ஞாயிறு, ஜூலை 20, 2014

சதுரங்க வேட்டை





சதுரங்க வேட்டை

செய்திதாள்களில் நாம் பார்க்கும் ஏமாற்று நிகழ்வுகளை எல்லாம் அழகாக தொகுத்து சுவாரஸ்ய திரைக்கதையாக்கியிருப்பதன் மூலம், அறிமுக இயக்குனர் வினோத் ஆடியிருக்கும் வேட்டை இது. (தயாரிப்பு நடிகர் இயக்குனர் மனோபாலா)

கதாநாயகன் ஏமாற்றும் வித்தைகளையும்,(அந்த எம்.எல்.எம் பிசினெஸ் பக்கா) அதற்கு அவர் போடும் ஸ்கெட்ச்களையும் நாவலில் வரும் அத்தியாயங்கள் போல் தலைப்பு கொடுத்து (உதாரணம் பணம் அச்சடிக்கப்பட்டஆயுதம்) திரையில் நன்றாக கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர்.

கதாநாயகன் நடராஜ் இந்த கேரக்டருக்கு நன்றாக பொருந்துகிறார்.  
அந்த ரைஸ் புல்லிங் ஏமாற்றுதலில் அவரது வேடமும் நடிப்பும் வில்லன் சொல்வதை போல் கச்சிதம். உதாரணமாக அவர் நீதிமன்றத்திலிருந்து பேசி கொண்டே இறங்கி வரும் காட்சியில் (நடிப்பில்) மேலேறுகிறார் என்று சொல்லலாம்.




கதாநாயகி இஷாரா அறிமுக காட்சியில் உள் நுழையும் போது பரிதாபப்படும் ஜீவனாக இருக்கிறதே ஹீரோ இவரையும் ஏமாற்றி விட போகிறாரோ என்ற தவிப்பை தரும் கேரக்டர். ஹீரோ அவரை விட்டு சென்ற பின் அவர் நிலை என்ன என்பதை பற்றி காட்டியிருக்கலாம். 
அவர் ஹீரோவுக்கு உதவுவதை கூட காதலித்த பாவத்திற்காக செய்வதாக 
காட்டி பின் ஹீரோ திருந்தி விட்டார் என்ற உண்மை நிலை தெரிய 
வரும் போது அவர் மேல் இம்ப்ரெஸ் ஆவதாக காட்டி அவர் மனப்பான்மையை தெளிவுபடுத்தி இருக்கலாம்

“காசில்லாதவன் உடம்பை வச்சி கத்துக்கோ காசிருக்கிறவன் 
உடம்பை வைத்தியம் செய்து சம்பாதிச்சிக்கோ இப்படியான வசனங்கள் ஒவ்வௌன்றும் நெத்தி(யில் சுத்தியை வச்சி நச் என்று இறக்குவது போல்)அடி.

பாம்பு இளைக்க கூடாது என்பதற்காக இளவரசு வேண்டுமானால் மௌன விரதம் இருக்கலாம். அதுக்காக அவரை (நடிப்பை) பற்றி பேசாமல் நம்மால் மௌனமாக இருக்க முடியாது. இப்படியெல்லாம ஏமாறுவீங்க என்று ஆச்சரியப்படும் அளவுக்கு அசரடிக்கிறார்.

