செவ்வாய், செப்டம்பர் 25, 2018

பூவப் போல பெண் ஒருத்தி














பூவப் போல பெண் ஒருத்தி


அந்த ஹைவேஸில் பைக் பறந்து கொண்டிருக்க, நரேன் பின்னால் இஷா அமர்ந்திருந்தாள். காதலர்கள்தான் என்றாலும் இருவரிடமும்  உற்சாகம் சுத்தமாக மிஸ்ஸிங். 


‘‘எப்ப வருவே?’’ 


‘‘வேலை இருக்குனு சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா?’’ 


‘‘என்னைச் சுத்திச் சுத்தி வந்தப்ப  அந்த வேலையெல்லாம் என்னப்பா பண்ணே?’’ 


‘‘மூட்டை கட்டி வச்சிருந்தேன். இப்பதான் பிரிச்சு வேலை பார்த்துட்டு இருக்கேன்!’’ 


‘‘உன்  லவ்வுக்கு ஓகே சொல்லாம அலைய விட்டிருக்கணும். அப்படிச் செய்யாதது என் தப்பு...’’


‘‘உனக்கு இப்ப என்ன வேணும்?’’


‘‘என்னை பெண்  பார்க்க வர்றாங்க. முடியாதுனு சொல்லி உன்னைக் கைகாட்டப் போறேன். அதனால வீட்டுக்கு வா!’’ 


‘‘வீட்ல சம்மதிக்கலைனா..?’’


‘‘வீட்டை  விட்டு வந்துடறேன். ஓட வேணாம். நிதானமா நடந்து போய் கல்யாணம் பண்ணிப்போம்!’’

‘‘என் வீட்ல கெடுபிடி ஜாஸ்தி...’’

‘‘அதைத்  தெரிஞ்சுகிட்டுதானே என்னை உராசிகிட்டு சுத்தினே..?’’


 ‘‘நான் என்ன பண்ணணும்?’’


‘‘இந்தக் கேள்விக்கு ஏற்கனவே பதில்  சொல்லிட்டேன்...’’


‘‘சரி... வந்து தொலைக்கிறேன்...’’ 

‘‘குட்...’’ நரேனின் பதிலுக்குக் காத்திராமல் செல்போனை கட் செய்தாள் இஷா.


நரேன் சிகரெட் புகையை வெளியேற்றுவது போல் பெரு  மூச்சை வெளியேற்றினான். இவளைத் தன் வாழ்க்கையிலிருந்து எலிமினேட் செய்ய வேண்டும். எப்படி? கலா மாதிரி இல்லாமல் நிறைய  வாயாடுகிறாள். இவளைச் சுற்றிச் சுற்றி வந்ததற்காக அடியாள் வைத்து தன்னையே அடித்துக் கொல்ல வேண்டும் போலிருந்தது. நரேனுக்கு மகாபலிபுரம் செல்லும் சாலையில் வரிசையாக நின்றிருக்கும் கட்டடங்களில் ஒன்றில் இருக்கும் பெரிய நிறுவனத்தில் வேலை.  ஒரு வருடத்துக்கு முன்பு வரை சராசரி பணியாளாக இருந்தான். திடீர் அதிர்ஷ்டம், இப்போது உயர் பொறுப்பில் இருக்கிறான். பணமிருப்பவனை நோக்கி பணம் வருவதுபோல் அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளில் ஒருவர் அவனை தன் வீட்டுக்கு அழைத்து, தன்  பெண்ணை அறிமுகப்படுத்தி, அவனை மாப்பிள்ளையாக்கிக் கொள்வதாகச் சொல்ல... அவனும் வானத்தில் பறக்கிறான். இந்த  உற்சாகத்துக்குக் குறுக்கே இப்போது இஷா.  




திடீரென்று வேகமாக வந்த லாரி நரேனின் பைக்கை உரச... தடுமாறி சுயநினைவுக்கு வந்தான்.  பேலன்ஸ் செய்ய ஓரத்திற்கு எடுத்தவன், அங்கிருந்த ஆட்டின் மீது மோதினான். அது தூக்கி எறியப்பட்டு ‘மே...’ எனக் கதறியது. 

