செவ்வாய், ஏப்ரல் 11, 2017

முகநூல் குறிப்புகள் -1




முகநூல் குறிப்புகள் -1

முகநூலில் அவ்வப்போது நான் எழுதி வரும் பதிவுகளை முகநூல் குறிப்புகள் என்ற தலைப்பில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


"றைவா, ஆலயம் ஒன்றை எழுப்பி உன் புகழ் பாட விரும்புகிறேன். நீ அங்கே எழுந்தருளி அருள் பாலிக்க வேண்டும்" பக்தன் சொன்னான்.
அசரீரி ஒலித்தது.
"பக்தனே. எத்தனையோ ஆலயங்கள் அகிலமெங்கும் இருக்க, புதிதாக நீ ஆலயம் 
எழுப்ப வேண்டியதன் அவசியம் என்ன? "


தடுமாறிய பக்தன், "எனக்கென்று என் விருப்பபடி ஆலயம் எழுப்ப ஆசைப்படுகிறேன்." என்றான் பெருமையும் கர்வமும் பிடிபட.

"ஹா.ஹா என் பெயரை கொண்டு உன்புகழ் பாட போகின்றாயா?" அசரீரியின் 
நகைப்பில் இருந்த கேலி அவனை திக்குமுக்காட வைத்தது.
"ஒரு ஆலயம் எழுப்ப ஆசைப்பட்டது தவறா?"
"நீ (ஆலயம் எழுப்பி) என்னை அழைக்காதே.
இருக்கின்ற ஆலயங்களில், மனிதர்களில் எங்கே நானிருக்கிறேன் என்று 
என்னை தேடி வா"
இறைவனின் சொல் ரூபத்தில் பக்தன் கள்ளானான்.

------


டங்களில் ஹீரோவுக்கு கண்பார்வை வரும் போது நீங்க யாரை பார்க்கணும்னு விருப்பப்படறீங்கனு கேட்பாங்க. அதற்கு ஹீரோ அம்மா, அப்பா, காதலினு அவருக்கு யார் மேல பிரியம் ஜாஸ்தியோ அவர்களை சொல்வார்.
இதுவே அவர் கண்திறந்து பார்க்க போகிறவர்களோட மனநிலை எப்படி இருக்கும். சமீபத்திய படம் ஒன்றில் வந்த காட்சி.
ஹீரோ கண்விழிக்க போகிறார். அவரது அம்மா ஹாஸ்பிடலுக்கு சுடிதாரில் வருவதை பார்த்தவுடன் கணவர் (ஹீரோவோட அப்பா). அதிர்ச்சியாகி என்னடி இது கூத்து " என்று கேட்கிறார்.

அம்மா சொல்கிறார். " பத்து வருஷத்துக்கு முன்னாடி என் பையன் என்னை எப்படி பார்த்தானோ எப்படி இருந்தா அவனுக்கு பிடிக்குமோ அப்படி தான் வந்திருக்கேன்."

"பார்த்து. பையன் இதுக்காகவா எனக்கு பார்வை கிடைச்சுதுனு கதற போறான்"
" ம். பொறாமை உங்களுக்கு. உங்களை பார்த்து தான் அடையாளம் தெரியாம திணற போறான்."
பையனுக்கு கண்பார்வை போன நிமிடத்துக்கே போய் பையனை வரவேற்பது மாதிரியான காட்சி.
படம் அதே கண்கள்.
இப்ப என்னோட ஹம்மிங் இந்த பாட்டு தான்
அடியே நீ களவாணி. குட்டி காட்டேரி. கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ....

------

கும்பகோணம் டு திருவாரூர் சாலையில், (மூலங்குடி என்று நினைக்கிறேன்) டூ வீலருக்கு காத்து பிடிப்பதற்காக ஒரு கடையின் முன்பு வண்டியை நிறுத்தினேன். அமர்ந்திருந்த கடையின் முதலாளி எழுந்து வந்தார். அதிரச்சியானேன். காரணம் இடுப்பு வரை தான் அவர் உடலிருந்த்து. கைகளின் துணை கொண்டு வண்டி அருகே வந்தவரை பார்த்தவுடன் மனசு ஒரு கணம் நொறுங்கி போனது. இதெல்லாம் எனக்கு சாதாரணமே என்பது போல் அவர் பாட்டுக்கு கேசுவலாக டியூபை எடுத்து கொண்டு ஏர் செக் செய்ய ஆரம்பித்தார்.
"சார் காத்து ஏற்கனவே அதிகமா இருக்கு. இப்படி இருந்தா ஓட்டும் போது உங்க தோல்கள் வலி கண்டுடும். இவ்வளவு தேவை இல்ல" என்று அளவை சரி செய்தார்.

நான் பத்து ரூபாய் எடுத்து நீட்டிய போது,

"வேணாம் சார். நான் தான் காத்து பிடிக்கவே இல்லியே அளவை தானே சரிபண்ணேன் வேண்டாம். விடுங்க" என்ற படி பின்னுக்கு நகர்ந்தார்.
"ஏர் செக் பண்றதும் ஒரு வேலை தான்" என்று வற்புறுத்தி அவரிடம் பணம் தந்தேன்.
டூ வீலரை ஸ்டார்ட் செய்து செல்ல ஆரம்பிக்கையில் அவர் சொன்ன வார்த்தை தான் திரும்ப திரும்ப என் ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது.
"நான் தான் காத்து பிடிக்கலியே. காசு வேணாம்"
யோவ். உன்னை ரொம்ப பிடிக்குதுய்யா.

------

ன்று காலை ரயிலிலிருந்து இறங்கும் போது கவனித்தேன்.
பக்கத்து கோச்சிலிருந்து இறங்கிய இளம் பெண்ணை வரவேற்ற ஒரு தந்தை, மகள் தோளில் மாட்டியிருந்த பேகை வாங்கி தன் தோளில் மாட்டி கொண்ட படி மகளை 
கை வீசி நடக்க விட்டு அழைத்து சென்றார்.
பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வருகையில் கனமான புத்தக பையை நாம் சுமந்து குழந்தைகளை கைவீசி நடக்க விட்டு மழலை மொழியை ரசித்த படி அழைத்து வருவோமே அதை ஒத்திருந்தது ஆனந்த யாழை மீட்டும் இந்த நிகழ்வு.
அந்த பேக் அப்படி ஒன்றும் கனமில்லை என்பது இங்கே கூடுதல் தகவல்.

