புதன், ஏப்ரல் 09, 2014

இருமன அழைப்பிதழ்-3







இருமன அழைப்பிதழ்-3


சரண் ஆகிய நான் மனதுக்குள் குதுகலமாகி  கொண்டிருந்தேன். ராதாவை   திருமணம் செய்து கொள்வது என்பது  என் வாழ்க்கையில் எவ்வளவு  பெரிய கிப்ட் தெரியுமா. என்னடா இவன் குழப்பறான் னு உங்களுக்கு தோணுமே.விசயத்துக்கு வந்துடறேன் 


நான் ராதாவின் மாமா பையன். அதாவது  துரத்து சொந்தம். நெருங்கிய சொந்தமாகி 
விட தான் பிரயத்தன பட்டு கொண்டிருக்கிறேன் .ராதாவின் மேல் எனக்கு காதல் கீதல் கத்திரிக்காய் வெண்டைக்காய் என்றெல்லாம் கதை விட நான் தயாரில்லை.ஏன்னா 
நான் ப்ராக்டிகல் மேன். எனக்கு ராதாவை, அவள்
அழகை,படிப்பை,புத்திசாலித்தனத்தை பிடித்திருக்கிறது. அவள் அப்பாவின் பணம் 
இதையும் சேர்த்துக்கலாம்.இப்படிப்பட்ட பெண் மனைவியானால் யார் தான் வேண்டாம் என்பார்கள். எனவே அவளை அடைவதே (இந்த வார்த்தை தப்பா தெரியுது ) மணந்து கொள்வது வாழ்க்கையின் லட்சியமாய் அதுவே லட்சணம் என்பதாய் கருத்தில் இருத்தி கொண்டேன் 

என் ஆசை தெரிந்து என் பெற்றோர் ராதாவின் அப்பாவிடம் சம்பந்தம் பேசினார்கள் ஆனால் 
அவர் இதை பேராசை என்று கிண்டலடித்தார். அவர் எதிர்பார்க்கும் மாப்பிள்ளை வெளி நாட்டில் வேலையிலிருக்க வேண்டுமாம் (இது தானே பேராசை) வெளிநாட்டை  நான் வரைபடத்தில் மட்டும் பார்த்ததிருக்கிறேன் 


சரி குறுக்கு வழியில் செல்லலாம் என்று ராதாவின்  மனதில் இடம் பிடிக்க நினைத்தேன். என் பார்வை, சிரிப்பு, தோற்றம், பேச்சு எதையும் அவள் லட்சியம் செய்யவில்லை என் கனவில் மட்டுமே என்னை லட்சியம் செய்தாள். வேறு எவனாவது எனக்கு முன்னாடி  
ரிசர்வ் பண்ணிட்டானா என்று நொந்து போன நேரத்தில் கிருஷ்ணா வேறு ராதாவுடன்  
பழகியது எனக்கு எரிச்சலை வாரி வழங்கியது. அவனிடம்  அவர்கள் 
பழக்கத்தை பற்றி கொஞ்சம் உரசி பார்த்தேன். உண்மையான நண்பர்கள் சொல்லி பெருமைபட்டான். அவனை விட நான் பெருமைப்பட்டேன்.


கிருஷ்ணா வேலைக்காக சென்னை செல்ல இப்போது என் வாழ்க்கை நதியில் சந்தோஷம் கரை புரண்டு ஓடியது. ராதாவிடம் என் விருப்பத்தை சொன்னேன். அவள் கிண்டலாய் ஒரு சிரிப்பு சிரித்து விட்டு வேறு வேலை இருந்தால் பாரேன் என்று சொல்லி விட்டாள். அவளை தவிர வேறு வேலை இருப்பதாக எனக்கு தோன்றவில்லை.


ஆனால் ராதாவுக்கு கல்யாண வேளை வந்தது. திருமணம் நிச்சயமானது. ஹீரோவாகலாம் என்று ஆசைபட்ட நான் வில்லனாக வேண்டிய கட்டாயத்துக்கு வந்து விட்டேன். திருமணத்தை எப்படியாவது  நிறுத்தும் எண்ணத்துடன் வந்திருக்கிறேன். மாப்பிள்ளை குடும்பத்தில் நான் செலுத்தியிருக்கும் ஏவுகணை  எப்போது தன் வேலையை ஆரம்பிக்கும் 
என்று பதட்டத்துடன் காத்து கொண்டிருந்தேன்.