‘‘என் மேல உள்ள கோபத்தை பைக்குல காட்டாத...’’ சீறிய இஷா இறங்கி, துடித்துக் கொண்டிருந்த ஆட்டின் அருகில் ஓடினாள்.


‘எப்படியும் பிரியாணி ஆகப் போற ஆடு... வா...’’


‘‘ஓருயிர் துடிச்சுட்டு இருக்கிறப்ப உன்னால எப்படி இப்படிப் பேச முடியுது..?’’ 


 ‘ஆட்டுக்கு சொந்தக்காரன் வந்து காசு கேட்பான்... அதான்...’’மனமில்லாமல் இஷா வந்து பைக்கில் ஏறினாள். 

‘‘நீ வண்டி ஓட்டறதைப்  பார்த்தா என்னைக் கொல்ல ப்ளான் செய்திருக்கிற மாதிரி தெரியுது...’’



 ‘‘அவன் வரமாட்டான். வேற வேலை இருந்தா பார்...’’ செல்போனில்  தன் முகத்தை அப்படியும் இப்படியும் திருப்பித் திருப்பிப் பார்த்துக் கொண்டே இஷாவின் தோழி ரம்யா சொன்னாள்


.‘‘வருவான்டி.  வரலேன்னா அவன் வீட்டுக்கு போயிடுவேன்!’’

‘‘அவனை விட்டுடறது பெட்டர்னு தோண்றது. ஏன்னா ஷாப்பிங் மால்ல அவன்கூட நான்  பார்த்த பொண்ணு செமையா இருந்தா. பணக்காரக் களை. அவளை விட்டுட்டு உன்னைக் கல்யாணம் பண்ணிக்க அவன் என்ன முட்டாளா?’’

“நான்தான் முட்டாள். நீ இல்லனா எனக்கு வாழ்க்கையே இல்லனு சுத்திச் சுத்தி வந்தவனை நம்பினேன் பாரு... விட மாட்டேன். நரேன்  கூடத்தான் என் கல்யாணம்!’’ உறுதியாகச் சொன்னாள்.

“இவ்வளவு தீவிரமா இருக்கியே... ரெண்டு பேரும் எல்லை மீறிட்டீங்களா..?’’ 

‘‘நோ!’’
‘‘உன்னை நம்பறேன். ஆனா, அந்த  எண்ணத்தோடுதான் உன் பின்னால சுத்தியிருக்கான். நீ உஷாரா இருந்ததால இப்ப விலகறான். அவனைத் தூக்கிப் போட்டுட்டு அப்பா  அம்மா பார்க்கிற பையனைக் கட்டிக்க...’’
‘‘எப்படி முடியும்? மனசுல அவன் கூட வாழ்ந்துட்டு இருக்கேன்!’’ 

‘‘அப்படின்னா முதல்ல உன்  அப்பா அம்மா கிட்ட பர்மிஷன் வாங்கு...’’


வாங்க முயற்சி செய்தாள். அவள் வீட்டில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்தார்கள். அவளும் அதே  உயரம் குதித்தாள். குடும்பத்தினருடன் ஏற்பட்ட தர்க்கம் முடிவுக்கு வர சில நாட்கள் பிடித்தது. முடிவில் இஷாவுக்கு வெற்றி கிடைத்தது. மகிழ்ச்சியுடன் நரேனுக்கு போன் செய்தாள். ஸ்விட்ச் ஆஃப். அவன் அலுவலகத்துக்கு போன் செய்தாள். வெளியூர் போயிருப்பதாகச்  சொன்னார்கள். நம்மிடம் சொல்லாமலா..? ரம்யா சொன்னது நினைவுக்கு வந்தது. நிஜமாக இருக்குமோ..? தடுமாறினாள்.


பைக் அந்த மலையின் அடிவாரத்திலிருந்து மேல்நோக்கிப் பயணிக்க ஆரம்பித்தது. இஷா தன் புருவத்தைச் சுருக்கினாள். 


