திங்கள், ஏப்ரல் 24, 2017

முகநூல் குறிப்புகள் - 2





முகநூல் குறிப்புகள் - 2


ரொம்ப நாட்களுக்கு முன்பு அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்ப எல்லாம் திரும்பவும் இந்த படம் பார்க்கணும் என்று நினைத்து கொள்வேன். அந்த வேளை இன்று வந்தது. டிவியில் இன்று இந்தப் படம் போட்டதும் பார்க்க ஆரம்பித்து முடித்து விட்டேன். அந்தப் படம் மோகன், இளவரசி ரேவதி நடித்த ஆர்.சுந்தர்ராஜனின் குங்குமச்சிமிழ்.
வறுமையில் வேலை தேடி கஷ்டப்படும் காதலர்கள் மோகன் இளவரசி. ஆறு மாதம் கழித்து சத்திக்கலாம் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டு வேதனையுடன் பிரிகிறார்கள். பிரிந்த அடுத்த நாளே இருவர் வாழ்க்கையிலும் வறுமை விடைபெற்று செல்வத்தில் திளைக்கும் வாழ்க்கை கிடைத்து விடுகிறது . இருவருமே எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பிருக்க, மோகனுக்கு வேலை கிடைத்ததே, ரேவதியின் கல்யாணம் நின்று போனதால் தான் என்பது தெரிய வருகிறது. பிராயச்சித்தமாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மோகன் சம்மதிக்க, இது தெரியாமல் இளவரசி அந்த திருமணத்திற்கு அட்சதைபோட வருகிறார். இதில் யார் தியாகியாகிறார் என்பதே கதை.
காதலர்கள் வேலை தேடி கொண்டே ஒன்றாக தங்கியிருக்கும் வரம்பு மீறாத காட்சிகள், அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள்,( கூட்ஸ் வண்டி, கடற்கரையின் பாழடைத்த இடம்) பாரப்பவர்களை எல்லாம் "என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறியா" என்று கேட்கும் டெல்லி கணேஷ் கேரக்டர். எந்த பொருளானாலும் போட்டுடைக்கும் ரேவதி,
இளையராஜாவின் ஆறு பாடல்கள் (ஒரு பாட்டு ரிப்பீட்) என்று ரசிக்க ஏராளமான விசயங்கள் இதில் இருக்கிறது.
வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி ஒரு காட்சி வரும். வேலை தேடி கொண்டிருக்கும் மோகன், நடுரோட்டில் ஒருவர் ஆக்சிடெண்ட்டில் இறந்து கிடப்பதை பார்ப்பார். அடுத்த நிமிடம் இறந்தவர் பார்த்த வேலையை வாங்கி விட அந்த அலுவலகம் நோக்கி அவசரமாக விரைவார். அவருக்கு முன்பே அந்த வேலை வேறொருவர் வாங்கியருப்பது தெரிய வருகையில் மோகன் வேதனையை இப்படி வெளிப்படுத்துவார். "வேலையில்லா திண்டாட்டம் என்னை விட பாஸ்டா இருக்குது".
இடைவேளைக்கு முன் இளவரசி பின் ரேவதி என்று கதை அமைத்திருந்தாலும். இடைவேளைக்கு பின் இளவரசி கேரக்டரின் நிலை பற்றி இன்னும் காண்பித்திருக்கலாம். சில கேரக்டர்களின் சஸ்பென்ஸ் முன் கூட்டியே நாம் அறிந்து கொள்வதை தடுக்கும் விதமாகவும் திரைக்கதை அமைந்திருக்கலாம்.
நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது. அவ்வப்போது நான் முணுமுணுக்கும் பாடல் இது. நண்பர்களுடன் இந்தப்படம் செகண்ட் ஷோ கும்பகோணம் செல்வம் தியேட்டரில் பார்த்துவிட்டு, அடுத்த நாள் இப் படத்தை பற்றி தெரு முனையில் இருந்த ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து படம் பற்ற விவாதித்தது இன்றுவரை நினைவில் இருக்கிறது.

