புதன், ஜூலை 11, 2018

பாண்டியன்





பாண்டியன் 

தஞ்சாவூர் டு திருச்சிசெல்லும் பேருந்தில் பாண்டியனுக்கு 
கிடைத்திருந்த ஜன்னலோர சீட்டை அபகரிக்க வந்தவராகவே தோன்றினார் அந்த பெரியவர். அவரிடமிருந்து வெளிப்பட்ட புகையிலை மணம், பாண்டியனை முகம் சுளிக்க வைத்தது. பேருந்து கிளம்பிய  சில நிமிடங்களில்  

"தம்பிஜன்னல் பக்கம் நான் உட்கார்ந்துக்கவா"
என்று கேட்டார்.

"எனக்கு முன்னாடி வந்திருந்தா நீங்களே உட்கார்ந்திருக்கலாமே" என்றான்.

ஏதோ ஜோக்கை கேட்டவர் போல் சிரித்து

"நான் புகையிலை போடுவேன். அப்பப்ப எச்சில் துப்ப வேண்டி இருக்கும்" என்று, அவனை தாண்டி எச்சில் துப்பி விட்டு, "உங்களை நகர்த்திட்டு துப்பினா நீங்க சங்கோஜப்படுவீங்க இல்லியா. அதனாலே கேட்டேன்" என்றார்.
அவரது பேச்சில் எரிச்சலாகி,
"இல்லீங்க. எனக்கு ஜன்னல் சீட் தான் வேணும்"  திரும்பி கொண்டவனை அவரது அடுத்த வார்த்தை அவரை நோக்கி திரும்ப வைத்தது.

"ஜன்னலோர சீட்டை விட  மாட்டேன்னு அடம்  பிடிக்கிறீங்களே. வாமிட் எதுனா எடுப்பீங்களோகாவி பற்களால் மீண்டும் சிரிப்பை கொட்டினார்.

அவன் அமைதியாக சொன்னான்.

"இல்லீங்க.  இயற்கையை அசுத்தப்படுத்தாமல் ரசிச்சிட்டு வருவேன்."


ஆர்.வி.சரவணன்

 (ஆகஸ்ட் 2017 குமுதம் வார  இதழில் வெளி வந்த சிறுகதை.)

வெள்ளி, ஜூன் 22, 2018

குங்குமச்சிமிழ்





குங்குமச்சிமிழ் 


ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம்  திரும்பவும் இந்த படம் பார்க்கணும் என்று நினைத்து கொள்வேன். அந்த வேளை சமீபத்தில் வந்தது. டிவியில் இந்தப் படம் போட்டதும் பார்க்க ஆரம்பித்து முடித்து விட்டேன். அந்தப் படம் என்னனு கேட்கறீங்களா ? மோகன், இளவரசி ரேவதி நடித்த ஆர்.சுந்தர்ராஜனின் குங்குமச்சிமிழ்.

வறுமையில் வேலை தேடி கஷ்டப்படும் காதலர்கள் மோகன் இளவரசி. ஆறு மாதம் கழித்து சத்திக்கலாம் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டு வேதனையுடன் பிரிகிறார்கள். பிரிந்த அடுத்த நாளே இருவர் வாழ்க்கையிலும் வறுமை விடைபெற்று செல்வத்தில் திளைக்கும் வாழ்க்கை கிடைத்து விடுகிறது . இருவருமே எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பிருக்க, மோகனுக்கு வேலை கிடைத்ததே, ரேவதியின் கல்யாணம் நின்று போனதால் தான் என்பது தெரிய வருகிறது. பிராயச்சித்தமாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மோகன் சம்மதிக்க, இது தெரியாமல் இளவரசி அந்த திருமணத்திற்கு அட்சதைபோட வருகிறார். இதில் யார் தியாகியாகிறார் என்பதே கதை.

காதலர்கள் வேலை தேடி கொண்டே ஒன்றாக தங்கியிருக்கும் வரம்பு மீறாத காட்சிகள், அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள்,( கூட்ஸ் வண்டி, கடற்கரையின் பாழடைத்த இடம்) பாரப்பவர்களை எல்லாம் "என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறியா" என்று கேட்கும் டெல்லி கணேஷ் கேரக்டர். எந்த பொருளானாலும் போட்டுடைக்கும் ரேவதி,
இளையராஜாவின் ஆறு பாடல்கள் (ஒரு பாட்டு ரிப்பீட்) என்று ரசிக்க ஏராளமான விசயங்கள் இதில் இருக்கிறது.
வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி ஒரு காட்சி வருகிறது. வேலை தேடி கொண்டிருக்கும் மோகன், நடுரோட்டில் ஒருவர் ஆக்சிடெண்ட்டில் இறந்து கிடப்பதை பார்ப்பார். அடுத்த நிமிடம் இறந்தவர் பார்த்த வேலையை வாங்கி விட அந்த அலுவலகம் நோக்கி அவசரமாக விரைவார். அவருக்கு முன்பே அந்த வேலை வேறொருவர் வாங்கியருப்பது தெரிய வருகையில் மோகன் வேதனையை இப்படி வெளிப்படுத்துவார். "வேலையில்லா திண்டாட்டம் என்னை விட பாஸ்டா இருக்குது".
இடைவேளைக்கு முன் இளவரசி பின் ரேவதி என்று கதை அமைத்திருந்தாலும். இடைவேளைக்கு பின் இளவரசி கேரக்டரின் நிலை பற்றி இன்னும் காண்பித்திருக்கலாம். சில கேரக்டர்களின் சஸ்பென்ஸ் முன் கூட்டியே நாம் அறிந்து கொள்வதை தடுக்கும் விதமாகவும் திரைக்கதை அமைந்திருக்கலாம்.


நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது. அடிக்கடி நான் முணுமுணுக்கும் பாடல் இது. நண்பர்களுடன் இந்தப்படம் செகண்ட் ஷோ கும்பகோணம் செல்வம் தியேட்டரில் பார்த்துவிட்டு, அடுத்த நாள் இப் படத்தை பற்றி தெரு முனையில் இருந்த ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து படம் பற்றி விவாதித்தது இன்றுவரை நினைவில் இருக்கிறது.
அது ஒரு பொற்காலம்.

ஆர்.வி.சரவணன் 


செவ்வாய், மார்ச் 06, 2018

பயம்





பயம்
அந்த நான்காவது குறுக்கு தெருவில் ரகு நுழைகையில் அங்கே படுத்திருந்த நாய்கள் புதியவன் ஒருவன் வருவதை கவனித்து எழ ஆரம்பித்தன. மற்ற நாய்கள் நீ போய் பாரு என்று சொல்லியிருக்க வேண்டும். அந்த வெள்ளை நாய் மட்டும் குரைத்த படி அவனை நோக்கி ஓடி வர ஆரம்பித்தது. இது கொஞ்சம் ரகுவுக்கு பயத்தை கொடுத்தது. தயக்கத்துடன் நின்று விட்டான்.