‘‘சென்னைல  இல்லாத இடமா... பேச இங்க அழைச்சுட்டு வரே..?’’

 ‘‘மனசு விட்டுப் பேச இதுதான் தோதான இடம்...’’ வாய் விட்டுச் சொன்ன நரேன்,  ‘‘சொல் பேச்சு கேட்கலைன்னா உன்னை முடிக்கவும் இதுதான் சரியான இடம்...’’ என்றான் உள்ளுக்குள்.


அன்று காலை நரேன் அலுவலகம்  வந்தபோது, ரிசப்ஷனில் காத்திருந்த இஷாவைத்தான் முதலில் பார்த்தான். பதற்றத்துடன் அருகில் வந்தவன், ‘‘இங்க ஏன் வந்தே..?’’  என்றான். “செல்போனை ஏன் ஆஃப் பண்ணே?”

‘‘ஒர்க் ஆகலே!’’
 “பொய்! இதைப் பத்தி அப்புறம் பேசலாம். அப்பா அம்மா ஓகே  சொல்லிட்டாங்க. வா வீட்டுக்கு போகலாம்...’’
“பைத்தியமா நீ...” சீற நினைத்தவன் சுற்றும் முற்றும் பார்த்து அமைதியானான். ‘‘ஈவினிங்  பார்க்கிறேன்...’’

“முதல்ல செல்போனை ஆன் பண்ணு. இல்லைனா திரும்ப வருவேன்...’’ பதிலுக்குக் காத்திராமல் தன் ஹை ஹீல்ஸ் சப்தித்தபடி நடந்து  மறைந்தாள்.


நரேனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. மென்மையாக இருந்தவளா இப்படிப் பேசுகிறாள்? தன் கேபின் வந்தடைந்தான். மாமனாராக  வரப்போகும் நல்லசிவம் இன்டர்காமில் அழைத்தார். ‘‘வாங்க... எம்டியை மீட் பண்ணலாம்...’’ சென்றான். எம்டி அறைக்குள் நுழைந்ததும்  அவருக்கு வணக்கம் சொன்னான். 


‘‘வாழ்த்துக்கள் நரேன். நல்லசிவம் சொன்னார். குட் செலக்‌ஷன்னு அவர்கிட்டே சொன்னேன்...’’


‘‘தேங்க்ஸ் சார்...’’ நெளிந்தான். ‘‘ஹனிமூன் எங்க..?’’‘‘லண்டன் சார். பொண்ணு விரும்பறா...’’ நல்லசிவம் புன்னகைத்தார்.‘‘நைஸ்...’’ எம்டி  புன்னகைத்தார்.

‘லண்டனா...’ வியந்தபடி அவர் அறையை விட்டு வெளியே வந்தபோது இஷாவிடம் இருந்து மெசேஜ் வந்தது. ‘3 மணிக்குப் பார்க்கலாமா..?’  பற்களைக் கடித்தான். பதில் அனுப்பாவிட்டால் நேரில் வருவாள். நல்லசிவம் அவளைப் பார்த்துவிட்டால் பிரச்னை. முடிவு கட்ட  வேண்டும்... 



அந்த அருவியின் அருகே பைக் நின்றது. இஷா இறங்கினாள். இருவரும் பாறைகளுக்கிடையே கால் வைத்து ஏறி சம தரைக்கு  வந்தார்கள். சூரியன் மேற்கே இருக்க... நீல வானத்தில் திட்டுத் திட்டாக பஞ்சு மேகங்கள் நகர்ந்தபடி இருந்தன. அங்கே சிறிய குளம்  ஒன்றிருந்தது. யாரோ புண்ணியவான் குளம் ஆழம் ஜாக்கிரதை என்று சாக்பீஸால் பாறையில் எழுதி வைத்திருந்தார். மேலிருந்து  பாறைகளுக்கிடையே வெளிப்பட்டு குளத்தில் விழுந்து கொண்டிருந்த தண்ணீர் குளத்திலிருந்து வெளிப்பட்டு அருவியாகக்  கீழே இறங்கி  கொண்டிருந்தது. 