------


திருப்பூர் செல்லும் வழியில், திருச்சி மலைக்கோட்டை உச்சி பிள்ளையார் கோவிலிலுக்கு சென்றிருந்தோம். அந்த படிக்கட்டுகளில் அமர்ந்து மாலை வேலைகளில் திருச்சியின் அழகை ரசிப்பதென்றால் அலாதி பிரியம் எனக்கு. இயந்திர வாழ்க்கையில் அதெல்லாம் சாத்தியப்படுவதில்லை. இன்று கூட பாருங்கள். நாங்கள் கோவிலில் சென்று நுழைந்தவுடன் நடந்து வந்த களைப்பில் என் பெண் மயக்கமாகி விட்டாள். பதட்டமாகி ஓடிப்போய் ஜூஸ் வாங்கி வந்து கொடுத்து சரிப்படுத்தி அவளை கீழே அழைத்து வருவதற்குள் நாங்கள் சோர்வாகி விட்டோம்.கண் இமைக்கும் நேரத்திற்குள் ஒரு டென்ஷனை கொடுத்து அதிலிருந்து மீட்டெடுப்பதில் கடவுளுக்கு நம் 
மேல் அலாதி பிரியமுண்டு.

------




சில நாட்களுக்கு முன் எனக்கு ஒரு போன் கால் வந்தது. "சார் உங்க செல் நம்பர்க்கு பரிசு விழுந்திருக்கு" என்றார் போனில் பேசிய பெண்.


"என் நம்பரை யாருக்கும் கொடுக்கலியே ?. பின்ன எப்படி செலக்ட் பண்ணீங்க" குழப்பமானேன்.


" எங்க கம்பெனில ரேண்டமா செலக்ட் பண்ணிருக்கோம் சார். எத்தனையோ பேர்ல உங்களுக்கு மட்டும் பரிசு கிடைச்சிருக்கு. இந்த பரிசை நீங்க வாங்கிக்குறதுக்கு ..... " என்று தொடர்ந்தவரை இடைமறித்து,

"எனக்கு உங்க பரிசு வேண்டாம்" என்றேன் உடனடியாக.
அந்த பெண் "சார் முதல்ல நான் சொல்ற டீடெய்ல்ஸ் கேட்டுடுங்களேன்." என்றார்.

"கேட்ட பின்னாடியும் அதை தான் சொல்ல போறேன். அதை போய் எதுக்கு கேட்டுகிட்டு" என்ற படி போனை கட் பண்ணிட்டேன்.

இப்ப அவங்க அடுத்த நம்பருக்கு போன் பண்ணி, "சார் உங்க செல் நம்பருக்கு மட்டும் பரிசு விழுந்திருக்கு" அப்படின்னு தானே ஆரம்பிப்பாங்க.

------

இன்று மின்சார ரயிலில் கூட்டம் அதிகமிருந்தது.ஒரு ரயில் நிலையத்தில் ஏறிய குடும்பமொன்றில், கணவன் கை நிறைய லக்கேஜ்களுடன் இருந்தார். அவரது மனைவியும் இரு மகள்களும் (சிறுமிகள்) ஆளுக்கொரு பக்கம் கிடைத்த சீட்களில் அமர்ந்தாலும், அவருக்கு மட்டும் சீட் கிடைக்கவில்லை. இதை பார்த்த சிறுமிகளில் ஒன்று தன் தந்தையை பார்த்து சொன்ன வார்த்தைகள் ஒரு நெகிழ்ச்சி கவிதை.
"அப்பா நீங்க வந்து உட்காருங்க. நான் வேண்ணா  உங்க மடில உட்கார்ந்துக்கறேன்".

------

அந்த பிரபல ஹோட்டலில் நானும் நண்பரும் சென்று சாப்பிட அமர்ந்த போது மதியம் 2 மணி. பெயர் பலகையில் ஹாட் இட்லி இருக்கவே, சர்வரிடம் விசாரித்து உறுதி செய்து கொண்டு இட்லி ஆர்டர் செய்தோம். இட்லியும் வந்தது. ஆனால் அது ஹாட் இட்லி அல்ல. ஆறிப்போன இட்லி.
சர்வரிடம் "ஹாட் இட்லினு போட்டிருக்கீங்க.ஆனா இட்லி சூடாவே இல்லியே" என்றேன்.
"இந்த நேரத்துல சூடால்லாம் கிடைக்காதுங்க" என்றார் கறாராய்.
"அதை நாங்க ஆர்டர் பண்றப்பவே சொல்லியிருக்க வேண்டியது தானே" என்றேன்.
சர்வர் அதற்கு பதில் சொல்லாமல் "இட்லி வேணுமா வேணாமா"
என்றார் சலிப்புடன்.
அவரது சலிப்பு என்னை கடுப்பேற்றினாலும் அதை வெளிக்காட்டாமல்,
"இட்லி கேன்சல். தக்காளி சாதம் கொண்டு வாங்க. அதுல தக்காளி இருக்குதா பார்ப்போம்" என்றேன் கூலாக.

