ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

பண்டிகை கால பயணம் ஒன்று




பண்டிகை கால பயணம் ஒன்று

இந்த தீபாவளி பொங்கல் னு  பண்டிகை நாள் வந்துட்டாலோ இல்லன்னா சேர்ந்தார் போல் ரெண்டு மூணு நாள் லீவு  வந்துட்டாலோ டிக்கெட் புக் பண்ண முடியாம ஊருக்கு போறவங்க லோ லோ னு தான் அலைய வேண்டியிருக்கும்.  (எதுக்கு ரெண்டு லோ ? ஒண்ணு ஊருக்கு போறதுக்கு இன்னொண்ணு திரும்பி வரதுக்கு). அப்படி திண்டாட்டமாகி எப்படிடா ஊர் போய் சேர்வோம்னு முதுகுல மாட்டின லக்கேஜோட டென்சனையும் இலவச இணைப்பா 
சுமந்துகிட்டு கிளம்பின ஒரு பயணியோட அனுபவம் தான் இது. அது யாரதுனு நீங்க யோசிக்க ஆரம்பிக்கிறதுக்குள்ளே அந்த பயணியே  நான் தான் னு
 (அந்த குழந்தையே நீங்க தான் மொமென்ட்ல ) சொல்லிகிட்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன்.

சென்ற மாதம் பொங்கலுக்கு கும்பகோணம் போக பேருந்து ரயில் இது எதுலயும் இடமில்லைனு தெரிஞ்சவுடனே  (வடிவேலு போல்) ஆரம்பத்திலேயே ஆரம்பிச்சுட்டாய்ங்களா என்று முனகிய படி தான் கிளம்பினேன். பஸ் ரயில் (பிளைட் இன்னும் விடலே) இது ரெண்டுல எதுல போகலாம்னு மனசு டாஸ் போட்டு பார்த்துச்சு . ரயிலில் அன் ரிசர்வ் ல நின்னுகிட்டு தான் போகணும். அதுக்கு பதிலா பஸ் போனா உட்கார சீட்டாவது கிடைக்கும் அதனாலே பஸ்ல போயிடலாமே னு  முடிவெடுத்தேன். 

வெள்ளி அன்று பொங்கல். வியாழன் மாலை அலுவலகத்தில் எக்கச்சக்க ஆணிகள் . ஆணிய புடுங்கிட்டு  கிளம்பறப்ப மணி 8.00. பாரிஸில் இருந்து கோயம்பேடு போன பேருந்தில் நான் தொத்தி கொண்டு ஏறி சீட் தேடிய போது மக்கள் நாங்க கோயம்பேடு வரை ரிசர்வ் செய்திருக்கோமாக்கும் என்பது போல் உட்கார்ந்திருந்தாங்க. நின்ற படியே கோயம்பேடு வந்ததில் வலி தெரியல. ஆனால்  ஊருக்கு போற பஸ்ல உட்கார வழி (இடம்) கிடைச்சா சரினு  நினைச்சிட்டு கோயம்பேட்டில் சென்று இறங்கிய போது மணி 9.00.


எங்கு திரும்பினாலும் மக்கள் மூட்டை மூட்டையாக லக்கேஜுடன் சென்று கொண்டிருந்தார்கள். பொங்கல் பொங்கி முடிக்கிறதுக்குள்ளே வீடு போய் சேர்ந்தாகணும்னு அவங்க கிட்டே இருந்த  பரபரப்பு ஜுரம் என்னையும் தொத்திகிச்சு.  உள்ளே நுழையரப்ப  ரிசர்வேசன் கவுன்ட்டர் காலியா இருந்துச்சு. வேகமாய் போய் கேட்ட போது ,  "கும்பகோணத்துக்கு இப்ப ரிசர்வேசன் பஸ் எதுவும் இல்ல. எல்லாம் புல்.  நாளைக்கு  காலையில தான் இருக்கு" னு சொன்னவர் என் அதிர்ச்சிய பார்த்துட்டு, "அன் ரிசர்வ்டு பஸ்கள்  நிறைய விட்டிருக்காங்க. 8 ம் நம்பர் பிளாட்பாரம் போங்க" என்றார்

சினிமால  காமிக்கிற மாதிரி இங்க கட் பண்ணா அந்த 8 ம் நம்பர் பிளாட்பார்ம்ல இருக்கணும்னு தான் ஆசைப்பட்டேன். நிஜத்தில் அது முடியாதே. அதை தேடி புறப்பட்டவன்  வழியெங்கும் மக்கள் கடலில் நீந்தி போக வேண்டியிருந்துச்சு. 

 8 ம் நம்பர் பிளாட்பாரம் எங்க இருக்கு என்று யாரிடமும் கேட்பதற்கு அவசியமே இல்லாம ஆங்காங்கே  போர்டுகள் வைத்திருந்தார்கள்.
பரவாயில்லியேனு நினைச்சிட்டே அங்க போய் சேர்ந்தேன்.

மேஜை போட்டு அமர்ந்திருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம்  கேட்டப்ப 
"பஸ் நிறைய இருக்கு சார். டிராபிக் ல ப்ளாக் ஆகி நிக்குது வரும்"  என்றார்கள்
அடுத்து நான் கேட்ட கேள்வி அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கும், "பஸ் இடது பக்கமா வருமா, இல்ல வலது பக்கமா வருமா" அப்படி நான் கேட்டவுடன்  எப்படி வந்தா என்னய்யா. பஸ் வந்தா போதாதா அப்படிங்கிற முகபாவத்துடன் என்னை பார்த்து  "வலது பக்கம்" என்றார்கள்.  நடக்க ஆரம்பிச்சேன். 

கூட்டம் அதிகமா இருந்தா,  பஸ்  பேருந்து நிலையத்தில் உள்ளே 
நுழையுறப்பவே  பயணிகள் அங்க நின்னு தடாலடியாக  ஏறி சீட் போட்டு விடுவார்கள்.  நானும் அப்படி  ஏறி விடலாம்னு நடக்க ஆரம்பிச்சேன். 

இருபது பஸ் வரைக்கும்  தாண்டி போயிருப்பேன். கும்பகோணம் செல்லும் பஸ் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் தென்படல. ஆனால் பக்கத்து பிளாட்பாரத்தில் மட்டும் திருச்சி செல்லும் பஸ்களாக நிறைய வந்துட்டிருந்துச்சு. எதிர் இலையில் பரிமாறப்படும் பாயாசம் நம்ம இலைக்கு எப்ப வரும்னு காத்திருக்கிற மாதிரி பார்க்க ஆரம்பிச்சேன். அப்ப தான்  ஒரு பஸ்  நான் போயிட்டிருந்த பிளாட்பாரம்ல வந்துட்டிருந்துச்சு.

சர்க்கரையை மொய்த்து கொண்ட எறும்புகள் போல் சில பேர் அந்த பஸ்ஸை தொடர்ந்து வந்துட்டிருந்தாங்க. கண்டக்டர்  "இது ரிசர்வேசன் பஸ்சுங்க"என்றார்.  "எல்லா பஸ்சும் ரிசர்வேசன்னே வந்தா நாங்க எப்படி ஊருக்கு போறது" என்று கேட்டு கொண்டே மெதுவாக ஊர்ந்த படி வந்து கொண்டிருந்த பஸ்சை  ஓட்டமும் நடையுமாக தொடர்ந்துட்டிருந்தாங்க. 
நானும் அந்த ஜோதியில் அவர்களுடன் ஐக்கியமாகி கொண்டேன். நாங்கள் ஒரு கட்டத்துல சலிப்பாகி  சார் எந்த ஊர் போகுதுன்னு சொன்னீங்கன்னா  நாங்க வேற பஸ்சை பார்க்க போயிடுவோமில்ல னு கேட்டப்ப தான் அவர் "இது கரூர் போகுது தம்பி" என்றார்.  அடுத்த செகண்ட் அத்தனை பேரும் அடுத்த வண்டி தேடி ஓட ஆரம்பிச்சோம். 
கொஞ்சம் தள்ளி கும்பகோணம் பெயர் பலகையோட  ஒரு பஸ் நிக்கிறது என் கண்ணுக்கு தெரிய வந்துச்சு. ஒரு நிமிஷம் ஓட்ட பந்தய வீரனாய் மாறி, மூச்சிரைக்க பஸ்சின் பக்கம் போனப்ப தான் அதுவும் ரிசர்வேசன் பஸ்னு தெரிஞ்சுச்சு.


போக்குவரத்து அதிகாரிகள் நின்னுட்டிருந்த பழைய இடத்துக்கு நான் வந்து நின்னப்ப தான் வாழ்க்கை ஒரு வட்டம்டா என்பது புரிஞ்சுது. அப்ப தான் அந்த இடத்துல தஞ்சாவூர் போர்டுடன் பஸ்  ஒண்ணு நின்னுகிட்டு இருக்கிறதை பார்த்தேன்.  ஆகா இது கும்பகோணம் வழி தானேனு பஸ்சுக்குள் தாவி ஏறினேன்.  கடலை விற்பவர் உட்கார்ந்திருக்கிற ஒவ்வௌருத்தரையும் 
கேட் டுட்டே எனக்கு முன்னாடி  போய்கிட்டு இருந்தார். நான் அவர் பின்னாடியே காலியாக இருக்குற சீட் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவங்க கிட்டே சீட் கேட்டுகிட்டே நானும் போயிட்டிருந்தேன்.  பஸ்ல கடைசி சீட்டுக்கு முன்னதாக ஒரு சீட் காலியாக இருந்துச்சு. அப்பாடா என்று அருகில் சென்று என் பேகை வச்சிட்டு பாக்குறேன்.  அந்த சீட் பஸ்ஸோட பின் சக்கரத்திற்கு மேலே உள்ள சீட். ஒரு மேடை மேல உட்கார்ந்திருக்கிற மாதிரியே 
இருக்கும். அதில ஒரு பிரச்னை என்னன்னா கால்களை கீழே நீட்டி உட்கார முடியாது.  ஏழு மணி நேரம் உட்கார்றது கஷ்டம் தான்.  இருந்தும் பசிக்கு புளி சாதம் கிடைக்கும் போது அத விட்டுட்டு பிரியாணிக்கு ஆசைபட கூடாது னு பட்டுன்னு உட்கார்ந்துட்டேன். இன்னும் சில பேர் ஏறி சீட் தேட ஆரம்பிச்சாங்க. இல்லேன்னவுடன் அவங்க அலட்டிக்கல. தரையில் உட்கார்ந்துகிட்டாங்க.

 கண்டக்டர் வண்டியில் ஏறி "பஸ்  கும்பகோணம் அதை விட்டால் தஞ்சாவூர் இங்க தான் நிக்கும். வேற எங்கேயும் நிக்காது. எல்லாரும் 225 ரூபாய் எடுத்து வச்சிக்குங்க"  என்றார் கறாராக. சிக்னல்ல கூட நிக்காதா சார், பயண வழி உணவகத்தில் கூட நிற்காதா சார் னு என் மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு. (அது அவருக்கு கேட்காதுன்னு தெரிஞ்சும்) பஸ் கிளம்ப ஆரம்பிச்சப்ப தான் .  பஸ்ஸை பிடிக்கிற டென்சனில்  சாப்பிடாம ஏறினது மட்டுமில்லாம ஒரு  தண்ணீர் பாட்டில் கூட வாங்கிக்காம ஏறினது ஞாபகம் வந்துச்சு.  சரி அட்ஜஸ்ட் பண்ணிப்போம்னு நினைக்கிறப்ப வண்டி டிராபிக்கில் நகர ஆரம்பிச்சு வேகம் பிடிச்சது. அது வரை இருந்த புழுக்கத்தை காற்று உள்ள புகுந்து விரட்ட ஆரம்பிச்சுச்சு.