‘‘இப்படி ஓரிடம் இருக்கறது உனக்கு எப்படித் தெரியும்..?’’

ரஞ்சனியுடன் வந்து ஜாலியாக இருந்தபோது... என்றா சொல்ல முடியும்? 
 ‘‘ஃபிரெண்ட் சொன்னான்...’’ முணுமுணுத்தான் நரேன். 

இஷா அந்தக் குளத்தை ஒட்டினாற் போலிருந்த பாறையில் அமர்ந்தாள்.  அருகிலிருந்த மரத்தின் இலைகள் அவள் மேல் உதிர்ந்தன. நரேன் அருகே அமர்ந்தான்.‘நம்மை விட்டு விலகச் சொல்லணும். மறுத்தா  குளத்துல தள்ளிட வேண்டியதுதான்...’ நரேனுக்குள் எண்ணங்கள் படையெடுத்தன.‘எப்படியாவது நரேனை கன்வின்ஸ் பண்ணி உடனே  கல்யாணம் பண்ணியாகணும்...’ இஷா முடிவுடன் அவனை ஏறிட்டாள். 


‘‘எங்க வீட்ல முடியாதுனு சொல்லிட்டாங்க இஷா...’’ நரேனே  பேச்சை ஆரம்பித்தான்.

‘‘அப்படித்தான் சொல்வாங்க... பின்னே பணக்காரப் பொண்ணு உனக்குக் கிடைச்சிருக்காளே!’’ நேரடியாக விஷயத்துக்கு வந்தாள். நரேன் அதிர்ந்தான். 

‘‘உளறாத...’’ 
 ‘‘உன்னை லவ் பண்றேன்னு நீ உளறினதை விடவா? இனி மறைச்சுப் பேசவேண்டாம். எனக்கு எல்லாம்  தெரியும்...’’ 
‘‘பிறகு என்ன... விலகிக்கோ...’’ நரேன் எழுந்து பின்னால் தூசியைத் தட்டினான்.
‘‘ஒருவேளை அவளை விட என்கிட்ட அதிகப்  பணமிருந்தா என்னைக் கட்டிப்ப இல்ல...’’திரும்பிப் பார்க்காமலே கையை மட்டும் ‘முடியாது’ என ஆட்டினான். அவன் தொடர்ந்து சென்று  கொண்டிருப்பதை இமைக்காமல் பார்த்தாள். 

‘‘மிஸ்டர் நல்லசிவம்கிட்ட நம்ம விஷயத்தைச் சொல்லப் போறேன்...’’சட்டெனத் திரும்பி  அவள் அருகில் வந்து அமர்ந்தான். 


‘‘இங்க பார். லவ் பண்றேன்னு உன்கூட சுத்தினேன். அவ்வளவுதான். வேற எந்தத் தப்பும்  நடக்கலையே..?’’


‘‘அதனால..?’’


‘‘வேற எவனையாவது கல்யாணம் பண்ணிக்கோ!’’


‘‘முடியாது...’’


‘‘ஓகே. நான்தான் வேணும்னா உன்னை கீப்பா வைச்சுக்கறேன்...’’ஒரு நொடி கூட இஷா தாமதிக்கவில்லை. அறைந்தாள்.நரேன் கோபத்தில் சுற்று முற்றும் திரும்பிப் பார்த்தான். குளம் ஆழம் ஜாக்கிரதை  என்ற எழுத்துக்கள் எதிரே பாறையில் எழுதப்பட்டிருந்தன. இப்படியே இவளைத் தள்ளிவிட்டால் என்ன... தள்ளி விட்டான் .இஷா இதை எதிர்பார்க்காமல்  தடுமாறினாலும் பாறைக்கு அருகிலிருந்த அந்த மரத்தை தன் ஒரு கையால் அணைத்து இறுக்கமாகப் பிடித்துக் கொண்டாள். இன்னொரு  கையை பாறையில் ஊன்றி எழ முயற்சித்தாள். நரேன் அவளது முதுகில் கைகளை வைத்துத்தள்ளினான். இஷா தன்னிரு கைகளாலும்  அந்த  மரத்தைக் கட்டி அணைத்தது போல் விடாமல் பற்றியிருந்ததால் அவனால் முடியவில்லை. மரத்தைப் பிடித்திருந்த அவளது  கையைச் சிரமப்பட்டு விடுவிக்க முயற்சித்தான். ஆனால், நரேன் கால் வைத்திருந்த பாறை வழுக்க ஆரம்பிக்கவே... அப்படியே சறுக்கி  தண்ணீரில் விழுந்தான். பிடித்துக் கொள்ள ஒன்றும் கிடைக்காமல் தடுமாறினான். அவன் முழுக்க தண்ணீரில் மூழ்கி மறைந்த பின்னும்  குளத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் இஷா.   