சாப்பாட்டுக்கு பிந்தைய மதிய வேளை அது என்பதால் தெருவில் ஒருவருமில்லை. ஏதோ ஒரு வீட்டிலிருந்து பிரியாணி வாசம் வந்து கொண்டிருந்தது. எதிர்வீட்டு பால்கனியில் இவன் கஷ்டத்தை சட்டை செய்யாமல் பனியனுடன் செல் பேசி கொண்டிருந்தான் ஒருவன். வேறு யாரும் வருகிறார்களா என்று நோட்டமிட்ட படியே பின்னோக்கி நகர ஆரம்பித்தான் ரகு.


அந்த நாய் அவனை நோக்கி வள் வள்.... என்ற படி முன்னேறி வந்து கொண்டிருக்க, அதன் பற்கள் மற்றும் வேகத்தை பார்க்கையில் பயம் அதிகரிக்க ஆரம்பித்தது. மற்ற நாய்களும் இப்போது அவனை நோக்கி மெதுவாக வர ஆரம்பித்திருந்தன. "இது ஏதடா முன்னேயும் போக முடியாம பின்னேயும் போக முடியாம....... " என்ற ரகுவின் முணுமுணுப்பு அந்த தெருவில் ஒருவர் நுழைவதை பார்த்தவுடன் பாதியியிலேயே நின்றது. வேட்டியின் நுனியை இரு கைகளாலும் பிடித்தபடி வந்து கொண்டிருந்த அவரை பார்த்த மாத்திரத்தில் அப்பாடா என்ற நிம்மதி பெருமூச்சுடன் "சார்" என்றழைத்த படி அவரோடு சேர்ந்து கொண்டான்.

நிற்காமல் நடந்து கொண்டே "என்னப்பா?" என்றவரிடம், " நாய் குலைக்குது. எப்படி போறதுனு தெரியல" என்றான்.

"அட அது ஒண்ணும் பண்ணாதுப்பா. நீ வா" என்ற பதிலை அவனுக்கும், "ம்" என்ற அதட்டலை நாய்க்கும் கொடுத்த படி நிற்காமலே நடந்து கொண்டிருந்தார். அவரது வேக நடைக்கு அவன் நிறையவே சிரமப்பட வேண்டியிருந்தது.


தெரிந்த ஆள் வந்திருப்பதை பார்த்தவுடன் மற்ற நாய்கள் குரைப்பதை நிறுத்தி கொண்டு நிசப்தமாகி பழைய படி சென்று அமர்ந்து கொண்டு விட்டன. ஆனால் அந்த வெள்ளை நாய் மட்டும் சத்தம் எழுப்பவில்லையே தவிர அவனை தொடர்ந்து கொண்டிருந்தது. இது ரகுவுக்கு மிகுந்த எரிச்சலை ஏற்படுத்தியது அவரிடமிருந்து இன்னொரு அதட்டலை எதிர் பார்த்தான். அவரோ அவன் அவஸ்தையை உணராமலே "நீ வாப்பா " என்ற படி தொடர்ந்து நடந்து கொண்டிருந்தார்.
நாய் எப்போது அவனை கவ்வலாம் என்ற முனைப்பிலேயே தொடர்ந்து கொண்டிருந்தது.பார்த்தான். ஏழெட்டு வீடுகள் தாண்டும் வரை திரும்பி பார்க்காமலே நடந்து கொண்டிருந்தான். தெரு முனை வரை வந்த பின் தைரியம் வர பெற்றவன் திரும்பி நின்று அதட்டினான்.
"த சும்மாருக்க மாட்டே . பின்னாடியே வந்துட்டு"
ஆனால் நாய் அங்கே இல்லை.
அது எப்போதோ சென்று தன் சகாக்களுடன் அமர்ந்து கொண்டு அவன் அதட்டலை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது.

ஆர்.வி.சரவணன்.

வியாழன், பிப்ரவரி 08, 2018

ஒரு கதை சொல்லட்டா.






ஒரு கதை சொல்லட்டா.



கட் அவுட் பிலிம்ஸ் என்ற பெயர் பலகை இருந்த அந்த அலுவலகத்திற்குள் நுழைந்த போது, "நான் கெட் அவுட் சொல்றதுக்கு முன்னாடியே வெளில போயிடு" என்ற வார்த்தைகள் அசரீரியாக ஒலித்தது கண்டு திடுக்கிட்டான் அருண். அந்த அறையில் நடு நாயகமாக பெரிய டேபிள் போட்டு அமர்ந்திருந்த தயாரிப்பாளர் செல் போனில் யாரிடமோ கத்தி கொண்டிருந்தார்.
கட் அவுட் கெட் அவுட் ரைமிங்கை ரசிக்க முடியாத படிக்கு அந்த தயாரிப்பாளர்
"யாருப்பா நீ ?" என்றார் அதட்டலாக. அவரது கம்பெனி பட போஸ்டர்களில் இருந்த அவரது ட்ரேட் மார்க் சிரித்த முகம் இப்போது சிரிப்பை துறந்திருந்தது.

"கதை சொல்ல வந்திருக்கேன் சார். பாலு அனுப்பிச்சு வச்சாரு"

" ஒரு நாளைக்கு எத்தனை பேரை தான் கதை சொல்ல அனுப்பிச்சு வைப்பான் அவன்"
அந்த தயாரிப்பாளரின் பேச்சுக்கு, ஒரு அசட்டு புன்னகையை மட்டும் வெளியிட்டான்.
எனக்கு அங்க எவ்வளவு மரியாதை இருக்கு தெரியுமா என்ற பாலுவின் காலர் தூக்கல் பேச்சு ஏனோ ஞாபகத்துக்கு வந்து தொலைத்தது.

"நீ என்ன பண்றே. போயிட்டு இன்னொரு நாள் வந்து பாரு" வெள்ளை சட்டை வெள்ளை வேட்டி சகிதம் வேட்டி விளம்பரத்திற்கு வருபவரை  போல் இருந்த அந்த தயாரிப்பாளர் சிகரெட்டை ஆஸ்ட்ரேயில் அழுத்தி அணைத்தார்.

இன்னொரு நாள் என்பது எந்த தேதியில் என்பது  புரியாமல் அவரை பார்த்தான்.
அவன் மன ஓட்டத்தை அறிந்து கொண்ட அவர் "அடுத்த வாரம் வாப்பா"  என்றார்.
"சார். இன்னிக்கு வரதுக்கே ஆபீஸ் க்கு அரை நாள் லீவ் போட்டுட்டு வந்திருக்கேன் " தயக்கமாய் சொன்னான்.

"யோவ். இங்க அவனவன் 24 மணி நேரம்  உருண்டு புரண்டும்  வாய்ப்பு கிடைக்க மாட்டேங்குதேன்னு அலைஞ்சிட்டிருக்கான். நீ என்னடான்னா பார்ட் டைம் ஜாப் கணக்கா கதை சொல்ல வந்திருக்கேன்னு சொல்றே"

"சார். அது வீட்டுக்காக .இது என் ஆசைக்காக" வால்யூமை குறைத்த படி சொன்னான்.
"எத்தனை கதை வச்சிருக்கே"

"ரெண்டு மூணு  கதை இருக்கு சார்' தன் பேகை திறந்து பேப்பர்களை வெளியே எடுத்தான்.
"அதெல்லாம் வேண்டாம். ஷார்ட் பிலிம் எதுனா எடுத்திருக்கியா?"