 டிக்கெட் போட்டு கொண்டே வந்த கண்டக்டரிடம் ஒரு பயணி அப்போது மல்லு கட்ட ஆரம்பித்தார். "என் பையனுக்கு அரை டிக்கெட் தான்" னு  இவர் சொல்ல, அவர் "அதெல்லாம் கிடையாது முழு டிக்கெட் தான். நான் தான் வண்டி எடுக்கும் போது சொன்னேன்ல. இப்ப வம்பு பண்ணா என்ன அர்த்தம்"னு குரல் எழுப்பினார். "அதெப்படி சின்ன பசங்களுக்கும் அதே டிக்கெட் வாங்கறீங்க" " என்னை எதுக்கு கேக்கறீங்க. பஸ் நின்னப்ப அதிகாரிகளை பார்த்து கேட்க வேண்டியது தானே " னு சொல்லிட்டு முழு டிக்கெட் கொடுத்த படி நகர்ந்தார். எல்லாரும் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க 
அந்த பயணியும் அவர் குடும்பமும்  கடைசி இருக்கையில் தான் அமர்ந்திருந்தார்கள். 

பஸ் கூடுவாஞ்சேரி  தாண்டற வரைக்கும் செம டிராபிக். பஸ், கார், லாரினு ஒண்ணுக்கொண்ணு  முந்தி போறதுக்கு ட்ரை பண்ணிட்டு இருந்துச்சு. கார்களை பார்க்கிறப்ப, நம்ம கிட்டே கார் இருந்தா கார்லேயே போயிருக்கலாமே னு என்னை உரசி பார்த்த அந்த ஆசை 
தெருவோரம் ஸ்டாப்பிங்ல பஸ்சுக்கு வெயிட் பண்ணிட்டு  இருக்கிற மக்களை பார்த்தவுடன் தள்ளி போயிடுச்சு. 

அப்படியே தூங்கிப் போனவன்  நடுவில் கண் முழித்த போது வண்டி உளுந்தூர்பேட்டை டோல்கேட் வந்திருந்துச்சு.அதிகாலை 2.00 மணி. 
அடுத்த முறை கண் முளிச்சப்ப காலை 5 மணி. வண்டி அப்ப நெய்வேலி தான் தாண்டியிருந்தது. டிரைவரும் வேகமாக தான் ஓட்டிட்டிருந்தாரு.
 "இவ்வளவு நேரம் ஆகிடுச்சு. வண்டி ஏன் இப்ப தான் இங்க வந்திருக்கு" னு பக்கத்தில் இருந்தவர் கிட்டே கேட்ட போது , "வழி தெரியாம வேற இடம் போனதினால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்றார். "ஏம்பா பக்கத்துல இருக்கிறவங்க கொஞ்சம் வழி காட்ட கூடாதா" என்றேன். "அதெப்படி அவங்களும் தூங்கிட்டு இருந்திருப்பாங்களே" அப்படின்னு இன்னொருத்தர் கவுண்டர் கொடுத்தார்.

பஸ் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தப்ப மணி 7.00  எவ்வளவு வேகமாக பஸ்ல எறினமோ அதை விட இரு மடங்கு வேகத்தில எல்லாரும் இறங்கி சிதற ஆரம்பித்தோம். வீட்டுக்கு செல்ல தனியார் பேருந்தில் ஏறிய போது கூட்டம் திமிறி கொண்டிருந்தது. காலேஜ்ல படிக்கிற (இல்ல வேலையில் இருக்கிற) இளைஞர்கள் "வடசேரி போறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்"  னு கண்டக்டரிடம் கேட்டாங்க. அவர் 9.00 மணி ஆகிடும் னு சொன்னார் 

"டேய்  நாம பொங்கல் வைக்கிரதுக்கு போலடா.  பொங்கல் சாப்பிட தான் போய்கிட்டு இருக்கோம்." னு ஒரு இளைஞர் சொல்ல இன்னொரு இளைஞர்
 "வீட்ல அம்மா வேற போன் மேல போன் பண்றாங்க" என்று சொல்லி கொண்டிருந்தார்.

பேருந்து வேகமெடுத்து பஸ் ஸ்டாண்ட் காம்பௌண்டை தாண்டிய போது சென்னை பஸ்கள் நிக்கிற இடத்துலேருந்து "சென்னை சென்னை" னு குரல்  கொடுத்துட்டிருந்தார் கண்டக்டர். 

"இருங்கய்யா பொங்கல் கொண்டாடிட்டு வந்துடறோம்" அந்த இளைஞர்களுடன்  சேர்ந்து கொண்டு உற்சாகமாய் நானும் குரல் கொடுத்தேன்.


ஆர்.வி.சரவணன் 



படம் இணையத்திலிருந்து




சனி, பிப்ரவரி 13, 2016

மகாமகம் - 2016




மகாமகம் - 2016

நான் பிறந்து வளர்ந்த ஊரான கும்பகோணத்தின் (குடந்தை) மீது கொண்ட அன்பில் தான் எனது வலை தளத்திற்கு குடந்தையூர் என்றே பெயரிட்டேன் என்பது நண்பர்கள் நீங்கள் யாவரும் அறிந்ததே. கும்பகோணத்தில் உலக பிரசித்தி பெற்ற மகாமக திருவிழா, இந்த பிப்ரவரி 22 ஆம் நாள் திங்கள் கிழமை அன்று நடைபெறுகிறது. அந்த நாளை எதிர்நோக்கி வரும் பக்தர்களை வரவேற்க உற்சாகமாய் காத்திருக்கிறோம் ஊர் மக்களான நாங்கள்.

குடந்தையில் 12 வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த மகாமக திருவிழா பற்றிய ஒரு சிறப்பு பகிர்வு தான் இது. 1989 ஆம் வருடம் 
எனது கல்லூரியில் எனக்கு கொடுத்திருந்த ப்ராஜெக்ட் வொர்க் குடந்தை திருவிழாக்கள் பற்றிய ஆய்வு. அதற்காக நான் கோவிலகளுக்கு சென்றும் குடந்தை நூல்களிலிருந்தும் நான் சேகரித்த தகவலகளை கொண்டு தயாரித்த அந்த புத்தகத்திலிருந்து இந்த பகிர்வை இங்கே தந்திருக்கிறேன்.





முதலில் கும்பகோணம் தோன்றிய விதத்தை பற்றி பார்ப்போம்.

படைப்பு கடவுளான பிரம்மா, உலகமெல்லாம் அழியக் கூடிய பிரளய காலம் வருவதை உணர்ந்து அந்த வெள்ள பெருக்கில் தமது படைப்பு தொழிலுக்கு இன்றியமையாததான பீஜம் (மூல வித்துக்கள்) அழிந்து விட்டால் தமது படைப்பு தொழிலை எவ்வாறு செய்வது என்று கவலை கொண்டு சிவபெருமானிடம் சென்று வணங்கி தன் கவலையை தெரிவித்தார். சிவபெருமானும் அதை காப்பாற்றும் முறையை  
அவருக்கு உரைத்தார். 

பிரம்மா, சிவபெருமான் சொல்லிய படி மண்ணையும் அமுதத்தையும் கலந்து பிசைந்து ஒரு குடம் அமைத்து அதனுள் அமுதத்தை நிரப்பி அதன் நடுவில் பீஜத்தைச் சேர வைத்து அதன் நாற்புறத்திலும் ஆகமம், அங்கம், புராணம், இதிகாசம் முதலியவற்றை வைத்து அக்குடத்தின் வாயிலே தேங்காய், தேமாவிலைகளை வைத்து, பிரமதேவன் மேரு மலையில் வில்வ தளிர்களால் பூஜித்து வந்தார் . ஊழி பெருவெள்ளம் பெருகி வந்து உலகமே மூழ்கியது. அக் கும்பம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மிதந்து வந்து வாயு திசையிலே சென்று தங்கியது. வானவர்கள் பூமாரி பொழிந்தனர்.



பாணபுரீஸ்வரர் திருக்கோவில் 

சிவ பெருமான் கும்பத்தை காண வேட ரூபத்தில் வந்தார். தனது வில்லில் இருந்து அம்பெடுத்து எய்து கும்பத்தை உடைத்தார். சிதைந்த கும்பத்திலிருந்து அமுதம் பூமியில் பரவி இரண்டு இடங்களில் தேங்கியது. அந்த இடங்கள்.ஒன்று மகாமக குளம் மற்றொன்று பொற்றாமரை குளம். சிவன் அமுதம் ஊறிய மண்ணை குவித்து ஒரு அழகிய சிவலிங்கமாக்கி தானே பூஜித்து அதனுள்ளே புகுந்து சிவலிங்க திருமேனியாக காட்சியளித்தார். ஆதியில் கும்பத்திலே தோன்றியதால் ஆதி கும்பேசர் என்ற பெயர் வழங்கப்படலானார். பார்வதி சிவபெருமான் எழுந்தருளியுள்ள இடத்துக்கு வந்து சந்நிதியை அடைந்து தரிசித்தார். அவருக்கு இடப் பக்கத்தில் இருந்த படி, தொழுபவர்களுக்கு தொடர்ந்து அருள் புரிந்தார்.


கும்பேஸ்வரர் திருக்கோவில் 


ஸ்ரீ கும்பேசர் அருளிய சிருஷ்டி பீஜத்தை கொண்டு பிரம்மா அழகு பொருந்திய நகரத்தையும் அருமை வாய்ந்த கோவிலையும் விசுவ தர்மனின் துணை கொண்டு அமைத்தார். இந்த நகரமே கும்பகோணம். இந்த ஊர் பெயர் வர காரணம். குடம் என்றால் கும்பம். மூக்கு என்றால் கோணம். ஆகவே கும்பகோணம் என்ற பெயர் வழங்கப்படலாயிற்று.




மகாமக திருவிழா உருவான வரலாறு 

பூமருவுங் கங்கை முதல் புனிதமாம் பெருந் தீர்த்தம் மாகந்தான் அடுதற்கு வந்து வழிபடுங்கோயில் எனச் சேக்கிழார் பெருமான் திருஞானசம்பந்தர் புராணத்துள் சிறப்பிக்கின்ற அளவு புகழ் பெற்ற மகாமகத்தை பற்றி விளக்கமாக இங்கே பார்ப்போம்.

மாமாங்கம் பெயர் விளக்கம். மாமாகம் என்பதே மாமாங்கம் என்று ஆகி இருக்கிறது. அகம் என்றால் பாவம். மா என்றால் அணுகாது. எனவே மாமாகம் என்பதற்கு அகம்பாவம் அணுகாதது என்றே பொருள் ஆகும்.

சிவபெருமான் சிதைத்த கும்பத்திலிருந்து சிதறிய அமுதம்,
கும்பேஸ்வரர் கோவிலின் கீழ்புறத்தில் ஒரு தீர்த்தமாகவும் அக்கினி திக்கில் (தென்கிழக்கு) ஒரு தீர்த்தமாகவும் அமைந்தது. தென்கிழக்கில் அமைந்த அந்த தீர்த்தம் தான் மகாமக குளம்.


