திங்கள், ஜூன் 29, 2015

திருச்செந்துரின் கடலோரத்தில்....3





திருச்செந்துரின் கடலோரத்தில்....3

இது வரை இருந்த  அசதி சலிப்பு எல்லாம்  பறக்கடித்திருந்தது என் மேல் வந்து மோதிய  அதிகாலை சில்லென்ற காற்று . என் கூட இதுவரை பயணித்த  அனைவரும் ஆளுக்கொரு  திசையாக சென்று விட நான் எந்த திசை நோக்கி பயணிப்பது என்று யோசித்தேன் . ஏற்கனவே இரு முறை வந்திருந்ததால் கோவிலின் முன் வாசல் நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.  பேருந்தில் எனக்கு சீட் தந்தவர்  தெரிவித்த தகவல்கள் அனைத்தும் மிக உபயோகமாக இருந்தது எனக்கு அவர் சொன்னது இது தான்

"நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க என்பதால் ரூம் ஏதும் எடுத்துடாதீங்க. இங்கே கோவில் காட்டேஜ் இருக்கு. அங்க போய் டோக்கன் வாங்கிக்குங்க. ஒரு அலமாரி தருவாங்க. அதிலே பேகை வச்சிட்டு போய் மொட்டை அடிங்க மொட்டை அடிச்சிட்டு கடல்ல போய் குளிக்கணும் அதற்கு பின் நிராலி கிணறு இருக்கிறது அங்கும் சென்று குளிக்க வேண்டும்.இதெல்லாம் ஐதீகம். பின் காட்டேஜ் வந்து அங்க இருக்கிற பாத்ரூம்ல குளிச்சிட்டு சாமி கும்பிட போங்க"
அவர் சொன்ன படி அந்த காட்டேஜ் தேடி புறப்பட்டேன். திறந்திருந்த ஒரு கடையில் விசாரித்து கொண்டு அந்த காட்டேஜ் சென்று சேரும் போது காலை  5 மணி .  10 ரூபாய் வாங்கி கொண்டு டோக்கன் (ரசீது என்றும் சொல்லலாம்)கொடுத்தார்கள்.

 உள்ளே சென்று பார்த்தேன் தங்குவதற்கு ரூம்கள் நிறைய இருந்தாலும் அவைகள் அனைத்தும் பக்தர்களால் நிரம்பியிருந்தது. நடுவே ஒரு பெரிய ஹால் இருந்தது. பலர் உறங்கி கொண்டிருந்தார்கள். ஹாலின்  இரு பக்கமும் நிறைய அலமாரிகள் இருந்தன அதில் திறந்திருந்த ஒரு அலமாரி சென்று பார்த்தால் பூட்டு இல்லை. வந்து அலுவலகத்தில் விசாரித்த போது நீங்க தான் பூட்டு வாங்கி பூட்டிக்கணும் என்றார்கள். இது வேறயா  என்ற படி பக்கத்தில் உள்ள கடையில் பொய் வாங்கினேன். விலை 30 ரூபாய். 

ஒரு அலமாரியை தேர்ந்தேடுத்து என் பேகை வைத்த போது தான் தெரிந்தது. நாதாங்கி கழண்டு போய் இருந்ததால்  தாழ்ப்பாள் போட முடியவில்லை 
அடுத்த அலமாரியை அணுகினால்  அதில் உள்ளே போடும் தாழ்ப்பாள்  இல்லை.  பரவாயில்லை என்று பேகை வைத்து  பூட்டிய போது கதவு இடுக்கு வழியே ஒரு கை உள்ளே செல்லும் அளவு இடைவெளி இருந்தது.  சரி என்று அடுத்த அலமாரியை தேடி பிடித்து ஆடி கொண்டிருந்த தாழ்ப்பாள் பற்றி கவலை கொள்ளாமல் உள்ளே பேகை வைத்து விட்டு மொட்டை அடிக்க கிளம்பினேன். சென்று ரசீது வாங்கி கொண்டு மொட்டை அடிக்கும் மண்டபத்தில் நுழைந்தேன். 

6 மணிக்கே அவ்வளவு கூட்டம் இருந்தது. ஒருவர் மொட்டை அடித்து கொண்டு கிளம்புகையில் என்னது 50 ரூபாயா அவ்வளவு எல்லாம்  தர முடியாது என்று கத்திய படி  சென்று கொண்டிருந்தார். நான் அமர சில்லென்று தண்ணீர் என் தலையில் தெளிக்கப்பட்டது. சில நிமிடங்களில் மொட்டையுடன் எழுந்தேன் எவ்வளவு என்று கேட்டேன் 50 ரூபாய் என்றவுடன் ஒன்றும் பேசாமல் . கொடுத்து விட்டு வெளி வந்தேன். 

அடுத்து கடலில் குளிக்க வேண்டும். இது வரை நான் கடலில் குளித்தது கிடையாது கடலை ஆசை தீர பார்த்து ரசிக்கவும் கால்கள் நனைக்கவும் மட்டுமே செய்திருக்கிறேன். கடலில் குளிப்பதில் தயக்கமாக இருந்தது. காரணம்  கையில் இருந்த பணம் வாட்ச் சட்டை எதெல்லாம் எங்கு வைத்து விட்டு குளிப்பது என்று தான்.

கடற்கரைக்கு வந்தேன். அங்கிருக்கும் கூட்டம் பார்த்து விட்டு சாமி தரிசனத்துக்கு எவ்வளவு வரிசை இருக்குதோ தெரியலியே சீக்கிரம் குளித்து விட்டு கிளம்ப வேண்டும் என்ற பதட்டத்துடன்  பணம் வாட்ச் முதலானவற்றை சட்டையில் சுற்றி கரையில் வைத்து விட்டு  குளிக்க வேண்டியது தான்  என்ற படி  வந்தவன் கண்ணில் அந்த அம்மா தென்பட்டார். அவர் கணவர் குளித்து கொண்டிருக்க  அவர் துணிகளை கைகளில் வைத்த படி அமர்ந்திருப்பதை பார்த்தவுடன்  அவரிடம் கொஞ்சம் தயக்கமாய் இதை பார்த்து கொள்ள முடியுமா என்று கேட்டேன்  அவர் அதனாலென்ன வச்சிட்டு போங்க என்றார். அவர் எதிரில் என் துணிகளை சுருட்டி வைத்து விட்டு கடலில் இறங்கினேன். 

