செவ்வாய், ஜனவரி 28, 2014

அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா




அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா

(அரசியல் அனுபவத்துக்கு இதை விட பெட்டரா தலைப்பு வேணுமா என்ன.இருந்தும் அண்ணனோட டயலாக் என்பதால் அவரது இமேஜ்) 

 1991 ஆம் வருடம் சென்னையில்  நான் ஒரு ஸ்க்ரீன் பிரிண்டிங் கம்பெனியில் வேலை பாத்துகிட்டு இருந்தேன். பேருந்தில் தான் அலுவலகம் வருவேன்.பேருந்தில் தினம் பயணம் செய்பவர்களில் ஒருவர் (பார்த்தா சிரிக்கிறது அவ்வளவு தான் நட்பு ) ஒரு நாள் என்னிடம் பேசி கொண்டிருந்த போது என்ன பண்றீங்க என்றார்.

நான் (சும்மா இருந்திருக்கலாம் வம்பை விலை கொடுத்து வாங்கணுமா) வேலை பார்க்கும் கம்பெனி பற்றி சொன்னேன் சொன்னவுடன் அவர் "எனக்கு விசிட்டிங் கார்டு நூறு போட்டு கொடுங்க" என்றார். .நான் என்னோட வேலை மார்க்கெட்டிங்  இல்லை என்று
நழுவினேன். "அதனாலென்ன ஆர்டர் கொடுத்தா வேண்டாம் னாசொல்ல போறாங்க நீங்க போட்டு கொடுங்க என்று என் கையில் ஐம்பது ரூபாய் கொடுத்து விட்டார். தான் உறுப்பினராய் இருக்கும் கட்சி யின் பேர் சொல்லி கட்சி தலைவரின் போட்டோவுடன் விசிடிங் கார்டு போட்டு கொடுத்துடுங்க என்றார்.

நான் எனது கம்பெனியில் இதை பற்றி சொன்ன போது மேனேஜர், "நீ ஆர்டர் எடுத்திருப்பது மகிழ்ச்சி தான். இருநூறு ரூபாய் ஆகும்னு  சொல்லிடு. ஆள் கரெக்டா காசு கொடுப்பாரா என்றும் சரி பார்த்து கொள்" என்று சொல்லவே  நான் கொஞ்சம் உஷாராகி, மறு நாள் அவரை 
பார்க்கும் போது "இருநூறு ரூபாய் ஆகுமாம்" என்று  கழண்டுகொள்ள பார்த்தேன் 

அவர் "அதனாலென்ன போட்டுடுங்க" என்று உறுதியாக சொன்னார். நானும் கார்டு போட 
சொல்லி விட்டேன். கார்ட் ரெடியானவுடன் எடுத்து கொண்டு சென்று அவரை பேருந்து நிலையத்தில் பார்த்து கொடுத்தேன்.  நல்லாருக்குப்பா. தாங்க்ஸ் என்றார்.மீதம் 
150 ரூபாய் கேட்ட போது அவர்  நாளை தருகிறேன் என்றார். மறு நாளிலிருந்து அவரை 
பார்க்க முடியவில்லை.

ஒருவாரம் சென்றது. எனது மேனேஜர் என்னை பார்த்து "தப்பா நினைச்சுக்காதே காசு வரலைன்னா உன் சம்பளத்தில் இருந்து  பிடிச்சிருவாங்க" என்றார்  சிரித்து  கொண்டே 

நான் டென்ஷன் தாங்க முடியாமல்,அடுத்த நாள் அவரது வீடு எங்கே என்று விசாரித்து கொண்டு சென்றேன். வீட்டில் அவர் இல்லை. அவரது தாயிடம் வந்த விபரத்தை சொல்லி விட்டு வந்தேன். அடுத்த நாள் அவரை பேருந்து நிலையத்தில் பார்த்த போது "எப்படி என் வீட்டுக்கு வரலாம் நீ" என்று கோபமாய் கேட்டார். அலுவலகத்தில் என்னை காசுக்காக நெருக்குவதால் வந்ததாக சொன்னேன். "அதுக்காக வீட்டுக்கு வந்துடுவியா நீ. இனிமே வீட்டுக்கு வர்ற வேலை  எல்லாம் 
வச்சிக்காதே" என்று கறாராய் சொல்லியதன் மூலம் காசு விசயத்தில் தான் கறார் இல்லை என்பதை உணர்த்தி விட்டு காசு தருவதை பற்றி ஒன்றும் சொல்லாமலே சென்று விட்டார்.

பிறகென்ன என்கிறீர்களா.அலுவலகத்தில், நான் அந்த மாத சம்பளம் வாங்கும் போது இந்த 150 ரூபாயை கழித்து கொண்டு தான் கொடுத்தார்கள். எனது தவறால் கம்பெனிக்கு நஷ்டம் ஆக கூடாது என்பதால் சம்பள பிடித்தத்தை முழு மனதுடன் ஏற்று கொண்டேன்.நம்மால் அடுத்தவருக்கு நஷ்டம் வர கூடாது என்ற நினைப்பு ஏன் அந்த மனிதருக்கு இல்லை 
அப்படின்னு டென்சன் ஆக விடாமல்  நம்ம கவுண்டமணி அண்ணன் சொன்ன "அரசியல்லே இதெல்லாம் சாதாரணமப்பா" டயலாக் ஞாபகத்துக்கு வந்து விசயத்தை  ஈசியாக எடுத்துக்க சொல்லுது 

FINAL PUNCH 

அப்போது,150 ரூபாய் எவ்வளவு பெரிய தொகை என்பது அந்த கம்பெனியில் எனக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 400 ரூபாய். என்பதிலிருந்து தெரிந்து  கொள்ளலாம்  

ஆர்.வி.சரவணன்

ஏற்கனவே என் தளத்தில் வெளியான பதிவு இது 

செவ்வாய், ஜனவரி 21, 2014

புத்தக காட்சி 2014 ஒரு பார்வை



புத்தக காட்சி 2014 ஒரு  பார்வை 


வழக்கமாய் நான் ஆரம்பத்திலேயே செல்வதுண்டு. பொங்கலுக்காக
 ஊருக்கு சென்று விட்டதால் இந்த ஞாயிறு தான் (நேற்று) செல்ல முடிந்தது.
புத்தக காட்சி அரங்கினில் நான் நுழைந்த போது பகல் 12 மணி 

என்ன தான் சினிமாவுக்கு டிக்கெட் எடுத்திருந்தாலும் தியேட்டரில் நுழையும் போது ஒரு பரபரப்பு தொற்றும் இல்லையா அது போல் பரபரப்பாய் நெருங்கினேன் 

டிக்கெட் வாங்கி கொண்டு உள் நுழைந்த எனக்கு ( செல் போன்
மூன்று நாட்களாக வேலை நிறுத்தம்  செய்து விட்டதால்  போன் செய்து 
யார் வருகிறீர்கள் என்று கேட்க முடியவில்லை ) அவ்வளவு 
கூட்டத்திலும் தெரிந்த முகங்கள் இல்லையாதலால் ஒரு அனாதை  
உணர்வு ஏற்பட்டாலும், அவை புத்தகங்களை பார்த்தவுடன்  மறைந்து 
போனது  (வெளி உலகமும் தான்  )


வழக்கம் போல் சுஜாதாவின் புத்தகங்களுக்குள் புகுந்து நேரத்தை நிறைய செலவிட்டு 6 புத்தகங்கள் வாங்கினேன்.காயத்ரி, ஆயிரத்தில் இருவர்,ஆதலினால் காதல் செய்வீர்,மறுபடியும் கணேஷ், சிறுகதை 
எழுதுவது எப்படி, கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு 

ஒரு ஸ்டாலில்  26 ரூபாய் கூடுதலாக   பில் போட்டு விட்டார்கள். பின் நான் சரி பார்த்து  சொன்ன போது சாரி கூட்ட நெரிசலில்  தவறாகி விட்டது என்றவர் மூன்று புத்தகங்கள் போட்டு கொடுக்க  கவர் தேடினார் .அவர் எடுத்த கவர் அனைத்தும் பெரிதாக இருக்கவே அதற்காக சளைக்காமல் சிறிய கவர் தேடி எடுத்தே போட்டு கொடுத்தார். அந்த புத்தகங்களை  தவிர எந்த ஒரு 
பேப்பரையும்  அதில்  வைக்க முடியாது ( கூடாது ) என்ற  அளவில் இருந்தது 


நான் மிகவும் எதிர்பார்த்த ராஜேந்திரகுமார் நாவல்கள் இரண்டு கிடைத்தது.
இரண்டு புத்தகங்களும் மொத்தமே 27 ரூபாய் தான் (பழைய பதிப்பு )
நான் பாக்கெட்டில் கை விட்ட போது "சார் சில்லறையா கொடுங்க" என்றார் பில் போடும் இடத்தில  அமர்ந்திருந்த பெண். நான் கேட்டேன் "கரெக்டா 27 ரூபாய்  தான் கொடுக்கணுமா" என்று. அவரது  பக்கத்தில் இருந்தவர் 
அவரிடம் "அவர் பாக்கெட்டிலிருந்து எடுக்க போறது நூறாவும் இருக்கலாம் 500 கூட இருக்கலாம்.  எதுனே  தெரியாமல் அதுக்குள்ளே ஏன் சொல்றீங்க" என்றார் சிரித்த படி . நான் 27 ரூபாய் கரெக்டாக எடுத்து கொடுத்தேன். இருந்தும் புத்தகம் மட்டும் கையில் கொடுத்தார்கள் கவர் என்றவுடன் பிளாஸ்டிக் கவர் கிடைத்தது .அருகில் இருந்தவர் "புத்தக விலை எவ்வளவு " என்றார் அந்த பெண்ணிடம் (அந்த கேள்வி எனக்காகவும் இருக்கலாம்.)

