ஞாயிறு, மார்ச் 24, 2013

வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா


வலங்கைமான் மகா மாரியம்மன் பாடை காவடி திருவிழா 




கும்பகோணம் மன்னார்குடி சாலையில் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டரில் மன்னார்குடி செல்லும் வழியில் உள்ளது வலங்கைமான்.இங்கு மிகவும் புகழ் வாய்ந்த ஸ்தலம் பாடை கட்டி மகா மாரியம்மன்கோவில்.  இங்கு வருடா வருடம் தமிழ் மாதம் பங்குனி இரண்டாவது ஞாயிறு அன்று நடைபெறும் பாடை காவடி திருவிழா புகழ் வாய்ந்த ஒன்றாகும். 
08-03-2013 அன்று பூச்சொரிதல் விழாவும்,10-03-2013 அன்று காப்பு கட்டுதலும்,17-03-2013 அன்று திருவிழா தொடக்கமும் நடைபெற்று, இன்று 24-03-2013 கோவிலில் பாடை கட்டி திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது.இதன் தொடர்ச்சியாக 31-03-2013 அன்று புஷ்ப பல்லக்கு விழாவும்,07-03-2013 அன்று கடை ஞாயிறு விழாவும் நடைபெற உள்ளது  


இந்த கோயிலின் சிறப்பு  என்னவென்றால், உடல் நலம் சரியில்லாதவர்கள், வாழ்க்கையில் கஷ்டபடுபவர்கள் அம்மனிடம் வேண்டி கொண்டு ,தாங்கள் வேண்டியது நிறைவேறியவுடன் ஈமக்ரியை செய்வது போல் பாடை காவடி எடுத்து உறவினர்கள் கொல்லி சட்டி ஏந்தி கொட்டு மேளம் கொட்டி வர ஆலயத்தை வலம் வந்து அம்மன் சன்னிதானம் முன் தாங்கள் நேர்த்திகடனை நிறைவேற்றுகின்றனர். இது பார்ப்பவர்களை பரவசம் அடைய வைக்கும்   
அற்புத காட்சி நான் எடுத்த சில படங்களை இங்கே உங்களுக்கு தந்திருக்கிறேன் 





இரவில் மின் வெட்டில் ஜொலிக்கும் கோவில் வாசல்     



பகலில் கோவில் நுழைவாயில் 





அலகு காவடி எடுத்து வரும் பக்தர்கள் 


தெருவில் எங்கும் அலகு காவடி 







ஊரெங்கும் பாடை காவடி 




ஈம கிரியை போன்ற வேண்டுதல் 


மகா மாரியம்மனின் திரு வீதி உலா 

 மகா மாரியம்மனின் அருள் நம் அனைவருக்கும் கிட்டட்டும் என்று உளமார வேண்டுகிறேன் 




ஆர்.வி.சரவணன்  

திங்கள், மார்ச் 18, 2013

இளமை எழுதும் கவிதை நீ -23







இளமை எழுதும் கவிதை நீ -23

என் வாழ்க்கை பாலைவனமாய் மாறியிருந்த சமயம் 
ஒரு வற்றாத ஜீவ நதியாய் நுழைந்தவள் நீ 


தோழி கேட்ட கேள்விக்கு  உடனடியாக  பதில் கொடுத்தாள் உமா 

"எனக்கு தெரியாத  யாரோ ஒருத்தர் பேர்  சொல்லிருந்தா நான் ஏன் அவன் 
கூட வண்டில போகணும் னு சொல்லிருப்பேன். எனக்கு தெரிஞ்ச  சிவா பேரை சொன்னதாலே தான் அது என் இஷ்டம் னு சொன்னேன் புரிஞ்சுதா" என்றாள்.

  "பதிலை சும்மா விசிறி அடிக்கிறே" 
என்று தோழி சிரித்த படி சொல்ல கல்லூரிக்குள் நுழைந்தனர் இருவரும். சில மாணவிகள் சூழ்ந்து கொண்டு அவளிடம் கல்லூரி ஆண்டு விழாவுக்கான ஏற்பாடுகளை பற்றியும் அதில் இடம் பெற வேண்டிய நிகழ்ச்சிகள் பற்றி டிப்ஸ் சொல்ல, பிரின்சிபாலிடம் கேட்டு சொல்வதாக சொல்லி விட்டு  வகுப்பறை நோக்கி தோழியுடன் நடந்தாள். 

தொடரும்

ஆர்.வி.சரவணன்

ஓவியம் : வலைபதிவர் பிரியா அவர்கள் 

சனி, மார்ச் 09, 2013

ஹரிதாஸ்-தி மாஸ்



ஹரிதாஸ்-தி மாஸ்

நாம் முற்றிலும் எதிர்பார்க்காத சில படங்கள் வந்து நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விடும். அப்படி ஒரு படம் ஹரிதாஸ். 

என்கௌன்ட்டர் ஸ்பெசலிஸ்ட் போலீஸ் அதிகாரி கிஷோர்.அவர் மகன் 
ஒரு ஆட்டிசம் பாதித்த  பையன் என்பதால் அவனை சிறப்பு பயிற்சிகள் கொடுப்பதன் மூலம் சமுதாயத்தில்  அவனை சாதனையாளனாக்க  அவர் மேற் கொள்ளும் முயற்சிகள் ஒரு பக்கம். தாதாவை வேட்டையாட முனையும் அலுவலக  வேலை இன்னொரு பக்கம். இந்த மென்மையையும் வன்மையையும் ஒன்றாக  சேர்த்து ஒரு அழகிய படைப்பை  தந்திருக்கிறார் இயக்குனர்.

ப்ரித்வி ராஜ்தாஸ் 

 படத்தில் இந்த பையனை பார்க்கும் போது நிஜமாகவே ஆட்டிசம்  
பாதித்த பையன் தானோ என்று நினைக்கும் அளவுக்கு ஹரியாகவே மாறியிருக்கிறான். அவனது அந்த மேல் நோக்கி செருகிய கண்கள், என் நேரமும் கை விரல்களின் அலைவு, சாய்வான ஒரு நடை என்று வசனங்கள் எதுவும் இல்லாமலே  தன் நடிப்பால் நமை ஈர்த்து படத்தையே தூக்கி  நிறுத்தியிருக்கிறான் ப்ரித்வி   

கிஷோர் 

துப்பாக்கி பிடிச்சு மூளை இரும்பாகிடுச்சு என்று சூரி சொல்லுமளவுக்கு 
தன் அலுவலக  வேலையில்  விறைப்பானவராய்,  இப்படிப்பட்ட உன்னை வச்சிகிட்டு நான் என்ன பண்ண போறேன் என்று பையனை கட்டி கொண்டு  கலங்கி நிற்பவராய் என்று கிஷோர் ஜோர் என்று   கை தட்ட வைக்கிறார் கமிட்டியில் தன் பையன் பெயர் இல்லையென்று தெரிந்தவுடன் அவர்களிடம்  போராடி, என் பையன் போட்டில கலந்துகிட்டாலே ஜெயிச்ச மாதிரி சார்  என்று கெஞ்சும் போது அசரடிக்கிறார்  மனிதர்.

சினேகா 

வகுப்பில் கிஷோர் முன்னிலையில் ரைம்ஸ் சொல்ல  சிரமப்படுவதும், 
 தாயின் கத்தலை காதில் வாங்கி கொண்டே பார்வையால் தன் எதிர்ப்பை தெரிவிப்பதும்,  சிறுவனை பைத்தியமா என்று கூட்டம் கிண்டலாய் பார்க்கையில் அவனை அரவணைத்து கொண்டு அழுவதும் என்று சிநேகா அந்த டீச்சர் கேரக்டரில் மிக இயல்பாய் பொருந்தி நிற்கிறார்.  ஸ்பெஷல் சைல்ட் டுக்கு  உரிய டீச்சர் என்றல் இப்படி தான் இருக்க வேண்டும் என்ற நிறைவை தந்திருக்கிறார்.





சிறுவனின் திறமையை அப்பா கிஷோர் கண்டறிந்து 
நெகிழ்ந்து போய் நிற்கும் இடம்   

கடத்தப்பட்ட நண்பனை அங்கே தேடுவதும் இங்கே ஹரிதாஸ் காணாமல் சிநேகா தேடுவதும் என்று வரும் பரபரப்பான காட்சிகள் 

கோச்  சொல்லும் நெகடிவ் பாயிண்ட்ஸ் அனைத்தையும்    டாக்டர் தன் பாசிடிவ் பாயிண்ட்ஸ் வசனங்களால் உடைக்கும் காட்சி

பள்ளி கூட வகுப்பறை கல கல காட்சிகள்

 சிறுவனுக்கு தாயாக விரும்புவதை சினேகா வெளிபடுத்தும் விதமும்   அதை கிஷோர் மறுப்பதுமான காட்சி 

 பயிற்சி காட்சிகளும்   பந்தயத்தில் சிறுவன் பங்கேற்று   ப்ரித்வி  ஓடும் காட்சிகள் 

காட்சிகளின் இடையிடையே கலகலப்பை தரும் சூரி மற்றும் ஓமகுச்சி பையன் சுவாரஸ்யம் 

இப்படி படமெங்கும் விரவியிருக்கிறது  நிறைவான காட்சிகள். 