நடராஜின் முன்கதையை ஓவியங்களால் சொல்லியிருப்பது, சுத்த தமிழில் பேசும் வில்லன் கயிற்று கட்டிலில் படுத்து கொண்டே வானத்து நிலவை ரசிக்கும் அவரது கேரக்டர் நம்மால் ரசிக்க முடிகிறது. அந்த தாடி வில்லன் எப்படியும் இஷாராவை காப்பாற்றுவான் என்று தெரிந்து விடுவதால் கிளைமாக்ஸ் ட்விஸ்ட் ரசிக்க முடியவில்லை. அவனது இளகிய மனசை காட்டாமலே இருந்து கடைசியில் வெளிப்படுவதாய் அமைத்திருக்கலாம். இருந்தும் பணத்தை அவன் காலடியில் நடராஜ் கொட்டி எடுத்துக்கோ எனும் போது அவர் சொல்லும் டயலாக் கை தட்டல் ரகம். நடராஜ் பற்றிய வழக்கு கோர்ட்டில் ஆரம்பிக்கும் போது அது  தலைப்பு செய்தியாவதும் வழக்கு விசாரணை தொடர தொடர அதன் செய்திகள் எட்டாம் பக்கத்துக்கு பெட்டி செய்தி போல் ஷிப்ட் ஆவது போல் காட்டியிருப்பது நச். 

ரைஸ் புல்லிங் விசயத்தில் தொழிலதிபர் ஏமாறுவது கூட ஓகே 
ஆனால் அதிகாரி ஏமாறுவது ஏற்புடையதாக இல்லை. நடு இரவில் நகைக் டைக்கு முன்பு பணத்தாசையில் கூடும் மக்கள் கூட்டத்தை 
நம்ப முடிந்தாலும் போலீஸ் நம்புவதை ஏற்க முடியவில்லை.

சீன் ரோல்டனின் பின்னணி இசையும், பச்சை வயல்களுக்கு நடுவே இருக்கும் அந்த குடிசையை காண்பிக்கும் கே.ஜி.வெங்கடேஷின் ஒளிப்பதிவும் நன்றாக இருக்கிறது. 

பணத்தாசையை துறந்தால் ஏமாறாமல் தப்பிக்கலாம். அடுத்தவரின் 
காசை சூறையாடும் நோக்கம்  இல்லாமலிருந்தால்  ஏமாற்றும் எண்ணத்திலிருந்தும் தப்பிக்கலாம் இப்படி எல்லாம் சொன்னால் 
போங்கய்யா நீ என்ன சொல்றது என்று சொல்லி விடுவார்கள். அதையே அன்றாடம் நடக்கும் நிகழ்வுகளிலிருந்து எடுத்து கொண்டு சுவாரஸ்யமாய் விழிப்புணர்ச்சி தரும் விதத்தில் தந்திருப்பதால் படம் பார்க்க தியேட்டருக்கு படையெடுக்கலாம்.



FINAL TOUCH 

ஏமாறுபவர்கள் உண்டு எனில் ஏமாற்றுகாரர்களும் (அதற்கு தக்க 
விதத்தில் )வித விதமாய் உண்டு. ஏமாறுபவர்களின் புத்திக்கு ஏற்ப 
ஏமாற்றுகாரர்களின் புத்தியும் செயல்படும் என்பதை பொடனியில்
அடித்து சொல்கிறது படம் 


ஆர்.வி.சரவணன் 

ஞாயிறு, ஜூலை 13, 2014

ஸ்வீட் காரம் காபி



ஸ்வீட் காரம் காபி

போட்டோ பிடிச்சால் இறந்துடுவோம் என்ற (மூட) நம்பிக்கை கொண்டு வாழும் ஊரில், இறக்கும் ஒருவரை போட்டோ எடுக்க செல்லும் 
விஷ்ணுவும் அவர் நண்பர் காளியும் எடுத்த போட்டோ சரியாக விழாமல் போக அவர்கள் செய்யும் குளறுபடியால்,அதை தொடர்ந்த சிக்கல்களில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதை  சிரிக்கும் விதத்தில் படம் பிடித்திருக்கிறார் இயக்குனர்.




