செவ்வாய், அக்டோபர் 16, 2012

ஸ்வீட் காரம் காபி (16-10-2012)




ஸ்வீட் காரம் காபி 
________________________________
(16-10-2012)




சாட்டை படம் பார்த்தேன்.  நாம் செய்திதாளில் கேள்விப்படும்  அநியாயங்களை ஒருங்கே கொண்ட  ஒரு அரசு பள்ளியை, அங்கு புதிதாக வந்து சேரும் ஒரு நேர்மையான ஆசிரியர் தனது புத்திசாலி தனமான நடவடிக்கைகளால்  சிறந்த பள்ளியாக மாற்றுகிறார்  என்பதை சொல்கிறது கதை.

நேர்மையான இயற்பியல் ஆசிரியராக   இந்த படத்தில் சமுத்திரகனி   
அவரது  கதாபாத்திரமும் அவரது நடிப்பும்   கை குலுக்கி  பாராட்ட தோன்றுகிறது.  ஜூனியர் பாலையா நேர்மையான தலைமை ஆசிரியராக நல்ல குணசித்திர வேடத்திலும் ,தம்பி ராமையா அநியாயங்கள்செய்யும் உதவி தலைமை   ஆசிரியராக வருகிறார்கள்.  தம்பி ராமையா சூப்பர் யா என்று சொல்லுமளவுக்கு வில்லன் நடிப்பில் பாஸ் ஆகிறார் என்றாலும் ஓவர் ஆக்டிங் காரணமாக  கொஞ்சம் பெயிலும் ஆகிறார் .(அதற்காக விளையாட்டு போட்டியை தடுப்பது, கத்தி வைத்து கொண்டு விழாவுக்கு வருவது இதெல்லாம் கொஞ்சம் ஓவர்.)  

பள்ளி என்றால் மாணவர்கள் சேட்டைகள், காதல் இல்லாமலா  மாணவன் மாணவி காதலும் இப் படத்தில் உண்டு . என்று அதுவும் பருவ வயதில் வரும் ஒரு நிகழ்வு தான்  அதை கடந்து தங்களுக்கென்று இருக்கும் பொறுப்பை உணர்ந்து படிக்க வேண்டும் என்பதை அவர்களே உணரும் வண்ணம் தந்திருப்பது நன்றாக இருக்கிறது.  மாணவர்கள் க எழுத்து சேர்த்து பேசும் விதம் நாம் படித்த  காலத்தை முன்னிறுத்துகிறது.  


 படம் ஆரம்பித்து எல்லா கேரக்டர்கள் அறிமுகமான பிறகு அடுத்து என்ன என்ற ஒரு வெற்றிடம் தோன்றுவது போல் இருக்கிறது . சமுத்திரகனி மீது புகார்  வந்த பின் படம் வேகமெடுக்கிறது . திரைகதையில் இன்னும் கொஞ்சமே கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் (அதாவது ஒரே வருடத்திலேயே எல்லாவற்றையும் திருத்தி விடுவதாக காட்டுவது ) படம்  இன்னும் சிறப்பு பெற்றிருக்கும்.

 முதல் படத்தில் இப்படி ஒரு சப்ஜெக்ட்  எடுத்து கொண்ட இயக்குனர் அன்பழகன் பாராட்டப்பட  வேண்டியவர். மாணவர்கள் மாணவிகள்  ஆசிரியர்கள் பெற்றோர்கள்   என்று அனைவருக்குமான   message படத்தில் உண்டு ( பெஸ்ட் ஒன் என்று சொல்கிறோமோ  இல்லையோ   குட் ஒன்  என்று உறுதியாய்   சொல்லலாம் )

------




பாலம் கட்றது உறவுக்கு உதவும்  சுவர் எழுப்புவது பிரிவுக்கு தான்
வழி வகுக்கும் முடிந்தவரை நீங்க  எதிலும் பாலம் கட்ரவனா  இருங்க
அப்படின்னு ஒரு கேள்விக்கு பதிலளிக்கையில் பாக்யாவில் கே.பாக்யராஜ் சொல்லியிருக்கார் . இது அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அவர்களின் பார்வைக்கு இதற்கான விளக்கம் கீழே தந்திருக்கிறேன் (அப்படி சுவர் எழுப்பியிருந்தா கூட அதற்கு மேலே ஒரு பாலம் கட்டிட்டா சுவர் பயனற்றதாகிடும்) 

------


கிரேசி மோகன்   தன் ஹாஸ்யமான வசனங்களால்  நம்மை சிரிக்க 
வைப்பவர் அவர் வசனங்கள், நாடகங்கள் எனக்கு   பிடித்த ஒன்று .
சமீபத்தில் யு டியுபில்  நான்  உலா வந்து   கொண்டிருந்த போது 
கிரேசியை கேளுங்கள் என்ற தலைப்பில்   ஒரு ப்ரோக்ராம் 
இருந்தது .வாசகர்களின் கேள்விகளுக்கு மோகன் தனக்கே உரிய 
நகைச்சுவையுடன் பதிலளித்திருக்கிறார் ஒரு சாம்பிள் இதோ 

இறைவன் நல்லவங்களை தான் அதிகம் சோதிக்கிறான் ஏன் இப்படி ?

கஜானாவை தான் சோதனை போடுவாங்க.  குப்பை தொட்டியை யார் சோதனை போட போறாங்க


கிரேசியை கேளுங்கள் நிகழ்ச்சியை பார்க்க லிங்க்  இங்கே 

------

ஞாயிறு அன்று கும்பகோணத்தில்  எலெக்ட்ரிகல்ஸ் கடைக்கு பல்ப் 
வாங்க  சென்றிருந்தோம் (அந்த பல்பு இல்லே )  அப்போது மின்சாரம் 
இல்லை எனவே பல்ப் செக் செய்து தர வேண்டும் என்பதால் கொடுக்க முடியாது என்று சொல்லி விட்டனர். பரவாயில்லை செக் பண்ணாம 
கொடுங்க என்று கேட்டேன். முடியாதுஎன்று மறுத்து  விட்டார்கள். சரி 
என்று மற்ற வேலைகளை முடித்து கொண்டு பின்பு சென்று பல்ப் வாங்கி  வந்தோம் இதில் என்ன கொடுமை னா  எலெக்ட்ரிகல்ஸ் கடையில் சரியான கூட்டம் இருந்தது (என்னமோ மின்சாரத்தையே விக்கிற மாதிரி)

------

செய்திகள் சில வரிகளில்

கேரளாவை விட தமிழகத்தில் மலையாளிகள் பாதுகாப்பாக உள்ளனர் கேரள முதல்வர்-செய்தி  
(வந்தாரை வாழ வைப்பவர்கள்   நாங்க ) 


காவிரியில் தண்ணீர் விட மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா எதிர்ப்பு - செய்தி 

இரு நாடுகளுக்கு (மாநிலத்துக்கு) இடையே உள்ள உறவை பலபடுத்தும் விதமாய் தான்  ஒரு வெளியுறவு துறை அமைச்சரின் பேச்சும் செயல்பாடும்  இருக்க வேண்டும்


------



போட்டோ கார்னர் 




                         நாடெங்குமே செழிக்க நன்மையெல்லாம் சிறக்க  நடந்தாய் வாழி காவேரி 


ஆர்ப்பரித்து வரும் காவிரியை என் செல் போனில் கிளிக்கினேன் 



ஆர்.வி.சரவணன் 


வெள்ளி, அக்டோபர் 12, 2012

செல்லமாய்....