அடுத்து நா .முத்துக்குமார் கவிதை தொகுப்பு  பட்டாம்பூச்சி விற்பவன் ,
 ஆனா ஆவன்னா வாங்கினேன்.(பிடிக்கும் ஆர்வத்திலும் 
படிக்கும் ஆர்வத்திலும் )

முத்து காமிக்ஸில்  (எழுத்தாளர் பாமரன் அவர்களுக்காக) இரும்பு கை மாயாவி கேட்டு அது இப்ப வரதில்லீங்க என்ற பதில் பெற்று நகர்ந்தேன் (கதையில் வருவதை போல் மாயாவி மாயமான  அதிசயம் )

 குறும்பட பயிற்சி தொடர்பாக முன்றில் ஸ்டாலில் விளம்பரம் பார்த்து விட்டு திருநாவுக்கரசு அவர்களிடம் அது குறித்த தகவல்கள் கேட்டு பெற்றேன் 
(குறும்பட ஆர்வம் நெடும் படமாக வருட கணக்கில் )

இப்படியாக சுற்றியதில் மணி 3.30 ஆகியிருந்தது .கால்களில் வலியுடன்  எந்த நண்பரையும் பார்க்காதது  ஏமாற்றமும் தந்தது. பசி வேறு நான் இருக்கிறேன் என்று அலறவே வெளி வந்து சாப்பிட வாங்க என்று அழைக்கப்பட்ட போர்டை நோக்கி நகர்ந்தேன் .சப்பாத்தி  ஒரு பிளேட் 50 ரூபாய் நன்றாக தான் இருந்தது. இருந்தும் சாப்பிட்ட பின் சாப்பிட்ட சுவடே தெரியாதது போல் இருக்கவே வயிறு  இது போதாது இன்னும் கொஞ்சம் போட்டு கொடுங்க  என்று ஆட்டோ காரர் போல் சொல்லவே ஸ்வீட் கார்ன் சாப்பிடலாம் ( 30 ரூபாய்)  என்று நெருங்க நினைத்தும் அந்த பிளாஸ்டிக் கப்  அளவு என்னை நெருங்க விடவில்லை. ஆகவே ப்ரூட் சாலட்  சாப்பிட்டேன் (கால் வலியால் உட்கார்ந்து சாப்பிடலாம் என்று காலியாக இருந்த சேர் பக்கம் வந்தால் 
அது கூட ரிசர்வேசன் ஆகியிருந்தது )


மீண்டும் உள்ளே நுழைந்த போது கூட்டம் அதிகமாக  இருந்தது. 
அக நாழிகை பதிப்பகம் ஸ்டால் பார்த்தவுடன் புத்தக ஆர்வத்தில் 
அருகே சென்றேன். எதிர்பாராத திருப்பம் போல் அங்கே செல்லப்பா சார் அமர்ந்திருந்தார்.அருகில் சென்று வணக்கம் வைத்தேன் நலம் பரிமாறிக்கொண்டு புத்தகம், வலை  எழுத்தாளர்கள் என்று பேசி கொண்டிருக்கையில் நண்பர்கள் வந்து கொண்டிருப்பதை எனக்கு தெரிவித்தார். 

அரூர் மூனா செந்தில், செல்வின், சிவகுமார் வந்து சேர்ந்து கொள்ள 
கூடவே பிலாசபி பிரபா அவ்வபோது மின்னலாய் வந்து ஆஜராகி விட்டு சென்று கொண்டிருந்தார் ஸ்டால்களுக்குள். கவியாழி மற்றும் புலவர் 
அய்யா ராமானுஜம் ,சீனு,ஸ்கூல் பையன் ரூபக் ராம் போலி
பன்னிகுட்டி , பாலகணேஷ் என்று நண்பர்கள் தொடர்ந்து வரவே  அந்த இடமே  களை கட்டியது (நான்கு மணி நேரமாக அனாதையானது போன்று  வலுகட்டாயமாக தோன்றிய எண்ணத்தை  அனைவரும் 
சொடக்கு போடும் நேரத்தில் வெளியேற்றினர்) 

தேனம்மை லக்ஷ்மணன், பத்மஜா நாராயணன்,எழுத்தாளர்  உஷா  
ராமச்சந்திரன், கவிஞர் உமா மோகன்,ஆகியோரும் வந்து விடவே  
பதிவர் ராய செல்லப்பா அவர்கள் எழுதிய தாத்தா தோட்டத்து
வெள்ளரிக்காய் சிறுகதை தொகுப்பை புலவர் அய்யா ராமானுஜம் 
அவர்கள் அகநாழிகை அரங்கில் பொன் .வாசுதேவன் முன்னிலையில் அறிமுகப்படுத்தினார் ( வாழ்த்துக்கள் சார்) 




செந்தில் ,மற்றும் சீனு என்ன புக் வாங்கி  இருக்கீங்க என்று  வாங்கி பார்த்து விட்டு ,வேற புக் வாங்கலியா என்று கேட்க இன்னும் பர்சேஸ் முடியவில்லை என்றேன் 

பாலகணேஷ் என்னப்பா இன்னும் சுஜாதா புத்தங்கள் படிக்க வேண்டியது இன்னும் மிச்சம் வச்சிருக்கியா  என்று கேட்டார்  

பேசி முடித்து விட்டு கிளம்பும் தருவாயில் எதாவது சாப்பிடலாம் என்று வெளியில் சென்றோம்.  அந்த எதாவது என்பது  குல்பி சாப்பிடலாம் என்பதாக டிக் செய்யப்பட  அரட்டையுடன் சிரித்து பேசி கொண்டே 
 சாப்பிட்டு விட்டு விடை பெற்றோம் 

நான் மீண்டும் அரங்கிற்குள் நுழைந்தேன். எழுத்தாளர் பாலகுமாரன் அமர்ந்து 
ஆட்டோகிராப் போட்டு கொண்டிருந்தார்.அவரது நாவல்கள் பல படித்திருக்கிறேன். அவர் நாவல்களில் எனக்கு பிடித்த  வரிகளை எனது டைரியில் குறிபெடுத்து வைத்திருக்கிறேன். அவரிடம் போட்டோ எடுத்து கொள்ள ஆர்வம்  இருந்தும் போன் இல்லாததால் நகர்ந்தேன்
 ( நகர மனமின்றி ) 


அங்கிருந்து கிளம்ப மனமில்லை.இருந்தும்,புத்தக காட்சி இன்னும் மூன்று நாட்கள் இருப்பதால் அதற்குள் ஒரு முறை செல்லும் ஆர்வத்துடன் இருக்கிறேன் 


FINAL PUNCH

இந்த பதிவில்  ஒரு விசயத்தை பத்தி எழுதலியே இவன் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். (நினைக்காமலும் இருந்திருக்கலாம் ) அது எனது இளமை எழுதும் கவிதை நீ .... நூல் பற்றியது. அதை  பற்றி இனி நீங்கள் தான் சொல்ல வேண்டும் 

அன்புடன்

ஆர்.வி.சரவணன் 


புதன், ஜனவரி 08, 2014

இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )



இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (படங்கள் )

இணையத்தில் நான் நுழைந்த போது இப்படி ஒரு நாள் வரும் என்று கண்டிப்பாக எதிர்பார்க்கவில்லை ஆனால் இப்படி ஒரு நாளும் வருமோ 
என்று எதிர்பார்த்ததுண்டு. அந்த நாள்  05-01-2014 என் வாழ்நாளின் முக்கிய நாட்களில் ஒன்றாய் தன்னை இணைத்து கொண்டது 

இறை அருளின் துணையால் எனது ஜனனி பதிப்பக வெளியீடான இளமை எழுதும்  கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா டிஸ்கவரி புக் பேலஸில் 05-01-2014 அன்று மாலை மிக சிறப்பாக நடைபெற்றது. முனைவர் திரு .எஸ் சங்கர் அவர்கள் முன்னிலையில்,கவிஞர் திரு. நா.முத்துக்குமார் அவர்கள் விழா தலைமையேற்று நூல் வெளியிட எழுத்தாளர் இயக்குனர் திருமதி.சந்திரா தங்கராஜ் அவர்கள் பெற்று கொண்டார்.நண்பர் எழுத்தாளர் திரு.சுரேகா அவர்கள்  தன் இனிமை குரலால் நிகழ்ச்சியை அழகுற தொகுத்து வழங்கினார். திரு. கரை சேரா அலை அரசன் வரவேற்புரையாற்ற, திரு. புலவர் அய்யா, திரு பால கணேஷ் வாழ்த்துரை வழங்க, சீனு மற்றும் கோவை ஆவி நன்றியுரை வழங்க மற்ற இணைய நண்பர்கள் வருகையும் என் குடும்பம் மற்றும் உறவினர்கள் வருகையும் விழாவை மேலும் மெருகூட்ட வைத்தன என்றால் அது மிகையல்ல.