குத்துப்பாட்டை தவிர்த்திருக்கலாம். என்கௌன்ட்டர் தீவிரத்தையும்  கொஞ்சம் குறைத்திருக்கலாம்.




துப்பாக்கியை சுற்றி படரும் மெல்லிய பூங்கொடியை போல் படபடப்பும் நெகிழ்ச்சியும்  ஒன்றிணைந்த திரைக்கதைக்கு  அவர் கோச்சா காக்ரோச்சா  என்ற பளிச் வசனங்களில் வெங்கடேசனும், காட்சிகளுகேற்ற ஒளிப்பதிவில்   ரத்னவேலுவும்  படத்திற்கு இன்னும் பலம் சேர்க்கிறார்கள் 

 ஆட்டிசம் பாதித்த ஒரு சிறுவனின் உலகத்தில் நம்மை உலவ
விட்டு, அவனை பெற்றவர் படும் வலியை அவஸ்தையை உணரும் 

வண்ணம், ஒரு நெகிழ்ச்சி படைப்பை தந்திருப்பதன் மூலம் இயக்குனர் ஜி.என்.ஆர்.குமரவேலன் நம்மிடம்  சபாஷ் பெற்று  கொள்கிறார்  

ஹரிதாஸ் பாராட்டப்பட வேண்டியவன் 

FINAL PUNCH

 படம் தியேட்டரில் பார்த்து கொண்டிருக்கும்  போது 
சிறுவனின் திறமை கண்டறியப்படும் காட்சி யாரையும் நெகிழ வைத்து விடும்     அப்போது பக்கத்தில் அமர்ந்திருந்த இளைஞர் தன் உடலை குலுக்குவது கண்டு நான் அதிர்ச்சியுடன் திரும்பி பார்த்தேன்.அவர் கண்கள் கலங்கி அழும் நிலையில்  இருந்தார். நான் பார்ப்பதை உணர்ந்தவர் அந்த நெகிழ்ச்சியை  என்னுடன் பகிர்ந்து கொண்டார். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். அவரது அந்த கண்ணீரே இந்த படத்தின் வெற்றிக்கு சாட்சியாகிறது  என்றால்  அது  மிகையல்ல  

ஆர்.வி. சரவணன் 

புதன், மார்ச் 06, 2013

இளமை எழுதும் கவிதை நீ-22






இளமை எழுதும் கவிதை நீ-22

உன் மனதிற்குள் இருப்பதை தெரிந்து சொல்லுமாறு  
கூகுளிடம் கேட்டிருக்கிறேன் 

சிவாவுக்கு, கர்சிப் கொடுத்தா உறவு விட்டு போயிடும் என்று உமா சொன்ன  இந்த வரிகளே அவனை சுற்றி சுழன்று கொண்டிருந்தது.நடைகளில் ஒரு உற்சாக துள்ளலாய் சென்று கொண்டிருந்தவன்  எதிரில் பாலு வந்தான். அவனிடம் பேசுகையில் உமா சொன்னதை சொல்லி  அதற்கு அர்த்தம் என்ன என்று ஆர்வமாய் கேட்டான்

"மச்சான் இதை பிரெண்ட்ஷிப் க்காக சொன்னதாவும்   எடுத்துக்கலாம் இல்ல
காதலுக்குணும்  எடுத்துக்கலாம்"

"என்னடா குழப்பறே"

"டேய் உனக்கு பிடிச்ச மாதிரி நான் எப்படிடா சொல்ல முடியும்  
காதலா மட்டும் இருந்துச்சின்னா, கண்ணுக்குள் நூறு நிலவா இது ஒரு கனவா கைக்குட்டை காதல் கடிதம் எழுதிய உறவா னு நீ பாடலாம். அட இந்த பாட்டே ஏதோ சொல்ற மாதிரி தெரியுதே" 

என்றவனை பார்த்து அவன் கன்னம் தட்டி சிவா சிரித்து கொண்டே  கிளம்பினான். தன் ரூமுக்கு வந்தவன்  உனக்கு என்ன தோணுது  என்று கண்ணாடியை பார்த்து கேட்டான். அது அதையே பிரதிபலிக்க முட்டாள் என்று செல்லமாய் கடிந்து கொண்டான்.டான்ஸ் ஆடியபடியே  தன் சந்தோசத்தை வெளிப்படுத்தி கொண்டான்

தொடரும்

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நன்றி : திரு இளையராஜா 


the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.


புதன், பிப்ரவரி 27, 2013

இது நம்ம பாக்யராஜ்

 இது நம்ம பாக்யராஜ்






(நடிகர்,இயக்குனர்  திரு கே.பாக்யராஜ் அவர்களை நான் சென்று சந்தித்து 
வந்த இனிய நிகழ்வின் அனுபவ பகிர்வு )

குமுதம் வார இதழில் அப்போது மௌன கீதங்கள் திரைக்கதை தொடர் வந்து கொண்டிருந்தது. நான் எட்டாவது படித்து கொண்டிருந்தேன்.  அந்த கதையை படிக்க ஆரம்பித்தவன் அதில் ஈர்க்கப்பட்டு, வீட்டில் அடம் பிடித்து (வீட்டில் வருடத்திற்கு ஒரு படம் தான் அழைத்து செல்வார்கள்  அதுவும் தேசபக்தி,  புராண படங்கள் தான்) சென்று பார்த்தேன். அந்த படம் பார்த்த பின் ஒரு  நாயகன் உதயமாகிறான் என்ற பின்னணி இசைக்க பாக்யராஜ் பிடித்த நடிகராக இயக்குனராக  எனக்குள் உருவெடுத்தார். 

அடுத்து வந்த அந்த ஏழு நாட்கள் படம் அப்போது நான் ரசித்த படமாகவும் ஏன் எப்போதும் ரசிக்கும் ஒரு முக்கியமான படமாக அமைந்து கொண்டது.

அடுத்து வந்த தூறல் நின்னு போச்சு படம் பார்த்த பின்,  அந்த படத்தில் வரும்  என் சோக கதையை கேளு தாய்குலமே பாடலை  நான் பாக்யராஜ் போலவும் என் தம்பி நம்பியார் போலவும் தினமும் மாலையில் பாடுவோம். அதை  கிராமத்தில் உள்ளவர்கள் தினமும் பொழுது போக்காக எங்களை பாட சொல்லி கேட்டு ரசிப்பது வாடிக்கையான ஒன்றானது. அதனால் அவர் மீது  இன்னும் ஈர்ப்பு அதிகமானது.

முந்தனை முடிச்சு பட பாடல்கள் இலங்கை வானொலியில் பட்டைய 
கிளப்ப, கூடவே படமும் வெளி வந்து அது இன்னும் பட்டையை கிளப்பியது. எனக்குள் பாக்யராஜ் படம் வந்தால் உடனே பார்த்தாக வேண்டும் என்ற உத்வேகத்தையும் அது  கிளப்பியது. வீட்டில் அந்த படத்திற்கு அனுப்பவில்லை. படம் வந்து நூறு நாள்களுக்கு பின் தான் நான் சென்று பார்த்தேன். அது வரை தினமும் தியேட்டரை சென்று வேடிக்கை பார்த்து விட்டு வந்தேன்.

தாவணி கனவுகள் படம்  பார்த்த பின்  சினிமாவுக்கு சென்று இயக்குனர் ஆக வேண்டும் என்ற கனவை இதன் மூலம் எனக்கு விதைத்தார் அந்த திரைக்கதை அரசன். 

எங்க சின்ன ராசா முதற் கொண்டு அடுத்து வந்த ஒவ்வொரு படம் பார்க்கும் போதும்  என் இயக்குனர் கனவு வளர்ந்து விருட்சமாகி நின்றது.

காலேஜ் செல்ல ஆரம்பித்தவுடன் அவர் படம் வெளியானால் முதல் நாள் வீட்டுக்கு தெரியாமல் சென்று பார்க்க ஆரம்பித்தேன்.பாக்யா வார இதழ் வெளி வர ஆரம்பிக்க எங்கள் வீட்டில் வாங்கவில்லை.இருந்தும் நான் பாக்கெட் மணியில் வாங்கி படித்து விட்டு நண்பர்களிடம் கொடுத்து விடுவேன்.காவடி சிந்து பாடல் காசெட் சொந்தமாக வாங்கி நண்பர் கடையில் தினமும் போட்டு கேட்டு பாடல்கள் எனக்கு நெட்டுரு கூட ஆகி விட்டது.ஒரு முறை பாக்யராஜ் ரசிகர் மன்றத்தில் சேர பெயர் கொடுக்க ஆசைப்பட்டு பின் வீட்டை பற்றிய பயத்தினால் பின் வாங்கியது தனி கதை. அவரை பற்றிய செய்திகள் எல்லாவற்றையும் படித்து விடுவேன். நண்பர்கள் இதை பார்த்து பாக்யராஜ் பற்றி ஒரு க்விஸ் போட்டி வைத்தால் நீ தான் வின் பண்ணுவாய் என்று கூட சொன்னார்கள் 

படிப்பு முடிந்த பின் சினிமாவில் நுழைய வேண்டும் என்ற முடிவோடு இருந்த  என்னை வீட்டில் இருந்து கிளம்பிய மிக பெரிய எதிர்ப்பு கனவை அடங்கி போக வைத்தது. உள்ளுக்குள் கனவு மௌன கீதமாய் நித்தம் ஒரு முறை பாட ஆரம்பிக்க அதை இன்று போய் நாளை வா என்று என் சூழ்நிலை அனுப்பி வைத்தது.  சரி  திரையில் பார்த்த பாக்யராஜ் அவர்களை நேரில் சந்தித்து  நாலு வார்த்தைகளாவது பேசலாம் என்ற அடுத்த ஆசை ஒரு கை ஓசை போல உள்ளுக்குள் நாளுக்கு நாள் வலுப்பெற ஆரம்பித்தது.

