புதன், மே 25, 2016

கவுண்டமணியின் ஒரு நேர் காணலில்....






கவுண்டமணியின்  ஒரு நேர் காணலில்....
(கற்பனையில தாங்க எழுதிருக்கேன்)

பிரபல தொலைகாட்சியில் இணையத்தில் எழுதுபவர்களை கவுண்டமணி இண்டர்வியூ செய்யும் நிகழ்ச்சி ஒன்று நடைபெற்று கொண்டிருக்கிறது.

கவுண்டமணி ஸ்டார்ட் மியூசிக் என்ற குரலுடன் உள்ளே நுழைய, சூரியன் பட பேக் கிரௌண்ட் மியூசிக் ஒலிக்க ஆரம்பிக்கிறது. ஏகப்பட்ட கர கோஷத்துடன் வந்து நாற்காலியில் அமர்பவர் கேமராவை பார்த்து 
"கும்பிடுறேனுங்க" என்று அவரது ஸ்டைலில் வணக்கம் வைக்கிறார் 




நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் அவர் அருகே வந்து "சார் நீங்க கோட் சூட் போட்ருக்கீங்க 
இங்கிலீஷ் ல தான் சொல்லணும்  " என்கிறார்.

 "அப்ப பெர்முடாஸ் போட்டிருந்தால் எந்த மொழில  பேசச் சொல்வே நீ.
இல்லே புதுசா மொழி எதுனா என்னை கண்டு பிடிக்க சொல்வியா. பிஸியா இருக்கிற 

என்னை டார்ச்சர் பண்ணாதே கோ மேன் "என்று எகிறவும்  நிகழ்ச்சிஏற்பாட்டாளர் 
நகர்கிறார் 

நிகழ்ச்சி ஆரம்பமாகிறது


ஹாய், ஹாய் , பசியோட இருக்கிற புள்ளைங்களுக்கு சாப்பாடு கூட கொடுக்காம, புருஷன் எப்ப வீட்டுக்குள்ளே  வந்தார்னு கூட தெரியாம  டி வி பெட்டியே கதி னு உட்கார்ந்திருக்கிற தாய்குலங்களே அப்புறம்  பொண்டாட்டி கிட்டே போட வேண்டிய சண்டையை கூட நிப்பாட்டி வச்சிட்டு  ப்ரோக்ராம் பார்த்ததுக்கு அப்புறம் சண்டை போடலாம் னு காத்திட்டிருக்கிற தந்தைகுலங்களே. எல்லாருக்கும் நம்ம நிகழ்ச்சி சார்பா ஒரு வெல்கம் சொல்லிக்கிறேனுங்க.இம்மீடியட்டா  நிகழ்ச்சிக்கு போயிடறேன். இல்லேன்னா விளம்பரத்தை போட்டுடுவாங்கோ.இன்னிக்கு யாரோட பேச போறோம்னு பார்க்கலாமா கமான் பாய். வா வந்து உட்காரு.

என்று அவர் சைகை காண்பிக்க நான் அவர் எதிரே உள்ள இருக்கையில் அமர்கிறேன்






என்னை ஒரு முறை மேலிருந்து கீழ் வரை நக்கலாக பார்க்கிறார் கவுண்டமணி 

மணி : உன் பேரென்ன

நான் : ஆர்.வி. சரவணன்

மணி :உன்னோட ப்ளாக்  பேரு

நான் : குடந்தையூர்

மணி : பெயர் காரணம்

நான் : கும்பகோணத்தோட இன்னொரு பேரு குடந்தை.  அதுல ஊர்னு 
ஒரு வார்த்தையை சேர்த்து குடந்தையூர் னு ஆக்கிட்டேன்

மணி :இருக்கிற ஊர் பத்தாதுனு நீ வேற புதுசா உண்டாக்கிட்டியா 

நான் : கொஞ்சம் தனி தன்மையோட இருக்கட்டுமேனு தான் ....என்று இழுக்கிறேன் 

மணி : அப்ப நீ தனி தீவுல தான் இருந்திருக்கணும். பை த பை. நெட்ல 
எத்தனை வருசமா எழுதறே.