செல்லமாய்....


என்னவள் 
வருகையில் 
கலைந்த 
என் 
கேசத்தை 
அவசரமாய் 
சரி 
செய்து கொள்கிறேன் 
அவள் 
செல்லமாய் 
கலைக்க 
வேண்டும் 
என்பதற்காகவே 



ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, அக்டோபர் 07, 2012

ஸ்வீட் காரம் காபி ( 08-10-2012)


ஸ்வீட் காரம் காபி
_________________________
08-10-2012


தாண்டவம் படம் பார்த்தேன். படத்தில் விக்ரம் கொலைகள் செய்வதில் கொஞ்சமேனும் நகம் கடிக்க வைக்கும் அளவுக்கு கூட  பரபரப்பு இல்லாதது, மேலும் விசாரணை செய்யும் நாசரும் ஒவ்வொரு கொலைக்கும் சந்தானத்தை அழைத்து கொண்டு வந்து  விசாரிப்பதோடு கடமை முடிந்து விட்டது போல் இருப்பதாக தோன்றுவது,   அடுத்த காட்சிகள் இப்படி தான் நகரும் என்று நம்மை அனுமானிக்க வைப்பது இதெல்லாம் படத்திற்கு மைனஸ்.  விக்ரம், அனுஷ்கா மற்றும் உயிரின் உயிரே பாடலும் அது படமான விதமும் ஒளிப்பதிவும் படத்திற்கு பிளஸ்  (படம் முடிந்து வெளி வரும் போது ஒரு படம் பார்த்த எபெக்ட்டே இல்லை )

------


ஹைக்கூ வின் மூன்று  குணாதிசயங்கள்  நேரடி அனுபவம்,உவமை உருவகம் கூடாது ,மூன்றாவது வரியில் ஒரு திருப்பம் ,கணையாழி யின் கடைசி பக்கங்களில் ஹைக்கூ கவிதை எழுதுவது பற்றி   திரு.சுஜாதா அவர்கள் 

------




காவிரி நீர் பிரச்னைலே வழக்கம் போல் கர்நாடகா பந்த் ஆர்ப்பாட்டம் என்று முரண்டு 
பிடிப்பது பார்க்கிறப்ப ஒரு சின்ன விஷயம் எனக்கு ஞாபாகம் வருது இரு நாட்கள் முன்பு 
நான் ஹோட்டலில் சாப்பிட அமர்ந்தேன் இலையும் போட்டாச்சு கூட்டு பொரியல்,சாம்பார், சாதம்,என்று அனைத்தும் வந்து விட்டது ஆனால் தண்ணீர் கொண்டு வந்து வைப்பவர் வராததால் எதையும் சர்வர்களால் பரிமாற முடியவில்லை அப்போது என் எதிர் இருக்கையில் அமர்ந்து சாப்பிட தொடங்கியவர் இதை கவனித்து அவருக்கு வைத்திருந்த தண்ணீரை என் பக்கம் நகர்த்தி நான் இன்னும் குடிக்கலை நீங்க இலையில் துடைச்சிக்குங்க என்றார் எப்படியும் ஒரு நிமிடத்திலாவது அந்த தண்ணீர் வந்திருக்கும் ஆனால் அது வரை என்னை காத்திருக்க வேண்டாம் என்று அந்த ஒரு டம்ளர் தண்ணீர் தந்த அந்த நல்ல மனிதரின் மனசு ஆர்ப்பாட்டம்  பண்றவங்களுக்கு எப்ப வரும்.(இந்திய நாடு நம் வீடு இந்தியன் என்பது நம் பேரு....இருப்பதை பகிந்து உண்போம்....)

------










பாடல் சிறப்பாக உள்ளது உண்மையில் தொடர்ந்து முயன்றிருந்தால் உச்சம் தொட்டிருப்பீர்கள் வாழ்த்துக்களுடன்

என்று தீதும் நன்றும் பிறர் தர வாரா  ரமணி சார் எனது சினிமா பாடல் பற்றிய பதிவிற்கு கருத்துரை இட்டிருந்தார். அதை பார்த்த பின் அன்று முழுவதும் (மோதிர கையால் குட்டு வாங்கின மாதிரி) ஒரு வித சந்தோச உணர்விலேயே இருந்தேன். அலுவலகத்தில் எல்லோரும், என்ன சந்தோசமா இருக்கீங்க எதாவது குட் நியூஸ் என்று கேட்குமளவுக்கு இருந்தேன் என்றால் பார்த்துக்குங்க.நல்லதா ஒரு நாலு வார்த்தை கேட்கிறப்ப கிடைக்கும் எனெர்ஜி என்னை மிகவும் வியக்க வைத்தது. (அந்த நாள் எனக்கு இனிமையாய் ஆனதற்கு முழு பொறுப்பும் திரு. ரமணி சார் அவர்களை சாரும். ) படம் நன்றி வீடு திரும்பல் மோகன் சார் 

------

நான் சென்னையில் தங்கி இருக்கும் வீட்டில் எலி தொல்லை ஜாஸ்தி. நான் இருக்கும் வரை வராது. நான் அலுவலகம் கிளம்பி சென்றவுடன் அது என் ரூமை அபகரித்து கொண்டு விடும் ஒரு பொருளை கூட விட்டு வைக்காது.  ஒரு நாள் நான் அலுவலகம் கிளம்ப தாமதமாகி விட்டது. கிச்சன்  பக்கம்  சென்ற போது அங்கே அந்த எலி வந்திருந்தது என்னை பார்த்தது 
எனது அடுத்த நடவடிக்கை என்ன என்று பார்த்து அதை வைத்து அங்கிருந்து வெளியேற 
அது  தயாராய் இருந்தது.அப்போது  அது என்னை பார்த்த பார்வை  நானே டயத்துக்கு   வந்திட்டேன் நீ ஏண்டா டயத்துக்கு ஆபீஸ் போகமே இங்கே  சுத்திகிட்டுருக்கே னு கேட்டது போல் இருந்துச்சு (எலி மை  பாச்சிலர் பிரெண்ட் )