சென்னை வந்த பின் வள்ளுவர் கோட்டம் செல்லும் போதெல்லாம் எப்போது அவரை பார்ப்போம் என்ற ஏக்கம் எழும்.  ஒரு படம் பார்த்து விட்டு வெளி வந்தவுடன் நேராக பாக்யராஜ் அலுவலகம் சென்று விடலாமா என்ற  வேகம் வரும் .

கல்யாண மாலை பட்டிமன்றம் ஒரு முறை பாக்யராஜ் தலைமையில் நடப்பதை அறிந்து அதற்கான பாஸ் வாங்கி வந்து அவரை சந்திக்க கிளம்பினேன் வீட்டில் முக்கிய வேலை ஒன்று வந்து விடவே தடைபட்டது

ஒரு முறை கட்சி பொது கூட்டத்தில்,பாக்யராஜ் மற்றும் என் கல்லுரி நண்பர் (கட்சி பேச்சாளர்) பேசுவதாக வந்த விளம்பரம் பார்த்து ஆசையுடன் அந்த பொது கூட்டம் சென்றேன் எனது  நண்பர் மூலம் அவரை சந்தித்து விடலாம் என்று ஆனால் அன்று பாக்யராஜ் பொது கூட்டத்திற்கு வரவில்லை


பாக்யா அலுவலகம் ஒரு முறை போன் செய்து விசாரித்தேன் அவர் கேரளா சென்றிருப்பதாக சொன்னார்கள். இன்னொரு முறை போன் செய்த போது காலை பத்து மணிக்கு வாருங்கள் என்று சொன்னார்கள்.ஆனால் அப்போது என்னால் காலையில் அலுவலகத்தில் பர்மிசன் போட முடியாததால் செல்ல முடியவில்லை. சரி கனவு நனவாகும் நாள் விடியும்  வரை காத்திரு என்று மனதிடம் சொல்லி வைத்தேன் 

இப்படி அவரை பார்க்க முயற்சித்து முடியாத நிலையில் தான், சென்ற மாதம் திரு எஸ் எஸ் பூங்கதிர் (பாக்யா நிருபர்) அவர்கள் முக நூலில் எனக்கு நண்பரானார். அவரின் முயற்சியால் பாக்யாவில் மக்கள் மனசு பகுதியில் முதல் முறையாக எனது கமெண்ட் மற்றும் படம் வெளியானது அது சிறிய கமெண்ட் தான் என்றாலும் அது எனக்கு கொடுத்த சந்தோஷம் மிக பெரிது.

ஒரு நாள்  அவரிடம் சாரை சந்திக்க வேண்டும் என்று  பொதுவாக 
சொல்லி வைத்தேன் அவரோ உடனடியாக எப்போது பார்க்க போகிறீர்கள் சொல்லுங்கள் நான் ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்ல ஆடி போய் விட்டேன். உடனே சந்திக்கும் நாளை  அவரிடம் சொல்லி விட்டு பாக்யராஜ் அவர்களுக்கு ஏதேனும் பரிசளிக்க வேண்டும் என்ற ஆவலில் அவரது பழைய குடும்ப படமும்  இப்போதைய  குடும்ப படமும்   இணைத்து லேமினசன் போட்டோ ஒன்று அவசரமாக  ரெடி செய்தேன். என் தம்பிக்கும் பாக்யராஜ் ரொம்ப பிடிக்கும். வரியா என்று கேட்ட அடுத்த நொடி உடனே நான் ரெடி என்றார்.அப்போது வீட்டில் என்னை எதிர்த்தவர்கள் இப்போது அவரிடம் எப்படி பேச வேண்டும் என்ற டிப்ஸ் எனக்கு உதிர்த்தார்கள்.






சந்திக்க வேண்டிய நாள் அன்று காலை சிக்கிரமே விழிப்பு வந்து விட்டது திரையில் பார்த்த வரை நேரில் பார்க்க போகிறோம் என்று ஏதோ ஒரு இனம் புரியாத சந்தோஷம் என்னை ஆழ்த்தி கொண்டிருக்க கூடவே பார்க்கும் வாய்ப்பு இன்னொரு நாள் என்று தள்ளி போய் விடுமோ என்ற கவலையும் தொடர்ந்த படி இருந்தது

அலுவலக நண்பர் ஒருவரிடம் சோனி டிஜிட்டல் கேமரா கேட்டிருந்தேன்
அவரும் நான் கிளம்பும் தருவாயில் கொண்டு வந்து கொடுத்தார். கூடவே," சார்
கேமரா புல் ஆகிடுச்சு  நீங்க எடுக்க முடியாது கணினியில் சேமித்து விட்டு பின் எடுத்து கொள்ளுங்கள் என்று சொல்ல பயங்கர டென்சன் ஆகி விட்டது
எனக்கு.காரணம்  பதினொரு மணிக்கு வருவதாகசொல்லியிருக்கிறோம். இந்த நிலையில் எங்கு போய் கணினியில் சேமிப்பது என்று டென்ஷன் ஆன நான்," எல்லா போட்டோ வும் பார்க்கிறோம் எந்த போட்டோ கலங்கலாக சரியில்லாமல் இருக்கிறதோஅதில்  நாலு போட்டோ  மட்டும்  டெலிட் செய்து விட்டு படம் எடுத்து கொள்கிறோம்  என்று சொல்ல அவர்  பரவாயில்ல  சார் எடுத்துக்குங்க என்றார்

பொக்கே வாங்கி கொண்டு நண்பர்  பூங்கதிர் அவர்களுக்கு போன் செய்து நாங்கள் வந்து கொண்டிருப்பதை சொன்ன போது அவர் பாக்யராஜ் அவர்களிடம் கேட்டு கன்பார்ம் செய்து விட்டு, சார் வருவதற்கு முக்கால் மணி யாகும் நீங்கள் வெயிட் பண்ண முடியுமா என்றார். முப்பது வருசமா வெயிட் பண்ணவன் முக்கால் மணி நேரம் வெயிட் பண்ண மாட்டேனா என்றேன் நான் சிரித்த பூங்கதிர்,  சாரிடம் இதை சொல்லுங்கள் என்றார்

அவரது அலுவலகத்தில் உற்சாக துள்ளலுடன் நுழைந்தோம். ரிசப்சனில் கேட்டார்கள். பூங்கதிர் பெயர் சொன்னவுடன் உடனே  உட்காருங்கள் என்று அமர வைத்து என்ன சாப்பிடுகிறீர்கள் என்றும்  கேட்டார்கள். எனக்கும் என் தம்பிக்கும் இனம் புரியாத படபடப்பு இருந்து கொண்டே இருந்தது. வாசலை பார்த்த படி இருந்தோம் 

திடீரென்று பார்த்தால் பாக்யராஜ் சார் உள்ளே வருகிறார் காத்திருந்த எல்லோரும்எழுந்து நின்றோம். எங்கள் அனைவரையும் பார்த்து சிநேகமாய் சிரித்தவாறே எங்கள் வணக்கத்தை தலையாட்டி ஏற்று கொண்டு வாங்க என்று சொல்லி விட்டு உள்ளே சென்றார்.

எங்களுக்கு முன் காத்திருந்தவர்கள் உள்ளே செல்ல நாங்கள் டென்சனில் நகம் கடித்தோம். கொஞ்ச நேரம் கழித்து எங்களை உள்ளே அழைத்தார்கள்
இதற்காக தானே காத்திருந்தோம் என்று பரபரப்புடன் உள்ளே நுழைந்தோம் 

எங்களை பார்த்தவுடன் எழுந்திருந்த பாக்யராஜ் அவர்கள் வாங்க என்று சொல்லி பூங்கதிர் சொன்னார் நீங்க வருவதை பற்றி  என்று சொல்ல அவர்   அருகில் சென்ற  எனக்கு  பரவசத்தில் வார்த்தைகளே எழும்பவில்லை.

பின் ஒருவாறு சமாளித்து நான் மௌன கீதங்கள் படத்திலிருந்து  ரசிகர் ஆனதை பற்றி குறிப்பிட, சிரித்த படி நாங்கள் அளித்த போட்டோ, பொக்கே மற்றும் என் தம்பி இந்த வருடத்திய டைரி யை பேக் செய்து அதில் பாக்யராஜ் ஸ்டில் ஒட்டி ஒரு ரோஜா ஒட்டி வைத்து எடுத்து வந்திருந்தார்.அதையும் 
 பெற்று கொண்டார்.

