்டு சர்க்கரை கரையும் வரை மட்டும் மிதமான  சூட்டில் அடுப்பில் (சிம் கண்டிசன் ) வைத்து உடனே இறக்கி , பிசறி வைத்த மாவில் அதை ஊற்றி பிசைந்து சப்பாத்தி மாவு போல் செய்து கொள்ளவும்.  பின் டிசைனிங் தட்டு ஏதேனும் எடுத்து கொண்டு அதில் கொஞ்சம் கொஞ்சமாக மாவு எடுத்து   அப்பள பூவுக்கு இடுவது போல்  இட்டு  விரல்களில் சுற்றி ஒரு பிளேட்டில் (மேலே படத்தில் உள்ளது போல்) ஒரு பத்து  நிமிடம் காய  வைக்கவும். பின் வாணலியில்  எண்ணை ஊற்றி காய வைத்து மிதமான சூட்டில் போட்டு வறுத்து எடுக்கவும் இதோ சீப்பு முறுக்கு தயார் இங்கே தஞ்சாவூரில்  இது தீபாவளி ஸ்பெஷல்  (எனக்கும் இது ஸ்பெஷல் )





------


என் கேள்விக்கு எனது பதில்

இலவசங்களை பற்றி என்ன நினைக்கீறீர்கள் ?

இப்ப நம்ம கிட்டே ஒருத்தர் வந்து இலவசமா எனக்கு தீபாவளிக்கு டிரஸ் எடுத்து 
கொடுங்கனு கேட்கிறார் .அதுக்கு நாம என்ன  சொல்லுவோம்.  நான் எதுக்கு உனக்கு எடுத்து கொடுக்கணும் 
நீ என்ன என் கிட்டே கொடுத்தா வச்சிருக்கே இப்படி அடுத்தவங்க காசிலே வாழணும்னு நினைக்கறியே உனக்கு வெட்கமா இல்லே இப்படி தானே  கேட்போம். இல்லே மனசிலேயாவது  நினைப்போம்  இல்லீங்களா. இதுவே  இப்படி தின்க்  பண்ணி பாருங்களேன்  இலவசமா நமக்கு யாரோ டிரஸ் தர்றதா சொல்றாங்க. அப்ப சந்தோசமா வாங்கலாம் னு நினைக்கிறோம் அப்ப    மேலே சொன்ன  வரிகள் நம்ம முன்னாடி வந்து  நின்னு கை கொட்டி  சிரிக்குமே 

------
திரையுலகம் 






பீட்சா படம் பார்த்தேன் எனக்கு அவ்வளவாக பேய் படங்கள் பிடிக்காது. இருந்தும் இப் படத்தை பற்றி வந்த பாசிடிவ் ரிப்போர்ட் என்னை ஆர்வமுடன் படம் பார்க்க வைத்தது.  படம் பார்க்க ஆரம்பித்து  இருபது நிமிடங்களுக்கு படம் சாதாரணமாக செல்வது போல்  எனக்கு  தோன்றியது   ஆனால் அதற்கு பின் படம் எடுக்கிறது பாருங்கள் வேகம். அந்த வேகம்  படத்தின் முடிவு வரை இருக்கிறது.    அந்த பங்களாவில் ஒரு மணி நேரம் ஹீரோ விஜய் சேதுபதிக்கு கிடைக்கும் பயம், திகில், சஸ்பென்ஸ் அனைத்தும் படம் பார்க்கும் நமக்கும் கிடைக்கிறது. குறைவான கதாபாத்திரங்கள் மட்டுமே கொண்டு இந்த  த்ரில்லர் படத்தை  தந்திருக்கும்  இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ்.குறும்படங்கள்  மூலம் கவனம் ஈர்த்தவரின் முதல் முயற்சி இது. சினிமாவா,வேலையா எனும் போது சினிமா தான் என்று முடிவெடுத்து  தான் சினிமாவுக்கு வந்து விட்டதாக இயக்குனர்  விகடன் பேட்டியில் சொல்லியிருந்தார்.  சரியான பாதையை தேர்ந்தெடுத்த அவருக்கு ஒரு நல்வரவு மற்றும் வாழ்த்துக்கள். (பீட்சா இருக்கு பேஷா ) 