-------


பதினான்கு மணி நேரம் மின் வெட்டால் வீட்டில் போட்ட இன்வேர்ட்டர் கூட  மின்சாரம்   கிடைக்காமே திணர்ற நிலைமை வந்தாச்சு   (போற போக்கை பார்த்தா இன்வேர்டர்ட்டர்க்கும்  இன்வெண்டர் வைக்க வேண்டி  வருமோ)


------


போட்டோ கார்னர் 


இது கும்பகோணம் அருகில் உள்ள ஐராவதேஸ்வர் கோவிலில் நான்  எடுத்தது 
இது எண்ணுறு  ஆண்டுகளுக்கு முன் இரண்டாம் ராஜராஜனால் கட்டப்பட்டது 



------


சுந்தர பாண்டியன் படத்தில் தன் இயல்பான நடிப்பால் முத்திரை பதித்த லட்சுமி மேனன் இந்த வார ஸ்வீட் காரம் காபி யில் இடம் பெற்றிருக்கிறார் 




ஆர்.வி.சரவணன் 


வியாழன், அக்டோபர் 04, 2012

ஒரு ஊர்லே ஒரு தேவதை....





ஒரு ஊர்லே ஒரு தேவதை....

ஒரு ஊர்லே ஒரு தேவதை இருந்துச்சாம். மனிதர்கள் நடமாட்டம் இருக்கிற காட்டு பகுதியில் வசிச்ச அது ஒரு நல்ல தேவதை   அங்கே போற வர்ற மனிதர்கள் பேசுறதை உன்னிப்பா கவனிக்கும். அப்படி தான் ஒரு நாள் ஒரு செல்வந்தரும் அவர் கிட்டே வேலை பார்க்கிற  ஒரு வேலையாளும் அந்த பக்கம் வந்தாங்க வேலையாள் பெரிய மூட்டை சுமக்க முடியாம திணறி தூக்கிட்டு வந்தான் கூட வந்த அந்த செல்வந்தர் சீக்கிரம் நட என்று விரட்டி கொண்டே இருந்தார் (வண்டியிலே வச்சு எடுத்துட்டு போனா காசு நிறைய கொடுக்கணுமே னு அவர் தன்னோட வேலையாள் வச்சே இந்த சுமைய தூக்க வச்சிட்டார்)  வேலையாள் முதலாளி கிட்டே "இந்த சம்பளத்திலே என்னாலே குடும்பம் நடத்த முடியலே  இந்த மாசத்திலேருந்து சம்பளம் கொஞ்சம் கூட ஏத்தி கொடுங்க" னு  கேட்டான். அதுக்கு அவர் "நீ பார்க்கிற வேலைக்கு இந்த  சம்பளமே ஜாஸ்தி பணத்துக்கு எல்லாம் ஆசைபடாதே" என்று அதட்டினார். இதை பார்த்த தேவதை அந்த செல்வந்தருக்கு சரியான பாடம் புகட்டனும் னு முடிவு பண்ணிச்சு. 

அடுத்த நாள் அந்த செல்வந்தர் அந்த வழியா தனியா வர்றப்ப அவர் கிட்டே ஒரு சின்ன பையை கொடுத்தது.  பிரிச்சு பார்த்தா அதிலே பொற்காசுகள் நிறைய இருந்துச்சு அவர் சந்தோசமா இதெல்லாம் எனக்கானு கேட்க அதுக்கு தேவதை உனக்கில்லே ,உன் வேலையாள் கஷ்டபடறதாலே  இதை தந்திருக்கேன் கொண்டு போய் உன் வேலையாள் கிட்டே  கொடுத்துடு னு சொல்லுச்சு. இவர் சரி என்று வாங்கிகிட்டவர் தன் வேலையாள் கிட்டே அதை கொடுக்காமே தானே வச்சுகிட்டார். இருந்தும் அவருக்கு  வேலையாளை பார்க்கிறப்ப உறுத்தலா இருந்ததால்  அதிலிருந்து நாலு காசுகள் மட்டும் எடுத்து அவன் கிட்டே கொடுத்து, கஷ்டம்னு சொன்னியே அதனாலே தரேன் வச்சிக்க இன்னும்  நீ நேர்மையா  என் கிட்டே ஒழுங்கா வேலை பார்க்கணும்  னு சொன்னார். காசு வாங்கிய வேலையாளுக்கு சந்தோஷம் தாங்க முடியாமே. முதலாளி என் உழைப்புக்கு நீங்க கொடுத்த கௌரவம் இது நீங்க காலாலே இட்ட வேலையை தலையாலே செய்வேன் என்று சொன்னான். முதலாளிக்கு,  பொற்காசுகள் எல்லாத்தையும் நாமலே எடுத்துகிட்டோம் வேலையாளையும் திருப்திபடுத்தி காலம் முழுக்க நமக்கு விசுவாசமா இருக்க வச்சிட்டோம்னு ரொம்ப சந்தோசமாகிட்டார் 

 அடுத்த நாள் அவர் அந்த பையை ஆசையா திறந்து பார்க்கிறப்ப அதிலே காசுக்கு பதிலா வெறும் கூலாங் கற்கள் தான் இருந்துச்சு அவருக்கு  கோபம் வந்துடுச்சு பையை எடுத்துட்டு நேரா தேவதைய பார்க்க போனாரு அதுகிட்டே நீ கற்களை கொடுத்து ஏன் ஏமாத்தினே னு கேட்டாரு அதுக்கு தேவதை வேலையாள் அல்லவா இதை வந்து கேட்கணும் நீ எதுக்கு வந்தே னு கேட்டுச்சு. அவர் தடுமாறி ஆசைப்பட்டு தானே காசுகளை எடுத்துகிட்டதா சொன்னார் வேலையாளுக்கு சேர வேண்டியதை நீ வச்சிகிட்டதினலே அது கல்லா மாறிடுச்சு னு தேவதை சொல்லுச்சு. அவர் உடனே இதை திரும்ப காசா மாத்தறதுக்கு நான் என்ன பண்ணனும்னு கேட்டாரு . வேலையாள் கிட்டே கொடுத்துடு காசா மாறிடும் னு சொல்லவே சரி கண்டிப்பா கொடுத்துடுறேன் எனக்கும்  கொஞ்சம் காசு கொடேன் னு கேட்டாரு அதுக்கு தேவதை சிரிச்சுகிட்டே வேலையாள் 
கிட்டே கொடுத்து காசா மாறினவுடன்   ரெண்டு பேரும் பாதி பாதி யா எடுத்துக்குங்க னு சொல்லுச்சு அவர் சந்தோசமா வேலையாள் கிட்டே போய் மற்ற எதையும் சொல்லாமே தேவதை நமக்கு  காசு கொடுத்து எடுத்துக்க சொன்னிச்சுன்னு அவன் கையில் கொடுத்தாரு அவன் கைக்கு போனவுடனே அது பொற் காசுகளா மாறிடுச்சு.