போட்டோ எடுத்துக்கணும் சார் என்றவுடன் கேமரா இருக்கா என்று கேட்டு விட்டு உடனே உதவியாளரை அழைத்து போட்டோ எடுக்க சொன்னார்.அது போதாது என்று  என் செல்போனிலும் எடுத்துக்கறேன் என்று நான் கேட்க அவர்  முகம் சுளிக்காமலும் சலிக்காமலும் ஓகே சொன்னவர்  லைட்டிங் போதுமா  என்று கேட்டு விட்டு அவரே சென்று இன்னொரு லைட்டின்  சுவிட்ச் ஆன் செய்தார். போட்டோ எடுத்த பின் எப்படி வந்திருக்கிறது என்று
கேமரா வாங்கி ஆவலுடன் பார்த்தார்.

எங்களை அவர் உட்கார சொல்லவும் காபி வந்தது. அதை குடிக்கும் நேரத்தில் கூட அவருடன் பேசுவது தடைபட்டு விடுமோ என்று தண்ணீர் குடிப்பது போல் காபி யை குடித்தேன்

 நான் எழுதிய சில பதிவுகளை கொண்டு சென்றிருந்தேன் ஒரு பைல் 
போட்டுஅதை  கொடுத்து உங்களுக்கு நேரமிருக்கும் போது படிங்க 
இதை மட்டும் எனக்காக இப்ப படிங்க சார்  என்று வேண்டுகோள் விடுத்தேன்  வாங்கி  புரட்டினார். படித்து விட்டு அவருக்கே உரிய  சிரிப்பை உதிர்த்தார் என் எழுத்துக்கு கிடைத்த அசீர்வதமாய் எடுத்து கொண்டு நிறைவானது மனசு 

அவர் படித்த அந்த பதிவு இதோ 


பாக்யராஜ் சார் பட பெயர்களை வைத்து ஒரு மிக சிறிய கதை

ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி கன்னி பருவத்திலே காலத்தில்
தாவணி கனவுகள் கண்டு கொண்டிருக்
எங்க சின்ன ராசா அவளை பார்த்து அந்த ஏழு நாட்களில்
இது நம்ம ஆளு என்று முடிவு செய்து அவளிடம்
டார்லிங் டார்லிங் டார்லிங் என்று சொல்ல
அவள் எதிர்ப்பு என்ற தூறல் நின்னு போச்சு ஆகவே
இன்று போய் நாளை வா வந்து விடியும் வரை காத்திரு
முந்தானை முடிச்சுக்கு என்று சொல்ல
அவன் சந்தோசத்துடன் பட்டு வேட்டி மடிச்சு கட்டி
திருமணத்திற்கு தயாரானான்
அவளுடன் ஆராரோ ஆரிராரோ பாட.
ஆம்
இப்ப அவன் வீட்டிலே விஷேசங்க



இணைய தளத்தில் ஒரு தொடர்கதை எழுதி கொண்டிருப்பதையும் இப்படி எழுதுவது உங்கள் படங்கள் மற்றும் எழுத்து தந்த ஈர்ப்பினால் தான் என்றும் அவரிடம் சொன்னேன். அப்படியா என்று ஆச்சரியத்துடன் கேட்டவர் உங்க ப்ளாக் பேரென்ன என்றும் விசாரித்து தெரிந்து கொண்டார்

 என் தம்பி நேற்று ருத்ரா படம் டிவியில் பார்த்தேன் எத்தனை முறை பார்த்திருந்தாலும் நேற்றும் ரசித்து சிரித்தேன்  என்று சொல்ல, எந்த 
டிவியில் என்று ஆர்வமுடன் கேட்டு தெரிந்து கொண்டார்.அடுத்து 
அவரது படம் பற்றி நான் கேட்க  டிஸ்கசன் நடந்து கொண்டிருப்பதாக தெரிவித்தார்

 இதற்கு மேல் பேச வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அவரை பார்க்க இன்னும் ஏனைய பேர் காத்திருந்ததால் கிளம்ப மனசில்லாமலே விடைபெற்று எழுந்தோம்.கிளம்பும் போது அப்பப்ப வாங்க என்று சொன்னதுடன் உங்க பேர் என்ன சொன்னீங்க என்று கேட்டு
தெரிந்து கொண்டார்.

உள்ளே நடந்து சென்ற நான் வெளியில் வரும் போது பறந்த படி வந்தேன் என்பதை சொல்லவும் வேண்டுமா. வெளியில் வந்தவுடன் என் தம்பி என் கைகளை பிடித்து ரொம்ப தாங்க்ஸ் என்றான்.நாம்  தாங்க்ஸ் சொல்ல வேண்டியது நண்பர்  எஸ்.எஸ்.பூங்கதிர் அவர்களுக்கு என்றேன்

மலையின் உச்சியை அடைய கஷ்டப்பட்டு அதையும் இஷ்டப்பட்டு ஏறி கொண்டிருக்கும் போது மேலிருந்து ஒரு லிப்ட் திடீரென்று நம்மருகே வந்து   நம்மை உச்சிக்கு அழைத்து சென்றால் எப்படி இருக்கும் அது போன்று தான் நண்பர் பூங்கதிர் எங்களுக்கு செய்த இந்த உதவி. இந்த உதவியை  நன்றி என்று ஒற்றை சொல்லில் எல்லாம் அடக்கி விட முடியாது

பார்த்து விட்டு வந்த உடன் வீட்டிலும் வெளியில் நண்பர்களும்  என்ன சொன்னார் எப்படி பேசினார் என்று ஆர்வமுடன் கேட்டு கேட்டு தெரிந்து கொண்டார்கள்.அவரை சந்தித்த அனுபவம் இப்போது நினைத்தாலும் நெஞ்சம் இனிக்கிறது 





FINAL PUNCH

சந்தோசத்துல பெரிய சந்தோசமே அடுத்தவங்களை சந்தோசபடுத்தி பார்க்கிறது தான் என்பது பாக்யராஜ் அவர்களின் தாரக மந்திரம்.ஆம் எங்களை சந்தோசபடுத்தி பார்த்திருக்கிறது அவர் மனசு 

அவருக்கு பரிசளித்த போட்டோ வில் நான் குறிப்பிட்டது போல் 
அன்றும் இன்றும் என்றும் அவர்  நலம் நாடி நிற்கிறது என் மனசு 

ஆர். வி.சரவணன்  




வியாழன், பிப்ரவரி 14, 2013

இளமை எழுதும் கவிதை நீ-21






இளமை எழுதும் கவிதை நீ-21



நீ உனக்குள் பதுக்கிய என் காதல் எப்போது வெளி கொணர்வாய் 
என எப் பொழுதும் விழிப்புடன் நான் 


சிவாவுக்கு இப்போது  இன்னும் குழப்பம் அதிகமாகியது. சுரேஷ் மணியை பார்க்க எதுக்காக வர வேண்டும். இதற்கு முன் சுரேஷுடன் மணிக்கு பழக்கம் கிடையாது என்பது இவனுக்கு தெரியும். பின் எப்படி என்று யோசித்தவனுக்கு   சுரேஷ் தன்னை பின் தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்பது புரிந்தது.
வம்பு வேண்டாம் என்று ஒதுங்கி நின்றாலும்  இப்படி தன்னை  வம்புக்கு இழுப்பவனை  என்ன செய்யலாம் என்று கடுப்பானான்.  வாழ்க்கையில் நல்லவர்களாக இருப்பது எவ்வளவு கஷ்டம் .அதிரடியாக இருந்த காலத்தில் தான் இருக்கும் தெருவில் வருவதற்கு கூட தயங்கியவன் இப்போது தன்னையே தொடர்கிறான். இது எது வரை செல்கிறது என்று பார்க்கலாம் மனசுக்குள் சொல்லியவாறு மூட்டை தூக்க ஆரம்பித்தான்.

தொடரும்

ஆர்.வி.சரவணன்

the story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.


ஓவியம் : நன்றி வலை பதிவர் தோழி பிரியா அவர்கள் 

http://enmanadhilirundhu.blogspot.com/

சனி, பிப்ரவரி 09, 2013

தொலைக்.................................காட்சி





தொலைக்.................................காட்சி



தொலைகாட்சி பற்றி தொலை நோக்குடன் சிந்தித்த போது எனக்கு தோன்றிய சில குட் கொஸ்டின் களுக்கு உங்கள் யாருக்காவது பதில்  தெரியுமா 

*இந்திய தொலைகாட்சிகளில் முதல் முறையாக என்று சொல்லி ஒரு புதிய படத்தை ஒளிபரப்புபவர்கள் ஏற்கனவே நிறைய முறை ஒளி பரப்பான படங்களை போடும் போது மட்டும் இத்தனையாவது முறையாக எங்கள் சானலில் ஒளி பரப்பாகிறது என்று ஏன் சொல்வதில்லை

*விளம்பரங்களுக்கு பிறகு நிகழ்ச்சி தொடரும் என்று இருக்கும் நிலை வருங்காலத்தில் விளம்பரங்களுக்கு பின் நேரமிருந்தால் நிகழ்ச்சி ஒளி பரப்பாகும் என்று சொல்லப்படுமோ

*ஒரு சேனல் ஒரு புதிய நிகழ்ச்சியை உருவாக்கி ஒளி பரப்பும் போது மற்ற சானல்களும் அதே போல் ஒரு நிகழ்ச்சியை உருவாக்கி அதே நேரத்தில் ஒளி பரப்பி  அந்த நிகழ்ச்சி மீது இருக்கும்  நம் சுவாரஸ்யத்தை அடியோடு குறைத்து விடுகிறார்களே ஏன்

*விடுமுறை நாட்களில் நல்ல படம் ஏதேனும் போடுவார்களா பார்க்கலாம் என்று நாம் ஆர்வமுடன் அமரும் போது நல்ல படங்கள் போடாமல் வேலை நாட்களில் நல்ல படங்களை போட்டு நம்மை வெறுப்பேற்றுவது ஏன்


FINAL PUNCH 

ஒரு வேளை நான் டிவி ஆரம்பிச்சாலும் இப்படி தான் இருக்குமோ 


ஆர்.வி.சரவணன்

தளம் ஆரம்பித்த புதிதில் வெளியானது இது 

புதன், பிப்ரவரி 06, 2013

இளமை எழுதும் கவிதை நீ-20


இளமை எழுதும் கவிதை  நீ-20




நீ பேசாத பொழுதுகளில் உன் கொலுசுடன் 
உரையாடி கொண்டிருக்கிறேன் 



சிவாவை உட்கார் என்று ஆசிரியரும், உட்காராதே என்று உமாவும் ஆர்டர் போட்டதால் என்ன செய்வது என்று கொஞ்சம் தடுமாறிய சிவா, உமா சொல்லை கேட்கும் முடிவுக்கு  வந்து உட்காராமல் நின்றான்.