கடல் அலை என்னை நலம் விசாரிக்க வருவதை போல் அசுர வேகத்துடன் வந்து மோதியது. நிலை குலைந்து போனேன்.   அந்த அலை மீண்டும் கடலுக்குள் செல்லும் போது என் நிலை பார்த்து சிரிப்பது போல் ஒரு பிரமை. இந்த வேகத்துக்கே  இப்படியா அடுத்து எப்படி வரேன் பார் என்று மீண்டும் வந்தது. பெரிய அலை.இப்போது பதட்டம் மறைந்து போய்  உற்சாகம் வந்திருந்தது எனக்கு. அடுத்த அலையை எதிர் கொண்டு மூழ்கி எழுந்தேன்.  இப்படி ஒவ்வொரு அலையாக வர  நான் அதை எதிர் கொண்டு  அதனுடன் விளையாட ஆரம்பித்திருந்தேன். சீக்கிரம் கரையேறலாம் என்று நினைத்தவனுக்கு வெளியில் வர மனமில்லை. இத்தனை காலம் கடலில் குளிக்காமல் இருந்து விட்டோமே என்ற எண்ணத்துடன் இன்னும் கொஞ்ச நேரம் குளிக்கலாம் என்ற படி ஒரு முறை நான் திரும்பிய போது அந்த அம்மா எழுந்து விட்டிருந்தார். நான் பார்க்கவும், அவர் நான் கிளமபறேன் என்ற படி என்னிடம் சொல்லி விட்டே அகன்றார். 

அவருக்கு நன்றி சொல்லிய படி கரைக்கு வந்து  துணிகளை எடுத்து 
கொண்டு நிராலி கிணறு இருக்கும் பக்கம் சென்றேன். அங்கும்  குளிக்க
வரிசையில் காத்திருக்க வேண்டி வந்தது. நானும் காத்திருந்து அந்த 
பெரிய கிணற்றின் படிக்கட்டில் வரிசையில் இறங்கி செல்ல அங்கே ஒருவர்  வாளியை இறைத்து ஒருவருக்கு மூன்று முறை தலையில் 
கொட்டி கொண்டிருந்தார். தண்ணீர் தலையில் கொட்டப்பட அங்கிருந்து  
வெளி வந்து ரூம் நோக்கி நடக்க ஆரம்பித்தேன் (பாத்ரூம் எல்லா வசதிகளுடன் இருந்தது.) குளித்து முடித்து டிரஸ் பண்ணி கொண்டு சந்தனத்தை தலையில் தடவி கொண்டவுடன் சில்லென்று குளிரை எடுத்து தலையில் வைத்து கொண்டதை போல் உணர்ந்தேன். கோவில் நோக்கி 
நடக்க ஆரம்பித்தேன்.

அர்ச்சனை தட்டு கோவில் தேவஸ்தான கடையில் வாங்கிய பொழுது அதில் பூ ஏதோ பேருக்கு தான் இருந்தது. ஆகவே தனியாக மாலை வாங்கி கொள்ளலாம் என்ற படி நான் நடக்கையில் எதிர்பட்ட பூ கடையில் மல்லிகை பூவால் ஆன மாலைகள் இருந்தன. அருகில் நெருங்கி எவ்வளவு என்று விசாரித்தேன் .எடுத்து கையில் கொடுத்து விட்டார். நான் தயங்கவே தயங்காதீங்க என்ற படி அவர் விலையை சொல்ல அது பேரம் பேச வேண்டிய  அளவில் இருந்ததால் குறைத்து கேட்டேன். அவர் மறுத்து விட்டார் என்னால் மாலை வேண்டாம் என்று மறுக்க முடியவில்லை. சரி என்று காசு கொடுத்து விட்டு கோவில் அருகில் நெருங்கினேன். 

ஒரு பெரிய பக்தர் குழு ஒன்று நின்றிருந்தது. அவர்களிடம் ஒரு அர்ச்சகர் பேசி கொண்டிருந்தார்.நான் சரி அவருக்கு அருகில் சென்று தகவல் கேட்க முயல, அவர் உடனே சொன்ன பதில் கேட்டீர்களானால் உங்களுக்கு
 அதிர்ச்சியாய் தான் இருக்கும். ஒண்ணும் பேசபடாது போய் கொண்டே இருக்கணும் என்று உத்தரவு போடும் தொனியில் சொல்லி விட்டு மீண்டும் அந்த குடும்பத்திடம் பேச ஆரம்பித்திருந்தார். உள்ளே நுழையும் போதே இப்படி ஒரு கோபத்தை எதிர் கொள்ள வேண்டியிருக்கிறதே என்று எனக்கு கோபம் வந்தது. அவர் வேற யாரையாவது பார்த்து சந்தேகம் கேளுங்க னு சொல்லிருக்கலாம் இப்படி முகத்தில் அடித்தது போல் ஏன் சொல்ல வேண்டும்  என்று நொந்த படி  அவர் கோபத்தை நாமும் பட்டு பாவத்தை ஏத்திக்க வேண்டாம் என்ற படி சமாதானபடுத்தி கொண்டு உள்ளே நுழைந்தேன். 

100 ரூபாய் டிக்கெட் வாங்கி கொண்டு ஸ்பெஷல் தரிசன வரிசையில் உள்ளே சென்றேன்.நடுவே ஒருவர் அர்ச்சனையா கொடுங்க என்று தட்டை வாங்க முற்பட நான் வேண்டாம் என்று மறுத்தேன். சுவாமி சன்னிதானம் அருகில் சென்று அர்ச்சனைக்கு கொடுக்கலாம் என்ற படி நகர்ந்தேன்.எனக்கு முன்னே கூட்டம் இல்லை பின்னே சிலர் வந்து கொண்டிருந்தார்கள் . பக்கத்தில் இருந்த இலவச தரிசனத்தில் கூட்டம் திமிறி கொண்டிருந்தது. நான் சுவாமி சன்னதி அருகே சென்றவுடன் அர்ச்சகர் ஒருவரிடம் அர்ச்சனை தட்டை கொடுத்தேன். அவர் வேறு ஒருவருக்கு அர்ச்சனைக்கு பொறுப்பை ஏற்று கொண்டிருந்தார் போலிருக்கிறது.அந்த நபருடன் பேசி கொண்டே என்னிடம் ௨௦ ரூபாய் கொடுங்க என்று வாங்கி கொண்டு தேங்காய் உடைத்து அர்ச்சனை பையில் போட்ட படி மாலையை எதிரே இருந்த தூணில் மாட்டி வைத்து விட்டு என்னிடம் அர்ச்சனை பையை தந்து விட்டார். நான் மாலை என்று கேட்க அது சாமிக்கு போயிடும் என்ற படி நகர்ந்து விட்டார். மாலை என்னை பார்த்து கடையில் மாட்டபட்டிருந்த நான் இப்போது தூணில் மாட்டபட்டிருக்கிறேன் அவ்வளவே வித்தியாசம் இதற்கு நீ கொடுத்த ரூபாய் 80 என்று கேலி செய்வதாக எனக்கு தோன்றியது. மனதுக்கு கொஞ்சம் கஷ்டமாக கூட இருந்தது. சரி பெரிய கோவிலில் கூட்டம் நிரம்பிய கோவிலில் நமக்கு மட்டும் அர்ச்சனை சரியான படி நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது தவறு என்று மனதை சமாதானபடுத்தி கொண்டு சுவாமி சன்னிதானம் நோக்கி சென்றேன். 