 அவன் அதை அவர் கிட்டே திரும்ப கொடுத்து, " தகுதிக்கு மேலே ஆசைபடறதும் அடுத்தவங்க சம்பந்தமே இல்லாமே இலவசமா கொடுக்கறதையும்  வாங்கறது தப்பு  தேவதை கிட்டேயே திருப்பி கொடுதுடுங்க " னு சொன்னான் அவர்,  "முட்டாள் போல் பேசாதே  இதை நீ வாங்கிக்க   நீயும்  ஒரு முதலாளி ஆகிடுவேன்னு சொன்னாரு அவன் நீங்க கொடுக்கிற சம்பளத்திலே நானும் என் குடும்பமும் சந்தோசமா இருக்கோம் இதுக்கு மேல் என்ன சந்தோசம் இருக்குது மேலும்  நீங்க இந்த காசுகளை நீங்களே வச்சிருக்கலாம் ஆனால்  எனக்கும் பாதி கொடுக்கணும்னு நினைச்ச உங்க நல்ல மனசுக்காக  இந்த காசுகள் எல்லாத்தையும் நீங்களே எடுத்துக்குங்க என்றான் செல்வந்தருக்கு சம்மட்டியால் அடிச்சது போல் இருந்தது 

திரும்பவும் தேவதைகிட்டே  போய் அந்த பையை  திருப்பி கொடுத்தார் அவன் சொன்னதை சொன்னார்.தேவதை சிரிச்சுகிட்டே சொன்னுச்சு உன் வேலையாள் எப்படிப்பட்டவன் னு உனக்கு தெரியபடுத்த  தான் நான் இப்படி செஞ்சேன் . நீ போய் ஒரு முதலாளி எப்படி உண்மையா இருக்கணுமோ  அப்படி   நீ அவனுக்கு நடந்து காட்டு னு சொன்னது . 


பதிவுலக நண்பர் நிஜாம் பக்கம் பல் சுவை பக்கம் நிசாமுதீன் என்னை தேவதை பற்றிய தொடர் பதிவு எழுதுமாறு அழைத்திருந்தார் http://nizampakkam.blogspot.in/2012/08/angel4th-year.html அவருக்கு என் நன்றி. நிசாமுதீன் சார் எழுத கொஞ்சம் தாமதமாகி விட்டது மன்னிக்கவும் இதோ எழுதி விட்டேன்.

ஆர்.வி.சரவணன் 

திங்கள், அக்டோபர் 01, 2012

அஹிம்சையின் நாயகன்


அஹிம்சையின் நாயகன் 


 




"அந்நிய நாட்டிடம் இருந்து  
எம்மையும்  நாட்டையும்  
அஹிம்சையின் மூலம் 
போர் தொடுத்து 
எமை மீட்டு 
சுதந்திர காற்றை 
சுவாசிக்க வைத்தீர்கள். 
இதோ 
மீண்டும்   
நம் நாட்டுக்குள் 
உள்ளவர்களாலேயே  
நாங்களும்  நாடும் 
தவிப்புக்குள்ளாகி
இருக்கும் நிலை  
எம்மையும் நாட்டையும் 
காப்பாற்ற 
மீண்டும்
அவதரிப்பீர்களா "   



என் மகன் ஹர்ஷவர்தனிடம்  வரைந்து கொடு என்று சொன்னவுடன் பத்து  நிமிடங்களில்  வரைந்து   கொடுத்த ஓவியம்  



இன்று காந்தியடிகள் 144 வது பிறந்த தினம். நான் கல்லூரியில் படித்து கொண்டிருந்த போது 
வருடம் 1989 நடத்திய கையெழுத்து பத்திரிகையில் காந்தி படத்தை போட்டு மேற் சொன்னவாறு  குறிப்பிட்டிருந்தேன். இந்த வரிகள் இக் காலத்திற்கும் பொருந்துகிறதே 
 என்பதை நினைக்கும் போது ஹே ராம் என்றே சொல்ல தோன்றுகிறது  


ஆர்.வி.சரவணன் 

புதன், செப்டம்பர் 26, 2012

நானும் ஒரு வண்டினமாய்....


இது நான் பிளஸ் டூ படிக்கும் போது எழுதியது(தளம் ஆரம்பித்த புதிதில் வெளியிட்டேன் அப்போது யாரும் படித்திருக்க வாய்ப்பில்லை எனபதால்) இன்னும் சில வார்த்தை கோர்ப்பில் இதோ உங்கள் பார்வைக்கு 







நானும் ஒரு வண்டினமாய்....



பருவச் சோலையிலே
பூக்கள் ஏராளம்


மலரினும் மெல்லிய பெண்ணே
உன் அழகு தாராளம்




தென்றலின் தொடுகையில் 
குயில்கள் இசை பாடுகையில் 
பிரம்மன் எனும் கதிரவன் 
கரம் படுகையில்
மலர்ந்தவளே


உன்னை சூறையாட 
தேன் அருந்திட  
ஆடவர் கூட்டம் 
ஒன்று 
வண்டுகளாய் 
முற்றுகையிட்டது

உனை சுற்றி சுற்றி 
வந்து நாள் பார்த்தது 

அக் கூட்டத்தில் நானும் ஒரு வண்டினமாய் 
இருந்தும் உனை பார்த்த பார்வை கண்ணியமாய் 
உனை அடையும் எண்ணமில்லை 
காக்கும் எண்ணமுண்டு 

ஆகவே 
உன் அருகில் ஆயுதமாய் 
இருந்திட்ட 
முள்ளின் மேல் பட்டு 
எனை வருத்தி கொண்டேன் 