இளமை எழுதும் கவிதை நீ....
நூல் வெளியீடு 



திரு .புலவர் அய்யா ,திரு.செல்லப்பா,மற்றும் 
திரு.கவியாழி கண்ணதாசன் 


விழா மேடையில் புலவர் அய்யா, எஸ்.சங்கர் ,திரு .நா முத்துக்குமார் ,
திருமதி சந்திரா தங்கராஜ் மற்றும்  திரு.எம் .பாலசுப்ரமணியன் (என் சித்தப்பா )


நா.முத்துக்குமார் அவர்களுக்கு பொன்னாடை 




திருமதி .சந்திரா தங்கராஜ் அவர்களுக்கு என் அம்மா 
பொன்னாடை அணிவித்தார் 



சிறப்பு விருந்தினர்களுடன்
 நான், என் மனைவி,அம்மா 
மற்றும் என் தம்பி  



பாடல் ஆசிரியருடன் இணைய நண்பர்கள் 



நா .முத்துகுமாருடன் என் மகன் ஹர்ஷவர்தன் 


வலைபதிவர் கீதா ரங்கன் மற்றும் பால கணேஷுடன் 



சீனு மற்றும் அரசன் 



சுரேகா,ஸ்கூல் பையன்,ஆரூர்.முனா.செந்தில்,சிவகுமாருடன் 


இணைய நண்பர்கள் உற்சாகம் 



 திரு.கணேஷமூர்த்தி (என் தாய் மாமா) சகோதரர் நவீன் 
மற்றும் சித்தப்பா 


என் தம்பி அரவிந்த் மற்றும் அவர் மனைவி, 
மகள் ஜெயபிரியா 


சிறப்பு விருந்தினர்களுடன்  திரு.கனகராஜ்
(என் தங்கை கணவர் ) 


எஸ்.சங்கர் ,வி.கே.சுந்தர், சந்திரா தங்கராஜ், நா முத்துக்குமார் 

  
இந்த விழாவுக்கு வந்திருந்து, சிறப்பித்து, வாழ்த்தி,இந்த நாளை
 என் வாழ்வில் முக்கியமான நாளாக மாற்றியமைத்த அனைத்து நெஞ்சங்களுக்கும் (செல்போனில் வாழ்த்து  தெரிவித்த நண்பர்களுக்கும்) நான் என்றும் மாறாத அன்புடன் இருக்க கடமைப்பட்டுள்ளேன் 

அன்புடன் 

ஆர்.வி.சரவணன் 

தகவலுக்காக 


நூல் கிடைக்குமிடம் 
டிஸ்கவரி புக் பேலஸ்,கேகே,நகர்,சென்னை 
பக்கங்கள் 192, விலை ரூ 100

புதன், ஜனவரி 01, 2014

இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா (ஒரு பார்வை )




இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா
(ஒரு பார்வை )


வணக்கம் நண்பர்களே, அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

புத்தக கண் காட்சியில் சுற்றி சுற்றி வந்து புத்தகங்களை ஆசையாய் வாங்கி குவிக்கும் எனக்கு, நான் எழுதிய புத்தகமும் இது போல் வெளி வரும் என்று நிச்சயமாக (நான்கு வருடங்களுக்குமுன் நான் குடந்தையூர் தளம் 
தொடங்கிய போது) எதிர்பார்க்கவில்லை.எப்படி நிகழ்ந்தது இது.


கல்லூரி காலத்தில் நான் மனதிற்குள் காட்சிகளாய் ஓட்டி பார்த்த கதையை எழுதி பார்க்க ஆசைப்பட்ட போது எழுதுங்கள் என்று நம்பிக்கை  தந்தார் கரை சேரா அலை அரசன்,( ஒரு அத்தியாயம் வெளியிட்டவுடன் அடுத்தது ஆரம்பித்து விட்டீர்களா என்று  கேட்பார்).எழுதி கொண்டே வந்து  கொஞ்சம் இடைவேளை விட்ட போது எப்ப சார் திரும்ப ஆரம்பிப்பீங்க உங்களின் பெரிய ப்ராஜெக்ட் இது நல்ல படியா முடிச்சுடுங்களேன் என்றார் .(நிஜாம்  பக்கம்) நிஜாமுதீன். தொடர்ந்து  எழுதி கொண்டே வருகையில் நன்றாக சென்று கொண்டிருக்கும் கதையை அதன் இயல்பான போக்கிலே சென்று முடியுங்கள் என்றார் ( கிரி ப்ளாக்) கிரி. 

மற்றும் திடங்கொண்டு போராடு சீனு ,மனசு குமார்,திண்டுக்கல் தனபாலன், தென்றல் சசிகலா, என்று இணைய நண்பர்கள் பலரும்,  அலுவலக நண்பர்களும்  (தேவராஜ் படங்கள் வரைந்தும் , மற்றொரு நண்பர்  
வைத்யா   அடுத்த அத்தியாயம் எப்படி வரும் என்று ஆர்வமுடன் கேட்டும்) எனை உற்சாகபடுத்த எழுதி முடித்தேன்.அடுத்து புத்தகமாக போடலாம் 
என்ற என் ஆர்வத்துக்கு நண்பர்களும் துணை நிற்க தொடங்கியது 
புத்தக வேலை

நான் புத்தகம் வெளியிடுவது பற்றி என் வீட்டில் பேசிய போது இதில் அக்கறை செலுத்த மாட்டார்கள் என்று தான்'நினைத்திருந்தேன். ஆனால் என்னை விட என் குடும்பத்தினரும் உறவினர்களும் ஆர்வம் மிகுந்து இதில் முழு அக்கறை செலுத்தி எனை ஊக்கபடுத்தவே, இதோ புத்தகம் ரெடியாகி ஜனனி பதிப்பகத்தின் வெளியீடாக வருகிறது. 

 எழுத்தாளர் திரு.பட்டுகோட்டை பிரபாகர் அவர்கள் கதையை படித்து விட்டு தந்திருக்கும் மதிப்புரை இந்த புத்தகத்துக்கு மேலும் சிறப்பு சேர்க்கிறது. அந்த மதிப்புரையிலிருந்து சில வரிகள் இங்கு

 "எளிமையான சுலபமான ஒரு கதைக் கருவை எடுத்திருந்தாலும் அதை நெளிவு சுளிவுகளுடன் நேர்த்தியான திருப்பங்களுடன் சுவாரசியமாக கொடுத்திருக்கிறீர்கள்" 

கூடவே சங்கர் மற்றும் அரசன் மதிப்புரைகளுடன் சேர்ந்து வெளியாகும் 
இந்த நாவல் கல்லூரி வாழ்க்கையை பின்னணியாக கொண்டு  
நட்பின் வலிமையையும் உணர்த்தும் காதல் கதை 

இந்த நாவலின் கேரக்டர்கள் பற்றி கதையில் வரும் பயோடேட்டா பாலு கேரக்டர் சொல்வதை  இங்கே  தருகிறேன்

உமா : பெற்றோர் சொன்னால் பெட்ரோமாக்ஸ் வைத்து கூட 
படிக்கும்  மாணவ பேரவை  தலைவி 

சிவா : அன்பிற்காக அகிலத்தையே அற்பணிப்பவன் 

காதலி சொன்னால் காற்றுக்கும்  வேலி போடுவான் இவன் 

அருள் : நட்பிற்காக நஞ்சையும் குடிப்பவன் 


கார்த்திக் :  உடன் பிறந்தவனே உலகம் என்று சுற்றி வருபவன் 


கீதா : கணவனுக்காக கரெண்டிலும் கை வைப்பவள் 


பாலு : அட்டு பிகரையும் அசராமல் பார்ப்பவன் இருப்பினும் 

லட்டு பிகரே லட்சியமாய் கொண்டவன்  

புத்தகம் வெளியிடுவது என்றவுடன் எந்த வி.ஐ.பி யை அழைப்பது 
என்ற  என் தயக்கத்தை தகர்த்து உதவினார் என்னை இணையத்தில் 
எழுத வைத்த எஸ் .சங்கர் (என்வழி.காம்). திரைப்பட பாடலாசிரியர் முனைவர்  திரு நா .முத்துக்குமார் மற்றும் எழுத்தாளர் இயக்குனர் திருமதி . சந்திரா தங்கராஜ் இருவரிடமும்  பேசி ஒப்புதல் 
வாங்கியதோடு  என்னையும் அழைத்து சென்று அறிமுகபடுத்தினார்




தொடர்கதை வரும் போது கருத்துரை தந்த நண்பர்கள்,படம் வரைந்து தந்த தோழிகள் மற்றும் நூலை வடிவமைத்த மின்னல் வரிகள் திரு.பால கணேஷ் (எழுத்தாளர் திரு.பட்டுகோட்டை பிரபாகரிடம் அழைத்து சென்று என்னை  அறிமுகபடுத்தியதற்கு நன்றி சார் ) மற்றும் படங்கள் வரைந்து தந்த ஓவியர் திரு .தமிழ், மேலும் இந்த புத்தகத்தின் விற்பனைக்கு  களம் தந்த டிஸ்கவரி புக் பேலஸ் திரு.வேடியப்பன், மற்றும் ஆனந்தராஜா விஜயராகவன் (கோவை ஆவி ) அனைவரையும் நான் நன்றியுடன் நினைத்து பார்க்கும் நேரமிது

இந்த இனிய விழாவை  தன் இனிமை குரலால் அழகுற  
தொகுத்து தர இசைந்திருக்கிறார் நண்பர் திரு.சுரேகா அவர்கள். 