கடவுளை பார்க்க போகிறோம் என்பதால் உற்சாகம் நானும் வருகிறேன் என்ற படி என்னுடன் வந்து ஒட்டி கொண்டது. எனக்கு முன்னே வரிசையில் யாரும் இல்லாததால் நான் சுவாமி சன்னிதானம் அருகே சென்று அந்த மேடையில் ஏறினேன். நான் சன்னிதானம் பக்கம் பார்ப்பதற்கும் அப்போது திரை இழுக்கபடுவதற்கும் சரியாக இருந்தது. வெயிட் பண்ணுங்க பூஜை நடக்க போகுது என்று சொல்லி விட்டார்கள். முதலில் இது எனக்கு ஏமாற்றத்தை தந்தாலும் பின் தான் இதில் உள்ள அதிர்ஷ்டம் புரிந்தது. அதாவது சுவாமி சந்நிதானத்தில் சில நிமிடம் நிற்பதற்கு இந்த பூஜை உதவியாய்
 இருந்திருக்கிறதே. என்ற ஆச்சரியத்துடன்  நான் காத்திருக்க இலவச தரிசனத்தில் இருந்த  கூட்டமும் வரிசையில் காத்திருந்தது.


அப்போது எனக்கு ஒரு யோசனை தோன்ற காத்திருந்த இந்த வேளையில் ஏன் சும்மா நிற்க வேண்டும் என்று கந்த சஷ்டி கவசம் சொல்ல ஆரம்பித்தேன். இறைவன் சன்னதியில் இதை சொல்ல சந்தர்ப்பம் கிடைத்ததே என்ற சந்தோசத்துடன் நான் முணுமுணுத்த படி நிறக பாதியிலேயே  திரை திறந்தது. திருச்செந்தூர் முருகன் சிரித்த முகத்துடன் அருள் பாலித்து கொண்டிருந்தார். முருகா முருகா என்ற கோஷங்கள் எங்கும் ஒலிக்க அவரை பார்க்க எவ்வளவு கஷ்டத்துடன் வந்தோம் என்பதெல்லாம் ஒரு நொடியில் மரகடிது விட்டார்.  திவ்ய தரிசனம் என்று சொல்வார்களே அது தான் எனக்கு கிடைத்தது . இப்படியான தரிசனத்தின் போது நான் நின்ற வரிசையில் கூட்டம் வர ஆரம்பித்தது. அருகில் வரும் போதே எவ்வளவு நேரம் நிப்பீங்க நாங்க கும்பிட வேண்டாமா என்ற படி வரவே  நான்முருகனை  வணங்கி வெளி வந்தேன். 

அவரை பார்த்த அந்த நொடியில் இருந்து கொடி மூலைக்கு வரும் வரை அவரை பார்த்த அந்த பரவசம் தொடர்ந்து கொண்டே இருந்தது. திருசெந்துரின் கடலோரத்தில் செந்தில்நாதன் அரசாங்கம் தேடி தேடி வருவோர்க்கெல்லாம் தினமும் கூடும் தெய்வாம்சம் என்ற பாடல் எனக்கு பிடித்த பாடல் அந்த பாடல் ஏதோ சினிமாவுக்காக எழுதிய பாடல் போல் தோன்றவில்லை உணமையான பக்தி உணர்வுடன் எழுதிய பாடல் தான் என்ற உணர்வு மேலோங்க நான் பிரகாரம் சுற்றி வருகையில் . பேருந்தில் என்னுடன் வந்தவர் என் எதிரே சிரித்த படி தரிசனம் முடிஞ்சதா என்ற படி எனை கடந்தார் 

வெளி வந்து கடலோரம் சென்று நின்று அங்கிருந்த கோவில் கோபுரத்தை ரசித்த படி  என் செல் போனில்  கிளிக்கினேன்  எப்படி எடுத்திருக்கிறேன் என்று பார்ப்பதற்கு முயன்றால் வெயிலில் என்னால் பார்க்க முடியவில்லை அந்த  படத்தை தான் இங்கே தந்திருக்கிறேன். 



எதாவது சாப்பிடலாம் என்ற படி தேவஸ்தான பிரசாத கடைக்கு சென்றேன்.  சக்கரை பொங்கல் புளியோதரை இருந்தது . சக்கரை பொங்கல் வாங்கினேன் வாங்கியவனுக்கு புளியோதரை கொடுத்து விட்டாரோ என்ற சந்தேகம் வந்தது.இது சக்கரை பொங்கல் தானே என்று அவரிடம் கேட்டேன். என் கேள்விக்கு அவர் சொன்ன பதில் தான் இந்த அனுபவ கட்டுரைக்கு சிகரம் எனலாம். சென்ற பதிவில் முருகன் எனக்கு உணர்த்திய ஒன்றை சொல்கிறேன்  என்று குறிப்பிடிருந்தேனே .அது தான் அந்த கடைக்கார முதியவர் சொன்ன  பதிலில் இருக்கிறது 

கேட்டதை தருவான்  கந்தன்.அவன் கிட்டே என்ன கேட்டீங்களோ அது கிடைக்கும்.  நீங்க என்ன கேட்டீங்க சக்கரை பொங்கல் தானே.அது தான் கொடுத்திருக்கேன் முதல்ல பிரிச்சி பாருங்க 

எப்படி இருந்திருக்கும் எனக்கு.பொட்டலத்தை ஆர்வமாய் பிரித்தேன் சக்கரை பொங்கல் தான் இருந்தது. சாப்பிட ஆரம்பிக்க அதிலிருந்த இனிப்பு நாவிற்கு தான் சுவை தந்தது.  அவர் சொன்ன சொல் மனது முழுக்க இனித்தது என்றே சொல்லலாம்.