------


இன்று டிவியில் (கொஞ்ச நேரம்) பார்த்த ஒரு திரைப்படத்தில் கதாநாயகன் தன் ஹீரோயிசத்தை வெளிப்படுத்தும் முதல் காட்சி,
மந்திரியின் கார் பவனி வருவதால் டிராபிக்கை நிறுத்தியிருக்கிறார்கள். அந்த நேரம் பிரசவ வலியில் துடிக்கும் பெண் ஆட்டோவில் இருக்கிறார். இதை கவனித்த சக போலிஸ் டிராபிக்கை திறந்து அந்த ஆட்டோவை அனுப்பி வைக்கிறார். இதைக் கண்டு மந்திரியின் ஆட்கள் அவரை தாக்க வர, டிராபிக் போலிசான ஹீரோ களத்தில் இறங்கி அவர்களை தாக்கி சிதறடிக்கிறார்.
இது போல ஏற்கனவே வந்து விட்டதே என்று கேட்க தோன்றுகிறதா?. எனக்கும் அப்படியே. இந்த காட்சி எப்படி வைத்திருக்கலாம். நீ தான் சொல்லேன் என்று நீங்கள் யாரேனும்  கேட்க கூடும். ஆகவே சொல்கிறேன்.

விரைவாக வரும் மந்திரியின் கார் பவனி திடீரென்று பிரேக் போட்டு போக்குவரத்து போலிசால் நிறுத்தப்படுகிறது. இறங்கி கோபமாய் வரும் அவருடைய ஆட்கள் "மந்திரி காரை நிறுத்தற அளவுக்கு இங்க அப்படி என்னய்யா நடக்குது" என்று கேட்க,
" ஸ்கூல் விட்டிருக்காங்க. குழந்தைகள் வீடு திரும்புறாங்க." என்ற பதில் வருகிறது.
"இதுக்காக போய் எங்களை நிறுத்தினவன் யாருடா ?" என்று கேட்கவே மந்திரி மற்றும் அவரது சகாக்களுக்கு சுட்டி காட்டுகிறார்கள் போலீசார்.
அங்கே சாலையெங்கும் குழந்தைகள் சுதந்திரமாக நடந்த படி சைக்கிளில் சென்ற படி இருக்க, டிராபிக் போலிசான ஹீரோ புத்தகங்களை கீழே சிதற விட்ட ஒரு சிறுவனுக்கு பொறுமையுடன் உதவி கொண்டிருக்கிறார்.

ஆர்.வி.சரவணன் 

புதன், ஏப்ரல் 19, 2017

எதுக்காக? - குமுதம் ஒரு பக்கக் கதை



எதுக்காக? - குமுதம் ஒரு பக்கக் கதை 

 ச்சே” என்ற படி நின்றிருந்த புறநகர் ரயிலிலிருந்து ஒவ்வொருவராக கீழே குதிக்க தொடங்கினர். அவர்கள் சொன்ன ச்சே வை இன்னும் அழுத்தி உச்சரித்தவாறு கீழே குதித்தான் அருண். யாரோ ஒருவர் போகிற போக்கில் "ஸ்ட்ரைக் நடந்துட்டிருக்கு" என்று சொல்லவும் தான் குழப்பத்தில் இருந்தவர்கள் ச்சே என்று சலிப்பு காட்டி இறங்க ஆரம்பித்தனர்.எதிரே இருந்த சாலையை நோக்கி வேகவேகமாக நடக்க ஆரம்பித்தனர்
10 மணிக்கு அலுவலகத்த்தில் இருந்தாக வேண்டும். மணி இங்கேயே 10 ஆகி விட்டது. “முன் அறிவிப்பில்லாமல் எதுக்குங்க ஸ்ட்ரைக்பண்றாங்க” அருண் தன் பக்கத்தில் கூடவே இறங்கி வந்து கொண்டிருந்த அந்த நபரை கேட்டான்.

"முன் அறிவிப்போடு ஸ்ட்ரைக் பண்ணா பரவாயில்லியா ” என்று வியர்வையை கை குட்டையால் துடைத்தவாறு அருணை திருப்பி கேட்டார் அவர்பெண்கள் கஷ்டப்பட்டு கீழே இறங்கி கொண்டிருந்தனர்.

யாரும் ஸ்ட்ரைக் பண்ண கூடாது னு ஒரு ஸ்ட்ரைக் பண்ணா நல்லாருக்கும்” இப்படி நக்கலடித்த படி கடந்தார் இன்னொருவர்.


