ஞாயிறு, ஜூலை 07, 2013

"திடங்கொண்டு போராடு-காதல் கடிதம் பரிசு போட்டி" ஆசையில் ஓர் கடிதம்





"திடங்கொண்டு போராடு-காதல் கடிதம் பரிசு போட்டி" 

ஆசையில் ஓர் கடிதம்   


எப்படி  அழைக்கலாம் உன்னை, 

அன்பே என்றோ என்னவளே என்று அழைக்கும்  உரிமை உண்டா என  தெரியாததால் நான் நேசம் கொண்ட பெண்ணுக்கு என்றே ஆரம்பிக்கிறேன்.  

உன் மனது என்னை பற்றி அங்க என்ன சொல்லுது என்பதை இங்கிருந்து 
ஒட்டு கேட்க முடியவில்லை. நான் நினைப்பதை சொல்லி விடுமாறு மனது கரையில் எடுத்து போட்ட மீன் போல் துடிப்பதால் என் உள்ளக் கிடக்கையை வார்த்தைகளில் கொட்டிய காதல் கடிதம் இது  

அலை பேசியோடு அலை பாயாத, இணையத்தோடு இணைப்பில் இல்லாத,  முக நூலின் முகம் பார்த்திராத, காலம் அது. பணக்காரர்கள் குடியிருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பிலே உனது வாசம். அந்த குடியிருப்பின் நிர்வாக அலுவலகத்தில் எனக்கு வேலை . எந்த வீட்டில் என்ன பிரச்னை என்றாலும் என் தலை உருண்டு கொண்டிருக்க, பாலைவனமாய்  இருந்த என் அலுவலக நேரங்கள் உன் வரவால் தான் சோலைவனமாக மாறியது. 

 நீ அப்படியொன்றும் அழகியல்ல.(சட்டென கோபம் கொள்ளாமல் 
பட்டென அடுத்த வரியை படி)  முதல் முறை பார்க்கும் போது மறு 
முறையும் பார்க்கலாமே என்று தோன்ற வைக்கும் தோற்றம் நீ. 
அதுவே  தொடர்கதையாகும் அதிசயமும் நீ. எண்ணற்ற தேவதைகள்  
அங்கே உலா வந்த போதும் உன்னிடத்தில் மட்டும் ஈர்க்கப்பட்டேன்.  
ஈர்ப்பு என்ற சொல்லுக்கு அர்த்தம் புரிந்தது . எதனால் இந்த ஈர்ப்பு என்று 
பட்டிமன்றம் வைத்தால்  முடிவு எட்டபடாமலே  அது முடிவுக்கு 
வரும் என்பதால் விட்டு விடலாம். ஆனால் உன்னை அப்படி விட்டு 
விட முடியாத  சம்திங் ஸ்பெஷல் நீ.  மாநிறம் தான் என்றாலும்  கோபம் வந்தால் மட்டும் முகம் ஏன் சிகப்பு சாயம் பூசி கொள்கிறது (என்னையும் கொல்கிறது ) 

