புதன், ஏப்ரல் 18, 2012

ஒரு கல் ஒரு கண்ணாடி



ஒரு கல் ஒரு கண்ணாடி

பந்தியிலே உட்கார வச்சி சாப்பிட விடாமே எழுப்பி விட்டுட்டா எப்படி இருக்கும் அந்த மாதிரி ஒரு அனுபவம் எனக்கு ஒரு கல் ஒரு கண்ணாடி படம் பார்க்க போனப்ப ஏற்பட்டுச்சு அது இந்த பதிவின் கிளைமாக்ஸ் லே சொல்றேன்

இப்ப படம் பற்றிய பகிர்வுக்கு வருவோம்

ஹீரோ ஹீரோயினுடன் நண்பனாகி பின் காதலித்து பிரிந்து பின் சேர்கிறார் இந்த ஒரு வரியை வைத்து கொண்டு தன் சுவாரஸ்யமான திரைக்கதையால் நான் ஸ்டாப் காமெடி யில் இயக்குனர் ராஜேஷ் தந்திருக்கும் கலக்கல் படம் இவரது பாஸ் என்கிற பாஸ்கரன் எனக்கு எப்போதும் பிடித்த படங்களில் ஒன்று

உதயநிதி அறிமுக ஹீரோ. அலட்டல் பில்டப் என்று எதுவுமில்லாமல் சிம்பிளாக நடித்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் இன்னும் சரியாய் நடிக்கலாமே என்று தோன்றும் கொஞ்ச நேரத்திலேயே பரவாயில்லையே என்று சொல்ல வைக்கிறார். பக்கத்துக்கு வீட்டு பையன் போன்ற இமேஜுடன் அவர் இருப்பது சிறப்பு சில காட்சிகளில் இன்னும் இவர் நன்றாய் செய்திருக்கலாமே என்று தோன்றுகிறது (அம்மாவை காணவில்லை என்றவுடன் அப்பாவை அவர் திட்டுவார் அந்த காட்சியில் இன்னும் எக்ஸ்ப்ரசன் தேவைபடுகிறது ) ஹன்சிகாவை அவருக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை ரணகளபடுத்த அதை பார்த்து உதயநிதி செய்யும் சேஷ்டைகள் தியேட்டர் வாசலில் அவர் போடும் ஆட்டம் ரசிக்க வைக்கிறது

ஹன்ஷிகா கோடைக்கேற்ற ஊட்டி போல் குளு குளு வென்று இருக்கிறார் . இப்படி இருந்தால் எந்த ஹீரோ தான் அவரை காதலிக்க அலைய மாட்டார் என்று தோன்ற வைக்கும் அழகுடன் படத்தில் வலம் வருகிறார்

சந்தானம் உதயநிதியின் நண்பனாக படம் முழுக்க அவர் பேசும் டைமிங் வசனங்களுக்கு தியேட்டர் அதிர்கிறது உதயநிதியின் வீட்டில் அவரை காப்பாற்ற வந்து நொந்து போவதாகட்டும் போலீஸ் ஸ்டேசனில் மிமிக்ரி செய்து திணறுவதாகட்டும் நண்பனின் இம்சையை தாங்கி கொண்டு நோவதாகட்டும் தியேட்டரில் சிரிப்பலை தான் கல்யாணத்தை நிறுத்தணும் என்று நண்பன் சொன்னவுடன் கட்டை எடுப்பதும் நிறுத்த வேண்டாம் வாழ்த்துவோம் என்றவுடன் பொக்கே ஆர்டர் செய்ய சொல்வதும் என்று படம் முழுக்க அவர் சிக்சர் அடிக்கிறார் இந்த படத்திற்கு சந்தானம் மிக பெரிய பிளஸ் +

அடுத்து சரண்யா, அழகம் பெருமாள் உதயநிதியின் தாய் தந்தையாக நடித்திருக்கிறார்கள். இதில் சரண்யா அப்பாவி அம்மாவாக புருஷன் இருபது வருஷம் பேசாமல் இருக்கிறார் என்று கண் கலங்குவதிலும், எனக்கு கோபமாக எல்லாம் பேச வராது என்று அப்பாவியாய் ஹன்சிகாவிடம் சொல்வதிலும், அதிலும் உங்கப்பா பேசிட்டார்டா என்று பொங்கி பூரிக்கும் முக பாவத்திலும் சரண்யா சபாஷ்யா தான்

சரண்யா பொய் சொல்லி கல்யாணம் செய்ததால் அழகம் பெருமாள் பேசாமல் இருக்கும் விதம் அவ்வளவாக ஏற்புடையதாக இல்லை அதற்கு பதில் இருவரும் அவ்வபோது இது விசயமாய் பேசி கொண்டே சண்டையிட்டு கொள்வதாய் காட்டியிருக்கலாம்


