செவ்வாய், ஏப்ரல் 04, 2017

ஊடல்




ஊடல்
(சிறுகதை) 

நந்தகோபால் மனைவி வித்யாவுடன் நடந்த சண்டையில் ரொம்பவே காயப்பட்டிருந்தான். இவ நம்ம மேல பாசமா இருக்காளா இல்லியானு தெரியலியே என்று நொந்து போனவானாய் வீட்டை விட்டு வெளியேறியவன், எங்கியாவது கண்காணாத இடத்துக்கு ரெண்டு நாள் போய் சுத்திட்டு மனசு ரிலாக்சான பின் வரணும் என்று நினைத்த படி  மனைவியிடம் சொல்லாமலே ஊட்டிக்கு பயணமானான். இருந்தும் பிள்ளைகள் தவிப்பார்களே என்ற தயக்கம் வரவே வாட்ஸ் அப்பில் பையன் செல் போனுக்கு மெசேஜ் அனுப்பினான்.

இரண்டு நாளில் வந்து விடுவேன். ஆகவே என்னை தேட வேண்டாம். அம்மாவிடம் மட்டும் இதை சொல்லாதே அவள் தவிக்கட்டும் 

ஒகே  என்று ரிப்ளை வரவும் நிம்மதியுடன் ஊட்டி போய் இறங்கினான்.  நிம்மதி சில மணி தேரங்கள் மட்டுமே இருந்தது. அதற்கு பின் மனைவி பிள்ளைகளை விட்டு வந்தது ஒரு குற்ற உணர்வாகவே இருந்தது. அந்த உணர்வு எப்ப வீட்டுக்கு போவோம் என்ற நிலைக்கு கொண்டு வந்து வீட்டிலேயே விட்டு விட்டது. "எங்க போனீங்க?" மனைவி தவித்த படி கேட்பாள் என்று எதிர்பார்த்த வனுக்கு மிகுந்த ஏமாற்றம். 

வித்யா வேலைக்கு போய் விட்டு வரும் நந்த கோபாலை எதிர்பார்ப்பது போலவே இயல்பாக இருந்தாள். பையனுக்கு விசயம் தெரியும்  பொண்ணுகிட்டயும் பையன் சொல்லி வைத்திருக்கலாம். ஆகவே இருவரும் பதட்டமாகலே. ஆனா இவ பதட்டப்படவே இல்லியே.  என்ன மனுஷி இவள் என்று கடுப்பானவன் அவளிடமே இதை கேட்டான்.

"ரெண்டு நாளா புருஷன் வரலியே? என்ன ஏதுனு பதட்டமே இல்லியா உனக்கு"

"ரெண்டு நாளைக்கு அப்புறமும் நீங்க வரலைனா தான் பதட்டம் வந்திருக்கும்.இந்த உலகத்தையே புரட்டியிருப்பேன்"

வித்யா இப்படி பதிலளிக்கவும், பையன் சொல்லிட்டான் போலிருக்கு என்று நினைத்த படி கோபமாய் பையனின் பக்கம் திரும்பினான். பையன் பொண்ணு இருவரும்  "ஹாய் டாட்" என்றார்கள். சிரித்தபடி 

நந்த கோபால் முறைக்க ஆரம்பிக்கவும்,

வித்யா குறும்பாக சிரித்த படி சொன்னாள்.

" முறைக்காதீங்க. பையன் வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை கோபத்துல எனக்கு அனுப்பிச்சுட்டீங்க."

ஆர்.வி.சரவணன்

3 கருத்துகள்:

  1. ..ஹாஹா. கோபம் கண்ணை மறைக்குமனு சொல்றது இதைத்தானோ.... நல்லாருக்கு சார்

    பதிலளிநீக்கு
  2. ஹாஹா... செம பல்பு வாங்கிட்டாரு போல!

    பதிலளிநீக்கு
  3. ஆஹா...என்னை மாதிரித்தான்
    போல அவரும்....
    முடித்தவிதம் அருமை
    வாழ்த்துக்களுடன்...

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்