அனுபவம் பேசுது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அனுபவம் பேசுது லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, மே 20, 2016

வீடெங்கும் திண்ணை வைத்து ....







வீடெங்கும் திண்ணை வைத்து ....



நண்பர் துளசிதரன் ஒவ்வொரு வருடமும் மே மாதம்  ஒரு குறும்படம் எடுப்பது வழக்கம். அவருடன் நான் அறிமுகமாகிய இந்த மூன்று வருடங்களில் அவரது மூன்று படங்களின் படபிடிப்பில் பங்கு கொண்டு விட்டேன். ( பரோட்டா கார்த்திக், பொயட் த கிரேட், செயின்ட் த கிரேட் ) இதில் முன்றாவது குறும்படமான செயின்ட் த கிரேட் குறும்படத்தின் படப்பிடிப்பு சென்ற வாரம் பாலக்காட்டில், திருநல்லாயி என்ற இடத்தில் நடைபெற்றது. கோவை ஆவியும் நானும் சென்றிருந்தோம். இங்கே நான் குறிப்பிடபோவது படப்பிடிப்பை பற்றியோ குறும்படத்தை பற்றியோ அல்ல. படப்பிடிப்பு நடைபெற்ற ஒரு தெருவை  பற்றி தான் இந்த பதிவில் சொல்ல இருக்கிறேன்.காலையில் நாங்கள் சென்று இறங்கிய போது இது ஏதடா, எதாவது சினிமா செட் போட்ட இடத்திற்கு தான் வந்து விட்டோமா என்று தான்  ஒரு கணம் ஆச்சரியமாக இருந்தது. அப்படி எல்லாம் இல்லை எனும் போது என் ஆச்சரியம் பல மடங்கானது. காரணம் சொல்லாமல் நான் ஆச்சரியத்தை அடுக்கி கொண்டே சென்றால் நீங்கள் சலிப்படைய கூடும் . ஆகவே விசயத்துக்கு வருகிறேன். 

அந்த தெருவின் சிறப்பே, தெருவின் இரு புறமும் உள்ள வீடுகள் அனைத்துமே திண்ணை வைத்து கட்டபட்டிருந்த  ஓட்டு வீடுகள். மாடி வீடாக இருந்தால் கூட
திண்ணைக்கு மட்டுமாவது கட்டாயம் ஓடு போடப்பட்டிருக்கிறது. 
இதில் ஆச்சரியம் என்னவென்றால் வீடுகள் அனைத்தும் முன்னே பின்னே என்றில்லாமல் ஒரே சீராக வரிசையாய் கட்டப்பட்டிருப்பது தான்.(ஓரிரு வீடுகளில் அப்படி இருக்கலாம்)

அந்த தெருவை பார்க்கையில் படப்பிடிப்புக்காக போடப்பட்ட ஒரு செட் எப்படி இருக்குமோ அப்படி தான் இருந்தது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை அங்கே தான் படப்பிடிப்பு என்றவுடன் எனக்கு குதுகலம் அதிகமானது. நேரம் கிடைக்கும் போதெல்லாம் சில வீடுகளின் திண்ணையில் சென்று (வீட்டாரின் அனுமதி பெற்று) அமர்ந்தபடி படங்கள் எடுத்து கொண்டிருந்தேன். அந்த படங்கள் இங்கே உங்கள் பார்வைக்கு.


















அன்று முழுதும் சிறு வயது ஞாபகங்களின் கரம் பிடித்த படியே அலைந்து கொண்டிருந்தது மனசு. மாலை அங்கிருந்து கிளம்பிய போது, வர மறுத்து அடம் பிடித்த மனசை அதட்டி தான் அழைத்து வர வேண்டியதாயிற்று.

ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, பிப்ரவரி 28, 2016

பண்டிகை கால பயணம் ஒன்று




பண்டிகை கால பயணம் ஒன்று

இந்த தீபாவளி பொங்கல் னு  பண்டிகை நாள் வந்துட்டாலோ இல்லன்னா சேர்ந்தார் போல் ரெண்டு மூணு நாள் லீவு  வந்துட்டாலோ டிக்கெட் புக் பண்ண முடியாம ஊருக்கு போறவங்க லோ லோ னு தான் அலைய வேண்டியிருக்கும்.  (எதுக்கு ரெண்டு லோ ? ஒண்ணு ஊருக்கு போறதுக்கு இன்னொண்ணு திரும்பி வரதுக்கு). அப்படி திண்டாட்டமாகி எப்படிடா ஊர் போய் சேர்வோம்னு முதுகுல மாட்டின லக்கேஜோட டென்சனையும் இலவச இணைப்பா 
சுமந்துகிட்டு கிளம்பின ஒரு பயணியோட அனுபவம் தான் இது. அது யாரதுனு நீங்க யோசிக்க ஆரம்பிக்கிறதுக்குள்ளே அந்த பயணியே  நான் தான் னு
 (அந்த குழந்தையே நீங்க தான் மொமென்ட்ல ) சொல்லிகிட்டு பயணத்தை ஆரம்பிக்கிறேன்.

சென்ற மாதம் பொங்கலுக்கு கும்பகோணம் போக பேருந்து ரயில் இது எதுலயும் இடமில்லைனு தெரிஞ்சவுடனே  (வடிவேலு போல்) ஆரம்பத்திலேயே ஆரம்பிச்சுட்டாய்ங்களா என்று முனகிய படி தான் கிளம்பினேன். பஸ் ரயில் (பிளைட் இன்னும் விடலே) இது ரெண்டுல எதுல போகலாம்னு மனசு டாஸ் போட்டு பார்த்துச்சு . ரயிலில் அன் ரிசர்வ் ல நின்னுகிட்டு தான் போகணும். அதுக்கு பதிலா பஸ் போனா உட்கார சீட்டாவது கிடைக்கும் அதனாலே பஸ்ல போயிடலாமே னு  முடிவெடுத்தேன். 

வெள்ளி அன்று பொங்கல். வியாழன் மாலை அலுவலகத்தில் எக்கச்சக்க ஆணிகள் . ஆணிய புடுங்கிட்டு  கிளம்பறப்ப மணி 8.00. பாரிஸில் இருந்து கோயம்பேடு போன பேருந்தில் நான் தொத்தி கொண்டு ஏறி சீட் தேடிய போது மக்கள் நாங்க கோயம்பேடு வரை ரிசர்வ் செய்திருக்கோமாக்கும் என்பது போல் உட்கார்ந்திருந்தாங்க. நின்ற படியே கோயம்பேடு வந்ததில் வலி தெரியல. ஆனால்  ஊருக்கு போற பஸ்ல உட்கார வழி (இடம்) கிடைச்சா சரினு  நினைச்சிட்டு கோயம்பேட்டில் சென்று இறங்கிய போது மணி 9.00.


எங்கு திரும்பினாலும் மக்கள் மூட்டை மூட்டையாக லக்கேஜுடன் சென்று கொண்டிருந்தார்கள். பொங்கல் பொங்கி முடிக்கிறதுக்குள்ளே வீடு போய் சேர்ந்தாகணும்னு அவங்க கிட்டே இருந்த  பரபரப்பு ஜுரம் என்னையும் தொத்திகிச்சு.  உள்ளே நுழையரப்ப  ரிசர்வேசன் கவுன்ட்டர் காலியா இருந்துச்சு. வேகமாய் போய் கேட்ட போது ,  "கும்பகோணத்துக்கு இப்ப ரிசர்வேசன் பஸ் எதுவும் இல்ல. எல்லாம் புல்.  நாளைக்கு  காலையில தான் இருக்கு" னு சொன்னவர் என் அதிர்ச்சிய பார்த்துட்டு, "அன் ரிசர்வ்டு பஸ்கள்  நிறைய விட்டிருக்காங்க. 8 ம் நம்பர் பிளாட்பாரம் போங்க" என்றார்

சினிமால  காமிக்கிற மாதிரி இங்க கட் பண்ணா அந்த 8 ம் நம்பர் பிளாட்பார்ம்ல இருக்கணும்னு தான் ஆசைப்பட்டேன். நிஜத்தில் அது முடியாதே. அதை தேடி புறப்பட்டவன்  வழியெங்கும் மக்கள் கடலில் நீந்தி போக வேண்டியிருந்துச்சு. 

 8 ம் நம்பர் பிளாட்பாரம் எங்க இருக்கு என்று யாரிடமும் கேட்பதற்கு அவசியமே இல்லாம ஆங்காங்கே  போர்டுகள் வைத்திருந்தார்கள்.
பரவாயில்லியேனு நினைச்சிட்டே அங்க போய் சேர்ந்தேன்.

மேஜை போட்டு அமர்ந்திருந்த போக்குவரத்து அதிகாரிகளிடம்  கேட்டப்ப 
"பஸ் நிறைய இருக்கு சார். டிராபிக் ல ப்ளாக் ஆகி நிக்குது வரும்"  என்றார்கள்
அடுத்து நான் கேட்ட கேள்வி அவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்திருக்கும், "பஸ் இடது பக்கமா வருமா, இல்ல வலது பக்கமா வருமா" அப்படி நான் கேட்டவுடன்  எப்படி வந்தா என்னய்யா. பஸ் வந்தா போதாதா அப்படிங்கிற முகபாவத்துடன் என்னை பார்த்து  "வலது பக்கம்" என்றார்கள்.  நடக்க ஆரம்பிச்சேன். 

கூட்டம் அதிகமா இருந்தா,  பஸ்  பேருந்து நிலையத்தில் உள்ளே 
நுழையுறப்பவே  பயணிகள் அங்க நின்னு தடாலடியாக  ஏறி சீட் போட்டு விடுவார்கள்.  நானும் அப்படி  ஏறி விடலாம்னு நடக்க ஆரம்பிச்சேன். 

இருபது பஸ் வரைக்கும்  தாண்டி போயிருப்பேன். கும்பகோணம் செல்லும் பஸ் கண்ணுக்கு எட்டிய தூரம் வரைக்கும் தென்படல. ஆனால் பக்கத்து பிளாட்பாரத்தில் மட்டும் திருச்சி செல்லும் பஸ்களாக நிறைய வந்துட்டிருந்துச்சு. எதிர் இலையில் பரிமாறப்படும் பாயாசம் நம்ம இலைக்கு எப்ப வரும்னு காத்திருக்கிற மாதிரி பார்க்க ஆரம்பிச்சேன். அப்ப தான்  ஒரு பஸ்  நான் போயிட்டிருந்த பிளாட்பாரம்ல வந்துட்டிருந்துச்சு.

சர்க்கரையை மொய்த்து கொண்ட எறும்புகள் போல் சில பேர் அந்த பஸ்ஸை தொடர்ந்து வந்துட்டிருந்தாங்க. கண்டக்டர்  "இது ரிசர்வேசன் பஸ்சுங்க"என்றார்.  "எல்லா பஸ்சும் ரிசர்வேசன்னே வந்தா நாங்க எப்படி ஊருக்கு போறது" என்று கேட்டு கொண்டே மெதுவாக ஊர்ந்த படி வந்து கொண்டிருந்த பஸ்சை  ஓட்டமும் நடையுமாக தொடர்ந்துட்டிருந்தாங்க. 
நானும் அந்த ஜோதியில் அவர்களுடன் ஐக்கியமாகி கொண்டேன். நாங்கள் ஒரு கட்டத்துல சலிப்பாகி  சார் எந்த ஊர் போகுதுன்னு சொன்னீங்கன்னா  நாங்க வேற பஸ்சை பார்க்க போயிடுவோமில்ல னு கேட்டப்ப தான் அவர் "இது கரூர் போகுது தம்பி" என்றார்.  அடுத்த செகண்ட் அத்தனை பேரும் அடுத்த வண்டி தேடி ஓட ஆரம்பிச்சோம். 
கொஞ்சம் தள்ளி கும்பகோணம் பெயர் பலகையோட  ஒரு பஸ் நிக்கிறது என் கண்ணுக்கு தெரிய வந்துச்சு. ஒரு நிமிஷம் ஓட்ட பந்தய வீரனாய் மாறி, மூச்சிரைக்க பஸ்சின் பக்கம் போனப்ப தான் அதுவும் ரிசர்வேசன் பஸ்னு தெரிஞ்சுச்சு.