முதலில் இந்த படத்தில் எனை  ஈர்த்தது  முனிஸ் காந்த் என்ற பெயரில் வரும் ராமதாஸ் தான். படத்தில் அவர் வரும் நேரமெல்லாம் கை தட்டல்களை அள்ளுகிறார். அவர் உடல் மொழி வசனங்களை உச்சரிக்கும் விதம் எல்லாம் அசத்தல் ரகம். அடுத்து விஷ்ணு வின் நண்பராக வரும் காளி  கவனம் ஈர்க்கிறார். நந்திதாவை  கண்களாலேயே பேச வைத்திருப்பது குட் பீல் கொடுக்குது நமக்கு.இருந்தும் விஷ்ணு நந்திதா காதலில் அவ்வளவாக ஆழம் இல்லை. (விஷ்ணு தண்டனை ஏற்று வெட்டும் கிணற்றின் ஆழமாவது இருந்திருக்கலாம்).  கிணறு வெட்டும் தண்டனை அவ்வளவாக செட் ஆகவில்லை (போனா போகுது போ என்று கஷ்டமில்லாமல் கொடுத்த தண்டனை போல் இருக்கிறது) படத்தில் வரும் கதாபத்திரங்கள் காட்சிகளை ரசிக்கும் விதம் கொடுத்திருப்பதை பாராட்ட வேண்டும். (ஆனந்தராஜ் சீரியசாக துப்பாக்கியை பிடித்திருக்க அதை விலக்கி டேபிளில் சூப் வைப்பார் வேலையாள். ) சின்ன சின்ன வசனங்கள் (ஒரு ஸ்டாருக்கு சோறு இல்லியா, படம் மட்டும் என்னுது. ரத்த பொரியல் எனக்கில்லையா)  சிரிப்பை அள்ளி கொள்கிறது. ராஜா மகாராஜா பாடலில் இசையமைப்பாளரும் அந்த காலத்தை நம் கண் முன் நிறுத்துவதில் கலை இயக்குனர்  கவனம் பெறுகிறார்கள். ராஜா மகாராஜா  பாடலில் வரும் நந்திதாவின் முக பாவங்களும் மனதை அள்ளுகிறது. படம் பிடிக்க பயப்படும் ஊரை பிடிக்கும் விதம் இயக்குனர் ராம்குமார் தந்திருப்பதில் முண்டாசுபட்டி (கொஞ்சம்) கெட்டி 
(இந்த படம் முதல் முறை பார்த்ததை விட இரண்டாம் முறை பார்க்கும் போது தான் நல்லா ரசிச்சு சிரிச்சேன் )  

-------------

ஆனந்த விகடனில் (02-07-2014 ) சமுத்திர கனியின்  கட்டுரை படித்த போது திக்கென்றது. சினிமாவில் இயக்குனராக ஆசைப்பட்டு போராடிய தன் நண்பன் மன நோயாளியாகி இறந்து போய்  விட்டதை பற்றியும் அவரது  குடும்பத்தை சந்தித்தது பற்றியும் சொல்லியிருந்தார். அதிலும் அந்த நண்பரின் தாய் தந்தை தன் மகனை பற்றி சொல்லும் வரிகள் நெஞ்சை தொட்டது. (நியூ தமிழ் சினிமா அந்தணன் சினிமா பற்றி எழுதும் தொடர் பதிவில்  2000 உதவி இயக்குனர்கள் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்கள் என்று சொல்லியிருப்பது நினைவுக்கு வந்து சென்றது)

-----------------

அதே இதழில் பிரியா தம்பி எழுதும் பேசாத பேச்செல்லாம் கட்டுரையில் சென்னைக்கு வருபவர்கள் தன்னை நிலை நிறுத்தி கொள்ள படும் பாட்டை விவரித்ததை படித்தவுடன் எனக்கு நினைவுகள் பின்னோக்கி நகர்ந்தன. நான் சென்னை வந்து பட்ட கஷ்டங்கள் முன்னோக்கி வந்தன. அந்த கட்டுரையில் அவர் குறிப்பிடிருந்த சிறுகதை நெஞ்சை உருக்கும் கதைகளின் வகையில் சேர்ந்து கொண்டது 

