ஞாயிறு, அக்டோபர் 27, 2013

சூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு (ஒரு) பார்வை





சூப்பர் ஸ்டார் ரஜினியின் கழுகு (ஒரு) பார்வை 


டிவியில் ஒரு நாள் இரவு கழுகு படம் ( எந்த விளம்பரமுமின்றி ). இந்த படம் இது வரை பார்த்ததில்லை. பார்க்காம இருந்த படங்களை டைம் கிடைக்கும் போது பார்ப்பதுண்டு.அதனால் படம் பார்க்க அமர்ந்து விட்டேன். பார்த்தவுடன் எழுதிடணும் னு தோணுச்சு எழுதிட்டேன். ஆனால் பாருங்க பழைய படத்தை பத்தி இப்ப பதிவு தேவையா என்று எழுதியதை அப்படியே ஓரமா வச்சிட்டேன். இப்ப எடுத்து பார்க்கிறப்ப நல்லாருக்கிற மாதிரி தோணுச்சு உங்களுக்கு எப்படி தோணுது சொல்லுங்களேன் 

 நரபலி கொடுக்கும் சாமியார் ஒருவரை அவரது கும்பலை சூப்பர் ஸ்டார் ரஜினி பொறி வைத்து  பிடித்து போலீசில் ஒப்படைக்கிறார்  என்பதே கதை. தலைவர் ரஜினி இதில் ஜாலி, காதல் ,ஹீரோயிசம், என்று அனைத்திலும் பின்னி எடுக்கிறார் என்பதை சொல்வது சூரியனுக்கு டார்ச் லைட் அடிக்கிற மாதிரி தான் (இத எங்கியோ படிச்சேன்) 

ரஜினிக்கு ஜோடி ரதி. இருவரின் ஆரம்பகட்ட காதல் மோதல் காட்சிகள் நல்ல கலகலப்பு.வி.கே.ராமசாமியிடம்  ரஜினி  முதல் நாள் ஒரு லவ் லெட்டர் கொடுத்து அவரது
பெண்ணிடம் கொடுக்க சொல்வதும் , மறுநாள் வேறொரு பெண்ணுக்கு அது என்று திரும்ப வாங்கி கொள்வதும் கலாட்டா.




இந்த படத்தில் கவனிக்க வேண்டிய ஒரு டயலாக் என்ன தெரியுமா 
போனில் ராமசாமி" உன் பேர் என்ன" என்று கேட்கும் போது ரஜினி  "கமல்ஹாசன்" என்று சொல்ல பக்கத்தில் இருக்கும் ஒய்.ஜி.மகேந்திரன் "என்ன அவர் பேர் சொல்றே" என்று சீரியசாக  "கமல் என் பிரெண்ட் தான் நான் சொல்லிக்கிறேன் விடு" என்று ரஜினி கூலாக  சொல்ல, "இவர் பெரிய ரஜினிகாந்த்" என்று ஒய்.ஜி.மகேந்திரன் பதில் கொடுப்பார் 

மூட நம்பிக்கை யுடன்  சாமியார் தான் தெய்வம் என்று  இருக்கும் தேங்காய் சீனிவாசன் ரஜினிக்கு அண்ணனாக வருகிறார். வனிதா சுட்டி பெண்ணாய் வந்து ரஜினி ரதிக்கு உதவி செய்கிறார். அவர் நரபலி கொடுக்கப்பட்ட மறுநாள் போலிஸ் வந்து விசாரிக்கும் போது அப்படி ஒரு பெண்ணே ஊரில் கிடையாது எனும் போது கதையில் திகில் ஆரம்பிக்கிறது 

சங்கிலி முருகன் தான் சாமியார். நரபலி கொடுக்கும் காட்சியில் முகமூடி அணிந்து 
வரும் அவர் கண்கள் கொஞ்சம் திகிலை கிள்ளப்புகிறது. வனிதா நரபலி
கொடுக்கப்படும்காட்சி திடுக்கிட வைத்தாலும் அப்போது  சங்கிலி முருகன் மேல் நமக்கு வரும் பயத்தை கடைசி வரை இன்னும் அதிகபடுத்தி தக்க வைத்திருக்கலாம் 