"இல்ல சார்"
முகவாயை தேய்த்து கொண்ட படி யோசிக்க ஆரம்பித்தார்.
இன்னொரு நாள் பார்க்கலாம்னு அனுப்பி வைச்சிடுவாரோ என்ற பதைப்பில்
"கதை மைண்ட்லேயே இருக்கு. சொல்லட்டா சார்" என்றான்.

"முதல்ல நான் சொல்ற ஒன் லைன்க்கு சீன் சொல்லு பார்க்கலாம் "

"சரி சார் " என்ற படி உற்சாகமானான்.

"முதல்ல உட்காரு"
திகில் படம் பார்ப்பது போல் சீட் நுனியில் அமர்ந்தான்.

"அதாவது  நம்ம கதையோட ஹீரோ சினிமா நடிகர். ஒரு மாஸ் ஹீரோ அவர் வர்ற முதல் சீன் எப்படி வைக்கலாம்னு சொல்லு பார்ப்போம்"

"சார் ஒரு நிமிஷம்" என்ற படி அவன் யோசித்தான். அந்த தயாரிப்பாளர் அவனை கவனித்த படியே அடுத்த சிகரெட்டை எடுத்து உதட்டில் வைத்தார். அருண் தொண்டையை செருமி கொண்டு சொல்ல ஆரம்பித்தான்.

"ஓப்பன் பண்ணா ஒரு தியேட்டர் சார். அதுல  நம்ம ஹீரோவோட படம் ரிலீஸ் ஆகியிருக்கு. எங்க பார்த்தாலும் போஸ்டர்கள் கட் அவுட் னு ஒரே கொண்டாட்டமா இருக்கு. கூட்டம் அலை மோதுது.  அப்ப ஒரு கார் வருது காரை விட்டு இறங்கறார் ஹீரோ. அவரை பார்த்தவுடன் கூட்டம் தியேட்டரை விட்டுட்டு அவரை மொய்ச்சுக்குது. அவர் போஸ்டருக்கு, கட்வுட்டுக்கு  போட வச்சிருந்த மாலைகளை எல்லாம் அவருக்கு போட கூட்டம் அலை மோதுது. கட் அவுட் மேல ஊத்தறதுக்கு வச்சிருந்த பால் குடங்களை இப்ப அவர் முன்னாடி கொண்டு வராங்க. கக்கத்துல வச்சிருந்த குழந்தை அழுவறதை கூட கவனிக்காம ஒரு பொண்ணு  கூட்டத்திலே சிக்கினாலும் பரவாயில்லன்னு ஹீரோவை நெருங்கி போயிட்டிருக்கு.
கூட்டத்தை அமைதிபடுத்திய ஹீரோ  "எதுக்கு இதெல்லாம் பண்றீங்க" னு  கேட்கிறார்.

"எங்க உற்சாகமே நீ தான் தலைவா" என்கிறான் ஒரு ரசிகன்.

"இதில் எல்லாம் எனக்கு உடன்பாடும் இல்ல. உற்சாகமும் இல்ல. நீங்க இதெல்லாம் பண்றதால பப்ளிக்  எல்லாம் என்னை தான் திட்டறாங்க" னு ஹீரோ சொல்றார்.

"இந்த பப்ளிக்குக்கு யார் கொண்டாட்டமா இருந்தாலும் பிடிக்காது தலைவா" ஒருத்தன் சொல்லி கொண்டே ஹீரோவுடன் செலஃபி எடுக்கிறான்.

"நோ நோ நம்மை விமர்சனம் பண்றவங்க சொல்றதிலயும் ஒரு நியாயமிருக்கே. எதுக்கு வேஸ்டா பாலை கட்அவுட்டுக்கு ஊத்தணும். அது மண்ணுல விழுந்து யாருக்குமே  பயனில்லாம தானே போகுது" னு ஹீரோ சொல்றாரு.

"இது எங்க ஆசை சந்தோஷம். இதை கண்ட்ரோல் பண்ணாதீங்க தலைவா ப்ளீஸ்"
ஒரு இளைஞன் சொல்கிறான்.

"எத்தனையோ அனாதை இல்லங்கள் இருக்கு. மாலைக்கு போஸ்டருக்கு பண்ற செலவை அங்க செலவு பண்ணலாம். இந்த பாலை கஷ்டப்படற குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.இத பண்ணீங்கன்னா என்னை பிடிக்காதவங்களுக்கு கூட என்னை புடிச்சு போயிடும். அவ்வளவு ஏன் நான் ஒரு வார்த்தை சொன்னா அதை மீறாதவங்க என் ரசிகர்கள்னு பேர் கூட உங்களுக்கு கிடைக்கும். செஞ்சுதான் பாருங்களேன்" ஹீரோ சொல்றாரு.

ரசிகர்கள் ஒருவருக்கொருவர் முகத்தை பார்த்து கொள்கின்றனர். அவர்களுக்குள் பேசி கொள்கிறார்கள். ஒருவன் முன்னே வந்து சொல்கிறான்.

"தலைவா. பாலுக்காக தான் ஒரு குழந்தை அழுகுது அப்படிங்கிற வார்த்தை இனி நியூசா தமிழ்நாட்டிலே வராது. அத நாங்க பார்த்துக்கிறோம் போதுமா "

"குட் இப்ப தான் எனக்கு சந்தோசமே ஆரம்பிக்குது" என்று புன்னகைக்கும் ஹீரோ அவனை நெருங்கி விட்டிருந்த பெண்ணின் கைகளில் அழுது கொண்டிருந்த குழந்தையை வாங்கி கொள்கிறான். அழுது கொண்டிருந்த குழந்தையின் முகத்தில் புன்னகை தவழ்கிறது. இங்க டைட்டிலை ஆரம்பிக்கிறோம். சார்." 
என்று சொல்லி முடித்த அருணை பார்த்த தயாரிப்பாளர் சொன்னார்.

"சரி .சினிமா நடிகன் நல்லவனா இருந்தா இந்த சீன் ஓகே. இதுவே கெட்டவனா இருந்தா?"
"கெட்டவனா இருந்தா...."  என்று யோசிக்க ஆரம்பித்த அருண்  விரல்களை சொடக்கு போட்ட படி சொன்னான்

"சிம்பிள் சார். குழந்தையை வாங்கி கொண்ட  ஹீரோ அது சிரிப்பதை பார்த்து ரசிக்கிறப்ப  டைரக்டர் கட் னு சொல்றாரு. இது வரைக்கும் நடநதது ஷூட்டிங் னு ஆடியன்ஸுக்கு லாங் ஷாட்ல காட்டறோம்.  கேரவன் நோக்கி நடக்கிறார் ஹீரோ. ஷூட்டிங் பார்க்க கூடியிருக்கிற ரசிகர்கள் தலைவானு கத்தறாங்க.