விற்பனை உரிமை 

DISCOVARY BOOK PALACE PVT LTD
K.K.NAGAR WEST 
CHENNAI -600078

MAIL      : discoverybookpalace@gmail.com
ONLINE : www.discoverybookpalace.com
PHONE     044-65157525


நூல் வெளியீட்டு விழா அழைப்பிதழ் 



நாள் :05-01-2014
நேரம் : மாலை 5 மணி 
இடம் :  டிஸ்கவரி புக் பேலஸ் 


இறைவனின் இறை அருளுடன் நடைபெறும் இந்த இனிய நிகழ்வை 
மேலும் மெருகூட்ட போவது உங்களின் வருகையும் வாழ்த்துக்களும் 
தான்.

FINAL PUNCH 

 புத்தக  வேலை நடைபெற்று கொண்டிருக்கையில் என் மனசாட்சி கேட்ட கேள்வி கொஞ்சம் தடுமாற வைத்தது. புத்தகம் போடற அளவுக்கு பெரிய எழுத்தாளர் ஆகிட்டியா நீ என்பது தான் அது 

ஆசிரியர் வகுப்பறையில் இல்லாத போது மாணவனுக்கு போர்டில் எழுதி பார்க்க ஆசை வந்து எழுதுவதை தானும் ஆசிரியர் ஆகி விட்டேன் என்று எண்ணி கொள்வதாக  அர்த்தம் பண்ணி கொள்ள முடியுமோ 

நான்  ஒரு மாணவன் தான் இப்போதும். (எப்போதும்) 

ஆர்.வி.சரவணன் 


சனி, டிசம்பர் 28, 2013

என் சமையலறையில்....





என் சமையலறையில்....

நம்ம இணைய நண்பர்கள் சுடுதண்ணி வைப்பது எப்படி, அடுப்பு பற்ற வைப்பது எப்படி,அவித்த முட்டை சமைப்பது எப்படின்னு அசத்தறாங்க. நாம சும்மா இருந்தால் எப்படி. அதான் நான் சமைக்கிற அழகை நீங்க தெரிஞ்சிக்க ஒரு பதிவா போட்டிருக்கேன் 

பேச்சிலர் லைப் ல எவ்வளவோ அட்ராசிட்டி இருக்குங்க. அதுல கிச்சன் னு ஒரு டிபார்ட்மெண்ட்  இருக்கு பாருங்க. அங்கே ஒரு மணி நேரம் செலவு பண்ணாதவங்க அன்னைக்கு முழுக்க சாப்பாட்டுக்கு லோல் பட்டே ஆகணும் என்பது விதி . அந்த ஒரு மணி நேர கிச்சன் கலாட்டாக்களை பற்றி தான் நாம இப்ப சமைக்க போறோம் சீ பார்க்க போறோம்.எனக்கு கிடைச்ச 
அனுபவத்துக்கு கிச்சன்க்கு வாய்  இருந்தாலே சிரிச்சிடும். நீங்க சிரிக்க மாட்டீங்களா என்ன ?

நைட் படுக்கிறப்ப, நாளைக்கு என்ன சமைக்கலாம் னு மனசுக்குள்ளேயே கணக்கு போட்டுட்டு படுப்பேன். அந்த ஓபனிங் எல்லாம் நல்லா  தான் இருக்கும்.ஒரு ஸ்பூன் அளவு உதாரணம் சொல்லணும்னா, ஒரு நாள் சுண்டல் செய்யலாம் னு கொண்டக்கடலை முதல் நாள் இரவே ஊற வச்சிட்டு வந்து படுத்தேன். அடுத்த நாள் காலையிலே போய் பார்த்தா ஊறவே இல்லை பாத்திரத்தில் போட்டது போட்ட படியே இருக்கு. எப்படி ஊறும். நான்  தான் தண்ணீர் ஊற்ற மறந்துட்டேனே.

 தண்ணின்னு சொன்னவுடன் தான் ஞாபகம் வருது.ஒரு நாள் கிச்சன் மேடைல இருந்த அரிசி பாத்திரத்தில் தண்ணீர் ஊத்தறதுக்கு பதிலா எரிஞ்சிட்டிருக்கிற அடுப்பில் ஊற்ற போயிட்டேன்.இன்னொரு நாள், நைட் செம பசியோட வந்து சமைக்கலாம் னு எண்ணெய் சட்டியை கழுவிட்டு அவசரத்தில் அப்படியே அடுப்பில் வச்சிட்டேன் தண்ணீர் பட்டு அடுப்பு  அணைஞ்சுடுச்சு. காஸ் ஸ்டவ்வை துடைச்சு எரிய வைக்க முயற்சி பண்ணி பார்க்கிறேன் முடியல.வேற வழியில்லாம பசி என் வயிற்றை கிள்ள, பசியை நான் கிள்ள இப்படியே இரவு கழிஞ்சது 

எனக்கு குக்கர்ல வைக்கிற சாதம் பிடிக்காது. அதனாலே பழைய கால முறைப்படி சாதம் கொதிக்க வச்சி தான் வடிப்பேன்.சாதம் சரியான பதத்திற்கு வந்துருச்சானு  பார்க்கிறதுக்கு ஒரு சோறு பதம் எடுத்து பார்ப்பாங்க இல்லீங்களா. நான் டைரெக்டா வாயில போட்டே பார்த்துட்டேன். நாக்குல சூடு போட்ட மாதிரி ஆகி போச்சு. பாத்திரத்தை எடுத்து வடிக்க போறப்ப நான் ஒரு கத களி ஆட்டமே ஆடிருவேன். பின்னே ரெண்டு கையிலயும் அந்த வடி  தண்ணீர் சூடு பட்டால் டான்ஸ் தானே ஆட முடியும்.  ஒரு நாள் வடிச்ச சாதத்தை சாப்பிடறப்ப சாதம் ரொம்ப கம்மியா  இருந்துச்சு. சரி  இன்னிக்கு ஆண்டவன் நமக்கு இந்த அளவு தான்னு எழுதியிருக்கான் போலிருக்கு னு நினைச்சுகிட்டேன்.அப்புறம் பார்த்தா தான் தெரியுது பாதி சாதம் அந்த வடி தண்ணீர் லேயே விழுந்திருக்குனு. இது சாதத்தோட வரலாறு னா, சாம்பார் கதை இன்னும் டெரரா ல இருக்கும்.

ஒரு நாள், சாம்பார் பொடி டப்பா ஓபன்பண்ணி (ஸ்பூன் இல்லாதலால்) 
 மிளகாய் பொடி லைட்டா தூவினேன். மிளகாய் பொடி வெளில வர ஆசைப்பட்டு, மொத்தமா சாம்பார்ல விழுந்துருச்சு. உடனே கரண்டியை போட்டு (நல்ல வேளை அவசரத்தில கையை போடலை ) முடிஞ்ச வரை எடுத்துட்டு கொதிக்க வச்சி இறக்கினேன். இருந்தும் அன்னிக்கு எனக்கு கிடைச்சது மிளகாய் சாம்பார்

இதை விட மிக பெரிய காமெடி என்னன்னா நான் உப்புமா கிண்டறது தான். ஒண்ணு தண்ணீர் ஜாஸ்தியா போயிடும். இல்ல கம்மியாகிடும். ஒரு நாள் இப்படி தான் எண்ணெய் சட்டி வச்சி நான் வேகமா கிண்டின கிண்டல்ல சட்டி கோபப்பட்டு, என்ன ரொம்ப தான் கிண்டறே நீ, ன்னு   கையோடு  வந்துடுச்சு. அதோடு மல்லுகட்டிட்டு இறக்கி வச்சி சாப்பிடறப்ப என் முக எக்ஸ்ப்ரேசன் எப்படி இருந்திருக்கும் னு நீங்க பார்க்கலியே. அது வசந்த மாளிகை சிவாஜி சார் ரத்தம் கக்குற போஸ் ஒண்ணு இருக்கு பாருங்க. அதுக்கு நிகரா இருந்துச்சு

இப்படி தான் தினம் ஒரு அனுபவத்தை கிச்சன் எனக்கு ப்ரெசென்ட் பண்ணிட்டிருக்கு 


 FINAL PUNCH 

 இந்த பதிவு டைம் பாஸ் 19-10-2013 இதழ்ல " இது பேச்சிலர் சமையல்" என்ற தலைப்புல வெளி வந்தது. நன்றி டைம் பாஸ் 

ஆர்.வி.சரவணன் 

புதன், டிசம்பர் 18, 2013

வெற்றிக்கோட்டில் மோகன்குமார்



வெற்றிக்கோட்டில் மோகன்குமார்

இணைய நண்பர் மோகன்குமார் (என் ஊர்க்காரர்). அவரது வீடு திரும்பல் 
தளம் நான் விரும்பி படிக்கும் தளங்களில் ஒன்று. தினமும் அவர் பதிவு
எழுதிவதை பார்க்க எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.
http://veeduthirumbal.blogspot.com/2013/12/2.html

வலைதளபதிவர்களின் முதல் திருவிழாவில் தான் இருவரும் சந்தித்து பேசினோம். இரண்டாவது  திருவிழாவில் அவர் எழுதிய வெற்றிக்கோடு நூல் (சுய முன்னேற்ற கட்டுரைகள்) வெளியானது. அவருக்கு வாழ்த்து சொன்னேன்.புத்தகம் வாங்கியதும் உடனே படித்தும் விட்டேன்.பதிவு எழுதுவதில் தான் தாமதமாகி விட்டது.

