சனி, மார்ச் 29, 2014

இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு- 2

 




இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா 
நிகழ்ச்சி தொகுப்பு- 2

 இங்கே பாலகணேஷ் பற்றி குறிப்பிட வேண்டும். நான் எழுத்தாளர் பட்டுகோட்டை பிரபாகரிடம் முன்னுரை வாங்க வேண்டும் என்று தெரிவித்த போது தயங்காமல் உடனே அழைத்து சென்று அறிமுகபடுத்தினார். அந்த நேரத்தில் அவருக்கு பணிகள் நிறைய இருந்தன. இருந்தும் நூல் வடிவமைப்பில் என்னோடு ஒத்துழைத்தார்.

தனது பணிகளுக்கு இடையில் எனக்காக நேரம் ஒதுக்கி பி.கே.பி அவர்களும் படித்து முன்னுரை எழுதி கொடுத்தது இந்த நூலுக்கு ஒரு சிறப்பு அங்கீகாரத்தை கொடுத்திருக்கிறது. 

அதிலிருந்து சில வரிகள் 

ஒரு சிறுகதையோ கவிதையோ கட்டுரையோ முதலில் வாசகரை 
படிக்க வைக்க வேண்டும். அந்த தன்மைக்கு ரீடபிளிட்டி என்று பெயர்.
அது உங்கள் எழுத்தில் இருக்கிறது.தங்களிடம் எழுத்து திறமையும் 
காட்சியமைப்பு சாமர்த்தியமும் வசனங்கள் எழுதும் திறனும் 
நிறையவே இருப்பதை இந்த படைப்பு அடையாளப்படுத்துகிறது.

(இந்த நூலுக்கு அவரது முன்னுரை ஒரு மகுடம் தானே)  


சந்திரா தங்கராஜ் உரை


அடுத்து பேசிய திருமதி. சந்திரா தங்கராஜ் அவர்கள் இந்த புத்தகம் திரைக்கதை வடிவத்தில் எழுதபட்டிருக்கிறது. உரையாடலும் அப்படியே. புதிதாக படிக்க வருபவர்களுக்கு எளிதாக இருக்கும் என்று சொன்னதோடு சினிமாவிற்கு வருவதற்கான தகுதி உங்களுக்கு இருக்கிறது என்று வாழ்த்தினார் 


நவீன இலக்கியத்தில் முத்திரை பதித்திருக்கும் சந்திரா தங்கராஜ் 
அவர்களை யும் அவர் கணவர் வி.கே.சுந்தரையும் சங்கர் அழைத்து 
சென்று அறிமுகபடுத்திய போது வி கே சுந்தர்,  நாங்க இருக்கோம் என்று  ஊக்கமளித்தார். இருவரும் உற்சாகமுடன் வந்து கலந்து கொண்டு 
விழாவுக்கு சிறப்பு சேர்த்தனர் 




சங்கர்,விகே.சுந்தர்,சந்திரா தங்கராஜ்,நா .முத்துக்குமார்



அடுத்து பேச வந்த விழாவின் சிறப்பு விருந்தினர் திரு.நா.முத்துக்குமார் அவர்கள் 

 வலை பதிவர்களும் சரவணனின்  உறவினர்களும் வந்திருக்கிறீர்கள்.
 நான் சொல்ல நினைத்ததை நாவலில் வரும் கவிதைகளை எல்லாம் 
சுரேகா சொல்லி விட்டார்.இது கதையா  திரைக்கதையா என்று குழப்பம் கொள்ள ஏதுமில்லை. சினிமாவுக்கான நாவலாக இது உருவாகி இருக்கிறது.  
எழுத்தாளர் திரு.பட்டுகோட்டை பிரபாகரின் முன்னுரை இந்த புத்தகத்திற்கு சிறப்பு சேர்த்திருக்கிறது. கனவுகள் மட்டுமே ஒருவனை உயர்த்தி விடுவதில்லை. உழைப்பும்,தொடர்ந்த வாசிப்பும், தேடலும் தொடர்ந்து தக்க வைத்து கொண்டால் அந்த கனவு நனவாகும்.சரவணன் சினிமாவில் சாதிக்க நினைத்ததை அடைவார். தொடர்ந்த வாசிப்பு அவரை அடுத்த தளங்களுக்கு கொண்டு செல்லும் என்று வாழ்த்தினார் 

முத்து குமார் அவர்களை நான் சங்கருடன் சென்று சந்தித்து விழாவுக்கு அழைத்த போது  "கண்டிப்பாக  கலந்து கொண்டு புத்தகம் வெளியிடுகிறேன்" என்று ஊக்கமளித்ததுடன் விழாவுக்கு முன்னமே வந்திருந்ததோடு மட்டுமில்லாமல் விழா முடியும் வரை பொறுமையாய் இருந்து ஆர்வத்துடன்  போட்டோ எடுத்து கொள்ள வந்த அனைவருடனும் சலிக்காமல் பங்கேற்று விழாவை மெருகூட்டினார்




நா .முத்துக்குமார் உரை


இந்த இடத்தில ஒரு சின்ன கட் சாட் நண்பர் சங்கர் விழாவுக்கு கலந்து கொண்டு சென்றவுடன் முகநூலில்  இதை பற்றி எழுதியிருந்தார்.
அதிலிருந்து சில வரிகளை இங்கே தருகிறேன் 

சரவணன் என்ற ஆரம்ப எழுத்தாளரை ஊக்குவிக்க வந்திருந்த சக வலைப்பதிவர்களும், அவரது உறவினர்களும் ஒரு இனிய ஆச்சர்யம். தொடரட்டும்!

நா முத்துக்குமார், சந்திரா இருவரும் வாழ்த்திய விதம் அத்தனை 

பக்குவமாக இருந்தது. தன்னை மதிப்பவர்களின் முயற்சி எப்பேர்ப்பட்டது என்பதைப் புரிந்து வாழ்த்துவதுதான் நல்ல மனிதர்களின் தனிச்சிறப்பு. 
அந்த அனுபவத்தை காணப் பெற்றேன்... எனது பங்களிப்போடு இதுவரை 
நடந்த நிகழ்வுகளிலேயே எனக்கு மிகப் பிடித்தமான நிகழ்வாக அமைந்தது இந்த எளிய - இனிய புத்தக வெளியீடு!


சிலர் வெளியிட்டால் மட்டுமே ஒரு புத்தகத்திற்கு பெருமை. அந்த 
வகையில்  ராசியான கைகளால் வெளியிடப்பட்டு ராசியான கரங்களால் பெறபட்டிருக்கிறது. இது வெற்றி பெறும். எங்கள் குடும்பத்தினர் சார்பாக கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி என்றார் எனது சித்தப்பா திரு. எம்.பாலசுப்ரமணியன் அவர்கள். இவர் தஞ்சாவூர் உமா மகேஸ்வரனார் பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.(எனது அம்மாவின் தங்கை கணவர். எனது  சித்தியும் ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றவர்)



எனது சித்தப்பா பாலசுப்ரமண்யம் பேசுகிறார்



புலவர் அய்யா திரு.ராமானுஜம் அவர்கள் வாழ்த்துரைக்க வந்தார். அவர் 
பேசும் போது இந்த புத்தகத்தை கையில் எடுத்து படிக்க ஆரம்பித்தவன், தொடர்ந்து  படித்து முடித்து விட்டு தான் எழுந்தேன். சரவணன் எதிர்காலத்தில் திரையுலகில் பிரகாசிக்கும் வாய்ப்பு நிச்சயமாக வரும். புலவனின் வாக்கு பொய்க்காது என்று வாழ்த்தினார் 



புலவர் அய்யா உரை


விழாவுக்கு இரண்டு நாட்களுக்கு முன் புலவர் அய்யா வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து ஆசி பெற்று புத்தகத்தை கொடுத்து விட்டு வந்தேன்.  திரு.கவியாழி கண்ணதாசன் மற்றும் திரு.ராய செல்லப்பா வுடன்  
வந்து கலந்து கொண்டார். கவியாழியும் செல்லப்பா சாரும் வந்திருந்து
வாழ்த்தியதில் சந்தோஷம் எனக்கு.