"ரசிகர்கள் உங்களை பார்க்கிறதுக்கு வெயிட் பண்ணிட்டிருக்காங்க. ஷூட்டிங் முடிய லேட்டாகும் போல தெரியுது. நாளைக்கு வர சொல்லிடவா " உதவியாளர் ஹீரோ கிட்டே கேட்கிறார். ஹீரோ அவங்க பாட்டுக்கு  காத்துகிட்டு இருக்கட்டும். அப்படி இருந்தா  தான் நமக்கு மாஸ்" னு சொல்லிகிட்டே குளிரூட்டப்பட்ட கேரவனுக்குள் நுழைகிறார் ஹீரோ.  

வெயில்ல நின்ன படி வாழ்க கோஷம் போட்டுகிட்டு இருக்கிற ரசிகர்களை காட்டறோம்.  அங்க டைட்டில் போட்டு படத்தை ஆரம்பிக்கலாம் சார்." என்று சொல்லி முடித்த அருண் தயாரிப்பாளரை பார்த்தான்.

தயாரிப்பாளர் சொன்னார்.

"உனக்கு ஒரு டீ சொல்லட்டா"

ஆர்.வி.சரவணன்

தகவல் பலகை பிப்ரவரி மாத இணைய இதழில் இந்த சிறுகதை வெளியாகியிருக்கிறது.
வெளியிட்ட தகவல் பலகை ஆசிரியர் குழுவிற்கு நன்றி. உங்கள் சிறுகதை ஒன்று வேண்டும் கொடுங்கள் என்று கேட்டு வாங்கி அனுப்பி வைத்த  நண்பர் அரசனுக்கு நன்றியும் அன்பும்.

திங்கள், பிப்ரவரி 05, 2018

டெஸ்ட்





டெஸ்ட் 
சிறுகதை 

ஏனோ ஒன்பதாம் வகுப்பில் நடந்த சம்பவம் இன்று எனது ஞாபகத்தில் வந்து நின்றது. அன்றைய வகுப்பில் டெஸ்ட் வைத்திருந்தார் ஆங்கில ஆசிரியர். மாதா மாதம்   நடைபெறும் டெஸ்ட் தான் அது. அன்றைய டெஸ்ட்டுக்கு  நான் படித்து கொண்டு வரவில்லை.  காரணம் சோம்பல், திமிர் இதில் ஏதேனும் ஒன்றை போட்டு கொள்ளலாம்.  டிக்கெட் புக் பண்ணவங்க வந்தாலும் வரலேன்னாலும் ரயில் டயத்துக்கு கிளம்பிடற மாதிரி எவன் படிச்சிட்டு வந்தா என்ன? வரலேன்னா தான் என்ன ? என்பது போல் அன்றைய டெஸ்ட் தொடங்கியது. விடை என்ன எழுதுவது என்றே தெரியாமல் நான் முழித்து கொண்டிருக்க, எல்லாரும் எழுதி கொண்டிருந்தார்கள். 

டேய் எவனாவது இன்னிக்கு எனக்கு துணை இருங்கடா. என்னை தனி ஒருவனா விட்டுராதீங்க என்ற எனது மைண்ட் வாய்ஸ் எனக்கு மட்டுமே கேட்டது.  பக்கத்து சீட் மாணவன் சுரேஷை பார்த்து எழுதலாம் என்றால் அவன் என்னை திரும்பி பார்க்கவேயில்லை. இதுவே ஒரு குற்ற உணர்ச்சி போல் தோன்றியது. வேறு யாரேனும் இது போல் எழுதாமலிருந்தால் சேம் பிளட் என்று உற்சாகமாகி கொள்ளலாம் என்று தெரிந்து கொள்ள மற்ற மாணவ மாணவிகளை கவனித்தேன். எல்லாரும் இன்றே நூற்றுக்கு நூறு எடுத்து விடும் உறுதி எடுத்து கொண்டது போல் எழுதி கொண்டிருந்தார்கள்.  

காலையில் செய்ய தவறிய  நடைப்பயிற்சியை ஹால் முழுக்க ஆசிரியர் இப்போது செய்து கொண்டிருந்தார். காலில் இடறிய சிறு குப்பையை தன் கால்களாலே வகுப்பறைக்கு வெளியே தள்ளி கொண்டிருந்தார்.இன்னும் சிறிது நேரத்தில்  என்னையும் அது போல் தான் வெளியேற்றுவார் என்பது சிம்பாலிக்காக தெரிந்து போயிற்று. அங்குமிங்கும் திரும்பி பார்த்தேன். சேகர் எழுதுவதை விட்டு விட்டு ஜன்னலுக்கு வெளியே வேடிக்கை பார்த்து கொண்டிருந்தான். அப்பாடா நமக்கு ஒரு துணை கிடைச்சாச்சு என்ற நிம்மதி பெருமூச்சை விட்டேன். கமலா கூட எழுதாமல் எல்லாரையும் பார்த்து கொண்டிருந்தாள். அவளை பார்த்து  எழுதலையா என்பதை நான் கண்களால் கேட்பதை கவனித்த ஆசிரியர், பல்லை கடித்த படி சாக்பீஸை என் மேல் விட்டெறிந்தார். நான் நோட்டில் பார்வையை பதித்தேன். எழுதுவது போல் பாசாங்கு காட்டி ரூல்டு நோட் கோடுகளை எண்ண ஆரம்பித்தேன். மணித்துளிகளையும் தான். டெஸ்ட் நோட்டில்  என் பெயரின் மேல் மீண்டும் மீண்டும் எழுத ஆரம்பித்தேன். 

டெஸ்ட் முடிந்ததன் அறிகுறியாக ஆசிரியர் கையில் இருந்த ரூல் தடியை மேஜையில் ஒரு அடி அடித்தார். என் முதுகில் விழுந்தார் போல் விர்ரென்றது. "எல்லாரும் டெஸ்ட் நோட்டை டேபிள்ல கொண்டாந்து வைங்க" என்ற ஆசிரியரின் உத்தரவுக்கு கீழ் படிந்து டெஸ்ட் நோட்டை சக மாணவ மாணவிகள் எழுந்து சென்று அடுக்க ஆரம்பித்தனர். விரைவாக கொண்டு சென்று வைப்பவர்கள் நன்றாக எழுதியிருக்கிறார்கள் என்பது உடனே தெரிந்து போயிற்று.  சிலர் சரியாக எழுதவில்லை என்பது வேண்டா வெறுப்புடன்  மெதுவாகவே மேஜையை நோக்கி அவர்கள் நகர்ந்ததில் தெரிந்தது. 
சிலர் எழுந்திருக்கலாமா  வேண்டாமா என்ற நிலையிலிருந்தனர்.  சில நொடிகளில் மேஜையில் டெஸ்ட் நோட்டுகளால் ஒரு பைசா கோபுரம் உதயமாகி இருந்தது. 