போக்குவரத்து அதிகாரிகள் நின்னுட்டிருந்த பழைய இடத்துக்கு நான் வந்து நின்னப்ப தான் வாழ்க்கை ஒரு வட்டம்டா என்பது புரிஞ்சுது. அப்ப தான் அந்த இடத்துல தஞ்சாவூர் போர்டுடன் பஸ்  ஒண்ணு நின்னுகிட்டு இருக்கிறதை பார்த்தேன்.  ஆகா இது கும்பகோணம் வழி தானேனு பஸ்சுக்குள் தாவி ஏறினேன்.  கடலை விற்பவர் உட்கார்ந்திருக்கிற ஒவ்வௌருத்தரையும் 
கேட் டுட்டே எனக்கு முன்னாடி  போய்கிட்டு இருந்தார். நான் அவர் பின்னாடியே காலியாக இருக்குற சீட் பக்கத்துல உட்கார்ந்திருக்கிறவங்க கிட்டே சீட் கேட்டுகிட்டே நானும் போயிட்டிருந்தேன்.  பஸ்ல கடைசி சீட்டுக்கு முன்னதாக ஒரு சீட் காலியாக இருந்துச்சு. அப்பாடா என்று அருகில் சென்று என் பேகை வச்சிட்டு பாக்குறேன்.  அந்த சீட் பஸ்ஸோட பின் சக்கரத்திற்கு மேலே உள்ள சீட். ஒரு மேடை மேல உட்கார்ந்திருக்கிற மாதிரியே 
இருக்கும். அதில ஒரு பிரச்னை என்னன்னா கால்களை கீழே நீட்டி உட்கார முடியாது.  ஏழு மணி நேரம் உட்கார்றது கஷ்டம் தான்.  இருந்தும் பசிக்கு புளி சாதம் கிடைக்கும் போது அத விட்டுட்டு பிரியாணிக்கு ஆசைபட கூடாது னு பட்டுன்னு உட்கார்ந்துட்டேன். இன்னும் சில பேர் ஏறி சீட் தேட ஆரம்பிச்சாங்க. இல்லேன்னவுடன் அவங்க அலட்டிக்கல. தரையில் உட்கார்ந்துகிட்டாங்க.

 கண்டக்டர் வண்டியில் ஏறி "பஸ்  கும்பகோணம் அதை விட்டால் தஞ்சாவூர் இங்க தான் நிக்கும். வேற எங்கேயும் நிக்காது. எல்லாரும் 225 ரூபாய் எடுத்து வச்சிக்குங்க"  என்றார் கறாராக. சிக்னல்ல கூட நிக்காதா சார், பயண வழி உணவகத்தில் கூட நிற்காதா சார் னு என் மைண்ட் வாய்ஸ் கேட்டுச்சு. (அது அவருக்கு கேட்காதுன்னு தெரிஞ்சும்) பஸ் கிளம்ப ஆரம்பிச்சப்ப தான் .  பஸ்ஸை பிடிக்கிற டென்சனில்  சாப்பிடாம ஏறினது மட்டுமில்லாம ஒரு  தண்ணீர் பாட்டில் கூட வாங்கிக்காம ஏறினது ஞாபகம் வந்துச்சு.  சரி அட்ஜஸ்ட் பண்ணிப்போம்னு நினைக்கிறப்ப வண்டி டிராபிக்கில் நகர ஆரம்பிச்சு வேகம் பிடிச்சது. அது வரை இருந்த புழுக்கத்தை காற்று உள்ள புகுந்து விரட்ட ஆரம்பிச்சுச்சு.

 டிக்கெட் போட்டு கொண்டே வந்த கண்டக்டரிடம் ஒரு பயணி அப்போது மல்லு கட்ட ஆரம்பித்தார். "என் பையனுக்கு அரை டிக்கெட் தான்" னு  இவர் சொல்ல, அவர் "அதெல்லாம் கிடையாது முழு டிக்கெட் தான். நான் தான் வண்டி எடுக்கும் போது சொன்னேன்ல. இப்ப வம்பு பண்ணா என்ன அர்த்தம்"னு குரல் எழுப்பினார். "அதெப்படி சின்ன பசங்களுக்கும் அதே டிக்கெட் வாங்கறீங்க" " என்னை எதுக்கு கேக்கறீங்க. பஸ் நின்னப்ப அதிகாரிகளை பார்த்து கேட்க வேண்டியது தானே " னு சொல்லிட்டு முழு டிக்கெட் கொடுத்த படி நகர்ந்தார். எல்லாரும் இதை வேடிக்கை பார்த்து கொண்டிருக்க 
அந்த பயணியும் அவர் குடும்பமும்  கடைசி இருக்கையில் தான் அமர்ந்திருந்தார்கள். 

பஸ் கூடுவாஞ்சேரி  தாண்டற வரைக்கும் செம டிராபிக். பஸ், கார், லாரினு ஒண்ணுக்கொண்ணு  முந்தி போறதுக்கு ட்ரை பண்ணிட்டு இருந்துச்சு. கார்களை பார்க்கிறப்ப, நம்ம கிட்டே கார் இருந்தா கார்லேயே போயிருக்கலாமே னு என்னை உரசி பார்த்த அந்த ஆசை 
தெருவோரம் ஸ்டாப்பிங்ல பஸ்சுக்கு வெயிட் பண்ணிட்டு  இருக்கிற மக்களை பார்த்தவுடன் தள்ளி போயிடுச்சு. 

அப்படியே தூங்கிப் போனவன்  நடுவில் கண் முழித்த போது வண்டி உளுந்தூர்பேட்டை டோல்கேட் வந்திருந்துச்சு.அதிகாலை 2.00 மணி. 
அடுத்த முறை கண் முளிச்சப்ப காலை 5 மணி. வண்டி அப்ப நெய்வேலி தான் தாண்டியிருந்தது. டிரைவரும் வேகமாக தான் ஓட்டிட்டிருந்தாரு.
 "இவ்வளவு நேரம் ஆகிடுச்சு. வண்டி ஏன் இப்ப தான் இங்க வந்திருக்கு" னு பக்கத்தில் இருந்தவர் கிட்டே கேட்ட போது , "வழி தெரியாம வேற இடம் போனதினால கொஞ்சம் லேட் ஆகிடுச்சு" என்றார். "ஏம்பா பக்கத்துல இருக்கிறவங்க கொஞ்சம் வழி காட்ட கூடாதா" என்றேன். "அதெப்படி அவங்களும் தூங்கிட்டு இருந்திருப்பாங்களே" அப்படின்னு இன்னொருத்தர் கவுண்டர் கொடுத்தார்.

பஸ் கும்பகோணம் பேருந்து நிலையம் வந்தப்ப மணி 7.00  எவ்வளவு வேகமாக பஸ்ல எறினமோ அதை விட இரு மடங்கு வேகத்தில எல்லாரும் இறங்கி சிதற ஆரம்பித்தோம். வீட்டுக்கு செல்ல தனியார் பேருந்தில் ஏறிய போது கூட்டம் திமிறி கொண்டிருந்தது. காலேஜ்ல படிக்கிற (இல்ல வேலையில் இருக்கிற) இளைஞர்கள் "வடசேரி போறதுக்கு எவ்வளவு நேரம் ஆகும்"  னு கண்டக்டரிடம் கேட்டாங்க. அவர் 9.00 மணி ஆகிடும் னு சொன்னார் 

"டேய்  நாம பொங்கல் வைக்கிரதுக்கு போலடா.  பொங்கல் சாப்பிட தான் போய்கிட்டு இருக்கோம்." னு ஒரு இளைஞர் சொல்ல இன்னொரு இளைஞர்
 "வீட்ல அம்மா வேற போன் மேல போன் பண்றாங்க" என்று சொல்லி கொண்டிருந்தார்.

பேருந்து வேகமெடுத்து பஸ் ஸ்டாண்ட் காம்பௌண்டை தாண்டிய போது சென்னை பஸ்கள் நிக்கிற இடத்துலேருந்து "சென்னை சென்னை" னு குரல்  கொடுத்துட்டிருந்தார் கண்டக்டர். 

"இருங்கய்யா பொங்கல் கொண்டாடிட்டு வந்துடறோம்" அந்த இளைஞர்களுடன்  சேர்ந்து கொண்டு உற்சாகமாய் நானும் குரல் கொடுத்தேன்.


ஆர்.வி.சரவணன் 



படம் இணையத்திலிருந்து




ஞாயிறு, ஜனவரி 10, 2016

பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா ?





பாட்டு ஒண்ணு நான் பாடட்டுமா ?

இந்த வரியை கேட்டவுடன் நீங்க எல்லாரும் கல்லு ,தக்காளி, முட்டை இப்படி எதையாவது எடுத்து அடிக்கலாமானு யோசிக்கறீங்கனு நினைக்கிறேன்.ப்ளீஸ் வெயிட் பண்ணுங்க. டிவி ப்ரோக்ராம்ல வர சின்ன பிரேக்கை கூட அனுமதிக்கிறீங்க. எனக்காக கொஞ்சம் ப்ரேக் கொடுங்க மாட்டீங்களா? அதுக்குள்ளே பாட்டை படிச்சிடறேன். இல்லல்ல நான் சொல்ல வந்ததை சொல்லிடறேன். அதை படிச்சதுக்கபுறம் உங்க விருப்பபடி எதை வேண்டுமானாலும் எடுத்துக்குங்க (ஹூம்.ஒரு விசயத்தை படிக்க வைக்கிறதுக்கு எவ்வளவு பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு)

அதாகப்பட்டது புத்தகம் வாசித்தல், சினிமா பார்ப்பது, எழுதுவது இப்படின்னு இருந்த என் ஆர்வம் பாடல்கள் விஷயத்துல மட்டும் இவை அனைத்தையும் ஓவர் டேக் பண்ற விதத்துல தான் இன்னிக்கு வரைக்கும் இருக்கு. 

பிளாஷ் பேக் ஓபன் பண்ணா, ஸ்கூல் படிக்கிற அந்த சின்ன வயசுல ரேடியோல ஒளிபரப்பாகிற  பாடல்களை கேட்கறதுக்காக ஒரு நாள்ல எந்தெந்த நேரத்துல பாட்டு வருதுனு கரெக்டா  டயத்தை ஞாபகத்துல வச்சிட்டு கேட்கிற ஆளு நான். கோவில் திருவிழா கல்யாண வீடு (அப்பலாம் கல்யாண வீட்டில் ஸ்பீக்கர் செட் கட்டி பாட்டு போடுவாங்க கல்யாணத்துக்கு முத நாள் சாயந்தரம் சாமி பாட்டோட ஆரம்பிச்சு அதுக்கப்புறம் சினிமா பாடல்களுக்கு தாவிடுவாங்க. நைட் 11 மணி வரைக்கும் கூட பாட்டு போடுவாங்க. பாட்டை கேட்கிறதுக்காக  தூங்காமல் விழித்திருந்து எல்லாம் பாடல்களை கேட்டிருக்கேன். கேட்டுகிட்டே அப்படியே தூங்கியும் போயிருக்கேன் சில வேளைகளில் எனக்கு பிடித்த பாடல்களை கேட்பதற்காக, (நேயர் விருப்பம் மாதிரி) எனக்கு பிடிச்ச பாட்டு போட சொல்லி பாட்டு போடறவர் கிட்டே போய் சொல்லுவேன். அவர் கண்டுக்கலையா உடனே யார் விழா நடத்தறாங்களோ அவங்க கிட்டே போய் ரெகமண்டேசன் கேட்டிருக்கேன்.இப்படி இருந்த பாட்டு கேட்கிற ஆசை அதுக்கப்புறம் ரெகார்டிங் கடைகளுக்கு ஷிப்ட் ஆச்சு. 

அதாவது மாலை வாக்கிங் செல்வது போல் கிளம்பி கும்பகோணத்தில் வலம் வருவேன் எங்கெல்லாம் ரெகார்டிங் கம்பெனி இருக்கிறதோ அங்கே சென்று விடுவேன் அங்கே போடப்படும் பாடல்களை கேட்டு ரசித்த படி இருந்திருக்கிறேன். பேருந்தில் நீண்ட தூரம் போக வேண்டி வந்தால் கூட பாட்டு இருக்கிற பஸ்ல தான் ஏறுவேன்.அதுக்கப்புறம் டேப் ரெகார்டர், எப்.எம் ரேடியோ, டிவி, செல் போன் இப்படி டெக்னாலாஜி மாறுச்சு. ஆனால் என் ரசனை அப்படியே இருந்துச்சு. அப்பலாம் தேடி தேடி போய் கேட்ட பாட்டுக்கள் எல்லாம் இப்போ என் கையடக்க செல் போனில் எப்ப ஆன் பண்ணாலும் கேட்கலாம் என்ற அளவுக்கு வந்துடுச்சு.பாட்டு கேட்கிற ஆர்வம் குறையல.

