வெள்ளி, ஜூலை 10, 2015

பயணிகள் கவனிக்கலாம்




பயணிகள் கவனிக்கலாம் 


முகநூலில் நான் அவ்வப்போது எழுதிய பேருந்து பயண அனுபவங்களை தான் இங்கே தொகுத்து தந்திருக்கிறேன். (படிக்காத நண்பர்களுக்காக)

பேருந்தின் படிக்கட்டில் நிற்கும் போது "உள்ளே தான் நிறைய இடம் இருக்கே நகர்ந்து போங்களேன்" என்று சத்தமிடுபவர், உள்ளே வந்த பிறகு "இங்க எங்க இருக்குது இடம்"என்ற முணுமுணுப்புடன் இன்னும் தாராளமாய் நின்று கொள்கிறார்.

------

கும்பகோணத்தில் இருந்து சென்னைக்கு இரவு நேர பயணம்.டிரைவர் சீட்டுக்கு பின்னே தான் இருக்கை.(ULTRA DELUXE).அதாவது கண்ணாடி தடுப்புக்கு பின்னே தொடங்கும் சீட்வரிசையில் முதலாவது இருக்கை. அங்கிருந்து பார்த்தால் டிரைவரின் கண்ணோட்டதில் சாலையை காண முடியும். தூக்கம் வரும் வரை இருட்டான சாலையில் விரையும் பேருந்தையும் சாலையின் இரு மருங்கிலும் கடக்கும் மரங்களையும் அவ்வபோது எதிரே வரும் வாகனங்களுக்கு  டிரைவர் எப்படி வழி விட்டு கடக்கிறார் என்றும் வேடிக்கை பார்த்த படியே வந்தவன் அப்படியே தூங்கி போய் விட்டேன்.தூக்கத்திலிருந்து  ஒரு முறை நான் கண் விழித்த போது, சாலையில் ஒரு பேருந்து மிரட்டும் ஹாரன் ஒலியுடன் எதிரே வந்து கொண்டிருந்தது. இதை எப்படி டிரைவர் கடக்க போகிறார் என்று அறியும் ஆர்வமுடன் நான் நன்றாக நிமிர்ந்து அமர்ந்து கொண்டு பார்க்க முனைப்பாகும் அந்த நொடியில் மீண்டும் உறக்கத்திற்கு சென்று விட்டேன். இரவில் நொடி பொழுதும் தூங்காமல் வண்டியோட்டி செல்லும் ஓட்டுனர்களின் பணி போற்றுதலுக்குரியது.

------

ஈரோடு டு திருப்பூர் அரசு பேருந்தில் பயணம். தனியார் பேருந்து ஒன்று எந்த முன் அறிவிப்பும் இல்லாமலே (T cut road) வளைவில் வேகமாக வர எங்கள் டிரைவர் போட்ட சடன் பிரேக்கால் பயணிகள் அனைவரும் ஒரு கணம் நிலை குலைந்து போய் எதிர்சீட்டில் மோதிக் கொள்ளும் படி ஆகி விட்டது. பிறகென்ன. அதிர்ச்சியை எங்களுக்கு அளித்த திருப்தியுடன் அந்த தனியார் பேருந்து டிரைவர் அலட்டிக் கொள்ளாமலே சாதாரணமாக எங்கள் பேருந்தை கடந்து சென்றார். 
என்னங்கய்யா இப்படி ஓட்டறீங்களேய்யா
------

கோயம்பேட்டில் நான் ஏறிய பேருந்து கிளம்பிய போது மணி 8.15.
மணி 10.15. ஆகியும் இன்னும் பேருந்து கூடுவாஞ்சேரியை கடக்கவில்லை. என்ன டிராபிக்டா இது என்று சலித்து கொள்ள முயன்றவனை, "ஒரு நாளைக்கே இவ்வளவு சலிப்பா? அவரையும் கொஞ்சம் பார்" என்று சொல்லி கொண்டிருக்கிறது மனசு. 
அவர் என்கிற அந்த ஓட்டுனர் பொறுமையுடன் போக்குவரத்து நெரிசலை நிதானமாக கடந்து கொண்டிருக்கிறார்.