சங்கிலி முருகனுக்கு உதவியாளராக சுருளிராஜன் வருவது சீரியஸ் குறைக்க உதவும் ரிலாக்ஸ் என்றாலும்,  டெரர் சங்கிலி முருகனுக்கு ஏற்றவாறு வில்லத்தனம் கொண்ட இன்னொரு கேரக்டரையும்  போட்டிருக்கலாம்.  ஏனெனில் சாமியார் அநியாயங்களை கண்டுபிடித்து எழுத வந்திருக்கும் பத்திரிகையாளர் சோ வை அவர்  மிரட்டி பணிய வைப்பது காமெடிக்கு ஓகே ஆனால் த்ரில்லர் கதையின் டெம்போ வை கொஞ்சம் குறைய வைக்கிறது. ரதியையும்  குடும்பத்தினரையும் பாதுகாப்பாக வீட்டில் கொண்டு விட்டு வந்து ரஜினி வில்லனை தேடுவது போலில்லாமல் ரதியும், ரஜினியின் அண்ணன் மகளும்  சங்கிலி முருகனிடம் சிக்கி கொண்டு விட அவர்கள் இருக்கிறார்களா பலியாகி விட்டார்களா என்று தெரியாமல் ரஜினி ஆக்ரோசமாய்  தேடுவது போல் அமைத்திருந்தால் இன்னும் நகம் கடிக்கும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் 

நரபலியை பார்த்ததினால் ரஜினி அன் கோவை அவர்கள் துரத்த அவர்கள் பஸ்சுடன்  தப்பிக்கும் விதம் ரசிக்க வைக்கிறது. படத்தின் கடைசியில் பஸ்ஸை அவர்கள் தீப்பந்தத்துடன் துரத்த ரஜினி அவர்களுக்குள் பஸ் சை செலுத்தி மீண்டு வரும் காட்சி நன்றாக இருக்கிறது.

இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஒரு பூவனத்திலே,பொன்னோவியம்,
 தேன் என்றாலும் தேனில் ஊறிய பலா போன்றது காதல் என்னும் கோயில் பாடல். ஒரு அருமையான  காதல் மேலோடி என்றே சொல்லலாம்  இந்த பாடல் ஏற்கனவே நான் கேட்டிருந்தாலும் இந்த படத்தோடு பார்க்கையில் எனக்கு இப்போது இந்த பாடல் favourite   
சாங் ஆகி விட்டது அடிக்கடி ஹம்மிங் செய்து கொண்டிருக்கிறேன்.

இந்த படத்தில் வரும் பஸ் வடிவமைப்பு ரொம்ப நன்றாக இருக்கிறது உள்ளேயே பாத்ரூம் கிச்சன் படுக்கை  அறை  பைக்  வைக்க  இடம்  என்று சூப்பர்  ஆக  இருக்கிறது இது  இப்போது
அதிசயமல்ல  தான் ஆனால்  1981 ஆம் வருடம் அது புதுமை தானே. எது எப்படி இருப்பினும் தலைவர் ரஜினி படமாதலால் அவரது ஆடல் பாடல் ஸ்டைல் மற்றும் சண்டைகளுடன் 
நம்மை ஈர்த்து விடுகிறது 


FINAL PUNCH 

மூட நம்பிக்கையை  தகர்க்கும்  வண்ணம்  ஒரு படம்  அப்போது மட்டுமல்ல இப்போதும் கூட தேவை தான் என்பதை இந்த படம் உணர்த்தினாலும்  இது அந்த காலத்திலேயே வந்திருப்பது தான் மிகுந்த ஆச்சரியமான ஒன்று .