ஆனா பாடல்கள் கேட்கிறதுல இருந்த ஆர்வம் அடுத்து பாடி பார்க்கும் ஆசைக்கு ப்ரோமோசன் ஆகிடுச்சு.  பள்ளியில் மாணவர்களின் திறனை வெளி கொண்டு வருவதற்காகவே ஒரு வகுப்பு உண்டு. எட்டாவது படிக்கும் போது கடவுள் வாழும் கோவிலிலே....பாடலை பாடியது இன்றும் நினைவிருக்கிறது.காலேஜ் வந்தவுடன் அந்த ஆர்வம் இன்னும் தீவிரமாச்சு. ப்ரோபசர் இல்லாத நேரங்களில் நான் பாட என் நண்பன் ஸ்ரீதர் டெஸ்கில் தாளம் போட என்று சரி மஜாவா இருந்துச்சு.

படிச்சு முடிச்சிட்டு வேலைக்கு வந்த பின் பாட்டு கேட்கிற ஆசையுடன்  பாட்டு பாடற ஆசையும் சேர்ந்தே தொடர ஆரம்பிச்சுடுச்சு.(ராகமும் தாளமும் போல) எனக்கு மியூசிக் டைரெக்டர் கிட்ட போய் சான்ஸ் வாங்கி சினிமால பாடணும் அப்படிங்கிற பெரிய ஆசையெல்லாம் கிடையாது. மியூசிக் ட்ரூப் ல பாடணும்ங்கிற சின்ன ஆசை தான். (ஆனால் அதுவே எவ்வளவு பெரிய ஆசை என்பது பின்னாடி கிடைச்ச அனுபவங்கள் தான் தெரிய வச்சுது.) நடிகர் மோகன் மேடையில்  வித வித முக பாவம் காட்டி பாடுவாரே படங்களில். அது போல் பாடணும்னு ஆசை. (ரொம்ப டெரரா இருக்குமோ) இந்த விசயத்துல கல்லுரி நண்பர்களிலிருந்து அலுவலக நண்பர்கள் வரைக்கும் என்னை நல்லா ஊக்கபடுத்தினாங்க.  அதாவது டி.ராஜேந்தர் பாடும் பொன்னான மனசே பூவான மனசே.... பாடலை அவர் குரல் நான் பாடுவதை ரசிப்பாங்க. புதுசா அறிமுகமாகிற பிரெண்ட்ஸ் க்கும் பாடி காட்ட சொல்வாங்க. எங்க வீட்ல ஜெயச்சந்திரன் குரல் எனக்கு செட் ஆகுதுனு சொன்னாங்க. அதனாலே ஜெயச்சந்திரன் பாட்டா பாடி பார்க்க ஆரம்பிச்சேன். இருந்தாலும் சில வரிகளில் மட்டும் கொஞ்சம் குரல் பிசிறு தட்டும். (ராகம் இழுக்க ஆரம்பிக்கும் போது குரல் உடைஞ்சிடும்).  

என் நண்பன் தேவராஜ் என்னோட இந்த ஆர்வத்தை பார்த்து, "நண்பன் ஒருத்தன் ஆர்கெஸ்ட்ரா வில் இருக்கிறார் வா. சான்ஸ் வாங்கி தருகிறேன்" என்று என்னை அழைத்து சென்றான். அவர் (20 வயசு தான் இருக்கும் அந்த பையனுக்கு. இருந்தும் அந்த துறையில் என்னை விட சீனியர் என்பதால் அவர்) என்னை பாட சொன்னார். நானும் சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்..... பாடி காண்பித்தேன்.  அவர் இந்த வார்த்தை இப்படி வரணும் இது இப்படி வரணும் என்று திருத்தங்கள் சொல்ல சொல்ல நான் விழிக்க ஆரம்பித்தேன். அவர் முடிவில் "உங்களுக்கு பாடறதுல ஆர்வம் நிறைய இருக்கு. ஆனா  நீங்க ப்ராக்டிஸ் பண்ணனுமே" என்றார். எப்படி என்று அவரிடம் கேட்க, "சங்கீதம் கத்துக்கணும்" என்றவர் "இப்ப என்ன வயசாவுது உங்களுக்கு" என்றார். 35 என்றேன் . "இந்த வயசில அது ஒண்ணும் ஆவறதில்லே" என்றார். வெளியில் வந்த பின் சின்ன வயசுல நம்ம ஆர்வத்தை தெரிஞ்சிட்டு நம்மை வீட்ல என்கரேஜ் பண்ணாம விட்டுட்டாங்களே ரொம்ப வேதனை பட்டேன். அதுக்கப்புறம் பாடுற ஆசையை  தூக்கி தூர போட்டுட்டு பாடல்கள் கேட்பதில் மட்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தேன். 

கல்யாணங்களுக்கு செல்கையில் அங்கே மியூசிக் கச்சேரி நடைபெறுகிறது என்றால் அப்படியே அமர்ந்து விடுவேன். நண்பர்கள் டேய் கல்யாண வீட்டுகாரங்க துரத்தரதுக்கு முன்னாடி போயிடலாம் வாடா என்று அழைக்கும் வரை அமர்ந்து கேட்டு கொண்டிருப்பேன்.என் நண்பனின் திருமணத்தின் போது அவன் மியூசிக் ட்ரூப் ஏற்பாடு செய்திருந்தான். எனக்கும் ஒரு பாட்டு பாட சான்ஸ் வாங்கி கொடு என்றேன். உனக்கில்லாததா என்றான். மியூசிக் ட்ரூபிடம் சொல்லியும் வைத்திருந்தான். ஆனாலும் நான் மேடைக்கு அருகில் சென்று காத்திருந்த போது தான் மேடை கூச்சம் என்னை தள்ளி போ என்று விரட்டி அடித்தது. தள்ளி போனவனை நண்பன் போ போய் பாடு என்று கண்களாலேயே மிரட்டினான். நான் ஒரே படபடப்பா இருக்கு இப்ப மேடை ஏறி பாடினால் பாட்டு வராது வெறும் காற்று தான் வரும் என்றேன். எது வந்தாலும் சரி நீ பாடிஆகணும் இங்க நம்ம பிரெண்ட்ஸ் தானே இருக்காங்க என்றார்கள் மற்ற நண்பர்கள். சரி என்று என்னை தயார்படுத்தி கொண்டு மேடை அருகில் செல்வதற்குள் மியூசிக் ட்ரூப் ஹெட் "இப்ப ப்ரோக்ராம் முடிய போகுது. முன்னாடியே வர வேண்டியது தானே" என்றார். உடனே இருக்கைக்கு திரும்பி விட்டேன்.  

சென்னையில் நடந்த இரண்டாவது வலை பதிவர் திருவிழாவில் நண்பர் கோவை ஆவி ஒரு பாடல் எழுதி  டியூன் போட்டு கொண்டு வந்திருந்தவர் கோரஸ் பாடுவதற்கு வாருங்கள் என்று அழைத்த போது யோசிக்காமல் தாமதிக்காமல் அவருடன் உடனே மேடை ஏறி விட்டேன்.இதற்கு காரணம் என் மேடையில் பாடும் ஆசையால் தான்.இந்த படம் ஈரோடு சங்கமம் விழாவில் நான் பேசும் போது எடுத்தது. இந்த பதிவிற்கு மேட்ச் ஆனதால் இங்கே வெளியிட்டிருக்கிறேன்.(பாடற மாதிரி இருக்குல்ல)



ஹிந்தி படமான தில்வாலே துல்ஹனியா படம் எனக்கு ரொம்ப பிடித்த படம். பாடல்களும் அப்படியே. அந்த படத்தின் பாடல்களை நான்  பாடும் போது கேட்கும் வட இந்திய நண்பர்கள் எப்படி ஹிந்தி தெரியாமயே பாட்டை அப்படியே ஞாபகம் வச்சி பாடுறீங்க என்று ஆச்சரியபடுவார்கள். 

இந்த ஆச்சரியத்தை என்றேனும் ஒரு நாள் ஒரு மியூசிக் கச்சேரியில் ஒரு பாடலாவது பாடி எல்லாரையும் ஆச்சரியபடுத்தி விட வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு மியூசிக் கச்சேரி பார்க்கும் போதும் அதில் பாடுபவர்களை ஏக்கத்துடனே பார்த்து கொண்டிருக்கிறேன். (மேடை கூச்சம் இப்ப தான் அகன்றிருக்கு.பார்க்கலாம் என்றேனும் ஒரு நாள் ஆசை நிறைவேறும். இது வரை படிச்ச உங்களுக்கு கல்லோ தக்காளியோ எடுக்கிற எண்ணம் போய் என் ஆர்வத்தை ஊக்கபடுதணும் என்கிற எண்ணம் வந்திருக்குமே.




என்ன எல்லாரும் ஏதோ கமெண்ட் எழுதிட்டு இருக்கீங்க போலிருக்கு.எங்கே எழுதின கமெண்டை வெளியிடுங்க பார்ப்போம். என்ன எல்லாரும் ஒரே வார்த்தையே ரீபீட் 
பண்ணி எழுதிருக்கீங்க.

 நீ ஆணியே புடுங்க வேணாம்.

ஆர்.வி.சரவணன் 

எனக்கு பாடற ஆர்வம் இருக்குனு மட்டும் எழுதினா படிக்க உங்களுக்கு சுவாரசியம் இருக்காது என்பதால் கொஞ்சம் மானே தேனே போடற மாதிரி கிண்டல் கலந்து எழுதிருக்கேன். பட் என்னோட ஆர்வம் 100% நிஜம். 

  

வெள்ளி, அக்டோபர் 17, 2014

சில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2



சில நொடி சிநேகம் - பல குறிப்புகள் 2

கும்பகோணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் அருள் மிகு சாரங்கபாணி கோவிலும் ஒன்று . அந்த கோபுரத்தின் எழில் தோற்றம் பிரம்மாண்டம் அந்த வழியே செல்லும் என்னை ஈர்க்கும் .நிறைய முறை என் செல் போனில் படம் பிடித்திருக்கிறேன்.  



இந்த கோவிலின் கோபுரத்தில் இருந்து முதல் ஷாட் எடுக்கலாம்  என்று முடிவு செய்து ஒளிப்பதிவாளர்களுடன் அங்கே சென்று எடுத்தேன். நான் ஸ்க்ரிப்டில் ஒரு கோவில் கோபுரத்தில் இருந்து படம் ஆரம்பிக்கிறது என்பதாக எழுதியிருந்தேன். அது நான் விரும்பும் கோவில் கோபுரத்தில் இருந்தே ஆரம்பமானதை கடவுள் அருள் என்றே  எடுத்து கொண்டேன்.



அரசன், கோவை ஆவி துளசிதர், மூவருக்குமே மேக்கப் வேண்டாம் என்று முடிவு செய்திருந்தோம். கோவை ஆவி தாடியுடன் வந்திருந்தார். நீங்க சொன்னால் எடுத்துடறேன் இல்லேன்னா இப்படியே இருக்கட்டுமா என்று கேட்டார். நான் தாடியை எடுத்துடுங்க என்றேன். (லவ் சப்ஜெக்ட் பண்றப்ப வச்சிக்கலாம்) அது போல் மூவரும் காஸ்ட்யூம் எடுத்து வந்திருந்தார்கள். அவற்றிலிருந்து செலக்ட்செய்தோம் 



 ஷூட்டிங் தொடங்கிய  அரை மணி நேரத்திற்குள் எனக்கு தோன்றியது  என்ன தெரியுமா. எழுதியதை அப்படியே படம் பிடிப்பது பெரிய சவால்.  ஆம் உதாரணத்திற்கு ஒன்று சொல்கிறேன். கேமரா நடு ரோட்டில் மையத்தில் வைக்க பட்டிருக்க இரு புறமும் வாகனங்கள் செல்ல வேண்டும் ஒரு குறிப்பிட்ட நொடிகள் வரை இந்த காட்சி எந்த ஒரு கட் டும் இல்லாமல் வர வேண்டும் என்று நான் எழுதியதை எடுக்க சிரமப்பட வேண்டியிருந்தது. நடுவில் கேமரா வைத்த போது  தான் பெரிய வேன்  ஒன்று தெருவையே அடைத்து கொண்டுவந்தது. வண்டியில் செல்பவர்கள் பார்த்து கொண்டே சென்றார்கள் காட்சியில் வர வேண்டிய வாகனம் சரியான படி வந்து நிற்கவில்லை. மீண்டும் தூரம் சென்று திரும்பி வாருங்கள் என்று  சொல்ல வேண்டியதாயிற்று.