------

ளவு கடந்த டென்ஷனுடன் அன்றைய தினம் ரயிலில் ஏறியமர்ந்தேன். எதிரில் இளைஞர் இளைஞிகள் சிலர் ஒரு குழுவாக வந்திருந்தார்கள். செம அரட்டையிலிருந்தார்கள். அவர்களது அரட்டையை டென்சனுடன் கவனித்தவாறே, வாங்கி வந்த பார்சலை பிரித்து தோசையை சாப்பிட்டு முடித்தேன். தண்ணீர் பாட்டில் வாங்காமல் ஏறி விட்டது அப்போது தான் தெரிந்தது.
சரி தாம்பரத்தில் எப்படியும் வாங்கி விடலாம் என்று காத்திருந்தேன். ஆனால் எனது கோச் நின்ற இடத்தில் எந்த கடையும் இல்லை. தண்ணீர் பாட்டில் விற்ற படியும் யாரும் வரவில்லை. பசியோட கூட இருந்திடலாம் தாகத்தோட இருக்க முடியாது என்பதை உணர்ந்த நேரமது.
ரயிலில் மற்றவர்களிடம் கேட்கவும் கூச்சமாக இருந்தது. சரி அப்படியே இருந்து விடலாம் என்றாலும் முடியவில்லை. எதிரில் அரட்டையிலிருந்தவர்களிடம் தண்ணீர் பாட்டில்கள் நிறைய இருக்கவே,
"தண்ணீர் பாட்டில் வாங்க முடியல. காசு வேண்ணா கொடுத்துடறேன் ஒரு பாட்டில் கொடுக்கறீங்களா?" என்று நான் சங்கோஜமாக கேட்ட அடுத்த நொடியே தாமதிக்காமல் முழு தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினார்கள். நான் அதற்குண்டான பணம் நீட்டிய போது "அதெல்லாம் வேண்டாம் சார்" என்று மறுத்து விட்டார்கள்.
ஆகவே, எனது அப்போதைய தேவைக்கான தண்ணீரை மட்டும் எடுத்து கொண்டு விட்டு, பாட்டிலை திரும்ப கொடுத்து நன்றி சொன்ன போது "இதுக்காக எதுக்கு சார் நன்றிலாம்" என்ற படி புன்னகைத்தார்கள்
"கொஞ்சம் டென்சன். அதனால வாங்க மறந்திட்டேன் " என்று அவர்களிடம் நான் சொல்லி கொண்டிருக்க, நீ வாங்காமல் வத்ததால் தான்டா இப்படி ஒரு அனுபவம் உனக்கு கிடைச்சிருக்கு என்ற படி இடித்துரைத்து கொண்டிருந்தது மனசு.

------

டலூரிலிருந்து கும்பகோணத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கையில் தான் அந்த இளைஞனை பார்த்தேன். எனக்கு பக்கத்து சீட். பேசி கொண்டிருக்கையில், படித்த பின் வேலைக்காக கஷ்டப்பட்டு நண்பர்கள் உதவியுடன் சென்னை வந்து வேலையில் சேர்ந்திருப்பதாய் சொன்னார். பணம் செலவழித்து படித்து விட்டு கிடைத்த வேலையில் குறைவான சம்பளத்தில் பணியாற்றுவதன் கவலை (நண்பர்களுடன் உற்சாகமாக அளவளாவி கொண்டிருந்தாலும்) அவரிடம் இருந்தது.
எவ்வளவு சம்பளம் வருது என்று கேட்ட போது,
மாசம் முழுக்க ஓவர் டைம் சேர்த்து பார்த்தா கூட பிடித்தம் போக 12000 வரை வரும். நண்பர்களுடன் சேர்ந்து தங்கி கொள்வதால் இடம் சாப்பாடு செலவு எல்லாம் போக 3000 வரை கையில் நிக்கும். அதை வீட்டுக்கு அனுப்புகிறேன் என்றார்.
அவரை பார்க்கையில் சென்னை வந்த புதிதில் நான் வேலைக்காக கஷ்டப்பட்டு கொண்டிருந்த காலங்கள் என் நினைவில் வந்து சென்றன.
தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிய படி பேருந்தை விட்டு இறங்கும் போது கேட்டேன். ( தீபாவளிக்கு சென்னையிலிருந்து வருகையில் நடந்தது இது)
"அப்பா என்ன பண்றாரு?"
"அப்பா விவசாயிங்க".

படம் : திருவாரூர் தியாகராஜர் கோவில் எனது க்ளிக் 

ஆர்.வி.சரவணன் 

புதன், ஏப்ரல் 05, 2017

மயங்குகிறாள் ஒரு மாது




மயங்குகிறாள் ஒரு மாது

ஒரு புறம் வேடன் ஒரு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலை மான்..... என் விருப்ப பாடல்களில் வாணிஜெயராம் பாடிய இந்தப் பாடலும் உண்டு.

இந்த பாடலின் காட்சியை டிவியில் பார்த்த போது இந்த படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. காரணம், இந்த பாடலின் இடையே மேற் சொன்ன வரிகளை சுஜாதா தன் மருண்ட விழிகளை வலப்பக்கமும் இடப்பக்கமுமாக மாற்றியபடி பாடி கொண்டிருப்பார். கூடவே அவரது கணவரான முத்துராமன் அவரை பின் தொடர்ந்த படி குழப்பமாய் கவனித்து கொண்டிருக்க, விஜயகுமாரும் தேங்காய் சீனிவாசனும் சுஜாதாவை அச்சுறுத்தும் வேடன், நாகமாக காட்டப்படுவார்கள்.