ரூம் சென்று அலமாரியில்  எனது பேகை எடுத்து கொண்டு பேருந்து நிலையம் நோக்கி சென்றேன்.எதிரில் வந்த பேருந்து மதுரை போர்டுடன் வரவே  தாவி ஏறினேன் எனக்கு பேருந்தில் இடம் பிடித்து தந்த மனிதரும் எனக்கு முன்னே அந்த பேருந்தில் ஏறி விட்டிருந்தார்.எனை பார்த்து சிரித்த படி சேர்ந்தே வந்தோம், சேர்ந்தே கிளம்பறோமே  என்று ஆச்சரியப்பட்டார் . நானும் அதே ஆச்சரியத்துடன் அவரிடம்  தலையாட்டினேன். 

பேருந்தில் டிரைவர் இருக்கைக்கு எதிரே படத்தில் காட்சி தந்து கொண்டிருந்த திருச்செந்தூர் முருகன் என்னப்பா எனது கருணை போதுமா என்ற படி என்னை நோக்கி புன்னகைத்து கொண்டிருந்தார்.

முருகா என் அப்பனே சரணம். 

ஆர்.வி.சரவணன் 

புதன், ஜூன் 24, 2015

திருச்செந்தூரின் கடலோரத்தில்.... 2




  திருச்செந்தூரின் கடலோரத்தில்.... 2

நான் என்ன தான் கடவுள் நம்பிக்கை கொண்டவனாக இருந்தாலும் எனக்குள்ளும் அவ்வபோது பகுத்தறிவு எட்டி பார்த்து என் முன் கேள்விகளை அடுக்கும். அதற்கு விடை தேடி மனது ஆராய முற்படும். அதை பற்றி பின்னே சொல்கிறேன். நீங்கள் இப்போது கேட்க போகும்  கேள்விக்கு வருவோம்.


திருச்செந்தூர் போறதுக்கு நீ, திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் தான் சென்னையிலிருந்து போகுதே அதுலயே போக வேண்டியது தானே பல்லவன் ல எதுக்கு  ஏறினே அப்படின்னு உங்களுக்கு கேக்க தோணுமே . இதை தான் ரயிலில் ஒருத்தரும் கேட்டார் அவரிடம் சொன்ன பதிலையே  உங்களுக்கும் இங்கே காப்பி பேஸ்ட் பண்ணிடறேன். அதாவது திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ் 4 மணிக்கு சென்னையில் கிளம்பி மறுநாள் சென்று சேரும் நேரம் காலை 7 மணி என்று நினைக்கிறேன். மேலும் தொடர்ந்து கூட்ட நெரிசலில் சிக்கி அவ்வளவு நேரம் செல்வதற்கு பதில் திருச்சி சென்று அங்கிருந்து பேருந்தில் மாறி மாறி சென்று விடலாம் என்பதால் தான் .

 திருச்சி சென்று இறங்கிய போது இரவு 9 மணி . பாதி தூரம் வரை வந்து விட்டோம் எனபதே மனதுக்கு மிக உற்சாகமாய் இருந்தது. அதை அதிகபடுத்தியது திருச்சி நகரம்.காரணம்  எனக்கு சிறு வயதிலிருந்து இந்த ஊரை  ரொம்ப பிடிக்கும் .ஆனால் நிறைய நேரம் அங்கே இருக்க பிரியபடுவேன். ஆனால் இயந்திர லைப் அதை எப்போதும் அனுமதிப்பதே இல்லை.  மிஞ்சி போனால் அரை மணி நேரம் மட்டும் பஸ் டு பஸ் மாறும் நேரத்தில் தான் அங்கிருக்க நேரிடும்.திருச்சி பேருந்து நிலையத்தின் அருகே உள்ள ஹோட்டலில் சென்று  இட்லி சாப்பிட்டு விட்டு திருசெந்தும் செல்லும் பேருந்துகள் நிற்கும் இடத்துக்கு வந்த போது  ஒரு திருச்செந்தூர்  பேருந்து நின்று கொண்டிருந்தது. அப்பாடா கிடைச்சிடுசுடா என்ற படி கூட்டத்துடன் நானும் சென்று உற்சாகமாய் ஏறிய போது எல்லாம் ரிசர்வ் ஆகிடுச்சு கடைசி சீட் மட்டும் தான் இருக்கு என்றார் நடத்துனர். ஏறிய அனைவரும் ஏமாற்றத்துடன் இறங்கினோம். இருந்தும் நான் அசரவில்லை. மதுரை போய் அங்கிருந்து வேறு பேருந்தில் சென்று விடலாம் என்று மதுரை பேருந்தில் ஏறினால் அங்கும் இதே நிலை

ஒரு பஸ் என்றால் பரவாயில்லை எல்லா பஸ்ஸும்  இப்படி இருந்தா  எப்படி என்று விவேக் போல் சலித்து கொண்டேன் மீண்டும் ஒருமுறை விடுமுறை நாளில் கிளம்பியதற்கு என்னை நானே திட்டி கொண்டேன்.கருணை என்பது எனக்கு எந்த  ரூபத்திலும் கிடைத்து விட கூடாது என்பதில் முருகன் மிக உறுதியாய் இருக்கிறார் போலிருக்கிறது என்று உள்ளுக்குள் சொல்லி கொண்டேன்.

இப்படியான நிலை தொடர்கையில்  ஒரு பேருந்து வரிசையில் நிற்காமல் கொஞ்சம் தள்ளி நின்று கொண்டிருந்தது. நடத்துனர் மதுரை மதுரை என்று குரல் கொடுத்து கொண்டிருந்தார். உடனே அங்கு  தாவினேன் அங்கு சீட் முன் பக்கம் கிடைத்து விட அப்பாடா என்று பெருமூச்சு விட்ட போது குழப்பத்துக்கு அஸ்திவாரம் போடுவது போல்  திருச்செந்தூர் போர்டுடன் ஒரு பேருந்து வந்து நின்றது.அதை பார்த்தவுடன் சிலர் நான் அமர்ந்திருந்த பேருந்தில் இருந்து இறங்கி சென்று ஏறினர். ஒரு நடத்துனர் அதுக்குள்ளே ஏன் வண்டியை கொண்டு வந்தே என்று டிரைவரிடம் சத்தம் போட்டு கொண்டிருந்தார். 