நான் இந்த புத்தகத்தை வாங்கியவுடன் படிப்பதற்காக ரயிலில்  கொண்டு சென்ற போது எங்களுடன் தொடர்ந்து ரயிலில் வரும் முதியவர் ஒருவர் படிப்பதற்கு கேட்டார். கொடுத்தேன். இருந்தும் வார இதழ் என்றால் 
பரவாயில்லை. இது கட்டுரை தொகுப்பு.  45 நிமிடத்தில் அவர் என்ன படித்து விட முடியும் என்ற எண்ணம் எனக்கு. ரயில் சென்று சென்டரல் அடையும் போது அவர் புத்தகத்தை திருப்பி கொடுத்ததோடு மட்டும் இருந்திருந்தால் இங்கே அதை குறிப்பிட வேண்டிய அவசியம் இருந்திருக்காது.  அப்படி அவர் என்ன சொன்னார் இந்த பதிவின் கடைசியில் பார்க்கலாமே

மோகன் குமார் புத்தகத்தை பற்றி பார்க்கலாம் 


ஒரு நல்ல ஐடியா கிடைப்பதே கஷ்டம் அதனை கடைசி வரை கொண்டு செல்ல வேண்டியது அந்த ஐடியா ஓனர்  பொறுப்பு

காலையில் விரைவாக எழும் பறவைக்கு தான் நிறைய இறை கிடைக்கிறது ஒரு முயற்சியை  பிறர் துவங்கும் முன் ஆரம்பித்தவர்கள் முன்னணியில்  இருப்பார்கள்


ஒரு விசயத்தை சரியாக செய்து முடிப்பது தான் நம் வேலை.நமக்கு பிடித்தமான ரிசல்ட் வந்தால் அது  ஒரு போனஸ் என்று எடுத்து கொள்ள வேண்டும்


கோபம் சங்கிலி தொடர் போல் அடுத்தவரையும் தொற்றி சென்று கொண்டே இருக்கும்.ஆனால் யாரேனும் ஒருவர் அதனை அப்படியே விழுங்க தான் வேண்டும்


பிறரின் வெற்றியில் நீங்களும் மகிழுங்கள்.பிறர்  முன்னேற்றத்தில்  நீங்களும் பங்கு பெறுங்கள்.உங்கள் முன்னேற்றம் இயல்பாய் நடக்கும்


எல்லோருக்கும் தர என்ன உண்டு என்னிடம் புன்னகையை தவிர


வாழ்க்கை என்ற நெடுந்தூர பயணத்தில் நமு முன் வரபோவது நம் குடும்பத்தார் மட்டுமே.உங்கள் இலக்கை உங்கள் குடும்பத்தாரும் அறிந்தால் நல்ல இலக்காய் இருக்கும் பட்சத்தில் அதன் சுமையை அவர்களும் சேர்ந்தே சுமக்க உங்கள் பாரமும் வலியும் குறையும்.இலக்கை அடைவது இன்னும் எளிதாகும்


கடவுளாலும் முடியாத ஒன்று உண்டு .

நடந்ததை மாற்ற அவராலும் முடியாது

சும்மா இருக்கும் மனம் சாத்தானின் இருப்பிடம். அதை சும்மா விட்டால் உங்களுக்கு செமையாய் வேலை வைத்து விடும்.அதனை உங்கள் வேலையாள் போல் நினைத்து நல்ல வேலைகள் தந்து கொண்டே இருக்க வேண்டும்


ஒரு வேலையை துவங்கும் வரை தான் தயக்கம்/ பிரச்னை.துவங்கிய பின்

அந்த வேலையே அதற்கு தேவையான வேலையை வாங்கி கொள்ளும்

பாராட்டி வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கையுடன் வளர்கிறது.திட்டி குறை சொல்லி ஒப்பீடு செய்து வளர்க்கப்படும் குழந்தை தாழ்வு மனப்பான்மையை பெறுகிறது


வாழ்க்கையென்ற வழுக்குப்பாறையில் ஏறும் போது கால்களை நன்றாக ஊன்றி, நம்மை கீழே  தள்ள தயாராக உள்ள காரணிகளை புறந்தள்ளி விட்டு   மேலேறுவோம்.


  
நான் இந்த புத்தகத்தை படிக்கும் போது பேனாவால் அடிக்கோடிட்டதில்
சிலவற்றை மட்டுமே  இங்கே குறிப்பிட்டுள்ளேன்.நம்மிடமுள்ள செயல்பாடுகளில் இருக்கும் தவறுகளையும் அதை  களையும் 
விதத்தையும், பின் பற்ற வேண்டிய நல்ல தன்மைகளையும்  அதனால் ஏற்படும் நன்மைகளையும்  இதில் குறிப்பிட்டிருக்கிறார் 
தன் அனுபவங்களுடன் சேர்த்து மிக எளிமையாய் 
  





புத்தகத்தை இன்னும் கவனமெடுத்து சிறப்பாக செய்திருக்கலாம். 
சில வரிகளை நீக்கி கட்டுரையை இன்னும் நச்சென்று அமைத்திருக்கலாம் என்றெல்லாம் குறிப்பிடுவதை விட , 

இப்போது ரயிலில் அந்த முதியவர் என்ன சொன்னார் என்பதை பார்ப்போம்.  "நான் ஒரு அத்தியாயம் படிச்சேன் நல்லாருக்கு அந்த அத்தியாயம் 
எனக்கு பொருந்துகிறது. எனக்கு நடந்தது"  என்றார். நானும் ஆர்வமாய் 
உடனே புத்தகத்தை புரட்டினேன்.  நீ கோபப்பட்டால் நானும் என்ற 
அத்தியாயம் தான் அது.


சுஜாதாவின் மத்யமர் சிறுகதை தொகுப்பு புத்தகத்தில்  மோகன்குமார் 
எழுதிய விமர்சன கருத்து இடம் பெற்றிருக்கிறது.இப்போது தன் எழுத்தில் உருவான புத்தகம் வெளியிடும் அளவுக்கு உயர்ந்து வந்திருக்கிறார். இது 
ஏதோ தற்செயலானது என்று நான் நினைக்கவில்லை.இல்லாமற் போகுமா சரித்திரத்தில் ஒரு சிற்றிடம் எனக்கு என்ற அவரது தளத்தின் கேப்சர் வரிகளின் தன்னம்பிக்கையோடு  அவர் உழைத்திருப்பதையே இது காட்டுகிறது. வாழ்த்துக்கள் மோகன் சார் 

FINAL PUNCH

இந்த பதிவுக்கு நான் தந்திருக்கும் தலைப்பு இரு வேறு 
பொருள்களை தருகிறது.

ஒன்று : வெற்றிக்கோட்டில் (என்ன சொல்லியிருக்கிறார்) மோகன்குமார் 

மற்றொன்று:  வெற்றிக்கோட்டில் (நிற்கிறார்) மோகன்குமார் 



ஆர் வி.சரவணன்



வியாழன், டிசம்பர் 12, 2013

புண்ணிய ஸ்தலங்களை நோக்கி ஒரு பயணம்-4




புண்ணிய ஸ்தலங்களை நோக்கி ஒரு பயணம்-4
(மும்பை)

கார் ஏன் நிற்கிறது என்பதை தெரிந்து கொள்ள நான்  அப்போது தான் தூங்குவதற்கு முயற்சித்து கொண்டிருந்த  ஸ்ரீனிவாசன் சாரை  கேட்டேன்.  டிரைவர் தூக்கம் வருகிறது என்று கூறியதால் வண்டியை ஓரமாக நிறுத்த சொல்லி விட்டு தூங்கி ரெஸ்ட் எடுக்க சொல்லியிருப்பதாக சொன்னார். சாலையோரம் ஒரு டீ ஸ்டால் இருந்தது பல வாகனங்கள் வந்து நின்று இளைப்பாறி சென்று கொண்டிருந்தன. நான் நீங்க தூங்குங்க சார் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்லி விட்டு எழுந்து வெளி வந்து வாக்கிங் போல் கார் அருகிலேயே நிற்பதும் நடப்பதுமாக இருந்தேன் (தூக்க கலக்கத்துடனே) இரண்டு மணி நேரத்திற்கு பின் டிரைவர் கண் விழித்தார் உடனே முகம் கழுவி கொண்டு வண்டி ஸ்டார்ட்  செய்ய ஆரம்பிக்க நான்  சொன்னேன் ."எழுந்து வெளியில் வந்து ஒரு டீ சாப்பிட்டு ரிலாக்ஸ் பண்ணி கொள்ளுங்கள்" என்று. பின் கிளம்பினோம் 