--------------




சென்னை மவுலி வாக்கத்தில் இடிந்து விழுந்த பல மாடி கட்டிட இடிபாடுகளுக்கு பலியான உயிர்கள்  உள்ளே சிக்கியவர்கள் எந்த நேரம் வெளி வருவோம் என்று தெரியாமல் முடங்கி கிடக்க, வெளியில் இருக்கும் உறவினர்கள் உள்ளே எந்த நிலையில் அவர்கள் இருக்கிறார்கள் என்று தெரியாமலே பதறி கிடந்த  நிலை எவ்வளவு கொடியது. நான் இப்படி 
நினைத்து பார்த்தேன்.ஒரு வேலை நான்  இப்படி உள்ளே மாட்டியிருந்தால் என் குடும்பம் வெளியே எப்படி கஷ்டபடுவார்கள் என்பதை நினைத்த போது  மனது வலித்தது. இந்த வலி அனைவருக்கும் இருக்க வேண்டியது அவசியமாகிறது. 

----------------------
வண்டிக்கு பெட்ரோல் போடும் போது பெட்ரோல் பங்கில் ஊழியர்கள் 
காட்டும்  அவசரம் இருக்கே சொல்லி மாளாது. என்னமோ பிளைட் பிடிக்க போறவங்க மாதிரி தான் பறக்கிறாங்க.  ஒரு முறை  இப்படி தான் என் வண்டிக்கு  பெட்ரோல் ஒருவர் போட்டு கொண்டிருக்க இன்னொருவர் பணம் கொடுங்க சார் என்று கை நீட்டினார். நானும் ரெடியாக வைத்திருந்த பணத்தை நீட்டினேன்.அவர்  சில்லறையை என் கையில் திணிக்க நான்  அதை வாங்கி கொண்டு திரும்புவதற்குள் பெட்ரோல் போட்டு முடிக்கபட்டிருந்தது.சரி என்று நான் வண்டி சீட்டை மூடி  லாக் செய்வதற்குள் சீக்கிரம் எடுங்க சார் என்று அவர்கள் அவசரபடுத்தியவுடன் எனக்கு கோபம் வந்துடுச்சு. 

"எதுக்கு இப்படி அவசரபடுத்துறீங்க. இதனால் பெட்ரோல் மீட்டர்  எவ்வளவு ஓடுச்சு னு கூட என்னால் பார்க்க கூட முடியல" என்றேன். 

"நீங்க பார்க்க வேண்டியது தானே "

"எங்கே பார்க்க விடறே அந்த நேரத்தில் தான் காசை கொடுங்க னு வாங்கறே மீதி சில்லறை கொடுக்கறே நான் பார்க்க கூடாது னு தானே நீ இப்படி 
எல்லாம் செய்யறே .  கரெக்டா பெட்ரோல் போட்டியா னு நான்  இப்ப எப்படி செக் பண்றது சொல்லு"என்று கத்தினேன்.பின்னால் இருந்தவர்கள் சரி சரி விடுங்க என்று சமாதானபடுத்தும் நோக்கில் தங்கள் அவசரத்தை எனக்கு உணர்த்தினார்கள். உங்களுக்கும்  சேர்த்து தான் நான் கத்தறேன் என்பதை அவர்களுக்கு எப்படி உணர்த்துவது (இப்பலாம் டிரையின் பஸ் அவ்வளவு ஏன் பெட்ரோல் பிடிக்க போறதே பிளைட் பிடிக்க போற மாதிரி தான் இருக்கு)