இந்தப்படத்தில் வரும் இன்னொரு பாடலான சம்சாரம் என்பது வீணை.... பாடல் காட்சியை கவனித்த போது, முத்துராமன் மனைவி சுஜாதா பற்றி புகழ்ந்து பாடிக் கொண்டிருப்பார். அதை ரசித்து மகிழ வேண்டிய சுஜாதாவோ அங்கே நின்றிருக்கும் விஜயகுமாரையும் தேங்காய் சீனிவாசனையும் பார்த்து மிரண்டு போய் நின்றிருப்பார். தேங்காய் சீனிவாசனின் பார்வையிலிருக்கும் மிரட்டலும், விஜயகுமாரின் பார்வையிலிருக்கும் குற்ற உணர்ச்சியும் ஒரு புதிருக்கு விடை தேட சொல்லும் ஆர்வத்தை நமக்கு தந்து விடுகிறது.


அப்படி என்ன தான் கதை இது என்பதை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டவன், இந்தப் படத்தின் பெயரை பார்த்து கதை இப்படியானதாக தானிருக்கும் என்று ஓரளவு அனுமானத்திற்கு வத்திருந்தேன். இந்தப்படத்தின் கதை வசனகர்த்தா மறைந்த திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள் என்றவுடன் இப் படத்தை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு வந்ததுடன் நேற்று இந்தப் படத்தை பார்த்தும் விட்டேன்.ஓரளவு நான் அனுமானித்த ஒன்லைன் தான் என்றாலும் அதை சில பல திருப்பங்கள் மூலமும், ஒவ்வொரு கேரக்டரின் செயல்பாடுகள் மூலமும் ரசிக்கும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சுஜாதா தான் கதையின் மையமே. மிரட்சியும், தவிப்பும், அன்புமாக படம் முழுக்க கல்பனா கதாபாத்திரமாகி இருக்கிறார். க்ளைமாக்ஸில் வெளிப்படும் முத்துராமனின் குணாதிசயம் வாட் எ கேரக்டர் என்று சொல்ல வைத்து விடுகிறது. வில்லனாக இருந்தாலும் சொல்பேச்சு தவறாத நாணயஸ்தனாக தேங்காய் சீனிவாசன் அட சொல்ல வைக்கிறார். விஜயகுமாரின் கேரக்டரை எங்க கட் பண்ண வேண்டுமோ அங்கே கட் செய்து எந்த இடத்தில் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமோ சேர்த்து விறுவிறுப்பை தந்திருக்கிறார்கள். முத்துராமனுக்கு அக்காவாக டாக்டராக வரும் எம்.என் ராஜம், தோழியாக வரும் ஜெயலட்சுமி, அன்பான அப்பாவாக கண்டிப்பை குரலில் காட்டாமல் வார்த்தைகளில் காட்டும் அசோகன், என்று சக கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கும் விதம் படத்திற்கு பெரிய பிளஸ்.

வசனத்திற்கு உதாரணமாக ஓரு காட்சியை சொல்கிறேன். சுஜாதாவின் பழைய காதலன் விஜயகுமார் அவருக்கு தன்னால் தொந்தரவு இருக்க கூடாது என்று வேலையை விட்டு செல்ல முயற்சிக்க, கணவன் முத்துராமன் தடுத்து வேலையில் தொடர்ந்து இருக்க வைத்து விடுவார். கணவனின் இந்த முடிவை எதிர்பாராத சுஜாதா தத்தளிக்க, என்னாச்சு என்று முத்துராமன் கேட்பார். அதற்கு சுஜாதா சொல்வார். "தூசி எவ்வளவு துடைச்சாலும் போக மாட்டேங்குதுங்க"
படத்தின் ஆரம்ப காட்சிகளை விட, சுஜாதா பிரச்னையில் சிக்கி கொண்ட பின் தான் சுவாரஸ்யம் வந்து அவரோடு நம்மையும் சேர்த்து மிரள வைக்கிறது.

சில படங்களின் பாடல்கள் கேட்கும் போதோ காட்சிகள் பார்க்கும் போதோ படம் பார்க்கும் ஆர்வம் வரும். அந்த ஆர்வத்துக்கு தீனி போட முடியாத படி சில படங்கள் ஏமாற்றத்தை தந்து விடுவதுண்டு. ஆனால் இந்த படம் நாம் எதிர்பார்த்ததை விட ஆச்சரியமளிக்கும் ஒன்றாகவே அமைந்திருக்கிறது.
 படம் : மயங்குகிறாள் ஒரு மாது.
படத்தில் வரும் இன்னொரு இனிமையான பாடல்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்....
இசை விஜய பாஸ்கர்
இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.
படம் வெளியான ஆண்டு 1975


ஆர்.வி.சரவணன் 


செவ்வாய், ஏப்ரல் 04, 2017

ஊடல்




ஊடல்
(சிறுகதை) 

நந்தகோபால் மனைவி வித்யாவுடன் நடந்த சண்டையில் ரொம்பவே காயப்பட்டிருந்தான். இவ நம்ம மேல பாசமா இருக்காளா இல்லியானு தெரியலியே என்று நொந்து போனவானாய் வீட்டை விட்டு வெளியேறியவன், எங்கியாவது கண்காணாத இடத்துக்கு ரெண்டு நாள் போய் சுத்திட்டு மனசு ரிலாக்சான பின் வரணும் என்று நினைத்த படி  மனைவியிடம் சொல்லாமலே ஊட்டிக்கு பயணமானான். இருந்தும் பிள்ளைகள் தவிப்பார்களே என்ற தயக்கம் வரவே வாட்ஸ் அப்பில் பையன் செல் போனுக்கு மெசேஜ் அனுப்பினான்.

இரண்டு நாளில் வந்து விடுவேன். ஆகவே என்னை தேட வேண்டாம். அம்மாவிடம் மட்டும் இதை சொல்லாதே அவள் தவிக்கட்டும் 

ஒகே  என்று ரிப்ளை வரவும் நிம்மதியுடன் ஊட்டி போய் இறங்கினான்.  நிம்மதி சில மணி தேரங்கள் மட்டுமே இருந்தது. அதற்கு பின் மனைவி பிள்ளைகளை விட்டு வந்தது ஒரு குற்ற உணர்வாகவே இருந்தது. அந்த உணர்வு எப்ப வீட்டுக்கு போவோம் என்ற நிலைக்கு கொண்டு வந்து வீட்டிலேயே விட்டு விட்டது. "எங்க போனீங்க?" மனைவி தவித்த படி கேட்பாள் என்று எதிர்பார்த்த வனுக்கு மிகுந்த ஏமாற்றம். 