உன்னை சந்தித்த வேளை பற்றி இங்கே கொஞ்சம் சிந்திக்கிறேன் 
நான் வாசல் கேட்டருகில் நின்றிருந்தேன்.( வாட்ச்மேன் வெளியே சென்றிருந்ததால்) நீ கல்லூரிக்கு செல்ல சைக்கிளை  தள்ளிய படி வந்து கொண்டிருந்தாய்.வேதியியல் என்றால் வேப்பங்காயாய் கசக்கும் எனக்கு  கூட ஒரு ரசாயன மாற்றம் அப்போது நிகழ்த்தினாய். முதல்  பார்வையில் தென்பட்ட  இனம் புரியாதொரு சிநேகம் பொங்கலில் தட்டுபட்ட முந்திரி போல தான் இருந்தது. அதை சுவைத்து கொண்டே நான் நிற்கையில் பிரேக் போட்டது போன்று நின்று விட்டாய் நீ. உன் தாவணி அங்கு நின்றிருந்த பைக்கின்  கைப்பிடியில் மாட்டி கொண்டிருந்தது.  நீ சைக்கிளை  நிறுத்த முடியாமலும் தாவணியை விடுவிக்க முடியாமலும் தவிக்க, முட்டு சந்திலும் சரக்கென்று வேகமாய்  பாய்ந்து வரும் ஆட்டோ போல் நான் உன் அருகே வந்தேன்.ஒரு ஆபத் பாந்தவனாக மாறி, தாவணியை எடுத்து விடும் எண்ணத்தில் வந்தவனை பண்பாடு என்பது சிக்னல் போட்டு தடுத்ததால் உன் சைக்கிளை பிடித்து கொண்டேன். நீ தாவணியை விடுவித்து கொண்டாய் 
"வண்டியை குறுக்கில் நிறுத்தியிருக்காங்க பாருங்க"  என்று குரலில் 
சலிப்பை தந்தாய். "நாளை முதல் எந்த வண்டியும் உங்கள் ராஜ பாட்டையில் குறுக்கிடாது" என்று களிப்புடன் பதில் தந்தேன். அதற்காக ஒரு புன்னகையை பரிசளித்தாய். சைக்கிளை என்னிடமிருந்து மீட்டவள்,கூடவே  என் மன வீணையை பார்வையால் மீட்டி விட்டே கிளம்பினாய். மாலையில்  
நீ திரும்ப வரும் நேரத்தை குறித்து கொண்டது மனது. 

எனது தினசரி வேலைகளில் ஒன்றாக, நீ வரும் நேரத்தில் (கல்லூரிக்கு நேரத்திற்கு  செல்லாதவன்) நேரம் தவறாமல் அட்டெண்டன்ஸ் கொடுப்பதும் , பதிலாக  ஒரு புன்னகையை பெற்று கொள்வதுமாக வாழ்க்கை இன்ப மயமானது  

 அடுத்து உன் பெயர் தெரிந்து கொள்ளும் ஆசை துளிர் விட்டது.உன்னிடம் கேட்டால் என் ஆசையின் நிலவரம் தெரியலாம். மற்றவர்களிடம் கேட்டால் அதுவே கலவரமாகலாம். என்ன செய்வது என்பதை  ரூம் போட்டு யோசிக்கும் அளவுக்கு அவசியமில்லாமல்  சென்ட் பாட்டில் நழுவி சந்தனத்தில் விழுந்தது போல் (எத்தனை  நாளைக்கு தான் பழம்  நழுவி பாலில் விழுந்தது என்று சொல்வது) ஒரு நாள்  கொரியரை கையில் வைத்து கொண்டு யாருக்கு வந்திருக்கிறது என்று ஒவ்வொரு வீடாக ஏறி  இறங்கியவன் உன்னை பார்த்ததும் இதை சாக்காக வைத்து உன்னிடம் பேசினேன். என் பெயர் 
அது தான் என்று சிரித்த படி கவரை வாங்கி கொண்டாய்.என்னை சுற்றிலும் வெள்ளை உடை தேவதைகள் கோரஸ் பாட, உன் பெயரை  உதடுகள் தொடர்ந்து உச்சரித்தது. மனது வேகமாய் சொல்லாதே என்று எச்சரித்தது