------------------





வலைபதிவ நண்பர் நாஞ்சில் மனோ கமலின் அந்த ஒரு நிமிடம் படம் 
பார்த்து முகநூலில் எழுதியிருந்தார். உலக சினிமா ரசிகனும் படம் பற்றிய தகவல்களை சொல்லியிருந்தார். என் பங்குக்கு அந்த படம் பற்றிய ஒரு பிளாஷ் பேக் இருக்கு. அதாவது அந்த படம் மே மாதம் வெளியானது  இந்த படம் பார்த்து அடுத்த நாள் 12 ஆம் வகுப்பு முதல் நாள் பள்ளிக்கு சென்றேன். வகுப்பு வாத்தியார்  உயிரியல் ஆசிரியர்.(11 ஆம் வகுப்புக்கும் அவர் தான்)  யாரையாவது கிண்டலடித்து பேச ஆரம்பித்தால் எல்லோரும் நன்கு சிரித்து என்ஜாய் பண்ணலாம். கிண்டலடிக்கபடுபவர் தவிர. அன்றும் அவர் இப்படி ஆரம்பித்தார் 

"நேத்து ஒரு படம் போனேன் அந்த படத்துல கமல் டான்ஸ் ஆடினால் இங்க ஒரு பையன் டான்ஸ் ஆடறான் அவர் அழுதா இங்க அழுகை அங்க அவர் சண்டை போட்டால் இங்க பக்கத்தில உள்ளவங்க முகத்தை இவன் பதம் பாத்திருவான் போலிருக்கு" என்று நக்கல் அடிக்க எல்லோருடனும் சேர்ந்து நானும் சிரிக்க, "அவன் நமக்கு தெரிஞ்ச பய தான். அது நம்ம சரவணன் தான்" என்று என்னை கை காண்பித்தார். கோ எஜுகேசன் வேறு. எல்லோரும் என்னை சிரித்த படி பார்த்த பார்வையில் அவ்வளவு தான் நான் நொந்து இடியாப்பம் ஆனேன். நான் அப்படியெல்லாம் செய்யவில்லை சில காட்சிகளில்  வேண்டுமானால் கை தட்டியிருப்பேன் அதுக்கே நம்மை இப்படி பில்டப் கொடுத்து அன்றைய ஜாலிக்கு என்னை நாயகனாக்கி விட்டார். 

படத்தை பற்றி ஒன்றும் நியூஸ் இல்லியா என்று கேட்பவர்களுக்கு அந்த படத்தில் இளையராஜா இசையில் பாடல்கள் எல்லாம் சூப்பர் ராகம். கமலின் மாறுவேடங்கள் டான்ஸ் பைட் என்று அவருக்கு சரியான தீனி இருந்தும் கதை இன்னும்  நன்றக இருந்திருக்கலாமே என்று நினைக்க வைத்த படம். அந்த ஆண்டு மட்டும் கமல் ரசிகர்களுக்கு  ஒரு கைதியின் டைரி, காக்கி சட்டை ஜப்பானில் கல்யாணராமன் என்று சூப்பர் விருந்து. மேஜர் சுந்தராஜன் வில்லனாக நடித்து இயக்கி தயாரித்து இருந்தார். சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே பாடல் எப்போது  கேட்டாலும்  என் சந்தோசத்திற்கு 
சிறகு முளைக்க வைக்கும் 

------------------

முகநூலில் எனை கவர்ந்த  படம் ஒன்று 







FINAL PUNCH 

ஒரு கிண்டல் என்பது கிண்டலடிக்கபடுபவரும் வயிறு வலிக்க சிரிக்குமாறு இருக்க வேண்டும். தப்பி தவறி கூட அவர் மனது வலிப்பதாக இருந்து விட கூடாது. 

என்றும் அன்புடன் 

ஆர்.வி.சரவணன் 



புதன், ஜூலை 09, 2014

கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்





கேபிள் சங்கரின் தொட்டால் தொடரும்


முதலில் நண்பர் கேபிள் சங்கர் அவர்களுடன் என் அறிமுகம் பற்றி பார்ப்போம். ஆனந்த விகடனில் ப்ளாக் எழுதுபவர்களை பற்றி ஒரு பகுதி ஆரம்பித்தார்கள். அதில் முதலில் இடம் பெற்றவர் கேபிள் சங்கர். அதை படித்த போது தான் அவரை பற்றி முதன் முதலாக தெரிந்து கொண்டேன். 