புலவர் அய்யா  
உடன்
 கவியாழி கண்ணதாசன் மற்றும் ராய செல்லப்பா 



அடுத்து சீனு நன்றியுரைக்க வந்தார். அவர் பேசும் போது அனைவரையும் குறிப்பிட்டு நன்றியுரைத்தது சிறப்பாக இருந்தது. அப்படியும் கோவை மு .சரளா மேடம் மற்றும் ஸ்கூல் பையன் பெயர் விடுபட்டதை உணர்ந்து தன் திடங் கொண்ட போராட்டத்த்துடன் மீண்டும் மைக் பிடித்து நன்றி சொல்லி கலகலப்பாக்கினார்






நன்றியுரைத்த அன்பின் நாயகர்கள் 
கோவை ஆவி பேசும் போது கேப்டனுக்கு ஒரு தோனி போல் இந்த விழாவை சிறப்புற தொகுத்த்திருக்கிறார் சுரேகா என்று குறிப்பிட்டார்.அவள் அப்படி ஒன்றும் அழகல்ல என்று சார் பாடினால் யாரும் கோபிக்க மாட்டார்கள் என்று முத்துக்குமார் அவர்களை பற்றி குறிப்பிட்டார்.மேலும் கதையின் நாயகன் சிவா இந்த விழாவின் நாயகன் சரவணன் என்று குறிப்பிட்டார் 






தொகுப்புரை தந்த சுரேகா

நண்பர் எழுத்தாளர் திரு.சுரேகாவின் குரலுக்கு ரசிகன் நான். முதல் முறை  பதிவர் திருவிழாவில் பார்த்த போதே நாம் ஏதேனும் விழா நடத்தினால் இவரை தான்  சிறப்பித்து தர அழைக்க வேண்டும் என்று முடிவெடுத்தேன் அதன் படி ஆர்வத்துடனும் தயக்கத்துடனும் அவரை அழைத்த போது வருகிறேன் என்று சொன்னதுடன் வந்திருந்து சிறப்பாக நடத்தி கொடுத்ததோடு மட்டுமில்லாமல் நாவலில் உள்ள கவிதைகளை சொல்லி தொகுத்தது ரசிக்கும் படி இருந்தது


மன்னிக்கவும் நண்பர்களே. நிகழ்ச்சி தொகுப்பு நாளையும் தொடர்கிறது 

சுரேகா தொகுப்புரையில் இடம் பெற்ற சுவாரஸ்யங்கள்
எனது ஏற்புரை என்ற  கலாட்டா, 
நூல் பற்றி பதிவுலக நண்பர்களின் விமர்சன பார்வை  
மற்றும் கலந்து கொண்ட இணைய நண்பர்களின் படங்கள் 
 
இவற்றுடன் எனது கருத்தையும் நாளைய பதிவில் சொல்லி நிறைவு செய்கிறேன் 


அன்புடன் 

ஆர்.வி.சரவணன் 



வியாழன், மார்ச் 27, 2014

இளமை எழுதும் கவிதை நீ.... நூல் வெளியீட்டு விழா நிகழ்ச்சி தொகுப்பு




இளமை எழுதும் கவிதை நீ.... 
நூல் வெளியீட்டு விழா  நிகழ்ச்சி தொகுப்பு 


குடந்தையூர் தளம் தொடங்கி நான்கு வருடங்கள் முடிந்து ஐந்தாவது வருடம் ஆரம்பித்து விட்டது.நான் இதை தொடங்கிய போது கண்டிப்பாக சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்துடன் ஆரம்பித்தேன். என் தளத்தில் நான் எழுதிய தொடர்கதை  இதோ  புத்தகமாக அச்சில் வந்து விட்டது. இந்த விழா பற்றிய அனுபவ குறிப்புகள் எழுத வேண்டும் என்று  நினைத்தாலும்
தொடர்ந்து அதை பற்றியே எழுதி சலிப்படைய வைக்க வேண்டாம் என்று எழுதாமல் விட்டு விட்டேன். இணைய நண்பர்கள் சிலர் விழா பற்றி ஒரு பதிவு தரலாமே வராதவர்கள் படிக்கவும் வந்தவர்கள் சுவாரஸ்யத்துடன் ரிபீட் செய்து கொள்ளும் வாய்ப்பும் கிடைக்குமே என்று சொன்னார்கள். விழாவின் வீடியோ எனக்கு சமீபத்தில் தான் என் மாமா வீட்டிலிருந்து வந்து சேர்ந்தது. அதை பார்த்த போது, கலந்து கொண்டவர்களுக்கு நன்றி என்று ஒற்றை சொல்லில் சொல்வதை விட அவர்களின் பங்கை இங்கே அழகாக பதிவு செய்யலாமே என்று தோன்றியது இதோ பதிவிட்டு விட்டேன்

விழா 5 மணிக்கு என்று குறிப்பிட்டிருந்தோம் அல்லவா முதல் நாள் 5 மணிக்கே இறக்கை கட்டி கொண்டது  மனசு. இரவு முழுக்க தூக்கமில்லை காரணம் உள்ளுக்குள் உற்சாகம் தான். மறு நாள் காலை ஊரிலிருந்து என் அம்மா,மனைவி,பிள்ளைகள் மற்றும் உறவினர்கள் வந்து விட்டார்கள் என் தம்பி என்னை விட அதிக உற்சாகமாய் இருந்தான் .விழாவை இன்னும் சிறப்பாக்கி விட வேண்டும் என்ற வேகம் அவனிடம் மட்டுமல்லாது என் குடும்பத்தாரிடமும் இருந்தது. 

ஊரிலிருந்து என் தாய் மாமா (வங்கியில் மேலாளராக பணிபுரிகிறார்) மற்றும்  என் தங்கை கணவர் (அரசு துறை) நேராக டிஸ்கவரி புக் பேலஸ்க்கே  வந்து விட்டனர்.என் தம்பி எனக்கு முன்னமே விழா ஏற்பாடுகளை கவனிக்க அங்கு சென்று விட்டான் 

நானும் அரசனும் செல் போனிலேயே பேசி கொண்டு விழா ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்தோம் 

எனது அலுவலக நண்பர் தேவராஜ் விழாவுக்கு தேவையான பொருட்கள் மற்றும் ஸ்நாக்ஸ் வாங்கி கொண்டு வரும் பொறுப்பை ஏற்றிருந்தவர் தான் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார் 

நான் புத்தக அரங்கம் சென்று சேரும் போது மணி 3.30.  என் மாமா,மற்றும் தங்கை கணவரை வரவேற்ற போது தான் கவனித்தேன் பக்கத்தில் உள்ள டீ ஸ்டாலில் பதிவுலக நண்பர்கள் வந்திருந்ததை கண்டு அருகில் சென்றேன். பாலகணேஷ்,சீனு,அரசன்,கோவை ஆவி, ஸ்கூல் பையன் 
வந்து விட்டிருந்ததை பார்த்து வரவேற்றேன். 

 எல்லோரும் உள்ளே நுழையும் போது என் தங்கை மகள் வைஷாலி ஆர்வத்தில் ஒரு பேனரை ரெடி செய்து அரங்க வாசலில் வைக்க வேண்டும் என்ற   அன்பு  கட்டளையுடன்அனுப்பியிருந்தார்.நான் ரொம்ப அலட்டி கொள்வதாக  நினைத்து விட போகிறார்கள் என்று என் தம்பியுடன் நான் சொன்ன போது, பாலகணேஷ் சீனு பார்த்து விட்டு நன்றக இருக்கிறது பேனர் கட்ட சொல்லு. அந்த பெண்ணை பாராட்ட வேண்டும் என்று சொன்னார்கள் (சீனு நன்றியுரையில் இதை குறிப்பிட்டு சொன்னார் )




எனது முக நூல் நண்பரும் ரஜினி ரசிகருமான நண்பர் ஆனந்த்
குமாரிடம் அரங்க மேடையில் வைப்பதற்காக. பேனர் டிசைன் செய்ய சொல்லியிருந்தேன்.(டிசைனிங்கில் பணிபுரிகிறார்) அவரும்  ஆர்வமாய் உருவாக்கி கொண்டு வந்திருந்தார்.