ஒரு நாள் எனக்கொரு ஆசை எழுந்தது. நீ வரும் வேளையில் நான் 
கேட்டில் இல்லாதிருந்தால் நீ எனை தேடுவாயா என்று டெஸ்ட் வைத்து 
என் ஆசையின் டேஸ்ட் அறிய முயற்சித்தேன்.மாடிக்கு சென்று தண்ணீர் தொட்டியில் தண்ணீர் அளவிடுவது போல் போக்கு காட்டி நின்று கொண்டு உன் எண்ணத்தை அளவிட்டேன். நீயோ அலட்டி கொள்ளாமலே கேட்டை கடந்து சென்று விட்டாய்.  வெறுத்து போனதால்  மாலையில் நீ வீடு திரும்பும் நேரத்தில் கேட்டில் நிற்பதை தவிர்த்தேன். நீ வரும் போதே வழக்கமாய் நான் நிற்கும் இடத்தை பார்வையிட்ட படி வந்தாய். சைக்கிளை நிறுத்தும் போது  சுற்றிலும் பார்த்தாய்.வீட்டினுள் நுழையும் முன்னும், என் அலுவலக 
ஜன்னல் பக்கம் உன் பார்வை பந்து சுழன்று வந்தது.  நான் பரவசமாகி 
உடனே வெளி வந்தேன்.  கபில் தேவ் போல் அந்த பார்வை பந்தை 
அழகாக கேட்ச் செய்து கொண்டேன். திடீரென்று நான் வெளிப்பட்டது 
உன்னை  திடுக்கிட வைத்திருக்க வேண்டும். நொடியில் சுதாரித்து ஒரு 
வெட்க  சிரிப்புடன் வீட்டினுள் நுழைந்து விட்டாய். நான் உன்னுடன் டூயட் 
பாட நிலவுக்குள்  நுழைந்து விட்டேன் (டூயட் பாட வெளிநாடு தான் செல்ல வேண்டுமா என்ன)

அடுத்து மழை பெய்யும் ஒரு நாளில் நாம் சாலையில் சந்தித்து கொண்டோம் மழை ஆரம்பித்தது.  நீ உன்  கையிலிருந்த குடையை பிரிக்க முயல அது செய்த ஸ்ட்ரைக் உனை திணற வைத்தது.   நான் உதவிக்கு வந்து குடையின் வேலை நிறுத்தத்தை வாபஸ் பெற வைத்தேன். நீங்களும் வாங்களேன்  என்று அழைப்பு விடுத்தாய். அது ஒப்புக்கா அல்லது ஒரிஜினலா என்று தெரியாமல் தடுமாறி நாகரிகமாய் மறுத்தேன். இருந்தும் நீ அழைத்ததை எண்ணி அடுத்து வந்த நாட்களில் ஒரு சுற்று சந்தோசத்தில் பெருத்தேன்.

அடுத்து கவிதைகள் என்ற பெயரில் என் பேனா கிறுக்கலை ஆரம்பித்தது   கிறுக்கியவற்றில் நான் கிழித்தது போக எஞ்சிய கவிதைகளில் ஒன்று 



நீ வரும் வழியெங்கும்
ஒரு கற்றை பார்வைகளை
இறைத்து வைத்திருக்கிறேன்
இவை அனைத்தும்
உன்
ஒற்றை
பார்வைக்காக....


திடீரென்று நீ இரண்டு நாட்களாக வெளியே வரவில்லை. நடுவுல 
கொஞ்சம்  என்னாச்சு என்பது தெரியாமல் திண்டாடினேன்.  உன் காலில் 
ஏதோ அடிபட்டதால் நடக்க சிரமமாகி வீட்டில் இருப்பதாக உன் அம்மாவிடம் தகவல் அறிய பெற்றேன். அடுத்து எப்போது பார்க்கலாம் என்று முப்பொழுதும் காத்திருக்கையில் வெளி வந்தாய் விந்தி நடந்தவாறே.  உன் காலையும் முகத்தையும்  ஒரு சேர பார்த்தேன்.நலமா என்பது போல். நீ சிரித்த படி தலையாட்டினாய்  அந்த நேரம் பார்த்து  எங்கிருந்தோ ஒலித்தது நலம் நலமறிய ஆவல்....  என்ற பாடல். (சிச்சுவேசன் சாங்காம் ) இருவரும் சிரித்து  கொண்டோம் 