ஆர்.வி.சரவணன் 


(எனது இந்த சிறுகதை குங்குமம் 31-08-2018 வார இதழில் வெளியானது. வெளியிட்ட குங்குமம் வார இதழுக்கும் குங்குமம் ஆசிரியர் அவர்களுக்கும் அன்பு மிக்க நன்றி.)

வெள்ளி, செப்டம்பர் 14, 2018

பிள்ளையார்





பிள்ளையார் 

மாறாத புன்னகையுடன் வீற்றிருந்தார் பிள்ளையார். கடை தெரு முழுவதும் விதவிதமான வடிவங்களில், உயரங்களில்.வண்ணங்களில்.

இதில் நம் வீட்டுக்கு வர போகிறவர் யார் ? என்ற கேள்வியுடன் நானும் என் மகனும் ஒரு கடையின் அருகில் செல்கிறோம்.முதல் பார்வையில் தென்பட்ட களி மண் பிள்ளையார் மனசுக்கு நெருக்கமாகிறார். வேறொன்றை பார்க்கலாமே என்ற மனித மன ஆவல் என் முன்னே வெள்ளம் போல் கரை புரண்டோடுகிறது. அதன் பின்னே நானும் செல்ல ஆயத்தமாகிறேன். மற்ற பிள்ளையர்களை பார்த்த பின்னே, முதலில் பார்த்த பிள்ளையாரே  நல்லாருக்கே என்கிறது மனம். மகனும் அதையே வழி மொழிகிறான். சரி என்று பின் வாங்கி, கொஞ்சம் முன் சென்று முதலில் பார்த்த முழு முதற் கடவுளை கடைக்காரர் சொல்லிய விலைக்கு வாங்கி கொள்கிறேன்.



பிள்ளையார் என் கைகளில் வந்தமர்ந்து கொள்கிறார். அவர் புன்னகையில் ஏதோ அர்த்தமிருப்பதாய் ஒரு பிரமை. மனைப்பலகையில் அவரை அமர வைத்து மகனிடம் கொடுத்த படி, பூ பழம், தோரணம்.... என்று வாங்கி கொண்டிருக்கிறேன். “சீக்கிரம் வா. ஒரு பிள்ளையார் வாங்கி வர சொன்னா எவ்வளவு நேரமாச்சு பாருனு வீட்ல உன் அம்மாவும், மனைவியும் திட்டிட்டிருக்காங்க.  அது எனக்கு இங்கே வரை கேட்குது” என்கிறார் பிள்ளையார். “இதோ” என்ற படி அவர் பேசுவதை ஆச்சரியமாக பார்த்த படியே வந்து டூ வீலரை ஸ்டார்ட் செய்கிறேன். மகனும் அதே ஆச்சரியத்துடன் எனக்கு பின்னே பிள்ளையாரை தனக்கு முன்னே அமர வைத்து கொள்கிறான்.  கூடவே “அப்பா மேடு பள்ளம் இருக்கும்.மெதுவா போங்க” என்கிறான். தலையாட்டுகிறேன். “மேட்டுக்கு போனாலும் சரி. பள்ளத்துக்கு போனாலும் சரி கஷ்டம் தான். சீரான சாலையில் பயணிக்கிறது நல்லாருக்கும். இது வாழ்க்கைக்கும் கூட பொருந்தும்” என்கிறார் பிள்ளையார். இருவருமே அவர் சொல்வதை லைக் செய்த படி பயணிக்கின்றோம்.  