நான் : அஞ்சு  வருஷமா

கம்ப்யூட்டரை பார்த்து கொண்டே 

மணி : வாழும் மட்டும் நன்மைக்காக வாழ்ந்து பார்ப்போம் னு கேப்சர் வோர்ட் உன் சைட் ல 
வச்சிருக்கியே. நீ  முதல்ல அதை பாலோ பண்றியா மேன்.


நான் : நம்மாலே யாருக்கும் கெடுதல் இல்லாமே நடந்துகிட்டாலே 
நன்மை பண்ண மாதிரி தானே 

மணி : ஓ இப்படி வேற ஒண்ணு இருக்கா.சரி இந்த குண்டூசி விக்கிறவன் புண்ணாக்கு விக்கிறவன் எல்லாம் தொழிலதிபர் னு சொல்றான்யா னு நான் ஒரு படத்துல வசனம் பேசுவேன். அதை இப்ப இங்க ஏன் சொல்றேன்னு உன்னாலே புரிஞ்சிக்க முடியுதா.

நான்  : எஸ் சார் . பேனா பிடிச்சவன் எல்லாம் எழுத்தாளர் ஆகிட முடியுமா னு
சொல்ல வரீங்க.

மணி : குட்யா  . கேட்ச் மை பாயிண்ட் . நான் சொன்னதுக்கு எதுனா நீ பீல் பண்றியா. 

நான் : நோ சார். யாருக்கு திறமை இருக்கோ அவங்க கண்டிப்பா மேல வருவாங்க 

மணி கம்ப்யூட்டரையும் என்னையும் மாறி மாறி பார்க்கிறார்.

நான் : என்ன சார் 

மணி மேலும் கீழும் என்னை பார்த்து விட்டு 

ரஜினி கூட பேசற மாதிரி எல்லாம் பதிவு எழுதிருக்கே .கனவு காணுங்கப்பா உங்களை வேணாம் னு நான் சொல்லல. ஆனா நாங்க எல்லாம் நம்பற மாதிரி கனவு காணுங்க.

நான் :  ஒரு ஆசை  தான் 

மணி :சரி நீ எது வரைக்கும் எழுதுலாம் னு பிளான் வச்சிருக்கே 
கூகுள்காரன் கழுத்தை பிடிச்சு தள்ளற வரைக்கும்னு சொல்லிடாதே 

நான் :படிக்கிறவங்க விரும்பற வரைக்கும் 

மணி : உன்னை நீ வா போ னு சொல்றேனே. இதை பத்தி எதுனா பீல் பண்றியா

நான் : உங்க ஸ்டைல் அதானே சார்.  சிங்கம் கர்ஜித்தால் தானே அழகு. 
சிணுங்கினால் அழகாவா இருக்கும் 

 மணி : வெரி குட்.  நீ என்னை தனியா வந்து  பாரு.

நான் : சார்  உங்க கூட  ஒரு செல்பி எடுத்துக்கணும் 

மணி : எதுக்கு பேஸ் புக்ல போட்டு லைக்ஸ் வாங்கறதுக்கா. இதெல்லாம் எனக்கு பிடிக்காது மேன். சரி உன் பியுச்சர் பிளான் என்ன 

 நான் :டைரக்டர் நாற்காலில உட்காரணும்

மணி : யோவ் ஒரு சேரை எடுத்து அதுல டைரக்டர் னு எழுதி ஒட்டிட்டு உட்காருய்யா. இதை எல்லாம் போய் பியுச்சர் பிளான் னு சொல்லிட்டு திரிஞ்சுகிட்டிருக்கே.