பேசாமலே இப்படி பார்வை பரிமாற்றங்கள் நடந்த வேளையில் தான்  
ஒரு நாள் உன் வீட்டுக்கு விருந்தினர் வந்தார். உன் வீட்டை கை காட்டியவன் கூடவே அவர் உங்கள் உறவினர் தானா என்பதை கூடவே வந்தும் உறுதிசெய்து கொண்டேன். வந்தவர் "என்னை திருடன் னு நினைச்சியா" 
என்று கோபமாய் எகிற, உன் அப்பா  உதவிக்கு வந்தார். "இந்த  பையன் இருந்தா வீட்டை திறந்து  கூட வச்சிட்டு போகலாம். அந்த அளவுக்கு ரொம்ப நம்பிக்கையான பையன். ஒரு எறும்பு நுழைவது கூட அவன் அனுமதியின்றி நுழைய முடியாது "என்று சொல்லி எனக்கு சூட்டிய மகுடம்,   ஏதோ எழுதி கொண்டிருந்த உன்னை நிறுத்தி கவனிக்க வைத்தது. உன் தந்தை சூட்டிய மகுடம்  கேட்டு மனசு  உற்சாகத்தில் அனத்தியது என்றாலும் அந்த வார்த்தைகள் ஒரு முள் கிரீடம் தான் என்பதை புத்தி எனக்கு உணர்த்தியது 

இந்த குடியிருப்புக்கு சிறந்த பாதுகாவலன் நான் என்று சொல்லும் போதே  உனக்கும் அல்லவா பாதுகாவலன் ஆகின்றேன். வேலியே பயிரை மேயலாமா என்று என் மனது தேய்ந்த ரெகார்ட் போல்  மீண்டும் மீண்டும் உள்ளுக்குள் உறுத்தி  கொண்டிருக்க,வேலையே என் காதலுக்கு எதிரியானதே என்ற என் அங்கலாய்ப்பில் உன்னை பார்க்காமல் இருக்குமாறு புத்தி அடக்க  முற்பட்டது. .மனது முடியாது என்று அடம் பிடித்தது. வேலையா காதலா என்று எனக்குள் நடந்த தேர்தலில் காதல் வெற்றி பெற்றது.  இந்த வேலையிலிருந்து விடுபட்டு 
வேறு வேலையில் சேர்ந்து கொண்டேன்.

விடை பெற்று செல்வதை சொன்ன போது ஏன் என்று மொத்தமாய் குரல் எழுப்பியவர்களை சமாளித்து  நீ என்ன சொல்ல போகிறாய்  என்று அறியும் ஆவலில் காத்திருக்க, வெளியில் செல்ல சைக்கிள் எடுத்து கொண்டு வந்தவள் நான் பேச தயாராய்  நிற்பதை பார்த்தவுடன் (நான் கிளம்புவது தெரிந்து 
விடை கொடுக்க வந்தாயோ) என்னருகிலே சைக்கிளை  நிறுத்தி ஒற்றை காலை ஸ்டைலாக ஊன்றி நின்ற படி சொல்லுங்க என்றாய் அதே புன்னகையுடன். அப்போதே என் காதலை சொல்லி விட வாய் வரை வந்த வார்த்தைகளை சைலென்ட் மோடில் வைத்து  நான் விடை பெற்று கிளம்புவதை மட்டும் சொன்னேன். "பெஸ்ட் ஆப் லக்" என்று ஒரே வார்த்தையில் கிளம்பி விட்டாய். அவ்வளவு தானா. எனக்கிருக்கும் வேதனை உன்னிடம் இல்லையா. இல்லை தேர்ந்த நடிப்பு திறனுடன் அதை மறைத்து கொண்டு செல்கின்றாயா  என்ற குழப்பங்களுடனே அகன்றேன். 