4.30 மணி இருக்கும் என் தம்பி போனில் கீழே வா என்று அவசரமாய்  குரல் கொடுத்தான்.மேலும்  சார் வந்து விட்டார் என்று எல்லோரும் என்னை நோக்கி பரபரப்பாய் வந்தார்கள். நான் படிகளை இரண்டிரண்டாக கடந்ததாய் நினைவு. காரிலிருந்து இறங்கினார் இந்த விழாவின் நாயகன் முனைவர் கவிஞர்  திரு. நா.முத்துக்குமார் அவர்கள்.கூடவே நண்பர் சங்கரும் (என்வழி ,ஒன் இந்தியா .காம் ) முத்துக்குமார் அவர்கள் தன் மகனை அழைத்து கொண்டு வந்திருந்தார்.கை கொடுத்து வரவேற்ற என்னை சிநேகமாய் புன்னகைத்து சங்கருடன் உள்ளே நுழைந்தார்.  

மற்றவர்கள் வந்து கொண்டிருக்கிறார்கள் . வந்த உடன் ஆரம்பித்து விடலாம் என்று நான் தகவல் சொல்ல, கவிஞர் அதனாலென்ன  பரவாயில்லை 
என்று கூறி விட்டு புத்தகங்களை புரட்ட ஆரம்பித்தார்.அங்கே
 வந்திருந்தவர்கள் ஆர்வமாய் பேச வர அவர்களுடன் உரையாட
 ஆரம்பித்தார்.

கொஞ்ச நேரத்தில் திருமதி சந்திரா.தங்கராஜ் மற்றும் அவர் கணவர் நண்பர் திரு. வி.கே.சுந்தர் வர வரவேற்றோம். அரங்க மேடையின் இருக்கைகளில் அமர வைத்தோம் 

 


விழா தொடங்கியது 

நண்பர் சுரேகா இனிய மாலையில் பல்வேறு அலுவல்களுக்கு இடையில் நீங்கள் அனைவரும் கலந்து கொள்ளும் இவ் விழா தங்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று தொடக்கத்திலேயே தன் காந்த குரலால்
சொல்லி அனைவரையும் விழா நிகழ்ச்சிகளுக்கு ஈர்த்தார் 

அரசன் எல்லோரையும் வரவேற்று பேசினார் (கோவை ஆவி நன்றியுரைக்கும் போது அரசனை தான் எல்லோரும் வரவேற்பார்கள் இங்கே அரசனே வரவேற்பாளர் என்று குறிப்பிட்டார் )





அடுத்து புத்தகம் வெளியிடப்பட்டது நான் கொஞ்சம் தள்ளி நின்றிருந்தேன்.முத்துக்குமார் என்னை கை பற்றி அருகே இழுத்து தன்னருகே நிறுத்தி கொண்டார். புத்தகத்தை அவர் வெளியிட  திருமதி. சந்திரா தங்கராஜ் அவர்கள் பெற்று கொண்டார் 


பின்  முன்னிலை வகித்த சங்கர் பேச அழைக்கப்பட, அவர்  பேசும் 
போது சரவணன் வேகமான மனிதர். தொடர்கதை ஆரம்பித்திருப்பதை என்னிடம் சொன்னவர் ஐந்து மாதங்களுக்கு பிறகு புத்தகம் ரெடி வெளியிடலாமா என்று கேட்டார். சினிமா திரைக்கதை போல் எழுதப்பட்ட 
இது படமாகும் வாய்ப்பிருக்கிறது தொடர்ந்து இது  போல் எழுத வாழ்த்துக்கள் என்று உற்சாகமாய் சொன்னார்  

(நண்பர் சங்கரை  இந்த விழா தொடர்பாக முப்பது தடவையாவது போன் செய்து பேசியிருப்பேன்.அவர் சலிப்படையாமல்  அக்கறையுடன்  விழா பற்றி ஆலோசனை தந்து எல்லோரிடமும் அழைத்து சென்று அறிமுகபடுத்தி விழாவில் என் வேண்டுகோளுக்கு ஏற்ப முன்னிலை ஏற்று  சிறப்பித்தார்.




அடுத்து பேசிய பாலகணேஷ்  தான் படிக்கும் கதைகளை சினிமா காட்சி போல் கற்பனை செய்வதுண்டு என்றும் இந்த நாவல் என் கற்பனைக்கு இடம் வைக்காமல் சினிமா காட்சிகளாக  இருக்கும் விதம் பற்றி சொன்னதுடன்,
 கதையில் வரும் பயோடேட்டா பாலு குறிப்பிடும் வசனங்களை பற்றி குறிப்பிட்டார். இதில் உள்ள குறைகளை தனிப்பட்ட முறையில் சொல்லியிருக்கிறேன் என்றும் இந்த மரம் பெரிதாக வர போகிறது 
என்பது இந்த விதையிலேயே தெரிகிறது என்று குறிப்பிட்டு வாழ்த்தினார் 






தொடர்ந்த நிகழ்ச்சிகள் நாளைய பதிவில் 


அன்புடன் 

ஆர்.வி.சரவணன் 






திங்கள், மார்ச் 17, 2014

வெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன்







வெள்ளை நிறத்தொரு சேவல் கண்டேன்


எனது  பள்ளி பருவ காலங்களில்  (4 ஆம் வகுப்பு முதல் 10 ஆம்  வகுப்பு 
வரை) கிராமத்தில் தான் இருந்தேன். கும்பகோணத்தில் இருந்து 
சுவாமிமலை செல்லும் வழியில் உள்ள ஒரு கிராமத்தில் தான் என் சிறு
வயது கழிந்தது. நாங்கள் இருந்த வீடு அந்த தெருவிலேயே  பெரிய வீடு 
பெரிய வாசல், வராண்டா, பெரிய ஹால், கொல்லை வாசல் ,சந்து  மாடி 
என்று இருக்கும். அங்கே தாத்தா, பாட்டி,அம்மா அப்பா, மாமாக்கள்,சித்தி 
என்று கூட்டு குடும்பமாக எல்லோரும் இருந்தோம்.  

எங்கள் வீட்டில் அப்போது கோழிகள் வளர்த்து வந்தார்கள் கோழி அடை காப்பது, குஞ்சு பொறிப்பது இதெல்லாம் பார்க்க  சிறுவர்களான 
எங்களுக்கு  அதிசயமாக இருக்கும் .நாங்கள் எங்கள் வீட்டில்
அவ்வளவாக அசைவம் விரும்பி  சாப்பிடுவது கிடையாது. (விருந்தினர்கள் வரும் போதும்  அல்லது மாட்டு பொங்கல் அன்றும்  வீட்டில் அசைவம் 
உண்டு)  முட்டை மட்டும் தான் சாப்பிடுவதுண்டு  இப்படி இருக்கையில் சிறுவர்களான எங்களுக்கு பொழுது போக்கு இந்த கோழிகள் தான். 
(அப்போது டிவி செல்போன் கிடையாது ரேடியோ மட்டும் தானே ) 
அவை ஓடுவதும் அவைகளை பிடிக்க நாங்கள் துரத்துவதும் என்று 
பாதி பொழுது அவைகளுடனே  கழியும்.



கோழி அடை காத்து பொறிக்கப்பட்ட குஞ்சுகளை  பருந்து தூக்கி செல்ல வரும். அதனிடமிருந்து காப்பாற்ற தாய் கோழி மட்டுமில்லாது நாங்களும் சேர்ந்து போராட வேண்டி இருக்கும். கோழி யிடமிருந்து அப்போது  மட்டும் வித்தியாசமான ஒரு குரல் வரும் . தாய் கோழியின் குரல் கேட்டவுடன் அருகில் உள்ள குஞ்சுகள் ஓடி வந்து தாயின் இறக்கைகளுக்குள் ஒளிந்து கொள்ளும். தள்ளி நின்று மேய்ந்து கொண்டிருக்கும் குஞ்சுகள் பக்கத்தில் இருந்த செடிகளுக்குள் மறைந்து கொள்ளும். கோழியின் அந்த கண்களில் தெரியும் உக்கிரமான பார்வை தன் அழகு எனும் ஆயுதத்தால் கீழே பறந்து வரும் பருந்தை  தாக்கி விட முனையும் வேகம் பார்க்க வேண்டுமே. அதன் குரல் கேட்டு  நாங்கள் விஷயம் புரிந்து என்ன வேலை பார்த்து கொண்டிருந்தாலும் அப்படியே விட்டு விட்டு ஓடுவோம் தாய் கோழிக்கு ஆதரவாக நின்று நாங்களும் விரட்டுவோம்.