முதல் முறை பதிவர் திருவிழா 2012 இல் தான் அவரை நான் சந்திக்க நேர்ந்தது.அவர் நீங்க என்றவாறு  கேள்விகுறியுடன் எனை பார்க்க, நான் இப்படி பதிலளித்தேன்.நீங்க இப்ப இருக்கிற இடத்துக்கு வர முயற்சி பண்ணிட்டு இருக்கும் ஒரு சாதாரண மனிதன் என்று.இப்படி சொன்னவுடன் கேள்வி அகன்று போய் அவர் முகத்தில் சந்தோஷம் மின்னியது. என்ன ஹெல்ப் வேணும்னாலும் கேளுங்க என்று சொன்னதுடன் தொடர்ந்து தொடர்பில் இருங்கள் என்றும் சொன்னார். அடுத்து புத்தக கண் காட்சியில்  
சந்தித்த போது அவரது ப்ளாக் தொடர்ந்து படித்து வருவதையும் முகநூளில் தொடர்வதையும்  சொன்னேன். அவர் சமூக அக்கறையுடன் செயல்பட்டு வருவது எனக்கு பிடித்த ஒன்று. 

எனக்கு எப்போதுமே ஒருவரின் அறிமுகம் கிடைத்தால்  அவரை பற்றி முழுமையாக அறிந்து கொள்ள முயற்சிப்பேன். அந்த வகையில் அவர் எழுதிய மீண்டும் ஒரு காதல் கதை, சினிமா வியாபாரம்,கொத்து பரோட்டா  
புத்தகங்களை வாங்கினேன்.சினிமா வியாபாரம் புத்தகம் படித்தேன்.
அதில் சினிமா வியாபாரம் பற்றி கரைத்து (குடித்திருக்கிறார் ) கொடுத்திருக்கிறார் 

மீண்டும் ஒரு காதல் கதையில் தனக்கு படம் இயக்கும் எண்ணம் இருப்பதை தெரிவித்திருப்பார்.

கொத்து பரோட்டா உண்மையாகவே கொத்தி போட்ட பரோட்டா தான் அதை படித்த பின் பரோட்டாவுக்கு (பதிவுக்கு) ரசிகன் ஆனேன்.

எனது நாவல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்ள அழைத்த போது அவர் பட வேலையில் பிஸி என்பதால் நேரமிருப்பின் அவசியம் கலந்து கொள்கிறேன் என்று வாழ்த்தி  பதில் அனுப்பினார்.




 அவர் தொட்டால் தொடரும் படம் தொடங்கியது முதல் படம் 
பற்றிய செய்திகளை தொடர்ந்து ஆர்வமுடன் கவனித்து வந்தேன். 
படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா  பற்றிய அறிவிப்பு  வந்த போது 
எனக்கு விழாவுக்கு செல்லும்  ஆர்வம் வந்தது.இதற்கு ஏதேனும் அனுமதி சீட்டு உண்டா எப்படி எங்கு  யாரை கேட்பது என்ற யோசித்ததில் அவரையே கேட்டு விடலாம் என்ற முடிவுக்கு வந்து  அவருக்கு மெசேஜ் அனுப்பி கேட்டேன்.  அவர் தாராளமா வாங்க  என்று  பதில் அனுப்பினார்.




பதிவுலக நண்பர்கள் சிவகுமார்  மற்றும் பாலகணேஷ் இருவரையும் தொடர்பு கொண்ட போது காலை ஏழரை மணிக்கு வந்து விடுங்கள் என்று சொன்னார்கள். நான் வந்து கொண்டிருக்கையில் ஸ்கூல் பையன் சரவணன் எங்கே சார் இருக்கீங்க என்று போன் அடித்தார்.பத்து  நிமிடத்தில் உங்கள் அருகே வந்து விடுவேன் என்றேன் . 8 மணிக்கு சத்யம் தியேட்டர் வந்தேன். ஸ்கூல் பையன் சரவணன் மற்றும் கே.ஆர்.பி செந்தில் சிவகுமார் பாலகணேஷ் உடன் பேசி கொண்டிருந்த போது சுரேகா சார் வந்தார். எல்லோரும் ஒரே வரிசையில் அமர்ந்தோம்.