வித்யா வேலைக்கு போய் விட்டு வரும் நந்த கோபாலை எதிர்பார்ப்பது போலவே இயல்பாக இருந்தாள். பையனுக்கு விசயம் தெரியும்  பொண்ணுகிட்டயும் பையன் சொல்லி வைத்திருக்கலாம். ஆகவே இருவரும் பதட்டமாகலே. ஆனா இவ பதட்டப்படவே இல்லியே.  என்ன மனுஷி இவள் என்று கடுப்பானவன் அவளிடமே இதை கேட்டான்.

"ரெண்டு நாளா புருஷன் வரலியே? என்ன ஏதுனு பதட்டமே இல்லியா உனக்கு"

"ரெண்டு நாளைக்கு அப்புறமும் நீங்க வரலைனா தான் பதட்டம் வந்திருக்கும்.இந்த உலகத்தையே புரட்டியிருப்பேன்"

வித்யா இப்படி பதிலளிக்கவும், பையன் சொல்லிட்டான் போலிருக்கு என்று நினைத்த படி கோபமாய் பையனின் பக்கம் திரும்பினான். பையன் பொண்ணு இருவரும்  "ஹாய் டாட்" என்றார்கள். சிரித்தபடி 

நந்த கோபால் முறைக்க ஆரம்பிக்கவும்,

வித்யா குறும்பாக சிரித்த படி சொன்னாள்.

" முறைக்காதீங்க. பையன் வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை கோபத்துல எனக்கு அனுப்பிச்சுட்டீங்க."

ஆர்.வி.சரவணன்

சனி, மார்ச் 25, 2017

கொஞ்சம் சிரிங்க பாஸ்






கொஞ்சம் சிரிங்க பாஸ்


இந்த  நகைச்சுவை பத்தி என்ன நினைக்கறீங்க பாஸ். நாங்க நினைக்கிறது இருக்கட்டும் நீ முதல்ல சொல்லுனு தானே கேட்கறீங்க. சொல்றேன். இந்த நகைச்சுவை படிக்கிறப்ப நல்லாருக்கு. டிவி ல பார்க்கிறப்ப நல்லாருக்கு. அட சுத்தி இருக்கிறவங்க பேசினால் கூட கேட்க நல்லா தான் இருக்கு ( என்ன சூர்யா சிங்கம் டயலாக் மாதிரி இருக்கு) ஆனால் நாமளே ஒரு நகைச்சுவை படைப்பை உருவாக்கணும்னா கஷ்டமால்ல இருக்கு.

 நான் கொஞ்சம் சீரியஸ் டைப்.நான் ஜாலியா சிரிச்சு பேசணும்னு நினைக்கிறப்ப , என்னை டென்சன் ஆக்கணும் னே சொந்த காசுல பிளைட் பிடிச்சு வரவனும் இருக்கான். நான் சீரியசா இருக்கிறப்ப அதை பத்தி அலட்டிக்காம, என்னை சுத்தி வந்து ஜாலியா மொக்கை போடறது மட்டுமில்லாம நான் சீரியசா பேசறதுக்கு எல்லாம் கவுன்ட்டர் குடுக்கிறதுக்காக பஸ்ஸை பிடிச்சு விதௌட் ல வரவனும் இருக்கான்.

என்ன தான் உன் பிரச்சனை னு கேட்கறீங்களா சொல்லிடறேன் 
என் நண்பன் ஒருத்தன்  சினிமால நடிக்கணும் சந்தானம் மேத்ஸ் ( அதாங்க கணக்கா) ஆகணும் னு ஆசைப்படறான். டிவி சானல்ல புதுசா நடிக்க வரவங்களுக்கு கேட் திறந்து விடறாங்களாம். பெரிய டைரெக்டர்  சீப் கெஸ்ட்டா வறாரு.   நான் நடிக்கிறதுக்கு நீ காமெடி ஸ்கிரிப்ட் எழுதி கொடு னு கேட்டு ஒரே டார்ச்சர் பண்றான். அவன் டார்ச்சருக்கு சாம்பிள் வேணுமா. நடு நைட் ஒரு மணிக்கு போன் பண்ணி எழுத ஆரம்பிச்சிட்டியா னு கேட்கிறான் பாஸ்.இவன் தொல்லை தாங்காம, என் கிட்டே சீரியஸ் சப்ஜெக்ட் இருக்கு வேண்ணா எடுத்துட்டு போனு சொன்னேன். யாருக்கு வேணும் உன் சீரியல் என்று சீரியசா சொல்றான். சீரியஸ்னு நான் சொன்னதை சீரியல்னு  புரிஞ்சுகிட்டான் போலிருக்கு பய புள்ள.  

"டேய் காமெடி சப்ஜெக்ட் எழுத நான் ரொம்ப கஷ்டப்பட்டாகணும்னு சொன்னேன் நல்ல பேரு வேணும்னால் கஷ்டப்பட்டு தான் ஆகணும். உப்பு தின்னவன் தண்ணி குடிச்சி தானே ஆகணும்னு" தத்துவம் பேசறான். நான் சும்மா இல்லாம நம்ம சந்தானம் மாதிரி கவுன்ட்டர் கொடுத்துட்டேன். "அப்ப சர்க்கரை சாப்பிட்டவன் சர்பத் குடிக்கலாமானு"  இதெல்லாம் நல்லா பேசு. எழுத  வரலைன்னு பொய் மட்டும் சொல்லு" அப்படிங்கிறான்.

‘‘என்னங்க... ஏசிப் போடுங்க, ஏசிப் போடுங்கன்னு ஒரு வாரமா கரடியாக் கத்திட்டிருக்கேன். கொஞ்சமாச்சும் கவனிக்கிறீங்களா?’’ என்றாள். ‘‘அறிவு கெட்டவளே... மனுஷியாக் கத்த வேண்டியது தானேடி முட்டாளே... லூசு...’’ என்று ஆரம்பித்து நான் திட்டத் திட்ட, அவள் முகம் சிறுத்தது.  ‘‘இப்ப எதுக்காக இப்படிக் கன்னாபின்னான்னு திட்டறீங்களாம்?’’ என்றாள் 
மெதுவாக. ‘‘நீதானே ஏசிப்போடுன்னு சொன்ன... அதான் நல்லா ஏசிப் போட்டேன்’’ என்றேன். சப்தமெழத் தலையில் அடித்துக் கொண்டாள். 

