ஞாயிறு, மே 19, 2013

ஸ்வீட் காரம் காபி - 19-05-2013








ஸ்வீட் காரம் காபி
-----------------------------------------19-05-2013
(சூது கவ்வினாலும் எதிர் நீச்சலிடு) 


சூது கவ்வும்

நான் ஸ்டாப் காமெடி படம் இது. விமர்சனம் எதையும் படிக்காமல் 
படம் பார்க்க போனதால் படம் பார்க்க நல்ல சுவாரஸ்யமா இருந்துச்சு.
ஆள் கடத்தலை சீரியஸா பார்த்திருக்கோம். இதிலே அதையே நகைச்சுவையா ரூட் போட்டு பண்ணிருக்கார் நலன் குமரசாமி. 
விஜய் சேதுபதி வேலையில்லாத மூன்று  நண்பர்களுடன்  சேர்ந்து 
ஆள் கடத்தி பணம்சம்பாதிக்கிறார்.மந்திரியின் மகனை கடத்தும் போது 
வரும்   சுவாரசிய கலாட்டாக்கள் தான் கதை.விஜய் சேதுபதி கடத்தப்பட்ட பெண்ணின் தந்தையிடம் பணம் வாங்கி கொண்டு நடந்து வரும் இடம் , எம்.எஸ்.பாஸ்கர் மனைவி கணவன் அடிப்பதை கண்டு பயந்து அலறுவது போல் நடித்து, உள்ளே வந்து கதவை தாழ்ப்பாள் போட்டு விட்டு இம்சை நீ சாப்பாடை  போடு என்று சாதாரணமாக  சொல்லும் இடம்.  என்று படம் நெடுக நாம் ரசிக்க காட்சிகள் இருக்கிறது. அதே போல் வசனமும் அங்கங்கே பளீரிட்டு நம்மை சிரிக்க வைக்கிறது ."டெய்லி 18 டி குடிக்கிறவனை கடத்த பிளான்  தேவையில்லை ஒரு டீ கடை போட்டா போதும்"  இது ஒரு சாம்பிள் ஹீரோயின் இருக்கு ஆனால் இல்லை என்பது போல் செய்திருக்கும் இயக்குனரின் புத்திசாலிதனம் பளிச்சிடுகிறது.  சந்தோஷ் நாராயண் இசையில் துட்டு மணி..... பாடல் பார்க்கும் போது  நமக்கே ஆடலாம் போல தோணுது. மந்திரி மகன் கடத்தலை எப்படி போலீஸ் கண்டு பிடிக்கவில்லை.

தவறுகளை நியாயபடுத்தும் விதமான கதை இதெல்லாம் மைனஸ் 
என்றாலும் அதையெல்லாம்  தூர வைத்து விட்டு நம்மை ரசிக்க வைத்திருக்கிறது, ஒவ்வொரு காட்சியையும் கேரக்டரையும் கவனம் 
எடுத்து செய்திருக்கும் இயக்குனரின் சாமர்த்தியம்.
(மனசை அள்ளும்  இந்த சூது கவ்வும் )  








எதிர் நீச்சல்

 ஹீரோ  பெற்றோர் வைத்த பெயரை   மாற்றி கொண்டு புது பேரில் வெற்றி பெற ஆசைப்பட்டு வெற்றி பெற்று மீண்டும் தன் பெற்றோர் வைத்த பெயரால் அழைக்கபடுவதை விரும்புவதே கதை. ஹீரோ  சிவ கார்த்திகேயன் தன் பெயரால் அவர் படும்  அவஸ்தை காதல் லட்சியம் என்று அவரது கேரக்டரை ரசிக்க முடிகிறது.பிரியா ஆனந்த் பள்ளி ஆசிரியையாக புடவையிலும்  சுடிதாரிலும்  பார்க்கும் போது மனசை அள்ளுகிறார். இடைவேளைக்கு பின் கதை வேறு உலகத்தில் பயணிப்பதால் முதல் பாதியின் டெம்போ குறைந்தார் போல் ஆகி விடுகிறது. விளையாட்டு வீராங்கனை நந்திதாவுக்காக பழி வாங்க புறப்பட்ட மாதிரி இருக்கிறது 

இதற்கு பதில் இப்படி செய்திருக்கலாம். படம் ஆரம்பிக்கும் போது சிவ கார்த்திகேயன் நந்திதா  விடம்   பயிற்சி பெற வர,  அவர் எதற்காக நீ பயிற்சி பெறுகிறாய் என்று கேட்க சிவா என் புது பெயரில் அறியப்பட ஆசைபடுகிறேன் என்று சொல்ல பெற்றோர் வச்ச பெயர்லயே என்னாலே விண் பண்ண முடியல நீ அப்பா அம்மா வைக்காத புது பெயர் மாற்றி என்ன சாதிக்க 
போறே என்று சொல்லி தன் கதையை அவர் சொல்ல பின்பு சிவா 
தன் கதையை சொல்வதாக அமைத்து பின் ஜெயிக்கும் கட்சிகளை வைத்திருக்கலாம். பாடல்களில் அனிருத்தின் இசையில் , பூமி என்னை சுத்துதே பாடல் நம் காதுகளை சுற்றுகிறது.தனுஷ் வரும் பாடல் வாழை இலை போட்டு பரிமாறிய சைவ சாப்பாட்டில் முட்டை ஆம்லேட் வைத்ததை போன்று தோன்றுகிறது.பள்ளி கூட காட்சிகள்,மாரத்தான் பயிற்சி காட்சிகள்,  நண்பர் கல்யாணத்தில்  நடக்கும் கலாட்டா , ஹீரோவின் நண்பராக வரும் சதீஷ் அடிக்கும் வசனங்கள் என்று படம் முழுவதும் நம்மை ஈர்க்க வைத்திருக்கிறார் இயக்குனர் துரை  செந்தில்குமார் 
(சுவாரஸ்ய நீச்சல்)

------


சரிதாயணம் 



வலைபதிவர் நண்பர்  பால கணேஷ் அவர்கள்,  தனது மின்னல் வரிகள் தளத்தில் எழுதி  புத்தகமாக  வெளியிட்ட சரிதாயணம் நூல் படித்தேன். 
எனக்கு  நகைச்சுவையாக எல்லாம் எழுத வராது.ஆனால் நகைச்சுவையாக எழுதப்படும் கதைகளை  விரும்பி படிப்பேன். அந்த வகையில் நான் 
விரும்பி படிப்பது பால கணேஷ் எழுத்துக்களை.   இந்த  புத்தகத்தில் 
வரிகளின் இடையிடையே மின்னலாய் வெளிப்படும் நகைச்சுவை  நம் முகத்தில் புன்னகையை பளீரிட வைக்கிறது. 

அகலவாக்கில் வளர மறந்து நீளவாக்கில் வளர்ந்திருந்த  அந்த பெண் நீளவாக்கில் வளர மறந்து அகலவாக்கில் வளர்ந்திருந்த சரிதாவை ஏக்கமாக பார்த்து பார்த்து பெருமூச்சு   விட்டாள்,  சரிதா   குறைவு குறைவு  என்று (அதாங்க லோ லோன்னு ) அலறினாள்,     நான் பொறுமை இழந்து கடுங்கோபம் கொண்டதன் விளைவு முன் மண்டை வீங்கி விட்டது அவளுக்கல்ல எனக்கு சுவரில் மடல் மடேலென்று முட்டி கொண்டால் பின் என்னாகும். 

இப்படி நெடுக வரும் நகைச்சுவையுடன், ஹோட்டல் லில் சரிதாவுடன் சாப்பிட செல்வது, கார் ஓட்ட கற்று கொள்வது, செந்தமிழ் கற்று கொள்வது, நண்பன் குடும்ப வாண்டுகளால் வீட்டில் படும் அவஸ்தை  பகுதிகளை விரும்பி ரசித்தேன். எழுத்தாளர் திரு பட்டுகோட்டை பிரபாகர்  மதிப்புரையில்
வெளி வந்திருக்கிறது இந்த புத்தகம்.  பால கணேஷ் சார் ஒரு கண்டிப்பான வேண்டுகோள் .(சரிதாயணம் தொடர்ந்து எழுதியாகணும்)

------

எனது நண்பரின் நண்பர் ( நமக்கும் நண்பர் தானே)  திரு. ராம் கிருஷ்ணா கடலூரில் வசிக்கிறார். அவர் எடுத்திருக்கும் குறும் படம்  காண நேர்ந்தது. தொழில் நுட்ப வசதிகள் குறைவாய் இருந்த போதும் படம் எடுத்திருக்கும் 
அந்த குழுவினரின்  முயற்சியை  போன் செய்து பாராட்டினேன்.  அதற்கு 
அவர் அடைந்த  சந்தோஷம்  பார்த்து எனக்கே ஆச்சரியமாகி விட்டது.
அவரது கண் மற்றும்  சட்டம் தன் கடமையை செய்யும் குறும் படங்களை 
இங்கே பகிர்ந்திருக்கிறேன். ஸ்டோரி லைன், சீன்கள், மற்றும் பின்னணி இசை நன்றாக இருந்தாலும் ப்ரெசென்ட் பண்ணிய விதத்தில் இன்னும் கொஞ்சம் மெனகெட்டிருக்கலாம். நடிப்பு இன்னும் இயல்பாக இருந்திருக்க வேண்டும்   அதனாலென்ன. குழந்தை நடக்க தொடங்கிய புதிதில் தத்தக்க புத்தக்க என்று நடந்தாலும் அதுவே  அழகு தானே. நண்பர்களே நீங்கள் பார்த்து அவரை ஊக்கபடுத்துங்கள்.(வாழ்த்துக்கள் ராம் கிருஷ்ணா)


