புதன், டிசம்பர் 26, 2018

காவ்யாவின் பதட்டம்


காவ்யாவின் பதட்டம் 
காவ்யா பதட்டத்தில் இருந்தாள். அமைதி ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த இரவில் ஐந்தடுக்கு அபார்ட்மெண்டின் ஒரு பிளாட்டின் கதவை திறந்து கொண்டு மெதுவாக வெளி வந்தவள் முகத்தை சால் கொண்டு மறைத்து கருப்பு கண்ணாடி அணிந்திருந்தாள். எந்த வீட்டிலிருந்தோ கடிகாரம் 9 முறை அடித்து ஓய்ந்தது. இருந்தும் அடிக்கடி கையில் கட்டியிருந்த வாட்சை பார்த்து கொண்டாள். காரிடாரில் யாரும் இல்லாததே பெரும் ஆறுதலாக இருந்தது. வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் அடிக்கடி திரும்பி பார்த்து கொண்டாள்.
உள்ளே அவன் ஹாலில் கழுத்தறுபட்டு துடித்து கொண்டிருந்தான். பெருகிய ரத்தம் அவன் உடலெங்கும் பரவ, வாயில் ஒட்டப்படிருந்த பிளாஸ்திரியையும் மீறி மரண அவஸ்தையில் முனகி கொண்டிருந்தான். அவனது அந்த அவஸ்தையை காவ்யாவிற்கு இந்த பதட்டத்திலும் ரசிக்கவே தோன்றியது. என்ன ஆட்டம் ஆடினான். எல்லாத்துக்கும் சேர்த்து இன்னிக்கு கத்தி வச்சாச்சு.
திடீரென்று செல் போன் ஒலிக்க ஆரம்பித்தது. மெலோடியான ட்யூன் தான் என்றாலும் இந்த நேரத்தில் அது அலறல் போலவே இருந்தது. பரபரப்பாகி செல் போனை கட் செய்தவள், வீட்டினுள்ளே ஒரு முறை பார்த்து கொண்டு கதவை படீரென்று சாத்தினாள். தானியங்கி பூட்டு என்பதால் தானாகவே பூட்டி கொண்டது. எந்த வீட்டிலிருந்தும் யாரும் எந்த நேரமும் வெளி வரலாம். யாரேனும் தன்னை பார்ப்பதற்குள் வெளியேற வேண்டும். லிப்ட் வரை வந்து விட்டவள் கடைசி நொடியில் அதை தவிர்த்து படிக்கட்டுக்கு தாவினாள். இரண்டிரண்டு படிகளால் நான்கு மாடிகளையும் தாண்டினாள். கீழே இறங்கி லிப்டிலிருந்து வெளிப்பட்ட காவ்யாவை கண்டதும் யாரிடமோ சீரியசாக பேசி கொண்டிருந்த செக்யூரிட்டி. இவளை பார்த்த மாத்திரத்தில் "மேடம்" என்ற படி ஓடி வந்தான்.
காவ்யா கண்டு கொள்ளாதது போல் கேட்டை திறந்து ரோட்டுக்கு தாவினாள். இவள் ரோட்டுக்கு வருவதற்காக சற்று தள்ளி காத்திருந்த அந்த சிகப்பு நிற பைக் அவள் அருகே வந்து நின்றது. ஏறி அமர்ந்த பின் பைக் அதி வேகமாக கிளம்பியது. அப்போது தான் அவள் முகத்தில் மலர்ச்சி வந்தது. அப்பாடா என்ற படி பெருமூச்சு விட்டாள். "சீக்கிரம் போ" என்று அவசரப்படுத்தினாள்.
"என்ன வேலை முடிஞ்சுதா ? ஹெல்மேட்டுக்குள்ளிருந்த படி வார்த்தைகள் வர, "ம் ஓகே" என்றாள்.
"ஒண்ணும் பிரச்னை வராதுல்ல "