நான் என்ன செய்வது என்று யோசித்தேன். சரி ஏறிட்டோம் இதுவே இருக்கட்டும் என்று முடிவெடுத்தேன். பேருந்தும் உடனே கிளம்பி விட்டது. மதுரை வந்து இறங்கிய போது நடு இரவு 12 மணி. அங்கு இருந்த கூட்டம் என்னை அதிகமாகவே மிரள வைத்தது. ஒவ்வொரு ஊருக்கும் செல்ல அந்தந்த பேருந்து நிற்கும் இடத்தில இருந்த கூட்டம் கண்டு மிரண்டு போய் நான் திருச்செந்தூர் பேருந்து நிற்கும் இடம் நோக்கி வந்த போது திருச்செந்தூர் போகும் பேருந்திலேயே  ஏறியிருக்கலாம் இல்லை இல்லை திருச்செந்தூர் எக்ஸ்பிரஸ்லயே  ஏறியிருக்கலாம் என்று நான் சிந்திக்க தொடங்க
என் என்ன ஓட்டத்தையே பக்கத்தில் நின்ற ஒருவரும் சொன்னார் அவர் திருச்சியில் இருந்து வருகிறாராம். திருச்செந்தூர் செல்ல மதுரை வந்து செல்லலாம் என்று இங்கு வந்ததாக சொன்னார்.எப்படியும் அவருக்கு
வயது 50க்குள் இருக்கும். 

திடீரென்று ஒரு பேருந்து வரவே எல்லோரும் அதை நோக்கி செல்ல நானும் ஓடினேன். எப்போதும் மற்றவர்கள் நம்மை விட புத்திசாலிகள் என்பது மீண்டும் ஒரு முறை எனக்கு நிரூபணம் ஆயிற்று.பலர் பேருந்து நிலைய கேட்டில் பஸ் வரும் போதே  ஏறி இடம் பிடித்திருந்தனர். நான் ஏறிய  போது பஸ் புல்லாகி இருந்தது. ஏமாற்றம் என்னை உந்தி தள்ள சலிப்பு முன்னே இழுக்க கீழே இறங்கும் வேளையில் தான்  அவரை கண்டேன்.

 பேருந்துக்காக என்னை போல் வெயிட் பண்ணிய  அந்த நபர் ஏறி இடம் பிடித்திருப்பது தெரிந்தது. நான் அவரிடம் சீட் ஏதேனும் இருக்குதா என்று தயக்கமாய் கேட்கவே  இருக்கு வாங்க என்று அழைத்தார். நான் சீட்டுக்காக அடிதடி நடத்தி கொண்டிருந்த மக்களிடையே ஊடுருவி பேருந்தின் மத்தியில் அமர்ந்திருந்த அவர் அருகே சென்றேன். அது மூன்று பேர் அமரும் சீட். அவருடன் அவரது உறவினர் பெண்ணும்  வந்திருந்தார். அவர்கள் இரண்டு பேரும் அமர்ந்த பின் முன்றாவதாக நான் அமர்ந்தேன்.பேருந்து கிளம்பியது.  சீட் தந்த  அந்த நண்பரிடம் திருச்செந்தூர் செல்கிறேன் மொட்டை போடுவதாக வேண்டுதல் என்று சொன்னவுடன் அவர் சில டிப்ஸ் தந்தார். எனக்கு அது மிக உபயோகமாக இருந்தது .பின் நான் கொஞ்சம் அசந்து போய் தூங்க ஆரம்பிக்கையில்  பேருந்து திருச்செந்துரை தொட்டு விட்டது. 

அதிகாலை 4.00 மணி .அந்த நண்பரிடம் விடை பெற்ற படி நான் இறங்கிய போது குளிர் காற்று சில்லென்று வந்து  மோதி என்னை வரவேற்றது.
எனக்கு இடமளித்த அவரை இந்த பயணத்தில் தொடர்ந்து சந்திக்க போகிறேன் என்பதை  அப்போது நான் அறிந்திருக்கவில்லை அதே போல் பயண முடிவில் முருகன் எனக்கு உணர்த்த போகும் ஒரு உணர்வையும் நான் அப்போது அறிந்திருக்கவில்லை.

அடுத்த பதிவில் முருகன் தரிசனத்துடன் முடித்து விடுகிறேன் 
நாளை வரை பொறுத்திருங்கள் 

தொடரும் 

ஆர்.வி.சரவணன் 


திங்கள், ஜூன் 22, 2015

திருச்செந்தூரின் கடலோரத்தில்....






இது எனது 350 வது பதிவு தளம் ஆரம்பித்த இந்த 5 வருடங்களில் இது குறைவு தான் என்றாலும் மனதுக்கு நிறைவாக இருக்கிறது தங்களின் ஊக்கத்தால் மட்டுமே இது சாத்தியம் என்பது  நீங்களும் நானும் அறிந்த 
ஒன்று தானே. நன்றி நண்பர்களே 



திருச்செந்தூரின் கடலோரத்தில்....

ஆன்மீக தலம்  சென்று வந்த இந்த எளியவனின் அனுபவ பதிவு இது. எப்போதுமே ஒரு செயலுக்கு நாம் திட்டமிடும் போது எதிர் வரும் குறுக்கீடுகள் ஏராளம். படபடப்பு அதிகமாகி ஏன் தான் இந்த செயலுக்கு திட்டமிட்டோம் என்று கூட தோன்றி விடும் இல்லையா. எனக்கு கூட அப்படி தான்.இருந்தாலும்  எந்த குறுக்கீடுகள் வந்தாலும் அதையெல்லாம் கடந்து நாம் நினைத்ததை முடிப்பதில் தானே த்ரில் இருக்கிறது.அப்படியான ஒரு அனுபவம் தான்  நான் மேற் கொண்ட இந்த ஆன்மீக பயணம் .