அருண் அடுத்த ட்ராக்கையும்  கடந்து ரயில்வே இரும்பு வேலியையும் தாண்டி பஸ் பிடிக்க ரோட்டுக்கு வந்தான். 

எதுக்காக ஸ்ட்ரைக் பண்றதுன்னு விவஸ்தையே இல்லாம போயிடுச்சு ” கடுப்படித்த படி வந்து கொண்டிருந்த அந்த முதியவரிடம் எதுக்காக ஸ்ட்ரைக் பண்றாங்க சார்”  ஆவலாய் கேட்டான் அருண்.

ம்... ரயிலெல்லாம் டயத்துக்கு வராம லேட்டா தான் வருதாம். அதுக்காக பயணிகள் தண்டவாளத்தில் உட்கார்ந்து ஸ்ட்ரைக் பண்ணிட்டு இருக்காங்களாம்."

ஆர்.வி.சரவணன் 

குமுதம் 14-09-2016 இதழில் வெளியான எனது ஒரு பக்கக் கதை இது. 
நன்றி குமுதம் ஆசிரியர் குழு.

செவ்வாய், ஏப்ரல் 11, 2017

முகநூல் குறிப்புகள் -1




முகநூல் குறிப்புகள் -1

முகநூலில் அவ்வப்போது நான் எழுதி வரும் பதிவுகளை முகநூல் குறிப்புகள் என்ற தலைப்பில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன். 


"றைவா, ஆலயம் ஒன்றை எழுப்பி உன் புகழ் பாட விரும்புகிறேன். நீ அங்கே எழுந்தருளி அருள் பாலிக்க வேண்டும்" பக்தன் சொன்னான்.
அசரீரி ஒலித்தது.
"பக்தனே. எத்தனையோ ஆலயங்கள் அகிலமெங்கும் இருக்க, புதிதாக நீ ஆலயம் 
எழுப்ப வேண்டியதன் அவசியம் என்ன? "


தடுமாறிய பக்தன், "எனக்கென்று என் விருப்பபடி ஆலயம் எழுப்ப ஆசைப்படுகிறேன்." என்றான் பெருமையும் கர்வமும் பிடிபட.

"ஹா.ஹா என் பெயரை கொண்டு உன்புகழ் பாட போகின்றாயா?" அசரீரியின் 
நகைப்பில் இருந்த கேலி அவனை திக்குமுக்காட வைத்தது.
"ஒரு ஆலயம் எழுப்ப ஆசைப்பட்டது தவறா?"
"நீ (ஆலயம் எழுப்பி) என்னை அழைக்காதே.
இருக்கின்ற ஆலயங்களில், மனிதர்களில் எங்கே நானிருக்கிறேன் என்று 
என்னை தேடி வா"
இறைவனின் சொல் ரூபத்தில் பக்தன் கள்ளானான்.

------


டங்களில் ஹீரோவுக்கு கண்பார்வை வரும் போது நீங்க யாரை பார்க்கணும்னு விருப்பப்படறீங்கனு கேட்பாங்க. அதற்கு ஹீரோ அம்மா, அப்பா, காதலினு அவருக்கு யார் மேல பிரியம் ஜாஸ்தியோ அவர்களை சொல்வார்.
இதுவே அவர் கண்திறந்து பார்க்க போகிறவர்களோட மனநிலை எப்படி இருக்கும். சமீபத்திய படம் ஒன்றில் வந்த காட்சி.
ஹீரோ கண்விழிக்க போகிறார். அவரது அம்மா ஹாஸ்பிடலுக்கு சுடிதாரில் வருவதை பார்த்தவுடன் கணவர் (ஹீரோவோட அப்பா). அதிர்ச்சியாகி என்னடி இது கூத்து " என்று கேட்கிறார்.

அம்மா சொல்கிறார். " பத்து வருஷத்துக்கு முன்னாடி என் பையன் என்னை எப்படி பார்த்தானோ எப்படி இருந்தா அவனுக்கு பிடிக்குமோ அப்படி தான் வந்திருக்கேன்."

"பார்த்து. பையன் இதுக்காகவா எனக்கு பார்வை கிடைச்சுதுனு கதற போறான்"
" ம். பொறாமை உங்களுக்கு. உங்களை பார்த்து தான் அடையாளம் தெரியாம திணற போறான்."
பையனுக்கு கண்பார்வை போன நிமிடத்துக்கே போய் பையனை வரவேற்பது மாதிரியான காட்சி.
படம் அதே கண்கள்.
இப்ப என்னோட ஹம்மிங் இந்த பாட்டு தான்
அடியே நீ களவாணி. குட்டி காட்டேரி. கண்ணாடி தேகத்தில் காட்டாறு நீ....