இப்படி வார்த்தைல வாலி பால் ஆடற மின்னல் வரிகள் கணேஷ் சார் மாதிரி எழுத முடியுமா ?

பார்த்தசாரதி கோவில் தரிசன க்யூவில் பக்தர்கள் மல்டிப்ளக்ஸில் படம்பார்க்க வந்தவர்களைப்போல மரியாதையாக நின்றிருக்க, புளியோதரை ஸ்டால் மட்டும் ஆதார் அட்டை சிறப்புமுகாம்போல அல்லோலகல்லோலப் பட்டுக் கொண்டிருந்தது. புரட்டாசி சனிக்கிழமையன்று, பெருமாள் கோவிலில் ஆஜர்போட்டு, புளியோதரையை வயிற்றில்போட்டால், வழியில் எங்கும் நிற்காத வாகனத்திலேறி வைகுண்டம் போய்விடலாம் என்று எப்போதோ படித்த ஞாபகம். 

இப்படி வரிகளில் நிஜத்தை நகைச்சுவைல முக்கி எடுத்து  எழுதற சேட்டைக்காரன் சார் மாதிரி தான் எழுத முடியுமா ?


நீ எழுதலை என்றால் நீ எழுத்தாளன் இல்லை னு மீம்ஸ் போட்டு கலாய்ப்பேன்னு சொல்றான். (என்னமோ நான் எழுத ஆரம்பிச்சப்ப ப்ளெக்ஸ் வச்சி வாழ்த்து தெரிவிச்ச மாதிரி )  சரி என் எழுத்தாலே அவன் அவஸ்தை படனும்னு விதி இருக்கு. யாராலே மாற்ற முடியும்னு  எழுத உட்கார்ந்தேன் யோசிச்சதிலே டீ கடைக்காரர் லாபம் பார்த்தது தான் மிச்சம் (டீயா குடிச்சேன் எழுத மூடு வரணும்ல ) சரின்னு ஒரு ஐடியா பண்ணேன் இணையத்துல நகைச்சுவையா எழுதறவங்களை போய் (அவங்க தளத்துல தாங்க) பார்ப்போம் னு முடிவு பண்ணி உட்கார்ந்தேன் 

அடுத்து நண்பர் கோகுலத்தில் சூரியன் வெங்கட் தளத்துக்கு போனேன்  அவர் ஒரு வார்த்தையில் டரியல் ஆகி போனதை  படிச்சேன் இதெல்லாம் டூ மச்.  

கல்லாதது உலகளவு னு ஒரு தளம் போனேன் நண்பர்
கலியபெருமாள் கொஞ்சம் தமிழும் கொஞ்சம் சிரிப்பும் னு ஒரு பதிவு எழுதியிருக்கார் கேள்வியிலே போதை கலந்து

அடுத்து நான் போனது மனதில் உறுதி வேண்டும் தளம்  நண்பர் மணிமாறன்
எழுதிய இந்தியண்டா படிச்சப்ப எழுந்து அவருக்கு ஒரு வணக்கம் வைக்கணும் னு 
தோணுச்சு

அடுத்து கும்மாச்சி யோட தளம். இங்கே சிரிக்க சிந்திக்க 
பதிவை படிச்சேன்.

அடுத்து துளசி கோபால் அவர்களின் துளசி தளம்.  இங்க கொலு பொம்மைக்கு படி வாங்கின கதையை ஜாலியா சொல்லிருக்கார் 

இதெல்லாம் படிச்சதுக்கப்புறம் கொஞ்சம் தெம்பாகி எழுதறதுக்கு பேனா எடுத்துட்டேன். என்னங்க கிளம்பறீங்க. பாவம் நீங்களே கன்பியுஸ் ஆகிட்டீங்க போலிருக்கு. சரி பரவாயில்ல நான் எழுதின ஜோக் ஒன்னு சொல்றேன் கேட்டுட்டு கிளம்புங்க 

"ஏண்டா உன் காதலியை ட்ராப் பண்ணிட்டு வரேன் னு சைக்கிளை எடுத்துட்டு
போனியே ட்ராப் பண்ணிட்டியா"

"அதை ஏண்டா கேட்கிறே சொந்தமா ஒரு பைக் கூட இல்லே உனக்கெல்லாம் எதற்கு

காதலின்னு என் காதலையே ட்ராப் பண்ணிடாடா"

சிரிப்பு வரலைனாலும் தலைப்புல சொன்னதுக்காகவாவது சிரிச்சிடுங்க.

ஆர்.வி.சரவணன் 

வலைச்சரத்தில் ஒரு வாரம் ஆசிரியராக இருந்த போது  எழுதியது இந்த பதிவு.
நன்றி சீனா அய்யா, தமிழ்வாசி பிரகாஷ் 


சனி, டிசம்பர் 10, 2016

யதார்த்தம் - குமுதம் ஒரு பக்கக் கதை






யதார்த்தம்
(ஒரு பக்கக் கதை)

"படப்பிடிப்பில் விபத்து. பிரபல ஹீரோ சதீஷ் காயம்" என்ற தலைப்பு செய்தியை  கலா படிக்கவும், கட்டிலில் படுத்திருந்த அவள் கணவன் அசோக் செய்தியை அறிந்து கொள்ளும் ஆவலுடன்  அவள் முகத்தைதிரும்பி  பார்த்தான். மேலே படி  என்பது போல்.


"தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோவான இளம் புயல் சதீஷ் நடித்து கொண்டிருந்த புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையின் பிரபல ஸ்டுடியோ ஒன்றில் நடந்து கொண்டிருந்தது. காட்சிப் படி ஹீரோ மாடியிலிருந்து கீழே இருக்கும் ஸ்டன்ட் நடிகர் மீது குதிக்க வேண்டும். அப்படி குதித்ததில் அவரது வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரால் எழுந்திருக்க முடியாமல் போகவே பட யூனிட் அவரை அவசரமாக அருகிலுள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்த்தார்கள்டாக்டரகள் குழு  அவரை குணப்படுத்தும் வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறது


அவர் விரைவில் குணமாக வேண்டி முன்னணி நட்சத்திரங்களும் அரசியல் பிரமுகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் இருக்கிறார்கள்.அவரது ரசிகர்களும் தங்கள் அபிமான நடிகர்  உடல் நலம் பெற வேண்டி கோவில்களில் பிரார்த்தனைகளும் அன்னதானமும் செய்து வருகிறார்கள். சதீஷ் விழுந்த இடம் கீழே உள்ள படத்தில் அம்பு குறியிட்டு காட்டப்பட்டுள்ளது."


செய்தியை படித்து முடித்த கலா பேப்பரை அருகிலிருந்த டீப்பாயின் மேல் சலிப்புடன் போட்ட படி,  "உங்களை பற்றி ஒரு வார்த்தை கூட எழுதலை பாருங்க  " என்றாள் கலங்கிய கண்களுடன்.

ஹீரோ சதீஷ் தன் மீது விழுந்ததால், இடுப்பு எலும்பு முறிந்து போய்  ரத்த காயங்களுடன் மனைவியின் கேள்விக்கு பதில் சொல்ல தெரியாமல் அரசாங்க மருத்துவமனைகட்டிலில் படுத்திருந்தான் ஸ்டண்ட் கலைஞன் அசோக்.


ஆர்.வி.சரவணன் 

குமுதம் (03-08-2016) வார  இதழில் வெளியான எனது ஒரு பக்க சிறுகதை யதார்த்தம். 
குமுதம் ஆசிரியர் குழுவிற்கு என் நன்றி.



வெள்ளி, டிசம்பர் 02, 2016

வா, காதல் செய்வோம்-4





வா, காதல் செய்வோம்-4

னோவிடம் சொன்னது போலவே மறுநாள் பத்மினி பாட்டி வீட்டிற்கு வந்து விட்டார். அவர் வரப் போகிறார் என்றவுடனே அந்த பங்களா அவசர அவசரமாக தன்னை நேர்த்தியாக வைத்து கொள்ள ரொம்பவே பாடுபட்டது. ஒரு வி.ஐ.பி வருகையை எதிர்பார்த்திருப்பது போன்ற பரபரப்பு அங்கிருந்தது. வாசலில் நின்ற செக்யூரிட்டி நொடிக்கொரு முறை தெரு முனையை பார்த்தவாறிருத்தான். வேலைக்காரர்கள் அனைவரும் இது வரை மனோ அவ்வளவாக தங்களை கண்டு கொள்ளாததால் தங்கள் இஷ்டப்பட்ட படி பணியாற்றி கொண்டிருந்தவர்களுக்கு  பாட்டி வருவது தொந்தரவாகவே இருந்தது. இருப்பினும் ஓரிருவர் விசுவாசமாகவே அவரை எதிர் பார்த்திருந்தார்கள். அவர்களுக்கு பாட்டி வருவது ஏகப்பட்ட மகிழ்ச்சியை அளித்திருந்தது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் தான் கார் காம்பவுண்டிற்குள் நுழைந்து போர்டிகோவில் வந்து நின்றது. செக்யூரிட்டி ஓடி வந்து கதவை திறக்க பாட்டி காரை விட்டு இறங்கினார்.

"ஏன்பா இவ்வளவு வேகமாக ஓடி வரே. விழுந்து கிழுந்து வச்சீன்னா உடல் உபாதையோட பணமுமில்ல செலவாகும். மரியாதையெல்லாம் மனசோடு இருக்கணும். என் கிட்டே அதை காண்பிச்சிட்டே இருக்க கூடாது" என்ற படி  மாட்டியிருந்த கண்ணாடியை எடுத்து துடைத்து மீண்டும் மாட்டி கொண்டே சொன்னார்.
செக்யூரிட்டி தலையாட்ட, வேலையாட்கள் வந்து வாங்கம்மா என்று வணங்கி டிக்கியிலிருக்கும் பொருட்களை எடுக்க முற்பட்டனர்.

சுற்றிலும் ஒரு முறை பார்த்தவர் 

"இந்த செடிகளுக்கெல்லாம் தண்ணீர் ஊத்தறதே கிடையாதா?" என்றார் 

"இல்லம்மா காலையிலே தண்ணீர் விட்டேனே" தோட்டக்காரன் சொன்னான் 

" தண்ணீர் விட்டு ரொம்ப நாளான  மாதிரி இருக்கேடா "

அவரது கேள்விக்கு பதில் சொல்லாது மௌனமாய் நின்றான் அவன்.

"மனோவை விட்டு வெளுக்கிறதுல  நீங்க எல்லாரும்  கதற போறீங்க பாருங்க "
என்ற படி வீட்டுக்குள் நுழைந்தார்.

 "எங்கே மனோ ?"
"தூங்கறார்"

தன் கையில் கட்டியிருந்த கடிகாரத்தை பார்த்தார்.
"மணி ஒன்பதாக போகுது. இன்னுமா தூங்கறான்" விருட்டென்று மாடிப்படி  ஏறி அவர் வேகமாக செல்வதை பார்த்த புது வேலையாள் தன் சகாவிடம் காது கடித்தான்.
"ஏண்டா இதுக்கு வயசு அறுபதா இருபதா  "

உஸ் என்று சகா எச்சரித்த வினாடியும், பத்மினி  பாட்டி மாடியிலிருந்து திரும்பி இவர்களை பார்த்த நொடியும் ஒன்றாகவே இருந்தது. 

"அங்க என்ன வெட்டி பேச்சு " என்றாள் பாட்டி கடுகடுப்பாக.
இதை எதிர்பாராத அந்த வேலையாட்கள் வெலவெலத்து நகர்ந்தார்கள்.

