வெள்ளி, ஜூன் 22, 2018

குங்குமச்சிமிழ்





குங்குமச்சிமிழ் 


ரொம்ப வருஷத்துக்கு முன்னாடி, அதாவது படம் ரீலீசான போது பார்த்த படம். இது . இப் படத்தின் பாடல்கள் கேட்கிறப்பெல்லாம்  திரும்பவும் இந்த படம் பார்க்கணும் என்று நினைத்து கொள்வேன். அந்த வேளை சமீபத்தில் வந்தது. டிவியில் இந்தப் படம் போட்டதும் பார்க்க ஆரம்பித்து முடித்து விட்டேன். அந்தப் படம் என்னனு கேட்கறீங்களா ? மோகன், இளவரசி ரேவதி நடித்த ஆர்.சுந்தர்ராஜனின் குங்குமச்சிமிழ்.

வறுமையில் வேலை தேடி கஷ்டப்படும் காதலர்கள் மோகன் இளவரசி. ஆறு மாதம் கழித்து சத்திக்கலாம் என்ற ஒப்பந்தம் செய்து கொண்டு வேதனையுடன் பிரிகிறார்கள். பிரிந்த அடுத்த நாளே இருவர் வாழ்க்கையிலும் வறுமை விடைபெற்று செல்வத்தில் திளைக்கும் வாழ்க்கை கிடைத்து விடுகிறது . இருவருமே எப்போது இணைவார்கள் என்ற எதிர்பார்ப்பிருக்க, மோகனுக்கு வேலை கிடைத்ததே, ரேவதியின் கல்யாணம் நின்று போனதால் தான் என்பது தெரிய வருகிறது. பிராயச்சித்தமாக அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள மோகன் சம்மதிக்க, இது தெரியாமல் இளவரசி அந்த திருமணத்திற்கு அட்சதைபோட வருகிறார். இதில் யார் தியாகியாகிறார் என்பதே கதை.

காதலர்கள் வேலை தேடி கொண்டே ஒன்றாக தங்கியிருக்கும் வரம்பு மீறாத காட்சிகள், அவர்கள் தங்கியிருக்கும் இடங்கள்,( கூட்ஸ் வண்டி, கடற்கரையின் பாழடைத்த இடம்) பாரப்பவர்களை எல்லாம் "என் பொண்ணை கல்யாணம் பண்ணிக்கிறியா" என்று கேட்கும் டெல்லி கணேஷ் கேரக்டர். எந்த பொருளானாலும் போட்டுடைக்கும் ரேவதி,
இளையராஜாவின் ஆறு பாடல்கள் (ஒரு பாட்டு ரிப்பீட்) என்று ரசிக்க ஏராளமான விசயங்கள் இதில் இருக்கிறது.
வேலை இல்லா திண்டாட்டத்தை பற்றி ஒரு காட்சி வருகிறது. வேலை தேடி கொண்டிருக்கும் மோகன், நடுரோட்டில் ஒருவர் ஆக்சிடெண்ட்டில் இறந்து கிடப்பதை பார்ப்பார். அடுத்த நிமிடம் இறந்தவர் பார்த்த வேலையை வாங்கி விட அந்த அலுவலகம் நோக்கி அவசரமாக விரைவார். அவருக்கு முன்பே அந்த வேலை வேறொருவர் வாங்கியருப்பது தெரிய வருகையில் மோகன் வேதனையை இப்படி வெளிப்படுத்துவார். "வேலையில்லா திண்டாட்டம் என்னை விட பாஸ்டா இருக்குது".
இடைவேளைக்கு முன் இளவரசி பின் ரேவதி என்று கதை அமைத்திருந்தாலும். இடைவேளைக்கு பின் இளவரசி கேரக்டரின் நிலை பற்றி இன்னும் காண்பித்திருக்கலாம். சில கேரக்டர்களின் சஸ்பென்ஸ் முன் கூட்டியே நாம் அறிந்து கொள்வதை தடுக்கும் விதமாகவும் திரைக்கதை அமைந்திருக்கலாம்.


நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது. அடிக்கடி நான் முணுமுணுக்கும் பாடல் இது. நண்பர்களுடன் இந்தப்படம் செகண்ட் ஷோ கும்பகோணம் செல்வம் தியேட்டரில் பார்த்துவிட்டு, அடுத்த நாள் இப் படத்தை பற்றி தெரு முனையில் இருந்த ஒரு வீட்டு திண்ணையில் அமர்ந்து படம் பற்றி விவாதித்தது இன்றுவரை நினைவில் இருக்கிறது.
அது ஒரு பொற்காலம்.

ஆர்.வி.சரவணன்