------


தீபாவளி சிந்தனை

தினந்தோறும் ஒரு தீபாவளி நடக்கிறது அதற்கு சூரிய உதயம்  என்று பெயர். மாதம் தோறும் ஒரு தீபாவளி நடக்கிறது அதற்கு பௌர்ணமி என்று பெயர் வருடத்திற்கு ஒரு தீபாவளி நடக்கிறது  அதை மட்டுமே தீபாவளி என்று நாம் நினைக்கிறோம். ஆவளி என்றால்  வரிசை என்று பொருள்  ஸ்வரங்களை  வரிசைபடுத்தினால் ஸ்வராவளி ஆண்டவனை அர்ச்சிக்கும்  போது நாமங்களை வரிசைபடுத்தினால் நாமாவளி அது போல் தீபங்களை வரிசைபடுத்தினால்  தீபாவளி.கண்ணை மறைக்கும் புற இருளை  மாற்ற தீபம் ஏற்றுவது போல் கருத்தை மறைக்கும் அக இருளை நீக்க ஞான தீபம் ஏற்ற வேண்டும் (மாலை மலர் 2010 தீபாவளி மலரில்  திரு . சுகிசிவம் அவர்கள்)  


------




 பேசும் படம்





------


ஹர்ஷவர்தன்  கார்னர் 

எங்கள் மகன்   ஹர்ஷவர்தன் தீபாவளி வாழ்த்துக்களை  உங்களுக்கு சொல்லும்  ஓவியம் 






கிளிக் செய்து பெரிதாக்கி பார்க்கவும் 



FINAL PUNCH

தீபாவளியை சந்தோசமாய்  கொண்டாடுவோம் நம்மை சுற்றி உள்ளவர்களும் அதே சந்தோசத்துடன்  கொண்டாட அக்கறை கொள்வோம் 



ஆர்.வி.சரவணன் 

புதன், நவம்பர் 07, 2012

இளமை எழுதும் கவிதை நீ....follows



இளமை எழுதும் கவிதை நீ....follows








இளமை எழுதும் கவிதை நீ  என்ற இந்த தொடர்கதை சென்ற தீபாவளிக்கு 
நம் குடந்தையூர் தளத்தில் நான் மிகுந்த உற்சாகத்துடன் எழுத ஆரம்பித்தேன் மேலும் இணைய நண்பர்கள் அளித்த உற்சாகம்  என்னை பன்னிரண்டு அத்தியாயங்கள் வரை சிறப்பாய் எழுத வைத்தது. இருந்தும் கதையின் இடைவேளை  வரை வந்த பின்  கொஞ்சம் ஆசுவாசபடுத்தி கொண்டு தொடரலாமே  என்று   இடைவேளை விட்டேன். பின் மீண்டும் நான் தொடர்ந்த  போது தொடர்கதை தொடங்கிய போது இருந்த ஆதரவு இப்போது இல்லையோ என்று நினைக்கும் அளவுக்கு இருந்தது . காரணம் கருத்துக்களும்  வருபவர்கள் எண்ணிக்கையும் கம்மியாக இருக்கவே சரி என்று தொடர்கதையை நிறுத்தி கொண்டு விட்டேன்.

எங்கள் வீட்டில் ஏன் தொடர்கதையை நிறுத்தி விட்டீர்கள் என்று டோஸ் விட்டார்கள்.  நான் ஆரம்பத்தில் இருந்த  ஊக்கம் கம்மியானது  போல் தெரிகிறது அதனால் தான் என்று சொன்னேன்.