டிரைவர்  மும்பைக்கு புதிது. மேலும் திரும்ப சோலாப்பூர்  செல்லும் போது தன்னால் ஓட்ட முடியாது என்பதால் தன நண்பரை வர சொல்லியிருந்தார் பன்வேல் என்ற இடத்திற்கு நாங்கள் சென்று கொண்டிருந்தோம் நடு நடுவே கண் விழித்து பார்க்கிறேன். முகவரி கேட்டு கொண்டிருக்கிறார்கள் ஒருமுறை கேட்டால் ஓகே ஒவ்வொரு முறை கண் விளிக்கும் போதா  கேட்பார்கள்  ஒரே இடத்திலே நின்று எவ்வவளவு மணி நேரமா அட்ரஸ் கேட்பீர்கள் என்றேன் கிண்டலடித்து. முரளி சொன்னார் 'சார் வர்ற வழியெங்கும் அட்ரஸ்  கேட்டுகிட்டு வரோம் என்றார். பார்த்து அதிகாலை நாலு மணிக்கு இப்படி மும்பைல இருக்கிற எல்லாரையும் அட்ரஸ் கேட்கிறேன் என்று எழுப்பி விட்டிற போறீர்கள் என்றேன் சிரித்த படியே 

பின் டிரைவரின் நண்பரை ஒரு வழியாக பிடித்து நாங்கள் தங்க வேண்டிய இடம் கிளம்பினோம்.  எனக்கு டீ வேண்டும் என்றேன் ஸ்ரீனிவாசன் சொன்னார் சரவணன் வீட்டுக்கு போய் சாப்பிடலாம் என்று. " எதுக்கு சார் அவங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டு" என்றேன். முரளி "இப்ப அவங்களை  எழுப்பறதே டிஸ்டர்ப் பண்ற மாதிரி தான் இலவச இணைப்பா இதுவும் இருக்கட்டும்" என்று சொல்ல வைத்யா சிரித்தார்.  சரி டீ காலையிலே  தான் கிடைக்கும் என்று மனதை  சரிபடுத்தி கொண்டு விட்டேன். நாங்கள் சென்றது ஸ்ரீனிவாசன் அவர்களின் அண்ணன் மகன் வீட்டுக்கு இந்த அதிகாலையில் நம் உறவினர் வீட்டுக்கு சென்றாலே நமக்கு ஒரு அவஸ்தை இருக்கும் இது நண்பரின் உறவினர் வீடு. எங்கள் நிலைமை எப்படி இருந்திருக்கும் என்று நீங்கள் உணர்ந்திருப்பீர்கள்

நாங்கள் சென்று நுழைய (14 வது மாடி ) வரவேற்றார்கள்.சில நிமிடங்களில் 
காபி வந்தது. அந்த வேளையில் (நான்கு மணி) அவர்களின் உபசரிப்பு 
எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது, நாங்கள் தங்கியிருந்த அந்த இரண்டு 
நாட்களிலும் ( சொந்த வீட்டில் இருந்தார் போன்ற எண்ணத்தை தரும் விதம் இருந்த உங்கள் உபசரிப்புக்கு நன்றி என்று கிளம்பும் போது சொன்னேன்)

நான் மும்பை வருவது இது இரண்டாம் முறை முதல் முறை அலுவலக வேலையாக சென்றிருந்தேன் ஆனால் மும்பையின்  பகலை பார்க்கவில்லை இப்போது தான் பார்க்கிறேன் (வான்வெளியில் நானும் என்ற பதிவில் அந்த அனுபவத்தை தந்திருக்கிறேன் )



மும்பையில் காரில் SEA LINK பாலம் வழியே சென்ற போது 


நாங்கள் அன்று காலை காரில் கிளம்பி முதலில் சென்றது கணபதி கோவிலுக்கு. அங்கும் கூட்டம் நிறைய இருந்தது  அங்கும் கேமரா கொண்டு செல்ல அனுமதி இல்லை. உள்ளே நுழையும் போது கடைகாரர்கள் மொய்ந்து கொண்டார்கள். நாங்கள் வற்புறுத்தி அழைத்த ஒரு கடையில் சென்று செருப்புகளை விட்டு அர்ச்சனை தட்டு கேட்டபோது தலை சுற்றியது அதன் விலையால். சரி அர்ச்சனை  வேண்டாம் என்று நாங்கள் முடிவு செய்து அகன்ற போது அவர்கள் பொருள் வாங்கலே என்றால் செருப்பையும் எடுத்து செல்லுங்கள் என்று முகத்தில் அடித்தார் போல் சொல்லி விட மனது கஷ்டமாகி விட்டது காரணம் வருந்தி கூப்பிடவும் வேண்டாம் இப்படி முகத்தில் அடித்தார் போல் சொல்லவும் வேண்டாமே  பின் அதற்கென்று இருந்த இடத்தில விட்டு கோவிலுக்குள் சென்றோம்.சாமி கும்பிட்டு விட்டு வெளி வந்து காரில் ஏறும் போது கோபுரத்தை படம்
எடுத்தேன்




அடுத்து மகாலட்சுமி கோவில் சென்றோம். கடற்கரை பின்னணியில் இருந்த அந்த கோவில் எங்களை மிகவும் கவர்ந்தது. அங்கிருந்து வெளி வந்து வாசலில் புறாக்களை பார்த்தவுடன் அதற்கு தானியம் இட்டோம். அவைகள் உண்ணும் அழகை ரசிக்க தனி மனம் வேண்டும் (இயந்திர வாழ்க்கையில் )

பின் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஹான்கிங் கார்டன் சென்றோம்
அங்கே நாங்கள் குழந்தைகள் போல் என்ஜாய் செய்திருப்பதை படங்களில் பாருங்கள்










அங்கிருந்து அடுத்து சென்றது இந்தியா கேட். படங்களில் பார்த்திருந்த 
அந்த இடத்தை நேரில் கண்டோம். போட்டோ எடுப்பவர்கள் சுற்றி
வந்து  கொண்டிருந்தார்கள் எங்களையும்  விடவில்லை. முரளி மற்றும் வைத்யா எங்க கிட்டே கேமரா இருக்கு எங்க ப்ரெண்ட் எடுப்பார்  என்று 
என் மேல் நம்பிக்கை வைத்தார்கள். அப்படியும் அவர்கள் விடவில்லை 
எனக்கு கோபம் வந்து, எங்க கிட்டே கேமரா இருக்கு எடுத்துக்கிறோம் என்றேன்.( சீப்பு வச்சிருக்கோம் எடுத்தும் சீவுவோம் என்று வடிவேலு சொல்வது போல்)

ஆனால் பாருங்கள் அவர்கள் அப்படியும் அகலவில்லை.மாறாக எட்டி நின்று  எங்களை வேடிக்கை பார்த்தார்கள். நீ எப்படி எடுக்கிறே பார்த்திடறேன் என்று சொல்வது போல் இருந்தது . வைத்யா முரளி இருவரும் இந்தியா கேட் முழுக்க வர வேண்டும் நாங்களும்  க்ளோஸ் அப்பில் இருக்க வேண்டும் என்று சொல்ல நான் முயன்றேன் வரவில்லை. எனக்கே திருப்தி தரவில்லை
வைத்யா முரளியின் ஆர்வம் பார்த்து என்ன செய்வது என்று யோசிக்கையில் சடாரென்று வேடிக்கை பார்த்தவர் உடனே என்டர் ஆனார். இதற்கு முன்பு தாங்கள் எடுத்த படங்களை காண்பித்தார். நன்றக தான் இருந்தது.நான் அவரையே எடுக்க சொல்லி விட்டேன்.உடனே பிரிண்ட் போட்டு கொடுத்தார்.  எப்படி எடுக்க போகிறார் என்ற என் ஆர்வம்,நடுவில் ஒரு ஸ்லைட் மாட்டி எடுத்ததை பார்த்து அகன்று விட்டது.





பின் கடலை கொஞ்ச நேரம் வேடிக்கை பார்த்தோம் சிவாஜி சிலை கீழே அமர்ந்து  படம் எடுத்து கொண்டு கிளம்பினோம்.  கார்  வருவதற்காக 
நாங்கள் ரோட்டில் நின்ற போது வைத்யா முரளி இருவரும் அங்கிருந்த அலங்கார வண்டி குதிரை பார்த்து (கல்யாண ஊர்வல ரதம் ) போட்டோ எடுக்க சொன்னார்கள் நானும் எடுத்தேன். முரளியை வைத்து எடுத்த போது ஒன்றும்  பிரச்னையில்லை. வைத்யா வை நிற்க வைத்து எடுத்த போது 
குதிரை நகர தொடங்கி விட்டது. அப்போது பார்த்து அவர் சட்டை எல்லாம் சரி செய்து கொண்டிருந்தார். சிரித்து  விட்டோம்.  ஒருவாறு படம் எடுத்தேன்.






பின் நாங்கள் கிளம்பி எனது தாய் மாமா வீட்டிற்கு வந்தோம் அவர் முலண்ட் டில் தான் குடும்பத்துடன் இருக்கிறார். அவர் வீடு செல்லும் ஐடியா இல்லை எனக்கு. ஏனெனில் சிரமம் தர வேண்டாம் என்று தான். இருந்தும் மாமா விடவில்லை கண்டிப்பாக வர வேண்டும் என்று கட்டளையிட்டு விடவே அங்கே சென்றோம் மாமா வீட்டில் இரவு டின்னர். அத்தை ஒரு விசேஷத்தில் ஏற்பாடு செய்யும் மெனு போல் ஸ்வீட் முதல் பழம் வரை ஏற்பாடு செய்திருந்தார்கள். சாப்பிட்டு முடித்து கிளம்பினோம்.மாமா பையன் நாங்கள் தங்கியிருக்கும் வீட்டுக்கு காரில் கொண்டு வந்து விட்டு சென்றார்
நண்பர்கள் மூவரும் எங்கள் மாமா வீட்டுக்கு சென்று வந்ததை திருப்தியுடன் குறிப்பிட அதுவே எனக்கு தனி மன நிறைவை தந்தது.