"என்ன இஞ்சி தின்ன குரங்கு மாதிரி முழிக்கிறே உட்கார்டா" என்றார் ப்ரோபசர்.

கார்த்திக் அவரது  ஒருமை க்கு கோபபட்டவன்,  பாலுவின் கை அழுத்தவே  கோபத்தை கட்டுக்குள் கொண்டு வந்தான். சிவாவை,  இருவரும்  கண்களால் உட்கார சொல்லி ஜாடை காட்டினர்.

"இப்ப உட்காரியா இல்ல வெளில போறியா"

 "எனக்கு தெரியும் நான்  சொல்றேன் சார்"

"கெட் லாஸ்ட்" என்றார் சீற்றமாய்

சிவா இதனால் அதிர்ந்து என்ன முடிவெடுப்பது என்று திணறும் போது
கை கொடுத்தாள். உமாவின் பக்கத்தில் இருந்த அவளது தோழி

தொடரும் 

ஆர்.வி.சரவணன் 

the story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

ஓவியம் :இளையராஜா 

புதன், ஜனவரி 23, 2013

இளமை எழுதும் கவிதை நீ-19


இளமை  எழுதும் கவிதை நீ-19





என் வெற்றிக்கு வழி விடுகின்றாயா, வகுக்கின்றாயா 
 பட்டிமன்ற விவாதம் எனக்குள் 


சிவாவின் வீட்டில், கல்யாணம் நடந்ததற்கான எந்த ஒரு அறிகுறியும் தென்படாமலேயே இருந்தது. ராஜேஷ்குமார் கல்யாணம் முடிந்த கையோடு
டில்லிக்கு கிளம்பி விட்டார். வந்திருந்த உறவினர்களும்  ஒவ்வொருவராக கிளம்ப  ஆரம்பித்திருந்தனர்.

கார்த்திக் தன் மனைவி கீதாவுடன் , கோமாவிலிருந்த அம்மாவை சென்று பார்த்து விட்டு ஆசிர்வாதம் வாங்கி கொண்டு வந்தவனுக்கு  சோர்வு அதிகமாய் இருந்ததால் ஹாலில் ஒரு சோபாவில் அமர்ந்து அப்படியே தூங்க ஆரம்பித்திருந்தான்.கீதா அந்த பக்கம் வந்தவள், அவன் கை சோபாவின் வெளியே தொங்கி கொண்டு இருந்ததை பார்த்து ஒரு தலகாணி எடுத்து கைகளுக்கு முட்டு கொடுத்து விட்டு சென்றாள்.

பின் அங்கு வந்த சிவகுமார் கார்த்திக்கின் பக்கத்தில் அமர்ந்து "கார்த்திக்" என்று குரல் கொடுக்க கண் விழித்தான் கார்த்திக்

தொடரும்

ஆர்.வி.சரவணன் 


the story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

 படம் : ஓவியர் மாருதி  நன்றி கூகுள் 

ஞாயிறு, ஜனவரி 20, 2013

புத்தக கண் காட்சியில்....

புத்தக கண் காட்சியில்....






புத்தக கண் காட்சி  சென்று வந்த அனுபவத்தை நான் சில குறிப்புகளாக கொடுத்து விடுகிறேன் படிக்க உங்களுக்கு சுலபமாக இருக்கும்

* புத்தக காட்சி ஆரம்பித்து ஒரு வாரத்திற்கு பின் நேற்று தான் நான் சென்றேன் போக்குவரத்தில் சிக்கி மீண்டு நானும் எனது அலுவலக நண்பரும் உள்ளே நுழைந்த போது நேரம் இரவு எழு மணி ஒன்பது மணிக்கு கிளம்பி விடலாம் என்று உறுதிமொழி யுடன்  அவர் ஒரு பக்கம் செல்ல நான் ஒரு பக்கம் நுழைந்து விட்டேன் (வெளியுலகத்தை மறந்தும் விட்டேன் )

* டிஸ்கவரி புக் ஸ்டாலில் பதிவர் கேபிள் சங்கர் அவர்களை சந்தித்து  பேசினேன்.தொடர்ந்து அவரது பதிவுகளை தொடர்ந்து வாசித்து கொண்டிருப்பதை குறிப்பிட்டேன். (  புன்னகையுடன் சிநேகமாய் அனைவருடனும் அவர் பழகுவது அவரிடம் எனக்கு பிடித்த ஒன்று  )

*மீனாட்சி புத்தக நிலையத்தில் சுஜாதா புத்தகங்கள் குறைந்த விலையில் கிடைக்கிறது என்று கேள்விப்பட்டு அங்கு சென்றேன் பிரியா நாவலும் அவரது கட்டுரை தொகுப்புகளும் மட்டுமே இருந்தது (இதற்கு தான் முன்னாடியே வரணும் கிறது )


*ஞாயிறு இன்றும் வரும் எண்ணம் இருந்ததால்அங்குமிங்கும் அலைந்து எந்தெந்த ஸ்டால் எங்கு இருக்கிறது என்று பார்த்து வைத்து கொண்டேன். ஒரு முன்னோட்டம் (முன்பெ  நோட்டம்) 

* சில புத்தகங்கள் மட்டும் வாங்கிய நிலையில், ஒன்பது மணியாகி விடவே நண்பர் கிளம்பலாம் என்று சொன்னதால் கிளம்பி விட்டேன் (பாதி  சாப்பாட்டில் எழுந்த மன நிலையுடன் )

* வீட்டில் எல்லாருமே புத்தக பிரியர்கள் என்பதால் நான் இன்றும் செல்ல போவதை சொன்ன போது அந்த புக் வாங்கு இது வாங்கு என்று டிப்ஸ் கொடுத்து கொண்டிருந்தனர் (வாங்கலேன்னா என்னை வாங்கு வாங்கு னு வாங்கிடுவாங்க)

* மீண்டும் இன்று காலை படையெடுத்தேன் புத்தக கண் காட்சிக்கு
பதிவர் நண்பர் பால கணேஷ் அவர்களிடம் நான் அவரை பார்க்க 
வருவதாக சொல்லியிருந்ததால் அவர் "எங்கப்பா இருக்கே" என்று  போன் 
அடித்தார்.வந்து கொண்டே இருக்கிறேன் என்று சொல்லி அவர் முன்பு 
போய் நின்றேன் (அவர் வந்த பின்னே  வந்து அவர் முன்னே  சென்று 
நின்றேன் )


* இருவரும் சேர்ந்து வலம் வர ஆரம்பித்தோம் எந்தெந்த புக்ஸ் எங்கு கிடைக்கும் என்று டிப்ஸ் கொடுத்ததோடு மட்டுமில்லாமல் அங்கெல்லாம் அழைத்தும் சென்றார்.அவருடன் பேசிய படியே அரங்கை சுற்றி வந்தது கண்டிப்பாக எனக்கு அயர்ச்சி தெரியவில்லை ( அவர் விடை பெற்று செல்லும் வரை )

*எழுத்தாளர்  ராஜேந்திரகுமார் அவர்களின் நாவல்கள் கிடைக்குமா என்று விசாரித்தோம். ஒரு ஸ்டாலில் அவரது  நாவல் ஒன்றும் சிறுகதை தொகுப்பு ஒன்றும் கிடைத்தது அது நான் ஏற்கனவே நூலகத்தில் படித்து விட்டதால் வாங்கவில்லை ( எங்க கிடைக்கும் யாராவது சொல்லுங்களேன் )

* விகடன் ஸ்டால் சென்று புதிதாக வந்திருக்கும் சுஜாதா மலர் புரட்டி பார்த்து விட்டு வைத்து விட்டேன்.இது போல் பல ஸ்டால்களில் பல புத்தகங்களை ஆசையாய் எடுத்து பார்த்து வைத்து விட்டேன் (விலையை பார்த்தவுடன் )