யாரோ ஒருவர் ஓடி வந்து ராதாவின் அப்பாவை அழைத்து கொண்டு மாப்பிளையின் ரூம் 
செல்ல சில நிமிடங்களில் ராதாவின்   அப்பா 
கோபமாய் வெளி வந்தார். கூடவே மாப்பிளையின் குடும்பம்மும் 


"என்னங்க என்னாச்சு "


"என்னாச்சா எவனோ ராஸ்கல் நாம் பொண்ணுக்கு போட்டிருக்கும் நகையெல்லாம் போலி. குடும்பம் அப்படி ஒண்ணும் சரியில்லை னு மொட்டை கடிதாசி எழுதியிருக்கான். 
அதை போய் பெரிசா எடுத்துட்டு இவங்களும் உண்மையானு கேட்கறாங்க" 

"சந்தேகம்னு வரும் போது தெளிவுபடுதிக்கிறது நல்லது தானே" 

மாப்பிள்ளையின் அப்பா 

"இதுலேயே தெரியுதே எங்க மேல உங்களுக்கு நம்பிக்கையில்லன்னு.
 மனுஷனுக்கு நம்பிக்கை அவசியம் சார்"


" அதுக்காக நாங்க ஏமாற முடியாது"


"நாங்க யாரையும் ஏமாற்றலை. எங்களோடது கௌரவமான குடும்பம்"


"அப்புறம் ஏன் இப்படி லெட்டர் வருது "


(ஆகா என்னோட ஏவுகணை இலக்கை தொட்டுருச்சி)


ராதாவின்  அண்ணன் "உங்க பையனை பத்தி கூட தான் எங்களுக்கு அரசல் புரசலா நியூஸ் வந்துச்சி. நாங்க எதுனா கேட்டோமா. நல்ல குடும்பங்கள் ஒண்ணு  சேரும் போது இப்படி எதுனா நியூஸ் வரது சகஜம் தான். இதை போய் பெரிய விசயமா பேசிட்டிருக்கீங்க"


" பொய் சொல்லாதே என் பையன் சொக்க தங்கம் "


"அதே தான் நாங்களும் சொல்றோம் எங்க நகையும் சொக்க தங்கம். வேணும்னா நகையை 
நாங்க செக் பண்ணி நீருபிக்க முடியும் உங்க பையன் நல்லவன் ன்னு எப்படி ப்ரூப்
பண்ண போறீங்க" 


மாப்பிள்ளையின் அப்பா கோபமாய் 

"இந்த கல்யாணம் நடக்காது வாங்க நாம போகலாம்"

"முதல்ல அதை செய்ங்க" என்று சீறினார் ராதாவின் அப்பா 

மாப்பிள்ளை கோபமாய் எகிற ஆரம்பிக்க ராதாவின் அண்ணன் அவனை அடிக்க ஓட கிருஷ்ணா தடுக்க எல்லோரும் பதட்டமாய் இதை கவனித்து கொண்டிருக்க, நான்  ராதாவை கவனித்தேன் மணப்பெண் கோலத்தில் அவளை பார்க்க ஒரு தேவதை போல் இருந்தாள். வருகிறேன் காத்திரு என்று அவளுக்கு சொல்வது போல் எனக்குள் சொல்லி கொண்டேன் 


எனது பெற்றோர்  சமாதான முயற்சியில் இறங்க அவர்கள் செயல் நியாயமாயினும் எனக்கு 
அது கஷ்டமாச்சே என்று அவர்கள் மேல் எரிச்சல் வந்தது.


 "போகட்டும் விடுங்க "என்ற ராதா அப்பா சலிப்புக்கு செல்ல 
   நான் களிப்புக்கு சென்றேன்.


"பொண்ணு மேடை வரைக்கும் வந்தாச்சு என்ன பண்ண போறீங்க" என்று  ஒருவர் 
குரல் (எடுத்து)கொடுத்தார்.