ஏதோ ஒரு திருப்பத்தில் உயரம் தாண்டுகிறது வண்டி. “அப்பா பார்த்துப்பா” பையன் பல்லை கடித்த படி கத்துகிறான். கொஞ்சம் பயத்துடன் வண்டியை நிறுத்தி திரும்பி பிள்ளையாரை பார்க்கிறேன். பையனும் அவரை பார்க்கிறான். வேடிக்கை பார்த்த படி இருந்த பிள்ளையார் “ரெண்டு பேரும் என்னை பார்த்துகிட்டிருந்தா வண்டியை யாரு ஓட்டுறது” என்கிறார். மீண்டும் பயணிக்கிறது வண்டி.

இப்போது மழை தூற ஆரம்பிக்கிறது. ஓரமாக வண்டியை நிறுத்தி, பிள்ளையார் மேல் மழை படாத வண்ணம் காத்து கொள்கிறோம். பிள்ளையாருக்கு வாங்கியிருந்த வண்ண காகித குடையையும் பத்திரப்படுத்துகிறோம். சாலையின் பாதி வரை இடத்தை ஆக்ரமித்து கடை போட்டிருந்த வியாபாரிகள் அவசர அவரசரமாக தார் பாய் கொண்டு தங்கள் பொருள்களை காத்து கொள்ள முற்படுகிறார்கள். அதை கவனித்த படி “மழை பெய்தாலும் பிரச்னை. பெய்யாட்டியும் பிரச்னை இல்லியா” என்கிறார் பிள்ளையார். மீண்டும் ஒரு தலையாட்டல் எங்களிடமிருந்து.
மழை நின்று விடுகிறது. அடுத்த மழை வருவதற்குள் வீடு செல்ல வேண்டும் என்ற உத்வேகத்துடன் வீடு வந்து சேர்கிறோம். அம்மா மனைவி, மகள் பிள்ளையாரை வரவேற்கிறார்கள். "அம்மா இந்த பிள்ளையார் பேசறாரும்மா"  என்கிறான் மகன். அம்மாவும் மனைவியும் ஆச்சரியமாய் என்னை பார்க்க நான் தலையசைக்கிறேன்.மகள் சொல்கிறாள். "எங்க பேச சொல்லு  பிள்ளையாரை? என்கிறாள். "நேற்று உன் பள்ளியில் கொடுத்த ஹோம் ஒர்க்கை என் விழாவை காரணம் காட்டி எழுதாமல் சென்று விடாதே. கண்டிப்பாக தண்டனை கொடுக்க போகிறார்கள். ஆகவே எழுதி விடு" என்கிறார் பிள்ளையார். “வீட்டில் எல்லாரும் ஆச்சரியமாகிறார்கள். அவரை பூஜை அறையில் வைத்து அலங்கரிக்கிறோம்.  மழை தூறலால் அவருக்கு வாங்கி காகித குடை நனைந்திருக்கவே,  காற்றில் அதை உலர வைக்க ஆயத்தமாகிறேன். 

"ஆமா குடை எனக்கு வாங்கினியா. மழைக்கு வாங்கினியா” என்கிறார் பிள்ளையார். 
 “உங்களுக்கு தான்”. “அதான் மழைக்கு உபயோகப்படல "  கலகலவென சிரிக்கிறார் பிள்ளையார். பூஜையை முன்னிட்டு ஆளுக்கொரு வேலையாய்  இருந்த நாங்கள் அனைவரும் அவரை திரும்பி பார்க்கிறோம். சிரித்தது இவர் தானா என்பது போல், அதே மாறாத புன்னகையுடன் வீற்றிருக்கிறார் பிள்ளையார்.

விநாயக சதுர்த்தி நல் வாழ்த்துக்கள்.

ஆர்.வி.சரவணன்.