நண்பர் கிரி தொடர்கதைக்கு அதிக இடைவெளி விட்டுட்டீங்க போல என்று கேட்டிருந்தார்

இணைய நண்பர் நிசாமுதீன் அவ்வபோது கருத்துரையிலும் போனிலும் தொடர்கதை எப்ப என்று கேட்டு கொண்டிருந்தார்.மேலும் அவர் கூறும் போது சார் உங்கள் பதிவுகளில் மெகா பட்ஜெட் என்றால் அது இளமை எழுதும் கவிதை நீ தான். ஆகவே அதை நல்ல படியாக முடித்து விடுங்களேன் என்றார்

இந்த கதையை பற்றி நான் தொடர்ந்து விவாதிக்கும், நண்பர் அரசன்  எப்ப சார் தொடர போறீங்க என்று சந்திக்கும் பொழுதெல்லாம் கேட்டு கொண்டிருந்தார்

ஒரு செயல் ஆரம்பிக்கும் முன் நிறைய யோசிக்கலாம் ஆரம்பித்த பின்
யோசிக்கலாமா என்று என் மனது கேள்வி கேட்க ஆரம்பித்தது 



சகோதரி தென்றல் சரவணன் இந்த தொடர்கதைக்கு படம் வரைந்து கொடுத்து 
தொடர்கதைக்கு இன்னும் சிறப்பு சேர்த்தார்.



இன்னும் சிலர் (அல்லது பலர்) ஏன் இவன் தொடர்ந்து எழுதவில்லை 
என்று நினைத்து கொண்டிருந்திருக்கலாம். இது வரை தொடர்கதையை 
படித்து வந்த  அனைவரும் என்னை மன்னிக்குமாறு கேட்டு கொள்வதுடன் தொடர்கதையை தொடர்ந்து எழுத போகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன்


படித்தவர்கள்  கதையை கொஞ்சம் புரட்டி ஞாபகம் செய்து  கொள்வதற்கும் இது வரை படிக்காதவர்கள் தொடர்கதையை படித்து கொள்ள லிங்க் இளமை எழுதும் கவிதை நீ....

இளமை எழுதும் கவிதை நீ 2

இளமை எழுதும் கவிதை நீ-3

இளமை எழுதும் கவிதை நீ-4

இளமை எழுதும் கவிதை நீ-5

இளமை எழுதும் கவிதை நீ-6

இளமை எழுதும் கவிதை நீ-7

இளமை எழுதும் கவிதை நீ-8

இளமை எழுதும் கவிதை நீ-9

இளமை எழுதும் கவிதை நீ-10

இளமை எழுதும் கவிதை நீ -11

இளமை எழுதும் கவிதை நீ-12

கதையை இது வரை படித்தவர்களுக்கு ஒரு ட்ரைலர்  இனி வரும் அத்தியாயங்களில் இருந்து  சில வரிகள் 


"சிவா நீங்க உலகத்திலே யாரும் செய்யாத தப்பை ஒன்னும் பண்ணிடலே வீட்டுக்கு அடங்காது இருந்தீங்க அதுக்கு போய் தலை குனிஞ்சு எல்லாம் நிக்கணும்னு அவசியமில்லை " என்றாள் உமா 

"சரிங்க உமா" என்று அதற்கும் தலை குனிந்தவாறே பதில் சொன்னான் சிவா 

"தலை நிமிர்ந்து நில்லுங்க" என்று உமா அதட்டியவுடன்  தலை நிமிர்ந்தான் சிவா 

"ஒன்னு தெரியுமா நீங்க மறந்தாலும் நான் மறந்துடலே" 

எதை என்று குழம்பிய முகத்துடன்  சிவா உமாவை பார்க்க 

"சவால் விட்டீங்களே என்னை விட ஒரு மார்க் கூட வாங்கி காட்டறேன்னு மறந்துடுச்சா" 

"நான் ஒரு வேஸ்ட் பீஸ்ங்க உமா போட்டிலேருந்து விலகிக்கிறேன் அதெல்லாம் மறந்துடுங்க"

