வியாழன், நவம்பர் 28, 2013

புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-1







புண்ணிய ஸ்தலங்களுக்கு ஒரு யாத்திரை-1



நான் டூர் சென்று வந்த பின் இதை பற்றி எழுத கொஞ்சம் தயக்கம் இருந்தது. காரணம் 
குறைந்த நாட்களில் ( 4 நாட்களில் ) பல தலங்களுக்கு சென்று வந்ததால் நிதானிக்க நேரம் இருந்தாலும் சென்ற இடங்கள் பற்றி அதிகமாக  தகவல்கள் பெற முடியவில்லை. ஆகவே பயணம் பற்றிய பதிவை விட்டு விடலாம் என்ற எண்ணத்தில் இருந்தேன். இணைய நண்பர்கள் நிசாமுதீன் மற்றும் துளசிதரன் எப்போது எழுத போறீங்க என்று ஆர்வமுடன் கேட்டு கொண்டிருக்க என் கூட டூர் வந்திருந்த நண்பர்களும் என்னப்பா இன்னும் எழுதலையா என்று கேட்டார்கள். (அவர்களுக்கு தங்கள் பயணம் எழுத்தில் எப்படி வருகிறது என்று பார்க்கும் ஆர்வம் இருக்கிறது) ஆகவே இதோ பயணம் பற்றிய தொடர் தொடங்குகிறது. ஒரே பதிவாக 
தந்தால் அதில் ஏதும் சுவாரசியம் இருக்காது என்பதால் நான்கு பதிவுகளாக தொடர்ந்து 
தரலாம் என  இருக்கிறேன். வாருங்கள் அதில் கொஞ்சம் பயணித்து வருவோம் 

நாங்கள் சென்ற ஸ்தலங்கள் 

பண்டரிபுரம்,
சனிசிக்னாபுர்,
ஷிர்டி,
நாசிக்,
கிருகம்பெஷ்வர் கோவில்,
மற்றும் மும்பை 

நான் மற்றும் எனது அலுவலக நண்பர்கள் வைத்யா ,முரளி , ஸ்ரீனிவாசன் சேர்த்து மொத்தம் நான்குபேர். இதில் நான் வைத்யா முரளி மூவருக்கும் இந்தி (நகி மாலும்) தெரியாது.இந்தி 
நன்கு பேச தெரிந்ததுடன் மட்டுமில்லாமல் வட இந்திய இடங்கள் பலவற்றை அறிந்தவர் ஸ்ரீனிவாசன் மட்டுமே. அவரே இந்த பயணத்துக்கு தலைமை ஏற்று வழி நடத்தி சென்றார்.



வைத்யா,முரளி, ஸ்ரீனிவாசன் 

நாங்கள் செப்டம்பர் 27 இரவு மும்பை மெயிலில் சென்ட்ரலில் இருந்து கிளம்பினோம். எங்களுக்கான சீட்களை ரயில்வே தனி தனியாக பிரித்துபோட்டிருந்தார்கள். அங்கிருந்தவர்களை மாற்றி விட்டு நாங்கள் அமர்ந்து கொண்டோம்.அமர்ந்த கொஞ்ச நேரத்திலேயே பார்த்தால் அன் ரிசர்வ்டு கம்பார்ட்மென்ட் போல் ஆகி விட்டது பாத்ரூம் செல்லும் வழியெங்கும் பயணிகள் வெள்ளம்.கொஞ்ச நேரம் பேசி விட்டு படுத்து கொண்டு விட்டோம். மலைகள் என்றல் எனக்கு எப்போதுமே ரொம்ப பிடிக்கும். ரயிலில் சென்று கொண்டிருக்கும் போது மலைகள் வரிசையாய் வர நான் க்ளிக் செய்த மலைகளில் ஒன்று 
இடம் அனேகமாக அதொனி ஸ்டேசன் அருகில் என்று நினைக்கிறேன்  



 அதோனி அருகே 

காலையில் மந்திராலயம் ரோடு ஸ்டேசனில் கொஞ்ச நேரம் வண்டி நின்றது இறங்கி நடை பயில்வதும் போட்டோ எடுத்து கொள்வதுமாக நேரம் கடந்தது 




மந்த்ராலயம் ரோடு ஸ்டேசன் 

முரளி வீட்டிலிருந்து கொண்டு வந்திருந்த இட்லி மற்றும் ஸ்நாக்ஸ் சாப்பிட்டு தூங்கி வேடிக்கை பார்த்து வண்டியை  சோலாபூர் கொண்டு வந்து நாங்கள் சேர்ந்த போது(?) மணி ஆறரை.அலுவலகம் முடிந்து எப்படா கிளம்புவோம் என்றதொரு  மன நிலையில் அவசரமாக ஆனால் மிகுந்த ஆர்வத்துடன் வெளியில் வந்தோம்



ஏற்கனவே ஸ்ரீனிவாசன் உறவினர் ஏற்பாடு செய்து தயாராக இருந்த டாட்டா இண்டிகா காரில் ஏறி கிளம்பினோம். முதலில் நல்ல ஹோட்டலா பார்த்து அழைச்சிட்டு போங்க பசி எங்களை விரட்டுது என்று சொன்னோம் டிரைவருடன் வந்திருந்தவர் கார் ஓனர், சூப்பர் சாப்பாடு உங்களுக்கு கிடைக்க போகுது என்று அழைத்து போனார். 

