எங்க சின்ன ராசா
பாக்யராஜ் என்ற திரைக்கதை அரசரின் படங்களை பற்றி எழுதுவதென்றால் அது ஒரு வற்றாத ஜீவ நதி போன்று சென்று கொண்டேயிருக்கும். அழகான
நதியிலிருந்து தண்ணீரை கைகளில் ஆசையாய் அள்ளி ஆர்வமுடன்
பார்ப்பது போன்றது தான் இந்த பதிவு.
அவரது படங்களில் கதாநாயகன் கதாநாயகிக்கு இடையே காதல்
உருவாகும் தருணங்களின் காட்சியமைப்பை சிறப்பாக கையாண்டிருப்பார். அதை பற்றி தான் இந்த பதிவில் பார்க்க போகிறோம். இந்த காதல்
தருணங்களின் போது கூடவே இலவச இணைப்பு போல் வரும் பாடல்கள் சரியான சாங் சிச்சுவேசன் என்று நாம் ரசிக்கும் வண்ணம் அமைந்திருக்கும்.
மௌன கீதங்கள்
பாக்யராஜை ஏமாற்றி சரிதா அவருக்கு முன் வேலையில் சேர்ந்து விட்டு பின் அவருக்கு தான் தான் வேலை வாங்கி கொடுத்தது போன்ற பிரமையை உருவாக்கியிருப்பார். ஆனால் தன் தகுதிக்கு தான் வேலை கிடைத்திருக்கிறது என்பதும் சரிதா முன்னமே தனக்கு கிடைக்க வேண்டிய வேலையை ஏமாற்றி பறித்து கொண்டதும் அவருக்கு தெரிய வரும். அப்போது கோபத்துடன் சரிதாவை திட்டுவார். சரிதா கதறி அழ, அதட்டும் பாக்யராஜ், எனக்கு ஒரு கிஸ் கொடு என்று கேட்பார் அழுது கொண்டிருந்த சரிதா ஒரு கணம் திடுக்கிட்டு அவரை பார்க்க அங்கே புத்தகத்தால் தன் முகத்தை மறைத்து கொண்டிருந்த பாக்யராஜ் புத்தகத்தை கொஞ்சமாக விலக்கி காதல் பார்வையுடன் சிரிப்பை உதிர்த்த வண்ணம் பார்ப்பார்.
மூக்குத்தி பூ மேல....... பாடல் தொடங்கும்
அந்த ஏழு நாட்கள்
உங்க ஆசானுக்கு மியூசிக் போட தெரியுமாடா என்று அம்பிகா கேட்க இதை சொல்லி சிறுவன் ஹாஜா ஷெரிப் பாக்யராஜை உசுப்பி விட, அவர் (பாலக்காட்டு மாதவன்) நான் இப்போது பாட போகும் ராகத்தில் அந்த பெண் ஆட்டோமேடிக்கா மதி மயங்கி இங்க வரும் பார் என்று ராகம் ஆரம்பிப்பார். அந்த ராகத்தில் மயங்கி அம்பிகா ஏணி வழியாக தன் மனதை அனுப்பி வைப்பார்
கவிதை அரங்கேறும் நேரம்...... பாடல் தொடங்கும்
தூறல் நின்னு போச்சு
சுலக்க்ஷனா வை பெண் பார்த்து விட்டு சென்ற பின் பாக்யராஜ் அவரை பார்ப்பதற்காக ஆற்றங்கரைக்கு வருவார். அவரிடம் நெருங்கி விட முயற்சிப்பார்.இருந்தும் அவர் பிடி கொடுக்க மாட்டார். அப்போது சுலக்க்ஷனா காலில் முள் குத்தி விடும். பாக்யராஜ் நீ நாளை வரும் போது முள் குத்தாது என்பார்.என்ன மந்திரமா பண்ண போறீங்க என்று கேட்கையில் நீ பாரேன் என்பார். அடுத்த நாள் அவர் ஆர்வத்துடன் வரும் போது அவர் வரும் வழியில் பூக்களால் பாதை அமைத்திருப்பார். பாக்யராஜ்.அதில் நடந்து வரும் சுலக்க்ஷனா நெகிழ்ச்சியுடன் சென்று அவரை கட்டி கொள்வார்.