ஒரு சமயம் கங்கை யமுனை, நருமதை, சரஸ்வதி, கோதாவரி, பொன்னி, கிருஷ்ணா, சரயு, துங்கபத்ரா ஆகிய பெயர் பெற்ற நதிகள் வடிவமான கன்னியர்கள் ஒன்பது பேரும் உலக மக்கள் தங்களிடத்தில் நீராடி கழுவி செல்கின்ற பாவங்களை தாங்க முடியாத காரணத்தினால் அவைகளினின்று தாங்கள் நீங்கிட இறைவன் அருள் புரிய வேண்டும் என்று பரமசிவனை சென்று துதித்து வேண்டினர். சிவ பெருமான் அவர்களது குறைகளை கேட்டு கவலை வேண்டாம் என்று பின் வருமாறு செய்ய பணித்தார்.

“ கன்னியர்களே. தென் திசையில் உள்ள கும்பகோணத்தில் மகாமக தீர்த்தம் உள்ளது. தேவகுருவாகிய பிரகஸ்பதி என்றழைக்கபடும் வியாழ பகவான் சிம்ம ராசியில் பொருந்தும் போது அவரோடு மாசி மாதத்தில் பௌர்ணமியும், மக நட்சத்திரமும் சேருகின்ற நிலையில் கும்பராசியில் சூரியன் இவர்களையும் இவர்கள் சூரியனையும் பார்க்கும் நல்ல நாள் மகாமக புண்ணிய நாளாகும். குரு பகவான் கும்ப ராசிக்கு 12 
ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருவதால் மகாமக புண்ணிய காலமும் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறையே வருகிறது. அந்த நாளே மகாமக நாளாக கருதபடுகிறது. அந்த நாளில் நீங்கள் சென்று அங்கு நீராடி வழிபடுங்கள்.பாவங்கள் உங்களை விட்டு அகலும்." 

நவ கன்னியர்களும் அவ்வாறே மகாமக தீர்த்தம் வந்து மூழ்கி பாவங்களை போக்கி கொண்டனர். சிவன் அமுத வாவியின் வட கரைக்கு சென்று மேற்கு முகமாக இலிங்க வடிவில் அவர்களுக்கு காட்சி தந்து அருள் புரிந்தார்.

ஒன்பது கன்னியரும் அவ் வாவியை பார்த்தவாறே காசி விஸ்வநாதர் கோவிலில் வீற்றிருந்து இன்றும் பக்தர்களுக்கு காட்சி கொடுத்து வருகின்றனர்.


மகாமக குளம் அமைப்பு

இந்த தீர்த்தம் 20 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கிழக்கு மேற்கு நீள் சதுரத்தில் வடகரையும் தென்கரையும் சிறிது உள் வளைந்து கிழக்கில் குறுகி மேற்கில் அகன்று வானத்திலிருந்து பார்த்தால் ஒரு குடம் போலவே காட்சி தருகிறது  குளத்தை சுற்றிலும் அழகான படிக்கட்டுகளுடன் 16 மண்டபங்கள் உள்ளன. அந்த மண்டபத்தில் உள்ள கோவில்கள் எல்லாவற்றிலும் சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை அனைத்தும் மகான் கோவிந்த தீட்சிதரால் கட்டப்பட்டது. அந்த பதினாறு கோவில் சிவலிங்கங்களின் பெயர்கள் வருமாறு 



பிரமதீர்தேஸ்வரர், முகுந்தேஸ்வரர், தாளேஸ்வரர், விருஷபேஸ்வரர், பரனேஸ்வரர், கோனேஸ்வரர், பக்திறேஸ்வரர், பைரவேஸ்வரர், அகத்தீஸ்வரர், வியாசேஷ்வரர், உமைபகேஸ்வரர், நைருதீஸ்வரர், பீர்மேஸ்வரர், கண்கதறேஸ்வரர், முக்ததீர்ததேஸ்வரர்,ஷேதிரபலேஸ்வரர்,

மகாமகத்தில் உள்ள தீர்த்தங்கள் 20. 

இந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம், யம தீர்த்தம், நிருதி தீர்த்தம், வருண தீர்த்தம்,வாயு தீர்த்தம், குபேர தீர்த்தம், ஈசான தீர்த்தம், பிரம்ம தீர்த்தம், கங்கை தீர்த்தம், யமுனை தீர்த்தம், கோதாவரி தீர்த்தம், நர்மதை தீர்த்தம், சரஸ்வதி தீர்த்தம், காவிரி தீர்த்தம், குமரி தீர்த்தம், பயோஷ்ணி தீர்த்தம், சரயு தீர்த்தம், அறுபத்தாறு கோடி தீர்த்தம், தேவ தீர்த்தம். 


பிப்ரவரி 13 இன்று கொடியேற்றத்துடனும் பக்தர்களின் புனித நீராடலுடனும் துவங்கியது மகாமக திருவிழா. வரும் பிப்ரவரி 22 ஆம் நாள் திங்கள் கிழமை 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் மகாமக குளத்தில் தீர்த்தவாரி நடைபெறுகிறது. அன்று கும்பகோணத்தில் உள்ள சைவ வைணவ ஆலயங்களிலிருந்தும் உற்சவ மூர்த்திகள் மகாமக குளத்தில் தீர்த்தம் கொடுக்க எழுந்தருள்வார்கள். பிரதான மூர்த்தியாகிய அருள் மிகு கும்பேஸ்வரர் அருள் மிகு மங்கள நாயகியுடன் மகாமக குளம் வடகரையில் பீர்ம தீர்த்த கட்டத்தில் எழுந்தருளி தீர்த்தம் கொடுப்பார்.

துணி மணிகள் கலையாமலே இறைவனை துதித்த படி மகாமக 
குளத்தில் மூழ்கி எழ வேண்டும். குளத்தில் உள்ள தீர்தங்களில் சென்று நீராடி, பின் பொற்றாமரை குளம் சென்று சுவாமியை துதித்து முறையாக மூழ்கி எழுந்து காவிரி கரை சென்று மூழ்கி எழ வேண்டும். சிவன் மற்றும் பெருமாள் கோவில்களின் தீர்த்தங்களை பெற்று வழி பட வேண்டும்.    


மகாமகத்தன்று இப் புனித நேரத்தில் இத் தீர்த்தத்தை ஒரு முறை நமஸ்கரித்தால் தேவர்கள் அனைவரையும் நமஸ்கரித்த புண்ணியம் கிடைக்கும். மகாமக குளத்தில் நீராடுவோரின் பாவங்கள் நீங்கி சகல சம்பத்துகளும் பெறுவார்கள்.

 1980 ஆம் வருட மகாமகம் 


இத் தளத்தின் சிறப்பை பற்றி சொல்வதென்றால் எங்கெங்கோ செய்யும் பாவங்களை ஏதேனும் புண்ணிய தலத்தில் சென்று போக்கி கொள்ளலாம். புண்ணிய தலங்களில் செய்யும் பாவங்களை காசியிலே போக்கி கொள்ளலாம். காசியில் செய்யும் பாவங்களை கும்பகோணத்திற்கு வந்து போக்கி கொள்ளலாம். கும்பகோணத்தில் செய்யப்படும் பாவங்களுக்கு விமோசனம் இந்த தலத்திலேயே கிடைத்து விடும். அத்தகைய புண்ணியம் பெற்றது இந்த கும்பகோணம் திருத்தலம்.பிரளயத்தின் பின் உலக உயிர்கள் அனைத்தும் தோன்றிய ஸ்தலம் இது என்பது இதன் தனி சிறப்பு.


மகாமகம் - 2016 க்காக பக்தர்களை வரவேற்று 
நாங்கள் உருவாக்கிய 1.27 நிமிட வீடியோ உங்கள் பார்வைக்கு 

https://www.youtube.com/watch?v=VDWkQEIyTkA

புண்ணியத்தலமான கும்பகோணம் வாருங்கள் 
மகாமக தீர்த்தத்தில் நீராடி சிவனருள் பெறுங்கள்.

ஓம் நமச்சிவாய.

 ஆர்.வி.சரவணன் 

செவ்வாய், பிப்ரவரி 02, 2016

ஒரு ஊர்லே ஒரு தேவதை....






ஒரு ஊர்லே ஒரு தேவதை....

பதிவுலக நண்பர்  நிஜாம் பக்கம் பல் சுவை பக்கம் நிஜாமுதீன் தேவதை பற்றிய தொடர் பதிவொன்று எழுதுமாறு அழைத்திருந்தார். http://nizampakkam.blogspot.in/2012/08/angel4th-year.html. 2012 ஆம் ஆண்டு எழுதிய அந்த பதிவு இதோ நண்பர்களுக்காக. இங்கே 


ஒரு ஊர்லே ஒரு தேவதை இருந்துச்சாம். மனிதர்கள் நடமாட்டம் இருக்கிற காட்டு பகுதியில் வசிச்ச அது நல்ல தேவதை.   அங்கே போற வர்ற மனிதர்கள் பேசுறதை உன்னிப்பா கவனிக்கும். அப்படி தான் ஒரு நாள் ஒரு செல்வந்தரும் அவர் கிட்டே வேலை பார்க்கிற  ஒரு வேலையாளும் அந்த பக்கம் வந்தாங்க. வேலையாள் பெரிய மூட்டை ஒண்ணை சுமக்க முடியாம திணறிய படியே தூக்கிட்டு வந்தான். கூட வந்த அந்த செல்வந்தர்  சீக்கிரம் நட என்று விரட்டி கொண்டே இருந்தார் (வண்டியிலே வச்சு எடுத்துட்டு போனா காசு நிறைய கொடுக்கணுமே னு அவர் தன்னோட வேலையாள் வச்சே இந்த சுமைய தூக்க வச்சிருந்தார்.)  வேலையாள் தன் முதலாளி கிட்டே "இந்த சம்பளத்திலே என்னாலே குடும்பம் நடத்த முடியலே  இந்த மாசத்திலேருந்து சம்பளம் கொஞ்சம் கூட ஏத்தி கொடுங்க" னு  கேட்டுகிட்டே நடந்தான். அதுக்கு அவர் "நீ பார்க்கிற வேலைக்கு இந்த  சம்பளமே ஜாஸ்தி பணத்துக்கு எல்லாம் ஆசைபடாதே" என்று அதட்டினார். இதை பார்த்த தேவதை, அந்த செல்வந்தருக்கு சரியான பாடம் புகட்டணும் னு முடிவு பண்ணிச்சு. 