எனக்கு டெஸ்ட் நோட்டை ஆசிரியரின் டேபிளில் வைக்கும் தைரியம் வரவில்லை. ஆனால் இன்னொரு தைரியம் முளைத்தது. அது, டெஸ்ட் நோட்டே வைக்காமல் விட்டு விட்டால் என்ன என்பது. அதன் மூலம் ஆசிரியரது திட்டுக்களில் இருந்து தப்பி விடலாம் என்றே நினைத்தேன்.  நீ தவறு செய்கிறாய் என்று  பிரம்பு கொண்டு மிரட்டிய மனசாட்சியை சாரி என்ற ஒற்றை வார்த்தையால் அடக்கி விட்டு  டெஸ்ட் நோட் வைக்காமலே விட்டு விட்டேன். இதை கவனித்து கேட்ட சுரேஷை இதுக்கு மட்டும் என் பக்கம் திரும்புறியா நீ  வடிவேலு போல் முறைக்க ஆரம்பித்தேன்.

ஆசிரியர், டேபிளில் இருக்கும் டெஸ்ட் நோட்களை மட்டும் திருத்தி  கொடுத்து விடுவார் என்று நான் நினைத்திருக்க,  அவரோ கிளாஸ் லீடரை அழைத்தார். அன்று வந்திருந்த மாணவர்கள் எண்ணிக்கையையும் டெஸ்ட் நோட்டுகள் எண்ணிக்கையும் ஒப்பிட சொன்னார். ஒரு டெஸ்ட் நோட் மட்டும் குறைந்தது தெரிய வந்தது. அது யாரென்பதை கிளாஸ் லீடர் அட்டெண்டென்ஸ் பார்த்து என் பெயரை உச்சரிக்கும் முன்னே படபடப்புடன் எழுந்து நிற்க தயாரானேன்.

ரகு என்ற பெயர் அறிவித்தவுடன் எல்லோரது பார்வையும் என் பக்கம் திரும்பியது.பிறகென்ன. அரசன் அன்றே கொள்வான். தெய்வம் நின்றே கொள்ளும். ஆசிரியர் அடுத்த நொடியே தண்டனை கொடுத்தார். அந்த பீரியட் முழுதும் பெஞ்சு மேல் ஏறி நிற்க வேண்டும் என்று சொன்ன போது அழுகையும் அவமானமும் ஒன்று சேர பெஞ்சு மேல் ஏறி நின்றேன்.  ஏன்டா எழுதாதது மாதிரி எல்லாம் சீன் போட்டீங்களேடா. நீங்க எழுதி முடிச்சிட்டு தான் உட்கார்ந்திருந்தீங்களா என்று உள்ளுக்குள் புலம்ப தான் முடிந்தது. 

ஆசிரியர் சொன்னார். "அவன் எழுதாம அங்க இங்க வேடிக்கை பார்த்துகிட்டிருக்கிறப்பவே எனக்கு டவுட் வந்துச்சு. மார்க் கம்மியா எடுத்தவங்க, ௦ மார்க் எடுத்தவங்க இவங்களை இன்னிக்கு நான் திட்ட போறதில்ல. ரகுவால் நீங்க தப்பிச்சீங்க" என்றார். மார்க் கம்மியா எடுத்த மாணவர்கள் என்னை பார்த்து சிரிக்க ஆரம்பித்தார்கள். "டேய் உங்களுக்கும் சேர்த்து தான் தண்டனை எனக்கு கிடைச்சிருக்கு" வகுப்பு முடிந்தவுடன் அவர்களை பார்த்து கத்த வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். மதிப்பெண் எடுக்கலைனா கூட அதில் ஒரு நேர்மை இருக்கு. டெஸ்ட் நோட்டே வைக்காமல் இருப்பதில் என்னடா நேர்மை இருக்க போகிறது. கமலா என்னை பார்த்து சிரித்த சிரிப்பில் இருந்த செய்தி இது தான்.


இதோ இன்று அந்த கமலா தான் என்னை பார்த்து சிரித்து கொண்டிருக்கிறாள்.  கையில் பைலுடன் நான் அவள் முன்னே நின்று கொண்டிருக்கிறேன் . நான் பணி புரியும்  நிறுவனத்தில் பொது மேலாளராக பொறுப்பேற்று கொண்ட கமலாவின் முன் தான் தற்போது நின்று கொண்டிருக்கிறேன். பழைய ஞாபகங்களுக்கு நான் சென்று வந்தது போலவே அவளும் சென்று வந்திருக்க வேண்டும். அப்போது வெளிப்படுத்திய அதே சிரிப்பு இப்போதும் இருந்தது.
 சிரிப்பினூடே வார்த்தைகளை வெளியிட்டாள்.

"இப்பயும் ஆபீஸ்ல வேலை செய்து முடிக்க முடியாத பைல்களை கொடுக்காம கையோட தான் வச்சிக்கறீங்களா ரகு ?"

ஆர்.வி.சரவணன் 

பிரதிலிபியின் "நினைவுப்பாதை" சிறுகதை போட்டிக்கு இந்த சிறுகதை அனுப்பி வைத்திருந்தேன்.டெஸ்டில் தேர்வாகவில்லை. இருந்தும் கலந்து கொண்ட திருப்தியுடன் இங்கே நம் தளத்தில் பகிர்ந்திருக்கிறேன். நன்றி.

வெள்ளி, டிசம்பர் 08, 2017

திருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள்




திருமண ஒத்திகை நூல் - சில குறிப்புகள் 

திருமண ஒத்திகை கதை எழுத ஆரம்பிக்கும் போது, எங்கள் ஆசான் திரு கே. பாக்யராஜ் அவர்களின் வாழ்த்துரையோடு் தான் இந்த கதையை புத்தகமாக வெளியிடணும்னு ஆசைப்பட்டு எழுத ஆரம்பித்தேன். அவரது வாழ்த்துரை இந்த நாவலுக்கு கிடைத்தது மட்டுமல்லாது, பாக்யா வார இதழில் தொடர்கதையாகவும் வெளியாகி இதன் நூல் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக திரு. பாக்யராஜ் அவர்களே கலந்து கொண்டு நூலை வெளியிடும் பாக்யமும் ஒருங்கே எனக்கு கிடைத்திருக்கிறது.
இந்த இனிய நிகழ்வில் பங்கு கொண்டு, உடனிருந்து வாழ்த்திய தயாரிப்பாளர், இயக்குனர் திரு. சுரேஷ் காமாட்சி, இயக்குனர் நடிகர் திரு. E .ராம்தாஸ்,  இயக்குனர், தயாரிப்பாளர் திரு .மீரா கதிரவன், நண்பர் திரு .வினோ ஜாசன், வி.கே.சுந்தர்  மற்றும் விழாவை தன் தொகுப்புரையால் சுவாரஸ்யமாக்கிய நண்பர் சுரேகா சுந்தர், மற்றும்  அரசன், கோவை ஆவி , பாலகணேஷ்,   எஸ்கா கார்த்திகேயன், பாப்பனப்பட்டு ட்டு வ.முருகன், மூர்த்தி நடராஜன் ஆகியோருக்கும் இதயம் நிறைந்த நன்றி.