உண்மையில் சொல்ல போனால் நான் பதறி அடித்து ஓடுவேன். தாய் கோழியுடன் இணைந்து காப்பற்ற போராடி குஞ்சுகளை காப்பாற்றிய பின் தான் நிம்மதி வரும்  எனக்கு. அப்படியும் பருந்தோ கழுகோ நொடியில் ஒரு குஞ்சை எடுத்து கொண்டு பறந்து விடும். தாய் கோழியுடன் இணைந்து நானும் பரிதாபமாய் பார்த்து கொண்டு நிற்பேன். மற்ற குஞ்சுகளை யாவது காப்பாற்ற வேண்டும் என்று மனது அந்த வேளையில் உறுதி எடுத்து கொள்ளும் (கோழிக்கும் அதே மன ஓட்டம் தான் இருக்கும் என்று நினைக்கிறேன்). 
இப்படி பருந்துக்கு கொஞ்சம்,சீக்குக்கு (நோய்) கொஞ்சம் நாய்க்கு கொஞ்சம் என்று போனதில் மிஞ்சிய குஞ்சுகள் வளர்ந்து பெரிய சேவல் அல்லது பெட்டை கோழிகளாகும். 


இப்படி வளர்ந்த குஞ்சுகளில் ஒரு சேவல் மட்டும் எங்களின்  கவனத்தை 
ஈர்த்தது. நல்ல உயரம் அது. பளீரென்று தும்பை பூ போன்ற வெள்ளை நிறம்.  அது தன் தலையை சிலுப்பி கொண்டு திரிவது பார்க்க நன்றாக
இருக்கும். தினமும் காலை தூங்கி எழுந்தவுடன் அதை கவனித்து கொண்டே இருப்போம்.அரை மணி நேரம் வெளியில் சுற்றி விட்டு வீட்டுக்கு வந்து  வீட்டை ஒரு முறை வலம் வரும் யார் வந்திருக்கிறார்கள் வீட்டில் இருப்பர்வர்கள் என்ன செய்கிறார்கள் என்பது போல் பார்த்து விட்டு செல்லும். நாங்கள் சாப்பிட்டு கொண்டிருந்தால் பக்கத்திலேயே சுற்றி வரும். அதுவும் அது சின்ன குஞ்சாக இருக்கும் போது எங்கள் மடியில் ஏறி நின்று கொண்டிருப்பதே ஒரு அழகு தான். வீட்டில் உள்ள அனைவருக்கும் அது செல்லமாகி விட்டது. அதுவும் அது வளர்ந்து பெரிய கோழியான பின் 
அதன் கம்பீரம் பார்க்கையில் அசத்தலாக இருக்கும். அதை பிடித்து 
வைத்து கொண்டு அதன் இறக்கைகளை  எங்கள் வீட்டில் நீவி 
கொடுப்பார்கள்.  

 தாய் கோழி குஞ்சுகளை காப்பற்ற பருந்துடன் போராடுவதை 
பார்க்கையில் சேவல் உதவிக்கு வருவதில்லையே ஏன் என்று
 நான் நினைப்பதுண்டு.இயற்கையில் உள்ள பாகுபாடு அப்போது 
எனக்கு குழப்பத்தையும்  கொடுத்ததுண்டு. நான் சேவலை அவ்வளவாக கவனித்ததில்லை.இருந்தும் எனக்கு இந்த சேவல் மீது  மட்டும் பாசம் ஏற்பட்டது.  ஒரு சண்டை சேவல் எப்படி இருக்குமோ அது போல் இருக்கும் இந்த சேவல்.அதன் மேல் தனி கவனம் எடுத்து நாங்கள்  வளர்த்தது கண்டு தெருவில் உள்ளவர்களே கூட ஆச்சரியபட்டார்கள். 

ஒரு நாள் மாலை எப்போதும் போல் அது  வீட்டில் வந்து அடைய 
வேண்டும். வரவில்லை ஏன் வரவில்லை என்று ஒருவருக்கொருவர் 
வினாஎழுப்பி கொண்டோம். தேட ஆரம்பித்தோம். பக்கத்தில் இருப்பவர்கள்  
அரை மணி முன்னாடி பார்த்தேனே நான் காலையிலே பார்த்தேனே என்று சொல்ல சொல்ல எங்களுக்கு மனது அலை பாய  ஆரம்பித்தது. எப்படியும் 
ஒரு நான்கு மணி அளவில் அது வீட்டுக்கு வந்து சென்றதாய் நினைவு. அங்கிருக்கும் தெருக்கள் அத்தனையும் சுற்றி வந்தோம்.
எங்கும் கிடைக்கவில்லை.அப்போது தான்  யார் வீட்டிலே இதற்கு 
மொளகாய் அரைத்து கொண்டிருக்கிறார்களோ என்று தெருவில் 
உள்ளவர்கள் சொல்ல ஆரம்பித்தார்கள். எங்கள் பாட்டி அத்தை இதை மறுத்தார்கள் "இல்லே நாங்க அதை எப்படி பாசமாக வளர்க்கிறோம் என்று ஊருக்கே தெரியும். கண்டிப்பாக அப்படி செய்ய மாட்டார்கள்" என்று சமாதானம் சொல்லி கொண்டார்கள்.  எங்களுக்கு எப்படியும் அது வந்து சேர்ந்து விடும் அப்படி யாராவது பிடித்திருந்தாலும் எங்களின் கஷ்டத்தை பார்த்து விட்டு விடுவார்கள் என்று தான் நினைத்தோம்.
 ஆனால் மறு நாள் காலையிலும் சேவல் வரவில்லை என்றவுடன் தெருவில் இருப்பவர்களே கோபப்பட்டு கத்த ஆரம்பித்து விட்டனர். "எவடி அவ பிள்ளை மாதிரி வளர்க்கிற கோழியை பிடிச்சு சாப்பிடற அளவுக்கு வக்கத்து இருக்கிரவ" என்று. கூடவே எங்கள் பாட்டி அத்தை அம்மா என்று எல்லோரும் கண் கலங்கி திட்டி தீர்த்தார்கள். நான் பிரிவின் வலி எப்படி இருக்கும் என்பதை உணர்ந்த நேரம் அது.

 எங்கள் வீட்டின் கொல்லைபுறத்தில் தென்னை மரங்கள் சூழ்ந்து ஒரு காடு போல் இருக்கும். அந்த தெரு முழுக்க எல்லாருக்கும் சேர்த்து அங்கே ஒரு குப்பை மேடு உண்டு.  அங்கே இரண்டு நாட்களுக்கு பிறகு நாங்கள் வளர்த்த கோழியின் இறக்கைகள் இறைந்து கிடப்பதை  பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனோம். இதோ இந்த நாள் வரை அந்த சேவல்  எங்கள் ஞாபாகத்தில் சுற்றி சுற்றி வருகிறது.

FINAL PUNCH 

எங்கள் வீட்டில் எப்போதாவது தான் அசைவம் சாப்பிடுவோம் என்று சொன்னேன் அல்லவா. நானும் சிறு வயதில் நிறைய இல்லை என்றாலும்   மீன், முட்டை, ஆட்டுகறி என்று அவ்வபோது கொஞ்சம் சாப்பிட்டிருக்கிறேன் ஆனாலும்  பாருங்கள் 15  வயதுக்கு பின்  நான் அசைவம் சாப்பிடுவதை சுத்தமாக நிறுத்தி விட்டேன். எப்போதாவது என்னை வற்புறுத்தி 
மனைவி சாப்பிட சொல்கையில் முட்டை  சாப்பிடுவதுண்டு.சாப்பிட்ட 
பின் நாள் முழுக்க நான் அவஸ்தையில் இருப்பதை பார்த்து விட்டு 
என்னை இப்போது அவர்கள் வற்புறுத்துவதில்லை. அதன் வாசம் அவனுக்கு 
பிடிக்கல தொடர்ந்து வீட்டில் சாப்பிட வைத்து பழக்கபடுத்தலே என்று
அம்மாவும் உறவினர்களும் காரணம் சொல்கிறார்கள்.

