சனி, நவம்பர் 17, 2018

ஸ்வீட் காரம் காபி





ஸ்வீட் காரம் காபி 
(17/11/18)

இந்த தலைப்பில் தான் முன்னாடி  தளத்தில் எழுதிட்டிருந்தேன். நடுவிலே நிறுத்திட்டேன். இப்ப திரும்பவும் இந்த தலைப்பில் ஆரம்பிச்சிருக்கேன். ஆனா  இதுல வரது எல்லாமே முகநூலில் சமீபத்தில் நான் எழுதியவை தான் என்பதையும் இங்கே தெளிவு படுத்தி விடுகிறேன்.

96 எல்லோரும் கொண்டாடிட்டிருக்கிற படத்தை பார்க்க டிவி முன்னாடி உட்கார்ந்தாச்சு. படம் நல்லாருக்குமா நல்லால்லையா என்ற குழப்பத்தில் அமர்வதை விட நல்லாருக்குனு தெரிஞ்சு படம் பார்க்க உட்கார்றது ரிசர்வ் பண்ணிட்டு டென்ஷன் இல்லாம ட்ரெயினை பிடிக்கிற மாதிரி. எந்த காட்சி நம்மை படத்துக்குள்ள இழுத்து போட போகுது பார்க்கலாம்னு தில்லா பார்க்கிறப்ப, ராம் தன் ஊரை பத்தி சொல்லிட்டு வர, எங்க ஊரான கும்பகோணம் சாலை, டவுன் ஹைஸ்கூல், வாட்ஸ் அப் சாட், கிளாஸ்ரூம், இளையராஜா சாங், பங்ஷன்ல ஜானு இன்ட்ரோ, னு......ஜானு எங்க இருக்க ராம்னு கேட்கற வரைக்கும் வந்தாச்சு. ஆஹா படத்தை இது வரைக்கும் பார்த்ததுல எந்த சீன்ல உள்ளே இழுக்கப்பட்டேன்னு தெரியலயே.

திரும்பவும் படத்தை ஆரம்பத்திலருந்து 
பார்க்கணும்.

(மீண்டும் படத்தை பார்த்த பின்னாடி 96 பத்தி இன்னும் எழுதுவேன்னு நினைக்கிறேன்)

------


நண்பர் ஒருத்தர் கேட்டார்.
"சினிமால கதை பஞ்சாயத்தா ஓடிட்டிருக்கே. அடுத்து நீ எழுதிட்டிருக்கிற கதை என்னன்னு சொன்னே."
"அரியாசனம். அரசியல் கதை தான்"
"நீயும் அரசியலா. இதென்ன அரசியல் கதை சீசனா"
"அப்படியில்ல. நான் ரெண்டு வருசம் முன்னாடியே எழுத ஆரம்பிச்சிட்டேன். என் கதை எப்படிப்பட்டதுன்னா....."
"போதும் ஒன்லைன் கூட நீ சொல்ல தேவையில்ல. சொல்லவும் சொல்லாதே."
மீ ஙே.
அப்படி என்ன தான் அந்த கதை என்பவர்களுக்காக எனது அரியாசனம் கதையிலிருந்து ஒரு துளி.