பூபாளம் இசைக்கும் பூ மக்கள் ஊர்வலம்...... பாடல் தொடங்கும்
எங்க சின்ன ராசா
இந்த படத்தில் ராதாவின் போட்டோ பார்த்தவுடன் வரும் கொண்டை சேவல் கூவும் நேரம் பாடலை விட அதற்கு அடுத்த சாங் சிச்சுவேசன் தான் கலக்கல். பாக்யராஜ் தனக்கு பார்த்திருந்த பெண்ணான ராதா வீட்டுக்கு
மண்ணாங்கட்டியுடன் சென்று தங்குவார். சண்டையில் பாக்யராஜ்
முதுகில் காயம் ஏற்பட்டிருக்கும். ராதா அதை கவனித்து பாண்ட் எய்ட் எடுத்து
வந்து அவருக்கு காயம் பட்ட இடத்தில் போட்டு விட வரும் போது பாக்யராஜ் சந்தோசமாய் சிலிர்த்து கொள்வார். . ராதா தலையில் அடித்து கொண்ட படி பாண்ட் எய்ட் போட்டு விட்டு தன் விரல்களால் பாக்யராஜ் முதுகில் ஒரு சுண்டு சுண்டுவார்.
மாமா உனக்கு ஒரு தூது விட்டேன்...... பாடல் தொடங்கும்
இது நம்ம ஆளு
நான்கைந்து நாட்களாக சாப்பிடாமல் பசியில் இருந்து கூடவே அவமான பட்டிருக்கும் பாக்யராஜை சோமயாஜுலு மனிதாபிமானத்துடன் சாப்பிட வைக்கும் காட்சியில் சாதத்தை பிசைந்து கொண்டிருக்கும் பாக்யராஜ் கண்களிலிருந்து கண்ணீர் வந்து அவர் கையில் விழும். அவரை நெகிழ்ச்சியுடன் கவனித்து கொண்டிருக்கும் சோபனாவின் கண்களில் இருந்தும் கண்ணீர் வந்து அவர் கையில் விழும். காதல் மட்டுமல்ல அங்கே பாடலும் உருவாகும்
அம்மாடி இது தான் காதலா......
இப்படி அவரது பட காட்சிகளை பற்றி ரசித்து சொல்லி கொண்டே போகலாம்.
இப்படி பதிவு எழுதிகிட்டே வந்தவன் ஒரு முக்கியமான விசயத்தை பற்றி சொல்லாமல் விட்டுட்டேன் பாருங்க
இன்று ஜனவரி ஏழு . நடிகர் இயக்குனர் கே. பாக்யராஜ் அவர்களின் பிறந்த நாள்
தங்களை வாழ்த்தும் வயதில்லை தலைவரே. இருந்தும் அன்றும் இன்றும் என்றும் உங்களின் நலம் நாடும் ரசிகனாக இருப்பதில் பெருமைப்படும்
FINAL TOUCH
அந்த ஏழு நாட்கள் படத்தில் பூங்காவில் அம்பிகா ஹாஜா செரிப்பிடம் சாப்பிட்டீங்களாடா என்று விசாரிப்பார். எனக்கு பன்னும் டீயும் வாங்கி கொடுத்துடுவார் அவர் மட்டும் ஈரத் துணியை வயிற்றில் கட்டிய படி பசியை மறைத்து கொள்வார் என்று ஹாஜா செரிப் சொல்ல அம்பிகா பாக்யராஜை ஆச்சரியமாய் கவனிப்பார். அங்கே டியூன் போட்டு கொண்டிருக்கும் பாக்யராஜ் பாடி கொண்டிருப்பார். அந்த வரிகள் அந்த காட்சிக்கு சிகரம் வைத்தது போல் இருக்கும் அது
"ஈரேழு லோகத்துக்கும் ராஜா நான் தானே"
நீங்கள் என்றென்றும் ராஜா தான் பாக்யராஜ் சார்.
HAPPY BIRTHDAY TO YOU
பாக்யராஜ் அவர்களை சந்தித்த அனுபவங்களை பதிவுகளாக பகிர்ந்து கொண்டது இங்கே.
இது நம்ம பாக்யராஜ்
இதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா
,சுவாரஸ்யமான பதிவு.
பதிலளிநீக்குதமிழ்த்திரையுலகில் தனித்த முத்திரை பதித்த பாக்யராஜைப் பற்றிய பதிவு அருமையாக இருந்தது. பாராட்டுகள்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள் நண்பரே
பதிலளிநீக்குஎங்களின் தாமதமான வாழ்த்துக்கள்! சரவணன் சார் அவரது முதல் படமான புதியவார்ப்புகளை மறந்துவிட்டீர்களா? நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள்...அதிலேயே கலக்கியிருப்பாரே....அவரும் ரதியும் முதலில் சந்திக்கும் காட்சி....
பதிலளிநீக்கு