இந்த வார்த்தைக்கு உமா மட்டுமில்லாது கூட இருந்த அருளும் கூட திடுக்கிட்டான் 

"என்ன நீங்க ஒரு தோல்விக்கு போய் இவ்வளவு வெக்ஸ் ஆகிட்டீங்க, சவால் னா சவால் தான் நீங்க படிக்கிறீங்க நான் உங்களை தேர்தல்லே தோற்கடிச்ச மாதிரி பதிலுக்கு நீங்க இப்ப என்னை எக்ஸாம் லே தோற்கடிகீறீங்க பார்க்கலாமா "என்று உத்வேகமாய் சொன்னாள் உமா 

அதை சிரத்தை இல்லாமல் கவனித்து கொண்டிருந்தான் சிவா 


கதையை இது வரை  படிக்காதவர்கள் பார்வைக்காக கதையை படித்த இணைய நண்பர்கள் சிலரின் கருத்துரைகள் இங்கே கொடுத்திருக்கிறேன்

சிவா இனி என்ன பண்ணுவார் என்ற எதிர்பார்ப்பு மேலோங்கி நிற்கிறது சார் ...
வாழ்த்துக்கள் ...  அரசன் - கரைசேரா அலை 


கதை முழுதுமாய் இன்றே படித்துவிடவேண்டும் என்கிற தேடலை தருகிறது உங்கள் எழுத்து....அருமையாய் நகர்கிறது கதை...வாழ்த்துக்கள்...தொடருங்கள் r.v.s. 

தென்றல் சரவணன் 


முதலில் சுவாரசியம் இல்லாமல் தான் படித்தேன். படிக்க படிக்க அட போட வைத்து விட்டீர்கள். 

சிவகுமாரன் 


சரவணன் நன்றாக எழுதி இருக்கீங்க.. இதை படிக்கும் போது எனக்கு 80 களில் வந்த படங்களின் நினைவு வந்து சென்றது. சிறப்பாக கொண்டு செல்ல வாழ்த்துக்கள். கிரி 



சுவ‌ராஸ்ய‌ம் கூடுது..தொட‌ருங்க‌ ச‌ர‌வ‌ண‌ன்.. க‌ட்டாய‌ம் ப‌டித்திட‌னும் முடிவை.. அகமது இர்ஷாத் 


"இளமை எழுதும் கவிதை நீ" தொடர்கதையை மீண்டும் தொடர்ந்திட கேட்டுக் கொள்கிறேன். 
நிசாமுதீன் 



இந்த தொடர்கதைக்கு வந்த கருத்துரைகளை நான் சமீபத்தில் மீண்டும் ஒரு முறை பார்வையிட்ட போது என் மேல் அக்கறை கொண்டு கதையின் மேல் ஈடுபாடு கொண்டு படித்தவர்களை நினைத்த போது கொஞ்சம் பெருமையும் நிறைய சந்தோசமும் அடைந்தேன்.


FINAL PUNCH 
இளமை எழுதும் கவிதை நீ தொடர்கதை 19-11-2012 அன்று முதல் ஒவ்வொரு திங்கள் கிழமையும் வெளியாகும் என்பதை அன்போடு தெரிவித்து கொள்கிறேன்

நெஞ்சம் நிறைந்த நன்றியுடன்


ஆர் .வி.சரவணன் 


திங்கள், நவம்பர் 05, 2012

வெற்றி தொட்டு விடும் தூரம் தான்....


வெற்றி தொட்டு விடும் தூரம் தான்....