சட்டம் தன் கடமையை செய்யும்



கண்


------

  சென்ற வார குமுதத்தில் கோவை மாநகர கமிஷனர் 
திரு.ஏ.கே.விஸ்வநாதன் பற்றிய செய்தி படித்தேன். அதை இங்கே குறிப்பிடுகிறேன். காவல் துறையை சேர்ந்த ஒரு சாதாரண காவலர் குடிபோதையில் சிக்னலுக்காக காத்திருந்த இளம் பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட, அந்த செய்தி பரபரப்பானது. விசாரிக்கிறோம் கமிசன் அமைக்கிறோம் என்றெல்லாம் சொல்லாமல், அந்த பெண்ணின் வீட்டுக்கு நேரில் சென்று தன் துறை சார்ந்த ஒருவரின் செயலுக்கு வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டிருக்கிறார் கமிஷனர். மேலும் சமீபத்தில் கோவையில் நடந்த தீ விபத்தில் துணிச்சலாக செயல்பட்டு பலரது உயிரை காப்பாற்றிய இளைனர்களை போலீசார் சார்பில் முதலில் அழைத்து கௌரவித்துள்ளார். இது பற்றி அவர் குறிப்பிடுகையில், எங்கே எது நடந்தாலும் பாராட்டுவதும் உற்சாகபடுத்துவது   காவல் துறையின் கடமை என்கிறார்.   காவல் துறை என்றாலே ஒரு பயம் தோன்றுவது இயற்கை. அதை போக்கும் விதத்தில் செயலாற்றும் கமிஷனர்  காவல் துறை உங்கள் நண்பன் என்ற  வார்த்தைகளுக்கு தனி அர்த்தம்  தருகிறார் 
( கிரேட் சலுட் சார்)

------

செய்திகள் சில வரிகளில்

நடிகை ஹன்சிகா 22 குழந்தைகளை தத்தெடுத்து படிக்க வைப்பதோடு மட்டுமில்லாமல் அவர்களுக்கு தேவையான அணைத்து செலவுகளையும் அவரே ஏற்றிருக்கிறார்.

நல்ல மனம் வாழ்க  நாடு போற்ற வாழ்க  

விஜய் ஏ.ஆர்.முருகதாஸ் மீண்டும் இணையும் புதுப்படம்

புல்லட் னு பேர் வைப்பாங்களோ

மக்களின் நலன் கருதி எங்கள் போராட்டத்தை கை விடுகிறோம் வாட்டர் கேன்  உற்பத்தியாளர்கள் 

அதே போல் மக்கள் நலனை  கருத்தில் கொண்டு தண்ணீரையும்  
பசுமை தீர்ப்பாயம் சொல்வது போல் தரமாய் தாருங்கள் 


ஒரு மரம் கூட இல்லாத சிறையில் என்னை அடைத்தார்கள் -ராமதாஸ் 

மரங்கள் தள்ளி நின்றனவோ 

  ------

FAINAL PUNCH 


நீ உடலில் அணியும் உடையை விட மேலானது 
முகத்தில் அணியும் மலர்ச்சி

  
ஆர்.வி.சரவணன் 


புதன், மே 08, 2013

ஆங்கிலமே அருகில் வா....









ஆங்கிலமே அருகில் வா....


(இத்தனை நாளா நம்ம ப்ளாக் ல தொடர்கதை எழுதினதாலே, வேற எதை பத்தியும் 
எழுத முடியல. இதோ ஒரு அனுபவ பதிவு) 


ஆங்கிலேயர்கள் நமக்கு சுதந்திரம் கொடுத்துட்டு போறப்ப இங்கிலீஷை  மட்டும் ஏன் விட்டுட்டு போனாங்க அதையும் எடுத்துட்டு போக வேண்டியது  தானே. இப்படி தான் நான் ஸ்கூல் படிக்கிறப்ப நண்பர்களிடம்  கடுப்படிப்பேன் . தமிழ் மீடியம் படிச்சதாலே இங்கிலீஷ் எனக்கு அவ்வளவா வராது.  நான் இருக்கிற இடத்திலிருந்து  ஒரு அஞ்சு கிலோ  மீட்டர் தூரம் வரைக்கும் எனக்கும் அதுக்கும் DISTANSE  உண்டுன்னா பார்த்துக்கங்க. ENGLISH  பாடத்துல மார்க் கம்மியா  இருக்கிறதை பார்த்து ஏன் உனக்கு இங்க்லீஷ் வரலே னு  வீட்டில் என்னை அடி பின்னிடுவாங்க நான் தான் வராதுங்கிறேன்ல  அதை ஏன் வர வச்சி பார்க்கணும் னு ஆசைபடறீங்க னு நான் புலம்பாத குறை தான் 

ஆங்கில பாடத்தில் ESSAY  எப்படி படிப்பேன் தெரியுமா. அதில் உள்ள   மீனிங் சுத்தமா புரியாம அப்படியே மனப்பாடம் பண்ணுவேன் . முதல் வரி ஆரம்பிச்சா கடைசி வரி வரைக்கும் சொல்ற மாதிரி நெட்டுரு போடுவேன்.நடுவிலே ஏதோ தடங்கல் வந்துச்சின்னா மறுபடியும் முதல்லேருந்தா கதை தான். காலேஜ் லே நான் அரியர்ஸ் வச்சது  கூட ஆங்கிலத்தில் தான்.   இப்படியே போயிட்டிருக்குமா வாழ்க்கை. படிப்பு முடிஞ்சு நான் சென்னை வந்தப்ப தான் தெரிஞ்சுது   ஆங்கிலத்தின்  சக்தி என்னனு 

வேலைக்கு செல்லும் இடங்களில் அப்ளிகேசன் கேட்கும் போது நான் ஏற்கனவே தயாராய் வைத்திருக்கும் மாடல் பார்த்து அப்படியே எழுதி கொடுப்பேன். ஒரு இடத்தில   டேபிள்க்கு கீழே வச்சி நான் எழுதி கொடுத்ததை அங்கிருந்த லேடி ரிசெப்சனிஸ்ட்  பார்த்துட்டு,  நான் வேலையில்  சேர்ந்த பின்னாடி என் கிட்டே சொல்லி கேலி  பண்ணாங்க 

ஒரு இடத்தில APPLICATION கேட்கிறப்ப நான் அது மாதிரி எழுதலாம்னு நினைச்சா மாடல் பேப்பர் வெளியிலே எடுக்க முடியலை.  காரணம் அந்த  கம்பெனி யின் முதலாளி என் எதிரிலேயே அமர்ந்திருந்து  எழுதி கொடு னு  சொன்னார். எப்படி காப்பி அடிச்சு எழுத முடியும்.  SO நான்  சொந்தமா எழுதி கொடுத்தேன்.அதை பார்த்துட்டு அவர் நீ இங்க்லீஷ் லே ரொம்ப வீக் போலிருக்கே  என்றார். ஆமாம்  சார் என்றேன் பரிதாபமாய் . FIRST IMPRESSION IS A BEST IMPRESSION னு  சொல்வாங்க முதல் சந்திப்பிலேயே என் ஆங்கிலம் பற்றி அவருக்கு தெரிந்து விட்டதால் அதற்கு பிறகு நான் என்ன தான் வேலைகளில் சுறுசுறுப்பு காட்டி வேலை செய்து வெற்றி பெற்றாலும் மற்றவர்களை விட எல்லா விதத்திலும் நான்    முன்னணியில் இருந்தாலும் அதெல்லாம் பெரிய விசயமாகவே தோன்றவில்லை முதலாளிக்கு 

 நான் ஆங்கில பேப்பரில்  எனக்கு பிடித்த சினிமா நியூஸ் அதிகமாக படிப்பேன். தொடர்ந்து படித்ததால் கொஞ்சம் நல்ல ரிசல்ட் கிடைத்தது. அதாவது வருகின்ற லெட்டர் படித்து புரிந்து கொள்ளவும் ஆங்கிலத்தில்  பேசுபவர்கள் சொல்வதை  புரிந்து கொள்ளவும் முடிந்தது.இப்போது வேலை  பார்க்கும் நிறுவனத்தில் நான் ஒரு DEPARTMENT ஹெட் அதற்கு தேவையான லெட்டர்ஸ் ரெடி செய்ய நான் லெட்டர் அடிப்பவருக்கு  தமிழில் டிக்டேட் செய்வேன் அவர் அடித்து தருவதில் இந்த இடத்தில பொருள் சரியாக வரவில்லை இன்னும் சரியாக வர  வேண்டும் என்று திருத்தும் அளவுக்கு புலமை வந்து விட்டது
(இப்போது இடைவெளி  மூன்று கிலோ மீட்டர் ) 

இருந்தும் ஆங்கிலத்தில் பேச வேண்டுமென்றால்  நான் அடுத்தவரை நாடும் அளவுக்கு தான் இருக்கிறது   நிலைமை. ஆங்கிலம் மட்டுமே தெரிந்த நபர் என்னுடன் போனில் உரையாடும் போது அவர் கூறுவதை கேட்டு விட்டு நான் அதற்கு பதிலை என் உதவியாளருக்கு அல்லது  சக ஊழியருக்கு தமிழில் சொல்வேன். அவர் அதை ஆங்கிலத்தில்  போனில் மொழி பெயர்ப்பார் இப்படி தான் பொழுது சென்று கொண்டிருக்கிறது(இடைவெளி இரண்டு கிலோ மீட்டர் )


உனது கற்பனை திறனுக்கு ஆங்கிலத்தில் நீ CORRESPONDANCE லெட்டர்ஸ்  சூப்பரா  ரெடி பண்ணலாம் என்று ஊக்கமளிக்கிறார்கள் அலுவலக நண்பர்கள் எல்லாரும் .அப்படி நான் முயற்சித்து ஆங்கிலத்தில் புலமை பெற்றால் கண்டிப்பாக என்னால் கூடுதலாக சம்பளம்  கேட்டு  பெற  முடியும் 