 சார். சி எம்மா பதவி ஏற்க போறீங்க.மக்களுக்கு என்ன சொல்ல விரும்பறீங்க ?" மீடியாவின் கேள்வி கணைகள் இப்படியாக ஆரம்பிக்கிறது.
சில நொடிகள் யோசனைக்கு பிறகு பதில் தருகிறான் அருள்.
"சிறப்பான ஆட்சியே என் லட்சியம்."
" சார். இது எல்லாரும் வழக்கமா சொல்றது தானே. புதுசா எதுனா சொல்லலாமே."
அடித்த நொடியே பதில் வருகிறது.
"புதுசானா எப்படி? நல்ல ஆட்சிலாம் என்கிட்ட எதிர்பார்க்காதீங்கனு சொல்ல சொல்றீங்களா" டென்ஷன் இல்லாமல் கூலாகவே பதில் சொல்கிறான்.
"அப்படி இல்ல. என்னென்ன திட்டம் வச்சிருக்கீங்கனு சொல்லலாமே."
"ஒரே ஒரு திட்டம் தான். இந்த நாட்ல யாராலயும் யாருக்கும் கெடுதல் நடக்க கூடாது.நடக்கவும் விட கூடாது.
"அது முடியும்னு நினைக்கறீங்களா"
" முடியாதுனு மீடியா, முடிவே பண்ணிட்டீங்களா. அப்ப முடியாது தான்"
"என்ன சார். எங்க மேலயே பழி போடறீங்க."
அருள் சிரித்த படி கேசுவலாக பதில் தருகிறான்.
"நீங்களும் ஜனநாயகத்தோட ஒரு தூண் தானே."
(ஒரு விளம்பரம்)
------
தீபாவளி என்றால் புத்தாடை, இனிப்பு, பட்டாசு இதனுடன் என்னென்ன படம் ரிலீஸ் ஆகிறது என்ற ஆர்வமும் கூடவே வரும் அல்லவா. இப்போதெல்லாம் ஒன்றிரண்டு படங்கள் தான் ரிலீஸ் ஆகிறது. இது சினிமா ரசிகர்களின் யானைப்பசிக்கு சோளப்பொறி போன்றது தான்.
முன்பெல்லாம் தீபாவளிக்கு நிறைய படங்கள் ரிலீஸ் ஆகும். உதாரணமாக 32 வருடத்திற்கு முந்தைய 1984 தீபாவளி வருடத்தை எடுத்து கொள்வோமே.
கும்பகோணத்தில் தேவி (இப்போது பரணிகா), செல்வம்,விஜயா, காசி, டைமண்ட், மீனாட்சி, விஜயலஷ்மி, கற்பகம், என்று எட்டு தியேட்டர்கள் இருந்தது. அனைத்திலுமே புது படங்கள் தான். தேவியில் உன்னை நான் சந்தித்தேன், விஜயாவில் எனக்குள் ஒருவன், மீனாட்சியில் நல்லவனுக்கு நல்லவன், விஜயலட்சுமியில் வைதேகி காத்திருந்தாள். கற்பகத்தில் கொம்பேறி மூக்கன், ரிலீஸ் செய்யப்பட்டிருந்தன. மற்ற இரு தியேட்டர்களிலும் ரிலீசான படம் ஞாபகமில்லை.
இதே போல் 1985 வருடம் எடுத்து கொண்டால் படிக்காதவன், சின்ன வீடு, சிந்து பைரவி, ஜப்பானில் கல்யாணராமன்.
1986 தீபாவளி எடுத்து கொண்டால், மாவீரன், புன்னகை மன்னன், லட்சுமி வந்தாச்சு (சிவாஜி), தழுவாத கைகள் (விஜயகாந்த்), விடிஞ்சா கல்யாணம் (சத்யராஜ்), தர்ம தேவதை விஜயகாந்த்) பாலைவன ரோஜாக்கள், அறுவடை நாள்.
எங்கள் வீட்டில் தீபாவளியின் போது மட்டும் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும். வீட்டிற்கு தெரியாமல் ஒன்று, தெரிந்து ஒன்று, குடும்பத்தினருடன் ஒன்று என்று செல்வதுண்டு.
இப்படி ஒவ்வொரு வருடமும் தீபாவளியன்று வெளியாகும் புது படங்களின் வரவை பற்றி நினைக்க ஆரம்பித்தால் தனி கட்டுரையே எழுதலாம்.
(ம். அது ஒரு சினிமா காலம்)

------

தஞ்சாவூர் செல்லும் போதெல்லாம், கண்டிப்பாக (பழைய பஸ்ஸ்டாண்ட் அருகேயுள்ள) அன்பு பால் நிலையம் சென்று லஸ்ஸி சாப்பிடுவோம். சமீபத்தில் சென்றிருந்த போது லஸ்ஸி ரெடியான கிளாஸை எல்லோரும் எடுத்து கொள்ளும் முன்பு "நான் ஒரு போட்டோ எடுத்துக்கட்டுமா" னு கேட்டேன்.தாராளமா என்றார்கள். கிளாஸில் ஸ்பூனால் பாலாடையை கடைக்காரர் எடுத்து போடும் போது இன்னும் கொஞ்சம் போட்டால் தான் என்ன என்றே கேட்க தோணும்.

(அதுக்கும் காசு கேட்டா என்ன பண்றதுங்கிறதினாலே கேட்கறதில்ல)
------
ரெண்டுனு ஒரு படம். அதுல மாதவன் வந்த ஆட்டோவை, அவரும் வடிவேலுமா சேர்ந்து எப்பலாம் காசில்லயோ அப்பலாம் ஒவ்வொரு பார்ட்டா கழட்டி வித்துடுவாங்க. நிற்க. ஏதாவதொரு முக்கிய தேவைக்காக நாம கஷ்டப்பட்டு கொஞ்சூண்டு சேர்த்து வச்சிருக்கிற சேமிப்பை கூட தினப்படி பணம் தேவைப்படும் போதெல்லாம் கொஞ்ச கொஞ்சமா எடுத்து செலவு பண்றதெல்லாம் கூட இந்த ரகம் தான்.

(மறுபடி சேமிப்பு உருவாகும் போது செலவும் இலவச இணைப்பா கூடவே வரும்) 

-----

"அவன் வரட்டும் இன்னிக்கு. அவனை உண்டு இல்லைனு பண்றேன் பார்" என்ற கொக்கரிப்புடன் காத்திருக்கும் கோப அம்பு, அந்த அவன் வரும் வரை காத்திருக்காமல் தென்படுவோரை எல்லாம் பதம் பார்த்து விடுகிறது.
(அனுபவச் சிந்தனை தான்)

மீண்டும் சந்திப்போம் 

ஆர் .வி.சரவணன்