நான் : சார். நான் டைரெக்டர் ஆகணும்னு சொல்ல வந்தேன் 

மணி : ஓ அப்படியா . தமிழ்நாட்டு ரசிகர்களை கொடுமைபடுத்தணும்னு  முடிவு பண்ணிட்டே சரி. வாழ்த்துக்கள் 

என்றவர் என் கை பற்றி குலுக்கி 

நைஸ் மீட்டிங் சரவணன்.இது வரைக்கும் உங்க கிட்டே நான் கேள்வி கேட்டேன்.  என் கிட்டே நீங்க எதுனா கேள்வி கேட்க ஆசைபடறீங்களா

நான் : எஸ் சார் நீங்க ஒருத்தர்ட்ட கேட்ட கேள்விக்கு  பதில் வந்திருச்சானு தெரிஞ்சிக்க ஆசைபடறேன் 

 மணி : நான் யாருட்ட என்ன கேள்வி கேட்டேன் ?



 நான் : ஒரு பழம் இந்தாருக்கு இன்னொன்னு எங்கேனு செந்தில் கிட்டே கேட்டீங்களே பதில்                     கிடைச்சிருச்சா 


மணி : ம் பழனிக்கு போயிருக்கு. அது இந்நேரம் பஞ்சாமிர்தம் ஆகிருக்கும்

என்று சீரியசானவர் தன் உதவியாளரிடம் 

சும்மாருந்தவனை சொரிஞ்சு விட்டுட்டாண்டா. 


நீ செந்திலுக்கு உடனே போன போடு. இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்

மணி போன் பேச முயற்சிக்கையில், எப்படியும் செந்தில் "அதாண்ணே இது" என்ற அதே பதிலை தான் சொல்ல போகிறார்.கவுண்டமணி இன்னும் டென்சன் ஆக போகிறார் என்பதால் நான் அங்கிருந்து வெளியேறுகிறேன்.

வலைச்சரத்தில் அக்டோபர் 2013 நான் ஆசிரியராக பொறுப்பேற்றிருந்த போது எழுதிய பதிவு. அதை கொஞ்சம் மாற்றங்களுடன் இங்கே எனது தளத்தில் வெளியிட்டுள்ளேன்.

இன்று பிறந்த நாள் காணும் கவுண்டமணி அண்ணனுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


ஆர்.வி.சரவணன் 

வெள்ளி, மே 20, 2016

வீடெங்கும் திண்ணை வைத்து ....







வீடெங்கும் திண்ணை வைத்து ....



நண்பர் துளசிதரன் ஒவ்வொரு வருடமும் மே மாதம்  ஒரு குறும்படம் எடுப்பது வழக்கம். அவருடன் நான் அறிமுகமாகிய இந்த மூன்று வருடங்களில் அவரது மூன்று படங்களின் படபிடிப்பில் பங்கு கொண்டு விட்டேன். ( பரோட்டா கார்த்திக், பொயட் த கிரேட், செயின்ட் த கிரேட் ) இதில் முன்றாவது குறும்படமான செயின்ட் த கிரேட் குறும்படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் பாலக்காட்டில், திருநல்லாயி என்ற இடத்தில் நடைபெற்றது. கோவை ஆவியும் நானும் சென்றிருந்தோம். இங்கே நான் குறிப்பிடபோவது படப்பிடிப்பை பற்றியோ குறும்படத்தை பற்றியோ அல்ல. படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு தெருவை  பற்றி தான் இந்த பதிவில் சொல்ல இருக்கிறேன்.காலையில் நாங்கள் சென்று இறங்கிய போது இது ஏதடா, எதாவது சினிமா செட் போட்ட இடத்திற்கு தான் வந்து விட்டோமா என்று தான்  ஒரு கணம் ஆச்சரியமாக இருந்தது. அப்படி எல்லாம் இல்லை எனும் போது என் ஆச்சரியம் பல மடங்கானது. காரணம் சொல்லாமல் நான் ஆச்சரியத்தை அடுக்கி கொண்டே சென்றால் நீங்கள் சலிப்படைய கூடும் . ஆகவே விசயத்துக்கு வருகிறேன். 