இருந்தும் என்ன செய்ய , இங்கிலீஷ் பேப்பரை வைத்து கொண்டு படிக்க ஆரம்பித்தால் நாலு வார்த்தைக்கு மேல் கடினமான வரிகள் வரும் போது நான் டிக்சனரி கையில் எடுப்பதற்கு பதிலாக சலிப்பை கையில் எடுத்து கொண்டு பேப்பரை தள்ளி வைத்து விடுகிறேன் 


பல இடங்களில் ஆங்கிலம் தெரியாமல்  நான் விழித்ததுண்டு. இருந்தாலும் ஆரம்பத்திலேயே சொல்லி விடுவேன் எனக்கு ஆங்கிலம் வராது என்று இதற்காக வேட்கபடுவதில்லை.(தெரியாததை தெரியும் னு சொல்றதுக்கு தானே வெட்கப்படணும்.) அலுவலக வேலையாக  டெல்லி பாம்பே என்று பல இடங்களுக்கு   செல்லும் போதும் விமானத்தில் சென்ற போதும் ஆங்கிலம் தெரியாமல் நான் பட்ட பாடு இங்க்லீஷ் விங்க்ளிஷ் ஸ்ரீதேவி போல் தான் 

   
வீட்டில்,  நீங்க முயற்சி செய்தால் நல்லா பேச முடியும். ஆனால் நீங்க  அக்கறை எடுக்க மாட்டேங்கறீங்க என்று சொல்கிறார்கள். எனக்கு கூட ஆங்கிலம்  மிக  அருகில்  இருப்பதாக ஒரு பீலிங்  இருந்து கொண்டிருந்தாலும், பேசவோ எழுதவோ இன்னும் தயங்கி கொண்டு தானிருக்கிறேன் 
   
FINAL PUNCH 

செல் போன் க்கு ரீசார்ஜ் பண்ணுவோமே. அது போல் ஆங்கிலத்தை அப்படியே 
மூளைக்குள் சார்ஜ் பண்ற மாதிரி எதுனா இருக்கா சொல்லுங்களேன் 

ஆர்.வி.சரவணன்

(பதிவில் இங்கிலீஷ் விங்க்ளிஷ் படம் பற்றி ரெண்டு வார்த்தை சொன்னதால்   
அந்த படம் போட்டிருக்கேன்)  


ஞாயிறு, மே 05, 2013

இளமை எழுதும் கவிதை நீ-30






இளமை எழுதும் கவிதை நீ-30

உன் வெற்றியை நானும் என் வெற்றியை நீயும் கொண்டாடியது போதும் 
வா நம் வெற்றியை உலகம்  கொண்டாடட்டும் 


ராஜேஷ்குமாருக்கு சொந்தமான கிருஷ்ணா மருத்துவமனை, அந்த அதிகாலை வேலையிலும் சுறுசுறுப்பாய் பதற்றம் தொற்றிய படி இருந்தது. மருத்துவமனையின் உள்ளே ஆட்கள் பரபரப்பாய் அங்குமிங்கும் அலைந்து கொண்டிருக்க  சிவா அம்மா காயத்ரி கத்தி கொண்டிருந்தார்

"ஒழுங்கா இருந்த என் பிள்ளையை ஒழுங்கு படுத்தறேன் னு வீட்டை
விட்டு    வெளில அனுப்பிச்சு இப்படி சீரழிச்சுகொண்டாந்து  ஆஸ்பத்திரியில் போட்டுட்டீங்க.  இப்ப உங்களுக்கு திருப்தி தானே .  நம்ம குடும்பத்துக்கு நேர்மை நாணயம்  மட்டும் இருந்தா போதும். குழந்தைங்க எல்லாம்
தேவையா என்ன. கோடி கோடியா ஏமாத்தி சம்பாதிச்சு குடும்பத்தோட சௌக்கியமா இருக்கிறவங்களை பார்த்து சந்தோசபட்டுக்குவோம் "

ராஜேஷ்குமார் இதற்கு மௌனமே பதிலாய் அமர்ந்திருக்க, சிவகுமார் அதட்டினார்

"அக்கா சும்மாருக்க மாட்டீங்களா அவரே உருகுலைஞ்சு  போய் உட்கார்ந்திருக்கார். நீங்க ளும் வெந்த புண்ணிலே  வேல்  பாய்ச்சின
மாதிரி பேசறீங்களே"

"என்னாலே முடிலயலடா. அப்படி என்ன  தப்பு செஞ்சிட்டான் என் பையன்.  எந்த புள்ளைடா அப்பா அம்மா பேச்சை கேட்டு ஒழுங்கா இருந்திருக்கு. என் பையன் சிவாவினால் யாராவது கெட்டு போயிட்டாங்க னு சொல்லு. இப்பவே அவனை தலை முளுகிடறேன் "

" எல்லாரும் பார்க்கிறாங்க" கீதாவின் அம்மா 

"பார்க்கட்டுமே.  நம்ம கிட்டே வேலை பார்க்கிறவங்களும் நம்ம குடும்பம் தான்  ஒன்னும் ஒளிவு மறைவு தேவையில்ல"

"பத்திரிகை காரங்க இருக்காங்க"

"இருக்கட்டும். என் பிள்ளையை பத்தி அப்ப எழுதினாங்க இல்ல. இப்ப இந்த தாயோட வேதனையை பத்தியும்  எழுதட்டும்"

என்று ஆவேசமாய் சொன்னவர், தன் கணவனிடம் திரும்பி 

"இங்க பாருங்க சிவாவுக்கு  எதுனா ஆச்சு என்னையும் சேர்த்து நீங்க மறந்துடுங்க " என்று அழ ராஜேஷ்குமார் தன் மனைவியின் தோள் பற்றி
ஆசுவாச படுத்த முயன்றார்.

 கார்த்திக் சுழல் சேரில் அமர்ந்த படி ஜன்னலின் வழியே தெரிந்த வெளியுலகத்தை பித்து பிடித்தவன் போல் சேரை  இப்படியும் அப்படியும் அசைத்த படியே  பார்த்து கொண்டிருந்தான். 

" நீங்க இப்படி இருக்கிறதை பார்த்தா பயமா  இருக்கு" கீதா

"எனக்கும் பயமா தான் இருக்கு கீதா. சிவா இல்லாத என் உலகம் எப்படி இருக்கும் னு  நினைச்சா " அவனது பேச்சுக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நின்றாள் கீதா

அருள்  விவரங்கள் கேட்கும் சிவகுமாருக்கு செல் போனில் கேட்டு பதில் சொன்ன படி இருந்தான். பரபரப்பாய் உள்ளே வந்தான் பாலு

"அருள் சுரேஷ் மேல கொலை கேஸ் பதிவாகியிருக்கு.சிவாவுக்கும் சுரேஷ் க்கும் இருந்த முன் பகை கத்தி குத்துல வந்து முடிஞ்சிருச்சு  னு  எழுதிருக்காங்க. உமா பேரை எங்கேயும் சேர்க்கல" பாலு படபடப்பாய் சொல்ல அருகிலிருந்த மணி எகிறினான்

"ஏன்டா சேர்க்கலை. சேர்த்தால் தாண்டா உமாவை காப்பாத்த சிவா சண்டை போட்டான் னு எல்லாருக்கும் உண்மை தெரியும். இல்லேன்னா வெட்டியா  அடிச்சிகிட்டாங்க னு நினைச்சிப்பாங்க"

"நீ சொல்றது சரி  மணி. ஆனா, உமா பேரை கொண்டு வந்தால்  கண்ட படி எழுதுவாங்க பேசுவாங்கனு தான் சிவா அப்பா தடுத்துட்டார்" அருள்

"ஆமா பெண் யாருக்கு என்ற தகராறில் வாலிபருக்கு கத்தி குத்துனு நியூஸ் வந்துரும்" பாலு 

"நீ சொல்றது சரி ஆனால்,அவனும் அடிச்சான் இவனும் அடிச்சான் சரியாய் போயிடுச்சு னு சொல்லி கேசை க்ளோஸ்  பண்ணிட போறாங்க. கேட்டா   அரசியல்ல இதெல்லாம் சகஜம் னு வேற சொல்லிப்பாங்க. அப்படி அவன் மட்டும் தப்பிச்சு வெளில வந்தான்  நானே கொன்னுடுவேன்"

" சிவா அப்பா, சுரேஷ் அப்பா கிட்டே ஸ்ட்ரிக்டா பேசிட்டார். உன் பையன் என் பையனை பண்ண டார்ச்சருக்கு ரெகார்ட்ஸ் இருக்கு. அதை வச்சி உன் பையனை வாழ்நாள்  முழுக்க ஜெயில்ல போட முடியும். பட் சுரேஷும் என் ஸ்டுடென்ட் அவன் வாழ்க்கை வீனா போறதில எனக்கு உடன்பாடில்லை சோ நாங்க மன்னிச்சு விட தயாரா இருக்கோம். அவரும் கையெடுத்து கும்பிட்டு ஒத்துகிட்டார் "

இப்படி பேசி கொண்டிருக்கையில் உள்ளே வந்தார்கள் உமாவின் அம்மாவும்
அப்பாவும். இருவரும்  ராஜேஷ்குமாரிடம் சென்று

"எங்க பொண்ணுக்காக நீங்க எடுக்கிற அக்கறை க்கு ரொம்ப தேங்க்ஸ்" 

"ஒரு அப்பாவா எனக்கு உங்க பீலிங் உணர முடியுது"  


"பாவம் என் பெண்ணை காப்பாற்ற போய் சும்மா அடிச்சிகிட்டாங்க னு பேரோட உங்க பையன் இப்படி உயிருக்கு போராடுறதை நினைச்சா தான் வருத்தமா இருக்கு"


"அந்த பொண்ணு என்ன  பாவம் பண்ணிச்சு சொல்லுங்க.எவனோ கொழுப்பு எடுத்து ஆசைப்பட்டான் னு  அது பேர் ஏன் பாதிக்கபடணும்  என் பையன் பிழைத்தாலும் சரி பிழைக்கா விட்டாலும் சரி " என்று சொல்லும் போது அவர் மனைவி காயத்ரி அவரை முறைக்க, அதை பார்த்து கொண்டே 
"உமாவை காப்பாத்தினான் னு பேர் இருந்திட்டு போகட்டும்" என்று மெல்லிய குரலில் சொன்னார். 