நான் திருச்செந்தூர் சென்று மொட்டை போடுவதாக ஒரு வேண்டுதல் இருந்தது. (நான்கு வருடங்களுக்கு முன் வேண்டியது இது) இதோ இப்ப போகலாம் அப்புறம் போகலாம் என்று கொஞ்சம் சோம்பலாலும் கொஞ்சம் வேலை பளுவாலும் போய்  கொண்டே இருந்தது . அது  உறுத்தலாகவே இருக்கவே  அதை இப்போது நிறைவேற்றி விட வேண்டும்  என்ற நோக்கில் சென்று வர திடீரென்று முடிவு செய்தேன்.
 பாலக்காட்டில் நடைபெற்ற துளசிதரன் அவர்களின் குறும்பட படபிடிப்புக்கு  வேறு 
செல்ல வேண்டி இருந்ததால் திருச்செந்தூர் சென்று விட்டு  அப்படியே பாலக்காடு செல்லலாம்  என்று திட்டமிட்டேன் . நான் திட்டமிட்டது மே 1 விடுமுறையன்று.  (அன்று   வெள்ளிகிழமை. 
மறு நாள் சனி ஞாயிறு விடுமுறை தினங்கள் ) டிக்கெட் புக் செய்யலாம் என்று முயன்றால் பேருந்து ரயில் எல்லாம் வெயிட்டிங் லிஸ்ட்டில் காட்டியது.  கிடைக்காது என்று தெரிந்தும் தட்கல் டிக்கெட்க்கு முயற்சித்தேன். என் சார்பாக என் நண்பர்கள் இருவர் கூட முயற்சித்தார்கள். முடியவில்லை. சரி என்று தனியார் பேருந்தின் பக்கம் வந்தேன். (ஆன் லைன்ல தான் ). பொதுவாக தனியார் பேருந்தில் நான் செல்வதில்லை காரணம் அதிக விலை என் பட்ஜெடுக்கு  கட்டுபடியாகாது என்பதால்.  இருந்தும் கோவிலுக்கு போயே  ஆக  வேண்டும் என்பதால்  பதிவு செய்ய முயற்சித்தேன். கடைசி சீட் தான் இருந்தது. சரி என்று டிக்கெட் எல்லாம் போட்டு விட்டேன். இருந்தும் கடைசி நிமிடத்தில் நெட் ஸ்பீட்  பிரச்னையால் டிக்கெட் புக் பண்ண முடியவில்லை.மறுபடி முயற்சிக்கும் போது அந்த சீட்டும் புல் ஆகி விட்டது. 

தொடர்ந்து மூன்று நாட்கள் லீவ் என்பதால் தான் இந்த நிலை.  போயும் போயும் கோவிலுக்கு போக எந்த நாள் பார்த்திருக்கே  பாரு என்று தானே சொல்கிறீர்கள் என் குடும்பத்தில் கூட அதையே தான் சொன்னார்கள். அப்புறமா போ இப்ப பாலக்காடு போற வேலையை மட்டும் பார் என்றார்கள். என்னால் பின் வாங்க முடியவில்லை.என்ன செய்யலாம் என்று டென்சனில் அலை பாய்ந்த போது  எதிரில் இருந்த படத்தில் முருகன் புன்னகையுடன் என்னை பார்த்தவாறே இருந்தார்.முருகா ஏன்ப்பா  இப்படி சோதிக்கிறே.கொஞ்சம் கருணை காட்ட கூடாதா என்று புலம்பும் நிலைக்கு வந்து விட்டேன். 

இருந்தும் முயற்சியை விடாமல்  வெள்ளி காலை எப்படியேனும் தரிசனம் செய்து விட வேண்டும் என்ற முடிவுடன், வியாழன் மாலை 3.45 மணி பல்லவன் ரயிலில் அன் ரிசர்வ் கம்பார்ட்மெண்டில் செல்லலாம் என்று  அலுவலகத்தில் இருந்து கிளம்ப எத்தனிக்கையில் 
(3.15 மணி ) தான் என் டேபிளுக்கு நிர்வாகத்திடமிருந்து ஒரு மெசேஜ் வந்தது. இன்னும் ஒரு வாரத்திற்கு யாருக்கும் லீவ் அனுமதியில்லை என. எனக்கு எப்படியிருந்திருக்கும்  பார்த்து கொள்ளுங்கள். முன்னமே  ஏற்பாடு செய்த பயணம் இது என்றெல்லாம் சொல்லி அனுமதி வாங்கி கொண்டு கிளம்பி ரயில் நிலையம் வந்த போது மணி 3.35  

ரயிலில் வந்து ஏறிய போது படிக்கட்டில் அமர்ந்திருந்தவர்களை பார்த்தவுடனே தெரிந்து விட்டது உள்ளே எவ்வளவு கூட்டம் இருக்கிறது என்பது. இருந்தும் விடாமுயற்சியால் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல் அவர்களின் ஊடே புகுந்து புறப்பட்டு ரயிலுக்குள் வந்தேன். 

நான் என் பேகை அணைத்த படி ஒரு காலை உள்ளே வைத்து விட்டு அடுத்த கால் வைப்பதற்கு இடம் தேடி கொண்டிருக்க,  நான் நின்றிருந்த இடத்தில் ஜன்னலோர சீட்டில் அமர்ந்திருந்த 50 வயது பெண் "என்ன இங்க வந்து நின்னுட்டீங்க" என்றார் சலிப்புடன். "ஏன் என்னாச்சு" என்றேன் "ஏற்கனவே கூட்டமா இருக்கு இதுல நீங்களும் வந்து நின்னா என்ன பண்றது" என்றார் 

நான்,  "உட்கார்ந்திருக்கிற உங்களை ஒண்ணும் நான் எழுப்பலியே. இந்த கூட்டத்துக்கே இப்படி சலிச்சுக்கறீங்க வர போற ஸ்டேஷன்ல இன்னும் எத்தனி பேர் ஏற போறாங்க தெரியுமா என்றேன் அவர் அதற்கு மேல் ஒன்றும் பேசவில்லை.  (பின் அவரது நிலை என்ன ஆனது என்பதையும் சொல்கிறேன்) 


அடுத்து நான் கையில் வைத்திருந்த பேகை எங்கு வைப்பது என்று சுற்றிலும் பார்த்து கொண்டிருக்க ஒருவர் என் கஷ்டத்தை பார்த்து "அப்படியே மத்தவங்க வச்சிருக்கிற லக்கேஜ் பேக் மேலேயே வச்சிடுங்க"  என்றார். மற்றொருவர் "எப்படி வைக்க சொல்றீங்க யார் மேலயாவது விழுந்தா என்ன பண்றது" என்றார் தன்  சீட்டில் சௌகரியமாக அமர்ந்து கொண்டே."அதுக்காக அவரை அபப்டியே நிக்க சொல்றீங்களா  நிக்கறதுக்கே எவ்வளவு கஷ்டபடறார் பாருங்க "என்றார்  முதலாமவர். "கூட்டமா இருக்குனு தெரியறப்ப ஏன் ஏறணும்"  என்றார் முதலாமவர்.நீங்க உட்கார்ந்துடீங்க இல்ல அப்படி தான் பேச தோணும் என்று இவர்  பதிலடி கொடுக்க போக நான் உடனே "விட்டுடுங்க சார் எனக்காக எதுக்கு சண்டை விடுங்க எனக்கு இந்த கஷ்டங்கள் பழகிடுச்சு " என்றேன். மேலே உட்கார்ந்திருந்த  ஒருவர் "கொண்டாங்க நான் வச்சிக்கிறேன்"என்று வாங்கி  மடியில் வைத்து  கொண்டார். 