புதிய வேலையில் அமர்ந்து பிறிதொரு நாள் எல்லோரையும் பார்க்க 
வந்ததாய் நான் சாக்கு சொல்லி வந்தது உன்னை பார்க்க தான் . நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி பாராட்டி உன் வீடு நோக்கி வந்த போது  தான் தெரிந்தது.  நான் வேலை மாறியது போல் (உங்கப்பாவுக்கு வேறு மாநிலம் மாற்றல் ஆனதால்) நீ  வீடு மாறி விட்டாய் என்பது.  நான் வேலை தான் மாற்றி கொண்டேன் நீ ஸ்டேட்டையே மாற்றி கொண்டாய். நொந்த மனதுடன், எனக்கான தகவல் எங்கேனும் விட்டு சென்றிருக்கின்றாயா என்று கூகுள் போல் ஆராய்ந்தேன்.நீ அடிக்கடி மொட்டை மாடியில்  அமர்ந்து படிக்கும் இடத்தை சென்று பார்த்த போது  அங்கே சிறுவர்களின் கிறுக்கலில்  முட்டாள் என்ற வரிகள் என்னை பார்த்து இளித்தது. வேலைக்கு துரோகம் செய்ய கூடாது என்று நினைத்து  காதலை கோட்டை விட்டவன்  
முட்டாளா ?  வலியுடன் வெளியேறியவன் உன்னை நீக்கும் வழி தெரியாதவனானேன் 

 இருந்தும் எனக்கு சில விஷயங்கள் தெளிவுபடவில்லை. என்  வேதனை 
நீ அறிந்திருப்பாயா.நீயும் இது போல் வேதனை பட்டாயா. அல்லது என்னை 
ஒரு ரயில் சிநேகிதன் போல் தான் எண்ணி கொண்டாயா. அப்படியெனில் 
உன் பார்வைக்கும் அந்த கள்ளமில்லா சிரிப்புக்கும் அர்த்தம் என்ன இன்று 
வரை எனக்கு புரியவில்லை

இப்போது நீ எங்கே இருந்தாலும் என்னை பற்றிய நினைவுகள் உன் ஞாபக அடுக்குகளில் தூசு படிந்திருக்கும் என்றே நினைக்கிறேன். எனது அந்த நாட்களை இனிமையாக்கிய  உன் வாழ்க்கை முழுக்க இனிமை நிறையட்டும். நீ எங்கிருந்தாலும்  நலமுடன் இருப்பாய் ஏனெனில் உன் நினைவுகள்  என்னிடத்தில் நலமுடன் இருக்கிறது.


இப்படிக்கு   
உன் மீது நேசம் கொண்ட   
நெஞ்சம்  

******

நண்பர் திடங்கொண்டு போராடு சீனு காதல் கடிதம் பரிசுப் போட்டி என்ற பெயரில் போட்டி அறிவித்திருக்கிறார். இப்படி போட்டி வரும் என்று கல்லுரி காலத்தில் தெரிந்திருந்தால் அப்போதே காதலித்து பார்த்திருக்கலாம்.
கடிதமும் இருந்திருக்கும். காதல் அனுபவம் இல்லையாதலால் மூளையை கசக்கி (பேப்பரை நிறைய கசக்கி ) திடங்கொண்டு போராடு-காதல் கடிதம் பரிசு போட்டிக்காக கற்பனையில் எழுத வேண்டியதாகி விட்டது. இந்த போட்டியில் பங்கு பெற வைத்த சீனு, மற்றும் போட்டியில் கலந்து கொள்ளும் இணைய நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் 

ஆர்.வி.சரவணன் 

30 கருத்துகள்:

  1. நலம் நலமறிய ஆவல் பாடல் உட்பட "எங்கிருந்தாலும் வாழ்க" என முடித்ததும் அருமை...

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
  2. அழகான கடிதம்.... வெற்றிபெற வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. கடிதம் கலக்கல் அண்ணா...
    வெற்றி பெற வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  4. //என் மன வீணையை பார்வையால் மீட்டி விட்டே கிளம்பினாய். // அட்டகாசம்
    //எனக்கிருக்கும் வேதனை உன்னிடம் இல்லையா.// சூப்பர்
    உயிரோட்டமான வரிகள் சார், சிலரது பிரிவுகள் பிரியும் முன்னமே வலி ஏற்படுத்தக் கூடியவை... சூப்பர்

    பதிலளிநீக்கு
  5. அருமையான ஒரு சிறுகதை போல் இருந்தது... கடிதம்... வெற்றிக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  6. படிக்க படிக்க ஒரு வித சுவார்யஸ்ம் தொடர்கிறது. வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  7. கற்பனை கடிதம் என்றாலும் கூட ... மிக நேர்த்தியாக இருக்கிறது, ஏதோ அனுபவித்து எழுதியதை போல.. வாழ்த்துக்கள் சரவணன் சார்!