கரும்பு ஜூஸ் குடிக்க காத்திருக்கும் நேரத்தில் 

நாங்கள் அடுத்த நாள் ஜவேரி பசார் மும்பா தேவி கோவில் சென்று 
வணங்கி விட்டு அங்கிருந்து தாதர் மார்க்கெட் வந்தோம்  பர்சேஸ் பண்ண ஆரம்பித்ததில் நேரம் பத்தவில்லை .அன்று முழுக்க டிரெயின் மற்றும் நடை தான். டாக்சி பிடித்து மழையில் ரயில் நிலையம் வந்தோம் இரவு சென்னைக்கு கிளம்பினோம் 

நாங்கள் சோலாப்பூர் ஹோட்டலில் சாப்பிட்டோம் என்று சொன்னேன் தெரியுமா அந்த ஹோட்டலின் பெயர் AJINKYA  முகவரி 131,MURARJI PETH,LUCKY CHOK,SHOLAPUR 

சோலாப்பூரில் இருந்து காரில் இரவு 8 மணிக்கு கிளம்பிய நாங்கள் அடுத்த நாள் 6 மணிக்குள் பண்டரிபுரம்,சனி சிக்னாபூர்,ஷிர்டி,நாசிக்,திரிகம்பெச்வர் கோவில் ஸ்தலங்களை தரிசித்திருக்கிறோம் 

ஒரு கல்யாணம் என்றாலே ஏதேனும் ஒரு மனஸ்தாபம் வரும் போது இதில் இல்லாமல் இருக்குமா. சிறு சிறு சச்சரவு எங்களுக்குள் தோன்றினாலும் அவற்றை அந்த நேரத்திலேயே ஜன்னலில் குப்பை எறிவது போல் எரிந்து விட்டோம் . ஆகவே  எங்கள் நட்பில் எந்த விரிசலும் இல்லை 

கார் டிரைவர் நல்லவர் எந்த முக சுளிப்பும் இல்லாமல் எங்களுடன் ஒரு நண்பர் போலவே பயணித்தார் அவருக்கும் நன்றி 



இப்போது இந்த தொடர் பதிவின் முடிவு பகுதிக்கு வருகிறேன். 15 வருடங்களுக்கு முன் வைத்யா சென்னையில் மயிலாப்பூரில் இருக்கும் சாய்பாபா கோவில் செல்வார்.அவருடன் நானும் செல்வேன்.ஆனால் ஈர்ப்பில்லாமலே தான் சென்று கொண்டிருந்தேன். நான் கடவுள் பக்தி உள்ளவன் தான் இருந்தும் ஏன் ஈர்ப்பில்லை என்று  தெரியவில்லை.
 வைத்யா எங்கு வணங்குகிறாரோ அங்கே வணங்குவேன் அவ்வளவு தான் இப்படி தான் கோவிலுக்கு பல முறை சென்று கொண்டிருந்தேன்.
  
வாழ்க்கை எனை புரட்டி அடிக்க ஆரம்பித்தது. (மனிதரின் வாழ்க்கை எனும் திரைகதையை தான் ஆண்டவன் எவ்வளவு நகம் கடிக்க வைக்கும் டென்சனுடன் படைக்கிறார் என்று தோன்றும்) அடி மேல் அடி விழுந்தது எனக்கு. என் தன்னம்பிக்கையை மட்டும் இழக்காமல் போராடினேன் ஆண்டவன் பேரிலும்  நம்பிக்கை வைத்தேன். கொஞ்சம் கொஞ்சமாக நான் மீண்டு எழ ஆரம்பித்தேன். ஒவ்வொரு கோவிலாக ஏறி இறங்கும் போது தான் ஸ்ரீனிவாசன் சார் சொன்னார் 'சரவணன் நீங்க ஒரு முறை ஷிர்டி போய் வாருங்கள் கண்டிப்பாக பலன் கிடைக்கும் சாய்பாபா ஆசி கிடைக்கும்" என்று. அப்போது தான் எனக்கு உரைத்தது.

ஏற்கனவே எத்தனையோ முறை கோவில் சென்ற போதும் நான் பிடிப்பில்லாமலே போய் வந்ததை நினைத்த போது, இது எனக்கு ஒரு குறையாகவே பட்டது. கண்டிப்பாக ஷிர்டி செல்ல வேண்டும் என்ற முடிவெடுத்தேன் இப்படி தான் இந்த புண்ணிய பயணம் முடிவானது ஷிர்டி மட்டுமில்லாமல் அருகிலிருக்கும் மற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாமே என்று இப்படி ஒரு பயண திட்டம் ஏற்பாடு செய்தோம்.சென்று வந்த பின் என் குறை அகன்றது போல் மனது நிறைவாகி இருக்கிறது 


FINAL PUNCH 

நான் ஷிர்டியில் சாய்பாபாவை தரிசிக்கும் போது அவரது  புன்னகையில் எனக்கு ஒரு செய்தி இருப்பதாக  தோன்றியது 

 நீ என் மேல் ஈர்ப்பில்லாமலே இருந்தாலும் நான் எப்போதும் உன்னுடனும் ஈர்ப்புடன்  இருக்கிறேன் 


ஓம் ஸ்ரீ சாய் ராம் 

ஆர்.வி.சரவணன் 


வெள்ளி, டிசம்பர் 06, 2013

புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-3







புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-3


கார் வந்து நாசிக்கில் நிற்கும் போது மணி இரண்டு. கோதாவரி ஆற்றின் நடுவே பாலம். 
அந்த பாலத்தின் கீழே தண்ணீர் தடுக்கப்பட்டு கொஞ்சம் கொஞ்சமாக வெளி வருகிறது 
எல்லோரும் இறங்கி ஒவ்வொரு மண்டபமாக செல்ல வேண்டும் என்பதால் தான் நடுவில் 
அதை தடுத்தி நிறுத்தி கொஞ்சமாக தண்ணீர் வரும் படி அமைத்திருக்கிறார்கள்.மழை 
பொழிந்து வெள்ளம் போல் வந்த போது அந்த மண்டபங்கள் கூட முழ்கி இருந்ததாக ஸ்ரீனிவாசன் சொன்னார்.ஆற்றின் நடுவே ஏகப்பட்ட மண்டபங்கள் கோவில்கள் நடைபாதை என்று அந்த சூழலே பார்க்க ரம்யமாக இருந்தது சிறு குழந்தைகள் போல் நாங்கள் 
குதுகலமாக இறங்கினோம்.உடனே முதல் வேலையாக காமெராவை எடுத்து படம் பிடிக்க 
தொடங்கினேன்.எத்தனை படங்கள் எடுத்தாலும் அந்த சூழலை முழுமையாக கொண்டு வர முடியாதது போல் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் ஒரு அழகு  இருந்தது.








முரளிக்கு குளிக்கும் ஆர்வம் வந்து ஆற்றில் இறங்க கூடவே வைத்யாவும் நானும் வருகிறேன் என்று இறங்கினார். எனக்கோ டென்சன் ஆனது. காரணம் ஆழம் எப்படி இருக்குமோ என்று அவர்களை ரொம்ப தூரம் போகாதீங்க என்று கத்த ஆரம்பித்தேன். தண்ணீர் இடுப்பளவு தான் என்று தெரிந்த பின் தான் நிம்மதி வந்தது. இந்த டென்சனில் எனக்கு குளிக்கும் மூட் போய் விட்டது.அந்த இடம் முழுக்க சுற்றி சுற்றி வந்தோம்.கூட்டம் நிறைய இருந்தது.நேர்த்தி கடன் செய்து கொண்டிருந்தார்கள்.(ராமர் ஜடாயுவுக்கு  இங்கு தான் நேர்த்தி கடன் செய்ததாக சொன்னார்கள்.  அந்த ஆற்றை சுற்றிலும் தெருக்கள் இருந்தது நிறைய கடைகளுடன்
 பரபரப்பாக இருந்தன தெருக்கள். எங்கு திரும்பினாலும் சுற்றுலா வந்த வாகனங்கள் நிறுத்தி வைக்கபட்டிருந்தன.ஒருமணி நேரத்திற்கும் மேல் சுற்றி விட்டு அங்கிருந்து வெளி வந்து ராமர் சீதை குடில் நோக்கி நடந்தோம்.  

நாங்கள் சென்ற சாலை செல்ல செல்ல மேடாக ஆரம்பித்தது செல்லும் வழியெங்கும் சின்ன சின்ன கோவில்கள் இருக்க கூடவே வீடுகளும் இருந்தன.ஈஸ்வரன் கோவில் ஒன்றும் இருந்தது  நாங்கள் சென்று நுழைந்த தெருவில் கூட்டம் அதிகமிருக்க அந்த குடிலை நெருங்கி விட்டோம் சீதா குகை என்ற போர்டுடன் பழைய காலத்து ஓட்டு வீடு எப்படி இருக்குமோ அது
போல் திண்ணை எல்லாம் இருந்தது.  