எனக்கென்னவோ அந்த சேவலின் மேல் கொண்ட பாசம்  தான் 
எனக்கு அசைவம் பிடிக்காமல் போக காரணம் என்று நினைக்கிறேன் 

ஆர்.வி.சரவணன் 


சனி, மார்ச் 08, 2014

பாக்யாவின் பாராட்டு கடிதம்




பாக்யாவின் பாராட்டு கடிதம் 


(சாதி இரண்டொழிய வேறில்லை)

நான் படித்த கல்லூரியில் மாணவ தலைவர் தேர்தல் வந்தது . தேர்தலுக்கு நின்ற 
இருவருமே என் வகுப்பில் என்னுடன் சேர்ந்து படிக்கும் மாணவர்கள் தான் . அதில் 
ஒருவர் கல்லூரியில் நன்கு பிரபலமானவர். நண்பர்கள் நிறைய உண்டு அவருக்கு. 
இருந்தும் அவருக்கு வாக்கு செலுத்த நான் விரும்பவில்லை.காரணம் கட்சி சார்புடன் 
அவர் நின்றது எனக்கு பிடிக்கவில்லை. (மாணவ சமுதாயத்தில் அரசியல் நுழைவதை 
நான் எப்போதுமே விரும்புவதில்லை ).

ஆகையால் மற்ற நண்பருக்கு  வாக்கு செலுத்தலாம் என்று முதலிலேயே முடிவு செய்திருந்தேன். யாருக்கு வாக்கு நான் செலுத்த நான் முடிவு செய்திருந்தேனோ அவர் என்னிடமும் மற்ற நண்பர்களிடமும் வாக்கு சேகரித்த போது  எனக்கு ஓட்டு போடுங்கள் அவருக்கு போட வேண்டாம் ஏனெனில் அவர் நமது சாதியை சேர்ந்தவரில்லை என்று 
கூறி வாக்கு கேட்டதும் கடுப்பாகி விட்டேன் .

சாதியை முன்னிறுத்திய ஒரே காரணத்தால் நான் அவருக்கு வாக்கு செலுத்தாமல் 
கட்சி சார்புடன் நின்ற நண்பருக்கே ஓட்டு போட்டேன்.அவரே வெற்றியும் பெற்றார். அவர் வெற்றி பெற்றதில் நான் அடைந்த மகிழ்ச்சியை ஒரு புறம் இருந்தாலும் எனது கொள்கையின் படி நான் நடந்து கொண்டதில் எனக்கு மன நிறைவு கிடைத்தது 

இந்த நிகழ்வை தெரிவித்து,எனது அபிமான நடிகர் மற்றும் இயக்குனர் திரு.கே பாக்யராஜ் அவர்களின் பாக்யா வார இதழுக்கு கடிதம் எழுதிஅனுப்பினேன்.(அந்த சமயத்தில் தான் இது நம்ம ஆளு படம் வெளிவந்து ஓடி கொண்டிருந்தது ) என் கடிதத்தை பார்த்து எனக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் அனுப்பியிருந்தார்கள் பாக்யாவில் இருந்து .

எனது சந்தோசங்களில் ஒன்றாக எனது பொக்கிஷங்களில் ஒன்றாக இதை இன்றளவும் பாதுகாத்து வைத்திருக்கிறேன்

இதோ அந்த கடிதம் உங்கள் பார்வைக்கு




பாரதி சரவணன் னு பேர் போட்டிருக்கே அப்படின்னு குழப்பமாகாதீங்க
புனை பெயர் எல்லாரும் வச்சிருக்காங்களே நாமும் வச்சிக்கலாம் னு நினைச்சு 
ஆர்வ கோளாறில் நான் வைத்து கொண்ட பேர் அது 

ஆர்.வி.சரவணன்

FINAL PUNCH 


தளம் ஆரம்பித்த புதிதில் வெளியிட்ட பதிவு இது. அப்போது நான் பாக்யராஜ் அவர்களை சந்தித்திருக்கவில்லை.நான் சமீபத்தில் திரு கே.பாக்யராஜ் அவர்களை சந்தித்த போது 
நடந்த நிகழ்வை சொல்லி கடிதத்தையும் காண்பித்து சந்தோசப்பட்டேன்.
(ஆண் சாதி பெண் சாதி தவிர வேறேது சாதி )


ஞாயிறு, பிப்ரவரி 16, 2014

பண்ணையாரும் பத்மினியும் (பயணித்த) நானும்




பண்ணையாரும் பத்மினியும் (பயணித்த) நானும்


காரை ஒரு உபயோக பொருளாக, இயந்திரமாக பார்க்கும் திசையிலிருந்து வேறுபட்டு அதை உயிருள்ள ஜீவனாக குடும்பத்தில் ஒரு பிள்ளையை போல் பார்க்கும் பண்ணையாருக்கும் அவர் மனைவிக்கும் அந்த காரின் டிரைவருக்கும் (அவர்களுக்குள்ளும்) உள்ள பாசத்தை மையமாக கொண்ட கதை இல்லை இல்லை முழுக்கவே சொல்லும் கதை இது

நான் இதன் குறும்படத்தை இன்னும் பார்க்கவில்லை. இருந்தும் குறும்படமாக எடுக்கப்பட்டதை பெரிய படமாக எடுக்கும் போது காட்சிகள் சுவாரசியம் குறையாமல் கொடுக்க முடியுமா என்று என்னுள் எழுந்த வினாவுக்கு முடியும் என்ற பதில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் அருண்குமார்  

இந்த படம் ஆரம்பிக்கும் போது அவ்வளவு ஏன், ஜெயப்ரகாஷ் தன் உறவினரிடம் காரை பற்றி பேசும் போது (அவருக்கு காரின் மீது பாசம் உண்டு என்பதை மேற்கோள் காட்டியிருக்கலாம்) என்ன இது காரை பற்றியே பேசுகிறார் என்று எரிச்சலாவார் அந்த உறவினர். அது போல் நானும் கொஞ்சம் எரிச்சலானேன். என்னடா இது தெரியாமல் வந்து உட்கார்ந்துடோமோ என்று. இதை இப்படியும் சொல்லலாம்.தெரு ஓரத்தில் நின்று கொண்டு போனால் போகுது என்பதாக காரை வேடிக்கை பார்ப்பதாக மட்டுமே இருந்தது அப்போதைய என் நிலை. இருந்தும் என்னை எப்போது இயக்குனர் காருக்குள் (கதைக்குள்) இழுத்து போட்டார் என்பதே தெரியாமல் போய் விட்டதை இடைவேளையில் தான் கவனித்தேன்

ஜெயப்ரகாஷ் துளசி ஆதர்ச தம்பதி என்று சொல்வார்களே அது போல்.
 இருவருக்கும் உள்ள அந்த அன்பு காதலை, சின்ன சின்ன வசனங்களில் முக பாவங்களில் அது வெளியாகும்
விதத்தை அசத்தலாய் தந்திருக்கிறார் இயக்குனர்.
உதாரனத்திற்க்கு சொல்ல வேண்டும் என்றால் துளசியை ஊஞ்சலில் உட்கார வைத்து விட்டு ஜெயப்ரகாஷ் பரிமாறி கொண்டிருக்கும் போது வேலையாள் வந்து விட உடனே அவர் பாத்திரத்தை கீழே வைத்து விட்டு மேலும் கீழும் பார்ப்பதும் அவன் சென்றவுடன் மீண்டும் பரிமாறுவதும் அதை துளசி ரசித்து கொண்டே வேண்டாம் என்று சொல்வதும் என்று அவர்கள் இருவருமே தங்கள் கேரக்டரை உள் வாங்கி அழகாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.வயதான தம்பதிகள் பார்த்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும் நம் வாழ்க்கை என்று ஏக்கம் கொள்வார்கள். இளவயது தம்பதியர் வருங்காலம் இப்படி தான் வாழ வேண்டும் என்று விரும்புவார்கள்.(எனக்காக பிறந்தாயே பேரழகா பாடல் காட்சி அசத்தல் ரகம் (ராகம்) 

விஜய் சேதுபதி கதையின் நாயகனாக அந்த பத்மினி காரின் டிரைவராக நடித்திருக்கிறார் அந்த கார் மேல் அவர் காட்டும் பாசம் காரை கற்று கொண்டு தன்னை வேலையை விட்டு நீக்கி விடுவாரோ என்ற பயத்தில் முதலாளியையே அதட்டி ஏனோ தானோவென்று கற்று கொடுப்பதும் பின்பு அவர்களின் அன்பு புரிந்து உண்மையாகவே கற்று கொடுப்பதும் என்று தன் பங்குக்கு சூப்பராக ஸ்கோர் செய்திருக்கிறார் (முதலாளி என்றால் இப்படி இருக்கணும்). 