நுழைந்த ஹோட்டலில் வட இந்திய உணவு வகைகளாக இருக்க நான் பயந்து போய் விழித்தேன்.(கண்ணா தமிழ் சாப்பாடு கொஞ்ச நாளைக்கு மறந்துடு என்றார் நண்பர் ) முதலில் வந்தது ரொட்டி போல் இருந்த ச்வீட் சப்பாத்தி அதை எல்லோரும் பகிர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்க சப்பாத்தி சைடீஸ் சாதம் தயிர் என்று ஒவ்வொன்றாக  வர எல்லாமே சாப்பிட ருசியாக இருந்தது ஒரு வேளை பசி ருசி அறியல போலிருக்கு னு  நீங்க நினைச்சிருப்பீங்க ஆனால் இப்ப நினைச்சாலும் அந்த சாப்பாடு டேஸ்டா  தான் இருந்தது. மேலும் அந்த பயணத்தில் நாங்கள் சாப்பிட்ட இடங்களை விட இந்த சாப்பாடு தான் பெஸ்ட். (இதை நண்பர்கள் அனைவருமே சொன்னார்கள் ) வேர்கடலை மற்றும் மிளகாய் சேர்த்த பொடி என்று ஒன்று வைத்தார்கள். அதை சப்பாத்தியுடன் சேர்த்து கொண்டு ஒரு கை பார்த்தோம். ஒரு தட்டு முழுக்க தக்காளி வெள்ளரிக்காய் ஸ்லைஸ் கொண்டு வந்து வைத்தார்கள். சாப்பிட்டு முடித்த பின் மசாலா மோர் கொண்டு வந்து கொடுத்தார்கள் அது செரிமானத்திற்கு ஏற்றது என்று சொன்னதால் அதையும் ஒரு பிடி பிடித்தோம். கூடவே ஒரு தண்ணீர் பாட்டில் முழுக்க அதை கேட்டு வாங்கி கொண்டோம். (வழியில் சாப்பிட) 

எனக்கு எப்போதுமே ஒரு பழக்கம் உண்டு என்னை ஏதேனும் அசத்தி விட்டால் உடனே சம்பந்தப்பட்டவரை சென்று பாராட்டி விட வேண்டும். முதலாளியிடம் சென்று சாப்பாட்டின் நிறைவை பற்றி நான் தமிழில் சொல்ல நண்பர் இந்தியில் மொழி பெயர்த்தார்.  கூடவே 
என்னை எழுத்தாளர் என்று அவர்களிடம் கொஞ்சம் எடுத்து விட்டார். அவர்களிடம் இருந்து விசிடிங் கார்டு பெற்று கொண்டோம் (ஹோட்டல் பெயர் என்ன என்று கேட்கிறீர்களா இந்த தொடரின் முடிவில் தருகிறேன் முகவரியுடன்) 

 அங்கிருந்து கிளம்பி, சோலாபூர் பெட் சீட்டுக்கு சிறந்த இடம் என்றதால் எல்லோரும் சென்று ஒரு பெரிய கடையில் பர்சேஸ் செய்தார்கள். வாங்க வேண்டாம் என்ற எண்ணத்தில் இருந்த வனை அங்கிருந்த வகை வகையான பெட் சீட்கள்  என்னையும் வாங்க வைத்து விட்டது. வண்டிக்கு சாப்பாடு கொடுத்து விட்டு (அதாங்க டீசல்)  நாங்கள்  கிளம்பியது எட்டு மணிக்கு  
மகராஷ்டிரா மாநிலத்தில் சோலாப்பூரிலிருந்து 80 கிலோ மீட்டரில் இருக்கும் பண்டரிபுரம் 
வந்து சேர்ந்த போது மணி பத்து. கோதாவரி ஆற்று பாலத்தை (DOWN
BRIDGE) கடந்து கோவில் வந்து சேர்ந்தோம்.இரவில் சென்றதால் அந்த இயற்கை 
எழிலை ரசிக்க முடியவில்லை போட்டோ கூட எடுக்க முடியவில்லை.