இப்படி எதிர்பாராத அதிர்ச்சி தந்த பாட்டிக்கும் ஒரு அதிர்ச்சி பெட்ரூமில் காத்திருந்தது.
அங்கே கட்டிலில் மனோ படுத்திருந்தான் என்பதை விட  அஷ்ட கோணலில் பரவியிருந்தான் என்று சொல்லலாம். கட்டிலுக்கு பக்கத்தில்  டீப்பாயில் இருந்த மது பாட்டில்கள் டம்ளர் மற்றும் பிளேட்டுகள் அவரது  கோபத்தை  அதிகரித்தன. 
சேரை இழுத்து போட்டு கட்டிலருகே அமர்ந்த பாட்டி அவன் தோளில் அடித்தார். காற்றில் கலந்திருந்த மது வாசம் வேறு அவரை டென்ஷனாக்கியது.

"டேய் மனோ" என்றார் அதிகாரமாக

"பாட்டி கனவுலயுமா இப்படி வந்து அதட்டுவே" என்ற படி திரும்பி படுத்து கொண்டான்.
"டேய் நிஜமா தான்டா அதட்டறேன்" இந்த வார்த்தை கேட்ட மாத்திரத்தில் மனோ விருட்டென்று எழுந்து அமர்ந்தான்.
கண்களை கசக்கியவாறே   "பாட்டி" என்றான். அதிர்ச்சியாய்
பாட்டியின் கண்ணாடியையும் மீறி அவர் கண்களில் இருந்த அனல் அவனை தகிக்க வைத்தது. 

"எப்ப வந்தீங்க"

"வர வேண்டிய நேரத்துல கரெக்டா வந்திருக்கேன்"

"சொல்லிருந்தா நான் ஏர்போர்ட் வந்திருப்பேனே"

"சொல்லாமல் வந்ததால தானே உன்னை பத்தி தெரிஞ்சிக்க முடியுது"

"என்னை பத்தி என்ன தெரிஞ்சுகிட்டீங்க?"

"இரவினல் ஆட்டம் பகலினில் தூக்கம். இது தான் உனது உலகம்"  பாடிய படி எழுந்தார்.
மனோ நாக்கை கடித்து கொண்ட படி டீப்பாயை பார்த்தான். இந்த வேலைக்காரனுங்களுக்கு அறிவே கிடையாது என்று முணுமுணுத்தான்.


"தண்ணி எல்லாம் அடிக்க ஆரம்பிச்சிட்டே போலிருக்கு" என்றார் பிளவர் வாஷில் இருந்த பழைய பூக்களை எடுத்து கொண்டே  

"பாட்டி இதெல்லாம் டீ குடிக்கிற மாதிரி சாதாரணம் ஆகிடுச்சு. இதுக்கெல்லாம் கொஸ்டீன் பண்ணாதீங்க " என்றான் சிடுசிடுப்பாய் 
இதற்கு பாட்டி பதில் சொல்லவில்லை. அவனை திரும்பி ஒரு பார்வை பார்த்தவர் 
உடனே அங்கிருந்து வெளியேறினார்.

 "நமக்கு பிடிச்ச வாழ்க்கையை வாழ விடாம இது ஒரு டார்ச்சர்" என்று கடுகடுத்து கொண்டே பாத்ரூமிற்குள் துழைந்தான்.
அலுவலகத்துக்கு ரெடியாகி கீழே வந்து டைனிங் டேபிளில் அமர்ந்த போது எதிரே பாட்டி புத்தகம் படித்து கொண்டிருந்தார்.
அவன் வந்தமர்ந்ததை கடைக்கண்ணால் கவனித்தவர் பணியாளை அழைத்தார்.
வந்து நின்ற பெண்ணிடம் 

"இனி நம்ம வீட்ல காபி டீக்கு பதிலா விஸ்கி பிராந்தி  தான். பிடிச்சவங்க குடிங்க. பிடிக்காதவங்க குடிக்கிறவங்களை வேடிக்கை பாருங்க."
என்றதும் அந்த பெண் விழித்தாள்.

"பாட்டி குத்தி காட்டறீங்களா?"
"குத்தி காட்டினா உனக்கு உறைக்குமா?"
அவன் வேகமாய் எழுந்து "நான் ஆபீஸ் போறேன்" என்ற படி வெளியேறினான்.


"ஆபீஸ் டைம் 9 மணி. ஆனா நீ பத்து மணிக்கு வேலைக்கு போறே.முதலாளினா என்ன கொம்பா முளைச்சிருக்கு. நீயும் அங்க வேலையாள் மாதிரி தான். அவங்க சம்பளம் வாங்கறாங்க. நீ சொத்தை அனுபவிக்கிறே தட்ஸ்ஆல்" அவன் கோபத்துக்கு அசராமல் சொன்னார்.

அவன் கோபமாக காரின் அருகில் செல்ல டிரைவர் கதவை திறந்தான்.உள்ளே அமர போனவனை போர்டிகோ வரை வந்த பாட்டி கை தட்டி அழைத்தார். திரும்பி பார்த்தான்.

"நைட் ஆபீஸ் முடிஞ்சவுடன் நேரா வீட்டுக்கு வரணும். நாம ரெண்டு பேரும் ஒரு கதாகாலட்சேபத்துக்கு போக வேண்டியிருக்கு" என்றார்.
கதவை அவன் அடித்து சாத்தியதில் அவன் உச்ச கட்ட கோபம் தெரிந்தது. பாட்டி 
"என் கோபம. அப்படியே இருக்கு" என்று புன்னகைத்தவர்  திரும்பி பங்களாவை பார்த்தார்.
இவ்வளவு சொத்தையும்  பத்திரமா பாதுகாத்து அவனுக்கு வர போற பொண்டாட்டி கிட்ட ஒப்படைக்கணும். இங்க உட்கார்ந்து ராஜ்ஜியம் பண்ண போறவ எங்க இருக்காளோ ? என்ன பண்றாளோ ? எப்ப வருவாளோ ? என்று பெறுமூச்செறிந்தார். 


------

ந்தினி அதே நேரத்தில்  தான் வேலை பார்க்கும் அலுவலகத்தில் கம்பெனி  எம்டி க்கு முன்பாக நின்று கொண்டிருந்தாள். யாரிடமோ போனில் பேசி விட்டு நிமிரந்தவர் அவளிடம் 
"என்னம்மா என்னென்னவோ கேள்விப்படறேனே அதெல்லாம்  நிஜமா? " என்றார்.