அவரது ஜோடியாக வரும் ஐஸ்வர்யா, ஜோடிக்கு ஒரு ஆள் வேண்டும் என்பதற்காகவே இருப்பது போல் தான் அவரது கேரக்டர். அவர்கள் 
காதல் கதைக்கு அவசியமில்லை தான் இருந்தாலும் காரை சுற்றியே 
வரும் கதைக்கு கொஞ்சம் ரிலாக்ஸ் செய்து கொள்ள
பயன்பட்டிருக்கிறது..அவரின் சினிமாஸ்கோப் கண்கள் தன்னை பதிவு செய்யும் காமேரவையே விழுங்கி விடும் போல் அவ்வளவு ஈர்ப்புடன் இருக்கிறது.
 . 
சினேகா ஒரு காட்சி தான் என்றாலும் சுவாரஸ்யம் தான். கார் உங்களுக்கு தான் என்று சொல்லும் போது ஜெயப்ரகாஷ் க்கு வரும் நெகிழ்ச்சி போல்



அந்த பீடை பெருச்சாளி சைசில் இருந்து கொண்டு ( படத்தில் அவர் பெயரும் அது தான்) வீட்டு வேலை செய்பவராக வருகிறார் பாலா. ரொம்ப பேசறாங்க நல்லாருங்க னு வாழ்த்திரவா என்று சொல்லும் போது அதிர்கிறது. அவரை வைத்தே செண்டிமெண்டை உடைப்பது கூட நல்ல விஷயம் தான். அவரது பார்வை மற்றும் குரல் மாடுலேஷன் பார்க்கும் போது நீங்க ரொம்ப நல்லா வருவீங்க னு சொல்ல தோணுது (இது அவர் படத்துல சொல்ற தன்மையில் சொல்லலைங்க உண்மையா சொல்றேன் ) 




ஜெயப்ரகாஷ் துளசி இருவரும் விஜய் சேதுபதியிடம் இருவரின் ஆசையை தெரிவிக்கும் போது விஜய் சேதுபதி நெகிழும் இடம் நம்மையும் நெகிழ வைக்கும் ஒன்று.

கார் தான் படத்தின் ஹீரோ என்றே சொல்லலாம். கதையும் கட்சிகளும் முழுக்கவே அதை சுற்றியே பயணிக்கின்றன கூடவே காதல் நகைச்சுவை என்று அழகாக இயக்குனர் அருண்குமார்.
அங்காங்கே சரியான விகிதத்தில் அழகுபடுத்தி இருக்கிறார். கார் ஹீரோ எனும் போது வில்லன் இல்லாமலா ஒரு மினி பஸ் தான் அங்கே வில்லன் போல். அதன் ஓட்டுனர்  நடத்துனர் மற்றும்  விஜய் சேதுபதி அவைகளின் சார்பில் மோதி கொள்வது கூட ரசனையுடன் ரசிக்க வைக்கிறது 

பண்ணையாரின் மகள் வரும் போதெல்லாம் ஏதேனும் ஒரு பொருளை எடுத்து செல்வார் .கண்டிப்பாக அவர் காரை தான் கேட்க போகிறார் என்று நமக்கு தெரிந்து விடுகிறது இருந்தாலும் அது எப்ப என்று நம்மை டென்சனுடன் விடுகிறார் இயக்குனர் 


 நீலிமா காருக்காக தன் தந்தையிடம் பேசும் போது விஜய் சேதுபதி ஊர் சுற்றுவதற்காக எடுத்து சென்றிருப்பதை குறிப்பிட்டு "வேலைகாரனுக்கு கொடுப்பீங்க பொண்ணுக்கு கொடுக்க மாட்டீங்களா" என்று தந்தையை

 லாக் செய்வார். அது போல் விஜய் சேதுபதி காரை கேட்க "ஏன் எங்கப்பாவுக்கு வாயில்ல அவர் கேட்க மாட்டாரா நீ ஊர் சுத்தறதுக்கு
கேட்கறியா  எங்கப்பாவுக்கு யார் யாரை எங்கே வைக்கனும்னு தெரியல" என்பார். இயக்குனர் அங்காங்கே இப்படி லாக் கொடுத்து அதை பின்பு ரீலீஸ் செய்திருப்பார். இது போன்ற சுவாரஸ்யங்களும் உண்டு திரைக்கதையில் 

பாடல்களிலும் பின்னணி இசையிலும் ஜஸ்டின் பிரபாகரன் இயக்குனருக்கு வலது கரமாக செயல்பட்டிருக்கிறார் பின்னணி இசையை ரொம்பவே ரசித்தேன் . கிராமத்தை  கண் முன் நிறுத்தி வைக்கிறது ஒளிப்பதிவு 


அட்ட கத்தி தினேஷ்  கதையை சொல்வதாக படம் நகர்கிறது.  அவரது சின்ன வயசு கேரக்டர் ஒரு அழகிய கவிதை. விஜய் சேது பதி வாங்க நாங்க டிராப் பண்றோம் என்பதாக காட்டாமல் தினேஷ் நின்றிருக்கும் காருக்குள் ஏறி அமர்ந்து கண் மூடி ரசனையுடன் ரசிப்பதாக அமைத்து விஜய் சேதுபதி வந்து பார்த்து விட்டு யாருங்க நீங்க என்று கேட்கும் போது அவர் சிரித்து கொண்டே எழுந்து வெளி வந்து தனது விலையுயர்ந்த காரில் ஏறி கொண்டு செல்ல விஜய் சேதுபதி புரியாமல்  பார்க்கும் படி  முடித்திருந்தால் இன்னும் கவிதையாக இருந்திருக்கும் (மோ)

நான் 42 வயதில் தான் டூ வீலர் ஓட்டவே கற்று கொண்டேன். வண்டி  வாங்கி ஓட்ட கற்று
கொண்டவுடன் எனது உற்சாகம் சொல்லி மாளாது. டூ வீலர் தான் என்றாலும் அதன்மேல் எனக்கு தனி மோகமே உண்டு.
படம் முடிந்தவுடன் எனக்கு உடனே சென்று எனது டூ வீலரை ஆசையுடன் தொட்டு பார்க்க வேண்டும் என்று தோன்றியது. 
இதுவே (இப் படத்தின்) இயக்குனரின் வெற்றி 



FINAL PUNCH


அந்த கார் வீட்டு வாசலில் மரத்தடியில் நின்றிருக்கும் போது அதன் மேல் மஞ்சள் மலர்கள் விழும். அதை ஜெயப்ரகாஷ் ஆசையாக பார்த்து சந்தோசபடுவார். கார் இல்லாமல் இருக்கும் போது அதே மஞ்சள் மலர்கள் தரையில் விழுந்து கிடக்கும். அது கார் வரவை எதிர்பார்த்திருப்பது போல் தோன்றியது எனக்கு.  இயக்குனர்  அருண்குமாரின் அடுத்த படத்தை இப்படி எதிர்பார்க்க தோன்றுகிறது.  வாழ்த்துக்கள் 

ஆர்.வி.சரவணன் 

சனி, பிப்ரவரி 15, 2014

குடந்தையில் மாசி மக விழா




குடந்தையில் மாசி மக விழா 


பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை வருவது மகாமகம்.ஒவ்வொரு வருடமும் வருவது மாசிமகம். முதலில் மகாமகம் பற்றிய வரலாறை பார்ப்போம்

ஊழி பெரு வெள்ளத்தால் அழிய இருந்த உலகம் அழியும் நிலை வந்த போது பிரம்மன் சிவனிடம் கேட்க அவர் பல புண்ணிய ஸ்தலங்களில் இருக்கும் மணலை அமுதத்தோடு சேர்த்து கும்பம் செய்து அதில் அமுதத்தை நிரப்பி பூஜை செய்யும் படி ஆணையிட்டார் .வெள்ளம் வந்து கும்பத்தை அடித்து சென்று ஓரிடத்தில் சேர்த்தது. அங்கு வந்த சிவபெருமான் கும்பத்தில் 
 பானம் எய்தார்.கும்பம் உடைந்து அதிலிருந்த அமுதம் பூமியில் பரவியது அந்த இடமே மகாமக குளம். கும்பம் வந்து சேர்ந்த இடமாதலால் குடமூக்கு என்று பெயராயிற்று. குடம் என்றால் கும்பம் மூக்கு என்றால் கோணம் அதுவே பின் கும்பகோணம் என்ற ஊர் பெயராயிற்று.