அந்த தெருவின் சிறப்பே, தெருவின் இரு புறமும் உள்ள வீடுகள் அனைத்துமே திண்ணை வைத்து கட்டபட்டிருந்த  ஓட்டு வீடுகள். மாடி வீடாக இருந்தால் கூட
திண்ணைக்கு மட்டுமாவது கட்டாயம் ஓடு போடப்பட்டிருக்கிறது. 
இதில் ஆச்சரியம் என்னவென்றால் வீடுகள் அனைத்தும் முன்னே பின்னே என்றில்லாமல் ஒரே சீராக வரிசையாய் கட்டப்பட்டிருப்பது தான்.(ஓரிரு வீடுகளில் அப்படி இருக்கலாம்)

அந்த தெருவை பார்க்கையில் படப்பிடிப்புக்காக போடப்பட்ட ஒரு செட் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அங்கே தான் படப்பிடிப்பு என்றவுடன் எனக்கு குதுகலம் அதிகமானது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில வீடுகளின் திண்ணையில் சென்று (வீட்டாரின் அனுமதி பெற்று) அமர்ந்தபடி படங்கள் எடுத்து கொண்டிருந்தேன். அந்த படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.


















அன்று முழுதும் சிறு வயது ஞாபகங்களின் கரம் பிடித்த படியே அலைந்து கொண்டிருந்தது மனசு. மாலை அங்கிருந்து கிளம்பிய போது, வர மறுத்து அடம் பிடித்த மனசை அதட்டி தான் அழைத்து வர வேண்டியதாயிற்று.

ஆர்.வி.சரவணன் 

திங்கள், மே 09, 2016

பாக்யா வார இதழில் திருமண ஒத்திகை



பாக்யா வார இதழில் திருமண ஒத்திகை 
(தொடர்கதை )

குமுதத்தில் வெளி வந்த மௌன கீதங்கள் திரைக்கதை தொடர்  படித்து, படம் பார்த்த பின் திரு. கே. பாக்யராஜ் அவர்களின்  ரசிகனானேன் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அவரது படங்கள் வெளி வரும் நாளெல்லாம்  எனக்கு கொஞ்சம் ஸ்பெஷல் தான்.பாக்யா வார இதழை பாக்யராஜ்  துவங்குகையில், வருடம் ஒரு முறை படங்களின் மூலமாக உங்களை சந்தித்த நான் இனி வாரம் ஒரு முறை பாக்யா வார இதழ் மூலமாக உங்களை  சந்திக்க இருக்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார். 

பாக்யா வார இதழ் ஒவ்வொரு வாரம் வெளி வரும்போதும், அவரது படத்தை  எதிர்பார்க்கும் அதே குதூகலத்துடனே எதிர் கொண்டேன். தொடர்ந்து ஒரு வாசகனாய் மட்டுமே பாக்யாவை படித்து வந்த எனக்கு, இணையத்தில் எழுத ஆரம்பித்த பிறகு பாக்யாவில் என் படைப்பும் வெளியாக  வேண்டும் என்ற ஆசை துளிர் விட ஆரம்பித்தது. 

இப்படியான சூழலில் தான் முக நூல் நண்பர்  எஸ்.எஸ்.பூங்கதி்ர் மூலமாக பாக்யா வார இதழின் வாசகர் கமெண்ட் பகுதியில் முதன் முதலாக  எனது கமெண்ட் வெளியானது. சில வரிகளே தான் என்றாலும் அது எனக்கு கொடுத்த உற்சாகம் மிக பெரிது. அதற்கு பின்  பூங்கதிர் மூலமாக, பாக்யராஜ் அவர்களை சத்திக்கும் வாய்ப்பும் கிடைத்தது.அந்த அனுபவங்களை பதிவாகவும் எழுதியிருக்கிறேன்.