சோதனையை சாதனையாய் மாற்ற வேண்டும் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கிறோம் அதை அனுபவ ரீதியா நான் உணர்ந்திருக்கிறேன்.  ஒரு நிறுவனத்தில் நான் மேலதிகாரியாக இருக்கும் போது எம்.டி யின் மனைவி நிறுவனத்தின் அந்த பிரிவுக்கு  இன்சார்ஜ். நான்
வேலைக்கு சேர்ந்த புதிதில் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டேன் .ஆனா பாருங்க ஒரு பிரெஷ் காண்டிடேட் வேலைக்கு சேர்ந்தார். எனக்கு அசிஸ்டன்ட் என்றும் சொல்லலாம் நான் விடுமுறை எடுக்கும் நாட்களில் எனக்கு மாற்றாக என்றும் சொல்லலாம் (நான் எப்போதுமே எனக்கு கீழ் வேலை பார்ப்பவர்களை மரியாதையில்லாமல் நடத்தியதும்  கிடையாது அதே 
போல் எனக்கு மேலதிகாரியாக இருப்பவர்களிடம் கும்பிடு போடுவதும் பிடிக்காது). அவருக்கு நான் காஷ் மற்றும் நிறுவனத்தின் செயல்பாடுகள் தினமும் உள்ள வேலைகள் என்று சொல்லி கொடுத்து அவரை தயார் செய்து கொண்டிருந்தேன். நான் கவனிக்காமல் விட்ட சில வேலைகள் தவறுதலாகி விடவே  செம டோஸ் எனக்கு மேடத்திடம் கிடைத்தது." இது கூட சரியாய் செய்யாம இந்த சேர் லே எதுக்கு நீங்க" என்று மேடம் கேட்டது எனக்கு ஜென்மத்திற்கும் மறக்காது. 


அதற்கு அடுத்து வந்த நாட்களில் நான் அவர் வந்தவுடன் குட் மார்னிங் சொன்னால் பதிலுக்கு அவர் மார்னிங்  என்று சொல்லாதது மட்டுமில்லாமல் என்னிடம் பேசுவதையே நிறுத்தி விட்டார். இது என்னை மிகவும் வருத்தத்திற்கு உள்ளாக்கியது இதை விட கொடுமை என்னவென்றால் புதிதாக சேர்ந்த அந்த பையனையே முன்னிறுத்தி என்னை பின்னுக்கு தள்ளிய தும் நடந்தது எல்லா வேலைகளும் அந்த பையனிடமே ஒப்படைப்பார். அந்த பையன் நான் செய்ய வேண்டிய  வேலைகளை கொடுப்பார். அதாவது மேடத்திற்கு அந்த பையன் ஒரு பி.ஏ   போல் ஆகி  விட்டார். வேலையை விட்டு வெளியேறி விடலாம் என்றால் என்னை அங்கே வேலையில் சேர்த்த உறவினருக்கு   என்ன பதில் சொல்வது என்ற தயக்கம் எழுந்தது. மேலும்  இப்படி என்னை அவமானபடுதியதற்க்கு பதிலடி கொடுக்காமல் திரும்பவும் நல்ல பெயரை வாங்காமல் அங்கிருந்து செல்ல கூடாது என்ற  உறுதி எடுத்தேன்


அடுத்து வந்த நாட்களில் எனது வேலை நேரத்தை இரு மடங்காக்கி கொண்டேன் எப்படி தெரியுமா காலை எட்டு மணியிலிருந்து இரவு எட்டு வரை வேலை நேரம். நான் இரவு இரண்டு மணி வரை தொடர்ந்து அமர்ந்தேன். ஒவ்வொரு துறையிலும் உள்ள வேலைகள் எப்படி நடைபெறுகிறது என்று பட்டியலிட்டேன் உற்று நோக்கினேன் அந்த பையன் எப்படி மேடத்திடம் நல்ல பெயர் வாங்கினான் என்பதை கவனித்தேன் ஒன்று புரிந்தது அது முக ராசி என்று. அது நமக்கு இல்லை, ஏனெனில் நான் செய்த தவறுகளை விட அவர் அதிகம் செய்தார் ஆனால்  இட்ஸ் ஓகே என்று அதை டேக் இட் ஈசி யாக நிர்வாகம் எடுத்து கொண்டது.இது என்னை இன்னும்  காயப்படுத்த, வெறி கொண்டு உழைத்தேன் நிறுவனத்தின் அனைத்து துறை பற்றியும் எனது விரல் நுனிக்கு கொண்டுவந்தேன்.எனக்கான நேரம் வருவதற்கு காத்திருந்தேன்.   