* என் மகன் தனக்கு புத்தகம் வாங்கி வர வேண்டும் என்று போனில் மிரட்டல் விடுத்ததால் முத்து  காமிக்ஸ் ஸ்டால் சென்று முன்னூறு பக்க இரும்புக்கை மாயாவி  வாங்கினேன். குழந்தைகளுடன் வந்திருந்த பெற்றோர் ஆர்வமாய் வாங்கினர் ஒருவர் அந்த கால காமிக்ஸ் புக்ஸ் கிடைக்குமா  இருக்கா அது இன்னும் சுவாரஸ்யமா இருக்கும் என்று கேட்டு கொண்டிருந்தார் (இதையும் படிக்கலாம் னு இருக்கேன்  சிறார்களின் உலகத்துக்கும்  போய் வருவோமே  )

 * சாண்டில்யன் நாவல்கள் இரண்டு (மூன்று பாகங்கள் ) வாங்கிய கடையில்
ஒரே கவரை போட்டு கொடுத்தார்கள் தாங்காது இன்னொரு கவர்ல போட்டு கொடுங்க னு சொன்னேன்  தாங்கும் சார் என்றார் கடையில் இருந்தவர்
(பஸ் ஸ்டான்ட் வருவதற்குள் கவர் கிழிய ஆரம்பித்தது வெயிட் தாங்காமல்)


*குடும்பம் குடும்பமாக சிறார்களுடன் மக்கள்  காலையிலேயே 
வந்திருப்பதை  பார்க்க சந்தோசமாக இருந்தது. புக் வாங்கி 
கொண்டிருந்த தம்பதி யில் கணவன் உனக்கு பிக்ஸ் பண்ண பட்ஜெட்டை 
விட ஜாஸ்தியாகிடுச்சு புக் வாங்கிட்டே படிப்பே இல்லே என்று கேட்டு கொண்டிருக்க நான் எல்லாம் படிச்சுடுவேன் என்று மனைவி பதில் சொல்லி கொண்டிருந்தார் (எல்லா குடும்பத்திலேயும் இப்படி தானா )



* நடந்து நடந்து கால்கள் வலியெடுத்தது. எனவே மனது  வெளியேறும்  
வழியை முன்னெடுத்தது. பாக்கெட்டின் வெயிட் குறைந்து போய், கையில் புத்தகங்கள் வெயிட் நிறைந்து விட்டது  (இனி  படித்து மனசு நிறைவடைய வேண்டும்)

* வாங்கிய புத்தகங்களை நான் கொண்டு வந்து ஆசையாய் பிரித்து பார்த்து விட்டு, எனது புத்தக செல்பில் அடுக்கும் போது ஏற்கனவே வாங்கிய புத்தகங்களில்  சில எங்களை நீ இன்னும் படிக்கவில்லை என்று அறிவுறுத்தி கொண்டிருந்தது (புத்தகத்தை எடுக்கறதில்லே எடுத்தா படிச்சு முடிக்காம விடறதில்ல)

நான் வாங்கிய புத்தகங்கள் லிஸ்ட்

கடல் புறா-சாண்டில்யன்

ஜலதீபம்-சாண்டில்யன்

ரத்தம் ஒரே நிறம் -சுஜாதா

கொலையுதிர்காலம் -சுஜாதா

வசந்த் வசந்த் -சுஜாதா

தொட்டால் தொடரும் -பட்டுகோட்டை பிரபாகர்

இந்த குளத்தில் கல்லெறிந்தவர்கள் -வைரமுத்து

சரிதாயணம் - பால கணேஷ்

மீண்டும் ஒரு காதல் கதை -கேபிள் சங்கர்

சினிமா வியாபாரம் -கேபிள் சங்கர்

இரும்பு கை மாயாவி - முத்து காமிக்ஸ்

இனி அடுத்த புத்தக காட்சி யின் நாள் எப்போது, என்பதில் 
என் ஆர்வம் இப்போது 


படம் நன்றி கூகுள் 

ஆர்.வி.சரவணன் 


சனி, ஜனவரி 12, 2013

இளமை எழுதும் கவிதை நீ -18


இளமை எழுதும் கவிதை நீ -18






விலை மதிப்பில்லா பொக்கிஷங்கள்  பட்டியலில் எனக்காக 
நீ விடும் கண்ணீரையும் சேர்த்திருக்கிறேன் 

சிவாவின் நடவடிக்கை அடுத்து என்னவாக இருக்கும் என்பதே அங்கிருந்த அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்தது.மரங்கள் கூட நிசப்தமாய் இருப்பதை போல் ஒரு பிரமை. சுரேசுடன்  இருந்தவர்கள் பயத்துடன் நழுவ தயார் நிலையிலும், மாணவ மாணவிகள் சிவா எந்த நேரம் சிலிர்த்து எழ போகிறான் என்று பார்த்து கொண்டும், இருக்க பாலு சிவாவின் அருகே மெல்ல வந்தான் உமா கோபமாய்  திரும்பி சுரேஷை முறைத்தாள்.

சிவா தான்  வைத்திருந்த தட்டை கீழே வைத்து விட்டு வேகமாக எழுந்தான்.சுரேஷை முறைத்து பார்த்த படியே பின்னோக்கி நகர்ந்தான். மிக வேகமாய் சென்றவன்  அடிக்க தோதாக என்ன பொருள் கிடைக்கும் என்பது போல்  சுற்று முற்றும் பார்த்தான்.ஒன்றும் கிட்டாமல் போகவே அப்படியே வராண்டாவில் ஜம்ப் செய்து  ஏறி தன் கிளாஸ் ரூமுக்கு ஓடினான். கூடவே பாலு வும் ஓடினான் 

இதை பார்த்து வேகமாய் எழுந்த உமா சுரேஷை பார்த்து 

"ஸ்டுடென்ட் ஸ் கூட சேர்ந்து சாப்பிடறது உனக்கு பிச்சை எடுத்து சாப்பிடற மாதிரி தோணுதா"  என்று கோபமாய் எகிறினாள் 

"உமா அவன் கூட பழகாதே அவன் பசு தோல் போர்த்திய புலி "

"உன்னுடைய கரிசனத்திற்கு நன்றி முதல்ல  இங்கிருந்து கிளம்பு  சிவா கிட்டே மாட்டிட போறே "என்று சொல்லி விட்டு நேராக கிளாஸ் ரூம் பக்கம் வேகமாய் செல்ல கூடவே தொடர்ந்தனர் அவளது தோழிகள்.


தொடரும்

ஆர்.வி.சரவணன்




The story is copyrighted to kudanthaiyur and may not be reproduced on other websites.

ஓவியம் நன்றி இளையராஜா 

ஞாயிறு, ஜனவரி 06, 2013

தென்றலின் கனவு-ஒரு பார்வை


தென்றலின் கனவு-ஒரு பார்வை 



நான் படிக்கும் பதிவோ கதையோ கவிதையோ  எனக்கு பிடித்து  விட்டால் உடனே கருத்துரையிட்டு  பாராட்டி விடுவது வழக்கம். தென்றல் வலைப்பூ வில் எழுதி வரும் இணைய பதிவர் திருமதி சசிகலா சங்கர் அவர்கள், பதிவர் திருவிழாவில் திரு.பட்டுகோட்டை பிரபாகர் அவர்களால்  வெளியிட்ட தென்றலின் கனவு என்ற அவரது கவிதை நூலை படித்த போது  எனது தளத்தில் ஒரு பகிர்வாய் தரலாமே என்று தோன்றியது. 

இது குறித்து நண்பர் அரசனிடம் பேசிய போது அவரும் எழுதுங்கள் சார் அவர்களுக்கு இது இன்னும் ஊக்கம் தருமே என்றார்.

இந்தியராய் பிறப்பது ஒரு இனிமையான வரம்  என்றும்,  தமிழராய் ஜனித்தது பெரும் பேறு என்றும்  பெருமை கொள்ளும்அவரது இக் கவிதை நூலை நான்  இயற்கை,குடும்பம், காதல்,சமூக அவலங்கள் நட்பு ஐந்து  பகுதிகளாக எடுத்து கொண்டு ஒரு பகிர்வாய் இங்கே தந்திருக்கிறேன் 

பிறைநிலவு ஒன்று வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது பௌர்ணமி யாவதற்கு என்று சொல்லும் இவரது தென்றலின் கனவை கண்டு நட்பு பாராட்டுவோம் வாருங்களேன்.