ரயில் கிளம்ப ஆரம்பித்து வேகமெடுக்க நானும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி சவுகரியமாக நின்று கொள்ளும் நிலைக்கு வந்து விட்டேன்.மனித மனம் எப்போதுமே ஒன்று கிடைத்தவுடன் அடுத்ததற்கு ஆசைபடும் இல்லியா. நானும் அதற்கு விதிவிலக்கா என்ன. 6 மணி நேர பயணம் என்பதால் கொஞ்சமே கொஞ்சம் உட்கார இடம் கிடைத்தால் உட்கார்ந்து கொள்ளலாமே என்று மனது ஆசைப்பட தொடங்கியது.

எல்லா சீட்டிலும் ஐந்து பேர் இருக்க நான் நின்றிருந்த இடத்துக்கு பக்கத்து சீட்டில்  நான்கு பேர் மட்டுமே அமர்ந்திருந்தார்கள். இத்தனி பேர் நிக்கிறாங்களே எப்படி உட்காராம விட்டாங்க என்று யோசித்தவாறு நாம தான் சரியாய் எண்ணவில்லையோ என்று மறு முறை எண்ணினேன். நான்கு பேர் தான் . பாமிலி யாக வந்திருந்தார்கள் போலிருக்கிறது. தாரளமாக உட்கார்ந்து பேசி சிரித்து கொண்டிருந்தார்கள் .கண்டிப்பாக இன்னும் ஒருவர் உட்காரலாம். எப்படி உட்காராமல் விட்டார்கள் என்ற கேள்வியுடன் பக்கத்தில் நின்றிருந்த பையனை கேட்டேன். அவர் தெரியலையே என்றார். ஒருவேளை ஏற்கனவே இடம் கேட்டு அவர்கள் மறுத்திருப்பர்களோ இருக்கட்டுமே கேட்டு தான் பார்ப்போமே என்று  ஒருவரிடம் தயக்கமாக கேட்டேன். சார் ஓரத்திலே கொஞ்சம் இடம் இருக்கு உட்கார்ந்துக்குவா என்றேன். அவர் தலையசைததோடு மட்டுமில்லாமல் இன்னும் கொஞ்சம் தள்ளி வேறு உட்கார்ந்து கொண்டார்.  சாப்பிடும் போது இன்னும் கொஞ்சம் சாதம் என்ற படி நெருங்குபவரை  போதும் போதும் என்போமே அது போல் சொல்லியவாறு அமர்ந்தேன். வாயுள்ள பிள்ளை தான் பிழைச்சிக்கும்  என்ற பழமொழி எனக்குள் டிஜிட்டலில் ஒளிர்ந்தது. 

வண்டி விழுப்புரம் வந்த போது என்னை ஒரு பெண்  ஏன் இதுல வந்து ஏறுனீங்க என்று கேட்டார்கள் அல்லவா. அவர்  விழுப்புரத்தில் தான் இறங்கினார்கள். 3 மணி நேரத்தில் இறங்குபவர்கள் 6 மணி நேரம் செல்பவர்களை ஏன் ஏறுகிறீர்கள் என்று கேட்பது வேடிக்கை தான். இப்படி பட்டவருக்கு தான் வண்டி விழுப்புரம்  இறங்குவதற்குள் ஒரு சோதனை வந்தது அவரருகில் நிண்டிருந்த பெண் உடம்பு முடியாமல் போய் வாமிட் எடுக்க ஆரம்பிக்க, அவரோ தர்ம சங்கடத்துடன் சீட்டில் இருந்து எழுந்து நின்று கொள்ளும் நிலைக்கு வந்து விட்டார். (ஆனால் எழுந்திருக்கவில்லை)  ஒவ்வொரு ஸ்டேஷன்  வர வர உட்கார்ந்திருப்பவர்கள் எழுந்து இறங்குவதும் இது வரை நின்றவர்கள் அமர்வதும் தொடர்ந்தது. இது எனக்கு எப்படி தோன்றியது தெரியுமா. வாழ்க்கையில் எல்லோருக்கும் வாய்ப்பு  என்பது  சுழற்சி முறையில் கிடைத்து கொண்டே இருக்கும் நாம் தான்  அதை சரியாக பயன்படுத்தி  கொள்ள வேண்டும் .இப்படி 
 இந்த பயணம் முழுக்கவே எனக்கு தொடர்ந்து சில ஆச்சரியங்கள் கிடைத்தது. ஆகா ரயில் திருச்சியை தொட்டு விட்டதே. மீதியை ரயிலில் இருந்து இறங்கியவுடன் சொல்கிறேன் வியாழன் வரை பொறுத்திருங்கள்.

தொடரும் 

ஆர்.வி.சரவணன்  

புதன், ஜூன் 10, 2015

காக்கா முட்டை





காக்கா முட்டை


புதுமுகங்கள் நடித்த படத்தின் காட்சிகளிடையே பிரபலமான ஒரு ஹீரோ தலை காட்டுகிறார்  எனும் போது,  திரையரங்கில் விசில் சத்தமும் கை தட்டலும் கேட்கும் என்பது  நாம் அன்றாடம் காணும் ஒரு நிகழ்வு தான். படத்தில்  சிம்பு வரும் காட்சியில்  கிடைக்கும் கைதட்டல்களுக்கு நிகராக படத்தில் வரும் பல காட்சிகள் மற்றும் வசனங்களுக்கு  கை தட்டல் கிடைக்கிறது என்றால்  அது ஒரு மேஜிக் தானே. இந்த மேஜிக் நிகழ்ந்திருப்பது  விருதுகளை அள்ளியிருக்கும் காக்கா முட்டை திரைபடத்தில். இதை நிகழ்த்தியிருப்பவர் இந்த படத்தை எழுதி ஒளிப்பதிவு செய்து இயக்கியிருக்கும் மணிகண்டன். 