ஆர்.வி.சரவணன் 

வியாழன், அக்டோபர் 24, 2013

முக நூல் கிறுக்கல்கள்






உழைப்பும்  உனை கண்டு  மரியாதை செய்யும்  


முக நூல் கிறுக்கல்கள் 


இன்று ஷேர் ஆட்டோவில் டிரைவர் சீட்டில் அவருடன் அருகில் அமர்ந்து செல்லும் வாய்ப்பு கிடைத்தது. எனக்கு ஜலதோஷம் என்பதால் தும்மல் வர மூன்று முறை தும்மி விட்டேன். டிரைவருக்கு இதனால் ஏதும் தொந்தரவாக இருக்க போகிறது என்று சாரி கேட்க நினைத்தேன். ஆனால் பாருங்கள் 
அவர் வாயிலிருந்து வெளிப்பட்ட புகையிலை வாசம் என் முகத்தில் வந்தறைந்ததோடு மட்டுமில்லாமல் சாரி கேட்கும் என் எண்ணத்தையும் விரட்டியடித்து விட்டது 

******

மும்பையில் நானும் நண்பரும் ஆட்டோவில் சென்ற போது ஆட்டோகாரர் இந்தியில் நாங்கள் செல்லும் இடம் பற்றி கேட்டார். எங்களுக்கு பதில் சொல்ல தெரியவில்லை அவர் மேலும் மேலும் கேட்கவே, நான் "இந்தி நகி மாலும்" என்றேன். ஆட்டோ காரர் என்னை திரும்பி பார்த்து ஒரு சிரிப்பு சிரித்தார். அந்த சிரிப்பில் இந்தி தெரியாது என்பதை மட்டும் ஹிந்தி ல கத்துகிட்ட நீ, ஏன் இந்தியை கத்துக்க முயற்சி செய்யலை என்று அர்த்தம் இருப்பதாக தோன்றியது எனக்கு 


******

இன்னிக்கு காலையில ரோட்டில் நான் நடந்து வரும் போது எதற்கோ திரும்பியதால் எதிரில் வந்த பைக் என் மீது மோதுவது போல் வந்து நின்றது. நான் திரும்பி பார்த்தவாறு வந்தது தவறு என்பதால் சாரி பாஸ் என்றேன். அவரும் ஓகே என்று சிரித்த படியே சென்று விட்டார். யோசிச்சா தான் புரியுது. ஹாரன் கொடுக்காமல் வந்தது அவர் தப்பு .அதனால் அவர் தான் 
சாரி கேட்கணும் என்பது. இதுல பைனல் டச் என்னன்னா பைக்கின் முன் 
வீல் என் கால் நகத்தில் ஏறியதால் நகம் பாதி பிய்ந்து வலிக்க ஆரம்பிச்சுடுச்சு. (திரும்பி பார்த்தது குத்தமாய்யா)


******

நெடுஞ்சாலையில் இரவில் மழை நேரத்தில் பேருந்து டயர் பஞ்சர் ஆகி நின்று விட, வேகமாய் பறந்து செல்லும் வாகனங்களின் ஓட்டுனர்களில் எவரேனும் ஒருவர் நின்று விசாரித்து சென்றாராயின்,(முகம் காட்டா விட்டாலும்) மனித நேயத்தை காட்டி விட்டு செல்லும் நீயும் என் தோழனே

******

இரவு வீட்டுக்கு சென்று நான் டிவி யை ஆன் செய்த நேரம்,முக்கிய 
தமிழ் சானல்கள் அனைத்திலும் விளம்பரம் தான் ஓடிகொண்டிருந்தது.
விளம்பரத்தை நம்மால் ஆப் செய்ய முடியாது என்பதால்  டிவி யை ஆப் செய்து விட்டேன்

******

பொங்கலுக்காக ஊருக்கு கிளம்பி வருகையில் வழியனுப்ப வந்த நண்பர் டிரைவர் க்கு பின் சீட் உட்காராதீங்க தூக்கம் வருவதற்கு பதில் டிரைவர் டென்சன் நமக்கு வரும் என்றார்.இருந்தும் நான் ஏறிய பேருந்தில் டிரைவர்க்கு பின் சீட் தான் கிடைத்தது. டிரைவர் ஒரு முறை குளிருகிறது என்று மெதுவாக பேருந்தை ஓட்டிகொண்டே ஸ்வெட்டர் எடுத்து அணிந்து கொண்டார். நான் பயத்தை அணிந்து கொண்டேன்.