ஆரம்ப காட்சி எடுக்கப்பட்ட போது ,இருவரில் ஒருவர் சரியாக வசனம்
சொல்லியிருந்தார். இன்னொருவரிடம் முக பாவம் சரியாக வரவில்லை. இருவரும் சரியாக செய்தால் அந்த காட்சியில் தலை காட்டும் வேறு ஒருவர் சொதப்பி இருப்பார். இப்படியாக நிறைய டேக் போயிற்று. எனக்கு கொஞ்சம் டென்சன் ஆகி விட்டது. காரணம் ஒரே நாள்  படப்பிடிப்பு  அதற்குள் அனைத்தையும் முடித்தாக வேண்டும். அதனால் வந்த டென்சனில் நான் கொஞ்சம் பரபரப்பானேன். அரசனும்  கோவை ஆவியும்   சார் பயங்கர கோபம் வந்துடுச்சு உங்களுக்கு என்று அப்புறம் என்னிடம் சொன்னார்கள்   நான் கோபப்படவில்லை டென்சன் தான் ஆனேன் என்று கோபத்துக்கும் டென்சனுக்கும் உள்ள வித்தியாசங்களை எடுத்து சொன்னேன். இருந்தும் அது கோபம் என்றே பதிவாயிற்று.

ஆரம்பத்தில் இப்படி இருந்தாலும் போக போக சரியாகி விட்டது. ஏனெனில் துளசிதர்  சார் தவிர நாங்கள் எல்லாரும் புதியவர்கள் தானே. அதனால் தொடக்கத்தில் இருந்த சிரமம் குறைந்து பின் வேலை எளிதாக ஆரம்பித்தது. துளசிதரன் அருகில் இருந்தது எங்களுக்கு  ஒரு புதிய பலத்தை கொடுத்திருந்தது என்றே சொல்லலாம்.



அந்த இடத்தில காட்சிகள் எடுத்து முடித்த பின்  அடுத்து பேருந்து நிலையம் நோக்கி எல்லாரும் கிளம்பினோம் . அங்கே எப்போதுமே கூட்டமாக இருக்கும். எப்படி எடுக்க போகிறோம் என்று எல்லாருக்குமே ஒரு தயக்கம் இருந்தது. ஆனால் நாங்கள் பயந்த அளவிற்கு ஒன்றுமில்லை. பொது மக்கள் யாருமே எங்களை தொந்தரவு செய்யவில்லை சிலர் வேடிக்கை பார்த்தார்கள் பலர் விசாரித்து விட்டு அகன்றார்கள். மேலும் படப்பிடிப்புக்கு ஏற்பாடு செய்து தரும் கே.கே.எஸ் ராஜா அவர்களும் படப்பிடிப்பு முழுவதும் எங்களுடனே இருந்தது எங்களை இன்னும் சுதந்திரமாய் செயல பட வைத்தது.



அதற்குள் மதியம் வந்து விட லஞ்ச் ப்ரேக் விடப்பட்டது. பின் மதியம் தொடங்கி நடந்த படபிடிப்பை பார்க்க  தஞ்சாவூரில் உள்ள என் மாமா அத்தை வந்தது ஆச்சரியமாய் இருந்தது.  என் வீட்டில் மனைவி அம்மா எனது மகள் தங்கை வந்திருந்தார்கள்.   என் தங்கை கணவர் 
காலை முதல் எங்கள் கூடவே இருந்து உதவி செய்து கொண்டிருந்தார். என் தம்பி அலுவலகத்திற்கு லீவ் போட்டு விட்டு வந்து கூடவே இருந்து சாப்பாடு ஷூட்டிங் கிற்கு  தேவையான ஏற்பாடுகளை செய்து கொண்டிருந்தார்.( இந்த படத்தின் தயாரிப்பாளர் அல்லவா )  அவரும் படத்தில் நடிக்க ஆர்வபட்டார்.  நிறைய டேக் வாங்கினார். என்னிடம்  சலிப்பையும் வாங்கி கொண்டார் . என் மகன் ஹர்ஷவர்தன் ஒளிப்பதிவாளர் ஜோன்ஸ் உடன் செட்டிலாகி விட்டான் . அவனுக்கு போட்டோகிராபி யில் ஆர்வம் இருக்கிறது. 




மதிய லஞ்ச் ப்ரேக் கிற்கு பின் படபிடிப்பு தொடர்ந்து நடந்தது . படப்பிடிப்பில் எல்லோரும் காட்டிய ஈடுபாடு க்கு ஒரு உதாரணம் பார்ப்போம். அரசனுக்கு நான் வசனம் சொல்லி கொடுத்தேன். அரசன் "சார் நீங்க  எழுதின ஸ்கிரிப்ட் ல வசனம் இப்படி இருக்கு நீங்க மாற்றி சொல்றீங்க" என்றார். தெரியும் இது நல்லாருக்கு அதனால்  இப்படியே சொல்லுங்க" என்றேன். உடனே கீதா ரங்கன் மேடம்  "சார் டப்பிங் ல பிரச்னை  வருமே " என்றார். " இப்ப சொல்ற வசனத்தை நோட் பண்ணிடுங்க"  என்றேன்.கீதா ரங்கன் அவர்கள் இந்த படத்தில் உதவி இயக்குனராக  பணியாற்றியிருக்கிறார் . இந்த படத்தின் சப் டைட்டில் ஆங்கிலத்தில் அவர் தான் மொழி பெயர்த்து எழுதியிருக்கிறார். படத்தின் மீது அவருக்குள்ள ஆர்வம் எங்கள் அனைவருக்கும் உதவியாக இருந்தது. 

பின் மீண்டும் பேருந்து நிலையம் சென்றோம். பேருந்து நிலையத்தின் வாசலில் எடுக்க வேண்டிய காட்சிகளை எடுத்தோம். ஆறு மணிக்கு மேல் இருட்டி விடும் என்பதால் அதற்குள் எடுத்தாக வேண்டிய கட்டாயம். காலையில் எனக்கிருந்த பரபரப்பு இப்போது அனைவரையும் தொற்றியிருந்தது. பின் நல்ல படியாக படப்பிடிப்பை முடித்த போது . 
 நாங்கள் அனைவரும் மிகவும் களைத்து போயிருந்தோம். இருந்தும் 
அந்த களைப்பை மீறி எங்கள் முகங்களில்  படப்பிடிப்பை முடித்த உற்சாகம் வெளிப்பட்டிருந்தது.

இந்த படப்பிடிப்பில் எங்களோடு இருந்த்து உதவி செய்த இன்னொருவர் என் தம்பியின் நண்பர் பிரபாகரன். அவர் கும்பகோணத்தில் பான்சி ஸ்டோர் கடை வைத்துள்ளார். படப்பிடிப்பு அன்று அவர் கடை திறக்கவில்லை.  எங்களோடு  முழுக்க முழுக்க இருந்து உதவி கொண்டிருந்தார். அவரும் இதில் நடித்திருக்கிறார். இவரது மகனும் என் தம்பியின் இன்னொரு நண்பரின் மகனும் கூட நடித்திருக்கிறார்கள் 

சென்னை வந்தவுடன் இரண்டு நாட்களுக்கு பின்னே  எடிட்டிங் தொடங்கியது. ஜோன்ஸ் நண்பர் கார்த்திக்கின் ஸ்டுடியோ வில் எடிட்டிங் நடந்தது. எல்லோரும் வேலைக்கு போய் விட்டு இரவு வந்து எடிட்டிங்கில் ஈடுபடுவோம்.  நடு நடுவே கேப் விட்டு எடிட்டிங் பத்து நாட்கள் வரை தொடர்ந்தது.


பின் டப்பிங் தொடங்கியது அதை  ஒரே நாளில் முடித்தோம் அதாவது இரவு 8 மணிக்கு தொடங்கி மறு நாள் காலை 5 மணிக்கு முடிந்தது. இதில் ஒரு சுவாரசியம் என்னவென்றால் டப்பிங் ஆரம்பித்து கொஞ்ச நேரத்தில் எல்லோரும் தூங்க ஆரம்பித்து விட்டார்கள் .ஒவ்வொருவராக எழுப்பி டப்பிங் பேச வைத்தோம். கோவை ஆவி ஷூட்டிங் காக கோயம்புத்தூரிலிருந்து வந்தவர் எடிட்டிங் டப்பிங் முடித்த பின்பே ஊருக்கு சென்றார். 


படத்தின் ரஷ் ரெடி யானது . நான் எப்போதுமே எழுதும் முன்  நெருக்கமான ஒன்றிரண்டு அலுவலக நண்பர்களுடன் விவாதிப்பேன். அவர்கள்  சொல்லும்ஆலோசனைகளை கவனத்தில் எடுத்து கொள்வேன் அலுவலக நண்பர்கள் மற்றும்  பாலகணேஷ் சார்,சீனு, ஸ்கூல் பையன் ஆகியோரை அழைத்து படத்தை பார்க்குமாறு சொன்னேன் . அவர்களும் ஆர்வத்துடன்  பார்த்து விட்டு குறைகளை சொன்னார்கள்.  நான் இதனால் வருத்தபட்டேன் என்று அவர்களுக்கு தோன்றியது .குறைகளை சொல்ல சொல்லி தான் நான் அவர்களை படம் பார்க்க சொன்னேன்.  அப்படி இருக்கையில் எப்படி அவர்கள் மீது வருத்தம் வரும். எனது படம் சரியாக வர வேண்டும் என்ற அக்கறையில் சொன்னது அது . ஆனால் எனக்கு வருத்தம் இருந்தது என் மேலே தான் . சரியாக கவனமெடுத்து செய்யவில்லை இன்னும் உழைப்பை  தந்திருக்க வேண்டும் இப்படி  விட்டு விட்டோமே என்று நினைத்து கொண்டேன். ஏனெனில் என் குடும்பத்தில் என் மேல்  நம்பிக்கை வைத்து படம் எடுக்க, செலவு செய்ய அனுமதி அளித்திருந்தார்கள். அப்படி இருக்கையில் படம் சரியாக வரவில்லை என்றால் என்னாவது . 




யோசித்தேன்.ஜோன்ஸ் இந்த விசயத்தில் முழு ஒத்துழைப்பு தந்தார்.. மீண்டும் ஒவ்வொரு காட்சியாக பார்த்து சரி செய்ய ஆரம்பித்தோம் .வேறு ஷாட் பொருத்தி பார்த்தோம். இப்போது திருப்தி வந்தது. மீண்டும் வலைத்தள நண்பர்களும் அலுவலக நண்பர்களும் பார்த்தார்கள். ஓகே என்றார்கள் . பைனல் ரெடியானது.



எனக்கு ஒரு ஆசை இருந்தது. எனக்கு பிடித்தமான  நடிகர் இயக்குனர் எனது குரு  திரு கே.பாக்யராஜ் அவர்களை சந்தித்து ஆசி பெற வேண்டும் என்பது. நண்பர்களுக்கும் ஆசைபடவே திரைக்கதை அரசனை சென்று சந்தித்தேன். மற்றவர்கள் அலுவலக வேலையில் இருந்து வர முடியவில்லை. கோவை ஆவி கீதா ரங்கன் மேடம் என் தம்பி தம்பி மனைவி வந்தார்கள். ஆசி பெற்றோம் படம் பார்க்குமாறு வேண்டினேன். மறுப்பு சொல்லவில்லை அவர். படம்  பார்த்தார். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் என்று சொன்னார். அவரிடம் ஆசி பெற்று வந்தது ரொம்ப சந்தோசமாக இருந்தது. (நண்பர் எஸ் .எஸ்.பூங்கதிர் அவர்களுக்கு தான் நன்றி  சொல்ல வேண்டும்) 

 இந்த இனிய தருணத்தில், என் ஆர்வத்துக்கு தடை சொல்லாமல் ஊக்கம் தரும் என் அம்மா என் மனைவி மற்றும் என் உறவினர்களுக்கு  என் இதயம் நிறைந்த அன்பை தெரிவிக்கிறேன் 

நான் இணையத்துக்குள் எழுத ஆரம்பித்து வைத்த  என்  நண்பர் வினோ  மேலும் என் எழுத்துக்களை படித்து எனக்கு தொடர்ந்து ஆலோசனை தந்து வரும் நண்பர் கிரி , மற்றும் நிஜாம் பக்கம் நிஜாமுதீன் மனசு குமார்,  கே.ஆர்.பி செந்தில் மற்றும்  வலைத்தள நண்பர்கள்,முக நூல் நண்பர்கள் அனைவரயும் நன்றியுடன் நினைத்து பார்க்கிறேன்.