செவ்வாய், செப்டம்பர் 11, 2018

முகநூல் குறிப்புகள் -4







முகநூல் குறிப்புகள் -4

பழைய படங்கள் பார்ப்பதென்றால் அவ்வளவு பிரியம் எனக்கு. நேற்றிரவு சேனல்களை திருப்பி கொண்டே வருகையில் தூர்தர்ஷனில் கே. பாலச்சந்தரின் அழகன் படம், அப்போது தான் சென்சார் போர்டு சர்ட்டிபிகேட்டுடன் ஆரம்பித்திருந்தது.
நிறைய முறை இந்த படம் பார்த்திருந்தாலும் பிடித்த படமாதலால், தூக்கம் வரும் வரை பார்க்கலாம் என்று பார்க்க ஆரம்பித்தோம். சங்கீத ஸ்வரங்கள் பாடல் காட்சி போல், படம் முடியும் வரை தூக்கம் வரவில்லை.படத்தில் எனக்கு பிடித்த காட்சிகள் மம்முட்டி நடத்தும் ஹோட்டலின் மெனு லிஸ்ட் போல் நிறைய இருக்கிறது. இருந்தும் சாம்பிளுக்கு ஒன்று.
கோபத்தில் பானுப்பிரியா டான்ஸ் ஆடி கொண்டே மம்முட்டியிடம் பேசுவார். அவரது குற்றச்சாட்டுக்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மம்முட்டி கோபத்தில் கூட எவ்வளவு அழகு பாரேன் என்பது போல் அனைத்தையும் பொறுமையாக சிரித்த படி கேட்டு, "உன்னை மாதிரி டான்ஸ் ஆடிக்கிட்டே எல்லாம் எனக்கு சொல்ல தெரியாது" என்று ஆரம்பித்து தன் பங்குக்கு பொரிந்து தள்ள ஆரம்பிப்பார். இருவர் கோபத்திலும் இருக்கும் நியாயம் அந்த காட்சியில் அழகாக வெளிப்பட்டிருக்கும்.
இந்தப்படம் பற்றி ஒரு பதிவெழுதும் ஆசையிருக்கிறது. ஒவ்வொரு முறை அழகன் படம் பார்க்கும் போதும் இந்த ஆசை வரும்.

------

ஒரு நண்பருடைய கம்பெனி பாஸ் திருமண ரிசப்ஷனுக்கு அலுவலக நண்பர்களுடன் சென்றிருந்தேன். அங்கே நண்பர் தன்னோடு பணி புரிபவர்களை அறிமுகப்படுத்துகையில் ஒரு பெண், " நீங்க தான் சரவணனா ?" என்றார். "எஸ்" என்றேன் தயக்கமாக. "உங்க கதை படிச்சேன் நல்லாருந்துச்சு"என்றார். நன்றி சொல்ல முற்படும் அந்த சில நொடிகளுக்குள்ளாக, ரெண்டு கதையில் எந்த கதையை இவர் படித்தார்? அது எப்படி அவருக்கு அறிமுகம் ? என்று நான் யோசிக்க ஆரம்பித்து விட்டேன். இதை கவனித்த நண்பர் பிரபாத் அருகில் வந்து பதில் கொடுத்தார். "உங்க திருமண ஒத்திகை கதைய கொடுத்து எப்படி இருக்குனு படிச்சு சொல்ல சொல்லிருந்தேன். படிச்சவங்க, உங்களை நேர்ல பார்த்தவுடன் சொல்லிட்டாங்க"
மகிழ்ச்சி.