 விழா (தாமதமாக) தொடங்கியது.


விழாவில் கலந்து கொண்ட கே.ஆர் பேசுகையில்
ஐந்து  படங்கள் தயாரித்தும் தயாரிப்பாளர் முகத்தில் தெரியம் புன்னகை சந்தோசமான விஷயம் இது தொடர வேண்டும் என்று பாராட்டினார்.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் பேசும் போது தானே படம் தயாரிக்க ஆசைப்பட்டு கேபிள் சங்கரிடம் பேசிய போது அவர் விவரித்ததில் 
படம் தயாரிக்காமல் தப்பித்து விட்டதை குறிப்பிட்டார்.

இயக்குனர் பத்ரி பேசும் போது கேபிள் சங்கர் நிறைய விசயங்களை தொட்டிருக்கிறார்.அவற்றை தொடர்ந்து கொண்டும் இருக்கிறார். இந்த முயற்சியும் வெற்றி பெறும் என்பதுடன்,தனது  அடுத்த படமான ஆடாம ஜெயிச்சோமடா படத்தில் கேபிள் சங்கர் நடித்திருப்பது பற்றி குறிப்பிட்டார் (தகவல் வெளியிட்டார்) 

தயாரிப்பாளர் ஏ.எம் ரத்னம் பேசும் போது  விழா 8.30 மணிக்கு என்பதால் அப்போதே வந்து விட்டதை பற்றி குறிப்பிட்டு இது விழாக்களில் சகஜம் தான்  என்று குறிப்பிட்டார் 

இசையமைப்பாளர் பி.சி.சிவன் நிறைய பேரை மேடையில் குறிப்பிட்டு
பேசினார்.சீக்கிரம் பேசி முடிங்க என்ற வேண்டுகோள் மீறி பேசினாலும் 
அவர் வார்த்தைகளில் நெகிழ்ச்சி எட்டி பார்த்தது.  

கதாநாயகி அருந்ததி பாஸு பாடல் பற்றி குறிப்பிட்டு கேபிள் சங்கரை பாராட்டினார்

ஹீரோ தமன் ரொம்ப சிம்பிளாக மேடையோரம் கேபிள் சங்கருடன் பேசியவாறு இருந்தார். எனக்கு அவரை அங்கே பார்க்கும் போது, இந்த படம் ஹிட் ஆகிய பின் அவரே நினைத்தால் கூட அப்படி ஓரமாய் நிற்க முடியுமா நிற்க தான் விடுவார்களா என்று பரந்த விரிந்த என் கற்பனை யை இழுத்து நிறுத்தினேன். ( கற்பனை தான் எனினும் உண்மையாகட்டுமே) 

இசையமைப்பளர் சந்தோஷ் நாராயணன் பேசும் போது தனது அட்ட கத்தி சாங் நன்றாக இருக்குனு சொன்னவர் பீட்சா பட சாங் நல்லாயில்ல என்று என்னிடம் சொன்னதோடு மட்டுமில்லாமல் கூடவே ஆன் லைனிலும் அதை போட்டுட்டார் என்றதோடு இந்த படத்தை அவரே நல்லா இருக்குனு எழுதற அளவுக்கு படம்   இருக்கும் என்றார் 




கே.ஆர். இசை தட்டை வெளியிட ஏ .எம் . ரத்னம் பெற்று கொண்டார். விழாவில் முன்னதாக படத்தின் ட்ரைலர் மற்றும் மூன்று பாடல்கள் திரையிடப்பட்டது. 