அந்த பையன், வீட்டில் திருமணம் என்பதால் பதினைந்து நாள் விடுமுறையில் சென்றார் 
மேடம் இப்போது என்னை நம்பியாக வேண்டிய கட்டாயம் வந்தது. அவர் என் மீது நம்பிக்கையில்லாமலே என்னிடம் வேலைகளை ஒப்படைக்க, நான் அவர் என்னிடம் எதிர்பார்த்ததுக்கும்  மேலே நல்ல படியாய் ரிப்போர்ட் தர ஆரம்பித்தேன். அவர் சொல்லாத வேலைகள் கூட செய்து அவரை ஆச்சரியப்பட வைத்தேன். அன்று குட் மார்னிங் சொன்னதற்கு கூட பதில் தர மறுத்தவர் இப்போது  (அங்கே இரவு பகலாக ஷிப்ட் முறையில் வேலை நடக்கும் ) இரவில் போன் செய்து நடைபெறும் வேலைகளை தெரிந்து கொண்டு விட்டு குட் நைட் சரவணன் என்று அவர் சொல்லும் அளவுக்கு நன் மதிப்பை பெற்றேன் இதன் மூலம் வாழ்க்கை பாடங்களில் ஒன்றை கற்று கொண்ட திருப்தி கிடைத்தது.

FINAL PUNCH

ஏற்கனவே நான் முடிவு செய்திருந்த படி நல்ல பெயர் பெற்ற திருப்தியுடன் அந்த நிறுவனத்திலிருந்து வேலையை ராஜினாமா செய்து விட்டு வேறு வேலையில் சேர்ந்து விட்டேன் 

ஆர் வி.சரவணன் 


செவ்வாய், அக்டோபர் 23, 2012

எங்க வீட்டு கொலு


எங்க வீட்டு கொலு 

எங்கள் வீட்டில் கொலு வைத்திருக்கிறோம் காண  வாருங்கள் 

நண்பர்களே 



கொலுவின்  முன்பு தினம் ஒரு  கோலம் 

  


 கலசம், விநாயகர் மற்றும் குபேரன் 

------


 உலகளந்த பெருமாள், அர்த்தனாரீஸ்வர்,விஷ்ணு துர்க்கை , 
கிருஷ்ணர், சிவன்  மற்றும் தசாவதாரம்  





   கருமாரியம்மன்  ,சரஸ்வதி,நடராஜர் ,
பாண்டுரங்கன்  ருக்மாயி ,
அன்னபூரணி 




உழவர் வாழ்க்கை ,பசு, மான்கள் மண்பாண்டங்கள் 





சாய்பாபா, மீரா ,பொய்கால் குதிரை , கரகாட்டம்  
மற்றும், தஞ்சாவூர் தலையாட்டி பொம்மை 






முளைப் பாரி 





 மளிகை கடை 






 எங்கள் மகன் ஹர்ஷவர்தன் அமைத்த 
 பூங்கா,





பூங்காவின் உள்ளே 





கொலு லாங் ஷாட் 


 நம் அனைவருக்கும் முப்பெருந்தேவியரின் அருள் கிடைக்கட்டும்  


ஆர் .வி.சரவணன் 

வியாழன், அக்டோபர் 18, 2012

இங்கிலீஷ் விங்கிலீஷ் - ஒரு பார்வை


இங்கிலீஷ் விங்கிலீஷ் - ஒரு பார்வை 





இந்த படம் நான் சென்றதற்கு மூன்று காரணங்கள் இருக்கின்றன. ஒன்று இயக்குனரின் முதல் படம் .மிக  நன்றாக இருக்கிறது என்று வந்த விமர்சனங்கள். இரண்டு இங்க்லீஷ் (இது மேலே அவ்வளவு ஈடுபாடா னு கேட்காதீங்க இங்கிலீஷ் க்கும் எனக்கும் ரொம்ப நாளாவே வாய்க்கால் தகறாரு இருக்கு அது தனி பதிவுலே பார்த்துக்குவோம் ) மூன்றாவது இந்த பதிவின் கடைசியில் சொல்றேன்