பதினொரு மணி வரை கோவில் திறந்திருக்கும் என்று சொல்லியிருந்தாலும் எங்கள் நடை வேகமானது. கோவிலின் உள்ளே நுழையும் போது செல் மற்றும் கேமரா கொண்டு போக கூடாது என்று சொல்லி விட்டார்கள்.ஆகவே போட்டோ எடுக்க முடியவில்லை.அந்த இரவு வேளையிலும் கூட்டம் இருந்தது. இருந்தும் நெரிசல் ஏதும் இல்லாமல் சென்று தரிசித்து 
விட்டு நிதானமாக அந்த கோவிலை சுற்றி வந்தோம்.(பாண்டுரங்கன் பகவானையே காக்க வைத்த சிறப்புடையவர். அவருக்கான கோவில் இது )




பண்டரிபுரம் கோவில் முகப்பு. இது நான் எடுத்ததல்ல 
இணையத்திலிருந்து  எடுத்தது 


காரில் ஏறும் முன் டீ சாப்பிடலாம் 
என்று மற்றவர்கள் செல்ல நானும் முரளியும்  பால் சாப்பிடலாம் என்று எதிரில் இருந்த கடைகளுக்கு சென்றோம். பத்து கடைகளுக்கும் மேல் அங்கே இருந்தது. அனைத்திலும் பெரிய எண்ணைசட்டி வைத்து பால் காய்ச்சி கொண்டிருந்தார்கள். கடை மூட போகும் நேரம் வேறு. எந்த கடையில் நன்றாக இருக்கும் என்று நாங்கள் யோசித்தவாறே செல்ல, டீ கடை காரரே நாலாவது கடைக்கு போங்க நல்லாருக்கும் என்று சொன்னதாக வைத்யா வந்து சொன்னார்.நிஜமாகவே நன்றக இருந்தது. பதினொரு மணிக்கு வண்டி ஏறியது தான் எனக்கு தெரியும். நானே வழியில் ரசிக்க வேண்டும் என்று நினைத்தாலும் முடியாமல் நன்றாக தூங்கி விட்டோம் டிரைவரை தவிர. அதிகாலை கண் விழிக்கும் போது நான்கு மணி. சனிசிக்னாபூர் வந்து விட்டது. அந்த அதிகாலையில் ஒரு ஆச்சரியத்தை கண்டோம் 

அது அடுத்த பதிவில் 



ஆர்.வி.சரவணன் 

10 கருத்துகள்:

  1. பயணக்கட்டுரை இதுவரை அருமையாகவே உள்ளது. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
  2. வட பாரதத்தின் திருத்தலங்களைப் பற்றிய தகவல்களை - தங்களால் அறிய முடிகின்றது!.. நன்றி!..

    பதிலளிநீக்கு
  3. இனிய பயணம்... வாழ்த்துக்கள்... தொடர்கிறேன்... படங்கள் அருமை...

    பதிலளிநீக்கு
  4. அப்பாடா... சுற்றுலா பதிவை ஆரம்பிச்சாச்சா!

    அது சரி, தொடர்கதையில் வைப்பதுபோல், சுற்றுலா
    தொடர் பதிவிலும் சஸ்பென்ஸ் வைக்கறீங்களே,
    அது என்ன ஆச்சரியம் சார்?

    பதிலளிநீக்கு
  5. இனிய பயணம் சென்று வந்தமைக்கு வாழ்த்துக்கள்.
    தாங்கள் கண்ட ஆச்சரியத்தை நாங்களும் காண காத்திருக்கிறோம்.
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  6. // பல தலங்களுக்கு சென்று வந்ததால் நிதானிக்க நேரம் இருந்தாலும் சென்ற இடங்கள் பற்றி அதிகமாக தகவல்கள் பெற முடியவில்லை.//

    உங்கள் அனுபவத்தையும், இருக்கும் தகவல்களையும் வைத்து வண்ணப் படங்களோடு எழுதுங்கள். பதிவுகள் சிறப்பாக அமைந்துவிடும். இந்த தொடக்க பதிவே நன்றாக படிக்க சுவாரஸ்யமாகவே உள்ளது. தொடர்ந்து எழுதவும். வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
  7. சுவையான சுற்றுலா அனுபவம்! இனிக்க இனிக்க இருக்கிறது! தொடர்கிறேன்!

    பதிலளிநீக்கு
  8. நல்ல அருமையான பதிவு. தொடருங்கள் நண்பரே! கடைசியில் எழுதி விட்டீர்கள்! நன்றி வாழ்த்டுக்கள்!!!

    பதிலளிநீக்கு
  9. எனக்கு காசி மற்றும் அந்தப் பகுதி சார்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்பது நீண்ட நாள் விருப்பம். எப்போது செல்லப்போகிறேன் என்று தெரியவில்லை.

    பார்ப்போம்..

    பதிலளிநீக்கு
  10. வழமையான இயல்பான நடை சார்.. இதோ அடுத்த பகுதியை நோக்கி

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்