உமா அம்மா சிவாவின் அம்மா அருகில் வந்து "வலங்கைமான் மாரியம்மன்  கோயில் போயிட்டு வேண்டிட்டு வந்திருக்கோம். இந்தாங்க பிரசாதம் கவலைபடாதீங்க பையன் குணமாகிடுவான்" என்று சொல்லி கொடுத்து விட்டு உமா இருந்த அறைக்குள் நுழைந்தார் 

உமா பெட்டில் படுத்திருந்தாள் அவளுக்கு உடலில் ஒரு சில
 இடங்களில் சிராய்ப்பு  காயங்கள் மட்டும் தான் ஏற்பட்டிருந்தது 
என்றாலும் காலையிலிருந்து சாப்பிடாதது மற்றும் மன உளைச்சல் காரணமாக   அவளுக்கு ரெஸ்ட் தேவை என்று தூங்க வைக்கபட்டிருந்தாள்.

"முழிச்சு எதுனா பேசினாளா" என்றார் அவள் தாய்  கவலையுடன்

 "ம் கண் முளிச்சாங்க  சிவா எப்படி இருக்கார் னு  திரும்ப திரும்ப கேட்டாங்க" 

தன் தாயின் குரல் கேட்டு கண் விழித்த உமா தன் தாயை  பார்த்தாள்


"சிவா எப்படிம்மா இருக்கார்" என்றால் பலகீனமான குரலில்

"நல்லாருக்கான் மா நீ தூங்கு"

"நான் பார்க்கணும் ப்ளீஸ்  அழைச்சிட்டு போம்மா" என்று எழுந்தாள்

"இன்னும் யாரையும் பார்க்க விடலே" அவள் அம்மா சொல்ல

"படுங்க" என்று நர்ஸ் அதட்ட

"நான் டென்சனா இருக்கிறப்ப  வாக்கிங் போவேன் ரிலாக்ஸ் பண்ணிக்க. இப்ப எனக்கு ரிலாக்ஸ் தேவை ப்ளீஸ் என்னை விடுங்க" என்று சொல்லியவாறே எழுந்து வெளி வந்தாள்.ஹாலில் இருந்த அனைவரும் அவளை பார்த்தவுடன் நலம் விசாரித்தனர்.

அனைவருக்கும்  தலையாட்டியவள் சிவா என்று கேள்விக்குறியாய் பார்க்க

"இன்னும் நல்ல கண்டிசன்க்கு  வரல னு சொல்றாங்க டெண்சனாவே இருக்கும்மா" என்று  காயத்ரி  கண்ணீருடன் சொன்னார்

"அவருக்கு ஒண்ணும் ஆகாது.இதிலிருந்து கண்டிப்பா  அவரால் மீண்டு வர  முடியும்"

என்று ஆறுதல் சொன்னவள் அந்த ஹாலில் பதற்றத்துடனே நடை போட ஆரம்பித்தாள்.அவ்வபோது சிவா இருந்த ஆபரேசன் தியேட்டர் கதவை ஏக்கமாய் பார்த்து கொண்டாள்.

அருள் அருகே வந்து 

"எப்டி இருக்கே உமா" என்றான் 

"என்னை விடு அருள், சிவா ரொம்ப பாவம் இல்ல.அவர் பழைய சிவாவா இருக்கிறப்ப நானே அவரை சபிச்சிருக்கேன்.ஆனால் இப்ப நினைச்சு பார்த்தா அவர் பழைய சிவாவா இருந்திருக்கலாமோ னு  தோணுது. நல்லவரா இருக்கிறதால் தானே இந்த கஷ்டமெல்லாம். இந்த ஏழு மாசத்துல அவர் சரியா தூங்கலை சரியா சாப்பிடல எந்த நேரமும் படிப்பு உழைப்பு னே இருந்தார்."



"பழைய சிவாவா இருந்திருந்தால் சுரேஷ் இந்நேரம் செத்துருப்பான். சிவா ஜெயிலுக்கு போயிருப்பான்.அடுத்தவங்களுக்கு  நம்மால் எதுக்கு கெடுதல் னு   நினைச்சான் இதோ குத்துயிரா  கிடக்கான்" அருள் 


"ஒவ்வொருத்தனையும் என்னமா அடிச்சார் தெரியுமா . சுரேஷ் எல்லாம் ஒரு அடி கூட அவரை அடிக்க முடியல. அதுக்குள்ள எவ்வளவு அடி அவனை தூக்கி எறிஞ்சிட்டார் தெரியுமா.ரொம்ப சந்தோசமா இருந்தார். அந்த மாதிரி அவர் ஹாப்பியா இருந்து நான் பார்த்ததே இல்ல.  ஹி இஸ்  எ ஹீரோ "  என்று சொல்லி கொண்டிருக்க

பாலு அருள் மணி ஆச்சரியத்துடன்  வாய் பிளந்து அதை கேட்டு கொண்டிருந்தார்கள்

"கொஞ்சம் ஜன்னல் பக்கம் வந்து பாரேன்" என்று அழைத்து  சென்றான் அருள் 

அங்கே மருத்துவமனை காம்பௌன்ட் உள்ளேயும் வெளியேயும் மாணவ மாணவிகள்  நிறைந்திருந்தார்கள். காம்பௌன்ட்சுவர், படிக்கட்டு, சிமெண்ட் பெஞ்ச் என்று எங்கும் அமர்ந்திருந்தார்கள்.பலர் தூங்கி கொண்டும் சிலர் விழித்த படி பேசி கொண்டும் இருந்தார்கள்

சுப்ரமண்யன்  சிவகுமாரை வெளியில் அழைத்து வர, சிவகுமார் மைக் முன் வந்து பேசினார்

"எல்லாரும் வீட்டுக்கு போங்க. நீங்க இப்படி உட்கார்ந்திருக்கிறதை பார்த்தால் எங்களுக்கு கஷ்டமா இருக்கு. சிவாவுக்கு ஒன்னும் ஆகாது நாங்க பார்த்துக்கிறோம்"

நோ நோ என்று மாணவர்களின் இரைச்சல்  சத்தம் கேட்டது

ஒரு மாணவி எழுந்து சொன்னாள்

"சார் தப்பா நினைச்சிக்கதீங்க. உங்க குடும்பம் மொத்தமும் இங்க தானே இருக்கீங்க நீங்க யாராவது வீட்டுக்கு போனீங்களா. நாங்களும் உங்க குடும்பம் தான் சார்.  கிருஷ்ணா கல்லுரி குடும்பம். எங்க குடும்பத்துல ஒருத்தர் இப்படி ஹாஸ்பிடல் ல இருக்கிறப்ப நாங்க எப்படி வீட்டுக்கு போவோம் சொல்லுங்க. டாக்டர் வந்து சிவா நல்லாருக்கான் னு  சொல்ற வரைக்கும் இருக்கிறோம் எங்களால யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது "

அனைவரும் அதை அமோதித்து குரல் எழுப்பினர்

சிவகுமார் அவர்களை பாத்து கை கூப்பி நன்றி சொல்லி விட்டு உள்ளே வந்தார்.சிலர் அங்கிருந்து ஜன்னலில் தெரிந்த உமாவை பார்த்து விட்டு எப்படி இருக்கே என்று  கத்தினார்கள். நல்லாருக்கேன் என்று கையசைத்தாள் உமா

" பழைய சிவாவா இருந்தால் இங்க யாரும் இப்படி உட்கார்ந்திருக்க  மாட்டாங்க. அவன் நல்லவனா ஏதோ கொஞ்சம் பேர் எடுத்ததால் தான் இந்த அன்போட நைட் னு கூட பார்க்காம இருக்காங்க " என்றான் அருள்

"ஹி இஸ்  எ ஜெம் " என்றால் உமா பெருமையுடன்

மீண்டும் ஹாலுக்கு வந்த சில நிமிடங்களில் கதவு திறக்க வெளியில் வந்த டாக்டரை நோக்கி படையெடுத்தனர் அனைவரும்

டாக்டர் ராஜேஷ்  குமாரிடம் "சிவா கண் முளிச்சிட்டார் சார். இப்ப பரவாயில்ல முக்கியமானவங்க மட்டும் போய் பாருங்க"என்றார்

"இங்க இருக்கிற எல்லாருமே முக்கியமானவங்க தான்" என்று பாலு சொல்ல
சினிமா தியேட்டரில் கவுன்ட்டர் திறந்தவுடன் முன்னேற முயல்பவர்கள் போல் இங்கு எல்லாரும் நுழைந்தார்கள். இவர்கள் அனைவரின் உள்ளே ஊடுருவி ப்ளீஸ் என்று சொன்னவாறே  நாலு கால் பாய்ச்சலில் ஓடும் மான் போல் முன்னே சென்றாள்  உமா சிவா இருந்த அறையை நோக்கி


சிவா இருந்த ரூமுக்குள் நுழைந்த போது, அவனை சுற்றிலும் வித வித மருத்துவ உபகரணங்கள் இருக்க,  நர்சுகள் டாக்டர்கள்  சூழ்ந்திருக்க     அவனின் முகம் கைகள் மட்டுமே வெளியே தெரியும் படி இருந்தான்  