விமானத்தில் செல்லும் போது உதயநிதி சந்தானம் செய்யும் கலாட்டாக்கள் ரசிக்க வைக்கின்றன என்றாலும் திமிர் பிடித்த பெண்ணை அடக்க வேண்டும் என்றால் உதயநிதி இப்படி டார்ச்சர் செய்யலாம் ஆனால் காதலில் ஒத்து கொள்ள வைக்க இப்படி டார்ச்சர் செய்கிறாரே என்று எண்ண தோன்றுகிறது நமக்கு. அவரது டார்ச்சரில் ஹன்சிகா திணறி கோபத்தில் எகிறும் போதும் கண் கலங்கும் போதும் பரிதாபப்பட வைக்கிறார்

புழுங்கல் அரிசி மன்னிக்கவும் புன்னகை அரசி சிநேகா சீனியர் ஏர் ஹோசடளாக உதயநிதி, சந்தனத்தை தன் புன்னகையால் சமாளிக்கும் விதம் அழகு

வழக்கம் போல் படத்தை முடித்து வைக்க வருகை தருகிறார் ஆர்யா ரஜினி முருகன் என்ற கெட்டப்பில். அவரது கெட்டப்புக்கு ஏற்றவாறு அவருக்கு துணையாய் வரும் ஆண்ட்ரியா கெட்டப் ஒட்டவில்லையே (டிரஸ் தான் சொல்றேன் அவர் வேட்டி சட்டையிலும் இவர் ஜீன்ஸ் பேன்ட்டிலும் இருப்பது ஏன் )

டைமிங் வசனங்கள் படத்திற்கு மிக பெரிய பலம்

மச்சான் பொண்ணுக்கு கொடுக்கிற சீர் வரிசையே என்னாலே தூக்க முடியாது என்னை போய் பொண்ணை தூக்க சொல்றியே ஒரு சாம்பிள்

அழகே அழகே பாடலும், பாடல் காட்சியும் அழகு. அதில் ஹன்சிகா மட்டுமில்லாமல் அது படமாகியிருக்கும் லோகேசன் அந்த பாடலுக்கு இன்னும் அழகு சேர்க்கிறது

வேணாம் மச்சான் வேணாம் பாடலில் மட்டும் சந்தானம் மீசையுடன் வருகிறார் காதல் தோல்விக்கு தாடி வளர்ப்பாங்க இவர் மீசை வளர்த்துட்டரோ என்று கேட்க தோன்றுகிறது


லாஜிக் சில இடங்களில் இடித்தாலும் அதெல்லாம் நம்மை எந்த விதத்திலும் உறுத்தாமல் அல்லது அதை பற்றி நம்மை நினைக்க கூட டைம் கொடுக்காமல் இயக்குனர் ராஜேஷ் படத்தை இரண்டரை மணி நேரம் வாய் விட்டு சிரிக்க வைத்திருக்கிறார்

ஒரு கல் ஒரு கண்ணாடி ராஜேஷ் ,உதயநிதி, சந்தானம் மூவர் கூட்டணியில் ட்ரிப்ள் ஓகே ஆகியிருக்கிறது


சரி ஆரம்பத்தில் நான் சொன்ன பந்தி விசயத்திற்கு வருகிறேன் அதாவது இந்த படம் பார்க்க நான் திங்கள் மாலை தியேட்டர் சென்றேன் ஹவுஸ் புல் என்பதால் டிக்கெட் கிடைக்கவில்லை கிளம்ப மனமில்லாமல் நான் நிற்கும் போது ஒருவர் என்னிடம் ஒரு டிக்கெட் இருக்கு வேண்டுமா என்றார் கொடுங்க சார் என்று நான் பரவசமாக, அவர் ஆறு பேருக்கு ஒரே டிக்கெட் டாக ரிசர்வ் பண்ணியிருக்கோம் சோ நீங்க எங்க கூடவே வாங்க என்றார். ஓகே என்று நான் பணம் எடுத்து நீட்டும் போது அவர் உள்ளே வந்து உட்கார்ந்தவுடன் வாங்கிக்கிறேன் என்று சொல்லி விட்டு, என் பிரெண்ட்ஸ் வண்டி பார்க் பண்ணிட்டு வர போயிருக்காங்க வந்துரட்டும் அது வரை வெயிட் பண்ணுவோம் என்றார். நான் சந்தோசமாக அவருடன் வெயிட்செய்யும் போது வந்து நின்ற அவரது நண்பர்களை எண்ணினால் இவரையும் சேர்த்து ஆறு பேர் டேய் உன் தம்பி வரலேன்னு நான் இவரை அந்த டிக்கெட் க்கு கமிட் பண்ணி வச்சிருந்தேனே என்று சொல்லி என்னிடம் எப்படி சொல்வதென்று சங்கடப்பட, நான் உடனே பரவாயில்லீங்க அதனாலென்ன தாங்க்ஸ் என்று சொல்லி விட்டு கொஞ்சம் ஏமாற்றத்துடன் வெளி வந்தேன் உடனே கவுண்டர் சென்று அடுத்த நாளுக்கு ரிசர்வ் செய்து விட்டு நேற்று சென்று பார்த்து விட்டு வந்தேன்