இது நம்ம பாக்யராஜ்

பின் எனது இரு சிறுகதைகள் பாக்யாவில்  வெளியானது. அது  வெளியான  விதத்தை பற்றி குறிப்பிடும் எனது பதிவு.

எனது இளமை எழுதும் கவிதை நீ.... நாவல் வெளியீட்டுற்கு பின் அடுத்ததாக நான் எழுத ஆரம்பித்த திருமண ஒத்திகையை குடந்தையூர் தளத்தில் பாதி வரை எழுதி  நிறுத்தியவன் மீதமுள்ள அத்தியாயங்களை  எழுதி முடித்து, புத்தகமாக வெளியிட முடிவு செய்த போதே, இந்த புத்தகத்திற்கான அணிந்துரையை  பாக்யராஜ் அவர்களிடம் தான் கேட்டு பெற வேண்டும் என்று ஆவல் கொண்டிருந்தேன். எவ்வளவு நாளானாலும் பரவாயில்லை என்ற உறுதியுடன்  அவரை சந்திப்பதற்காக  காத்திருந்தேன்.

இந்த சூழ்நிலையில், நண்பர் எஸ்கா மூலமாக நான் இணைந்த வாட்ஸ் அப் குழுமத்தில் நண்பர் பாப்பனப்பட்டு வ.முருகன் அவர்கள் பாக்யாவில் தொடர்கதை தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டார். அதைப் பார்த்து திருமண ஒத்திகை  கதையை பற்றி சொல்லி அனுப்பி வைத்திருந்தேன். சில நாட்களுக்கு பின் பாக்யாவிலிருந்து எனை வரச் சொல்லி பாக்யராஜ் உதவியாளர் மூர்த்தி நடராஜன் போன் செய்தார்.  ஆவலுடன் சென்றிருந்தேன். பாக்யராஜ் அவர்கள் கதையை கேட்டுவிட்டு சில கரெக்‌ஷனுடன் பாக்யாவில் தொடர்கதை வெளியிட ஒப்புதல் அளித்தார். 

பாக்யராஜ் அவர்களின. அணிந்துரையுடன் புத்தகமாக வெளியிட விரும்பியவனுக்கு,  பாக்யாவில் அது தொடர்கதையாகவே  வெளி வரும் வாய்ப்பையே  கடவுள் ஏற்படுத்தி தந்திருக்கிறார்.






இதோ திருமண ஒத்திகை தொடர்கதை இந்த வாரம் (மே 6-12) பாக்யா வார இதழில்  ஆரம்பமாகி விட்டது.



எத்தனையோ நாட்கள் நம் எழுத்துக்களும் பத்திரிகைகளில் வராதா என்று ஏங்கியிருக்கிறேன்.  ஆனால் அப்படி வராதது இப்படி ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைப்பதற்காக தான் எனும் போது மோதிரக்கையால் குட்டுப்பட்ட ஒரு சிஷ்யனின் உற்சாகத்தை உணர்கிறேன். 

இந்த இனிய  தருணத்தை எனக்களித்த ஆசிரியர்  பாக்யராஜ் அவர்களுக்கு 
என் இதயம் நிறைந்த நன்றி.

பாக்யா ஆசிரியர் குழு, தொடர்ந்து  ஊக்கமளித்து வரும்  நண்பர்கள் எஸ். எஸ் பூங்கதிர், பாப்பனப்பட்டு வ.முருகன், மூர்த்தி நடராஜன்,  அரசன், கோவை ஆவி, மனசு குமார், துளசிதரன், நிஜாமுதீன், எஸ்கா கார்த்திக், கீதா ரங்கன், மற்றும் வலைபதிவ நண்பர்கள், முக நூல் நண்பர்கள், வாட்ஸ்அப் நண்பர்கள் அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.

இரண்டாவது அத்தியாயம் 




தொடர்கதையை படித்து நிறை குறைகளை பகிர்ந்து கொள்ளுங்கள் நண்பர்களே.
என்றும் அன்புடன்

ஆர்.வி.சரவணன்.