அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா
(அரசியல் அனுபவத்துக்கு இதை விட பெட்டரா தலைப்பு வேணுமா என்ன.இருந்தும் அண்ணனோட டயலாக் என்பதால் அவரது இமேஜ்)
1991 ஆம் வருடம் சென்னையில் நான் ஒரு ஸ்க்ரீன் பிரிண்டிங் கம்பெனியில் வேலை பாத்துகிட்டு இருந்தேன். பேருந்தில் தான் அலுவலகம் வருவேன்.பேருந்தில் தினம் பயணம் செய்பவர்களில் ஒருவர் (பார்த்தா சிரிக்கிறது அவ்வளவு தான் நட்பு ) ஒரு நாள் என்னிடம் பேசி கொண்டிருந்த போது என்ன பண்றீங்க என்றார்.
நான் (சும்மா இருந்திருக்கலாம் வம்பை விலை கொடுத்து வாங்கணுமா) வேலை பார்க்கும் கம்பெனி பற்றி சொன்னேன் சொன்னவுடன் அவர் "எனக்கு விசிட்டிங் கார்டு நூறு போட்டு கொடுங்க" என்றார். .நான் என்னோட வேலை மார்க்கெட்டிங் இல்லை என்று
நழுவினேன். "அதனாலென்ன ஆர்டர் கொடுத்தா வேண்டாம் னாசொல்ல போறாங்க நீங்க போட்டு கொடுங்க என்று என் கையில் ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டார். தான் உறுப்பினராய் இருக்கும் கட்சி யின் பேர் சொல்லி கட்சி தலைவரின் போட்டோவுடன் விசிடிங் கார்டு போட்டு கொடுத்துடுங்க என்றார்.
நான் எனது கம்பெனியில் இதை பற்றி சொன்ன போது மேனேஜர், "நீ ஆர்டர் எடுத்திருப்பது மகிழ்ச்சி தான். இருநூறு ரூபாய் ஆகும்னு சொல்லிடு. ஆள் கரெக்டா காசு கொடுப்பாரா என்றும் சரி பார்த்து கொள்" என்று சொல்லவே நான் கொஞ்சம் உஷாராகி, மறு நாள் அவரை
பார்க்கும் போது "இருநூறு ரூபாய் ஆகுமாம்" என்று கழண்டுகொள்ள பார்த்தேன்
அவர் "அதனாலென்ன போட்டுடுங்க" என்று உறுதியாக சொன்னார். நானும் கார்டு போட
சொல்லி விட்டேன். கார்ட் ரெடியானவுடன் எடுத்து கொண்டு சென்று அவரை பேருந்து நிலையத்தில் பார்த்து கொடுத்தேன். நல்லாருக்குப்பா. தாங்க்ஸ் என்றார்.மீதம்
150 ரூபாய் கேட்ட போது அவர் நாளை தருகிறேன் என்றார். மறு நாளிலிருந்து அவரை
பார்க்க முடியவில்லை.
ஒருவாரம் சென்றது. எனது மேனேஜர் என்னை பார்த்து "தப்பா நினைச்சுக்காதே காசு வரலைன்னா உன் சம்பளத்தில் இருந்து பிடிச்சிருவாங்க" என்றார் சிரித்து கொண்டே
நான் டென்ஷன் தாங்க முடியாமல்,அடுத்த நாள் அவரது வீடு எங்கே என்று விசாரித்து கொண்டு சென்றேன். வீட்டில் அவர் இல்லை. அவரது தாயிடம் வந்த விபரத்தை சொல்லி விட்டு வந்தேன். அடுத்த நாள் அவரை பேருந்து நிலையத்தில் பார்த்த போது "எப்படி என் வீட்டுக்கு வரலாம் நீ" என்று கோபமாய் கேட்டார். அலுவலகத்தில் என்னை காசுக்காக நெருக்குவதால் வந்ததாக சொன்னேன். "அதுக்காக வீட்டுக்கு வந்துடுவியா நீ. இனிமே வீட்டுக்கு வர்ற வேலை எல்லாம்
வச்சிக்காதே" என்று கறாராய் சொல்லியதன் மூலம் காசு விசயத்தில் தான் கறார் இல்லை என்பதை உணர்த்தி விட்டு காசு தருவதை பற்றி ஒன்றும் சொல்லாமலே சென்று விட்டார்.
பிறகென்ன என்கிறீர்களா.அலுவலகத்தில், நான் அந்த மாத சம்பளம் வாங்கும் போது இந்த 150 ரூபாயை கழித்து கொண்டு தான் கொடுத்தார்கள். எனது தவறால் கம்பெனிக்கு நஷ்டம் ஆக கூடாது என்பதால் சம்பள பிடித்தத்தை முழு மனதுடன் ஏற்று கொண்டேன்.நம்மால் அடுத்தவருக்கு நஷ்டம் வர கூடாது என்ற நினைப்பு ஏன் அந்த மனிதருக்கு இல்லை
அப்படின்னு டென்சன் ஆக விடாமல் நம்ம கவுண்டமணி அண்ணன் சொன்ன "அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா" டயலாக் ஞாபகத்துக்கு வந்து விசயத்தை ஈசியாக எடுத்துக்க சொல்லுது
FINAL PUNCH
அப்போது,150 ரூபாய் எவ்வளவு பெரிய தொகை என்பது அந்த கம்பெனியில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 400 ரூபாய். என்பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்
ஆர்.வி.சரவணன்
ஏற்கனவே என் தளத்தில் வெளியான பதிவு இது
ஏற்கனவே என் தளத்தில் வெளியான பதிவு இது