என் உயிரை மாய்த்தேன் 
தீயவர் தம் ஆசையை தகர்த்தேன்

ஆடவ வண்டினம்  என் நிலை கண்டனர் 
தன் நிலை கடந்தனர் 
உனை விட்டு அகன்றனர் 

நீ நினைத்திருப்பாய்
உனை அடைய வந்தவன் தான் நான் என்று


ஆனால் உணர்வாயா
உனை காக்க என் உயிர் போக்கியதை 
கொஞ்சம் அறிவாயா 


ஆர்.வி.சரவணன் 


புதன், செப்டம்பர் 19, 2012

சுந்தர பாண்டியன்


சுந்தர பாண்டியன்

சசிகுமாரை ஒரு இயக்குனராக எனக்கு சுப்ரமணியபுரம் படத்தில் பிடிக்கும். ஒரு
தயாரிப்பாளராக பசங்க படத்தில் பிடிக்கும். ஒரு நடிகராக நாடோடிகள் படத்திலிருந்து பிடிக்கும்.ஆகவே சசிகுமாரின் சுந்தர பாண்டியன் என் எதிர்பார்ப்பில் இருந்த படங்களில் ஒன்று. இது வெளியானவுடன் நான் திரும்பும் பக்கமெல்லாம் படத்தை பற்றி நல்ல ரிப்போர்ட் வரவே
( எப்படியும் புது படம் பார்க்க ஒரு வாரம் எடுத்து கொள்ளும் நான்) , எடுரா டிக்கெட்டை போடா படத்துக்கு என்று ஆர்வத்துடன் தியேட்டர் சென்று விட்டேன் (ஞாயிறு அன்றே பார்த்து விட்ட நான் கொஞ்சம் வேலை பளுவால் பதிவெழுத தாமதமாகி விட்டது )

ஒரு பெண்ணை நண்பர்கள் குழுவே ஆசைப்படஆரம்பிக்க , அதில் ஹீரோவுக்கு மட்டும்
ஹாட்ரிக் அடிக்கிறது விடுவார்களா மற்ற நண்பர்கள் அவர்களின் விரோதத்தை சம்பாதிக்கும் ஹீரோ அவர்களின் துரோகத்தில் சிக்கி கொண்டவர், அதை எப்படி சமாளித்து காதலில் ஜெயிக்கிறார் என்பதே கதை. இதை அறிமுக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் தன் திரைக்கதையால் வெற்றிகரமாக படத்தின் ஆரம்பம் முதல் இறுதி வரை நம்மை ரசிக்க வைத்திருக்கிறார்

இளையராஜா பட பாடலுடன் அறிமுகமாகும் பேருந்தில் சசிகுமார் அன் கோ (நண்பர்கள்) ஏறியவுடன் டாப் கியரில் வேகமெடுக்கும் திரைக்கதை இடைவேளை வரை கலகலப்பாகவும் இடைவேளைக்கு பின் கொஞ்சம் பரபரப்பாகவும் பயணித்து கிளைமாக்ஸ் சில் ஆக்சன் பிளஸ் ரத்த கலரியுடன் முடிவுக்கு வருகிறது

சசிகுமார்
வயதானவர்களுடன் குத்தாட்டம் ஆடுகிறார் கருத்து பாடல் பாடுகிறார் அனல் பறக்க சண்டை போடுகிறார் கண் அடித்து பெண்களை கிண்டல் செய்கிறார் காதலியுடன் ரொமாண்டிக் காதலும் செய்கிறார் இவை அனைத்தையும் நம்மை ரசிக்கும் படி வைத்திருப்பதில் இயக்குனரின் சாமர்த்தியமும் சசிகுமார் மேல் நமக்கிருக்கும் ஒரு ஆர்வமும் புலப்படுகிறது . இந்த படத்தில் அவர் நடிப்பும் உருவமும் இன்னும் மெருகேறியிருக்கிறது ஒரே தோற்றம் ஒரே கேரக்டர் என்றில்லாமல் இன்னும் வெரைட்டி யான ரோல்களை அவர் தேர்ந்தெடுக்கலாம் )

லட்சுமி மேனன் இவர் திரையில் அறிமுகமாகும் போதே கை தட்டல் வருகிறது.தியேட்டரில் இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் அவர் எப்படி இம்ப்ரெஸ் செய்துள்ளார் என்பதை
அவர் பேசாதிருக்கும் நேரங்களில் அவர் கண்களே பேசுகின்றன. ஏற்ற இறக்க முக பாவங்களுடன் தன் காதலை சசிகுமரிடம் சொல்லும் இடம் ஒரு சான்று. பேருந்தில் அவரை சுற்றி தான் கதையும் கதாபத்திரங்களும் என்றாலும் தான் பேசாமலேயே கண்களால் முக பாவங்களால் அனைத்தையும் உள் வாங்கி அவர் வெளிபடுத்தும் உணர்வுகள் நன்றாக இருக்கிறது (இவர் நடிக்க போகும் அடுத்த படங்கள் என்னென்ன என்று ஆர்வமாய் விசாரிக்க வைக்கும் அளவு நமை ஈர்த்து விடுகிறார்)

சூரி இவர் பேசுற ஒவ்வொரு வசனமும் தியேட்டரில் ஒரே சிரிப்பலை தான்.அது எப்படிபட்டது என்றால் கடலில் ஒரு அலை கரையில் வந்து மோதி திரும்பும் முன் அடுத்த அலை வந்து மோதுமே அது போல் இவரின் ஒரு டைலாக் சிரிப்பலையை உண்டு பண்ணி அது முடிவதற்குள் அடுத்த சிரிப்பலை உதயமாகிறது. இருந்தும் கொஞ்சம் அதிகமாகியிருந்தால் அது ரசிக்க விடாமல் செய்திருக்கும் என்பதை உணர்ந்து நறுக்கு தெறித்தார் போன்று இயக்குனர் கரெக்டாக அமைத்திருக்கிறார் (சூரி நீங்க நல்லா வருவீங்க )



சசிகுமாரின் அப்பாவாக வரும் நரேன் கேரக்டர் கன கச்சிதம். அதிரடியான இடங்களில் கூட அவர் அமைதியாய் அளவை பேசும் பாங்கும் அவருக்கான வசனங்களும் அருமையாய் அமைந்திருக்கிறது உதாரணம் தன் பையனுக்கு பெண் கேட்டு வரும் அவர் தென்னவனிடம் பேசி விட்டு மருமகளே தண்ணி கொண்டு வாம்மா என்று சொல்லி வாங்கி குடித்து விட்டு செல்லும் இடம் ரொம்ப அருமையான சீன (அப்பானா இப்படிலே இருக்கணும்)