(இத சொல்றதுக்குன்னே யாராவது ஒருத்தர் கல்யாணத்திற்கு வருவாங்களோ)

 "உங்க சொந்தத்திலேயே தான் பையன் இருக்கானே  அவனை முடிச்சிடுங்களேன் "
இப்படி ஒருவர் சொன்னார்.
(ஆகா அவர் வாய்க்கு சர்க்கரை மூட்டையை தான் கவிழ்க்கணும்) 

நான் என் பெற்றோரை உற்சாகமாய் கவனிக்க அவர்களும் என்னை அப்படியே ரீபீட்டினார்கள் 
நான் உட்கார்ந்திருந்த சீட்டே என்னை தனது நுனிக்கு தள்ளி விட்டது போன்ற பிரமை 

இப்போது ராதாவின் அண்ணன் 

"அப்பா நான் ஒரு ஐடியா கொடுக்கலாமா "

"சொல்லுப்பா" உடைந்த குரலில் ராதா அப்பா 

"நம்ம கிருஷ்ணா இருக்கான்ப்பா அவனை கேட்கலாமே.ரொம்ப நல்ல பையன்ப்பா 
ராதாவின் மனசறிஞ்சு நடந்துக்குவான்."

 ராதாவின் அப்பா யோசனையாய் தன் மனைவியை பார்த்தார்.

" ஆமாங்க கைல வெண்ணையை வச்சுக்கிட்டு நெய்க்கு அலைஞ்ச மாதிரி நாம ஏன் கஷ்டபடணும்.  ராதாவுக்கு கிருஷ்ணா தான் சரியானா பொருத்தம். இதை முன்னாடியே செஞ்சிருக்கலாம்"

எனது ஏவுகணை குறி தவறி எனக்குள்ளே பேரிடியாய் இறங்கி கொண்டிருந்தது.

ராதாவின் அப்பா கேள்விக்குறியாய் அவளை பார்க்க, அவள் கிருஷ்ணாவை  பார்த்து வெட்க புனனகையுடன தலை குனிய கிருஷ்ணா பரவசத்துடன்  தன் பெற்றோரை பார்க்க அவர்களும் தலையசைக்க ராதாவின் அண்ணன் கிருஷ்ணா கை பிடித்து "மாப்ளே மாப்ளே னு சொன்ன வார்த்தை உணமையாகிடுச்சு மாப்ளே" என்று சிரிப்புடன்  மேடைக்கு அழைத்து சென்றான்.
மேளம் முழங்கி கொண்டிருக்க, என் உள்ளம் குமுறி கொண்டிருக்க கிருஷ்ணா ராதாவின் கழுத்தில் தாலியை கட்டி கொண்டிருந்தான் 

"கல்யாணம் முடிய போகுது சாப்பிட்டுட்டு போங்க" என்று கல்யாண மண்டப வாசல் 
வரவேற்பில் இருந்தவர்கள் என்னை தொடர்ந்து கூப்பிட்டு கொண்டிருக்க நான் கண்களில் 
கண்ணீரை அணிந்த படி வெளியேறி கொண்டிருந்தேன்.

-------------------

முற்றும் 

நன்றி திரு.ஓவியர் மாருதி அவர்கள் 

FINAL PUNCH  

இந்த கதை நான் எழுதிய ராதாகிருஷ்ணன் என்ற திரைகதையின் கிளைமாக்ஸ் காட்சியை மட்டும் எடுத்து  ஒரு சிறு கதையாக்கியிருக்கிறேன்.இதை (முடிந்தால்) குறும்படமாக எடுக்கும் ஐடியாவும் எனக்கு இருக்கிறது. 2000 வது வருடத்தில் குமுதம் நடத்திய சிறுகதை போட்டிக்கு இதை அனுப்பியிருந்தேன்.தேர்வு பெறவில்லை.உங்களிடம் தேர்வு பெற்றிருந்தால் எனக்கு சந்தோசமே. 

ஆர்.வி.சரவணன் 

9 கருத்துகள்:

  1. அருமையான கதை
    கதை தேர்வு பெற்றுவிட்டது நண்பரே
    வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  2. பெயர் பொருத்தமும் இணைந்து விட்டது... எங்களின் மனதிலும் தேர்வு பெற்று விட்டது... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  3. டும் டும் டும் தாங்க! அதாங்க ராதாவுக்கும், கிருஷ்ணாவுக்கும், திரையில கல்யாணத்தை ஊர் அறிய முடிச்சுருங்க!

    பதிலளிநீக்கு
  4. நல்ல முடிவு சுபம் போட்டு நாங்க காட்சியாக பார்த்துவிட்டோம்.

    பதிலளிநீக்கு
  5. சிறப்பா இருக்கு! வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  6. கதை அருமை அண்ணா...
    வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  7. பரபர வேகம்;
    சுவையான திருப்பங்கள்;
    சுகமான, சுபமான முடிவு!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்