------

கும்பகோணம் டு திருவாரூர் சாலையில், (மூலங்குடி என்று நினைக்கிறேன்) டூ வீலருக்கு காத்து பிடிப்பதற்காக ஒரு கடையின் முன்பு வண்டியை நிறுத்தினேன். அமர்ந்திருந்த கடையின் முதலாளி எழுந்து வந்தார். அதிரச்சியானேன். காரணம் இடுப்பு வரை தான் அவர் உடலிருந்த்து. கைகளின் துணை கொண்டு வண்டி அருகே வந்தவரை பார்த்தவுடன் மனசு ஒரு கணம் நொறுங்கி போனது. இதெல்லாம் எனக்கு சாதாரணமே என்பது போல் அவர் பாட்டுக்கு கேசுவலாக டியூபை எடுத்து கொண்டு ஏர் செக் செய்ய ஆரம்பித்தார்.
"சார் காத்து ஏற்கனவே அதிகமா இருக்கு. இப்படி இருந்தா ஓட்டும் போது உங்க தோல்கள் வலி கண்டுடும். இவ்வளவு தேவை இல்ல" என்று அளவை சரி செய்தார்.

நான் பத்து ரூபாய் எடுத்து நீட்டிய போது,

"வேணாம் சார். நான் தான் காத்து பிடிக்கவே இல்லியே அளவை தானே சரிபண்ணேன் வேண்டாம். விடுங்க" என்ற படி பின்னுக்கு நகர்ந்தார்.
"ஏர் செக் பண்றதும் ஒரு வேலை தான்" என்று வற்புறுத்தி அவரிடம் பணம் தந்தேன்.
டூ வீலரை ஸ்டார்ட் செய்து செல்ல ஆரம்பிக்கையில் அவர் சொன்ன வார்த்தை தான் திரும்ப திரும்ப என் ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருந்தது.
"நான் தான் காத்து பிடிக்கலியே. காசு வேணாம்"
யோவ். உன்னை ரொம்ப பிடிக்குதுய்யா.

------

ன்று காலை ரயிலிலிருந்து இறங்கும் போது கவனித்தேன்.
பக்கத்து கோச்சிலிருந்து இறங்கிய இளம் பெண்ணை வரவேற்ற ஒரு தந்தை, மகள் தோளில் மாட்டியிருந்த பேகை வாங்கி தன் தோளில் மாட்டி கொண்ட படி மகளை 
கை வீசி நடக்க விட்டு அழைத்து சென்றார்.
பள்ளியிலிருந்து குழந்தைகளை அழைத்து வருகையில் கனமான புத்தக பையை நாம் சுமந்து குழந்தைகளை கைவீசி நடக்க விட்டு மழலை மொழியை ரசித்த படி அழைத்து வருவோமே அதை ஒத்திருந்தது ஆனந்த யாழை மீட்டும் இந்த நிகழ்வு.
அந்த பேக் அப்படி ஒன்றும் கனமில்லை என்பது இங்கே கூடுதல் தகவல்.