******

ஒருவருக்கு நாம் போன் செய்யும் போது அவர் அட்டென்ட் செய்யவில்லை என்றால் அவர் பிஸியாக இருக்கிறார் என்று அர்த்தம்.ஆனால் நம் பேர் பார்த்து கூட அவர் நம்மை அழைக்கவில்லை என்றால் நம்மை தவிர்க்கிறார் என்று தானே அர்த்தம்

******

சகிப்பு தன்மை என்பது....

ஹோட்டலில் அடுத்து சாப்பிட போகும் நபரை 
பக்கத்திலேயே நிற்க வைத்து கொண்டு 
அவசரமாய் அள்ளி உண்பது



******

நான் ஒவ்வொரு வாரமும் வெள்ளி இரவு கும்பகோணம் செல்ல ரயில் 
ஏறும் போது, ஊருக்கு செல்லும் ஆர்வத்தில் சந்தோசமாய் "சீக்கிரம் வா" என்று ரயிலை நான் வேகமாய் இழுத்து செல்கிறேன். 

ஞாயிறு இரவு ஊரிலிருந்து கிளம்பும் போது ரயில், என்னை கட்டி இழுக்காத குறையாய் இழுத்து வருகிறது. "வேலைக்கு போகணும் வா" என்று





FINAL PUNCH

உன் பயம் உள்ளே உறங்கட்டும் 
உன் தைரியம் வெளியே நடமாடட்டும்



ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, அக்டோபர் 13, 2013

நான் ஆசிரியராகிறேன்



நான் ஆசிரியராகிறேன்

 இவனுக்கு ஸ்கூல் ல வாத்தியாரா வேலை கிடைச்சிடுச்சு போலருக்கு 
 அப்படின்னு  தானே உங்க மனசுல நினைச்சிருப்பீங்க. அதெல்லாம் 
இல்லீங்க. நான் ஒரு பத்திரிகைக்கு ஒரு வாரத்திற்கு மட்டும் ஆசிரியரா பொறுப்பேற்கிறேன்.  எந்த பத்திரிகை னு உங்க முகத்துல இப்ப
கேள்வி குறி தென்படுது. இதோ பதில் சொல்லிடறேன் 

வலைச்சரம் என்ற ஆன் லைன் மேகசின்ல தான் இந்த பொறுப்பு எனக்கு கிடைச்சிருக்கு.வாரம் ஒரு வலைப் பதிவர் ஆசிரியராக பொறுப்பேற்று 
சிறப்பு சேர்க்கும் இத் தளத்தில், இந்த வாரம் (14-10-2013 to 20-10-2013) 
என்னை ஆசிரியராய் அமர்த்திய திரு. சீனா அய்யா அவர்களுக்கு 
என் இதயம் நிறைந்த நன்றி. மற்றும் நண்பர் தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கும் என் நன்றி 

இந்த ஆசிரியர் பொறுப்பு எனக்கு கண்டிப்பாக பெருமை சேர்க்க கூடிய 
ஒன்றாகும்.அதே போல் இந்த பதவிக்கு நான் என்ன பெருமை
சேர்க்கிறேன்னுதெரிஞ்சிக்க நீங்க ஆசைபடுவீங்க. உங்களை 
போலவே நானும் தெரிஞ்சிக்க ஆசைபடறேன். (எப்படி பெருமை 
சேர்க்க போறோம்னு ஒரு நகம் கடிக்கும் டென்சன் தொடர்ந்திட்டே இருக்கு) வாங்களேன் ஒரு  விசிட் இத் தளத்திற்கு  வலைச்சரம்


FINAL PUNCH

எழுத்தாளர் திரு.சுஜாதா வின் எழுத்துக்களுக்கு ரசிகன் நான். 
அவரது எழுத்துக்களும் தந்த ஊக்கத்தினால்,எழுத முயற்சித்து 
கொண்டிருக்கிறேன் ஒரு மாணவனாய்

ஆர்.வி.சரவணன்