ஒரு இல்லத்தரசி ஆங்கிலம் தெரியாத காரணத்தால் தன் கணவனிடமும் தான் பெற்ற குழந்தைகளிடமும் அவமானப்பட நேர்கிறது. தன் அக்கா மகள் திருமனத்திற்காக அமெரிக்கா செல்லும் அவர்  அதை போராடி கற்று கொண்டு  எப்படி ஜெயிக்கின்றார் என்பது கதை


கணவன் மற்றும் குழந்தைகளால்  மட்டம் தட்டப்படும் ஒரு பெண்  எப்படி தன்னை உயர்த்தி கொண்டு   என்பதை மிக நேர்த்தியாக வெளிபடுத்திய  விதத்திலும் யதார்த்தமாய் சொன்ன விதத்திலும் சபாஷ் பெறுகிறார் அறிமுக இயக்குனர் கௌரி ஷிண்டே 







அந்த இல்லத்தரசியாக ஸ்ரீதேவி. வயதாகி விட்டதை முகம் உணத்தினாலும் அதெல்லாம் உறுத்தாத வண்ணம் நம்மை அந்த இல்லத்தரசி கேரக்டரில் பன் முகம் காட்டி நம்மை ஈர்ப்பதுடன் வெல்டன் ஸ்ரீதேவி என்றும் சொல்ல வைக்கிறார் 


உதாரணமாக, அவரது பெண் இந்தியாவிலிருந்து போன் செய்து புக் எங்கே வச்சே என்று கடுப்படிக்கும் போது ஆதங்கத்தில், இந்த குழந்தைகளுக்கு அம்மாவை எதிர்த்து பேச யார் உரிமை கொடுத்தது என்று பொருமுவார் அப்போது  சர்வர் என்ன சாப்பிடறீங்க என்று கேட்க உடனே ஆங்கிலத்தில் பேசி ஆர்டர் செய்வதும் , லட்டு தட்டு கீழே விழுந்து சிதற எல்லோரும் சமாதானபடுத்த தன் கனவுகள் சிதைந்தது போன்று நொறுங்கி போன முகத்துடன்  மௌனமாக சமையலறை சென்று ஒரு வேற்று பார்வையுடன் மீண்டும் லட்டு தயார் செய்வார்   பாருங்கள் சூப்பர் இடம் அது .அடுத்து என் பெண்டாட்டி லட்டு செய்யவே பிறந்தவள் என்று சொல்லி விட்டு உன்னை பற்றி புகழ்ந்து சொல்கிறேன் என்று சொல்லும் போது ஸ்ரீதேவி பார்க்கும் பார்வை  
என்று அவரது நடிப்புக்கு தீனி போடும் காட்சிகள் இது போல் நிறைய இருக்கின்றன


அவர்  விமானத்தில் இமிக்ரேசனில் ஆங்கிலம் தெரியாமல் திண்டாடுவது விழிப்பது இதையெல்லாம்  பார்க்கும் போது விமானத்தில் நான் இது போல் திணறியது என் ஞாபகத்துக்கு வந்தது 


அவரது கணவராக  அதில் ஹுஸைன். அவரை முதல் காட்சியில் பார்க்கும் போது என்ன ஸ்ரீதேவிக்கு பொய் இவரை ஜோடியா செலக்ட் பண்ணிருக்காங்க என்று நான் நினைத்தேன். ஆனால் காட்சிகள் செல்ல செல்ல அவரது இயல்பான நடிப்பை பார்க்கையில் குட் செலக்சன் என்று சொல்ல தோன்றுகிறது 


ஸ்ரீதேவி ஆங்கிலம் பயிலும் வகுப்பில் வகுப்பு தோழராக வரும் மேதி கண்களாலேயே ஊடுருவுகிறார். அவரது செல் போனின் மூலம் ஸ்ரீதேவி வகுப்பில் நடைபெறும் பாடத்தை கவனிப்பதாக வரும் சீன டச்சிங் மேலும் ஸ்ரீதேவியின் சக தோழர்கள் வகுப்பறை காட்சிகளை கலகலபாக்குகிறார்கள் 