    பதிலளிநீக்கு
  8. சில பகுதிகளை நீக்கி, இன்னும் சுருக்கியிருந்தால் சும்மா நச்சென்று இருந்திருக்கும் என்று எனக்கு தோன்றுகிறது சார் ....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சுவாரசியம் கம்மியாகி விடுமோ என்பதால் நீளத்தை குறைக்காமல் எழுதினேன் தங்கள் வாழ்த்திற்கு நன்றி

      நீக்கு
  9. நம்பமுடியலையே! காதலிக்காமல் இவ்வளவு உணர்வுப்பூர்வமாக
    எழுதியிருக்கீங்கன்றதை நம்பமுடியலையே?

    எங்கிருந்தாலும் வாழ்க! -உன்
    இதயம் அமைதியில் வாழ்க!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

      நீக்கு
    2. உணர்வு பூர்வமாக வர வேண்டும் என்பதால் கொஞ்சம் அதிகமாக நேரம் செலவிட்டேன்
      அது சரி வாழ்த்து யாருக்கு சொல்கின்றீர்கள்

      நீக்கு
  10. உள்ளுக்குள்ள இவ்வளவு காதல் இருந்திருக்கு. போட்டிக்காக வேறு காதலித்திருப்பீரோ?!

    அருமை சரவணன்.

    பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உள்ளுக்குள் கற்பனையாய் உலவிய காதல் தான் போட்டியின் மூலம் வெளி வந்திருக்கிறது தங்கள் வாழ்த்திற்கு நன்றி சத்ரியன்

      நீக்கு
  11. //நீ வரும் வழியெங்கும்
    ஒரு கற்றை பார்வைகளை
    இறைத்து வைத்திருக்கிறேன்
    இவை அனைத்தும்
    உன்
    ஒற்றை
    பார்வைக்காக....
    //


    அருமையான உவமை நன்று

    பதிலளிநீக்கு
  12. நன்றாக எழுதியிருக்கிறீர்கள் சரவணன். 'சென்ட் பாட்டில் நழுவி சந்தனத்தில் விழுந்தது போல' - புன்னகையை வரவழைத்தது.

    சொல்லாலேயே ஒரு காதல் முடிவடைந்துவிட்டதே என்று இருந்தது.

    போட்டியில் வெற்றி பெற வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
  13. உருக வைக்கும் எளிமையான வரிகள். காதல் கதை என்பதே தோன்றவில்லை - இயல்பான ஓட்டம்.
    பள்ளி நாட்களில் நான் நேசித்த ஒரு பெண்ணின் பெயரை ஏறக்குறைய இதே பாணியில் அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.
    வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  14. தங்களது கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது அப்பாதுரை சார் நன்றி

    பதிலளிநீக்கு
  15. கடிதம் மிகவும் உயிரோட்டமான உணர்வுடன் சொல்லாத காதல் வேதனையைத் தாண்டி எங்கிருந்தாலும் நல்லா வாழ்க என்று வாழ்த்தியவிதம் அருமை ஐயா!போட்டியில் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள் ஐயா!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி சார்

      நீக்கு
  16. முட்டுச் சந்தில் பாய்ந்து வரும் ஆட்டோ, சென்ட் நழுவி சந்தனத்தில் விழுவது போன்ற சில புதிய பிரயோகங்கள் ரசிக்க வைத்தன. சஸ்பென்ஸ் காதலாகி விட்டது கடைசியில்! ரசிக்க முடிந்த பதிவு. கொஞ்சம் நீளம்!

    பதிலளிநீக்கு
  17. அழகானதோர் காதல் கடிதம். வெற்றி பெற வாழ்த்துகள் நண்பரே !!!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்