சிறு வயதில் அதுவும் நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்த சிறார்களுக்கு ஏதேனும் ஒரு ஆசை இருக்கும். அது நிராசையாகி விடுவதும் இயல்பே.வாழ்வின் அடிமட்ட நிலையில் இருக்கும் குடும்பத்தை சேர்ந்த பெரிய காக்கா முட்டை சின்ன காக்கா முட்டை என்ற பட்டபெயர்கள் கொண்ட 
 சிறுவர்கள்  இருவரின் ஆசை கனவு இதெல்லாம் ஒரு பீட்சா வாங்கி சாப்பிடுவது தான். கணவனை சிறையிலிருந்து வெளி கொணரும் கவலையிலும் ஏழ்மையிலும் தாய் அவர்களின்  ஆசையை நிராகரிக்க, பாட்டி அவர்களின் ஆசையை நிறைவேற்ற இயலாமையால் இருக்க, இதை அடைய சிறுவர்கள் முயற்சிக்கும் விதங்களும், சந்தர்ப்ப சூழ்நிலைகள் அதை அடைய விடாத வண்ணம் செய்வதும், அவர்களின் ஆசை நிராசையாகும் போது அதை பற்றி கவலை கொள்ளாத  சமூகம், அவர்களுக்கு நேர்ந்த அநியாயத்தை  வைத்தே பணமாக்க முயலும் அவலத்தை தோலுரித்து காட்டுகிறார் இயக்குனர். 



சிறுவர்கள் ரமேஷ்,விக்னேஷ் இருவரும்  இதில் நடித்திருக்கிறார்கள்  
என்றே சொல்ல முடியவில்லை.அவர்களின் உற்சாகம், கோபம், வறுமையை மீறி கண்களில் வெளிப்படும் நம்பிக்கை வெளிச்சம், அழுகை என்ற
 அவர்களின் பரிமாணங்கள் அசத்தல்.படம் முடிந்த பின்னும் நம் மன கண்ணில் இருவரும் ஓடியாடுகிறர்கள் என்றால் அது ஒன்றும் மிகையல்ல.

அடுத்து பாராட்டப்பட வேண்டியவர்  ஐஸ்வர்யா. அசல் குப்பத்து பெண்ணாக இரு பிள்ளைகளின் தாயாக குடுமப பாரத்தை சுமக்கும் கதாபாத்திரம்.
 பிள்ளைகளை  அதட்டி கொண்டே அவர்களின் குறும்பை ரசிக்கும் விதம் அழகு.  உன் பிள்ளைகளை அடிச்சிட்டாங்க என்று  பெண் சொல்ல  "ரொம்ப அடிச்சிட்டாங்களா" என்ற படி இயலாமை  முகத்தில் மின்ன கண்களில் கண்ணீருடன்  அவர்  கேட்கும் இடம் ஒரு உதாரணம். குட் வெரி குட் ஐஸ்வர்யா என்று சொல்ல வைத்து விடுகிறார்.

வசனங்களில் அப்ளாஸ் வாங்கும் இடங்களில் குறிப்பிட்டு சொல்லும் படியான ஒன்று. சிட்டி செண்டர் முன்பு  சிறுவர்கள் இருவரும் வந்து நிற்க,   உள்ளே விட மாட்டாங்களே. இங்க என்ன அவமானத்தை சந்திக்க போறாங்களோ தெரியலியே என்ற படி நாம் நகத்தை கடிக்க முயல, நம் எண்ணத்தை திரையில் சின்னவன் "சத்தியமா உள்ளே விட மாட்டாங்கடா  நம்மை" என்று அந்த கட்டிடத்தின் பிரம்மாண்டம் பார்த்த 
படி சொல்லும் போது   தியேட்டரில்   கை தட்டல் மயம் தான்.


அந்த சிறுவர்களின் பாட்டி அவர்களின் பீட்சா  ஆசை கண்டு வீட்டிலேயே 
நான் செய்து தருகிறேன் என்று பீட்ஸா வுக்கு  மெனக்கெட தோசை கல் திரையில் தெரிய ஆரம்பித்து பின்  அவர் செய்து முடிக்கும் வரை  திரையரங்கில் வரும் கை தட்டல் அந்த காட்சி முடியும் போது பாட்டி சொல்லும்  ஒரு சொல்லுக்கு இரு மடங்காகிறது. அந்த பாராட்டு வசனத்துக்கு மட்டுமல்ல பாட்டிக்கும் சேர்த்து தான்.





படத்தில் அவ்வப்போது  உலகின் நடப்பு வாழ்க்கையை பற்றி இடித்துரைக்கும் விதமாய் வசனங்களிலும் காட்சிகளிலும் அழகாக வெளிபட்டிருப்பது அசத்தல். "ரேசன்ல அரிசி இல்லையாம்  டிவி தான் கொடுத்தாங்க " 
(வசனம் )டிவி தொகுப்பாளினி கேமரா சகிதம் அந்த சிறுவர்களை பற்றி உலகுக்கே சொல்லி கொண்டிருக்க இதை ஏதும் அறியாமல் அவர்கள் வேடிக்கை பார்த்த படி கடந்து போகும் இடம் (காட்சி ).


 பணம் இல்லாதவர்கள் பாதிக்கபட்டால் அந்த பாதிப்பை,  பணம் என்ற ஒன்றையே குறிக்கோளாக கொண்டு சுற்றி வரும் உலகம் எப்படி தனக்கு சாதகமாக்கி கொண்டு பணம் சம்பாதிக்க  முயல்கிறது என்பதை பூசணிக்காய் உடைப்பது போன்று  போட்டு உடைத்திருக்கிறது காக்கா முட்டை.


இந்த படம் எந்தளவு  ரீச் ஆகியிருக்கிறது என்பதற்கு ஒரு உதாரணம். சொல்கிறேன் .வழக்கமாக என் அலுவலக  நண்பர்கள் புது படங்கள் வ வருகையில் படம் எப்படி இருக்கிறது என்பதை என்னிடம் கேட்டு தெரிந்து கொண்டு செல்வார்கள். ஆனால் இந்த படத்தை பொறுத்த வரை படம் நல்லாருக்காமே  சார் என்று ஆச்சரியத்தை எனக்கு சொல்கிறார்கள். 

சிறுவர்கள் இருவரும் எந்த பீட்சாவை  சாப்பிட ஆசைபட்டார்களோ அது மிகுந்த மரியாதையுடன் அவர்கள் எதிரே வைக்கப்பட அதை அவர்கள் இருவரும் ஆசையாக சாப்பிட வாய் திறக்கையில் நம் தொண்டைக்குள் 
ஏதோ ஒரு பரவசம் வந்து அடைத்து கொண்டது போல் ஒரு பீலிங் ஏற்படுகிறது பாருங்கள். அந்த பரவச உணர்வு தான் இப் படத்தின் வெற்றி.



தமிழ் திரையுலகில் தொடர வேண்டும், இத்தகைய படங்களுக்கான முயற்சிகளும் அந்த முயற்சிகளுக்கான வெற்றியும். 


ஆர்.வி.சரவணன்