அப்புக்குட்டி கதையில் முக்கிய திருப்பமாகவும் வில்லனாகவும் வருகிறார். கண்ணாடி மாடி கொண்டு அவர் ரொமாண்டிக் லுக் விடுவதும், நீங்க ஒரு ஓரமா லவ் பண்ணிக்குங்க நான் ஒரு ஓரமா லவ் பண்ணிக்குறேன் என்று பவ்யமாய் சொல்வதும், ஹீரோயினிடம் சிகப்பு தோலா இருந்தா தான் பிடிக்குமா உனக்கு என்று கோபத்தில் எகிறுவதும் என்று மிக இயல்பாய் செய்திருக்கிறார்


பேருந்து காட்சிகள், சிறையிலிருந்து வீட்டில் என்ன சொல்வார்களோ என்ற தவிப்புடன் வரும் சசிகுமாரை அவர் அப்பாவும் குடும்பத்தினரும் வரவேற்கும் விதம், காதலை சொல்ல செல்லும் நண்பனை லட்சுமி தோழி வறுத்தெடுப்பது அனுப்புவது ,சசிகுமாரின் முறை பெண்ணுடன் அவர் செய்யும் வம்பு காட்சிகள் ரசிக்க வைக்கின்றன

மகளின் காதலை பொறுக்க முடியாமல் பொங்குவதும் பின் குழம்புவதும் பின் சம்மதம் தெரிவித்தவுடன் ஓடி வந்து அணைத்து கொண்டு அழும் மகளை நெகிழ்ச்சியுடன் அரவணைப்பது என்று தென்னவனும்,நண்பர்களில் இனிகோ பிரபாகரன் விஜய் சேதுபதி யும் தங்கள் பங்குக்கு சிறப்பு சேர்க்கிறார்கள்.

இடைவேளை வரை ஒரு ஹீரோ வீட்டுக்கு கூடவா போகாமல் இருப்பார் ஏனெனில் இடைவேளை வரை ஹீரோ வீட்டில் இருப்பது போல் ஒரு சீன கூட கிடையாது. மேலும் காதல் குறும்பு என்று வருட ஆரம்பிக்கும் கதை பின் நண்பர்களின் துரோகம் பழிவாங்கல் ரத்த கலரி என்று கொஞ்சம் திசை திரும்பி சென்று விடுகிறது மேலும் ஹீரோ கத்தி குத்து எல்லாம் பட்டும் கூட வசனம் பேசி எதிரிகளை வீழ்த்துவது என்ற ஹீரோயிசம், சுப்ரமணியபுரம் துங்கா நகரம் பட காட்சிகளை நினைவுபடுத்தும் படத்தின் கிளைமாக்ஸ் பகுதி என்று மைனஸ் பாயிண்ட்ஸ் களும் படத்தில்
உண்டு.

இசை படத்துக்கு அப்படி ஒன்றும் பயன் சேர்க்கவில்லை இருந்தும் வசனங்கள் பல காட்சிகளை தாங்கி நிற்கின்றன என்பதை மறுக்க முடியாது.பேருந்து காட்சிகளிலும், சின்ன சந்துகளிலும் அந்த கிளைமாக்ஸ் முள் காட்டிலும் கூட நாம் அங்கேயே இருந்து வேடிக்கை பார்ப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறார் ஒளிபதிவாளர் பிரேம்குமார்

சுந்தர பாண்டியன் சசிகுமாருக்கு இன்னும் பலம் சேர்த்திருக்கிறான்

ஆர்.வி.சரவணன்


வியாழன், செப்டம்பர் 13, 2012

சினிமாவுக்கு பாட்டு எழுதினேன்....


சினிமாவுக்கு பாட்டு எழுதினேன்....

பல்லவி

மலரை தேடும் வண்டிங்கே
கண்ணே நீ சென்ற வழியெங்கே
என் ராகம் கேட்டு என் கஷ்டம்
தீர்க்க வாராயோ நீ இங்கே

மலரை....

சரணம் 1

காற்றிலாடும் தீபமாகிறேன்
கரையை தேடும் அலைகளாகிறேன்
ஒளியை தேடும் இருட்டாகிறேன்
வானை தேடும் மேகமாகிறேன்
கார்குழல் நான் மலரை தேடி துடிக்கிறேன்
விழிகள் நான் கண்ணீரிலே குளிக்கிறேன்

மலரை ....

சரணம் 2

காதலில் அகப்பட்ட மனம் ஒன்று
மங்கையிடம் வைத்தது அது அன்று
சோகத்தில் அழுகிறது மனம் இன்று
உன் மணாளனை ஆனால் அதுவே நன்று
நீ வரும் வழியில் என் விழிகளை பதிக்கிறேன்
அவ் வழியெங்கும் என் ஏக்கங்களை விதைக்கிறேன்

மலரை ....

நான் கல்லூரி படிக்கும் காலத்தில் எழுதி தான் பார்ப்போமே என்று மெட்டு எதுவுமில்லாமல்
கிறுக்கிய பாட்டு இது தளத்தில் வெளியிடுங்கள் என்று சொன்ன நண்பர் கரைசேரா அலை அரசன் டி.ஆர். பாதிப்பு தெரியுதே சார் என்றார். உண்மை தான் அப்போது டி.ஆர் பாடல்கள் பட்டையை கிளப்பி கொண்டிருந்த நேரம் அது


ஆர்.வி.சரவணன்

ஞாயிறு, செப்டம்பர் 09, 2012

ஸ்வீட்....காரம்....காபி(10-9-12)



ஸ்வீட்....காரம்....காபி
________________________________________
10-9-12

சமீபத்தில் இரவு சன் டிவி யில் ஆண் பாவம் . இந்த படம் ஏற்கனவே பார்த்திருந்தாலும் அலுக்காத படம் என்பதால் மீண்டும் பார்த்தேன். இந்த படத்தை பற்றி தனி பகிர்வே கொடுக்கிற அளவுக்கு விஷயம் இருக்கு( அது பின்னாடி பார்க்கலாம்) இப்ப நான் சொல்ல வர்றது அந்த படத்தில்
வரும் ஒரு டயலாக் ரொம்ப பிடிச்சிருந்தது ரேவதி வாய் பேசாமல் போய், மருத்துவமனையில்
இருக்கும் போது பார்ப்பதற்கு வி.கே.ராமசாமி வருவார் (அவரது மகன் பாண்டியனுக்கு ரேவதியை
நிச்சயம் செய்திருப்பார்) அப்ப ரேவதியை பார்த்து ஆறுதல் சொல்வார் "வருத்தபடாதம்மா
எங்க வீட்டு பூஜை அறையிலே எத்தனையோ சாமீ படங்கள் இருக்கு அதெல்லாம் பேசுதா என்ன
அந்த மாதிரி நீயும் ஒரு சாமின்னு நாங்க நினைச்சுக்கிறோம் "(மாற்று திறனாளிகள் கடவுளின் குழந்தைகளாக சொல்லபடுவதுண்டு இந்த டயலாக் ஒரு படி மேலே போய் அவர்களை கடவுள் என்று சொல்வது வாட் எ டயலாக் என்று சொல்ல வைத்தது )