இயற்கை 

ஒரு சில கவிதைகள் பார்க்கும் போது அட நமக்கெல்லாம்  இப்படி தோணவில்லையே என்ற எண்ணம் வரும் . எனக்கு அந்த எண்ணத்தை கொண்டு வந்தது இந்த கவிதை

"எந்த விருந்தினருக்காக
என் வீட்டு வாழைமரத்தில்
இலை கழுவி கொண்டிருக்கிறது
மழை"

அழகை பற்றி  பட்டியலிடுகையில், " மானுடம் அழகு அதில் உள்ள மனிதநேயமழகு ரசிக்க மனமிருப்பின் பாலையும் கூட அழகு தான்" என்றுரைக்கிறார்  

வேரின் வலிகளை  பற்றி சொல்லும் கவிதையில்," விளம்பரத்திற்காய் உயிர் பெறும் சாலையோர தாவரங்கள்" என்று குறிப்பிட்டு, "வாடி நிற்கும் எங்களை கண்டால் பிடுங்கி எரியும் மனிதன் வாடிய  முகத்தோடு இருக்கும் மனிதரை எல்லாம் என்ன செய்கின்றான் " என்று கேள்வி யால் சாடுகிறார் 

பறவைகள் வாழ்வை கண்ணுற்று அது பற்றி சொல்லுகையில், "சிறகு முளைத்த மகவுகளைப் பறக்க வைக்கும் முயற்சி யே ஒரு தனி கவிதை" என்பதுடன்  அவைகளை வாழ விடுமாறு கவிதையால் வேண்டுகோள் விடுக்கிறார் 

"தான் விடுப்பில்  இல்லை என்பதை  அவ்வப்போது  வந்து உறுதி செய்யும் சூரியன்", என்று இருந்தும் இல்லாமல் இருப்பதன் அவஸ்தையை ஒரு கவிதையில் சுட்டுகிறார் 


"ஏர் மாடு பூட்டி எதிர்காலம் வாழத் தேயும் உழவர்களும்" என்று
பிறந்த மண்ணுக்கும்  இங்கு கவிதையால் மரியாதை செய்கிறார் தன் வரிகளில் 


சமூக அவலம்

சமூக அவலங்களை  அவர் தன் வரிகள் எனும் வாளால் கூறு போடுகிறார் 

" உடலூனம் தவறில்லை உள்ள ஊனம் பெருங்கேடு" என்று சாட்டை  சொடுக்குகிறார் 

சமூகத்தில் பெண்ணுரிமை பேச்சில் மட்டுமே என்று சொல்லுகையில்,
"மலடியென பட்டம் சூட்டி மனங்களை தீயிட்டு படைப்பின் குறைபாட்டுக்கு பெண்ணை பலியாக்கி நடத்தும் நாடகத்தின் பெயர் சமூக நீதியா" என்று 
எள்ளி நகையாடுகிறார் 

தாய் செய் நல பிரிவு தரும் அவஸ்தையை, "ஒரு பெண்ணின் கருச்சிதைவை பார்த்த படி நிகழும் மற்றொரு பெண்ணின் தலை பிரசவம்"
என்று  வலிகளில் தோய்த்த  வரிகளும் தருகிறார் 


காதல்

கவிதை என்று வந்து விட்டால்  காதல் என்ற அத்தியாயம் இல்லாமலா இதோ இங்கே பட்டியலிடுகிறார் 

"நீ சொல்லெரியாத போதெல்லாம் மனம் கல்லெறி பட்டதாய் காயப்படுகிறது"
என்று காதலின் அவஸ்தையை குறிப்பிடுவதுடன் 

"வீட்டு வேலைகளை நிறுத்தி விட்டு, வாசலில் மனதை நிறுத்தி
கணவன் திரும்பி பார்த்து போகும் ஒரு ஒற்றை பார்வைக்கு  காத்திருப்பதை"
பற்றியும் 

"அழைக்க மாட்டாய் என தெரிந்தும் நொடிக்கொரு முறை அலைபேசியை எடுத்து  பார்க்கும்" காதலின் விந்தையை பற்றியும் சொல்கிறார் 

"அறை கூட்டும் போதெல்லாம் உறக்கத்தில் நீ  உதிர்த்த வார்த்தைகளை எடுத்து பத்திரபடுத்துகிறேன்" என்று சொல்ல்பவர்,

"கண்ணாடி கூட விடை கொடுக்க மறுக்கும் அதிசயம்" பற்றியும் 
சொல்லி தன் வரிகளால் அலங்காரம் செய்கிறார் 

குடும்பம்

"இறைவனிடம் கேட்டு கொண்டு  அறை நாள் விடுப்பில்  வருமாறு அம்மாவை அழைக்கும்" தாய் பாசமும் 

"சண்டையே போட்டிராத அக்காவின் மேல்  கோபம் கொள்வதை குறிப்பிடும் அவர்,"சகோதர சகோதரிக்காக  வீட்டின் குட்டி திண்ணையில்  கவிதையுடன் காத்திருப்பதை" சொல்லும் போது  பிரிவின் வலியுடன் பாசத்தின் வலிமையையும் நம்மால் நன்குணர முடிகிறது   


நாளைய பள்ளி சீருடைக்காய் நனைந்து கொண்டிருக்கிறேன் கிணற்றடியில்,என்று எந்திர உலகை  நமக்கு காட்சிபடுத்தும் உணர்வுள்ள 
கவிதையும் உண்டு 

ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே வந்து பிரிவெளுதிப் போகும்  சந்ததிகளுக்காக காத்திருக்கும் முதுமையை அரவணைக்க சொல்லி முதுமையை தாலாட்டுகிறார் 


பிறந்த கூட்டுக்கு பிரிவெழுதி,என்று ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பின்னான வாழ்க்கையை அது கொடுக்கும்  பயத்தை,  கவிதையின்  துணை கொண்டு போக்கி நிம்மதி அடைவதை குறிப்பிடுவது பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ள துணை நிற்கிறது 


நட்பு

"ஒன்றாய் கை கோர்த்து நாம்  நடந்து தேய்ந்த  சாலைகள் சரிசெய்யபடுகிறதாம் இப்போது பார்த்து வரலாம் வா" ,

என்று  அன்பு தோழிக்கு அழைப்பு விடுக்கும் வரிகள் உன்னத நட்பை 
நமக்கு தெளிவாக்குகிறது 


. இப்படி எங்கு நோக்கிலும் வார்த்தைகளின் அணிவகுப்பில் கவிதைகள்  இருந்தாலும் எல்லாவற்றையும் ஒரே புத்தகத்தில் கொண்டு வராமல் 

நறுக்கு தெறித்த கவிதைகளை மட்டும் பட்டியலிட்டு இன்னும்  மெருகெற்றி வெளியிட்டிருந்தால்  நன்றாக இருந்திருக்கும்.ஒரு கவிதையே  மீண்டும் இன்னொரு பக்கத்தில் வந்திருப்பதை கவனித்து சரி செய்திருக்கலாம். 
மேலும் பாடல்கள் போன்ற கவிதைகள் நம்மை சுவாரஸ்யபடுத்தினாலும்,  சிறு கவிதைகள் தான் நம் கவனம் ஈர்த்து  நினைவில் நின்று கொள்கிறது.அத்தகைய சிறு  கவிதைகளில் இன்னும் நிறைய கவனம் செலுத்தலாம் என்பது எனது கருத்து.

கவிதை நூலை, முன் பக்க உள் அட்டையில் தாய் தந்தை க்கு சமர்ப்பித்து சிறப்பு சேர்ப்பதுடன், பின் பக்க உள் அட்டையில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் படம் சேர்த்து அழகு சேர்க்கிறார் 






திருமதி சசிகலா சங்கர் அவர்கள் ஓரிடத்தில் இப்படி குறிப்பிடுகிறார் 


"நல் நோக்கத்தை மனமணிந்து ஆக்கத்தை உழைப்பாக்கி அன்போடு சீராட்டின்  நாளை அகிலமே வணங்கி நிற்கும் கனவு நாம் காண்கின்றோம்"

என்கின்ற இவரின் இக் கனவு நனவாக வேண்டும் என்று உளமார வாழ்த்துவோம்

ஆர்.வி.சரவணன் 





செவ்வாய், ஜனவரி 01, 2013

ஸ்வீட் காரம் காபி ------ 01-01-2013


ஸ்வீட் காரம் காபி
------------------------------------------- 01-01-2013









இளமை எழுதும் கவிதை நீ.... தொடர்கதை எழுதி கொண்டிருப்பதால் ஸ்வீட் காரம் காபி  தொடர்ந்து எழுத முடியவில்லை. இது தகவலுக்காக. விளம்பரத்திற்காக என்று நீங்கள் நினைத்து கொண்டால்  அதற்கு கம்பெனி நிர்வாகம் பொறுப்பேற்காது (எப்படிலாம் சொல்லி சமாளிக்க வேண்டியிருக்கு )


நீதானே என் பொன் வசந்தம் 

ஜீவா சமந்தா சம்பந்தப்பட்ட பள்ளி காட்சிகள், கிளைமாக்ஸ், பாடல் காட்சிகள்,இடையிடையே சந்தானத்தின் பஞ்ச் ரசிக்க வைக்கிறது   ஜீவாகேரக்டரை விட சமந்தா கேரக்டர் நம்மை ஈர்க்கிறது. காரணங்கள் இரண்டு 1. ஜீவா கேரக்டர் சமந்தவிடமிருந்து விலகி கொள்வதும் பின் சேர்ந்து கொள்ள முயற்சிப்பதுமான குழப்பம்  2.சமந்தா நித்யா கேரக்டரில் க்யூட் டாக நம்மை  கவர்வது.   எல்லா குட்டி பாக்ஸ் சையும்   டிக் அடிச்சிட்டு கடைசியா என் பாக்ஸ் க்கு வந்தியா வசனம் பளிச்.    இசை அரசர் இளையராஜாவின் இசை வார்ப்பில்  சாய்ந்து சாய்ந்து பாடல் ஹம்மிங் செய்ய வைக்கிறது என்றால்   என்னோடு வா.... பாடல் என் மனதோடு இன்னும் நெருக்கமாகி விட்டது.