இந்த படம்   தொடங்கியதில் இருந்து இதோ இந்த நிமிடம் வரை என்னுடன் இனைந்து பணியாற்றிய அரசன் கோவை ஆவி மற்றும் துளசிதரன் சகோதரி கீதா ரங்கன் இவர்கள்  இல்லையேல் குறும்படம் சாத்தியமில்லை




சரி எல்லாம் சொல்லிட்டே படம் எப்ப ரீலீஸ் அதை சொல்லு முதல்ல என்று கேட்கிறீர்களா மதுரையில் நடைபெறும் 3 வது வலைபதிவர் சந்திப்பில் சில நொடி சிநேகம் குறும்படம் வெளியிடப்படவிருக்கிறது. அன்றே இணையத்திலும் வெளியிடபடுகிறது. அதற்கு ஒத்துழைப்பு தந்து  வெளியிட விருப்பம் தெரிவித்த நம் நண்பர்கள் திண்டுக்கல் தனபாலன், தமிழ்வாசி பிரகாஷ் மற்றும் விழா குழுவினருக்கு எங்கள் ஜனனி ஆர்ட்ஸ் குழு 
சார்பாக  நன்றி 

இன்னும் ஒரு வாரம் இருக்கிறதா என்று நீங்கள் சலித்து கொள்ள கூடாது என்பதால், இன்னொரு டீசர் உங்கள் பார்வைக்கு வருகிறது ஒரு குறும்படத்துக்கு எத்தனை டீசர் டா வெளியிடுவீங்க என்று பல்லை கடிக்காதீர்கள். இது இந்த படத்தின் எடிட்டர் ஜோன்ஸ் ஆர்வத்துடன் உருவாக்கியது. 

சில நொடி சிநேகம் டீசர்


உங்களை போலவே நாங்களும் காத்திருக்கிறோம் எங்கள் 
குறும்படத்திற்கான தங்களின் கருத்துக்களுக்கு 
  

FINAL TOUCH 


அடுத்து என்ன என்று கேட்கின்றீர்களா ? ( என்னது கேட்கலியா நீங்க கேட்கலைனாலும் நான் சொல்லியாக வேண்டும். ஒரு விளம்பரத்திற்காவது ) வரும் தீபாவளி முதல், பத்து வாரங்கள் வரை வரும்  தொடர்கதை ஆரம்பிக்கின்றேன்.  ) தொடர்கதையின் பெயர் 

திருமண ஒத்திகை 

எழுத போவது நான் என்றாலும் அது சிறப்படைய போவது 
தங்களின் ஆதரவினால் மட்டுமே. 

நன்றி 

ஆர்.வி.சரவணன் 


புதன், அக்டோபர் 15, 2014

சில நொடி சிநேகம் - பல குறிப்புகள்





சில நொடி சிநேகம் - பல  குறிப்புகள்

எனக்கு பிடித்த வரிகளில் ஒன்று இருட்டு னு இருட்டு  புலம்பறதை விட உன்னால் முடிந்தால் ஒரு மெழுகுவர்த்தி ஏற்று. இதை எதுக்கு இங்கே  சொல்றேன் . குறும்படம் எடுக்கனும்னு ரெண்டு வருஷமா  சொல்லிட்டு இருந்தேன்.இப்படி சொல்லிட்டே இருப்பதை விட முயற்சி செய்யலாமே என்ற ஆர்வத்தில் நான் செய்திருக்கும் முயற்சி தான் இந்த சில நொடி சிநேகம் என்ற குறும்படம். 

எந்த ஒரு படபிடிப்பையும் நான் வேடிக்கை கூட பார்த்ததில்லை.( யாரு உன்னை பார்க்க வேணாம்னு சொன்னாங்க ) கடந்து சென்றிருக்கிறேன் .எந்த ஒரு குறும்பட ஷூட்டிங் கூட கலந்து கொள்ள முடியவில்லை என்ற நிலையில்  நம் நண்பர் துளசிதரன் தன் குறும்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்ள வைத்து  அசிஸ்டென்ட் டைரெக்டர் ஆக தன்னுடன் இணைத்து கொண்டார் .அப்போது நான்  அவரிடம் சொன்ன ஒரு கதையை  கேட்டவர், இதையே டெவலப் பண்ணுங்க சார் என்று சொன்னார் . அந்த கதை ஸ்கிரிப்ட் முடித்து நிமிர்ந்த போது படம் அரை மணி நேரம் வரை ஓடும் போல் தெரிந்தது. 

துளசிதரன், அரசன், கோவை ஆவி, கீதா ரங்கன்,  பாலகணேஷ், ஸ்கூல் பையன் படித்து விட்டு  திருப்தியுடன் தலையசைத்தனர். ஆனால் என் நண்பர் வினோ சரவணன் முதல் படமா இந்த சப்ஜெக்டை எடுத்துக்காதீங்க வேற சின்ன சப்ஜெக்ட் எதுனா பண்ணுங்க அப்புறமா இது பண்ணலாம் என்றார்.  இதே கருத்தை தான் நண்பர் கே.ஆர்.பி செந்தில் அவர்களும் சொன்னார். 

அந்த சப்ஜெக்ட் பண்ணியே ஆக வேண்டும் என்ற துடிப்பில் இருந்த நான் இதனால் தளர்ந்து போய் உள்ளே நம்பிக்கை வீழ்ந்து போய்  நிற்கையில்  என் பார்வையில் தெரிந்தது . ஒரு விஷயம். அரசன் கோவை ஆவி துளசிதரன் இவர்கள் மூவருடனும் ஒரு மாதமாக ஸ்கிரிப்ட் விசயமாக பேசி பேசி அவர்களுக்கு குறும்படம் மேல்மிக  பெரிய ஆர்வம்  வந்திருந்தது அதை சிதைக்க போகிறோமே  என்று நினைத்து ரொம்ப கவலைப்பட்டேன். கோவை ஆவி துளசிதரன் சென்னை வருவதற்காக டிரெயின் டிக்கெட் எல்லாம் ரிசர்வ் செய்திருந்தார்கள். எங்கள் வீட்டிலும் எதிர்பார்ப்பு இருந்தது. இப்படி ஒரு சூழ்நிலையில் ப்ரொஜெக்டை தள்ளி போடுவது எப்படி என்று கொஞ்சம் திணறினேன். நண்பர்கள் பரவாயில்ல சார்  டயம் எடுத்து பண்ணலாம் என்றே  சொன்னார்கள். என் அலுவலக நண்பர்கள் "விடாதே வேற சப்ஜெக்ட் உடனே எழுது  நீ படம் பண்ண நினைத்த தேதியில் ஷூட்டிங் பண்ணிடு . அப்புறம் பண்ணலாம் என்று நீ நினைத்து தள்ளி போட்டால்  இந்த ஆர்வம் குறைந்து விடும்" என்றார்கள்.  எனக்கும் அவர்களது கருத்து சரி என்றே பட்டது . விடாபிடியாக வேலையை ஆரம்பித்தேன். எனது ஒரு பக்க சிறுகதை ஒன்றை எடுத்து ஸ்கிரிப்ட் எழுதினேன். அது தான் சில நொடி சிநேகம் 








ஸ்கிரிப்ட் முடித்த பின் ஷட்டிங் எங்கு வைத்து கொள்வது என்ற அடுத்த கேள்வி எழுந்தது கே.ஆர்.பி.செந்தில்  செங்குன்றம் பஸ் ஸ்டான்ட் ல எடுத்துடுங்க என்றார். சரி என்று நானும் என் தம்பியும் அங்கு சென்ற போது அங்கிருந்த டிராபிக் எனை மிரள வைத்தது. இதில் எப்படி ஷூட்டிங் நடத்த முடியும் என்று அதிர்ச்சியானேன். அடுத்த அதிர்ச்சியாக அனுமதி கேட்டு  காவல் நிலையத்தை நாடிய போது 5 இடங்களில் பர்மிசன் வாங்க வேண்டும் வாங்கி வாருங்கள் என்றார்கள். அலுவலக வேலையில்  இருக்கும் நான் 5 அலுவலகங்களுக்கு சென்று அனுமதி வாங்க எது நேரம். எப்படி வாங்குவது என்று மலைப்பானேன். 

  ஒரு மரத்தின் நிழலில் நின்ற படி,  ச்சே என்று  சலித்து கொண்ட படி  குறும்பட ஆசை அவ்வளவு தானா என்ற விரக்தியாய்  இருந்த போது திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. கதை நடைபெறும் களமான கும்பகோணத்தில் அதாவது என் ஊரிலேயே எடுத்தால்  என்ன என்று தோன்றியது.  உடனே என் முக நூல் நண்பர்  வேல் முருகவேல் அவர்களுக்கு போன் செய்தேன். அவர் ஸ்ரீதரன் என்ற நண்பரின் எண்ணை கொடுத்தார்.  அவரை தொடர்பு கொண்ட போது அவர் தான் ஊருக்கு செல்வதால் தனது நண்பர் கே.கே.எஸ் ராஜா வின் எண்  கொடுத்தார்.  அவர் அங்கே சினிமா படபிடிப்புக்கு ஏற்பாடு செய்து தந்து வருகிறார். தொடர்ந்த விரக்தியுடன் , நான் அவரை தொடர்பு கொண்ட போது அவர் "ஒண்ணும் பிரச்சனையில்ல நீங்க ஷூட்டிங் குக்கு தயாரா வந்துடுங்க" என்றார்.  

நண்பர்களிடம் சொல்லி சென்னை டிக்கெட் கான்ஸல் செய்து கும்பகோணதிற்கு   டிக்கெட் போட சொன்னேன் நானும் என் தம்பியும் ஒரு நாள் முன்னதாகவே ஊருக்கு சென்றோம்.கே.கே. எஸ் ராஜா அவர்களை சந்தித்தேன். அவர் நகராட்சியிடம் பணம் கட்டி  அனுமதி சீட்டு வாங்கி வைத்திருந்தார். சந்தோசமாய் அவருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினோம்.

தொடர்ந்து படப்பிடிப்பை எங்கெங்கு வைத்து கொள்ளலாம் என்று சுற்றி பார்த்து இடங்களை  தேர்வு செய்து கொண்டோம். படத்திற்கு பேருந்து ஒன்று தேவைப்பட்டது .என் தம்பியின் நண்பர் அழைத்து சென்று தனியார்  பேருந்து முதலாளியிடம் அறிமுகபடுத்தினார். அவரிடம்  3 மணி நேரத்திற்கு  பேருந்து க்கு பேசி அட்வான்ஸ் கொடுத்தோம்.  அவர்  ஒரு அரை மணி நேரம் கூடுதலாக  ஆனாலும் பரவாயில்ல நிதானமா எடுங்க என்று சொன்னதுடன்   நீங்க நல்லா வரணும் வருவீங்க என்றும்  வாழ்த்தினார். அவரிடம் வியாபாரத்தை மீறிய ஒரு மனிதாபிமானம் குடி கொண்டிருந்தது அவருடன்  பேசிய போது தெரிந்தது . 

அங்கு நடந்த விசயங்களை எல்லாம் உடனுக்குடனே  நண்பர்கள் நால்வருக்கும் தொடர்ந்து ரன்னிங் கமெண்ட்ரி கொடுத்து கொண்டிருந்தேன். அவ்வபோது நான் சந்தோசத்தில் இது  நிஜம் தானா என்று என் கையை  மட்டும் தான் கிள்ளி  பார்க்கவில்லை. (அடுத்தவங்க கையை கிள்ளியிருக்க போறே ) இப்படியாக அன்றைய பொழுது ஏற்பாடுகளில் செல்ல மறுநாள் அதாவது அதிகாலை 2 மணிக்கு நான் விழித்து விட்டேன். என் செல் போனிலேயே ஸ்கிரிப்ட் ஓபன் செய்து  வைத்து கொண்டு படித்து  மனதிற்குள் குறிப்புகள் எடுத்து கொண்டேன். கொஞ்சம் பயமாக கூட இருந்தது.  (பள்ளி கல்லூரி பரீட்ச்சைக்கு கூட நீ எழுந்து படிக்காதவன்  என்பதை இங்கே  அவசியம் சொல்லிரு )  


பொழுது விடிந்தது. நானும் தம்பியும் கிளம்பி கும்பகோணம் பேருந்து நிலையம் வந்து நண்பர்கள் வருகைக்காக காத்திருந்தோம். என் மகன் ஹர்ஷவர்தன் அப்பா நான்  இன்னிக்கு ஸ்கூல் க்கு லீவ் போடறேன் ப்ளீஸ் என்று சொல்லி படப்பிடிப்புக்கு வருகிறேன் என்று சொன்னான்.  சரி என்று சொல்லி விட்டோம்  அவன் ஆர்வத்துடன் உருவாக்கிய போஸ்டர்கள் தான் இங்கே இருக்கிறது. 