------

ளவு கடந்த டென்ஷனுடன் அன்றைய தினம் ரயிலில் ஏறியமர்ந்தேன். எதிரில் இளைஞர் இளைஞிகள் சிலர் ஒரு குழுவாக வந்திருந்தார்கள். செம அரட்டையிலிருந்தார்கள். அவர்களது அரட்டையை டென்சனுடன் கவனித்தவாறே, வாங்கி வந்த பார்சலை பிரித்து தோசையை சாப்பிட்டு முடித்தேன். தண்ணீர் பாட்டில் வாங்காமல் ஏறி விட்டது அப்போது தான் தெரிந்தது.
சரி தாம்பரத்தில் எப்படியும் வாங்கி விடலாம் என்று காத்திருந்தேன். ஆனால் எனது கோச் நின்ற இடத்தில் எந்த கடையும் இல்லை. தண்ணீர் பாட்டில் விற்ற படியும் யாரும் வரவில்லை. பசியோட கூட இருந்திடலாம் தாகத்தோட இருக்க முடியாது என்பதை உணர்ந்த நேரமது.
ரயிலில் மற்றவர்களிடம் கேட்கவும் கூச்சமாக இருந்தது. சரி அப்படியே இருந்து விடலாம் என்றாலும் முடியவில்லை. எதிரில் அரட்டையிலிருந்தவர்களிடம் தண்ணீர் பாட்டில்கள் நிறைய இருக்கவே,
"தண்ணீர் பாட்டில் வாங்க முடியல. காசு வேண்ணா கொடுத்துடறேன் ஒரு பாட்டில் கொடுக்கறீங்களா?" என்று நான் சங்கோஜமாக கேட்ட அடுத்த நொடியே தாமதிக்காமல் முழு தண்ணீர் பாட்டிலை எடுத்து நீட்டினார்கள். நான் அதற்குண்டான பணம் நீட்டிய போது "அதெல்லாம் வேண்டாம் சார்" என்று மறுத்து விட்டார்கள்.
ஆகவே, எனது அப்போதைய தேவைக்கான தண்ணீரை மட்டும் எடுத்து கொண்டு விட்டு, பாட்டிலை திரும்ப கொடுத்து நன்றி சொன்ன போது "இதுக்காக எதுக்கு சார் நன்றிலாம்" என்ற படி புன்னகைத்தார்கள்
"கொஞ்சம் டென்சன். அதனால வாங்க மறந்திட்டேன் " என்று அவர்களிடம் நான் சொல்லி கொண்டிருக்க, நீ வாங்காமல் வத்ததால் தான்டா இப்படி ஒரு அனுபவம் உனக்கு கிடைச்சிருக்கு என்ற படி இடித்துரைத்து கொண்டிருந்தது மனசு.

------

டலூரிலிருந்து கும்பகோணத்திற்கு பேருந்தில் வந்து கொண்டிருக்கையில் தான் அந்த இளைஞனை பார்த்தேன். எனக்கு பக்கத்து சீட். பேசி கொண்டிருக்கையில், படித்த பின் வேலைக்காக கஷ்டப்பட்டு நண்பர்கள் உதவியுடன் சென்னை வந்து வேலையில் சேர்ந்திருப்பதாய் சொன்னார். பணம் செலவழித்து படித்து விட்டு கிடைத்த வேலையில் குறைவான சம்பளத்தில் பணியாற்றுவதன் கவலை (நண்பர்களுடன் உற்சாகமாக அளவளாவி கொண்டிருந்தாலும்) அவரிடம் இருந்தது.
எவ்வளவு சம்பளம் வருது என்று கேட்ட போது,
மாசம் முழுக்க ஓவர் டைம் சேர்த்து பார்த்தா கூட பிடித்தம் போக 12000 வரை வரும். நண்பர்களுடன் சேர்ந்து தங்கி கொள்வதால் இடம் சாப்பாடு செலவு எல்லாம் போக 3000 வரை கையில் நிக்கும். அதை வீட்டுக்கு அனுப்புகிறேன் என்றார்.
அவரை பார்க்கையில் சென்னை வந்த புதிதில் நான் வேலைக்காக கஷ்டப்பட்டு கொண்டிருந்த காலங்கள் என் நினைவில் வந்து சென்றன.
தீபாவளி வாழ்த்துக்களை சொல்லிய படி பேருந்தை விட்டு இறங்கும் போது கேட்டேன். ( தீபாவளிக்கு சென்னையிலிருந்து வருகையில் நடந்தது இது)
"அப்பா என்ன பண்றாரு?"
"அப்பா விவசாயிங்க".

படம் : திருவாரூர் தியாகராஜர் கோவில் எனது க்ளிக் 

ஆர்.வி.சரவணன் 

புதன், ஏப்ரல் 05, 2017

மயங்குகிறாள் ஒரு மாது




மயங்குகிறாள் ஒரு மாது

ஒரு புறம் வேடன் ஒரு புறம் நாகம் இரண்டுக்கும் நடுவே அழகிய கலை மான்..... என் விருப்ப பாடல்களில் வாணிஜெயராம் பாடிய இந்தப் பாடலும் உண்டு.

இந்த பாடலின் காட்சியை டிவியில் பார்த்த போது இந்த படம் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் வந்தது. காரணம், இந்த பாடலின் இடையே மேற் சொன்ன வரிகளை சுஜாதா தன் மருண்ட விழிகளை வலப்பக்கமும் இடப்பக்கமுமாக மாற்றியபடி பாடி கொண்டிருப்பார். கூடவே அவரது கணவரான முத்துராமன் அவரை பின் தொடர்ந்த படி குழப்பமாய் கவனித்து கொண்டிருக்க, விஜயகுமாரும் தேங்காய் சீனிவாசனும் சுஜாதாவை அச்சுறுத்தும் வேடன், நாகமாக காட்டப்படுவார்கள்.