அடுத்த நாள் அந்த முதலாளி அந்த வழியா தனியா வர்றப்ப அவர் கிட்டே ஒரு சின்ன பையை கொடுதுச்சு.  பிரிச்சு பார்த்தா அதிலே பொற்காசுகள் நிறைய இருந்துச்சு அவர் சந்தோசமா இதெல்லாம் எனக்கானு கேட்க, தேவதை "உனக்கில்லே ,உன் வேலையாள் கஷ்டபடறதாலே  இதை தந்திருக்கேன். கொண்டு போய் உன் வேலையாள் கிட்டே  கொடுத்துடு" னு சொல்லுச்சு. சரி னு வாங்கிகிட்டு போனவர் தன் வேலையாள் கிட்டே அதை கொடுக்காமே தானே வச்சுகிட்டார். இருந்தும் அவருக்கு  வேலையாளை பார்க்கிறப்ப உறுத்தலா இருந்ததால,  அதிலிருந்து நாலு காசுகள் மட்டும் எடுத்து அவன் கிட்டே கொடுத்து, "கஷ்டம்னு சொன்னியே. அதனாலே தரேன் வச்சிக்க. இன்னும்  நீ நேர்மையா  என் கிட்டே ஒழுங்கா வேலை பார்க்கணும்"  னு சொன்னார். காசு வாங்கிய வேலையாளுக்கு சந்தோஷம் தாங்க முடியல. "முதலாளி என் உழைப்புக்கு நீங்க கொடுத்த கௌரவம் இது. நீங்க காலாலே இட்ட வேலையை தலையாலே செய்வேன்" னு சொன்னான். முதலாளி, பொற்காசுகள் எல்லாத்தையும் நாமலே எடுத்துகிட்ட மாதிரியும் ஆச்சு. வேலையாளையும் திருப்திபடுத்தி காலம் முழுக்க நமக்கு விசுவாசமா இருக்க வச்ச மாதிரியும் ஆச்சு னு தன் வியாபார புத்தியை நினைச்சு ரொம்ப சந்தோசமாகிட்டார்.

 அடுத்த நாள் அவர் அந்த பையை ஆசையா திறந்து பார்த்தாரு. அதிலே காசுக்கு பதிலா வெறும் கூலாங் கற்கள் தான் இருந்துச்சு. அவருக்கு  கோபம் வந்துடுச்சு. பையை எடுத்துட்டு நேரா தேவதைய பார்க்க போனாரு அதுகிட்டே "நீ ஏன் கற்களை கொடுத்து  ஏமாத்தினே" னு கேட்டாரு. அதுக்கு தேவதை "உன் வேலைக்காரன் அல்லவா இதை வந்து கேட்கணும். நீ எதுக்கு வந்தே" னு கேட்டுச்சு. அவர் தடுமாறி ஆசைப்பட்டு தானே காசுகளை எடுத்துகிட்டதா சொன்னாரு. "வேலையாளுக்கு சேர வேண்டியதை நீ வச்சிகிட்டதினாலே அது கல்லா மாறிடுச்சு" னு தேவதை சொல்லுச்சு. அவர் உடனே "இதை திரும்ப காசா மாத்தறதுக்கு நான் என்ன பண்ணனும்னு" கேட்டாரு . வேலையாள் கிட்டே கொடுத்துடு. காசா மாறிடும்" னு சொல்லவே "சரி கண்டிப்பா கொடுத்துடுறேன் எனக்கும்  கொஞ்சம் காசு கொடேன்" னு கேட்டாரு அதுக்கு தேவதை சிரிச்சுகிட்டே "வேலையாள் கிட்டே இதை கொடுத்து காசா மாறினவுடன் ரெண்டு பேரும் பாதி பாதியா எடுத்துக்குங்க" னு சொல்லுச்சு. அவர் சந்தோசமா வேலையாள் கிட்டே போய் நடந்த எதையும் சொல்லாமே "தேவதை நமக்கு  காசு கொடுத்து பிரிச்சு எடுத்துக்க சொன்னிச்சு" ன்னு அவன் கையில் கொடுத்தாரு அவன் கைக்கு போனவுடனே அது பொற் காசுகளா மாறிடுச்சு.

 அவன் அதை அவர் கிட்டே திரும்ப கொடுத்துட்டான். " தகுதிக்கு மேலே ஆசைபடறதும் தப்பு. அடுத்தவங்க சம்பந்தமே இல்லாமே இலவசமா கொடுக்கறதை வாங்கறதும்  தப்பு தேவதை கிட்டேயே திருப்பி கொடுத்துடுங்க " னு சொன்னான் அவர்,  "முட்டாள் போல் பேசாதே  இதை நீ வாங்கிக்கிட்டீன்னா   நீயும் ஒரு முதலாளி ஆகிடுவே"னு  சொன்னாரு.
அதுக்கு அவன் "நீங்க கொடுக்கிற சம்பளத்திலே நானும் என் குடும்பமும் சந்தோசமா இருக்கோம். இந்த காசுகளை நீங்களே எனக்கு சொல்லாம வச்சிருக்கலாம். ஆனா எனக்கும் பாதி கொடுத்து என்னை முதலாளியாக்க நினைச்ச உங்க நல்ல 
மனசுக்காக இந்த காசுகள் எல்லாதையும் நீங்களே எடுத்துக்குங்க" னு அவன் சொன்னவுடன் செல்வந்தருக்கு சம்மட்டியால் அடிச்சது போல் இருந்துச்சு.

திரும்பவும் தேவதைகிட்டே  போய் அந்த பையை  திருப்பி கொடுத்தார். அவன் சொன்னதை அப்படியே சொன்னார். தேவதை சிரிச்சுகிட்டே சொன்னுச்சு உன் வேலையாள் எப்படிப்பட்டவன் னு நீ தெரிஞ்சிக்க தான் இப்படி செஞ்சேன் . ஒரு வேலையாள் எப்படி நடந்துக்கணும்னு அவன் காண்பிசிட்டான். நீ போய் 
ஒரு முதலாளி எப்படி நடந்துக்கணுமோ  அப்படி அவன் கிட்டே நடந்து காட்டு 
னு சொன்னுச்சு. 

ஆர்.வி.சரவணன் 

வெள்ளி, ஜனவரி 22, 2016

ரஜினி முருகன்


ரஜினி முருகன் 


கிராமத்து கமர்சியல் படங்களுக்குனு ஒரு பார்முலா இருக்கு. நாயகன் நாயகி, அவர்களுக்கு ஒரு காதல், இந்த இருவர் வீடுகளும் ஏதோ ஜென்ம பகை போன்று முறுக்கிக் கொண்டு திரிவது, நாயகன் கூடவே படம் முழுக்க நகைச்சு வைக்க ஒரு நண்பன் கேரக்டர், நாயகி இல்லன்னா சொத்து இதற்கு ஆசைப்படும் வில்லன், பஞ்சாயத்து இதெல்லாத்தையும் ஹிட்டான பாடல்களோடு சேர்த்து சரியான மிக்சிங்ல கொடுத்துட்டா படம் ஓகே ஆகிடும். இதை தான் ரஜினி முருகனில் கலர்புல்லாக தந்திருக்கிறார் டைரக்டர் பொன்ராம்.
சிவ கார்த்திகேயன் தான் வரும் முதல் காட்சியின் ஆரவாரத்தை கடைசி காட்சி வரை தக்க வச்சிக்கிறார். ( இப்ப தான் வீட்ல கோபிச்சிட்டு வந்திருக்கேன் உடனே வந்தா நல்லாருக்காது நைட் சாப்பிட வந்துடறேன் இந்த டயலாக்கில் அவர் காட்டும் எக்ஸ்பிரஷன் ஒரு சாம்பிள்) அவரும் சூரியும் அடிக்கும் ரகளையில் தியேட்டர் சும்மா கலகலக்குது. (இத்தனைக்கும் நைட் ஷோ). கீர்த்தி சுரேஷ் பற்றி சொல்லனும்னா சிவ கார்த்திகேயன் அவரை முதல் தடவை பார்த்தவுடன் திரும்ப எப்ப வெளில வருவார்னு வாசல்ல மணிக்கணக்கா காத்துட்டே இருப்பாரு. அவர் அப்படி காத்திருக்கிறதுல ஒண்ணும் தப்பில்லைனு தான் சொல்ல தோணுது.

கீர்த்தியின் ரஜினி மேனரிச அப்பா கேரக்டர், டீக்கடை வாழைப்பழ கலாட்டா, ஆடி காரை கொண்டு செய்யும் அதகளம் ராஜ்கண்ணுவுடன் கூட்டணி போட்டு ஆடும் நாடகம், சண்டைல கிழியாத சட்டை எங்கருக்குனு சீன் போடற சமுத்திரகனி, பஞ்சாயத்து கலாட்டாக்கள்னு படம் முழுக்க நாம ரசிக்கிறதுக்கு நிறைய விசயங்கள் வச்சிருக்காங்க.

இருந்தாலும் பாராமுகமான நாயகி எதனால் காதலிக்க ஆரம்பிக்கிறாங்க, சமுத்திரகனி அப்பப்ப சிவகார்த்திகேயன் குடும்பத்துக்கு வைக்கிற செக் நல்லா இருந்தாலும் அதுக்கு பதிலடி கொடுக்கற காட்சியமைப்பு இல்லாம திணறும் கதை, அப்பா கேரக்டர் கோபத்தை விட வலுவான காரணம் என்ன? இப்படி குறைகளையும் வச்சிருக்காங்க.

எது எப்படியானாலும் நம்பி வந்த்துக்கு என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா என்று நம்மை புலம்ப வைக்காமல் சந்தோசப்படுத்தியிருக்கிறார்கள்.

ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, ஜனவரி 10, 2016

பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா ?





பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா ?

இந்த வரியை கேட்டவுடன் நீங்க எல்லாரும் கல்லு ,தக்காளி, முட்டை இப்படி எதையாவது எடுத்து அடிக்கலாமானு யோசிக்கறீங்கனு நினைக்கிறேன்.ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க. டிவி ப்ரோக்ராம்ல வர சின்ன பிரேக்கை கூட அனுமதிக்கிறீங்க. எனக்காக கொஞ்சம் ப்ரேக் கொடுங்க மாட்டீங்களா? அதுக்குள்ளே பாட்டை படிச்சிடறேன். இல்லல்ல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். அதை படிச்சதுக்கபுறம் உங்க விருப்பபடி எதை வேண்டுமானாலும் எடுத்துக்குங்க (ஹூம்.ஒரு விசயத்தை படிக்க வைக்கிறதுக்கு எவ்வளவு பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு)

அதாகப்பட்டது புத்தகம் வாசித்தல், சினிமா பார்ப்பது, எழுதுவது இப்படின்னு இருந்த என் ஆர்வம் பாடல்கள் விஷயத்துல மட்டும் இவை அனைத்தையும் ஓவர் டேக் பண்ற விதத்துல தான் இன்னிக்கு வரைக்கும் இருக்கு. 

பிளாஷ் பேக் ஓபன் பண்ணா, ஸ்கூல் படிக்கிற அந்த சின்ன வயசுல ரேடியோல ஒளிபரப்பாகிற  பாடல்களை கேட்கறதுக்காக ஒரு நாள்ல எந்தெந்த நேரத்துல பாட்டு வருதுனு கரெக்டா  டயத்தை ஞாபகத்துல வச்சிட்டு கேட்கிற ஆளு நான். கோவில் திருவிழா கல்யாண வீடு (அப்பலாம் கல்யாண வீட்டில் ஸ்பீக்கர் செட் கட்டி பாட்டு போடுவாங்க கல்யாணத்துக்கு முத நாள் சாயந்தரம் சாமி பாட்டோட ஆரம்பிச்சு அதுக்கப்புறம் சினிமா பாடல்களுக்கு தாவிடுவாங்க. நைட் 11 மணி வரைக்கும் கூட பாட்டு போடுவாங்க. பாட்டை கேட்கிறதுக்காக  தூங்காமல் விழித்திருந்து எல்லாம் பாடல்களை கேட்டிருக்கேன். கேட்டுகிட்டே அப்படியே தூங்கியும் போயிருக்கேன் சில வேளைகளில் எனக்கு பிடித்த பாடல்களை கேட்பதற்காக, (நேயர் விருப்பம் மாதிரி) எனக்கு பிடிச்ச பாட்டு போட சொல்லி பாட்டு போடறவர் கிட்டே போய் சொல்லுவேன். அவர் கண்டுக்கலையா உடனே யார் விழா நடத்தறாங்களோ அவங்க கிட்டே போய் ரெகமண்டேசன் கேட்டிருக்கேன்.இப்படி இருந்த பாட்டு கேட்கிற ஆசை அதுக்கப்புறம் ரெகார்டிங் கடைகளுக்கு ஷிப்ட் ஆச்சு. 