"இந்த கதையில் நாயகன் நாயகி ஹோட்டலில் காபி சாப்பிடுவதாக ஒரு காட்சி வருகிறது. இது சரவணனுக்கு உண்மையா நடந்திருக்கலாம்னு நினைக்கிறேன்.         அந்த அனுபவத்தை தான் அவர் காட்சியா வச்சிட்டார் போலிருக்கு"
திருமண ஒத்திகை புத்தக வெளியீட்டு நிகழ்வில் பேசுகையில் நடிகர் இயக்குனர்         திரு. E .ராம்தாஸ் அவர்கள் சிரித்த படி இப்படி குறிப்பிட்டார்.இது பற்றி ஒரு விளக்கம் சொல்லலாம் என்று நினைக்கிறேன்.
தேநீரில் சர்க்கரை இல்லை என்ற போது 
வாங்கி சுவைத்தவள் இருக்கிறதே
என்ற படி திருப்பி தருகிறாள்.
இப்போது இனிக்கிறது.
ஏற்கனவே நான் எழுதியிருந்த இந்த வரிகளை தான், கதையில் நாயகன் நாயகியின் முதல் சந்திப்புக்காக எடுத்து கொண்டேன். எழுதி முடிக்கையில் என்னடா இது ரசனைனு சொல்லி விடுவார்களோ என்ற தயக்கமும் கூடவே இருந்தது. ஆனால் கதையை படித்தவர்கள் அதை பற்றி குறிப்பிடுகையில் தான் திருப்தியே வந்தது.












"ஒரு விஷயத்தை ஒரு காட்சியோடு விட்டு விடாமல் இடைஇடையே மத்தியிலும் நினைவூட்டி இறுதியிலும் அதனை தொடர்புபடுத்தி முற்றுப்பெற செய்வது ஒரு கதையின் நேர்த்தியான அம்சம். சரவணன் அந்த காப்பி விஷயத்தை கடைசி வரை திறம்பட கையாண்டுள்ளார். "
நடிகர் இயக்குனர் திரு .கே.பாக்யராஜ் அவர்கள் தனது மதிப்புரையில் குறிப்பிட்டிருக்கும் வார்த்தைகள் இவை. நாவலின் அட்டை படமாக காபி கப் தேர்வானதன் காரணமும் இது தான்.

கதைக்குத் தேவையான சில கதாபாத்திரங்களை மட்டும் வைத்து எழுதப்படும் கதைகளே சிறப்பாய் அமையும். கதாபாத்திரங்கள் பேசுவதாய் அமைவதைவிட முக்கிய கதாபாத்திரத்தைச்சுற்றி கதையை நகர்த்தி, நிறைய இடங்களில் காட்சிப்படுத்தினால் கதை சிறப்பாக அமைந்து படிப்பவர்களையும் ரசிக்க வைக்கும் என்று எனது கல்வித் தந்தையான பேராசான் மு.பழனி இராகுலதாசன் அடிக்கடி சொல்வதுண்டு. அப்படியான கதைகளை வாசிக்கும் போதெல்லாம் அதனுள் பயணிக்கும் கதாபாத்திரங்களோடு நானும் பயணித்த அனுபவத்தை உணர்ந்திருக்கிறேன்.அப்படியான கதை நகர்த்தலோடு கதாபாத்திரங்களை தேவைக்கேற்ப பயன்படுத்தியிருக்கும்
ஆசிரியர், அவர்களை அழகாக வெளியேற்றி சில இடங்களில் மிக நுணுக்கமாக காட்சிப்படுத்தி வாசிக்கும் நம்மை மெல்ல மெல்ல வசீகரித்து கதையோடு ஆழ்ந்து பயணிக்க வைத்து விடுகிறார். இன்று நிச்சயம் செய்த உடனேயே பெண்ணும்
மாப்பிள்ளையும் செல்போனில் மணிக்கணக்கில் பேச ஆரம்பித்து விடுகிறார்கள். மேலும் வாட்ஸ் அப் முகநூல் என ஏகப்பட்ட வசதிகள் வேறு. இன்றைய இளம் தலைமுறைக்கு சொல்லவா வேண்டும்..? அவையெல்லாம் இந்த நாவலில் இடம் பிடித்திருக்கிறது.
திருமண ஒத்திகை புத்தக அணிந்துரையில் நண்பர் திரு . பரிவை சே.குமார் அவர்கள்.


நண்பர் ஹரிஹரன் விஸ்வநாதன் சார் எழுதிய நூல் விமர்சனம் 
காதல் என்பது கண்ணும் கண்ணும் நோக்கினாலே தோன்றும். அது பல நாள் பழகிய உணர்வை தரும்...
சில பேருக்கு தாலாட்ட நான் பொறந்தேன் மாதிரியும் , சிலருக்கு மன்னர் மன்னனே எனக்கு கப்பம் கட்டு நீ மாதிரியும் அமையும்....
ஆனால் பலர் நினைப்பது வெள்ளி பனி உருகி மடியில் வீழ்ந்தது போலிருந்தேன் போல இருக்கனும் என.... இந்தக் கதையில் வரும் வருணும் அதே ஆசையுடன் சென்று பெண் பார்க்கும் படலத்தில் ஆரம்பிக்கும் கதை,சில பல பிரச்சனைகளோடு எப்படி சுபமாச்சு என்பது தான் #திருமண_ஒத்திகை.
தலைவர் ஆர்.வி.சரவணன் குடந்தை பாக்யாவில் தொடராக எழுதிய கதை.
கதிர், காதலர் தினத்தில் ஆரம்பித்த முகநூல், தனுஷ் படங்களில் குரூப்பாக வடிவெடுத்தது இவரால் இந்தக் கதையிலும் வெகு சாமர்த்தியமாக புகுத்தப்பட்டது.
விருமாண்டி இருவரின் பார்வைகளை பதிவு செய்த படம். முதல் பாதி வில்லன்,மறு பாதி ஹீரோ..கிளைமேக்ஸ் சொதப்பல்... அதை விடுங்க. அது போல இதில் மூன்று பார்வைகள். வருண்,சஞ்சனா மற்றும் எழுத்தாளர் பார்வையில்...
முன்னேல்லாம் ரேடியோவில் கதை சொல்லுவாங்க... ஒருத்தரே எல்லா கேரக்டராகவும் மாறி பேசுவாங்க. அது போல இதில் ஆசிரியர் பல அவதாரம் எடுத்து அந்தந்த கேரக்டராகவே மாறி எழுதியுள்ளார்.
எனக்கு புடிச்ச கேரக்டர் வருணின் நண்பன் மதி... புரோட்டா சூரியை மனசுல வச்சு எழுதியிருப்பது போல தோனுது. என்ன சரிதானே தலைவரே?.... 
கடைசில வாட்சப் வெறியர்கள் மீதுள்ள பயம்தான் விஜயனை மாற்றுகிறது.. 😂
என்னையும் மதிச்சு புத்தகத்தை அனுப்பியதற்கு நன்றி தலைவரே... செம ரைட்அப்... இல்லைனா பாக்யராஜ் சார் கையால முன்னுரை கிடைக்குமா?.
136 பக்கங்கள்
விலை:₹125/-
பதிப்பு: ஜனனி பதிப்பகம் ,சென்னை
மொபைல்:09444675913
வாங்கி படிக்கவும்.... 
விழாவில் தயாரிப்பாளர், இயக்குனர் திரு. சுரேஷ் காமாட்சி அவர்களின்  வாழ்த்துரை. 
நடிகர், இயக்குனர் திரு. E .ராம்தாஸ்   அவர்களின் வாழ்த்துரை 
திரு. கே பாக்யராஜ் அவர்களின் வாழ்த்துரை 

இந்த இனிய தருணம் உருவாக என்னோடு ஒத்துழைத்து ஊக்கப்படுத்திய அனைத்து இணைய நண்பர்களுக்கும், என் உறவுகளுக்கும், நிகழ்வில் கலந்து கொண்டு வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றியும் அன்பும் என்றென்றும்.