காலையில் தான்  படம் எடுக்கும் விசயத்தை குறித்து முக நூலில் ஸ்டேடஸ் போட்டேன்.


இறை அருளின் துணையுடன், என் வாழ்க்கையின் பெருங் கனவொன்று நான் பிறந்து வளர்ந்த மண்ணிலே நனவாகும் நாள் இன்று.இந்த நாளுக்கு என்னை கொண்டு வந்ததில் என் குடும்பத்தினருடன், வலைப்பதிவு மற்றும் முக நூல் நண்பர்கள் தந்த ஊக்கத்திற்கும் மிக முக்கிய பங்கிருக்கிறது.உங்களின் வாழ்த்துக்களுடன் இனிதே தொடங்குகிறேன் இந்நாளை


துளசிதரன் அவரது மனைவி, அரசன், கோவை ஆவி, கீதா ரங்கன், ஒளிபதிவாளர்கள் ஜோன்ஸ் கார்த்திக் வந்திறங்கினார்கள். அவர்கள் மூவரையும் ஏற்கனவே வீட்டில் வசனங்கள் படித்து ரிகர்சல் பார்த்து விட்டு வாருங்கள் என்று சொல்லியிருந்தேன். இந்த பட விசயமாக செல் போனில் மட்டுமே நாங்கள் டிஸ்கசன் செய்திருந்தோம். நேரில் சந்தித்து கொள்ளாமலே.






எனவே ஹோட்டல் அறையில் ரிகர்சல் பார்த்து கொள்ளலாம் என்றிருந்த எங்களுக்கு  அவர்கள் வந்த பேருந்துகளின் தாமதத்தால் ரிகர்சல் பார்க்காமலே ஷூட்டிங் ஸ்பாட் செல்ல வேண்டி   வந்தது. 



நாளை இந்த கட்டுரையை முடித்து விடுவேன் (என்று நினைக்கிறேன்) அது வரை  இந்த படத்தின் நாயகர்களில் ஒருவருமான நண்பா கோவை ஆவி ரெடி செய்திருந்த  குறும்பட டீசர் பார்த்து விடுங்கள் 





ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, ஜூன் 15, 2014

வெற்றி தொட்டு விடும் தூரம் தான்






வெற்றி தொட்டு விடும் தூரம் தான்


வாழ்க்கையில் கிடைக்கும் சின்ன சின்ன வெற்றிகள், எப்போது நினைத்து பார்த்தாலும் இனிமையான ஒன்று.அதிலும் ரொம்ப கஷ்டப்பட்டு கிடைச்ச வெற்றின்னா அது இன்னும் ஸ்பெஷல் ஆச்சே.வாங்க அப்படி கஷ்டப்பட்டு எனக்கு கிடைத்த சின்ன வெற்றியை பற்றி பார்ப்போம் 

1991 ஆம் வருடம் நான் ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனி யில் சூப்பர் வைசரா 
நாகப்பட்டினத்தில் வேலை பார்த்துட்டு இருந்தேன். அதாவது  பில்டிங் வேலை நடக்கும் இடங்களில் ஊழியர்கள் சம்பளம். பொருட்கள் பாதுகாப்பு, கணக்கு வழக்கு அது இது எல்லாமே நம்ம தலையில தான்.( உதரனத்திற்க்கு புடிங்கி போட்ட ஆணி காணாமல் போனால் கூட இவன் வித்து சாப்பிட்டு இருப்பானோ னு நினைக்கிற அளவுக்கு ரிஸ்க் உள்ள ஜாப் இது. இதை பற்றி நான் காமெடி யாக இப்படி சொல்வதுண்டு " தினம் தினம் நம்மை நேர்மையானவன் னு சீதை போல நிரூபிக்க வேண்டியிருக்கு) அதுல பாருங்க கம்பெனி முதலாளி தன்னோட உறவினர்களை நம்பினால் வேலை சரியாக நடப்பதில்லை என்று அவர்களுக்கு பதிலாக என்னை நியமித்தார். அதனால் அவரது வீட்டில் என்னை யாரும் மதிப்பதில்லை. மேலும் 
நான் எப்போது தப்பு செய்வேன் என்ற எண்ணத்திலும்  இருந்தார்கள் போலிருக்கிறது. இதை அறியாமல் நான் அந்நியன் அம்பி போல் எல்லோருடனும் நல்ல விதமாக பழகி கொண்டிருந்தேன். 

இப்படி செல்கையில் பில்டிங் வேலை நடைபெறும் இடத்தில் தண்ணீர் இறைக்கும்  மோட்டார் பழுதானதால் (முதலாளியின்  உறவினர் வீடு புதுகோட்டையில் இருந்தது.) என்னை உறவினர் வீட்டில் இருக்கும் மோட்டரை எடுத்து வர சொல்லி முதலாளி அனுப்பினார். அங்கு எனக்கு வரவேற்பே சரியில்லை. மோட்டரை எடுத்து கொடுக்கும் போது கூட பத்திரமாய் கொண்டு போய் சேர் என்ற வெறுப்பான குரலில் தான் கொடுத்தார்கள்.இது எனக்கு வருத்தம் தான் எனினும் ,நாம் வேலைக்காரன்  மரியாதை எல்லாம் எதிர்பார்ப்பது கூடாது என்று சமாதான படுத்தி கொண்டு மோட்டருடன் புதுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூர் வந்து விட்டேன். 

சரியான வெயில். தஞ்சாவூர் பேருந்து நிலையத்தில் நாகப்பட்டினம் செல்லும் பேருந்தில் ஏறி டிரைவர் சீட்டுக்கு எதிரில் இருக்கும் சீட்டுக்கு கீழே மோட்டரை வைத்து விட்டு உட்கார இடம் போட்டு விட்டு கீழே நின்று பேசி கொண்டிருந்த டிரைவரிடம் "தாகமாக இருக்கு சர்பத் சாப்பிட்டு விட்டு வந்து விடுகிறேன்" என்றேன். டிரைவரும் சரிங்க என்றார். நானும் தூரமாக எல்லாம் செல்லாமல் எதிரில் இருந்த கடையில் சர்பத் வாங்கி  தண்ணீர் குடிப்பது போல் அவசரமாக குடித்து விட்டு திரும்புகிறேன். பேருந்தை காணோம்.அந்த இடத்தில் வேறொரு பேருந்து இடத்தை ஆக்ரமித்து கொள்ள வந்து கொண்டிருந்தது. 

வடிவேலு போல் பதட்டமாய் ஓடி வந்தேன். அங்கே நின்றிருந்த மற்ற ஓட்டுனர்களிடம் விசாரித்தேன் அவர்கள் "அதோ போகுது பாருங்க" என்றார்கள். வண்டி ஆறேழு வாகனங்களுக்கு முன்னால் சாலையில் வேகமாய் விரைந்து கொண்டிருந்தது. எப்படி ஓடி பிடிப்பது என்று தெரியாமல் நான் முழிக்க அங்கிருந்தவர்கள்."அடுத்த வண்டி கிளம்புது பாருங்க. அதில ஏறி போய் சேஸ் பண்ணுங்க" என்றார்கள். நான் உடனே பேருந்தில் ஏறி நடத்துனரிடம் 
விஷயத்தை பதட்டதுடன் சொல்ல டிரைவர் கிட்டே போய் சொல்லுங்க என்றார் அவர்.
கூடவே அடுத்த ஸ்டாப்பிங் க்கு டிக்கெட் கிழித்து என்னிடம் திணித்து காசை வாங்கி 
கொண்ட பின்னே டிரைவரிடம் அனுப்பினார். 

நான் டிரைவரை நோக்கி விரைந்தேன் இல்லை இல்லை தாவினேன். ஏற்கனவே நம்மை எப்ப கவிழ்க்கலாம் என்று ரெடியாக இருக்கிறார்கள் இதில் நான் மோட்டரை தொலைத்தால் என்னாகும் என் கதி. வேலை போகும்.  வீட்டில் என்னை  உண்டு இல்லை என்றாக்கி விடுவார்கள். இதெல்லாம் கூட விட்டு விடலாம்.முதலாளி என் மீது வைத்த நம்பிக்கையை விட முடியுமா. விட கூடாது கடைசி வரை போராடி பார்த்து விட வேண்டும் என்ற வேகத்துடன் நான் டிரைவர் அருகே சென்று கலங்கிய கண்களுடன் சொன்ன போது அவர் "டோன்ட் 
வொர்ரி பிடிச்சிடலாம்" என்று நம்பிக்கை தந்தவர் கூடவே, "அந்த பேருந்தில் இருந்து இறங்குபவர் யாரேனும் மொட்டரோடு இறங்கி விட்டால் ஒன்றும் செய்ய முடியாது" என்ற யதார்த்தத்தையும் சொன்னார்.அந்த பேருந்துக்கும் எங்கள் பேருந்துக்கும் இடையில் நான்கு பேருந்துகள் ஒரு லாரி இதெல்லாம் இருந்தன. நான் விட்டால் கதறி அழுது விடுவேன் போல் இருந்தது. கடவுளின் மேல் கோபம் கூட வந்தது. 

இடையில் இருந்த வண்டிகளை ஓவர் டேக் செய்து பேருந்தின் டிரைவர் வேகமெடுத்து விரைவாய் சென்றார். தஞ்சாவூரில் சாந்தபிள்ளை கேட் என்று ஓரிடம் உண்டு. அங்கு சாலை இடது புறம் திரும்பும் அந்த இடத்தில் பேருந்தின் டிரைவர் வண்டியை ஒடித்து வலது புறம் சென்று முன்னே சென்று கொண்டிருந்த பேருந்தின் குறுக்கே வண்டியை நிறுத்தி  அந்த பேருந்தின் டிரைவரிடம் வண்டியை நிறுத்து என்று சைகை காட்டினார். நான் நன்றி கூட சொல்லாமல் வேகமாய் இறங்கி சென்று அந்த பேருந்தில் ஏறினேன். முதலில் மோட்டார் வைத்த இடத்தை தான் பார்த்தேன். இருந்தது. மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்க டிரைவரை பார்த்தேன். டிரைவருக்கு என்னை பார்த்தவுடன் விஷயம் புரிந்து விட்டது. 

நான் உங்க கிட்டே சொல்லிட்டு தானே போனேன். இப்படி விட்டுட்டு வந்துட்டீங்களே என்று கோபமும் உடைந்து போன குரலிலும் நான் கேட்க  சுத்தமா நீங்க சொன்னதை மறந்துட்டேன் மன்னிச்சுடுங்க என்றார் அவர். என்னை அழைத்து வந்த பேருந்தின் டிரைவரிடம் இங்கிருந்த படி நன்றி சொன்னேன். இருக்கையில் அமர்ந்த பின் ஆசுவாசபடுத்தி கொண்டேன்.எனது சோர்வை கண்டு  டிரைவர் மீண்டும் சாரி என்றார் கெஞ்சும் பாவனையில் இதற்கு அப்புறம் நடந்த காமெடி
யை கேளுங்க 

பேருந்து கொரடாச்சேரி என்ற பேருந்து நிலையத்தில் நின்றது வண்டி 5 நிமிஷம் நிக்கும் டீ சாப்பிடுபவர்கள் சாப்பிடலாம் என்ற குரலுடன் நடத்துனர் இறங்க கூடவே வண்டியில் இருந்தவர்கள் இறங்கினார்கள். இறங்க போன டிரைவர் என்னை பார்த்து விட்டு "டீ சாப்பிடல" என்று கேட்டார். "பட்டது போதும்" என்றேன் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளாமலே அவர் சிரித்த படி "உங்க முகம் பார்க்காமல் நான் வண்டியை எடுக்க மாட்டேன் பயப்படாம வாங்க" என்றார். சரி என்று இறங்கி டீ சாப்பிட்டேன் என் டென்சனுக்கு அந்த நேரத்தில் டீ இதமாய் இருந்தது. நான் வண்டியை விட டிரைவரின் மேல் ஒரு கண் வைத்த படியே தான் டீ சாப்பிட்டேன் டிரைவர் அதை பார்த்து  "விட்டுட்டு போக மாட்டேன் சார் நம்புங்க" என்றார் கெஞ்சலாய். எனக்கே சிரிப்பு வந்து விட்டது 