இது வரை வேகமாய் உள்ளே வந்த உமா தான், இப்போது அந்த தரைக்கு வலித்தால் என்னாவது என்ற பயத்தில் செல்வது போல் மெதுவாக அடியெடுத்து வைத்து அருகே வந்தாள். மற்றவர்கள் இப்போது அவளுக்கு முன்னே சென்று சிவாவை மொய்த்து கொண்டனர் 


 தனியே பார்த்து பழக்கப்பட்டு பழகிய சிவா,  இப்போது எல்லோராலும் சொந்தம் கொண்டாடபடுவதை பார்க்கும் போது தான் அன்னியப்பட்டு விட்டதை போல் தோன்றியது உமாவுக்கு 

காயத்ரி ஒரு பக்கத்தில் நின்ற படி   சிவா என்று அழுத படியே அழைக்க ராஜேஷ்குமார் இன்னொரு பக்கம் நின்ற படி மகனின் தலை வருடியவர்  அவன் நெற்றியில் முத்தமிட்டார் அவர் கண்கள் கலங்க கண்ணீர் துளிகள் சில அவன் முகத்தில் பட்டன

கார்த்திக் கீதா கால் பக்கத்தில் எதிரில் நிற்க, அவர்கள் பின்னே அருள், பாலு, மணி நின்றனர்.  சிவகுமார் அவர் மனைவி ஒரு பக்கமும், உமா பெற்றோர் மற்றொரு பக்கமும் நிற்க ,உமா தன் அப்பா அம்மா வின் பின்னே நின்ற படி சிவாவை ஏக்கமுடன் பார்த்தாள். 

கண் விழித்தான் சிவா

கண் இமைகளை  சிரமப்பட்டு  பிரித்த அவன் பார்வை தன்னை சுற்றி நின்ற ஒவ்வொருவரையும் பார்த்த படியே வந்தது உமாவை பார்த்தவுடன்  அங்கேயே நின்றது

அவள் நெற்றியில் ஒரு பிளாஸ்திரி இருக்க அதை கண்ணுற்ற சிவா  அதிர்ச்சியாய் பார்க்க , உமா கண்களை மூடி திறந்து நான் நல்லாருக்கேன் என்று பார்வையாலே  பதிலளித்தாள்

"எங்களுக்கு முன்னாடி வந்துட்டு இப்ப ஏன் பின் தங்கிட்டீங்க. வாங்க  முன்னாடி" என்றனர் கார்த்திக் கீதா சிவாவின் மனசறிந்து சொல்வது போல் இருந்தது அது 

"முன்னாடி வாம்மா சிவா உன்னை பார்க்க கஷ்டப்படறான் பார்" என்று காயத்ரி சொல்ல, உமா அப்பா அம்மா விலகி வழி விட முன்னே வந்தாள் உமா

ராஜேஷ்குமார் மகன் பிழைத்த மகிழ்ச்சியில் தன் பி.ஏ விடம்,  "நம்ம கிட்டே வேலை பார்க்கிற அத்தனை பேருக்கும் ரெண்டு மாசம் போனஸ் அனௌன்ஸ் பண்றேன்.உடனே கொடுத்துடு. என் பையன் பிழைச்ச துக்கு சந்தோசப்பட்டு நான் கொடுக்கிற கிப்ட் இது " என்றார் மகனை பார்த்த படியே 

காயத்ரி இப்போது அவர் கையை பிடித்து கொண்டு தன் சந்தோசத்தை வெளிபடுத்தினார்.

டாக்டர் "போதும் எல்லாரும் கிளம்புங்க " என்று சொல்ல எல்லோரும் சிவாவை பார்த்து  கொண்டே கிளம்ப மனமில்லாமல் நகர ஆரம்பித்தனர் 

 " நாங்க எல்லாரும் வெளியில தான் இருக்கோம். நீ சரியானவுடன் தான் உன்னையும் அழைச்சிட்டு வீட்டுக்கு போவோம் எதுனா வேணும்னா எங்களை கூப்பிடு " என்றார்

சிவா மெதுவாய் தலையசைத்தான். உமா கிளம்பாமல் அப்படியே நின்று கொண்டிருந்தாள். அவள் தாய் "வாம்மா போகலாம்" என்று கூப்பிட "உமா நான் இங்கயே இருக்கேம்மா"  என்றாள்

டாக்டர் "நோ நோ கிளம்புங்க யாரும் இருக்க கூடாது உமா நீங்க முதல்ல போய் ரெஸ்ட் எடுங்க"என்றார் கண்டிப்புடன் 

சிவா  இருக்கேன் என்று சொல்பவளை  ஏன் கிளம்பு னு இவர் படுத்தறார் என்று உள்ளுக்குள் சலித்து கொண்டான் 

உமா இப்போது ராஜேஷ்குமாரிடம்  "சார் இது உங்க ஹாஸ்பிடல் தானே ஏன் இப்படி டாக்டர் விரட்டறார். நீங்க விரட்ட வேண்டாம்னு கொஞ்சம் சொல்லுங்க" என்றாள் கெஞ்சும்  குரலில்

ராஜேஷ்குமார்  "எவ்வளவு நேரம்மா நீ இருப்பே" என்றார்

உமா கொடுத்த பதில், அனைவரையும் ஆச்சரியபடுத்தியது 

பாலு சந்தோசத்துடன் அருளை கட்டி பிடித்து கொள்ள, கீதா முகத்தில் உற்சாக துள்ளலுடன் கார்த்திக்கின் தோளில் சாய்ந்து கொண்டு இருவரையும் பார்க்க கார்த்திக் தன் வலது கையை உயர்த்தி  பெருமிதத்துடன் பற்களை கடித்து  யா என்றான்

உமா நிறுத்தி நிதானமாக அழகாக உச்சரித்தாள் 

"காலம் முழுக்க அவர் கூட இருப்பேன். அவருக்கு துணையா....அவரோட துணைவியா" என்று சொல்லிய படி நாணம் முகத்தில் மின்ன சிவாவை பார்த்தாள்.சிவாவின் முகத்தில் ஒரு வெற்றியை தொட்ட திருப்தி இருந்தது 


அவன் வலது கை விரல்கள் மெதுவாக அருகே நின்று பெட்டில் வைத்திருந்த  உமாவின் கை விரல்களை ஆசையுடன் பற்றி கொண்டது. சிவாவின் விரல்கள் தந்த அழுத்தத்திற்கு, உமா  தந்த பதில் அழுத்தம் அவர்களின் அழுத்தமான காதலை அங்கிருந்தோருக்கு உணர்த்தின.

நிறைந்தது


ஓவியம் : மணியம் செல்வன் (ஆனந்தவிகடன் )

                                                          ******


நான் பதிமூன்று வயதில் முதலில் சிறு கதை எழுதிய போது அதை 
பாராட்டி எல்லோரிடமும் சொல்லி பெருமைப்பட்ட என் தாத்தா 
திரு .முத்து கிருஷ்ணன் அவர்களுக்கு இந்த கதை சமர்ப்பணம் 

                                                         ******                                                         

முடிவுரை 

என்னுள் இருபத்தைந்து வருடங்களாக இருந்த இந்த கதையை  எழுத்துக்களில் பார்க்கும் பரவசம் எனக்கு கிடைத்திருக்கிறது.

அதற்கு ஊக்கம் தந்த என் அலுவலக நண்பர்களுக்கும், கண்டிப்பாக எழுதுங்கள் என்று சொல்லி  இதோ இந்த அத்தியாயம் வரை ஊக்கபடுத்திய வலைபதிவர் நண்பர் (கரை சேரா அலை) அரசன், அடுத்த அத்தியாயம் எப்போது என்று போனிலும் கருத்துரையிலும் கேட்டு உற்சாகபடுத்திய ( நிசாம் பக்கம் பல்சுவை பக்கம்) நிசாமுதீன் , தன் கருத்துக்களால் எனை அடுத்த அத்தியாயம் நோக்கி செல்ல வைத்த நண்பர் (கிரி ப்ளாக்) கிரி,மற்றும் (திடங்கொண்டு போராடு ) சீனு,  பாலா பக்கங்கள் பாலா,மனசு குமார்,   படங்கள் வரைந்து தந்த,படித்து வந்த இணைய தோழிகள் மற்ற ஏனைய நண்பர்கள்  அனைவருக்கும் என் இதயம் நிறைந்த நன்றி 

எப்போதும் நான் முணுமுணுக்கும் ஒரு பாடலின் வரிகள் இங்கே 

நன்றி மறவாத நல்ல மனம் போதும் 
என்றும் அதுவே என் மூலதனமாகும் 

ஆர்.வி.சரவணன்

சனி, ஏப்ரல் 27, 2013

இளமை எழுதும் கவிதை நீ-29




இளமை எழுதும் கவிதை நீ-29


தூண்டிலில் மீன்கள் மாட்டுவது அதிசயமல்ல உன் விழி மீன்களில் 
தூண்டிலாய் நான் மாட்டினேன்  இதுவே அதிசயம் 
      

சிவா மேக்கப் கலைத்து விட்டு வெளி வந்த போது அருளும் பாலுவும் பிடித்து கொண்டார்கள்

 "கலக்கிட்ட சிவா சத்தியமா நீ இப்படி நடிப்பே னு நான் எதிர்பார்க்கவே இல்லை.உங்கப்பா கை தட்டினார் னா பார்த்துக்கயேன்"  செல் போனில் எடுத்த படத்தை  காட்டினான் அருள். நிஜம் தான் அவனது அப்பா வின் முகத்தில் இருந்த  பெருமிதம் பார்த்து சிவாவுக்கே ஆச்சரியமாக இருந்தது

"கண்ணாலேயே காதல் ஸ்டேடஸ்  அனுப்பிசிட்டே போலிருக்கே" என்று அவன் இடுப்பை கிள்ளினான் பாலு