ஆர்.வி.சரவணன் 


வியாழன், நவம்பர் 23, 2017

அறம்





அறம் 


எல்லாரும் கலந்துகிட்ட ஒரு மீட்டிங், ஸ்டார்ட் ஆகி நடந்துட்டிருக்கிறப்ப லேட்டா வேர்க்க விறுவிறுக்க வந்து அட்டெண்டன்ஸ் கொடுத்தா எப்படி இருக்கும். அப்படி தான் தோணுது இந்த பதிவு எழுதற நேரத்துல எனக்கு. அதாவது அறம் படம் நான் பார்த்தது சென்ற ஞாயிறு  தான். 


ஒரு கலெக்டரை விசாரணை செய்வதாக ஆரம்பிக்கிறது படம். இதில் ஆடியன்சை ஈர்க்கிற பாயிண்ட் எங்க இருந்து ஆரம்பிக்க போகுது என்ற நினைப்போடு பார்க்க ஆரம்பிக்கையில் நடுவழியில் வண்டி நின்று போய் பெட்ரோலும் இல்லாமல் குடிக்க தண்ணீரும் இல்லாமல் " பையன் போனை எடுத்தான்னா குடிக்க தண்ணி பாட்டில் வாங்கிட்டு வர சொல்லு தாகமாருக்கு" என்று புருசனிடம் சொல்லி கொண்டிருக்கும் அந்த பெண்ணின் வார்த்தைக்கு அடுத்த காட்சி அந்த பையனின் அறிமுகம் . எங்கே ? அவன் தண்ணீரில் நீச்சலடிப்பவனாக . அட என்று நிமிர்ந்து உட்காருகையில், "வாங்க நம்ம தண்ணீர் பிரச்னையை அடுத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாமல் பேசி தீர்வு காணுவோம்" என்பதாக கலெக்டர் மதிவதனியின் என்ட்ரி இன்னும் சுவாரஸ்யமாக்குகிறது. அதன் பின் ஆழ் துளை கிணறுக்குள் கயிறு இறக்குவது போல் நம் மன ஆழம் தேடி காட்சிகள் ஒவ்வொன்றாக இறங்குகின்றன. ஆழ்துளைக்குள் சிக்கி கொண்ட அந்த சிறுமியின் முகம் மானிட்டரில் முதல் முறை தெரியும் போது தொற்றி கொள்ளும் பரபரப்பு படத்தின் கடைசி வரை நீள்கிறது.

"உன் அத்தை பேசறேம்மா. முறுக்கு வாங்கிட்டு வந்திருக்கான் உன் அப்பா. நீ வெளில வந்தோன சாப்பிடலாம் என்ன" அழுத படி சிறுமிக்கு தைரியம் சொல்லும் அந்த பெண்மணியின் வார்த்தைகளுக்கு கண்கள் கலங்கி விடுகிறது.

செய்தி சேனல் விவாத காட்சி ஆங்காங்கே குறுக்கிடுகிறது. வார்த்தைகளை மியூட் செய்த படி அவற்றை காண்பித்திருக்கலாம். பாதிக்கப்பட்ட மக்கள் பேசும் யதார்த்தத்தை மீறியா பேசிட போறாங்க. (உதாரணத்திற்கு பழனி பட்டாளத்தின் வார்த்தை பிரயோகம் ஒவ்வொன்றும் ராக்கெட போல் கிளம்பி வருவதை குறிப்பிடலாம்).

படம் முடிந்து வீட்டிற்கு வந்து சில மணி நேரங்கள் ஆகியும் கூட ராமச்சந்திரனின் பதறலும், சுனு லட்சுமியின் அழுகையும், பய முகம் காட்டும் அந்த சிறுமியும், மக்களிடம் அதிகாரம் காட்டாத அதிகாரி மதிவதனியும் இன்னும் நிழலாடி கொண்டே இருக்கிறார்கள். சில படங்கள் பார்த்து விட்டு வருகையில் மட்டும் ஒரு நிறைவு கிடைக்கும். அறமும் அத்தகைய நிறைவை கொடுத்திருக்கிறது.

வாழ்த்துக்கள்
நயன்தாரா மற்றும்  கோபி நயினார் குழுவினருக்கு 

ஆர் .வி.சரவணன் 

சனி, நவம்பர் 11, 2017

திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு விழா



திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு விழா


தண்ணீரை அண்ட விடாத பால் சூடா எடுத்துண்டு, அதுல முதல் முதலா இறக்கின டிகாக்‌ஷனை வள்ளல் கணக்காவும் வாரி வழங்காம கஞ்சத்தனமாவும் குறைச்சிடாம சரியான விகிதத்துல கலந்துகிட்டு, காபியின் கசப்பை மீறி செயல்பட முடியாத வண்ணம் சர்க்கரையோட கூட்டணி அமைச்சு, கொஞ்சமே கொஞ்சம் ஆத்தி அதில உதயமாகிற நுரை கீரீடத்தை காபிக்கு அணிவிச்சு, ஒரு மழை நாளில் துணையோடு சேர்ந்தமர்ந்து கொஞ்சலான வார்த்தைகளின் இடையிடையே அந்த காபியை பருகும் போது ஒரு உற்சாகம் வரும் பாருங்க. அதை அசோகன் வாய்ஸ்ல இப்படி தான் சொல்ல தோணும்.

"ஆஹா. இந்த காபிக்கு நான் அடிமை"


எதுக்கு இதை இப்ப சொல்றேன்?. கேள்வி வருதுல்ல. அதற்கான பதில். திருமண ஒத்திகை நாவலில் நாயகன் நாயகிக்கு இடையில் காபி ஒரு காதல் தூதுவன். 
ஆகவே காபியின்  ரசனை வர்ணனை இங்கு .

சரி விசயத்துக்கு வருகிறேன். திருமண ஒத்திகை நூல் வெளியீட்டு விழா இன்று மாலை டிஸ்கவரி புக் பேலஸில் நடைபெறுகிறது. இந்த இனிய நிகழ்வில் உங்களின் வருகையும் வாழ்த்துக்களும் விழாவிற்கு மேலும் இனிமை சேர்க்கட்டும்.