அதாவது மாலை வாக்கிங் செல்வது போல் கிளம்பி கும்பகோணத்தில் வலம் வருவேன் எங்கெல்லாம் ரெகார்டிங் கம்பெனி இருக்கிறதோ அங்கே சென்று விடுவேன் அங்கே போடப்படும் பாடல்களை கேட்டு ரசித்த படி இருந்திருக்கிறேன். பேருந்தில் நீண்ட தூரம் போக வேண்டி வந்தால் கூட பாட்டு இருக்கிற பஸ்ல தான் ஏறுவேன்.அதுக்கப்புறம் டேப் ரெகார்டர், எப்.எம் ரேடியோ, டிவி, செல் போன் இப்படி டெக்னாலாஜி மாறுச்சு. ஆனால் என் ரசனை அப்படியே இருந்துச்சு. அப்பலாம் தேடி தேடி போய் கேட்ட பாட்டுக்கள் எல்லாம் இப்போ என் கையடக்க செல் போனில் எப்ப ஆன் பண்ணாலும் கேட்கலாம் என்ற அளவுக்கு வந்துடுச்சு.பாட்டு கேட்கிற ஆர்வம் குறையல.

ஆனா பாடல்கள் கேட்கிறதுல இருந்த ஆர்வம் அடுத்து பாடி பார்க்கும் ஆசைக்கு ப்ரோமோசன் ஆகிடுச்சு.  பள்ளியில் மாணவர்களின் திறனை வெளி கொண்டு வருவதற்காகவே ஒரு வகுப்பு உண்டு. எட்டாவது படிக்கும் போது கடவுள் வாழும் கோவிலிலே....பாடலை பாடியது இன்றும் நினைவிருக்கிறது.காலேஜ் வந்தவுடன் அந்த ஆர்வம் இன்னும் தீவிரமாச்சு. ப்ரோபசர் இல்லாத நேரங்களில் நான் பாட என் நண்பன் ஸ்ரீதர் டெஸ்கில் தாளம் போட என்று சரி மஜாவா இருந்துச்சு.

படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு வந்த பின் பாட்டு கேட்கிற ஆசையுடன்  பாட்டு பாடற ஆசையும் சேர்ந்தே தொடர ஆரம்பிச்சுடுச்சு.(ராகமும் தாளமும் போல) எனக்கு மியூசிக் டைரெக்டர் கிட்ட போய் சான்ஸ் வாங்கி சினிமால பாடணும் அப்படிங்கிற பெரிய ஆசையெல்லாம் கிடையாது. மியூசிக் ட்ரூப் ல பாடணும்ங்கிற சின்ன ஆசை தான். (ஆனால் அதுவே எவ்வளவு பெரிய ஆசை என்பது பின்னாடி கிடைச்ச அனுபவங்கள் தான் தெரிய வச்சுது.) நடிகர் மோகன் மேடையில்  வித வித முக பாவம் காட்டி பாடுவாரே படங்களில். அது போல் பாடணும்னு ஆசை. (ரொம்ப டெரரா இருக்குமோ) இந்த விசயத்துல கல்லுரி நண்பர்களிலிருந்து அலுவலக நண்பர்கள் வரைக்கும் என்னை நல்லா ஊக்கபடுத்தினாங்க.  அதாவது டி.ராஜேந்தர் பாடும் பொன்னான மனசே பூவான மனசே.... பாடலை அவர் குரல் நான் பாடுவதை ரசிப்பாங்க. புதுசா அறிமுகமாகிற பிரெண்ட்ஸ் க்கும் பாடி காட்ட சொல்வாங்க. எங்க வீட்ல ஜெயச்சந்திரன் குரல் எனக்கு செட் ஆகுதுனு சொன்னாங்க. அதனாலே ஜெயச்சந்திரன் பாட்டா பாடி பார்க்க ஆரம்பிச்சேன். இருந்தாலும் சில வரிகளில் மட்டும் கொஞ்சம் குரல் பிசிறு தட்டும். (ராகம் இழுக்க ஆரம்பிக்கும் போது குரல் உடைஞ்சிடும்).  

என் நண்பன் தேவராஜ் என்னோட இந்த ஆர்வத்தை பார்த்து, "நண்பன் ஒருத்தன் ஆர்கெஸ்ட்ரா வில் இருக்கிறார் வா. சான்ஸ் வாங்கி தருகிறேன்" என்று என்னை அழைத்து சென்றான். அவர் (20 வயசு தான் இருக்கும் அந்த பையனுக்கு. இருந்தும் அந்த துறையில் என்னை விட சீனியர் என்பதால் அவர்) என்னை பாட சொன்னார். நானும் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்..... பாடி காண்பித்தேன்.  அவர் இந்த வார்த்தை இப்படி வரணும் இது இப்படி வரணும் என்று திருத்தங்கள் சொல்ல சொல்ல நான் விழிக்க ஆரம்பித்தேன். அவர் முடிவில் "உங்களுக்கு பாடறதுல ஆர்வம் நிறைய இருக்கு. ஆனா  நீங்க ப்ராக்டிஸ் பண்ணனுமே" என்றார். எப்படி என்று அவரிடம் கேட்க, "சங்கீதம் கத்துக்கணும்" என்றவர் "இப்ப என்ன வயசாவுது உங்களுக்கு" என்றார். 35 என்றேன் . "இந்த வயசில அது ஒண்ணும் ஆவறதில்லே" என்றார். வெளியில் வந்த பின் சின்ன வயசுல நம்ம ஆர்வத்தை தெரிஞ்சிட்டு நம்மை வீட்ல என்கரேஜ் பண்ணாம விட்டுட்டாங்களே ரொம்ப வேதனை பட்டேன். அதுக்கப்புறம் பாடுற ஆசையை  தூக்கி தூர போட்டுட்டு பாடல்கள் கேட்பதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 

கல்யாணங்களுக்கு செல்கையில் அங்கே மியூசிக் கச்சேரி நடைபெறுகிறது என்றால் அப்படியே அமர்ந்து விடுவேன். நண்பர்கள் டேய் கல்யாண வீட்டுகாரங்க துரத்தரதுக்கு முன்னாடி போயிடலாம் வாடா என்று அழைக்கும் வரை அமர்ந்து கேட்டு கொண்டிருப்பேன்.என் நண்பனின் திருமணத்தின் போது அவன் மியூசிக் ட்ரூப் ஏற்பாடு செய்திருந்தான். எனக்கும் ஒரு பாட்டு பாட சான்ஸ் வாங்கி கொடு என்றேன். உனக்கில்லாததா என்றான். மியூசிக் ட்ரூபிடம் சொல்லியும் வைத்திருந்தான். ஆனாலும் நான் மேடைக்கு அருகில் சென்று காத்திருந்த போது தான் மேடை கூச்சம் என்னை தள்ளி போ என்று விரட்டி அடித்தது. தள்ளி போனவனை நண்பன் போ போய் பாடு என்று கண்களாலேயே மிரட்டினான். நான் ஒரே படபடப்பா இருக்கு இப்ப மேடை ஏறி பாடினால் பாட்டு வராது வெறும் காற்று தான் வரும் என்றேன். எது வந்தாலும் சரி நீ பாடிஆகணும் இங்க நம்ம பிரெண்ட்ஸ் தானே இருக்காங்க என்றார்கள் மற்ற நண்பர்கள். சரி என்று என்னை தயார்படுத்தி கொண்டு மேடை அருகில் செல்வதற்குள் மியூசிக் ட்ரூப் ஹெட் "இப்ப ப்ரோக்ராம் முடிய போகுது. முன்னாடியே வர வேண்டியது தானே" என்றார். உடனே இருக்கைக்கு திரும்பி விட்டேன்.  

சென்னையில் நடந்த இரண்டாவது வலை பதிவர் திருவிழாவில் நண்பர் கோவை ஆவி ஒரு பாடல் எழுதி  டியூன் போட்டு கொண்டு வந்திருந்தவர் கோரஸ் பாடுவதற்கு வாருங்கள் என்று அழைத்த போது யோசிக்காமல் தாமதிக்காமல் அவருடன் உடனே மேடை ஏறி விட்டேன்.இதற்கு காரணம் என் மேடையில் பாடும் ஆசையால் தான்.இந்த படம் ஈரோடு சங்கமம் விழாவில் நான் பேசும் போது எடுத்தது. இந்த பதிவிற்கு மேட்ச் ஆனதால் இங்கே வெளியிட்டிருக்கிறேன்.(பாடற மாதிரி இருக்குல்ல)



ஹிந்தி படமான தில்வாலே துல்ஹனியா படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். பாடல்களும் அப்படியே. அந்த படத்தின் பாடல்களை நான்  பாடும் போது கேட்கும் வட இந்திய நண்பர்கள் எப்படி ஹிந்தி தெரியாமயே பாட்டை அப்படியே ஞாபகம் வச்சி பாடுறீங்க என்று ஆச்சரியபடுவார்கள். 

இந்த ஆச்சரியத்தை என்றேனும் ஒரு நாள் ஒரு மியூசிக் கச்சேரியில் ஒரு பாடலாவது பாடி எல்லாரையும் ஆச்சரியபடுத்தி விட வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மியூசிக் கச்சேரி பார்க்கும் போதும் அதில் பாடுபவர்களை ஏக்கத்துடனே பார்த்து கொண்டிருக்கிறேன். (மேடை கூச்சம் இப்ப தான் அகன்றிருக்கு.பார்க்கலாம் என்றேனும் ஒரு நாள் ஆசை நிறைவேறும். இது வரை படிச்ச உங்களுக்கு கல்லோ தக்காளியோ எடுக்கிற எண்ணம் போய் என் ஆர்வத்தை ஊக்கபடுதணும் என்கிற எண்ணம் வந்திருக்குமே.




என்ன எல்லாரும் ஏதோ கமெண்ட் எழுதிட்டு இருக்கீங்க போலிருக்கு.எங்கே எழுதின கமெண்டை வெளியிடுங்க பார்ப்போம். என்ன எல்லாரும் ஒரே வார்த்தையே ரீபீட் 
பண்ணி எழுதிருக்கீங்க.

 நீ ஆணியே புடுங்க வேணாம்.

ஆர்.வி.சரவணன் 

எனக்கு பாடற ஆர்வம் இருக்குனு மட்டும் எழுதினா படிக்க உங்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் கொஞ்சம் மானே தேனே போடற மாதிரி கிண்டல் கலந்து எழுதிருக்கேன். பட் என்னோட ஆர்வம் 100% நிஜம். 