"அது மட்டுமா அங்கேருந்து அதுக்கு பார்வையாலேயே  லைக் நிறைய விழுந்துச்சு அதை பார்த்தியா "

என்று அவர்கள் செய்த அலப்பறை கண்டு சிவாவே அரண்டு போய் "டேய் மெதுவா பேசுங்கடா"` என்றான் அக்கம் பக்கம் பார்த்து

"பயப்படராராம்"     பாலு சந்தானம்  பாணியில் கிண்டலடித்தான் 

அப்போது உமாவின் தோழி   ஜூஸ் கொண்டு  வந்து சிவாவிடம் நீட்டினாள்

சிவா வாங்கி கொண்டே "உமாவுக்கு கொடுத்தீங்களா"  என்று கேட்டான்

"அவ குடிச்சிட்டா உங்களுக்கும் அவ தான் கொடுத்து அனுப்பிச்சா"

அருள் பாலுவின் கிண்டலை பார்த்து கொண்டே சிவா கூச்சத்துடன் ஜூசை குடித்தான்

"சரி காதலை எப்ப சொல்ல போறே நீ சொல்லல னா நான்  உனக்காக பேசவா "

"எனக்கே சஸ்பென்ஸ்  தாங்கலை.சொல்லலலைனா தலை வெடிச்சிடும் போலிருக்கு இன்னைக்கு எப்படியும் சொல்லிடுவேன்"

"எப்படி சொல்ல போறே" ஆவலுடன் கேட்டான் பாலு

"ஒரு கவிதை எழுதியிருக்கேன்"

"கவிதை கூட எழுத ஆரம்பிச்சுட்டியா  நீ .  அட இங்க பார்ரா கவியுலகயத்துக்கு  வந்த சோதனையை" என்று அவன் கையில் இருந்த டைரியை பிடுங்க முயல, சிவா "நோ முதல்ல உமா கிட்டே ப்ரெசென்ட் பண்ணிட்டு அப்புறமா உங்களுக்கு படிச்சி காட்றேன்"  


"கவிதையை  நான் திருத்தி தரேண்டா"

"உன் தங்கச்சி க்கு லவ் லெட்டர் கொடுக்கறேன் னு சொல்றான்.நீ 
என்னடா னா  நான் திருத்தி தரேன்னு சொல்றே" என்று கிண்டலடித்த 
படியே வந்தான் கார்த்திக்

பாலு வின் முகம் போன போக்கை பார்த்து  அங்கே சிரிப்பு  எழுந்தது 

------

 அங்கே மேடையில், அந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கான  பரிசு வழங்கும்  விழா தொடங்கியது.  

------

உமா மேக்கப் கலைத்து சுடிதார் அணிந்து வெளி வந்த போது, தோழிகள் சூழ்ந்து கொண்டு  அவள் நடிப்பை மேக்கப் பற்றி பேசியவர்கள்  கூடவே கண்ணோடு கண்  பற்றியும்  கமெண்ட் அடித்தார்கள்

உமா  வெட்கத்துடன் " சும்மாருக்க  மாட்டீங்களா" என்று  அதட்ட

"நீ சாதாரணமா எப்படி அதட்டுவே னு எனக்கு தெரியும் ஆனால் இந்த அதட்டல்  இன்னும் கொஞ்சம் பேசுங்களேன் னு கெஞ்சற மாதிரி இருக்கு" என்று 
ஒரு தோழி அதற்கு பதில் கொடுத்தாள் 

 அப்போது  பார்த்தா  சிவாவுக்கு ஜூஸ் கொண்டு கொடுத்த தோழி வர வேண்டும். "சிவா ஜூஸ் குடிச்சிட்டார் திருப்தியா" என்று சொல்ல அது  தோழிகளுக்கு அவல் கிடைத்த மாதிரி ஆகி விட்டது. விடுவார்களா உமாவை சிணுங்க வைத்து விட்டார்கள்.  அவர்களிடமிருந்து கழண்டு கொண்டு மேடைக்கு அருகே வந்தாள்

கல்லுரி பெண் வேலையாள்  உமாவிடம்  வந்து " சிவா ஆடிட்டோரியத்தில் இருக்கார் உங்களை வர சொல்றார் அவருக்கு  ஏதோ உடம்புக்கு முடியல போலிருக்கு" என்று சொல்ல  உமா பதட்டமாய்  கிளம்பி விட்டாள்  

ஆடிடோரியம் விழா நடந்த கல்லுரி  மைதானத்திற்கு எதிர்புறத்தில் இருந்தது.
எதுக்கு சிவா அங்கே போகணும் காலையில  இருந்து வேற ஒண்ணும் சாப்பிடல மயக்கமா இருக்குமோ என்று குழம்பியவாறு, தன் செல் போனில் இருந்து அருளுக்கு  உடனே ஆடிடோரியம் வா  சிவாவுக்கு உடம்புக்கு  முடியல என்று மெசேஜ் அனுப்பிய படியே நடந்தாள் 

அவள்  அரங்கினுள் வரும் போது விளக்குகள் எரிந்து கொண்டிருக்க அங்கே
எந்த ஒரு ஜன நடமாட்டமும் இல்லை. உட்கார இடமே இல்லாத மாதிரி எங்கே  வந்து உட்கார்ந்திருக்கார் பாரேன் என்று முணுத்த படி  சிவா என்று கூப்பிட்டாள். அடுத்த விநாடி ஹாய் உமா என்ற குரல் கேட்டது.குரல் வந்த திக்கை நோக்கி திரும்பினாள். அங்கே சுரேஷ் நின்றிருந்தான்

அவள் திகைக்க "நான் தான் வர சொன்னேன் என் பேரை சொன்னால் வருவியா நீ.  அதான் தேங்காய் பீஸ் வச்சி எலி பொறிக்கு எலியை வரவழைக்கிற மாதிரி அவன் பேரை சொல்லி உன்னை வர வச்சேன்" என்று கிண்டலாய் சொன்னான்

திகைப்பு கடுப்பாக மாற "எதுக்கு" என்றாள் உமா

"ம் உன்னை கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு"

"முட்டாள் அதுக்கு வேற ஆளை பாரு"

"ஏன் எனக்கென்ன குறைச்சல் சிவா மாதிரி அழகு இல்ல தான். சிவா மாதிரி சொத்தும்  இல்ல தான். ஆனால் உன் மேல் ஆசை அதிகமான் ஒரு ஆண் மகன்"

"நீ ஆசைபட்டால் போதுமா"

"ஆமால்ல. என்னை விட பல மடங்கு சொத்து இருக்கிற சிவா மேல தானே உனக்கு ஆசை வரும். என் மேல எப்படி வரும் "

"பணத்துக்கு ஏங்குற பொண்ணு  னு என்னை நினைச்சியா"

"அப்ப என்னை கல்யாணம் பண்ணிக்க  சம்மதம்னு  சொல்லு .இப்பவே ஆண்டு விழா மேடைக்கு போய் உங்க அப்பா அம்மாவுக்கும் ஏன் இந்த ஊருக்கும் சொல்லிடலாம்.  நீ சம்மதிக்கலைனால்  உன்னை வலுக்கட்டயமா கொண்டு போகவும்  ஆள் ஏற்பாடு   பண்ணிருக்கேன்"  என்று அவன் சொல்லும் போதே அந்த ஆடிடோரியத்தில் இருந்த ஒவ்வொரு  ஜன்னலிலும் ஒருவர் அடியாள் கணக்காக கையில் ஆயுதங்களுடன் முளைத்தனர். 

உமா இப்போது சூழ்நிலையின் தீவிரம் உணர்ந்தாள்

------

அங்கே மேடையில் பரிசுகள் கொடுக்கப்பட்டு மற்றவர்கள் பேசியவுடன் ராஜேஷ் குமார் பேச எழுந்தார். கை தட்டல்களின் இடையே தன் பேச்சை துவக்கினார்


" வணக்கம் மாணவ மாணவிகள் அவங்க பெற்றோர்கள் எல்லாரையும் இப்படி ஒரே இடத்தில பார்க்கிறது சந்தோசமா இருக்கு. உங்க கிட்டே நான் எதிர்பார்க்கிறது உங்க பாக்கெட் ல இருக்கிற பணத்தை இல்லைங்க 
உங்க மனசுல இந்த கல்லூரியை பற்றி என்ன இருக்குனு  தான். ஏன்னா மாணவர்களோட இந்த வயசு ரொம்ப முக்கியமானது. இதை அவங்க சரியாய் பயன்படுத்துவதும், அவங்களுக்கு சரியான வழி அமைச்சி கொடுக்கிற கடமை பெற்றோர் உங்க கைல மட்டும் இல்லாம இந்த கல்லூரிக்கும் இருக்கு. இந்த கல்லூரிக்கு முணு வருசத்திற்கு அப்புறம் இப்ப தான் நான் வரேன். என் பிள்ளைகளுக்கு  இது பைனல் இயர்.   நானும் பெற்றோரா கலந்துக்கணும் னு ஆசைப்பட்டு கலந்துகிட்டேன்"

------


"இங்க பார் இதுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன் எங்கப்பா ஒரு போலீஸ் ஆபீசர். அவர் கிட்டே நீ மாட்டினே அவ்வளவு தான் "

"சீரியஸ்னஸ்  புரியாம சினிமா டயலாக் பேசிகிட்டிருக்கே. இப்ப உன்னை அழைச்சிட்டு போறதுக்கு, ஒவ்வொரு ஊர் எல்லையிலயும்  ஒரு கார்னு பதினைந்து கார்கள் ரெடியா நிக்குது . நாம கேரளா  போக போறோம். அங்க எங்களுக்கு பெரிய தோட்டம் இருக்கு பங்களா இருக்கு. அங்க தங்கறோம். உன்னை  கல்யாணம் பண்றேன். அதுக்கப்புறம் அணு அணுவா உன்னை ரசிக்கிறேன் ஒரு மாசம் கழிச்சு ஊருக்கு  திரும்பி வரோம். அப்ப நீ என்னை ஏத்துகிட்டு கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் சொல்ல மாட்டே "என்று சொல்லி கொண்டே நெருங்கினான்

உமா உள்ளுக்குள் கொஞ்சம் பயம் இருந்தது. அதை வெளி காட்டி கொள்ளாமல் பின்னாலேயே நகர்ந்தாள்.ஒரு பெரிய அலங்கார சுவரின் பின்னே அவள் திரும்பி விட, சுரேஷ் அவள் மறைந்தது கண்டு வேகமாய் அந்த சுவரை நோக்கி ஓடி  வந்தவன் யார் மேலோ தடாலென்று மோதி கொண்டான்
ஆள் யாரென்று நிமிர்ந்து பார்த்தான்

 சிவா நின்றிருந்தான்

அதிர்ச்சியாகி இவன் எப்படி இங்கே வந்தான் என்று சுரேஷ் குழம்ப, சிவா அவனை பார்த்து கொண்டே அலட்டி கொள்ளாமல் தன் பாக்கெட்டிலிருந்து ஒரு சாக்லெட் எடுத்து பிரித்து வாயில் போட்டு கொண்டான் நிதானமாக.