நாகபட்டினத்தில் நான் இறங்க வேண்டிய ஸ்டாப்பிங் என் அலுவலகம் தண்டி தான் 
என்றாலும் டிரைவர் எனக்காக வண்டியை நிறுத்தி எனை இறக்கி விட்டு சென்றார் 


FINAL PUNCH 

1991 ஆம் வருடம் எனக்கு சம்பளம் 600 ரூபாய் அப்போதைய மோட்டாரின் விலை 10000 ரூபாய்.மோட்டார் காணாமல் போயிருந்தால் எப்படியும் 2 வருடங்கள் நான் சம்பளம் இல்லாமல் வேலை பார்க்க வேண்டியிருந்திருக்கும். முதலாளி என்னை நம்பி தொடர்ந்து வேலைக்கு வைத்திருப்பார் என்பது நிச்சயமில்லை. முதலில் எங்கிருந்தாவது பணம் வாங்கி கொண்டு வந்து கட்டு என்று தான் சொல்லியிருப்பார் நான் எங்கே செல்வேன் பணத்துக்கு.இந்த கஷ்டங்கள் எல்லாம் நடைபெறாமல் என் முயற்சி வெற்றியை தொட காரணம் பேருந்தை விரட்டி வந்த அந்த இன்னொரு டிரைவர் தான். அவரை சரியான நேரத்திற்கு கடவுள் தான் அனுப்பியிருக்கிறார் என்று நினைக்கிறேன். இதை இப்படி கூட எடுத்து கொள்ளலாம் என்ன தான் விடாமுயற்சியோடு போராடினாலும் கடவுளின் அருட்பார்வையும் சேரும் போது தான் வெற்றியை நம்மால் தொட முடிகிறது 

ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, மே 04, 2014

இதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா



இதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா

நீ எதற்கு ஆசைபட்டாய். அப்படி என்ன தான் நடந்துடுச்சுன்னு பெரிசா அலட்டிக்கிறே என்று உங்களுக்கு தோணுது. சொல்றேன். என் வாழ்க்கையை நானே அவ்வபோது வேடிக்கை பார்ப்பவன் போல் நினைத்து பார்ப்பதுண்டு அதில் இறைவன் ஒவ்வொருவர் வாழ்க்கையின் சில தருணங்களை எப்படி திரைக்கதை போல் அமைக்கிறான் என்று ஆச்சரியபடுவதுண்டு.

எனக்கு நடிகர்களில் இருவர் மிக பிடித்தமானவர்கள். ஒருவர் நடிகர் இயக்குனர் கே.பாக்யராஜ். இன்னொருவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். 
(இருவர் சம்பந்தப்பட்ட எந்த செய்தியானாலும் நான் புத்தகமோ பேப்பரோ  வாங்கி படித்து விடுவது வழக்கம் ஒரு சீன் வரும் படங்கள் கூட பார்த்து விடுவதுண்டு) இப்படி நான் விரும்பும் இருவரில் ஒருவரான பாக்யராஜ் 
பற்றி இங்கே சொல்கிறேன் 

சென்ற வாரம் ஞாயிறு காலை சன் டிவி யில் பாக்யராஜ் பங்கு பெறும் பட்டிமன்ற நிகழ்ச்சி ஆரம்பமாகிறது. அதில் அவர் பேசுவதை பார்க்கும் போது மீண்டும் எப்போது பார்க்க போகிறோம் என்ற ஏக்கம் மனதிற்குள் தோன்றியது 
( சென்ற வருடம் முதல் முறையாக  நான் அவரை சென்று பார்த்து பேசி  விட்டு வந்திருந்த அனுபவம் இங்கே  இது நம்ம பாக்யராஜ் ) ஏனெனில் எனது இளமை எழுதும் கவிதை நீ.... நூலை அவரிடம் கொடுத்து ஆசி வாங்க வேண்டும் என்ற ஆர்வத்தில் காத்திருந்தேன்.அடுத்த நாள் பழைய பாடல்கள் பார்த்து கொண்டிருந்த போது அதில் வந்த பாக்யராஜ் பாடல் என் ஆர்வத்தை 
இன்னும் உந்தி தள்ளியது. புதன் கிழமை எனது முக நூல் நண்பரும் 
பாக்யா வார இதழ் நிருபருமான திரு எஸ்.எஸ்.பூங்கதிர் அவர்களிடம் சாட்டிங்கில் உரையாடிய போது இதை பற்றி தெரிவித்தேன் சார் 
ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் முடியட்டும் செல்லலாம் என்று சொன்னார்.ஆர்வத்துடன் காத்திருந்தேன் 

வெள்ளி கிழமை மதியம் எனக்கு பாக்யா அலுவலகத்திலிருந்து,  உடனே தொடர்பு கொள்ளவும் என்று மின்னஞ்சல் வந்திருந்தது. . நான் பதட்டமாய் உடனே தொடர்பு கொண்டேன். அவர்கள் உங்கள் செல் நம்பர் கொடுங்க என்றார்கள் நான் கொடுத்து விட்டு எதற்கு சார் என்று ஆர்வத்துடன்
கேட்டேன்.  சார் பேசணும்னு சொன்னாங்க என்றார்கள். அவ்வளவு தான் பதட்டமாகி விட்டது எனக்கு.  செல் போனை கையில் வைத்திருந்த படியே. உற்சாகமாய் காத்திருந்தேன்.ஒரு மணி நேரம் சென்றிருக்கும் போன் ஒலித்தது. இந்திய திரையுலகின் திரைக்கதை அரசனின்  குரல் என் செல் வழியே. சரவணனா என்று. ஆமாம் சார் என்றேன் சந்தோசமாய். 

இப்போது ஒரு சின்ன பிளாஷ் பேக் 
அதாவது நான் முதல் முறை அவரை பார்க்க சென்றிருந்த போது நான் 
எழுதிய சில சிறுகதைகள், பாக்யா வெள்ளி விழா கொண்டாடுவதை வாழ்த்தி நான் எழுதிய பதிவு மேலும் நான் கல்லூரியில் படிக்கும் போது ஜாதி பற்றிய என் முடிவை கண்ணோட்டத்தை தெரிவித்து நான் பாக்யவிற்கு அனுப்பிய கடிதத்திற்கு வந்திருந்த பாராட்டு கடிதம் பாக்யாவின் பாராட்டு கடிதம் 
இவை யாவற்றையும் ஒரு பைலில் போட்டு கொடுத்து உங்களுக்கு நேரமிருக்கும் போது முடிந்தால் படிங்க சார் என்று அன்பு வேண்டுகோள் வைத்து விட்டு வந்திருந்தேன். 

அந்த பைலை அவர் அன்று பார்த்திருக்கிறார் படித்திருக்கிறார் உடனே என்னை தொடர்பு கொண்டு என் செல் நம்பர் வாங்க சொல்லியிருக்கிறார் இதையெல்லாம் அவரே என்னிடம் தெரிவித்து பெற்றோர் என்ற சிறுகதையை பற்றியும் சொன்னார். நீங்களே போன் செய்து என்னிடம் பேசுவதென்றால் எவ்வளவு பெரிய விஷயம். இந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றி விட்டீர்கள் சார் என்றேன் சிரித்தார். எனது படிப்பு வேலை பற்றி விசாரித்தார். நான் அடுத்த வேண்டுகோள் வைத்தேன் தங்களை பார்க்க வர வேண்டும் என்று. அவர் வாங்களேன் என்று சொல்லி அடுத்த நாள் மதியம் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தார். முதலில் என் கையை கிள்ளி பார்த்து கொண்டேன் கனவு கண்டு விட்டோமோ என்று நிஜம் தான் என்று புரிந்தது. சிறகுகள் முளைத்ததாய் ஒரு உணர்வு. இரவும் தூக்கமில்லை ஒரு சாமானியனை ஒரு சாதனையாளர் போன் செய்து பாராட்டுவது சாதாரண செயல் இல்லையே

அடுத்த நாள் அவரை பார்க்க ஆர்வத்துடன் சென்றேன். பெயர் சொன்னவுடன் உள்ளே அழைக்கப்பட்டேன். எனை பார்த்ததும் எழுந்தவர், வாங்க  பாரதி சரவணன் என்றே  அழைத்தார். (கல்லூரி நாட்களில் நான் எனது பெயரை 
பாரதி சரவணன் என்று வைத்து கொண்டேன் அதே பெயரில் தான் பாக்யாவுக்கு கடிதமும் எழுதினேன்.ஆகவே அந்த பெயரிலேயே அழைத்தார்) என்னை அமர சொன்னார். நான் அமர்ந்திருந்தேன் என்றாலும் உள்ளுக்குள் மிதந்து கொண்டிருந்தேன் என்பதை சொல்ல வேண்டுமா என்ன.அவரது புதிய படம் பற்றி கேட்டறிந்தேன்.என் குடும்பம் பற்றி அக்கறையோடு விசாரித்தார். நான் எனது நாவலை அவரிடம் அளித்த போது நான் அவரிடம் சொன்னதை இங்கே தெரிவிக்கிறேன் 

தங்களை துரோனாசாரியாராக ஏற்று ஒரு ஏகலைவன் போல் நானிருந்து தங்களின் திரைப்படங்கள் பார்த்து கற்று கொண்டதை வைத்து நான் 
எழுதிய (திரைக்கதை) நாவல் இது என்று சொல்லி ஆசி பெற்றேன் 

எனது நாவல் புத்தகமொன்றில் ஆட்டோ கிராப் கேட்டேன். நண்பருக்கு வாழ்த்துக்கள் என்று எழுதி கையொப்பமிட்டது ஒரு இன்ப அதிர்ச்சி. 
போட்டோ எடுத்து கொண்ட போது என் தோளில் கை போட்டு புத்தகத்தை கைகளில் பிடித்த படி  போஸ் கொடுத்தார்.இது இன்னும் ஆச்சரியம்.

 அவரது நேரம் நம்மால் வீணாக கூடாது என்று நினைத்து மனது நிறைய உற்சாகத்தை சுமந்த படி விடை பெற்றேன்.இதோ இந்த பதிவை நான் எழுதும் இந்த நிமிடம் வரை அப்போதைய உற்சாகம் நீடித்து கொண்டிருக்கிறது



வினோவுக்கு போன் செய்து சந்தோஷத்தை பகிர்ந்து கொண்டு நன்றி தெரிவித்தேன். எதற்கு என்றார் நீங்கள் என்னை இணையத்துக்குள் இழுக்கவில்லை என்றால் இந்த சந்தோஷம் நடந்திருக்காதே என்றேன் சிரித்தவர் இதில் உங்கள் முயற்சியும் இருக்கிறது சரவணன் என்றார் 
கிரி மற்றும் அரசனிடமும் பகிர்ந்து கொண்டேன்.

அடுத்து நண்பர் எஸ்.எஸ். பூங்கதிருக்கு போன் செய்து, பார்த்து விட்டு 
வந்ததை சொன்ன போது  என் குரலிலிருந்த உற்சாகம் அவர் உணர்ந்திருந்தார். தங்களால் தான் இந்த பாக்கியம் கிடைத்தது. அவரை எப்போது பார்க்க போகிறோம் என்று கனவுலகில் இருந்தவன் கனவை நனவாக்கி பாதை போட்டு கொடுத்தது நீங்கள் தானே. பாக்யராஜ் பற்றி எப்போதெல்லாம் நினைக்கிறேனோ, அப்போதெல்லாம்  நீங்களும் தொடர்ந்து என் 
ஞாபகத்துக்கு வந்து கொண்டே இருப்பீர்கள்  என்று சொல்லி நன்றி தெரிவித்தேன் 

பாக்யாவில் நம் எழுத்தெல்லாம்  வருமா இருபது வருடங்களுக்கு மேல் ஏக்கத்தில் இருந்தவனுக்கு அவரே போன் செய்து பாராட்டு தெரிவித்தது மட்டுமில்லாமல் இதோ இந்த வார பாக்யாவில் எனது சிறுகதையான பெற்றோர் கதையையும் பிரசுரித்திருக்கிறார் (மே 09 -2014) அதற்காக 
தான் குறிப்பிட்டேன் இதற்கு தானே ஆசைபட்டாய் சரவணா என்று. 

எனக்கு கிடைத்த பெருமையை பற்றி இங்கே சொல்வதை விட,  ஒரு வாசகனை ரசிகனை போன் செய்து பாராட்டும் அளவிற்கு எவ்வளவு நல்ல உயர்ந்த மனிதர் அவர் என்பதை அனுபவ ரீதியாய் நான் உணர்ந்ததை 
இங்கே சொல்லவே  இந்த பதிவு. 