ஸ்ரீ தேவியின் அக்கா பெண்ணாக பிரியா ஆனந்த் ஸ்ரீதேவியின் உணர்வுகளை புரிந்து கொண்டு உதவி செய்யும் அந்த பெண்  மீது நமக்கு ப்ரியம் தோன்றுவது இயல்பு தான் என்றாலும்  அவரது அழகும் நடிப்பும் இன்னும் அதற்கு துணை புரிகின்றன 


ஆங்கிலம் கற்று கொடுக்கும் மாஸ்டர் டேவிட், அவர்  கட கட வென்று பேசி கிளாஸ் எடுக்கும் அந்த சுறுசுறுப்பை பார்த்தால் , இப்படிப்பட்ட  ஒரு மாஸ்டரிடம் ஆங்கிலத்தை நாளே வாரம் என்ன நாளே நாளில் கூட கற்று கொள்ளலாம் போலிருக்கிறது 


கல்யாணத்தில், என் மனைவிக்கு ஆங்கிலம் பேச வராது  என்று கணவர் சொல்ல  ஸ்ரீ தேவி அவர் கை பிடித்து நான் பேசறேன் என்று சொல்லி எழுந்து தனக்கும் இங்க்லீஷ் தெரியும் என்ற இறுமாப்பில் எல்லாம் பேசாமல் உணர்வுபூர்வமாக மெதுவாக உச்சரித்து அவர் பேசும் ஆங்கிலம் கை தட்டல் பெறும் காட்சி 


நறுக்கு தெறித்தார் போன்ற வசனங்கள் கட்சிகளுக்கு இன்னும் வலிமை  சேர்க்கின்றன 
தன் மனைவி தனியாளாய் நின்று ஆங்கிலம் கற்று கொண்டு விட்டாள்  என்று தெரிந்து கொண்ட அவரது கணவரின் ரியாக்சன் எப்படி இருக்குமோ  என்ன கேட்பாரோ என்று நாம்  ஆர்வமாய் கவனிக்கையில்  ஒற்றை வரியில் இன்னும் என்னை நீ விரும்பறியா என்று அவர் கேட்பது ஒரு சாம்பிள் 



சில நிமிடங்களே வந்தாலும் அஜித் ஆச்சரியம், வரும் போதே கை  தட்டலால் தியேட்டரை 
அதிர வைக்கிறார் . ஒரு சக பயணியாக  எந்த ஒருபந்தாவுமில்லாமல் சிம்பிளான உடையில் அறிமுகமாகி ஸ்ரீதேவிக்கு ஊக்கம் தந்து  என்னை பாருங்க என்னை கூட  தான்  சொன்னாங்க  நான் இப்ப நல்லா பேசறேனா என்று கேட்கும் போது அட ஆமால்ல என்று நாம் சொல்லும் அளவுக்கு படு யதார்த்தம்.



ஒளிப்பதிவு லக்ஷ்மன் ஷிண்டே அமெரிக்கா எப்ப போவோம் என்ற ஏக்கத்தை ஆர்வத்தை நமக்குள் விதைக்கும் கேமரா கோணங்கள் 

பாடல்களில் செய்யாத ஸ்கோரை   பின்னணி இசையில் அமித்ரி தேவ் செய்திருக்கிறார் 






 ஸ்ரீதேவி பிரியா ஆனந்த் தவிர மற்ற நடிகர் நடிகைகள் தமிழுக்கு புதுசு என்பதால்  மட்டும் டப்பிங் படம் என்ற உணர்வை தருகிறது. ஆனாலும்  அவர்கள் அனைவரின் யதார்த்தமான நடிப்பும் இயக்குனரின் நேர்த்தியான உருவாக்கமும்  மற்றும் ஸ்ரீதேவி யும் ஒரு நல்ல படம் பார்த்த திருப்தியை தருகிறார்கள்.


 இங்க்லீஷ் WIN கிலீஷ் 




சரி நான்  இந்த படம் பார்க்க சென்றதற்கான மூன்றாவது காரணம் என்ன என்பதை சொல்லி விடுகிறேன் அது ஸ்ரீதேவி 


ஆர் .வி.சரவணன்