"வராதுனு நினைச்சா வராது." என்றவளுக்கு சிக்னலில் இருந்த ஜன்னல் விளம்பரம் பார்த்ததும் திக்கென்றது. "ஓ மைகாட். ஜன்னல் கதவை சார்த்தாம வந்துட்டேன்."
"என்னிக்கு வேலைய சரியா செஞ்சிருக்க நீ"
"உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சதுக்கப்பறம் தான் இப்படி"
"பழிய என்மேலே போடு"
" ஜன்னல் மூலமா சத்தம் வெளில வந்து
காட்டி கொடுத்திடுமோ" என்றாள்.
"வெளில வர வரைக்கும் தான் பயப்படணும். தடயம் ஏதும் இல்லாம வந்தாச்சில்ல விடு"
" கொலை பழி யார்மேல வரும்னு யோசனை பண்ணிட்டிருக்கேன்."
" என்னது கொலை பழியா" அதிர்ச்சியில் பிரேக் போட்டான். அவன் பின்னே வந்த வண்டிகள் கிறீச்சிட்டு நின்றன.
அங்கே காவ்யா பூட்டி விட்டு வந்த வீட்டில் அந்த அவன் வாயில் ஒட்டப்பட்டிருந்த பிளாஸ்திரி எடுக்கப்பட்டிருக்க, மரண அவஸ்தையில் முனகிய படியே வார்த்தைகளை இழுத்து இழுத்து டிவி சீரியலில் பேசி கொண்டிருந்தான்.
பின் குறிப்பு.
இப்ப இந்த கதை படித்த பின் உங்களுக்கு தோன்றும் கேள்விகளுக்கான பதில்கள்.
கேள்வி: அது யாரோட வீடு?
பதில்: காவ்யவோட வீடு தான்.
கே: அவள் ஏன் யாரும் பார்த்திற கூடாதுனு பதட்டத்தில் இருந்தாள்?.
ப:அவளுக்கு எதிர் வீட்டில் தான் காவ்யா அம்மாவின் சினேகிதி இருக்கிறார். நைட் ஊர் சுற்ற போவது தெரிந்தால் கத்துவார். இல்லேன்னா ஊரிலுள்ள காவ்யா அம்மாவிற்கு போன் போட்டு சொல்வார் என்பதால்.
கே: செக்யூரிட்டி ஏன் இவளை பார்த்தவுடன்
ஓடி வந்தார்?
ப: அவளுக்கென்று வந்த கொரியர், போஸ்ட், இதில் ஏதாவதொன்றை கொடுப்பதற்காக ஓடி வந்திருக்கலாம்.
கே: அவள் ஏன் லிப்ட்ல ஏறாமல் படிக்கட்டில் இறங்கினாள்?
ப: நடுவழில லிப்ட் எதுனா தகறாரு ஆகி நின்று விட்டால் வெளியில் அர்ஜெண்டா
போற வேலை என்னாவறது. மேலும் அந்த லிப்ட் சமீபத்தில் தான் சர்வீஸ் செய்யப்பட்டிருக்கிறது.
கே: சரி அவள் ஏன் டிவிய கூட ஆஃப் பண்ணாம அவ்வளவு வேகமா வெளில கிளம்பறா. அப்படி எங்க தான் போறா.?
ப: சார் டீன் ஏஜ் பொண்ணு காதலனோட வெளில கிளம்பறா. சினிமா ஹோட்டல் ETC...ETC... இப்படி எது வேண்ணா இருக்கும். நமக்கெதற்கு அது.
ஆர்.வி.சரவணன்.

3 கருத்துகள்:

  1. ஹா.... ஹா.... ஹா... ஒண்ணுமில்லை... ஒண்ணுமேயில்லை!

    பதிலளிநீக்கு
  2. நல்லாருக்கு சார்...முதலில் கொலை என்று நினைத்தாலும் அப்புறம் இல்ல இது வேற ஏதோன்னு தோனிச்சு...ட்விஸ்ட் நல்லாருக்கு...

    கீதா

    பதிலளிநீக்கு
  3. இப்படி (பின் குறிப்பு) எதிர்பார்க்க்க்க்க்கவே இல்லை...!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்