என்ன பதில் சொல்வது இதை இவர் எப்படி எடுத்து கொள்வார்னு தெரியாதே என்று அவள் யோசிக்க ஆரம்பிக்க, அவரே தொடர்ந்தார்.
" ஏதோ பிரச்னையாம் . கோர்ட்ல சாட்சி சொல்ல போறியாம். போலீஸ் வந்து உன்னை அப்பப்ப விசாரிச்சிட்டு போகுதாம் "


"எங்க தெரு பொண்ணு சார் அது . கஷ்டப்படற பேமிலி . ஒருத்தன் லவ் பண்ண சொல்லி டார்ச்சர் பண்ணி சம்மதிக்கலனு தெரிஞ்சவுடன் கத்தியால குத்திட்டான். அதை பார்த்த அந்த பெண்ணை காப்பாற்றிய நேரடி சாட்சி நான். அதான்.... என்று அவள் சொல்லி கொண்டிருக்க அவர் கையமர்த்தினார் .


"இது கம்பெனிம்மா. சோசியல் சர்வீஸ் பண்ற இடம் இல்லே :
"சார் சோசியல் சர்வீஸ்ங்கிறது சில பேருக்கு மட்டும்னு கிடையாது.
எல்லோருக்குமானது.ஒரு மனித நேயம் தானே சார்.

"நாளைக்கு நீ வேலை பார்க்கிறவங்களுக்கு அது கொடுக்கல இது கொடுக்கலன்னு கொடி பிடிக்க ஆரம்பிச்சா என்னாறது. இன்னையோட அதெல்லாம் நிறுத்திடு. உங்க அப்பா இந்த கம்பெனில வேலை பார்த்தவர். அவரோட பொண்ணு நீ. ஒரு தகப்பனா  தான் உன் கிட்டே 
பேசிட்டிருக்கேன் "

நந்தினி அவரையே  பார்த்தாள் 

என்னாலே முடிஞ்ச அட்வைஸ் என்னன்னா, அடுத்தவங்க பிரச்னைக்கு போய் நிக்காமே அதை கண்டும் காணாத மாதிரி இருந்துடணும் "
"என்னாலே அது முடியாது சார்" கெஞ்சலாகவே பதில் சொன்னாள் 

"அப்ப இந்த கம்பெனில நீ வேலை பார்க்கவும் முடியாதும்மா"


"ஓகே சார்" என்ற அவளது வார்த்தைக்கு அதிர்ச்சியாய் நிமிர்ந்தார்.

"நல்ல சம்பளத்திலே நல்ல போஸ்டிங்ல இருக்கே. இதெல்லாத்தையும் ஒரு பொண்ணுக்காக இழக்க போறியா?"
"அந்த பொண்ணுக்கு நடந்தது எனக்கு நடந்திருந்தா சம்பளமா நல்ல வேலையா நல்ல வாழ்க்கையா இது எதுவுமே அனுபவிக்க முடியாத படி போயிருக்கும் சார் "
பதிலுக்கு பதில் கொடுத்து கொண்டிருந்தாலும் மென்மையாகவே பேசினாள்.

"சோ. உன்னோட சோசியல் சர்வீஸ்க்காக நல்ல கம்பெனியோட வேலையை இழந்து நிக்க போறே"

"நம்ம கம்பெனி கூட ஒரு நல்ல ஊழியரை இழக்க போகுதே சார்"
"உன் பிடிவாதம் உனக்கு தான் அவஸ்தையாக போகுது"

"அந்த பெண்ணோட அவஸ்தையை விடவா சார்"

"உன் கிட்டே இருக்கிற இந்த உறுதி பாதிக்கப்பட்டவங்க கிட்டேயும் இருக்கானு கொஞ்சம் செக் பண்ணிக்கம்மா " என்றார் அந்த எம்.டி.

------

"உன்னோட உறுதி எங்க கிட்டே இல்லம்மா. எத்தனையோ பேரு வராங்க. கேள்வி மேல கேள்வியா கேட்டு விசாரணை பண்ணிட்டே இருக்காங்க.எதுக்காக பெரிய இடத்துல மோதறீங்கனு கேட்கறாங்க.  யாருமே கவலைப்படாதீங்க நாங்க இருக்கோம்னு சொல்ல மாட்டேங்குறாங்க. அதோட விட்டா பரவாயில்ல.
ஒரு பையன் கத்தி எடுத்து குத்தறான்னா அந்த அளவுக்கு உங்க பொண்ணு என்ன பண்ணுச்சு? பழகிட்டு ஏமாத்திடுச்சானே கேட்கறாங்க " 

மருத்துவமனையில் அந்த பெண் கல்பனா தூங்கி கொண்டிருக்க அவளது தாய்  நந்தினியின் தோளில் சாய்ந்து அழுதாள்.

"பொண்ணு ஒரு முறை வயித்துல குத்து வாங்கிட்டு ரணமாகி கிடக்கா. வரவங்க எங்களை வார்த்தைகளால் குத்தி தினமும் ரணமாக்கிட்டு போறாங்கம்மா " கல்பனாவின் அப்பா துண்டை வாயில் பொத்திய படி அழுதார் 

"அழறதை சத்தம் போடாம அழுங்க மத்தவங்களுக்கு டிஸ்டர்பா இருக்குல்ல"  நர்ஸ் குரல் எங்கிருந்தோ ஒலித்தது. கோபமாய் திரும்பிய நந்தினியை அந்த அம்மா  தடுத்தாள் கண்களால் வேண்டாம் என்பதாக ஜாடை காட்டினார்.

கல்பனா அசைய ஆரம்பிக்கவே நந்தினி அந்த தாயின் கைகளிலிருந்து தன்னை விடுவித்து கொண்டு அவள் அருகில் சென்றாள்.

"எப்படிடா இருக்கே"  என்று அவள் கைகளை பிடித்து கொண்டாள்.

"ரொம்ப வலிக்குதுக்கா." அந்த பெண்ணின் வார்த்தைகளில் கூட வலி இருந்தது.
கூடவே "அழகா இருக்கிறது கூட இங்க தப்பா போயிடிச்சுக்கா "என்றாள்.

தொடரும்.

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நண்பர் தேவராஜ்