இந்தப்படத்தில் வரும் இன்னொரு பாடலான சம்சாரம் என்பது வீணை.... பாடல் காட்சியை கவனித்த போது, முத்துராமன் மனைவி சுஜாதா பற்றி புகழ்ந்து பாடிக் கொண்டிருப்பார். அதை ரசித்து மகிழ வேண்டிய சுஜாதாவோ அங்கே நின்றிருக்கும் விஜயகுமாரையும் தேங்காய் சீனிவாசனையும் பார்த்து மிரண்டு போய் நின்றிருப்பார். தேங்காய் சீனிவாசனின் பார்வையிலிருக்கும் மிரட்டலும், விஜயகுமாரின் பார்வையிலிருக்கும் குற்ற உணர்ச்சியும் ஒரு புதிருக்கு விடை தேட சொல்லும் ஆர்வத்தை நமக்கு தந்து விடுகிறது.


அப்படி என்ன தான் கதை இது என்பதை தெரிந்து கொள்ள ஆவல் கொண்டவன், இந்தப் படத்தின் பெயரை பார்த்து கதை இப்படியானதாக தானிருக்கும் என்று ஓரளவு அனுமானத்திற்கு வத்திருந்தேன். இந்தப்படத்தின் கதை வசனகர்த்தா மறைந்த திரு. பஞ்சு அருணாசலம் அவர்கள் என்றவுடன் இப் படத்தை பார்த்தே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு வந்ததுடன் நேற்று இந்தப் படத்தை பார்த்தும் விட்டேன்.ஓரளவு நான் அனுமானித்த ஒன்லைன் தான் என்றாலும் அதை சில பல திருப்பங்கள் மூலமும், ஒவ்வொரு கேரக்டரின் செயல்பாடுகள் மூலமும் ரசிக்கும் விதமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.

சுஜாதா தான் கதையின் மையமே. மிரட்சியும், தவிப்பும், அன்புமாக படம் முழுக்க கல்பனா கதாபாத்திரமாகி இருக்கிறார். க்ளைமாக்ஸில் வெளிப்படும் முத்துராமனின் குணாதிசயம் வாட் எ கேரக்டர் என்று சொல்ல வைத்து விடுகிறது. வில்லனாக இருந்தாலும் சொல்பேச்சு தவறாத நாணயஸ்தனாக தேங்காய் சீனிவாசன் அட சொல்ல வைக்கிறார். விஜயகுமாரின் கேரக்டரை எங்க கட் பண்ண வேண்டுமோ அங்கே கட் செய்து எந்த இடத்தில் கொண்டு வந்து சேர்க்க வேண்டுமோ சேர்த்து விறுவிறுப்பை தந்திருக்கிறார்கள். முத்துராமனுக்கு அக்காவாக டாக்டராக வரும் எம்.என் ராஜம், தோழியாக வரும் ஜெயலட்சுமி, அன்பான அப்பாவாக கண்டிப்பை குரலில் காட்டாமல் வார்த்தைகளில் காட்டும் அசோகன், என்று சக கதாபாத்திரங்களை உருவாக்கியிருக்கும் விதம் படத்திற்கு பெரிய பிளஸ்.

வசனத்திற்கு உதாரணமாக ஓரு காட்சியை சொல்கிறேன். சுஜாதாவின் பழைய காதலன் விஜயகுமார் அவருக்கு தன்னால் தொந்தரவு இருக்க கூடாது என்று வேலையை விட்டு செல்ல முயற்சிக்க, கணவன் முத்துராமன் தடுத்து வேலையில் தொடர்ந்து இருக்க வைத்து விடுவார். கணவனின் இந்த முடிவை எதிர்பாராத சுஜாதா தத்தளிக்க, என்னாச்சு என்று முத்துராமன் கேட்பார். அதற்கு சுஜாதா சொல்வார். "தூசி எவ்வளவு துடைச்சாலும் போக மாட்டேங்குதுங்க"
படத்தின் ஆரம்ப காட்சிகளை விட, சுஜாதா பிரச்னையில் சிக்கி கொண்ட பின் தான் சுவாரஸ்யம் வந்து அவரோடு நம்மையும் சேர்த்து மிரள வைக்கிறது.