குருபகவான் சிம்மராசியில் இருக்கும் போது மாசி மாதத்து பௌர்ணமியும் 
மக நட்சத்திரமும் கூடும் நாள் மகாமக திருநாள். இந்த நாளில் நவ கன்னியரான நதிகள் தங்கள் பாவங்களை போக்கும் விதம் எப்படி என்று சிவபெருமானிடம் கேட்க அவர் மகாமக நாளில் வந்து மகாமக குளத்தில் வந்து நீராடுங்கள் நான் பார்வதியுடன் காட்சி தந்து தங்களின் பாவங்களை பெற்று கொள்கிறேன் என்று உரைக்க அது போல் அவர்கள் வந்து நீராடுவதாக ஐதீகம். மனிதர்களான நாமும் சென்று நீராடினால் நம் பாவங்கள் விலகும் என்று சொல்கிறது தல வரலாறு 

ஒவ்வொரு மாசி மகம் வரும் போதும்  நான் சென்னையில் தான் இருப்பேன் அன்றைய நாள் என் மனம் இங்கேயே தான் இருக்கும். இன்று கும்பகோணத்தில் இருக்கும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது.கும்பகோணத்தில் உள்ள ஆலயங்களிலிருந்து உற்சவர்கள் திரு வீதி உலா வந்து மகமாக குளத்தில் தீர்த்தம் தரும் நேரத்தில் நான் சென்றிருந்தேன். நான் எடுத்த படங்கள்  இங்கு 







உற்சவர் தீர்த்தம் கொடுக்க மகாமக குளத்துக்கு வருகை 




சோமேஸ்வரர் கோவில் உற்சவர் 


மகாமக குளம் அருகிலுள்ள அபிமுகேஷ்வர் ஆலயம் 


 நாகேஸ்வரன் கோவில் உற்சவர் 




மகாமக குளம் 

இந்த மகாமக குளம் இருபது ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் இருபது கிணறுகள் உள்ளன. 

ஆர்.வி.சரவணன் 

FINAL PUNCH 

பாவம் செய்தவர்களை காசிக்கு சென்று கங்கையில் நீராடு என்று சொல்வார்கள். ஆனால் காசியில் பாவம் செய்தவர் கும்பகோணத்தில் 
மகாமக குளத்தில் நீராடினால் பாவம் தொலையும் என்கிறது தல வரலாறு 

ஓம் நமசிவாய 

செவ்வாய், பிப்ரவரி 04, 2014

கோலி சோடா




கோலி சோடா

 அனாதை சிறுவர் சிறுமியரை  ரோட்டில் கடந்து செல்லும் போது நின்று அவர்கள் வாழ்க்கையை பிரச்சனைகளை கவனித்திருக்கிறோமா. அப்படி நின்று கவனித்தால் அவர்களிடமும் ஒரு கதை இருக்குமே அதை தான் கோலிசோடா வாக்கியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் இயக்குனர் விஜய் மில்டன் 

கோயம்பேடு மார்க்கெட்டில் அனாதை சிறுவர்கள் நான்கு பேர் மூட்டை தூக்குபவர்களாக இருந்து தங்களுக்கு என ஒரு அடையாளம் வேண்டும் என்று ஹோட்டல் ஆரம்பிக்க அந்த இடத்தை கொடுத்தவரின் உறவினர் ( கையாள்)  அங்கே அசிங்கங்களை நிறைவேற்ற பொறுக்காதவர்கள் பொங்கி எழுந்து  அவர்களை எப்படி ஜெயிக்கிறார்கள் என்பதே கதை. இவ்வளவு தானா  என்று நினைக்க வைக்காமல் அந்த சிறுவர் சிறுமியரும் இயக்குனரின் திரைக்கதையும் சீட் பெல்ட் போட்டு நம்மை உட்கார வைத்திருக்கிறார்கள் 

பசங்க படம் எனக்கு ரொம்ப பிடிச்ச படங்கள்ல ஒண்ணு. அதிலே நடிச்ச பசங்க நான்கு பேரும் இங்கே வளர்ந்த பசங்களாக.  கடற்கரையில் அந்த பெண்ணின் கோலத்தை பார்த்து (சித்தப்பா) பையன்  அழும் காட்சி ஒரு சாம்பிள் 

 அந்த எ டி எம் சிறுமி சூப்பர் கேரக்டர் அந்த பெண்ணும் அதை கரெக்டா மேட்ச் பண்ணிருக்கு.அது ஏதோ காமெடியாய் ஓரிரு காட்சிகள் தான் வர போகிறது என்று நினைத்திருக்கையில் முக்கிய கேரக்டரில்  படம் முழுக்க பட்டையை கிளப்புகிறது அந்த பெண்ணின் பார்வை உடல் மொழி எல்லாம் கலக்கல். 

ஆச்சியின் மகளாக வரும் பெண்ணும் கண்கள் லட்சணமான முகம் என்று தன் பங்குக்கு ஸ்கோர் செய்திருக்கிறது 


நம்ம அண்ணாச்சி போலீஸ் ஸ்டேசனில் பேசும் 
வசனங்கள் சொல்லுங்கண்ணே சொல்லுங்க என்று மேலும் கேட்க 
வைக்கும் விதத்தில்.தியேட்டரில் கரவொலி ஏற்படுத்துகின்றன
 \

சுஜாதா ஒரு தாய் போல் அரவணைப்பதிலும் இதுல யாருடா என் மருமகன் என்று கேட்பதிலும்  நான் செத்து ரெண்டு மணி நேரமாச்சு என்று  கொடுக்கும் உருக்கத்திலும்  படு பாந்தம்

அந்த மயில் கேரக்டர் (விஜய் முருகன் )எழுந்து போய் அறையலாமா என்று தோன்ற வைக்கும்  கடுப்பை  நடிப்பில்  தந்திருக்கிறார். நாயுடுவாக வருபவர்  ஆரம்பத்தில் மரியாதையாக பேசுவதாகட்டும் பின் அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக தன்  சுயரூபம் காட்டுவதாகட்டும்  அதற்கேற்ற குரல் மற்றும் முக பாவங்களில் மிரட்டுகிறார் 

 ஆச்சி திரும்ப வந்திருக்கும் சிறுவர்கள் நான்கு பேரையும் கட்டி பிடித்து கொண்டு அழ, அந்த புள்ளி (கதாநாயகன்)  கை நீட்டி ஆச்சி மகளின் கை பற்றி கொள்வது கிளாஸ்

"ஆசைப்பட்டு அரிவாள் வாங்கி  என்னையே கிழிச்சிகிட்ட மாதிரி என் கிட்டே காசு வாங்கி என் பெண்ணையே டாவடிகிறீங்களா" ,"நல்லா படிக்காதது க்கு தான் நான் கவலைப்படணும் நல்லா பிறக்காத தற்கு நான் ஏன் கவலைப்படணும்"

 பாண்டிராஜ் வசனம் அங்காங்கே நச் சென்று காட்சிகளுக்குள் தன்னை பொருத்தி கொள்கிறது 


ரசிக்க நல்ல விஷயங்கள் நிறைய இருந்தாலும் இடைவேளைக்கு பின் வரும் முதல் சண்டை காட்சி விறுவிறுப்பா இருந்தாலும், சண்டைகள் சிறுவர்கள் சித்ரவதை தொடர்வதை தவிர்த்திருக்கலாம். நாயுடுவின் இடத்தில கடை போடாமல் எதிரிலோ பக்கத்திலோ கடை போட 
அங்கேயும் தொல்லை தொடர்கிறதாக காட்டியிருக்கலாம்.  சின்ன வயசு பையன்கள் காதலை (கொஞ்சம் அவஸ்தையுடன்) ரசிக்க முடிகிறது.கோயம்பேடு தான் கதை களம் எனும் போது இவர்களை தவிர அங்கிருக்கும் மற்றவர்களுக்கும்  கதையில் இடம் கொடுத்திருக்க வேண்டும். 

ஒவ்வொருவருக்கும் அடையாளம்  என்பது எவ்வளவு முக்கியம் 
என்பதே படத்தின் மையக்கருத்து. இந்த படத்தில் நடிதிருப்பவர்களுக்கு மட்டுமல்லாமல் இயக்குனருக்கும் அடையாளம் தந்திருக்கிறது இந்த 
கோலி சோடா.   