  

ஞாயிறு, ஜனவரி 03, 2016

கடவுளுடன் ஒரு செல்ஃபி (கடவுளை கண்டேன் தொடர் பதிவு)




கடவுளுடன் ஒரு செல்பி 
(கடவுளை கண்டேன் தொடர் பதிவு)   

கடவுளை கண்டேன் என்ற தலைப்பில் கடவுளிடம் நீங்கள் ஆசைப்பட்டு என்ன கேட்க போகிறீர்களோ அவற்றை எல்லாம்  பட்டியலிட்டு தொடர் பதிவொன்று எழுத சொல்லி நண்பர் மனசு குமார் அன்பான உத்தரவிட்டிருந்தார்.  கடவுளை கண்டேன்  கடவுளை பார்த்தா  கேட்க வேண்டிய கேள்விகள் நிறைய இருக்கு என்று நானும் சில சலிப்பான நேரங்களில் சொல்வதுண்டு. அப்படியான கேள்விகளை இந்த பதிவின் மூலம் சொல்லலாமே  என்பதால் உடனே ஒப்பு கொண்டு விட்டேன். தொடர் பதிவேழுத அழைத்த நண்பர் மனசு குமாருக்கும் தொடர் பதிவை ஆரம்பித்து வைத்த நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கும் தொடர்ந்து எழுதி வரும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி. 


முன்னிரவு நேரம் அது. அன்று எனக்கு ஏற்பட்டிருந்த ஒரு கஷ்டமான ஏமாற்றமான அனுபவம், என்னடா வாழ்க்கை இது என்ற கடுப்பில் ஆழ்த்தி இருந்தது . அதை மறக்கடிக்க டிவியை சேனல் சேனலாக மாற்றி கொண்டிருந்தேன். ஒரு டிவியில் அறை எண் 305 ல் கடவுள் படம் ஓடி கொண்டிருந்தது. கடவுளை பார்த்தா என் வாழ்க்கையை ஏன் இப்படி ஆக்கினே னு கேட்கணும்  என்று சந்தானமும்  கஞ்சா கருப்பும்  கோபமாய் கத்தி கொண்டிருந்தார்கள். அன்பா அழைத்தாலே வர மாட்டார் இதுல இப்படி கோபமாய் அழைத்தால் மட்டும் வந்துடுவாராக்கும். வர மாட்டார் எதுக்கு வரணும் என்று தருமி போல்  நான் மனதுக்குள்  பொருமி கொண்டிருக்கையில் தான் வாசலில் காலிங் பெல் ஒலிக்க ஆரம்பித்தது.  திடுக்கிட்டேன்

மணி 11.00 என்று காட்டியது. இந்த நேரத்தில் யார் வந்து அழைப்பது. ரிமோட்டை வைத்து விட்டு பதட்டத்தை கொஞ்சம் கையில் எடுத்து கொண்டு  கதவருகே வருகையில் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தது.  "இருங்கப்பா வரேன்" என்ற சலித்து கொண்டே  கதவை கொஞ்சமாக திறந்தேன்.

அங்கே நின்றிருந்த உருவம் இருட்டின் காரணமாக என் கண்ணுக்கு புலனாகவில்லை. கொஞ்சம் பயம் மனதை கவ்வி பிடிக்க "யாரது"  என்றேன். நான் கேட்ட மறு நொடி வாசல் லைட்டை போடாமலேயே அந்த இருட்டு பிரகாசமானது.

அங்கே காலெண்டரில் பூஜை அறையில் கோவிலில் பார்க்கும் கடவுள் தோற்றத்த்தில்  ஒருவர் நின்றிருந்தார்.

"கடவுள் வேஷம் போட்டுட்டு வர நேரத்தை பாரு. யாருங்க நீங்க"
 என்றேன் சிடுசிடுப்புடன் 

"நான் தான் கடவுள்"

"நீங்க தான் கடவுள் என்பதை எப்படி நம்புவது" 

"ஹா ஹா"  என்று ஒரு ஜோக் கேட்டது போல் சிரித்தவர் 
"வெளியில்  நிற்க வைத்து பேசுவது தான் மரபா மானிடனே" என்றார்.

"வாருங்கள்"  என்று குழப்பமாய் நான் சொன்ன அடுத்த விநாடி 


"இப்போது நம்புகிறாயா"  என்ற குரல்  உள்ளிருந்து கேட்டது
பயந்து போய் திரும்பினேன். உள்ளே எனது சேரில் அமர்ந்திருந்தார். அறையெங்கும் இனம் புரியாத தெய்வீக நறுமணம் வீசி கொண்டிருந்தது போல் ஒரு பிரமை.

நான் கதவை பயத்துடன் அகலமாக திறந்து வைத்து  கொண்டேன் 
எதுனா பிரச்னை என்றால் அப்படியே வெளியில் பாய்ந்து விடலாமே என்று


" கதவை சார்த்தி விடு.மார்கழி குளிர். ஏற்கனவே உனக்கு ஜலதோஷம் வேறு இருக்கிறது " என்றார்

எப்படி உள்ளே வந்தார் இவர் ஒரு வேலை மந்திரம் தந்திரம் தெரிந்தவரோ என்று கதவை சார்த்திய படி எனது மூக்கை தடவி கொண்டு  யோசித்து கொண்டிருகையில் எனது மைன்ட் வாய்ஸ்  சொன்னதை அப்படியே ரிபீட்டினார்.

"என் மைண்ட் வாய்ஸ் எப்படி உங்களுக்கு கேட்கிறது" என்றேன் ஆச்சரியத்துடன் 

"கடவுளுக்கு கேட்காதா"

"இப்ப நான் சரவணன் என்றால் எனக்கு பான் கார்டு இருக்கு. அது போல்
நீங்கள் கடவுள் என்பதற்கு ......என்று இழுத்தேன்

"ஹா ஹா" மீண்டும் சிரித்தார்

"எனக்கு அதெல்லாம் கிடையாது" என்றவர் "சரி நீ என்னை கடவுள் என்று நம்புவதற்காக இதை சொல்கிறேன்" என்றவர்

இன்று காலையில் நான் என்ன சாப்பிட்டேன் என்பதில் தொடங்கி யார் யாரிடம் பேசினேன், என்ன பேசினேன், இன்றைய நிகழ்வுகள்,இப்போது நான் படித்து பாதியில் விட்டிருக்கும் நாவல்,  கடைசியாக படம் பார்த்து கொண்டே கிண்டலாய் கமெண்ட் பண்ணியது வரை சொன்னவர்,

"அன்பா கூப்பிட்டாலே வர மாட்டார் என்று சொன்னாய் அல்லவா. வருவேன் என்பதை நிலை நாட்டவே  வந்தேன்" என்றார் 

 ஆச்சரியம் மிகுந்து போய் கொஞ்சம் பரவசமானேன் 

"மன்னிச்சுக்குங்க இந்த காலத்துல  யாரை நம்புவது என்றே தெரியவில்லை. அதனால் தான்" என்றேன்.

"எதையுமே ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுப்பது சரியான விஷயம் தான்" 

"சாரி பேச்சிலர் ரூம் டெய்லி கிளீனா வச்சிக்க முடியல" என்ற படி விருந்தினர் வந்தால் அவசரமாக கிளீன் செய்வது போல் செய்ய ஆரம்பித்தேன்   

"கல்யாணம் ஆகாத பேச்சிலர் என்றால் சரி.கல்யாணம் ஆன பேச்சிலர் இப்படி இருப்பது தவறு " என்றவர் 

"சரி இப்படி உட்கார்" என்று எதிரே கை காட்டினார்

"பெரியவர்கள் முன்னால் உட்காருவது தவறு. அதுவும்  நீங்கள் கடவுள் உங்கள் முன் எப்படி"

சேரில் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டவர் என்னை கிண்டலாய் ஒரு பார்வை பார்த்தார்.  

"கோவிலில் என்னை நிற்க வைத்து விட்டு பக்தர்கள் நீங்கள் எல்லோரும் அமர்ந்து மணிகணக்கில் பூஜை செய்கிறீர்களே. அதற்கு பெயர் என்ன ?"

 நான் பல்பு வாங்கியது போல் ஆகி பட்டென்று உட்கார்ந்து கொண்டு விட்டேன்.

"என்ன சாப்பிடுகிறீர்கள்" என்றேன்

"நீயே சமைப்பதற்கு அலுத்து கொண்டு  பழம் பிஸ்கடுடன் உன்  இரவு உணவை முடித்து கொண்டு விட்டாய். இதில் நான் என்ன சாப்பிடுவது"

"ஆப்பிள் இருக்கிறதே" என்று எழுந்தேன் 

அவர்  கையில் இப்போது நான் பூஜை அறையில் வைத்திருந்த ஆப்பிள் வந்திருந்தது

"இதற்காக நீ ஏன் எழ வேண்டும் என்று தான் நானே எடுத்து கொண்டேன்" என்றவரிடம் 

"எதற்காக இந்த விஜயம்" என்று கேட்டேன்.


"அதை விடு. உனக்கு என்ன வேண்டுமோ கேளேன். தருகிறேன்."

"என் ஆசைகளை நிறைவேற்றி விடுவீர்களா" என்றேன் ஆச்சரியமாய்   

"ஏன் என்னால் முடியாதா"

அப்போது கொஞ்சம் உஷாராகி  "உங்களால் முடியும். நிறைவேற்றி விடுவீர்கள். ஆனால் அவை அனைத்தையும் ஏன் ஆசைப்பட்டோம் என்று நினைக்கும் அளவுக்கு வெறுக்கவும்  வைத்து விடுவீர்கள். ஆகவே எதுவும் கேட்க வேண்டாம் என்று நினைக்கிறேன்" என்றேன் 

"ஹா ஹா"  மீண்டும் அந்த சிரிப்பு அவரிடமிருந்து வெளிப்பட்டது.


"பக்குவப்பட தயாராகி விட்டாய் போலிருக்கிறதே"

"அப்ப நான் இன்னும் பக்குவபடவில்லையா" என்றேன் ஏமாற்றமாய் 

 "அதற்கு நீ இன்னும் நிறைய அனுபவப்பட வேண்டும்"

ஆமா ஒண்ணா ரெண்டா எவ்வளவு கஷ்டம் என்பதை வடிவேலு பாணியில் "என்னா அடி " என்பதாக சொன்னேன்.

"உதாரணத்திற்கு  ஒன்று சொல்"

"உங்களுக்கே தெரியுமே" 

"உன் வார்த்தையில் சொல்" 

"முன்பெல்லாம் ஹோட்டல் சாப்பாடு என்றால் அவ்வளவு இஷ்டம் எனக்கு வீட்டில் கஷ்டப்பட்டு சமைத்து கொடுத்தால் கூட வேண்டாம் என்று சொல்லி விட்டு ஹோட்டலில் சாப்பிட சென்று விடுவேன். இப்போது ஏன்டா அப்படி ஆசைப்பட்டோம் என்ற அளவுக்கு பேச்சிலர் வாழ்க்கையில் ஹோட்டல் சுவை அலுத்து விட்டது. வீட்டு சாப்பாட்டுக்கு ஏங்கி நிற்கிறது மனசு"

"பேச்சிலர் பலரின் நிலை இது தானே. இருந்தும் நீ சந்தோசபட்டு கொள்ளலாம்.  உன் சின்னஞ் சிறு ஆசைகள் சில நிறைவேறி விடுகின்றன. பலருக்கு ஆசைகள் எதுவுமே நிறைவேறுவதில்லை"

தலையாட்டினேன் 

"ஆசைகள் பற்றி யோசிக்க தொடங்கினாலே அதனால் நிம்மதி கிடைக்குமா என்ற கேள்விகள் தான் மனதில் தொக்கி நிற்கிறது" 

"நல்ல விஷயம். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்பதை உணர தொடங்குகிறாய் நீ" 

"அப்ப மனுஷன் என்றால் ஆசைபடவே கூடாதா" என் குரல் இலேசாக உயர்ந்தது.  