சில படங்களின் பாடல்கள் கேட்கும் போதோ காட்சிகள் பார்க்கும் போதோ படம் பார்க்கும் ஆர்வம் வரும். அந்த ஆர்வத்துக்கு தீனி போட முடியாத படி சில படங்கள் ஏமாற்றத்தை தந்து விடுவதுண்டு. ஆனால் இந்த படம் நாம் எதிர்பார்த்ததை விட ஆச்சரியமளிக்கும் ஒன்றாகவே அமைந்திருக்கிறது.
 படம் : மயங்குகிறாள் ஒரு மாது.
படத்தில் வரும் இன்னொரு இனிமையான பாடல்
வர வேண்டும் வாழ்க்கையில் வசந்தம்....
இசை விஜய பாஸ்கர்
இயக்கம் எஸ்.பி.முத்துராமன்.
படம் வெளியான ஆண்டு 1975


ஆர்.வி.சரவணன் 


செவ்வாய், ஏப்ரல் 04, 2017

ஊடல்




ஊடல்
(சிறுகதை) 

நந்தகோபால் மனைவி வித்யாவுடன் நடந்த சண்டையில் ரொம்பவே காயப்பட்டிருந்தான். இவ நம்ம மேல பாசமா இருக்காளா இல்லியானு தெரியலியே என்று நொந்து போனவானாய் வீட்டை விட்டு வெளியேறியவன், எங்கியாவது கண்காணாத இடத்துக்கு ரெண்டு நாள் போய் சுத்திட்டு மனசு ரிலாக்சான பின் வரணும் என்று நினைத்த படி  மனைவியிடம் சொல்லாமலே ஊட்டிக்கு பயணமானான். இருந்தும் பிள்ளைகள் தவிப்பார்களே என்ற தயக்கம் வரவே வாட்ஸ் அப்பில் பையன் செல் போனுக்கு மெசேஜ் அனுப்பினான்.

இரண்டு நாளில் வந்து விடுவேன். ஆகவே என்னை தேட வேண்டாம். அம்மாவிடம் மட்டும் இதை சொல்லாதே அவள் தவிக்கட்டும் 

ஒகே  என்று ரிப்ளை வரவும் நிம்மதியுடன் ஊட்டி போய் இறங்கினான்.  நிம்மதி சில மணி தேரங்கள் மட்டுமே இருந்தது. அதற்கு பின் மனைவி பிள்ளைகளை விட்டு வந்தது ஒரு குற்ற உணர்வாகவே இருந்தது. அந்த உணர்வு எப்ப வீட்டுக்கு போவோம் என்ற நிலைக்கு கொண்டு வந்து வீட்டிலேயே விட்டு விட்டது. "எங்க போனீங்க?" மனைவி தவித்த படி கேட்பாள் என்று எதிர்பார்த்த வனுக்கு மிகுந்த ஏமாற்றம். 

வித்யா வேலைக்கு போய் விட்டு வரும் நந்த கோபாலை எதிர்பார்ப்பது போலவே இயல்பாக இருந்தாள். பையனுக்கு விசயம் தெரியும்  பொண்ணுகிட்டயும் பையன் சொல்லி வைத்திருக்கலாம். ஆகவே இருவரும் பதட்டமாகலே. ஆனா இவ பதட்டப்படவே இல்லியே.  என்ன மனுஷி இவள் என்று கடுப்பானவன் அவளிடமே இதை கேட்டான்.

"ரெண்டு நாளா புருஷன் வரலியே? என்ன ஏதுனு பதட்டமே இல்லியா உனக்கு"

"ரெண்டு நாளைக்கு அப்புறமும் நீங்க வரலைனா தான் பதட்டம் வந்திருக்கும்.இந்த உலகத்தையே புரட்டியிருப்பேன்"

வித்யா இப்படி பதிலளிக்கவும், பையன் சொல்லிட்டான் போலிருக்கு என்று நினைத்த படி கோபமாய் பையனின் பக்கம் திரும்பினான். பையன் பொண்ணு இருவரும்  "ஹாய் டாட்" என்றார்கள். சிரித்தபடி 

நந்த கோபால் முறைக்க ஆரம்பிக்கவும்,

வித்யா குறும்பாக சிரித்த படி சொன்னாள்.

" முறைக்காதீங்க. பையன் வாட்ஸ் அப் நம்பருக்கு அனுப்ப வேண்டிய மெசேஜை கோபத்துல எனக்கு அனுப்பிச்சுட்டீங்க."

ஆர்.வி.சரவணன்