"எப்படி வந்தேன் னு தெரியனுமா ஒரு மாணவனா இன்னைக்கு காலேஜ் கடைசி நாள் சோ இதை சுத்தி பாக்கணும் னு ஆசை வந்துச்சு சரின்னு வந்தப்ப தான் உன்னையும் உன் கும்பலையும் பார்த்து உள்ளே வந்தேன். வந்தது நல்லதா போச்சு" 

 பின்னால் நின்றிருந்த உமா "ரொம்ப அசிங்க அசிங்கமா பேசறான் சிவா.அடியாள் நிறைய பேரை வேற கொண்டு வந்திருக்கான்" என்றாள் கோபமாய்

"தெரியும்  எல்லாத்தையும் கேட்டுகிட்டு  தான் இருந்தேன்" 

அவன் தெனாவெட்டு பார்த்து சுரேஷ்க்கு முகம் சிவந்தது கோபத்தில்.


"அவன் கிட்டே போய் பெரிசா சொல்றே அவனால ஒன்னும் பண்ண முடியாது. இப்ப நான் அடிச்சால் கூட வாங்கிகிட்டு தத்துவம் பேசுவான் பாரேன்" என்று  சொல்லி சுரேஷ் அவனை  அடிக்க கையை  ஓங்கிய அடுத்த கணம், சிவா அந்த கையை பிடித்து வேகமாய் முறுக்கி மற்றொரு கையால் அவன் கன்னத்தில் மாறி மாறி  அறைந்து சுவற்றில் தள்ளினான். சுரேஷ்  சுவரில் சென்று மோதி கீழே விழ அவனருகே சென்று "முட்டாள் என் கிட்டே அடி வாங்காமல் காலேஜ் விட்டு போக  மாட்டியா நீ " என்றான் சிரித்து கொண்டே

சுரேஷ் கொண்டு வந்திருந்த ஆட்கள் எல்லாரும் இப்போது அதிரடியாய் சிவாவை சூழ்ந்தார்கள். அவர்கள் கையில் இருந்த அரிவாள் கத்தி சைக்கிள் செயின் சிவாவை பதம் பார்க்கும் ஆவலில் இருந்தது 

------

ராஜேஷ் குமார் பேசி கொண்டிருந்தார் 
 "என்னை பொறுத்த வரைக்கும் ஒரு  வேலையை செஞ்சா அதை சிறப்பா செய்யணும் னு நினைப்பேன். அரசியல்ல புகுந்த  எனக்கு,  இருக்கிற நல்ல பெயர் போயிட கூடாது னு  கண் கொத்தி பாம்பா என் துறையை சரியான படி நிர்வாகம் பண்றதுக்கே டயம் சரியாகி போச்சு. குடும்பத்தை  கவனிக்க  நம்ம பையன்கள் இருக்காங்க பார்த்துப்பாங்க னு நினைச்சேன் ஆனால் அவர்கள் தவறான பாதையில் போக ஆரம்பிச்சது எனக்கு தாமதமா தான் தெரிய வந்துச்சு காரணம் வீட்ல இருக்கிறவங்க பாசத்தாலேயும், வெளியில இருக்கிறவங்க தங்கள் சுயநலத்தினாலேயும் என் பார்வைக்கு கொண்டு வரலே"

"பத்திரிகைகாரங்க மூலமா எனக்கு விஷயம் தெரிய வந்து நான் நடவடிக்கை எடுத்தப்ப சின்னவன் கார்த்திக் உடனே அடங்கிட்டான். ஆனால் பெரியவன் சிவா அடங்கலை திமிர் அதிகமாகி எனையே எதிர்த்து நின்னான். இது சரிபட்டு வராது னு சொத்துல எந்த உரிமையும் எடுத்துக்க கூடாது னு  சொல்லி வீட்டை விட்டு அனுப்பிச்சேன்  சொல்ல கூடாத வார்த்தைகளை சொல்லி வார்ன் பண்ணி தான் அனுப்பிச்சேன். அவன் எப்படியும் இருக்க முடியாமல் மன்னிச்சிடுங்க னு சொல்லிட்டு வந்துடுவான்னு  நான் நினைச்சேன்."

ஆனால் பாருங்க வரவேயில்லை சொந்த கால்லே நின்னான். அவன் வெளியில போனதிலேருந்து அவனை வாட்ச் பண்ணி ரிப்போர்ட் கொடுக்க சொல்லி ஆட்களை ஏற்பாடு பண்ணிருந்தேன். அவங்க இன்னிக்கு வரைக்கும் எடுத்த ரிப்போர்ட் இதோ இருக்கு இதை பார்க்கிறப்ப எனக்கு மலைப்பா இருக்கு."

------

"ஏன்டா உள்ளுரில்  என்னை அடிக்க ஆள் கிடைக்கல னு வெளியூரில் இருந்து அழைச்சிட்டு வந்துட்டியா" என்று சுரேஷை பார்த்து  சொன்னவன் அவர்களிடம் திரும்பி

" இப்ப நான் ரொம்ப ஹாப்பி மூட்ல இருக்கேன் சண்டை போடற மூடு லாம் இல்ல. சோ  இன்னும் டூ மினிட்ஸ் டைம் உங்களுக்கு தரேன். அதுக்குள்ள கிளம்புங்க" என்றான். 

அவர்கள் அதை காதில் வாங்காமல் அவனை தாக்குவது ஒன்றே தங்கள் வாழ்நாள் கடமை என்பது போல் நெருங்கினார்கள்

உமா வுக்கு  இத்தனை பேரை சிவாவால் சமாளிக்க முடியுமா என்று பயம் வந்தது.கூடவே சிவா இப்படி கேர்லெஸ்  ஆக இருப்பது  கண்டு எரிச்சலாகி

"சிவா பி சீரியஸ்" என்றாள் கண்டிப்புடன்


"ஓகே மேடம் சொல்லிட்டாங்க.சிவா இப்ப சீரியஸ்" என்று சொல்லி கொண்டு
 எதிரில் நின்ற கும்பலின் உள்ளே மின்னலாய் திடீரென்று புகுந்து அவர்களை கலைத்தான். இதை அவர்கள் எதிர்பார்க்காததால் திணறினார்கள்

சிவா எப்போதுமே எதிலுமே வேகமானவன். அவனிடம் சண்டைக்கு வர எல்லோரும் பயபடுவதே அவன் வேகம் கண்டு தான். சிலம்பம் கராத்தே
கற்க ஆசைப்பட்டு கற்று  பாதியில் நின்று விட்டான். ஏதோ கற்றதை  வைத்து கொண்டு தன் ஆக்ரோஷம் மற்றும் வேகத்தினால் தனது விருப்பம் போல் மனிதர்களை  பந்தாடுவான்  

 இன்றும் அப்படியே நடந்தது.ஒருவன் சட்டையை கொத்தாக பற்றி இன்னொருவனின் மீது மோத வைத்தான்.இன்னொருவனின் அரிவாள் கையை பற்றி அடுத்தவனின்  தோளில் போட வைத்தான் மற்றொருவனின்  கையில் இருந்த அரிவாளை பிடுங்கி வீசி ஏனையவர்களை  சிதற அடித்தான். ஒரு சில நிமிடங்களில் வந்திருந்த அனைவரும் ஆளுக்கொரு பக்கமாய்   சிதறி கிடந்தனர். அப்படியும் ஒருவன் எழ முயற்சிக்க அவனை
நோக்கி வேகமாக பாய்ந்து அவன் மேலே குதித்தான்.வெயிட் தாங்காமல்  அலறிய அவனுக்குள் எங்கோ எலும்பு  முறிந்தது மட்டும் தெரிந்தது.