சீதை குகை 

போட்டோ எடுக்க கூடாது என்று சொல்லி விட்டதால் உள்ளே போட்டோ எடுக்க முடியவில்லை. அங்கே இருந்த போடோக்கள் விக்ரகங்கள் பார்த்து வணங்கிய படி செல்கையில் ஓரிடத்தில் எலி பொந்து என்று சொல்வோம் இல்லையா அதே போல் ஒரு மனிதர் நுழைய கூடிய அளவில் ஒரு பொந்து இருந்தது. ஒருவர் பின் ஒருவராக குனிந்து உள்ளே நுழைய ஆரம்பித்தார்கள். ஸ்ரீனிவாசன் வைத்யா இருவரும் சரவணா பார்த்து வா இடிச்சிக்க போறே என்று உஷார் படுதியவாறே சென்றார்கள். (ஏன் அப்படி சொன்னார்கள் என்று கேட்கிறீர்களா.நான் கொஞ்சம் எதிலுமே வேகமாக செயல்படுவேன் இடித்து கொள்ள போகிறேன் என்று தான்)  நானும் குனிந்து அந்த பொந்தில் மெதுவாக நுழைந்தேன்.கால்களை முன்னே விட்டு செல்ல ஆரம்பித்தோம். இருட்டை விரட்ட அந்த சுவரின் மேல் பொடி சைசில் சீரியல் லைட் பொறுத்த பட்டிருந்தது.உள்ளே கீழ் நோக்கி இறங்கியஅந்த பொந்து திடீரென்று ஒரு ரூமிற்குள் சென்று முடிந்தது.

 கற்களை குடைந்த ஒரு அறை போல இருந்தது. அங்கே ராமர் சீதை லக்ஷ்மணன் விக்ரகங்கள் இருந்தன. சாமி கும்பிட்டு விட்டு அகல மீண்டும் ஒரு வழி ஆரம்பித்தது.ஆனால் உடனே முடிந்து விட்டது. மற்றொரு சிறு அறை அங்கே ஒரு  ஒரு பெரிய கல் மட்டும் இருந்தது.
 ராமன் லக்ஷ்மணன் காட்டுக்கு வேட்டையாட செல்லும் போது சீதையை அங்கு தான் அமர வைத்து விட்டு செல்வார்களாம். அவர்கள் வரும் வரை அங்கே தான் இருப்பாராம்  நினைக்கவே கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது. அங்கிருந்த படி யோசித்தேன்.இப்போதெல்லாம்  வெளியில் சென்றவர்கள் வர தாமதமாகி விட்டால் போன் வந்து கொண்டே இருக்கும் எங்கே இருக்கீங்க எப்ப வருவீங்க என்று செல் போன் பேசி தெரிந்து கொள்வார்கள். ஆனால் அப்போது இதெல்லாம் இல்லையே. ராமர் எப்போது வருவரோ தெரியாது. அவர் வரும் வரை அவருக்காக அந்த பீடத்திலேயே அமர்ந்து காத்திருந்திருக்கிறார் என்பதை நினைத்த போது கொஞ்சம் கவலையாக கூட இருந்தது.அதாவது அவர் அப்போது அடைந்த வேதனையை நானும் அடைந்தேன். (இதெல்லாம் நம்ப வேண்டுமா என்று கூட சிலர் நினைக்கலாம். நான் கூட வெளியில் இந்த வீட்டை பார்த்து விட்டு சாதாரணமாக தான் நினைத்தேன் ஆனால் 
உள்ளே இருக்கும் இந்த குகை பார்க்கும் போது தான் இது நிஜம் தான் என்று தோன்றியது)
அங்கிருந்து ஒரு வழி இருந்தது அதில் நுழைந்து குனிந்த படியே வெளி வந்தால்  சிவன் லிங்கம் இருந்தது. அதை தான் சீதை ராமர் பூஜிப்பார்களாம்.நாங்களும்  வணங்கி விட்டு கிளம்பி மீண்டும் ஒரு பொந்தில் மேல் நோக்கி பயணித்தோம். வெளியே வந்த போது உள்ளே சென்ற போந்துக்கு அருகிலே வெளி வந்தோம். அந்த பிரமிப்பு ரொம்ப நேரத்துக்கு அகலவில்லை. எதிரில் ஒரு குடில் இருந்தது அதில் ஒரு ரூபாய் வாங்கி கொண்டு உள்ளே அனுமதித்தார்கள் அனேகமாக அது லக்ஷ்மணனின் குடிலாக இருக்க வேண்டும். உள்ளே ஓவியமாகவும் பொம்மைகளாகவும் ராமாயண காட்சிகள் இருந்தன. போட்டோ எடுத்து  கொண்டோம் 


வெளி வந்து சீதை குகையை ஒட்டி இருந்த மரத்தின் மேடையில் அமர்ந்து போட்டோ எடுத்து கொண்டோம். மக்கள் சென்று கொண்டும் வந்து கொண்டும்இருந்ததால்  
எத்தனை பேரை நிறுத்தி வைத்து விட்டு  போட்டோ எடுப்பது எனவே மக்கள் சென்று கொண்டிருக்கையிலேயே போட்டோ எடுத்தோம் 




அங்கிருந்து கிளம்பி காருக்கு வந்தோம் மதியம் ஒன்றும் சாப்பிடவில்லை. முரளி ஸ்ரீனிவாசனை மதிய சாப்பாடு கூட வாங்கி குடுக்கல என்ன டூர் அழைச்சிட்டு
போறீங்க என்று கிண்டலடித்தார். எங்களுக்கு சாப்பிடும் மூட் இல்லை. கையில் 
இருந்த பழங்கள் ஸ்நாக்ஸ் சாப்பிட்ட படி கார் ஏறி கிளம்பினோம் 


அடுத்து நாங்கள் கிளம்பியது. திரிகம்பெஸ்வரர் ஆலயத்திற்கு.அது நாசிக்கிலிருந்து முப்பது கிலோ மீட்டார் தொலைவில் இருந்தது நான் 
கூட அந்த கோவிலை சாதாரணமாக தான் நினைத்திருந்தேன். ஆனால் மலைகள் சூழ்ந்த பின்னணியில் இருந்த அந்த கோவிலையும் கோவிலின் வேலைபடுகளையும் பார்த்தவுடன் அதிசயித்தோம். அங்கிருந்து கிளம்ப மனமே வரவில்லை என்றால் பார்த்து கொள்ளுங்கள்.



இணையத்தில் எடுத்த படம் 

நாங்கள் சென்று இறங்கி ஐந்து மணிக்கு வரிசையில் நின்றோம்.  சாமி தரிசனம் செய்ய ஒரு மணி நேரமானது. அந்தளவு கூட்டம் முதலில் கோவில் கோபுரத்திற்கு முன் உள்ள சிறு கோபுரத்தில் நுழைந்தோம்.அங்கே நந்தி சிலை இருந்தது. அதை சுற்றி ஒரே பண மழை தான் பக்தர்கள் பணத்தை அதில் செலுத்தி கொண்டிருந்தார்கள்.அங்கிருந்து பெரிய கோபுரத்திற்கு வந்தோம்.சன்னதியில்  அக் வடிவத்தில் மூன்று லிங்கங்கள் இருக்கிறது.(சிவன் விஷ்ணு பிரம்மா) மூவரும் சேர்ந்த நிலை என்பதால் திரிகம்பெஸ்வரர் என்று பெயர். அதன் மேல் கோதாவரி ஆற்று நீர் ஊற்று போல் வெளிப்படுகிறது. அதை துடைத்து கொண்டே இருக்கிறார்கள்.அருகே நின்று பார்க்க முடியாமல் வரிசையை நகர சொல்லி  கொண்டே இருந்தார்கள்.தரிசனம் முடிந்து கோபுரம் சுற்றி வந்தோம். அந்த மாலை வேளையில் அந்த கோவில் கோபுரம் பார்க்க ரொம்ப நன்றாக இருந்தது.(அடுத்த முறை நாசிக் சென்றால் கண்டிப்பாக இந்த கோவில் செல்லாமல் வர மாட்டேன் அந்த அளவுக்கு இந்த கோவில் 
என்னை ஈர்த்து விட்டது)







 அங்கிருந்து கிளம்பி நாசிக் வந்து சேர்ந்தோம். ஹோட்டல் லில் டிபன் சாப்பிட்டு விட்டு
நாங்கள் கார் பயணத்தை முடித்து மும்பை கிளம்ப முடிவு செய்தோம் தொடர்ந்து காரிலே வந்ததால் மும்பைக்கு பஸ் என்ற போது கொஞ்சம் சலிப்பாக இருந்தது. தனியார் பேருந்தில் விசாரித்த போது மும்பையிலிருந்து அவர்களது கார் வந்து விட்டு மும்பை காலியாக செல்வதாகவும் அதில் செல்லுங்கள் 2500 ரூபாய் தான் என்றும் சொன்னார்கள். எங்களுடன் வந்த டிரைவர் 2000 கொடுங்க நானே கொண்டாந்து விட்டுடறேன் என்று சொல்ல சரி என்று சந்தோசமாய் காரிலேயே பயணத்தை தொடர்ந்தோம். 

நான் தூங்க ஆரம்பித்து விட்டேன். திடீரென்று கண் விழித்தேன் பார்த்தால் அந்த இருட்டில் 
கார் மும்பை பை பாசில் சாலையோரம் நின்று கொண்டிருந்தது. எல்லோருமே தூங்கி கொண்டிருந்தார்கள் டிரைவர் உட்பட 

அடுத்த பதிவுடன் நிறைவு செய்கிறேன் 

ஆர்.வி.சரவணன்