உங்களிடம் அந்த சந்தோஷத்தை பகிர்ந்து கொள்ள வேண்டியது அவசியம்.ஏனெனில்,உங்கள் ஒவ்வொருவரின் ஊக்கம் தானே என்னை தொடர்ந்து எழுத வைத்து இதோ இந்த சந்தோச நிகழ்வுக்கு கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது 

FINAL PUNCH

ஆண்டவன் திரைகதை பற்றி ஏதோ சொன்னாயே என்று தானே கேட்கிறீர்கள் நான் இரு வருடங்களுக்கு முன் சூப்பர் ஸ்டார் அவர்கள் என்னை போனில் தொடர்பு கொண்டு பேசுவதாக ஒரு கற்பனை பதிவு (ஜூலை 2011) எழுதினேன் ஹலோ நான் ரஜினிகாந்த் பேசறேன் அதில் அவர் இணையத்தில் உன் பதிவுகள் படித்தேன் பாராட்ட வேண்டும் என்று தோன்றியது ஆகவே போன் செய்தேன் என்பதாக எழுதியிருந்தேன் இது அதீத கற்பனை தான் பேராசை தான். இருந்தும்  ரஜினி ரசிகர்கள் (எனது நண்பர்களும் கூட)  என்னை 
பாராட்டி, சீக்கிரமே உங்கள் ஆசை நிறைவேறட்டும் என்று வாழ்த்தினார்கள். 

பாருங்களேன் ஆண்டவன் நான் மதிக்கும் திரு.பாக்யராஜ் மூலம் அந்த கனவை நிறைவேற்றியிருக்கிறான் எனும் போது தான் அவனின் 
திரைக்கதை பற்றி நினைத்து வியக்கின்றேன்.

ஆர்.வி.சரவணன் 

திங்கள், ஏப்ரல் 21, 2014

விளையாடிய பொழுதுகள்





விளையாடிய பொழுதுகள்

வலைபதிவர்  நண்பர் மனசு செ.குமார் அவர்கள் என்னை தொடர் பதிவுக்கு அழைத்திருந்தார். அதாவது ஒரு வருடத்திற்கு முன்.விளையாட்டுக்களில் சரியான நண்பர்கள் அமையாததால் என்னால் எந்த ஒரு விளையாட்டிலும் பங்கேற்க முடியவில்லை எனவே என்ன எழுதுவது என்றே தெரியவில்லை என்றேன். அவர் உங்கள் கண்ணோட்டத்தில் சிறு வயது விளையாட்டு நினைவுகளை தெரிந்து கொள்ள ஆர்வபட்டு தான் அழைத்தேன் என்றார். முயற்சிக்கிறேன் என்று சொல்லி விட்டாலும் அவரது பின்னூட்டம் பார்க்கும் போதும் அவரது பதிவுகள் படிக்கும்  போதும் என் நினைவில் அவர் அழைத்த தொடர்பதிவு உறுத்தி கொண்டே இருந்தது. ஒரு வழியாக இதோ எழுதி விட்டேன் நண்பா. தாமதத்திற்கு மன்னிக்கவும் .குமார் அவர்களை பற்றி சொல்வதென்றால் அண்ணா என்ற  உரிமையுடன் என் மேல் அன்பு செலுத்தி வருபவர் இணையம் எனக்கு தந்த வியக்கத்தக்க நட்புக்களில் அவரும்  ஒருவர் 

வாருங்கள்  என் சிறு வயது  உலகத்திற்குள் சென்று வருவோம்  

கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் வழியில் இருக்கிறது மேலகொட்டையூர் என்ற ஊர் நான்காம் வகுப்பிலிருந்து பத்தாம் வகுப்பு வரை அங்கே தான் என் வாசம். கூட்டு குடும்பமாக இருந்தோம் என்னுடன் என் தம்பி என் தங்கை மாமா பெண்கள் என்று  சிறுவர் பட்டாளமே இருந்தது  


கிராமம் என்பதால் கபடி கிரிக்கெட் போன்ற விளையாட்டுக்கள் அங்கே பார்ப்பது அரிது. நாங்கள் விளையாட என்றே எங்கள் பொழுதை போக்க என்றே விளையாடிய விளையாட்டுக்களின்  பட்டியலை இங்கே தருகிறேன் 




டயர் விளையாட்டு அதாவது சைக்கிள் டயர் இருக்கும் அல்லவா  சிறு குச்சி வைத்து ஒரு கையால் ஓட்டிய  படியே ஓடி வருவது. ஒரு கடைக்கு போய்  ஏதேனும் வாங்கி வர சொன்னால் கூட இதை ஓட்டிய படியே செல்வோம். வண்டியை நிறுத்துவது போல் டயரை சுவற்றில்  சாய்த்து வைத்து விடுவோம்.என் வண்டியை நீ ஏன் எடுத்தே என்றெல்லாம்  எங்களுக்குள் வாய்க்கால் தகறாரு கூட நடந்திருக்கிறது 

காபி கடை 
இன்ஜெக்சன் மருந்து  பாட்டில் அங்கே கிடைக்கும். அதை எடுத்து கொள்வோம் எங்கள் வீட்டுக்கு பின்னே சாக்பீஸ் பாக்டரி இருந்தது. அதில் உடைந்து விழும் சாக்பீஸ்கலை எடுத்து கொண்ண்டு தண்ணீரில் கரைத்து பால் போல் வைத்து கொள்வோம் வீடு கட்டும் செங்கல்  தூள் சுவரை பெயர்த்து கொண்டு விழுந்திருக்கும். அதை சேகரித்து தண்ணீர் கலந்து டிகாக்சன் போல் வைத்து கொண்டு இரண்டையும் கலந்து பாட்டிலில் ஊற்றுவோம் அது காபி நிறத்துக்கு வந்து விடும் அதை வைத்து காபி விற்பது  போல் விளையாடுவோம் 

சமையல்  
வீட்டில் கிச்சனில் சமையல் பார்த்து அது போல் செய்ய ஆசைப்பட்டு அரிசி எல்லாம் எடுத்து போய் அடுப்பு பற்ற வைக்க முடியாமல் திணறி இருக்கிறோம் அதிலும் நான் எப்படியாவது ஒரு சாதமாவது செய்து பார்த்திட ஆசைப்பட்டு எப்படியோ முயற்சி செய்தும் அடுப்பு பற்ற வைப்பது என்ற ஒரு விஷயத்தால் முடியாமல் போய் விட்டது 

சினிமா காண்பித்தல் 
சினிமா அப்போது எனக்கு ஒரு ஆச்சரிய உலகமாக இருந்தது.இதை பற்றி நான் நிறைய சந்தேகங்கள் கேட்பேன். என் தாத்தா ஒரு பூத கண்ணாடியும்,கேமரா போல் இருக்கும் ஒரு பயாஸ் கோப்பும் வாங்கி கொடுத்தார். பிலிம்கள் கொடுத்திருப்பார்கள் அதை உள்ளே போட்டு படம் பார்க்கலாம். மேலும் நான் லென்ஸ் மூலம் ரூம் இருட்டாக்கி சுவற்றில் ஸ்லைடு போல் மாற்றி மாற்றி காண்பித்தேன் பற்பல படங்களின் பிலிம் துணுக்குகள் இருக்கும் அதையே ஒரு கதை போல் கோர்வையாய் கொண்டு வந்து படம் காண்பிப்பேன் இந்த விளையாட்டு பின் வேஷ்டி யை செவ்வக சட்டத்தில் ஒட்டி சுற்றிலும் கருப்பு கலர் பேப்பர் ஒட்டி முன் புறத்தில் சிறுவர்களை (பெரியவர்கள் கூட) அமர வைத்து பின் பக்கத்தில் படம் ஓட்டியிருக்கிறேன் 


* கிட்டி புள் நிறைய விளையாடி இருக்கிறோம். இதில் என்ன பிரச்னை என்றால் நாம் அடிக்கும் வேகத்தில் எதிரில் வரும் யார் மேலாவது பட்டு விடும்.பின் எங்கள் முதுகில் டின் கட்டுவார்கள் 

* திருடன் போலீஸ் விளையாடியிருக்கிறோம் (பெரும்பாலும் நான் தான் போலீஸ்) தெருவில் இருக்கும் எல்லோரது வீட்டிலும் சென்று ஒளிந்து கொள்ள  வேட்டையாடுவோம் 

 * என் தம்பி நாய் குரைத்து கொண்டே இருக்கிறது என்று கல் எடுத்து எறிய நாய் தப்பித்து விட எதிர் வீட்டு வாசலில் வைத்திருந்த பாத்திரத்தில் பட்டு அது சொட்டையாக அவர்கள் கத்த ஆரம்பிக்க நாங்கள் விழி பிதுங்கி நின்றது இப்போது நினைத்தாலும் சிரிப்பு வரும் 

* வீட்டு ஹாலில் ஒரு கண்ணாடி அலமாரி இருக்கும் நான் விளையாட்டு உற்சாக மிகுதியில் தரச் லைட் டுக்கு போடும் பாட்டரி யை எடுத்து எறிய அது கண்ணாடியில் பட்டு கண்ணாடி உடைந்தது வாடகை 
வீடு என்பதால் ஹவுஸ் ஓனர் கண்ணாடி உடைபட்டதற்கு சார்ஜ் பண்ணினார்.எனக்கும் வீட்டில் அடி  பின்னி எடுத்தார்கள்

 * பல்லாங்குழி மற்றும் தாயகட்டை நிறைய விளையாடி யிருக்கிறேன். அதில் ஒரு பிரச்னை என்ன வென்றால் தோல்வி யை நெருங்கும் போது எரிச்சல் வரும்.இது தவறான ஒன்று. இதை நான் விரும்பவில்லை எனவே அந்த விளையாட்டை பாதியில் நிறுத்தி விட்டேன்.


* கோவிலிலிருந்து சுவாமி உலா வரும் பாருங்கள் அது போல் நானும் என் தம்பியும் சுவாமி போட்டோ வைத்து வண்டி செய்து சுவாமிக்கு அலங்காரம் செய்து சுவாமி புறப்பட்டு வீதி உலா வருவது போல் விளையாடி 
இருக்கிறோம் 

* மணலில் ஆளுக்கொரு இடம் எடுத்து கொண்டு பூங்கா அமைத்து அழகு படுத்தி இருக்கிறோம்.யார் அழகு செய்த பூங்கா நன்றாக இருக்கிறது என்று வீட்டில் உள்ள பெரியவர்களை அழைத்து காண்பித்திருக்கிறோம் 

இப்படியாக விளையாடிய பொழுதுகள், பத்தாவது படிப்புக்கு பின் நாங்கள் கும்பகோணம் வந்து விட்டதால், கதை புத்தகங்கள் சினிமா, நண்பர்களோடு சுற்றுதல் என்று மாறி விட்டது.காலங்கள் மாறினாலும்  விளையாடிய பொழுதுகளின் சுவடு மாறாமல் அப்படியே எனக்குள் பசுமையாய் இருக்கிறது.

இதெல்லாம் விளையாட்டா என்று கூட நீங்கள் நினைக்கலாம்.நடுத்தர வர்க்க குடும்பத்தில் பிறந்தவர்கள் விளையாட்டு பொருள்களை எதிர்பார்க்காமல் இருப்பதை வைத்து விளையாடி மகிழ்வது தானே 
சரியான ஒன்றாகும்.

FINAL PUNCH 

சிறு வயதில் நம்மில் விதைக்கபடுபவை தான் பின் விருட்சமாகும் என்பார்கள் .அது போல் எப்படியாவது ஒரு சாதம் வடித்து பார்த்து விடனும் என்று ஆசைப்பட்டவன், இன்று வேலைக்காக குடும்பத்தை விட்டு தனியே இருப்பதால் நானே தான் 3 வருடங்களாக சமைத்து சாப்பிட்டு கொண்டிருக்கிறேன் சமைக்க தானே ஆசைபட்டே இதோ நீ கேட்டது சலிக்கும் வரை சமைத்து விளையாடு என்பது போல் ஆகி விட்டது நிலைமை. எனது இன்னொரு விளையாட்டான சினிமா காண்பித்தல் தான் என்னை திரை உலகத்திற்குள்  நுழையும் அளவுக்கு என்னை 
தயார் படுத்தி கொண்டிருக்கிறது என்று நினைக்கிறேன் 

ஆர்.வி.சரவணன் 


படம் இணையத்திலிருந்து