"ஆசைபட்ட்டது கிடைத்தால் தான் சலிப்பு வந்து விடுகிறதே" 

நான் மௌனமாகி ஒரு நிமிடம் கழிந்தது.

"உங்களிடம் சில கேள்விகள் கேட்க ஆசைபடுகிறேன். கேட்கலாமா"

"தாரளமாக கேள்" என்றார்

நான் கேட்க ஆரம்பித்தேன் 

1. பணக்காரர் ஏழை, முதலாளி தொழிலாளி, உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்ற பாகுபாட்டில் எளியவர்களின் வாழக்கையை சுரண்டும் அவலம் அல்லவா இங்கே நடக்கிறது. 

2. கடவுள் நீ இருக்கையில் நானே கடவுளின் அவதாரம் என்றெல்லாம் மனிதர்கள் தங்களை காட்டி கொள்கிறார்களே.இதை எப்படி அனுமதிக்கிறாய்.

3. ஒரு வீட்டில் நிறைய  குழந்தைகள். இன்னொரு வீட்டில் குழந்தையில்லாமல் கோவிலுக்கும் மருத்துவமனைக்கும் ஏறி இறங்குகிறார்கள்.ஏன் இந்த பாகுபாடு ?

4. தெய்வம் நின்று கொல்லும் என்பதால் தவறு செய்யும் பலரும் அடுத்த ஜென்மம் தானே அப்ப பார்த்துக்கலாம் என்று தொடர்ந்து தப்பை செய்யும் சூழல் தானே இங்கிருக்கிறது. 

5. ஏன் கஷ்டபடுகிறோம் என்று கேட்டால் போன ஜென்மத்து பாவம் என்கிறார்கள் பெரியவர்கள். போன ஜென்மத்துல என்ன பாவம் செய்தோம் என்றே தெரியாமல் இந்த ஜென்மத்தில் தண்டனை அனுபவிப்பது சரியான முறை தானா ?

6. நீ அழகை படைத்தது ரசிக்கவும் கொண்டாடவும் தானே. இயற்கையாக இருக்கட்டும். மனிதனாக கூட இருக்கட்டும். அழகை சீரழித்து சட்டத்தின் ஓட்டையில் இருந்து தப்பித்து வாழ்பவர்களுக்கு தண்டனை என்ன?

7. மனிதன் வாழ்வதற்கு உணவு உடை உறைவிடம் தேவை. ஆனால் ஜாதி மதம் தேவையில்லையே. அவற்றை ஏன் மனிதர்களுக்குள் கொண்டு வந்தாய்?

8. மனிதர்களை படைத்தாய் சரி அவர்களுகென்று பிரச்னைகளை படைத்தாய் சரி. மாற்று திறனாளிகளை ஏன் படைத்தாய். கடவுளின் படைப்பில் குறை இருக்கலாமா ?

9.உனது ஆலயங்களில் கூட காசு இருக்கிறவங்களுக்கு ஒரு வரிசை காசு இல்லாதவர்களுக்கு ஒரு வரிசை என்று இருக்கிறதே. உனது முன்னே அனைவரும் சமம் தானே. இதை எப்படி அனுமதிக்கிறாய் ?

10. மனித வாழ்க்கையை ஏன் இப்படி எதற்காகவாவது போராடும் வாழ்க்கையாகவே படைத்திருக்கிறாய் ?

நான் தட்டு தடுமாறி ஒவ்வௌன்றாய் சொல்லி முடிக்க,என்னை 
பார்த்து புன்னகைத்தார். 

"உன் கேள்விகள் எல்லாவற்றுக்கும் பதில் மனிதர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையிலேயே இருக்கிறது. அதை நீ உற்று கவனிக்க வேண்டும்" 

"புரியல"

"உன் ஸ்டைலில் சொல்றேன். ஒரு சினிமாவோ நாடகமோ அல்லது கதையோ படிக்கிறாய். அதில் எல்லோரும் நல்லவர்கள். யாருக்கும் எந்த பிரச்னையுமில்லை என்றால் உன்னால் அந்த படைப்பை ரசிக்க முடியுமா, போரடிக்கிறது என்று எழுந்து விடுவாய் அல்லவா. அது போல் தான் வாழ்க்கையும். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்து விட்டால் வாழ்க்கை போரடித்து விடும்.  இந்த வருடம் வாங்கிய இன்க்ரிமென்ட் அடுத்த வருடம் இன்னும் அதிகமாக வேண்டும் என்று உழைப்பது தானே வாழ்வின் சுவாரசியம். அடுத்து எந்த சாதனைக்கு முயற்சிக்கலாம் என்று தானே தோன்றும். இது தான் வாழ்க்கை"

இப்படி அவர் சொல்லி முடித்த போது எனக்கு வேறு என்ன சொல்வதென்று தோன்றவில்லை. ஆனால் ஓர் ஆசை மட்டும் துளிர் விட்டது. அவருடன் ஒரு செல்பி எடுத்து கொள்ள வேண்டும் என்று. 

"உங்களை சந்தித்து பேசியதை ஒரு போட்டோ எடுத்து வைத்து கொள்ள வேண்டும் என்று ஆசைபடுகிறேன். எடுத்து கொள்ளலாமா" என்றேன் தயக்கமாய் 

"ஆகா எடுத்து கொள்ளலாமே" என்றார் 

என் செல் போனை அவரே எடுத்து, என்னை அருகில் அழைத்தார்.
பய பகதியுடன் அணுகி அவர் அருகில் நின்று கொண்டேன். அவரே போட்டோ எடுத்தார். அதை என்னிடம் காட்டினார். நன்றாக வந்திருந்தது. அதையே நான் சந்தோசமாய் பார்த்து கொண்டிருக்க  "சரி நான் வருகிறேன்" என்றவாறு மறைந்தார்.

எனக்கு இன்னும் பிரமிப்பு விலகவில்லை. ரொம்ப சந்தோசமாக இருந்தது. எப்படிப்பட்ட ஒரு அனுபவம் கிடைச்சிருக்கு. இதை வீட்ல எல்லார் கிட்டேயும் சொல்லணும் நண்பர்களிடத்தில்  சொல்லணும் என்று உள்ளுர சொல்லி கொண்டிருக்கையில் தான்  ஞாபகம் வந்தது. ஆகா நாம் சினிமாவிலே டைரெக்டர் ஆகணும் னு ஆசைபட்டோமே அதை கேட்காமல் விட்டு விட்டோம். சரி ரொம்ப நாளா  ஒரு வீடு வாங்கணும்னு
நினைச்சுகிட்டிருந்தோம். அதையாவது  கேட்டிருக்கலாமே. எப்படி இது அவர் இருக்கும் வரையில் நினைவுக்கு வராமல் போனது. ஜம்பமாய் ஒன்றும் வேண்டாம் என்று சொல்லி விட்டோமே ச்சே . கிடைச்ச அதிர்ஷ்டத்தையும் விட்டு விட்டே என்று எல்லாரும் திட்ட போகிறார்கள்.  அவர்களை எப்படி சமாதானபடுத்துவது. என்று தடுமாற ஆரம்பித்தேன்.

இருந்தும் அவருடன் எடுத்து கொண்ட செல்பி போட்டோ இருக்கிறதே. 
இது பொக்கிஷமாயிற்றே  இதை முகநூலில் பகிர்ந்தால் ஒரு ஆயிரம் லைக் கன்பார்ம் என்ற உற்சாகம் தொற்றி கொள்ள செல் போனை ஆன் செய்து ஆர்வமாய் (பரவசமாய் என்றும் சொல்லலாம் ) போட்டோவை பார்த்தேன். அதிர்ச்சியாய் இருந்தது. காரணம் அந்த படத்தில் நான் மட்டும் தான் இருந்தேன். எனக்கு பக்கத்தில் கடவுள் இல்லை. சுவர் மட்டும் தான் இருந்தது.

நம்ம ஆசையை தூண்டி இப்படி ஏமாற்றமடைய வைத்து விட்டாரே. நாம் ஆசைப்பட்டதையும் கேட்க விடலே. நாம ஆசையாய் கேட்டதையும் நிறைவேத்தலே. எதுக்கு தான் வந்தார் இவர். நான் மட்டுமே சந்தோசப்பட்டு கொள்ள இதில் என்ன இருக்கிறது. என்னை சுற்றியுள்ளவர்களிடம் சொல்லி சந்தோசப்பட்டு கொள்ள முடியாமல் போய் விட்டதே  என்று சலிப்பாகி சேரில் அமர்ந்த போது கையில் இருந்த செல் போன் எஸ். எம். எஸ் வந்திருப்பதை சொன்னது.

ஓபன் செய்து பார்த்தேன். கடவுள் தான் அனுப்பியிருந்தார்.


சரவணா. நீயும் நானும் எடுத்து கொண்ட செல்பியில் நான் இல்லை என்ற 
கவலை வேண்டாம். ஒவ்வொருவர் உயிரிலும் கடவுள் இருக்கிறார் 
என்பது உலக வழக்கு. ஆகவே நான் உனக்குள்ளே தான் இருக்கிறேன். 
எது ஒன்றுக்கு ஆசைபடுகிறோமோ அதற்கு ஏன் ஆசைப்பட்டோம் என்ற நிலைமைக்கு வந்து விடுவோம் என்று நீ சொன்னதையே இங்கே மேற்கோள் காட்டுகிறேன்.

ஆம் இந்த செல்பியும் அப்படியே. இதை கண்டிப்பாக நாளை நீ எல்லோருக்கும் சந்தோசமாக சொல்வாய்.  முகநூலில் பகிர்வாய். இது வரைக்கும் சரி. ஆனால் அதற்கு பின் என்ன நடக்கும் தெரியுமா சொல்கிறேன் கேள்.

பலர் உன்னை கடவுளை பார்த்ததவன் என்பது  போல் கொண்டடுவார்கள். அது உனக்கு மகிழ்ச்சியுடன் கொஞ்சம் ஆணவத்தையும் சேர்த்தே கொடுத்து விடும். இன்னும் பலர்  நீ பொய் சொல்கிறாய் என்று குற்றம் சுமத்துவார்கள்.
நீ அவர்களிடம்  உண்மையை நிரூபிக்க  போராடுவாய். இதனால் உனக்கு விளையும் நன்மையை விட தீமைகளே அதிகம். ஆகவே தான் படத்தில் என்னை மறைத்து விட்டேன். பின் எதற்காக வந்தாய் என்று தானே கேட்கிறாய். உன் கஷ்டங்களை எதிர்த்து நீ போராட உனக்கு ஒரு தன்னம்பிக்கை இந்த நேரத்தில் தேவைபடுகிறது. அதை உனக்கு அளிக்கவே வந்தேன். அளித்து விட்டேன். இனி நீ எதுவாகினும் எதிர்த்து போரடுவாய். அதற்கான வலு இப்போது உனக்கு கிடைத்திருக்கிறது.  போராடு. வாழ்க்கையை  வெற்றி கொள். 
ஆசிகளுடன் கடவுள்.