------

கார்டூனிஸ்ட் மதனின் வந்தார்கள் வென்றார்கள், வட இந்தியா வை ஆட்சி செய்த மன்னர்கள் பற்றிய வரலாற்று நிகழ்ச்சிகளை அவர் ப்ரெசென்ட் செய்திருக்கும் விதம் படிக்க வெகு சுவாரசியம் தந்தது நான் தற்போது ஹுமாயுன் ,அக்பர், ஜகாங்கீர் பற்றிய வரலாறு வரை படித்திருக்கிறேன். (அதிலிருந்து ஒரு தகவல் அக்பர் சக்கரவர்த்திக்கு புத்தகங்கள் என்றால் உயிர். அவர் லைப்ரரியில் இருந்த புத்தகங்களின் மொத்த எண்ணிக்கை 24000௦ . பல்வேறு துறைகளை சேர்ந்த அறிஞர்கள் கலை
கவிதை தத்துவம் என்று விவாதிப்பதை கூர்ந்து கேட்டு ஒரு வரி விடாமல் கிரகித்து கொள்ளும் திறமையும் பிரமிப்பூட்டும் அளவு நியாபக சக்தியும் அவருக்கு இருந்தது இதில் ஒரு முக்கியமான தகவல் என்னவென்றால் மாமன்னர் அக்பருக்கு எழுத படிக்க தெரியாது). அவர்களை பற்றிய செய்திகள் நடந்த சம்பவங்கள் அனைத்தும் படிக்கையில் வியப்பும் கூடவே ஐநூறு வருடங்களுக்கு முன்பே சென்று வந்தது போல் ஒரு பீலிங் கும் ஏற்படுகிறது.(வந்தார்கள் வென்றார்கள் மனதில் நின்றார்கள் என்றும் சேர்த்து கொள்ள வேண்டும் )

------

நான் படத்தில் வரும் ஒரு பாடல், மக்காயல மக்காயல..... இளமைக்கு எப்பொழுதும் தயக்கமில்லை இந்த பாடல் இப்ப என்னோட favourite சாங். விஜய் அன்டனி யின் மியூசிக், மற்றும் அந்த டான்ஸ் (கை அசைவுகள்), ஹீரோயின் முக பாவங்கள் காரணமாக இருக்கலாம் . கூட ஆடும் அந்த இன்னொரு ஹீரோ கூட நல்ல பர்பார்மன்ஸ் செய்திருக்கிறார் (விஜய் அண்டனி இந்த பாடலில்
நான் இருக்கிறேன் என்று முத்திரை பதிக்கிறார் )

---------

ஒரு நாள் நான் பஸ் ஏறிய போது நல்ல கூட்டம் நான் நின்ற இடத்திற்கு பக்கத்தில் இருந்த இருக்கை காலியானது. சரி உட்காரலாம் என்று நினைத்து அருகில் செல்ல, அப்போது பக்கத்தில் நின்ற ஒருவர் இருங்க பஸ்லே இப்ப தான் ஏறுனீங்க அதுக்குள்ளே உடனே உட்காரணும்னு ஆசைபடறீங்க என்றவாறு உட்கார்ந்தார். எனக்கு வந்தது பாருங்க கோபம் நான் கேட்டேன் "ஏன் பஸ்லே ஏறினவுடனே உட்கார கூடாது னு எதுனா சட்டம் போட்டிருக்காங்களா என்ன, நீங்க உட்காரணும்னு நினைச்சா என்னாலே முடியலே உட்கார்ந்துக்கிறேன் னு சொல்லிட்டு உட்காருங்க அத விட்டுட்டு எனக்கு நீங்க ரூல்ஸ் போடாதீங்க என்று கடுப்படித்தேன் ( என் ஆக்சன்க்கு அவரிடமிருந்து நோ ரியாக்சன்)

------


செய்திகள் சில வரிகளில்

நீல் ஆம்ஸ்ட்ராங் சென்ற வாரம் காலமானார் - செய்தி
(நிலவில் காலடி வைத்தவர் இப்போது சொர்க்கத்தில் காலடி வைத்திருக்கிறார்)

******

சிவகாசி அருகே வெடி விபத்தில் காயமடைந்தவர்களுக்கு நடிகர் மம்முட்டி ரூபாய் 35 லட்சத்திற்கான மருந்துகளை இலவசமாக வழங்கியிருக்கிறார் - செய்தி
"வேதனையோடு வாழ்க்கையில் போராடுபவர்களுக்கு உதவுவதை போல் மனதுக்கு மகிழ்ச்சி
வேறு எதுவும் கிடையாது" இது நான் சொல்லல மம்முட்டி அவர்கள் இது விசயமாக இப்படி குறிப்பிட்டுள்ளார். நானும் இதை ரீபீட்டுக்கிறேன் (நல்ல மனம் வாழ்க நாடு போற்ற வாழ்க)

------

ஜோக் ஸ்பாட்

"என்ன மந்திரியரே நான் போருக்கு கிளம்பும் நேரத்தில் வெற்றி திலகமிட்டு வழியனுப்ப மகராணி இன்னும் வரவில்லையே"

"மகராணி டிவி சீரியல் பார்த்து கொண்டிருப்பதால் உங்களை வாழ்த்தி எஸ் எம் எஸ் அனுப்பியுள்ளார் பார்க்கவில்லையா நீங்கள்"

------

ஹர்ஷவர்தன் கார்னர்

இந்திய நாடு நம் வீடு

------

நான் சென்ற வாரம் வைரஸ் பீவர் வந்து அவதிப்பட்ட போது , ஹாஸ்பிடல் போய் ட்ரிப்ஸ் போட்டுக்கும் படி ஆகிடுச்சு (விஷயம் அதுல்லே ) அப்ப யோசிச்சதுலே வந்தது தான் இந்த
தலைப்பு (நீங்க உங்க ஊக்கம் என்ற ட்ரிப்ஸ் (கமெண்ட்ஸ்) தொடர்ந்து கொடுத்துட்டு இருங்க. அப்ப தான் இந்த ஸ்வீட் காரம் காபி இன்னும் சிறப்பா வரும் என்பது என் தாழ்மையான கருத்து

ஆர்.வி.சரவணன்

வரும் வாரா வாரம்......


திங்கள், செப்டம்பர் 03, 2012

ஸ்வீட்.... காரம்....காபி

ஸ்வீட்.... காரம்....காபி
__________________________________________
வழங்குவது நான் தான் ஹி....ஹி....