ஆர்.வி.சரவணன் 


வியாழன், ஜூன் 22, 2017

முகநூல் குறிப்புகள் - 3




முகநூல் குறிப்புகள் - 3


(இந்த பதிவு முழுக்க சினிமா குறிப்புகள் தான்) 

வாழ்வே மாயம் படத்துல நீல வான ஓடையில்.... னு கமல் ஸ்ரீதேவி யை பார்த்து பாடறப்ப, ஓரிடத்தில் கண்மூடி கற்பனையில் மிதப்பார். அப்ப ஒரு பெரியவர் வந்து அவரை தட்டி எழுப்பி நலம் விசாரிச்சிட்டு போவாரு. அது மாதிரியான அனுபவம் இது.
ஒரு நாள் எங்க வீட்டு பங்சன்ல கண்மூடி கொஞ்சம் சிந்தனைல இருந்தேன். ஒருத்தர் என் தோளில் தட்டி "என்னப்பா பகல்லயே தூங்கறே" னு போற போக்கிலே என் சிந்தனையை கலைச்சு போட்டுட்டு போனாரு.
அவரை இழுத்து வைத்து கொண்டு கவுண்டமணி போல் "நான் தூங்கலீங்க. கொஞ்சம் திங்கிங்ல இருந்தேன்" னு சீரியசா சொன்னேன்.

அவர் சிரித்தபடி கூலாக,

"அட நீ தூங்குப்பா. யாரு வேணாம்னா. ஆனா அத போய் ஏன் திங்கிங்னு சொல்லிட்டிருக்கே?" னு செந்திலாய் மாறி என்னை கடுப்பேத்தி விட்டுட்டாரு.

மீ ஙே.

------

கார்த்திக், இளவரசி, வி.கே. ராமசாமி நடித்த எங்க வீட்டு ராமாயணம் படத்தில் ஒரு காட்சி.
கார்த்திக் : (ரொமாண்டிக் மூடில்) வா அன்னிக்கு பாதியிலே விட்ட பாட்டை 
இன்னிக்கு கன்டின்யூ பண்ணலாம்.
இளவரசி : நீங்க இப்ப பாட ஆரம்பிச்சீங்கன்னா இவங்கெல்லாம் எழுந்தரிச்சு போயிடுவாங்க (ஆடியன்ஸ் பக்கம் கை காட்டுகிறார்)
கார்த்திக் : இவங்க எந்த பாட்டுக்கு தான் எழுந்தரிச்சு போகலே . அதுக்காக நாம 
பாடாம இருக்க முடியுமா. நீ வா
இப்படி சொன்னதும் அடுத்து டூயட் பாடல் தான் வந்து விட்டது என்று நினைத்தால் சாரி. அடுத்த காட்சி வந்து விடுகிறது.
"நாங்க பாரின் போய் பாட்டு பாடிட்டு வர போறோம். அதுக்குள்ள டீ காபி சாப்பிடறதா இருந்தா போய் சாப்பிட்டு வாங்க" என்று  பாடலுக்கு முன் இப்படி ஒரு வசனமும் இனி வரலாம்.

------

சென்னை 28 -II படத்துல, ஜெய் கல்யாணம் நின்னு போன கவலைல பெங்களூர் போக போறதா சொல்லுவாரு. அப்ப இளவரசு, "பெங்களூர் போய் அனுவை அங்க கல்யாணம பண்ணிக்க போறே அப்படி தானே" னு கேட்பார்.
அப்ப, மிர்ச்சி சிவா படத்தின் இடையிடையே படங்களை மேற்கோள் காட்டி பேசற மாதிரி எனக்கு ஒண்ணு தோணுச்சு. அது என்னன்னா,
தென்றலே என்னை தொடு படத்துல மோகனுக்கும் ஜெய்ஸ்ரீக்கும் காதல் வந்து, காதல்ல பிரச்னை வந்து, இன்டர்வெல் வந்து, ( எத்தனை வந்து) மோகன் பீலாகி பெங்களூர்ல போய் வேலைக்கு சேருவாரு. அங்க ஜெய்ஸ்ரீ தற்செயலா வரவே, மோதல் தீர்ந்து காதல் வெற்றியாகிடும்.
கதையின் போக்கு அப்படி போகப்போகுதுனு நான் நினைக்கல. ஆனா சிவா அந்த சீனுக்கு இடையில் இத மேற்கோள் காட்டி சொல்ற மாதிரி ஒரு சீன் இருந்திருக்கலாமேனு நினைச்சேன். 

------

கங்கை அமரன் இயக்கிய படங்களில் கோழி கூவுது அவரது முதல் படம். இதற்கு பிறகு அவர் இயக்கிய படத்திற்கு வைத்திருந்த பெயர் கொக்கரக்கோ. ( கீதம் சங்கீதம் நீ தானே என் காதல் வேதம் .... சூப்பர் ஹிட் பாடல் இந்தப் படத்தில் உண்டு) அதற்கு அடுத்த படத்திற்கு என்ன பெயர் வைத்திருந்தார் தெரியுமா பொழுது விடிஞ்சாச்சு. (பிரபு சுலக்‌ஷனா நடித்தது ) தலைப்புகள் கோர்வையா இருக்குல்ல. அப்போது இது பற்றி பத்திரிகைகளில் கூட வந்த்தாக ஞாபகம். இது இப்படி இருக்கையில்,
அவர் இயக்கிய எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் வரும் செண்பகமே செண்பகமே பாடலை அடுத்த படத்தின் டைட்டில் ஆக வைத்திருந்தார்.
(ராமராஜன் ரேகா நடித்தது)

அதே போல் கரகாட்டக்காரன் படத்தில் வரும் ஊரு விட்டு ஊரு வந்து பாடல் வரிகளை அடுத்த படத்திற்கு டைட்டில் ஆக்கினார். (ராமராஜன் கௌதமி)

நேற்று டிவியில் வாசலிலே பூசணிப்பூ வச்சுப்புட்டா.... பாடல் பார்த்து கொண்டிருந்த போது இதெல்லாம் ஞாபகத்துக்கு வந்துடுச்சு.

------


டிவியில் பார்த்த இரண்டு திரைப்பட காட்சிகளில் நான் கவனித்த ஒன்று.
படம் : அரசு
வடிவேலுக்கு தபால் கொண்டு வந்து கொடுக்கும் தபால்காரர் "உனக்கு கவர்மெண்ட. வேலை கிடைச்சிருக்கு" என்பார்.
படம் : தங்கமான ராசா
ராமராஜனுக்கு வேலை கிடைத்திருப்பதாக சொல்லி கனகாவிடம் தபால் கொடுத்து கையெழுத்து வாங்கி செல்வார் தபால்காரர்.
யாருக்கு தபால் வந்திருக்கிறதோ அவர்கள் பிரித்து பார்த்தால் தானே விசயம் என்ன என்பது தெரிய வரும். தபால்காரருக்கு முன்பே எப்படி தெரியும் ?

இதெல்லாம் எப்படிய்யா யோசிக்கிறே னு கவுண்டமணி போல் நீங்கள் 
கேட்டீர்களானால் என் பதில் செந்தில் சொல்வது போல் தான்.
அதுவா தோணுதுண்ணே.


ஆர் .வி.சரவணன்