ஆர்.வி.சரவணன் 

சனி, டிசம்பர் 19, 2015

நல்ல மனங்கள் வாழ்க







நல்ல மனங்கள் வாழ்க
(3000 ஷேர் கடந்த எனது பதிவு )

நான் அவ்வபோது எனக்கு கிடைக்கும் அனுபவங்களை முகநூலில் எழுதுவதுண்டு (தளத்திலும் தான்). அக்டோபர் மாதத்தில்  நான் எழுதிய பதிவொன்று முகநூலில் இது வரை மூவாயிரத்துக்கு மேல் (பகிர்வு) ஷேர் ஆகியிருக்கிறது. 

இது எனக்கு ஆச்சரியமான ஒன்று. காரணம் இது வரை நான் எழுதிய பதிவுகளில் கோயில்கள் பற்றி எழுதிய பதிவுகள் மட்டுமே 50 , 60 என்று ஷேர் செய்யபட்டிருக்கிறது . இப்படி ஆயிரக்கணக்கில் ஷேர் ஆகியிருப்பது இதுவே முதல் முறை. முதலில் அந்த பதிவை பற்றி பார்ப்பதற்கு முன், நடந்த நிகழ்வொன்றை பற்றி சொல்கிறேன்.

சில நாட்களுக்கு முன்பு நானும் என் மனைவியும் ஸ்ரீ வாஞ்சியம் கோவிலுக்கு சென்றிருந்தோம். (இக் கோவில் கும்பகோணத்திலிருந்து திருவாரூர் செல்லும் வழியில் உள்ளது ). அங்கே கோவில் வாசலில் டூ வீலரை நிறுத்தி விட்டு அங்கே இருந்த கடையில் அர்ச்சனை பை வாங்கினோம். 40 ரூபாய் என்றார்கள். 40 ரூபாயா என்று கொஞ்சம் அதிர்ச்சி மேலிட பையை பார்த்தால் மேலும்  அதிர்ச்சி. ஒரு தேங்காய், இரு சிறு வாழைப்பழங்கள், வெத்தலை பாக்கு இவற்றுடன் வில்வ இலைகள் கொஞ்சம் இருந்தது. அந்த பையில் பூ இல்லை. என்னங்க பூவே இல்லை என்று கேட்ட போது கடைக்காரர்  "இங்க வில்வம் தான் விசேஷம் அதை தான் அர்ச்சனை செய்ய வேண்டும்" என்றார். நான் உடனே "கொடுக்கிற அர்ச்சனை தட்டுல பூ இருக்கிறது இன்னும் விசேஷம்" என்றேன். 

" இல்ல சார் பூ இன்னும் வரலை அதான்" அவரிடமிருந்து அடுத்த வார்த்தை.
இப்படி வந்தது. " பூ இல்லாமல் எப்படிங்க அர்ச்சனை" என்றேன் டென்சனாய். வேண்டாம் என்று திருப்பி கொடுக்கவும் மனது வரவில்லை. எனது டென்சன் கோபமாக மாறியது " பூ இல்லைன்னு சொல்றீங்க பின்னே ஏன் 40 ரூபாய்  வச்சி விக்கறீங்க " என்று கேட்ட போது "சார் இந்த விலைக்கு விற்றால் தான் கட்டுப்படியாகும்" என்ற படி நகர்ந்து விட்டார் . எதிரே ஒரு பெட்டி கடை இருந்தது . அங்கே கேட்டு பார்க்கலாம் என்று சென்றோம். அங்கும் பூ இல்லை . ஆனால் அவர் வைத்திருந்த அர்ச்சனை பை விலை கேட்ட போது தலை சுற்றியது. காரணம் 30 ரூபாய் தான். எப்படி இருந்திருக்கும் எங்களுக்கு சரி விசாரித்து பார்க்காமல் வாங்கியது நம் தப்பு தான் என்ற படி கோவிலுக்குள் நுழைந்தோம். 

கோவிலுக்குள் சென்று அர்ச்சனை முடித்து வெளி வந்த போது  மனது கொஞ்சம் ரிலாக்ஸ் ஆகியிருந்தது.  
கடவுளே உன்னை பார்க்க வரும் போது இப்படி ஒரு அனுபவமா என்ற முணுமுணுப்புடனே தான் நான் கோவிலுக்குள் சென்றேன். என்ன இப்படி கேட்டுட்டே நீ என்ற படி  நாங்கள் வெளி வருகையில் வேறொரு  அனுபவத்தை  சந்திக்கும் வாய்ப்பை ஆண்டவன் எங்களுக்கு கொடுத்தான் என்றே நினைக்க தோன்றுகிறது 

இனி நான் முக நூலில் எழுதிய அந்த பதிவு இங்கே


இன்று ஸ்ரீ வாஞ்சியம் கோவிலுக்கு சென்று சுவாமி கும்பிட்டு விட்டு நானும் 
என் மனைவியும் வெளி வருகையில், கோவிலின் எதிரே ஒருவர் இளநீர் 
விற்று கொண்டிருந்தார்.அவரிடம் இளநீர் கேட்ட போது 20 ரூபாய் என்றார்.

 "சரி நிறைய தண்ணீர் இருக்கிறதா வெட்டி கொடுங்க" என்றேன்.
அவர் வெட்டி கொடுத்ததை சாப்பிட ஆரம்பித்த உடனே தீர்ந்து விட்டது. நான் உடனே 

"என்னங்க நிறைய தண்ணீர் இருக்கிறதா வேணும்னு கேட்டேனே" என்றேன். 

அவர்அடுத்து செய்த செயலும் சொன்ன வார்த்தையும் தான் அவரை பற்றி இங்கே 
எழுத வைத்து விட்டது. அப்படி என்ன செய்தார்?
என்னிடம் வாங்கிய 40 ரூபாயில் 10 ரூபாயை திருப்பி கொடுத்து "இன்னிக்கு வந்த இளநியில தண்ணி கொஞ்சம் கம்மி தான்" என்றார்.
"அதுக்கு நீங்க என்ன செய்ய முடியும" என்றேன்.
"நீங்க எதிர்பார்த்ததை என்னால் தர முடியல. அதான் கொடுக்கிறேன்" என்றார்.
வாங்க மறுத்த நான் "நீங்க சொன்னதே என்னை திருப்திக்குள்ளாக்கி விட்டது. பணம் வேண்டாம் " என்று சொல்லி விட்டேன்.
எனக்குள் காசு கொடுத்து வாங்கிய பின் பொருளில் ஏதேனும் பிரச்னை என்றால் மாற்றி கொடுக்க மறுக்கும் பெரிய வியாபாரங்களின் முன், வெயிலில் நின்ற படி வியாபாரம் செய்யும் இவர் பெரிய மனிதராகவே தெரிந்தார்.
"உங்களை ஒரு போட்டோ எடுத்துக்கவா. உங்களை பத்தி பேஸ் புக்ல 
எழுதப்போறேன்" என்றேன்.
அவருக்கு அது புரியவில்லை. "எந்த பேப்பர்" என்றார் .
இன்டர்நெட் என்று சொல்லிய படி படம் எடுத்து கொண்டு கிளம்பினோம்.
அப்போது அவர் "சார் என் பேரு வேணாங்களா?" என்றார்.
"சொல்லுங்க" என்றவுடன் "சங்கர் சார் " என்றார்.
இருந்தாலும் அவருக்கு நான் மனிதன் என்றே பெயர் சூட்டியிருக்கிறேன்.

நான் அவரை சந்தித்து வந்த பின், அவர் என்னிடம் இப்படி  நடந்து கொண்டார் சரி. மற்றவர்களிடம் எப்படி நடந்து கொண்டார் ? என்பதை யோசித்து பார்த்தேன். காரில் வந்த பாமிலி ஒன்று இளநீர் சாப்பிட்டு விட்டு கிளம்பினார்கள். இளநீர் வெட்டி கொண்டிருந்த இவர் உடனே அதை போட்டு விட்டு "சார் காசு" என்ற படி .காரின் அருகே ஓடினார் . அப்போது தான் காரில் இருந்தவர்களுக்கு இளநீர் சாப்பிட்ட காசு கொடுக்காமல் கிளம்பி விட்டோமே என்பது நினைவுக்கு வர, உடனே காரை நிறுத்தி விட்டு வந்து அவரிடம் காசு கொடுத்து  விட்டு மன்னிப்பும் கேட்ட படி சென்றார்கள். அவர்கள் சென்ற பின் இவரது ரியாக்சன் எப்படி இருந்தது தெரியுமா.  அவர்களை திட்டவில்லை. "பாவம் மறந்துட்டாங்க"  என்றார் வெள்ளந்தி மனிதராய். பின் தான் அவரை பற்றி கண்டிப்பாக எழுத வேண்டும் என்று முடிவுக்கு வந்து மேலே உள்ள பதிவை எழுதினேன்.

இந்த பதிவு இவ்வளவு ஷேர் சென்றிருப்பதற்கு இன்னுமொரு முக்கிய காரணம் இருக்கிறது. அது கும்பகோணம் நெடிவ்ஸ் என்ற எங்கள் ஊரின் முக நூல் குழுமத்தில் இதை ஷேர் செய்திருந்தேன். அதன் மூலம் இந்த பதிவு ஆயிரகணக்கான நபர்களை சென்றடைந்திருக்கிறது . அந்த குழும நண்பர்களுக்கு நன்றி.

நான் இந்த விசயத்தில் பெருமைப்பட்டு கொள்ள ஏதுமில்லை. ஒரு நல்ல விசயத்தை நல்ல மனிதரை பற்றி நம்மால் குறிப்பிட முடிந்ததே அது இவ்வளவு நண்பர்களை சென்றடைதிருக்கிறதே என்பதில் எனக்கு மன நிறைவு கிடைத்திருக்கிறது. 

இந்த பதிவு படித்த பலரும் பாராட்டியும் ஷேர் செய்தும் இருந்ததோடு அவர் போன் நம்பர் வாங்கி வெளியிட்டு இருக்கலாமே. நாங்கள் போன் செய்து பாராட்டுவோமே என்றும் சொல்லியிருந்தார்கள். 

 எந்த ஒரு விசயத்திலும் எதிர் வினையாற்றும் சிலர் அப்படி என்ன செய்து விட்டார் அவர் என்றும்  கேட்டிருந்தார்கள். அவர்களுக்கான எனது பதில் இது தான்.

ஒரு பணக்காரன் தான் செய்த வியாபாரத்தில் வரும் தவறுக்கு பொறுப்பேற்று பணத்தை திருப்பி கொடுப்பதில் என்ன சிறப்பு இருக்கிறது. ஒரு நடுத்தர வர்க்கத்தில் ஒருவர் தான் செய்யும் வியாபாரத்தில் அதை நேர்மையுடன் செய்யும் போது தானே பெருமை இருக்கிறது.

இந்த பதிவின் மூலம் எனக்கு 200 பேர் வரை ப்ரெண்ட் ரெக்வஸ்ட் கொடுத்திருக்கிறார்கள் என்பது இங்கே கூடுதல் தகவல். அவர்கள் அப்படி 
என்னுடன் முகநூலில் இணைந்து கொள்ள ஆசைபட்டிருப்பது இது போல் நல்ல
தகவல்களை நான் பகிர்ந்து கொள்வேன் என்பதால் தானே. 
அந்த பணியை தொடர்ந்து செய்வேன்.

வாழும் மட்டும் நன்மைக்காக தான் வாழ்ந்து பார்ப்போமே.

ஆர்.வி.சரவணன்