திரைக்கதை யை கௌதம் கொஞ்சம் மாற்றி எழுதியிருக்கலாம் என்று தோன்றுகிறது அதாவது மணப்பாடு ஊருக்கு சமந்தாவை பார்க்க ஜீவா செல்வதில் படத்தை ஆரம்பித்து  இடைவேளைக்குள் பள்ளி கல்லூரி காட்சிகளை ப்ளாஷ் பேக்கில் கொடுத்து இடைவேளைக்கு பின் இருவருக்குமான இடைவெளியை ஒவ்வொரு காட்சியாக கொஞ்சம் கொஞ்சமாக  குறைத்து கிளைமாக்ஸ் க்கு கொண்டு வந்திருக்கலாம் என்று எனக்கு தோன்றுகிறது. ( பொன் வசந்தம் தான் திரைக்கதையில் கொஞ்சம்   கவனம் செலுத்தியிருந்தால்)



துப்பாக்கி






துப்பாக்கி படம்  பார்த்ததில் ஏ.ஆர்.முருகதாசின் உழைப்பு மெனக்கெடல் 
படம் முழுக்க தெரிந்தது. உதாரணமாக பஸ்சில் வெடிகுண்டு வைத்தவன் மருத்துவமனையிலிருந்து தப்பித்து ஓடும் போது கூடவே விஜய்  
ஓடி வந்து  அவனை வீழ்த்தும் காட்சி விஜய்  நடித்த படங்களில் எனக்கு 
பிடித்த  பூவே உனக்காக ,காதலுக்கு மரியாதை ,கில்லி, வரிசையில் இந்த படமும் சேர்கிறது . தன் தங்கை உள்ளிட்ட பெண்களை மீட்கும் சண்டை காட்சி, ராணுவத்துக்கு மரியாதை செய்யும் கிளைமாக்ஸ் காட்சி சத்யனை விஜய்  தவிக்க விடும் காட்சிகள்நல்லாருந்தது என்றாலும்,விஜய் செய்யும் செயல்கள் அனைத்தும்  எப்படி அரசாங்கத்திற்கு தெரியாமல் போகிறது நடு கடலில் கப்பல் வெடிக்கிறது எனும் போது அது  கூடவா அரசாங்கத்திற்கு தெரியாமல் போய் விடும், இதெல்லாம் சரி செய்திருக்கலாம்.ஆயிரம் பேருக்கு குண்டு வைக்கிறவனே சாவை பத்தி கவலைப்படலே நாம கவலைப்படலாமா வசனம் படம் போலவே நச்.)


------

நட்சத்திர சிறுகதை 

சென்ற மாத விகடனில்  நட்சத்திர எழுத்தாளர்கள் சிறுகதை  அணிவகுப்பில் சங்கர் பாபு வின், சவீதாவும் அவளது இரு அக்காக்களும் என்ற சிறுகதை என்னை கவர்ந்தது காரணம்  இந்த சிறுகதையின் வரிகள்.  உதாரணத்திற்கு  சில வரிகள் இங்கு 

* இயற்கை படைத்திருக்கும் உமிழ் நீரை ஆண்களை அவமானப்படுத்தப் பயன்படுத்தும்  


* சென்ற  பிறவியில் ஏதோ பவர் புல் யாகங்கள் செய்தவர்களாக இருக்கும். தேவதைகளை அல்ப மனிதர்கள் திருமணம் செய்ய வேறு எந்த காரணம்   இருக்க கூடும் ?

* நில உரிமையாளர்கள் கூலி தரும் விசயத்தில் தான் ஏழை நாடுகளை பார்ப்பார்களே தவிர,  ரியல் எஸ்டேட்  பிசினெஸின்  போது நியுயார்க் ,டோக்கியோ,மும்பை போன்ற நகரங்களில் தங்களது உடைமை இருப்பதாக எண்ணி கொள்வார்கள். 


கதை முழுக்கவே இது போன்ற வரிகள் ரசிக்க  வைத்தது (வரிகள் கோர்த்து தொடுக்கப்பட்ட சிறுகதை )

------

மார்கழி கோலம் ஒன்று 






------

சில்லறை 

சமீபத்தில் கும்பகோணம் டு திருப்பூர் சென்றிருந்த போது ஒவ்வொரு பேருந்தாக மாறி சென்றோம். ஒரு பேருந்தில் ஏறிய போது ஐந்து ருபாய் சில்லறையா கொடுங்க சார் என்றார் நடத்துனர். நான் இல்லை என்று மறுக்கவே அவர் இப்படி சொன்னா எப்படி சார் என்று சலித்து கொள்ள நான் சார் உங்களை போலவே எல்லா பேருந்திலேயும் சில்லறை கேட்டு நான்  கொடுத்து என்னிடம் இப்ப சில்லறை இல்லாமல் போய் விட்டது என்றேன் 
 சார் எல்லோருக்கும் கொடுத்துட்டு எனக்கு மட்டும் இல்லேன்னா எப்படி சார்  என்றாரே பார்க்க வேண்டும்.(என்ன இது சின்ன புள்ள தனமா இருக்கு)



மின்வெட்டு கூல் 

கும்பகோணம் பக்கத்திலே கூல் ட்ரிங்க்ஸ் வாங்கினேன். பாட்டிலில் போட்டிருந்த விலைக்கு மேல் மூன்று ரூபாய் கூடுதலாக வாங்கினார்கள் கேட்டதற்கு  மின் வெட்டு என்றார்கள். சரி அவர்கள் சொல்வது நியாயம் தானே என்று நினைத்து கொண்டேன். சென்னையில் சென்ற வாரம் கூல் ட்ரிங்க்ஸ் வாங்கினேன் இங்கும் கூடுதலாக  ஒரு ரூபாய் வாங்கி கொண்டார்கள் கேட்டதற்கு கடைக்காரர் சொன்னகாரணம்  மின்சாரம் தான்.  இங்கே அப்படி என்ன மின் வெட்டு என்று நான் கேட்டதற்கு அவர்  மின் கட்டணம் உயர்ந்துருச்சுல்ல  என்றார் ( நடத்துங்க )

------

குறை(ஒன்று )மில்லை 

சமீபத்தில் நந்தனம் சிக்னல் அருகே நான் நடந்து வந்து கொண்டிருந்த போது கண் தெரியாத மாற்று திறனாளி ஒருவர் எனக்கு முன்னே சென்று கொண்டிருந்தார். கார்களும் டூ வீலர் களும் பறந்து கொண்டிருக்க, அவர் ரோடின் மையத்துக்கு சென்று கொண்டிருப்பதாக எனக்கு தோன்றவே நான் அருகே சென்று ஓரமா வாங்க என்று சொன்னேன். அவர் உடனே நான் அந்த  பக்கம் நந்தனம் காலேஜ் போகணும் என்னை விட்டுடறீங்களா என்று  கேட்டார் நான் உடனே அந்த பக்கம் போற வேலை இல்லியே என்று இழுத்தவன், உடனே சுதாரித்து கொண்டு, விடறேன் வாங்க என்று அவர் கை பிடித்து அந்த டிராபிக்கை  கடந்து  போய் ஓரமாக நடைபாதையில் அவரை விட்டு, எங்கு விட்டுருக்கிறேன் என்று விவரமும் அவரிடம் சொல்லி விட்டு  வந்தேன். வேலைகளுக்குள் என்னை ஈடுபடுத்தி கொள்ளும் வரை அவரது ஞாபகமே என்னை சுற்றி வந்து கொண்டிருந்தது.  கடவுளின்  மேல் கொஞ்சம் கோபமும் வந்தது (கடவுளின் படைப்பில் வேண்டுமானால் குறை இருந்து விட்டு போகட்டும். மனிதர் நாம் காட்டும் அன்பில் ஏதும் குறை இருக்க வேண்டாம் )

------
மாதர் தமை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம் 

சென்ற வாரம் என்னை மிகவும் உலுக்கிய சம்பவம். டில்லியில் மருத்துவ மாணவி பேருந்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு  பிழைத்து 
எழ  போராடி மரணமடைந்தது. அவருக்காக லட்சோபலட்சம் பேர் போராடி , கண்ணீர் விட்டு கதறி துணை  நின்றாலும், மாணவி  அந்த  சூழ்நிலையில்  தன்னை காப்பாற்ற ஒருவர் கூட இல்லையா என்று கதறியிருப்பாரே என்பதை  நினைக்கையில்  என் மனம் பதறுகிறது. தமிழகத்திலும் இதே போல் சம்பவங்கள் அரங்கேற, இங்கு மட்டும் போராடும் எண்ணம் ஏனில்லை .எது எப்படியாகிலும் அந்த பாதகர்களுக்கு தரப்படும்  தண்டனை  அந்த பெண்ணுக்கு ஏற்பட்ட கொடூரத்திற்கு வழங்கப்படும் சரியான நீதியாகவும்  இனி வரும் காலங்களில் இது போல்  ஒரு செயல் நடைபெறா வண்ணமும்   இருக்க  வேண்டும். (தண்டனைகள் கடுமையானால் தான் குற்றங்கள் குறையும் )


------



 எங்கள் மகன் ஹர்ஷவர்தன்  
வடிவமைத்த  புத்தாண்டு வாழ்த்து 


FINAL PUNCH


புத்தாண்டு சபதமாக எதை ஏற்கிறோமோ இல்லியோ மனித நேயம் ஒவ்வொருவருக்குள்ளும் வேண்டும்  என்ற சபதம் ஏற்போம் 

அனைவருக்கும் எனது இதயம் கனிந்த புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்  

ஆர்.வி.சரவணன்