------

நேற்றிரவு சென்னை செல்லும் பேருந்தில் டிரைவருக்கு பின்னே எனது சீட். ஓரிடத்தில் டிரைவர் வண்டியை ஓட்டிய படியே தண்ணீர் பாட்டிலை திறக்க முற்படவே பாட்டிலின் மூடி கீழே விழுந்து விட்டது.உடனே நடத்துனர் அவரது உதவிக்கு வந்து தேட ஆரம்பித்தார். டிரைவர் சாலையில் ஒரு கண்ணும் மூடியை தேடுவதில் ஒரு கண்ணுமாய் இருக்க, நான் பதட்டமாய் எழுந்து வந்து " மூடியை நான் கவனிக்கிறேன்.வண்டிய நீங்க கவனிங்க" என்று சொல்லி விட்டு மூடியை கண்டெடுத்து தந்தேன். அவர் மூடியை தேட ஆரம்பிச்சா  பின்னாடி நம்ம பாடியை தேடும் படி ஆகிடும் என்று சொல்லிய 
படி வந்து நான் அமர பக்கத்தில் இருந்தவர்கள் சிரித்து விட்டனர்.

------

டிராபிக்கில் நின்று கொண்டிருந்த பஸ்ல ஏறப் போனவன், நாம போக வேண்டிய இடத்துக்கு தான் இந்த பஸ் போகுதானு கேட்டுட்டே ஏறுவோம்னு பஸ்ல உட்கார்ந்திருந்த ஒருத்தர் கிட்டே கேட்டேன். அவரும் காதுல வச்சிருந்த ஹெட் செட்டை எடுத்துட்டு நான் சொன்னதை கேட்டு பதில் சொல்றதுக்குள்ளே பஸ் கிளம்பிடுச்சு. அந்த வழியாக தான் போகுதுனு அவர் சொன்ன பதில் பஸ் வேகமெடுத்த பினனாடி தான் என் கிட்டே வந்து சேர்ந்துச்சு.

------

டூ வீலர் ல போகும் போது நாம முன்னேற முடியாத படிக்கு ஒரு காரோ லாரியோ ரோட்டை அடைத்த படி செல்வதும், பின்னே வர வண்டிகள் நம்மை பின்னுக்கு தள்ளி முன்னேற துடிப்பதுமான சூழ்நிலையில் (இடைவெளியில்) தான் நாம் பயணிக்க வேண்டியிருக்கு. நம்ம எல்லாரோட வாழ்க்கை பயணம் கூட அப்படி தாங்க.

ஆர்.வி.சரவணன் 

15 கருத்துகள்:

  1. பயணிகள் கவனிக்க வேண்டிய விஷயங்கள் தான். இருசக்கர வாகன பயணத்தை வாழ்க்கையின் ஓட்டத்தோடு ஒப்பிட்டுப் பேசியது, வித்தியாசமான கருத்தாகப் பட்டது.

    பதிலளிநீக்கு
  2. எல்லாமே உங்கள் ரசனையோடு எழுதியிருக்கிறீர்கள்...
    அருமை...

    பதிலளிநீக்கு
  3. அனுபவக் குறிப்புகள் அருமை. ஃபேஸ்புக்கில் படித்ததுதான் என்றாலும் மறுபடியும் ரசனையோடு படித்தேன். இரவு நேரப் பயணங்களை எல்லோரையும் போல எனக்கும் பிடிக்கும்!

    பதிலளிநீக்கு
  4. வாழ்க்கை பயணமும் அவ்வாறே என்பது சரி தான்...

    பதிலளிநீக்கு
  5. சில அங்கேயே படித்திருக்கிறேன். அனைத்தையும் ஒரு சேர இங்கே தந்தமைக்கு நன்றி.

    பயணங்கள் தரும் அனுபவங்கள் அதிகம்......

    பதிலளிநீக்கு
  6. பெரும்பாலானவற்றினைப் படித்துள்ளேன். நல்ல அனுபவப்பகிர்வு.

    பதிலளிநீக்கு
  7. ரசிக்கவைத்தன பேருந்து பயண அனுபவங்கள்!

    பதிலளிநீக்கு
  8. பயணத்தில் தாங்கள் உணரும் அனுபவங்களை, உணர்வுகளை, உணர்ச்சிகளை ஒவ்வோர் அனுபவத்திலும் உணர முடிகிறது!!!

    பதிலளிநீக்கு
  9. அட! செம நல்ல அனுபவங்கள். நிறைய பாடம் கிடைத்திருக்குமே...வாழ்க்கையோடு பின்னிப் பிணைந்தவைதானே அனுபவங்கள்..

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்