FINAL PUNCH

சிறுவர் கதை என்றாலும் அவர்களை குடிப்பவர்கள புகைப்பவர்கள என்றெல்லாம் காட்டாமல் அக்கறையுடன் உழைக்க துடிப்பவர்களாய் காட்டிய விதத்தில் சபாஷ் பெறுகிறார், இயக்குனர் விஜய் மில் டன் 

ஆர்.வி.சரவணன் 



சனி, பிப்ரவரி 01, 2014

ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில்





ஸ்ரீ வீரட்டேஸ்வரர் திருக்கோவில் 


(சிவன் காமனை எரித்து உயிர்ப்பித்த ஸ்தலம்)  

எனது ஊரான கும்பகோணம் கோவில் நகரம் என்று பெயர் பெற்றது.  ஊரை சுற்றி பிரசித்தி பெற்ற கோவில்கள் தான் எவ்வளவு இருக்கின்றன. அதில் சிறப்பு பெற்ற சிவன் கோவில் பற்றிய பதிவு இது 

எங்கள் வீட்டுக்கு அருகில் இருப்பவர்கள் இந்த புண்ணிய ஸ்தலத்துக்கு சென்று விட்டு வந்து கோவிலை பற்றியும் அதன் சிறப்பையும் எங்களிடம் தெரிவித்தார்கள். கோவில் செல்லும் ஆர்வம் எழுந்தது.  சென்ற  ஞாயிறு  அன்று கிளம்பினோம் 


கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் மெயின் ரோட்டில் குத்தாலம் 
என்ற ஊர் வருகிறது. அங்கிருந்து உள்ளே திருமணஞ்சேரி செல்லும் பாதையில் சென்றால் 
காளி என்ற  ஊருக்கு அடுத்து வருகிறது இந்த திருகுறுக்கை  ஊர். (மயிலாடுதுறையிலிருந்து நீடூர் வழியாகவும் செல்லலாம் ) 

கோவிலுக்கு அருகில் கடைகள் ஏதும் இல்லை என்று சொன்னதால் குத்தாலத்தில் அர்ச்சனை பொருட்கள் மாலைகள் வாங்கி கொண்டு கிளம்பினோம். செல்லும் பாதை மிககுறுகலாய் கொஞ்சம் மேடு பள்ளத்துடன் தான் இருக்கிறது அதற்காக தயங்க தேவையில்லை. இரு பக்கமும்
இயற்கை வாரி இறைத்திருக்கும் அழகுக்கு முன் அது ஒன்றும் பெரிய விசயமில்லை. பரபரப்பான இந்த உலகத்தில் அந்த பரபரப்பை உள்ளே அனுமதிக்காதது போல் இருக்கும்  இந்த ஊரில் தான்  இறைவன் அருள் பாலிக்கிறார் 



இறைவனின் திருத்தலம் பார்க்கையில் அதன் எழில் நம்மை பரவசம் கொள்ள வைக்கிறது. கோவிலுக்கு எதிரே  பெரிய குளம் படிக்கட்டுகளுடன் இருக்கிறது. கோவிலுக்குள் நுழைந்தால் அதன் அமைதியே நமக்கு ஒரு அழகை தருகிறது என்றால் அது மிகையல்ல. கோவில் அர்ச்சகரிடம்  கேட்டு கோவில் பற்றிய சிறப்புகளை தெரிந்து கொண்டோம் 

யோக நிலையில் இருக்கும் சிவபெருமானின் 
தவத்தை கலைக்கும் பொருட்டு தேவர்கள் யோசனையின் படி மன்மதன் சிவன் தவம் இருக்கும் இடத்திற்கு ஒரு பர்லாங் தூரத்தில் இருந்து கொண்டு, கரும்பால் வில் செய்து அதில் மலர்கணை  எய்கிறார். சிவன் நிஷ்டை கலைந்ததால் தன் நெற்றி கண்ணை திறந்து பார்க்க,  மன்மதன் எரிந்து  சாம்பலாகிறான். மன்மதன் மனைவி 
ரதி வந்து சிவனிடம் வேண்டி பிரார்த்திக்க மன்மதனை உயிப்பித்து தனது அருள் புரிகிறார் சிவபெருமான்.  இனி உன் கணவன் உன் கண்களுக்கு மட்டுமே தெரிவான் மற்றவர் கண்களுக்கு தெரிய மாட்டான் என்றும் உரைக்கிறார். இதுவே இந்த தளத்தின் வரலாறு.



உள் பிரகாரத்தில் விநாயகருக்கு தனி சன்னதி உள்ளது இவர் குறுங்கை விநாயகர் என்று அழைக்கபடுகிறார்.




இங்குள்ள தீர்த்ததிற்கு சூழ தீர்த்தம் என்று பெயர்  



இறைவன் யோகிஸ்வரர் என்ற பெயருடன் மேற்கு நோக்கிய சன்னதியில்
வீற்றிருக்கிறார்.  ஆலயம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. அம்பாள் ஞானாம்பிகா என்ற பெயருடன் தெற்கு நோக்கிய  சன்னதி யில் நின்ற 
கோலம் கொண்டிருக்கிறார் கோவிலை சுற்றி உள் பிரகாரம் மட்டுமில்லாமல் சுற்றி வர வெளி பிரகாரமும் இருக்கிறது


                   கோவில் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் 
              அழகுறசெதுக்கப்பட்டுள்ளன 


இது சிவபெருமானின் அஷ்ட வீரட்டான தலங்களில்ஒன்று 


இத் தலத்திற்காக திருநாவுக்கரசர் இரு பதிகங்கள் இயற்றியுள்ளார் 



இறைவனை தரிசித்து கொண்டிருக்கும் போது வேகமாக பேச கூட கொஞ்சம் தயக்கமாக இருந்தது காரணம் அந்த அமைதி இறைவன் நிஷ்டையில் இருப்பதாய் நமக்கு செய்தி சொல்வது போன்று இருந்தது.  அந்த கோவிலின் (ஊரின்) அழகை பார்க்கும் போது இந்த ஊரில் வாடகைக்கு வீடு கிடைத்தால் சில நாட்கள் தங்கி தினமும் இறைவனையும் தரிசித்து கூடவே இந்த அமைதியையும் ரசிக்கலாமே என்று சொன்னேன். 





மூலவர் லிங்க வடிவில் காட்சி தரும் வீரட்டேஸ்வரர் தியான பலம், மனோபலம் இவற்றுடன் செய்த தவறை மன்னித்தும் அருள்
புரிகிறார். இழந்ததை மீட்டு கொடுக்கும் யோக மூர்த்தி மன்மதனை 
ரதிக்கு மீட்டு தந்திருகின்றன் உண்மை பக்தியுடன் அவர் சன்னதியில் 
சென்று உளமார வழிபட்டால் அவன் அருள் கிடைக்கும் நல்லதே நடக்கும் 



மன்மதன் எரிக்கபட்ட்ட இடம் இரு தெருக்கள் தள்ளி இருக்கிறது. விபூதி குட்டை செல்லும் வழி என்ற அறிவிப்பு பலகை இருக்கிறது அங்கே சென்றோம் ஒரு தோட்டம் போல் இருந்த இடத்தில் சதுர வடிவில் பெரிய தொட்டி போல் இருந்தது சிறுவர்கள் அழைத்துசென்றார்கள்.
அந்த தொட்டியில் மணல் திருநீறு போன்ற வெண்மையில் இருக்கிறது . (சுற்றியுள்ள இடங்களில் செம்மண் போல் இருந்தாலும்)







கோவிலை விட்டு கிளம்பி வருகையில் இறைவனை நேரில் கண்டது 
போன்ற திருப்தி ஏற்பட்டது எங்களுக்கு.  அது மனபிரம்மையாக இருக்கலாம் என்று சொல்லும் போது கூடவே ஏன் இறைவன் ஆசி யால் ஏற்பட்ட திருப்தியாக கூட இருக்கலாமே  என்றும் சொல்ல தோன்றுகிறது   


FINAL PUNCH 

பழைய பக்தி பாடல் ஒன்று உண்டு "எழுதி எழுதி பழகி வந்தேன் எழுத்து கூட்டி பாடி வந்தேன் பாட்டுக்குள்ளே முருகன் வந்தான் பாடு பாடு என்று சொன்னான்"  

எனக்கு எழுத்தறிவித்த இறைவன் தன் புண்ணிய பூமிக்கு வர வைத்திருக்கிறார். எழுத வைத்திருக்கிறார். (குருவாய் என்னுள் அமர்ந்து)

ஓம் நமச்சிவாய 

ஆர்.வி.சரவணன்