படம் பார்க்க போகிறோம் என்று சந்தோசமாகி நுழைவாயில் அருகே செல்கையில் டிக்கெட் இல்லை என்றால் எப்படி இருக்கும் அந்த மன நிலையை தான் ஆரம்பத்தில் குறிப்பிட்டேன்

ஆர்.வி.சரவணன்

திங்கள், ஏப்ரல் 16, 2012

விழி மீன்கள்....



விழி மீன்கள்....



தூண்டிலில் மீன்கள்
மாட்டும்
இதுவா
அதிசயம்
உன் விழி மீன்களில்
தூண்டிலாய்
நான்
மாட்டினேன்
இதுவல்லவோ
அதிசயம்

ஆர்.வி.சரவணன்

வலை தளம் ஆரம்பித்த புதிதில் நான் எழுதிய கவிதை

புதன், ஏப்ரல் 04, 2012

இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்....




இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்....

மனம் கவர்ந்த பாடல்கள்

இசை சக்கரவர்த்தி இளையராவின் இன்னிசை மழையில் என்று படத்தின் டைட்டிலுக்கு மேலே ஒரு வரி இடம் பெறும்… அப்போதே தெரிந்து கொள்ளலாம் அது கோவைத் தம்பியின் படம் என்று. அவரது பெரும்பாலான படங்களுக்கு இசை, நம் சை அரசர் இளையராஜா தான்



இளமைக் காலங்கள். படத்தில் ‘இசை மேடையில் இன்ப வேளையில் சுக ராகம்…’ என்று ஆரம்பிக்கும் ஒரு டூயட் பாடல் இதில் ஜானகி அவர்கள் தேன் குரலில் ராகம் ஆரம்பிக்க கூடவே கோரஸ் ராகம் கோர்க்க இசை அரசரின் இசை உத்வேகம் எடுக்கும் பாருங்கள். தொடரும் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் இப் பாடலுக்கு அழகூட்டும் அதிசயம்


அப்போது நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் அதிகாலை பஸ்சில் வரும் போது இந்த பாடல் பஸ்சில் ஒளிபரப்பானது… அதிகாலையில் அந்த குளிரில் பஸ்சின் சீரான ஓட்டத்தில் இந்த பாடல் கேட்டு பரவசமாகிப் போனேன்… எப்போது எங்கே இந்தப் பாடலைக் கேட்டாலும், என் மனதுக்குள் அந்த அதிகாலை சில்லென்ற நினைவுகளைப் பரப்பிவிட்டுப் போகும் அதிசயம்.

ஒரு அதிகாலையில் நீங்களும் கூட கேட்டுப் பாருங்கள்…


இதில், இரண்டாவது சரணத்திற்கு பின் ‘ப…ப…ப…பா…பா..ப…ப..
என்று ஜானகி பாடும்போது, ராஜாவின் இசையில் தெறிக்கும் துள்ளல்… மொத்த சந்தோஷத்தையும் அள்ளி வருவது போல ஒரு இசையை அந்த இடத்தில் தந்திருப்பார் நம் இளையராஜா

படம்: இளமை காலங்கள் (1984)

தயாரிப்பு: கோவைத்தம்பி

இயக்கம்: மணிவண்ணன்

நாயகன்: மோகன், நாயகி: சசிகலா

பாடல்: வைரமுத்து

இந்த படத்தின் அனைத்து பாடல்களுமே சூப்பர் ஹிட் பாடல்கள் தான்.

பாட வந்ததோர் கானம்..

ஈரமான ரோசாவே…

ராகவனே ரமணா ரகுநாதா…

படிப்புலே ஹீரோ …

இன்ப வேளையில் சுக ராகம்.... என்ற வரிகளை போலவே இந்த பாடல் ஒரு சுக ராகம் தான்

இந்த பாடலும் என் வழி தளத்தில் 2010 ல் வெளியானது

ஆர்.வி.சரவணன்