சிவா  சிரித்து கொண்டே வர  உமா ஆச்சரியத்துடன்,  "அதுக்குன்னு இப்படியா      அடிப்பே " என்றாள் உமா முகத்தில் பயம் நீங்கி சிரிப்புடன்


சிவா, விழுந்த இடத்திலேயே இருந்த சுரேஷிடம் சென்று  " உமா கிட்டே நீ தப்பா பேசினதுக்கே  உன்னை சாகடிக்கலாம்  தப்பில்லை. ஆனால் யாரு ஜெயிலுக்கு போறது. அதனாலே தான் சும்மா விட்டுட்டு போறேன் பிழைச்சி போ "என்று விரல் நீட்டி எச்சரித்த படி உமாவுடன் கிளம்பினான்

------


"நான் கூட எங்கப்பா திட்டிட்டார் னு  வீட்டை விட்டு  போயிட்டேன். ஆனால் பாருங்க ரெண்டு நாள் கூட என்னாலே தாக்கு பிடிக்க  முடியல.வீட்டுக்கு வந்துட்டேன்.ஆனால் சிவா வட்டிக்கு பணம் வாங்கி,மூட்டை தூக்கி சம்பாதிச்சு, படிச்சு, அரியர்ஸ் முடிச்சு, இதோ பைனல் எக்ஸாம் முடிச்சு, ராமன்  வேடம் போட்டு நல்லா நடிச்சு பேர் கூட வாங்கிட்டான் எப்படி நடந்தது இந்த மிராக்கில்"
என்று பேசி நிறுத்தியவர் மீண்டும் தொடர்ந்தார் 

"அவன் கூட  இருக்கிற நண்பர்கள் தான் காரணம். சிவாவுக்கு படிக்க ஊக்கம் கொடுத்த உமா, இருக்க இடம் கொடுத்த அருள், வேலை கொடுத்த மணி, 
பாலு இவங்க எல்லாருக்கும் எங்க குடும்பம் நன்றி கடன் பட்டிருக்கு. 
நண்பர்க ளுக்கு இலக்கணமா  இவங்களை சொல்லலாம் "

------


அவர்கள் செல்வதை பார்த்து கொண்டிருந்த சுரேஷ், அவர்களை அப்படியே விட்டு விட மனம் ஒப்பாமல் ஆத்திரம் இன்னும் அதிகமாகவே,  தன் இடுப்பில் பத்திரபடுத்தியிருந்த  கத்தியை கையில் எடுத்து கொண்டு வேகமாய் எழுந்து அவர்களை நோக்கி ஓடி வந்தான்

  சத்தம் கேட்டு  திரும்பிய  சிவா , அவன்  கையில்  இருந்த கத்தியை பார்த்து  தன் வலது கையால் உமா வின் கையை பிடித்து அவள் இடுப்போடு சேர்த்து   அவசரமாய் தனக்கு பின்னே கொண்டு வந்தான். அதே நேரம் தன் இடது கையை தயாராக வைத்து தன்னை நோக்கி வந்த கத்தி இருந்த கையை அழுத்தமாய் பிடித்தான். அவனது பிடிக்கு ஈடு கொடுக்க முடியாவிட்டாலும் சுரேஷ் தன் முழு பலத்தையும் அங்கே பிரயோகித்தான்.

உமா பயத்தில் சிவாவுக்கு ஏதும் ஆகி விட கூடாது என்று முன்னே வர முயற்சிக்க உமாவை நீ தள்ளி போ என்று விடுவித்தான்.முடியாது உன்னை விட்டு போக மாட்டேன் என்ற உமா அவனை காப்பாற்றும் முயற்சியில் அவனை பின் தள்ளி முன்னே வர, சிவா திரும்பவும் அவளை பின்னுக்கு கொண்டு சென்று தான் முன்னே வந்து,கத்தி இருந்த கையை  தன் கால் முட்டியால் ஒரு எத்து எத்த அது சுரேஷ் கையிலிருந்து நழுவி மேலே சென்றது. அது மீண்டும் கீழே வேகமாய் வருகையில் சிவா பிடிக்க முயல அது விசுவாசி போல் சுரேஷ் கைக்கே மீண்டும் சென்றது 

------


"சிவா உனக்கு ஒரு வேண்டுகோள். வீட்ல இருக்கிற எல்லாரும் கூப்பிட்டும் நீ வீட்டுக்கு வரல . நீங்க சொன்னால் வந்துருவான் னு எல்லாரும் சொல்றாங்க. சிவா நீ என் மகன். உன்னை கண்டிக்கிற உரிமை எனக்கு இருக்கு. எங்களுக்கு நீ பாரம் னு நான் சொன்னது தப்பு. நாங்க எல்லாரும் உன்னை எங்க நெஞ்சில சுமக்கிறோம் அதனால் தான் இந்த  பாரம். இன்னைக்கு வரைக்கும்  நம்ம கிட்டே இருக்கிற சொத்தோட மதிப்பு 1000 கோடிக்கும் மேல். இது எங்களுக்கு ஒரு பொருட்டே இல்ல சிவா .ஆனால்  நீ எங்களுக்கு விலை மதிக்க முடியாத சொத்து. நம்மால் யாருக்கும் கெடுதல் இருக்க கூடாது.  அதை மட்டும் மனசுல வச்சிக்க. வா சிவா  உன் வரவை எதிர்பார்த்து  நம் வீடு காத்திருக்கிறது" என்று முடித்தார். 

எல்லோரும் நெகிழ்ந்து போய் கை தட்டினர்.எல்லாரது கண்களும் சிவா எங்கிருக்கிறான் என்றே சுற்று முற்றும் பார்த்தன 

------

சுரேஷ்  'எனக்கு கிடைக்காத உமா யாருக்கும்   கிடைக்க கூடாது. நீயும் இந்த உலகத்துல இருக்க கூடாதுடா " என்று சொல்லிய படியே கத்தி திரும்ப தன கைக்கே வந்த குஷியில் கை போன போக்கில் சிவாவின் மேல் வேகமாய் செலுத்தினான்.  இரண்டு வீச்சுக்கு  தப்பித்தாலும்  மூன்றாம்  வீச்சில் அவனால் தப்பிக்க முடியாது போக , அது சிவாவின் இடது பக்க வயிற்றுக்குள்  சென்று இறங்கியது.

உமா அலறினாள்.சிவாவுக்கு  எரிச்சலுடன் கூடிய  ஒரு பெரிய வலியாய் அது உள்ளே ஊடுருவியது.   சுரேஷ் கத்தியை உருவி மீண்டும் செலுத்த முற்பட, உமா கைக்கு அகப்பட்ட மர ஸ்டூல்  எடுத்து அதை சுரேஷ் தலையில் ஓங்கி அடித்தாள் சுரேஷ் தடுமாறி விலகினான்

சிவா உடலெங்கும் ரத்தம் பரவ  வேதனையுடன்  உமாவை பார்த்து இங்கிருந்து போய் விடு என்று சைகை செய்து கொண்டே கீழே சரிந்தான் 

உமா , "அருள் கார்த்திக் பாலு ஓடியாங்க " என்று வெறி பிடித்தவள் போல் கத்தினாள்

கீழே விழுந்த சிவா வுக்கு மயக்கம் வரும் போலிருந்தது. கண்கள் மூடி கொள்ள வேண்டும் போல் இருந்தும் சிரமப்பட்டு கண் விழித்தவன் உமா வை பத்திரமாய் யாரிடமாவது ஒப்படைத்து விட வேண்டும் என்று நினைத்து எழ முயற்சித்தான். சுரேஷ் இதை கவனித்து  சிவா அருகே ஓடி வந்து சாவுடா நாயே என்று அவன் இடுப்பில் எட்டி உதைத்தான்

உமா ஓடி வந்து "விடுடா ராஸ்கல்" என்று அழுது கொண்டே சிவாவை
பிடித்து கொண்டாள் 

உமா அனுப்பிய எஸ் எம் எஸ் பார்த்து என்னவோ ஏதோ என்று ஓடி வந்த அருள், கார்த்திக், பாலு மூவரும் அங்கு நடந்திருப்பதை பார்த்து அதிர்ச்சி ஆகினர் 

சுரேஷ் உமாவின் கூந்தலை பற்றி இழுக்க முயற்சித்து கொண்டிருப்பதை பார்த்து அருள் ஓடி வந்து கோபமாய் சுரேஷை பிடித்து இழுத்து சுவற்றில் மோதினான். சிவாவை பார்த்தவனுக்கு  அழுகையுடன் ஆத்திரமும் ஒன்று சேர சுரேஷை  பந்தாடினான் 


சிவா அருகில் வந்த கார்த்திக் அவன் விழுந்து கிடக்கும் நிலையை பார்த்தவன் மயக்கமாகி கீழே சரிந்தான்.

பாலு அழுது கொண்டே ஜன்னலருகே சென்று சிவாவை பார்த்து கொண்டே வெளியில் குரல் கொடுத்தான் எல்லாரும் வாங்க என்று.கூடவே செல் போனிலிருந்து ஆம்புலன்ஸ் க்கு தகவல் கொடுத்தான்.

 உமா சிவாவை தன் மடியில்  தாங்கியிருந்தாள் 

" சிவா" என்று உமா விசும்பலுடன் அவனை உலுக்க,சிவா தன் உதட்டில்  மிச்சமிருந்த புன்னகையுடன்  கண்களை மூடி  மயக்க நிலைக்கு சென்று கொண்டிருந்தான்.

சிவா கையில் வைத்திருந்த டைரி அருகே கிடக்க, காற்று அதன் பக்கங்களை புரட்ட அவன் எழுதியிருந்த கவிதை  உமாவின் கண்ணில்  தட்டுபட்டது.

காதல் வந்தால் கவிதை யெல்லாம்  எழுத வரும் னு சொல்வாங்க எனக்கும் காதல் 
வந்துருச்சு கூடவே   இலவச இணைப்பா கவிதையும் வந்துருச்சு

"முன்னாளில் நான் ஆதாமாகவும் 

நீ ஏவாலாகவும் இருந்ததாய்
பின்னாளில் வரலாற்று 
ஆய்வாளர்கள் ஆராய்ந்து 
சொல்ல கூடும்"

உமாவுக்கு காதலுடன் சிவா


என்று எழுதியிருந்தது

(அடுத்த  இதழில் நிறைவுறும்) 

ஆர்.வி.சரவணன் 

ஓவியம் நன்றி : திரு ஜெயராஜ்  அவர்கள் 

the story is copyrighted to kudanthaiyur only and may not be reproduced on other websites.