------

முறை மாமன் படத்துல ஜெயராமும் கவுண்டமணியும் வீட்டில் கோபித்துக் கொண்டு தனியாக சமைக்க ஆரம்பிப்பார்கள். சமைத்து முடித்ததை அவர்கள் வந்து சாப்பிடுவதற்குள் டேஸ்ட் பார்க்கும் மனோரமா, சாப்பாடு நன்றாக இருப்பதை பார்த்து விட்டு இவனுங்களை இப்படியே விட்டா தலைகால் புரியாம ஆடுவாங்க என்று சாப்பாட்டில் உப்பையும் மிளகாய் பொடியையையும் அதிகமாக போட்டு விடுவார். நிற்க.
அலுவலகத்தில் நாம என்ன தான் மாய்ஞ்சு மாய்ஞ்சு வேலை பார்த்து டயத்துக்கு முடிச்சு கொடுக்கும் போது முதலாளியோ, மேளாளரோ எங்கே சரியா இருக்குனு சொன்னா இவங்க ஏறிப்பாங்களோனு புதிதாக ஒரு தப்பை கண்டு பிடிச்சு திட்ட ஆரம்பிப்பாங்க பாருங்க. ஒழுங்கா பார்த்த வேலைல எப்படிடா தப்பு வந்திருக்கும்னு கவுண்டமணி ஜெயராம் போல முழிச்சுகிட்டு நிக்கிறது தான் அப்ப நம்ம நிலைமையா இருக்கும்.

------

கும்பகோணத்திலிருந்து சென்னைக்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கையில் சாலையோர உணவகம் ஒன்றில் இரவு ஒரு மணி வாக்கில் பேருந்து நிறுத்தப்பட்டது. 
"வண்டி பத்து நிமிஷம் நிக்கும். டீ காபி சாப்பிடறவங்க சாப்பிடலாம்" உணவக ஊழியரின் அழைப்பிற்கு மதிப்பளித்து, ஏதேனும் சாப்பிட வேண்டியோ, இயற்கை உபாதையோ, இல்லை உட்கார்ந்து கொண்டே வருவதால் ரிலாக்ஸ் வேண்டியோ பயணிகள் ஒவ்வொருவராக இறங்க ஆரம்பித்தனர். மூன்றாவது காரணத்திற்காக நானும் இறங்கினேன்.காபி,டீ,பிஸ்கட் கூல்ட்ரிங்ஸ் ஸ்டால்களுக்குடையே போட்டி போட்டபடி இருந்த இளநீர் குவியல் என் கவனத்தை ஈர்த்தது. சாப்பிடும் ஆசையிருந்தும் (விலை காரணமாக) வாங்க ஆசையில்லை.இருந்தும் ஒருவர் கூல்ட்ரிங்ஸ் கடையில் இருப்பவரை அணுகி, "இளநீர் வேணுங்க. அங்க கடையில ஆள் இல்லியே " என்றார். அதற்கு கூல்ட்ரிங்ஸ் கடையில் இருந்தவர் சொன்னார்.
"நடு ராத்திரில யாரு சார் உட்கார்ந்து வெட்டிகிட்டிருக்கிறது?. இதோ இவ்வளவு ஐட்டம் இருக்குதே. இத வாங்கிக்குங்க" இளநீர் கேட்டவர் நடுவில கொஞ்சம் பக்கத்தை காணோம் விஜய் சேதுபதி போல் நீ சொன்னா நான் கேட்கணுமா என்பது போல் கடையிலிருந்து விலகி சென்று விட்டார்.

------

ஒண்ணாம் தேதி வந்தவுடன் கவுண்டமணியாகி, "அது என்ன விலை, இது என்ன விலை, நான் இப்ப எதையாவது வாங்கியாகணுமே" என்று பரபரக்கும் மனசை, இருபதாம் தேதி "ஜிம்பலக்கடி பம்பா. இப்ப வாங்குடா பார்ப்போம்" என்று கவுண்டமணி வாய்சிலேயே, திருப்பியடித்து அடக்கி வைக்குமாம் வாழ்க்கை.

------

நம் முயற்சிகளில் ஆயிரம் கஷ்டங்களை கடந்திருப்போம். உலகத்திற்கு அது ஒரு பொருட்டே அல்ல.முயற்சிகள் வெற்றியை தொடும் அந்த தருணத்திலிருந்து தான் உலகம் நம்மை ஆச்சரியமாய் கவனிக்க தொடங்குகிறது. அந்த ஆயிரம் கஷ்டங்களும் முக்கியத்துவம் பெறுவது கூட அந்த தருணத்திலிருந்து தான்.

ஆர்.வி.சரவணன்