பர்கர் வித் பென் டிரைவர்



பழைய படங்களை ரசித்து பார்க்கும் நான் சமீபத்தில் டிவி யில் பார்த்த படம் குடும்பம் ஒரு கதம்பம் விசு எஸ்.வி.சேகர் சுகாசினி, நடித்த குடும்ப கதை தான் இருந்தும் யதார்த்தமாய் நகைசுவை கலந்து தந்திருக்கும் விதம் படத்தை ரசிக்க வைக்கிறது. இதில் எஸ்.வி.சேகர் சுகாசினியின் வறுமையை மீறி வெளிப்படும் அந்த அன்னியோன்யம் ரொம்ப பிடிச்சிருந்தது. இதில் என்னை கவர்ந்த டைலாக் வறுமையால் தீபாவளி கொண்டாட முடியாத சுகாசினியை பார்த்து கமலா காமேஷ் சொல்வார் "ஆண்டவன் எல்லாரும் தான் தீபாவளி கொண்டாடனும்னு ஆசைப்படறான் இருந்தும் அவன் கண் பார்வையை மீறி சில பேர் கொண்டாட முடியாம போயிடுது" என்பார் பக்குவமாக ( இந்த உலகத்திலே எல்லாரும் நல்லாருக்கனும்னு தான் ஆண்டவன் ஆசைபடறான் இருந்தும் அவன் பார்வையை மீறி நிறைய பேர் கஷ்டப்படும் படியா போயிடுது )

------

சமீபத்தில் படித்த நாவல் நம் சுஜாதா அவர்களின் உள்ளம் துறந்தவன் இதய மற்று அறுவை சிகிச்சை யை மையமாக கொண்ட நாவல் இது. பெயரிலேயே உள்ளம் துறந்தவன் இருப்பதால் கொஞ்சம் சஸ்பென்ஸ் குறையுது ஆனால் அவரது எழுத்துக்களால் சஸ்பென்ஸ் குறையாமல் விறுவிறுப்பாய் இருப்பது சுஜாதா சுஜாதா தான் என்று சொல்ல வைக்கிறது இந்த புத்தகம் நான் இரண்டே மணி நேரங்களில் தொடர்ச்சியாய் படித்து முடித்தேன் (இறப்பை துறந்த மனிதனாக சுஜாதாவை இறைவன் படைத்திருக்கலாம் )

------

சமீபத்தில் புத்தக கடையில் நான் நின்றிருந்த போது இருவர் அங்கு ஏதோ வாங்க வந்தவர்கள் கடையில் தொங்க விட்டிருந்த செய்திதாள் சுவரொட்டியை பார்த்து " ச்சே பேப்பர் லே இருக்கிற நியூஸ் பார்த்துட்டு ஒரு நல்ல காரியத்துக்கு கூட போக முடியாது டா பேப்பரை பாரேன் ஒரே வெட்டு குத்து கொலை துரோகம் திருட்டு இப்படியாவே இருக்கு என்று பேசி கொண்டார்கள் அவர்கள் சொல்வது நியாயம் தான் என்று புரிந்தது. ஏனெனில் அன்றைய பேப்பர் விளம்பரத்தில் எல்லாம் அப்படி தான் இருந்தது. நான் கடையில் புக் வாங்கி கொண்டு தெருவில் நடக்கையில் பார்க்கிறேன் சற்று முன் பேசி கொண்டவர்கள் இப்போது இருட்டில் தங்கள் டூ வீலரை நிறுத்தி விட்டு சரக்கு அடித்து கொண்டிருந்தார்கள் (இதுக்கு தானா அந்த பீலிங்)

-------

சமீபத்தில் ஊரிலிருந்து நெருங்கிய உறவினர் தம்பதி வந்திருந்தார்கள் இரவு ரயிலில் செல்ல முன் பதிவு கிடைக்கவில்லை என்பதால் உடனே இருவரையும் அழைத்து சென்று மன்னார்குடி எக்ஸ்பிரஸ் சில் அமர வைத்து விட்டு நானும் இன்னொரு உறவினரும் ஓபன் டிக்கெட் கவுண்டர் சென்றோம் டிக்கெட் எடுக்க ( டிக்கெட் எடுத்து செல்வதற்குள் சீட் கிடைக்காது என்பதால் இந்த முன்னேற்பாடு ) பத்து மணி வண்டிக்கு டிக்கெட் கவுன்ட்டரில் நாங்கள் வரிசையில் சேரும் போது மணி எட்டு நாற்பத்தைந்து. சரி ஒன்னேகால் மணி நேரம் இருக்கிறதே கிடைத்து விடும் என்ற நம்பிக்கையில் நின்றோம். மூன்று கவுன்ட்டரிலும் வரிசை நிறைய இருந்தது. ஒன்பதரை மணி வரை வரிசை கொஞ்சம் தான் நகர்ந்திருந்தது. இடையில் ஏகப்பட்ட பயணிகள் உள்ளே நுழைந்து விடுவதால் வேறு இன்னும் டிலே ஆனது. ட்ரெயின் டைம் 10.00 மணி. பார்த்தோம் இது சரிபட்டு வராது என்று தீர்மானித்து வெளியில் வந்து ஆட்டோ பிடித்து சிந்தாதிரிபேட்டை ரயில் நிலையம் சென்று டிக்கெட் எடுத்து அதே ஆட்டோவில் திரும்பி, ரயில் கிளம்ப போகிறதே இறங்கி விடலாமா என்று டென்சனாய் உட்கார்ந்திருந்தவர்களிடம் டிக்கெட் டை கொடுத்து அவர்களை ரிலாக்ஸ் செய்தோம். ஒன்றரை மணி நேரத்தில் கிளம்பும் ரயிலுக்கு , எவ்வளவு நேரத்திற்கும் முன்பு தான் வந்து டிக்கெட் வாங்க வரிசையில் நிற்பது சொல்லுங்கள். ( ரயிலுக்கு ஒரு டிக்கெட் 84 ரூபாய். டிக்கெட் வாங்கிட்டு வர ஆட்டோ வுக்கு கொடுத்த பணம் 80 ரூபாய் இது எப்படி இருக்கு)

------

என் பையன் ஹர்ஷவர்தன் எனது செல் போனில் கிளிப் ஆர்ட்டில் வரைந்த ஒரு ஓவியம்
உங்கள் பார்வைக்கு



நாட்காட்டியிலிருந்து

நற்செயல் மேலானது தான் அதனினும் மேலானது நல்லெண்ணம்

ஆர்.வி.சரவணன்

வரும்.... வாரா வாரம்