விழா முடிந்த பின் நாங்கள் எழுந்து கிளம்ப தயாரானோம். கேபிள் சங்கர்  அவர்களை பார்த்து வாழ்த்துக்கள் சொல்ல நினைத்தேன்.இருந்தும் அவர் மேடையில் பிஸி யாக இருந்ததால் அவரை தொந்தரவு செய்ய கஷ்டமாகவும்  இருந்தது.இருந்தும் விழாவுக்கு வந்து விட்டு ஒரு வாழ்த்து  கூட சொல்லாமல் செல்லவும்  மனது இடம் கொடுக்கவில்லை. 
எனவே சரி என்று மேடைக்கு அருகே சென்று கீழே நின்ற படி அவரை அணுகினேன். கை குலுக்கி வாழ்த்து  சொன்னேன். கூடவே அவருடன் நின்றிருந்த ஹீரோ தமனுக்கும் கை குலுக்கி வாழ்த்து சொன்னேன். சத்யம் தியேட்டருக்கு இது வரை படம் பார்க்க மட்டுமே சென்றிருக்கிறேன். ஒரு ஆடியோ விழாவுக்கென்று சென்றது இது தான் முதல் முறை  

படம் பற்றிய தகவல்கள் 

இந்த படத்தின் கதாநாயகன் தமன்,கதாநாயகி அருந்ததி, ஹலோ எப்.எம் பாலாஜி, வின்சென்ட் அசோகன் போன்றாரும் நடித்திருக்கும் இந்த படம் 
ஒரு ரொமாண்டிக் த்ரில்லர்.பி.சி.சிவன் இசை அமைக்க நா .முத்துக்குமார் 
மற்றும் கார்க்கி பாவா கேபிள் சங்கர் பாடல்கள் எழுத விஜய்ஆர்ம்ஸ்டராங்க் 
ஒளிப்பதிவில்   FCS கிரியேசன்ஸ் சார்பில் துவார் சந்திரசேகர் தயாரித்திருக்கிறார். கேபிள் சங்கர் எழுதி இயக்கியிருக்கிறார்.பாடல்கள் டைகர் ஆடியோ வெளியிட்டிருக்கிறது.





தொட்டால் தொடரும் படத்தின் ட்ரைலர்  http://t.co/k8Tocf3AIx


பாடல்கள் பற்றிய என் பார்வை சில வரிகளில் 

பாஸு பாஸு 

இப் பாடல் இணையத்தில் ஆடியோ வெளியீட்டிற்கு முன்னரே வெளியாகி முன்னணியில் இருக்கிறது. இந்த பாடல் பற்றி நான் முகநூலில் குறிப்பிட்டிருந்ததை இங்கே தருகிறேன் 



இயக்குனர் Cable Sankar ன் தொட்டால் தொடரும் பட பாடலான யாருக்கும் ஈவு இல்ல இரக்கம் இல்ல பாஸு பாஸு பாடல் சிவனின் இசையை தொட்டு கொண்டு கார்க்கி பாவா மற்றும் கேபிள் சங்கரின் வரிகளில் நாட்டின் அவலங்களை விளாசியிருக்கிறது. ஒரு வரி கேட்டவுடன் அடுத்த வரி என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு கூடுகிறது. உதாரணத்திற்க்கு ஆரம்ப வரியையே எடுத்து கொள்வோமே. யாருக்கும் ஈவு இல்ல இரக்கம் இல்ல பாஸு பாஸு என்று சாடலுடன் ஆரம்பமாகி, எல்லார்க்கும் வேலை வெட்டி இருக்குதாம்பா என்ற சலிப்புடன் அடுத்த வரிக்கு தாவுகிறது. எப்படி ? வேலைக்கு லீவு விட்டால் இரக்கம் வருமா பாஸு பாஸு என்ற வரிகள்  நக்கலுடன் கெஞ்சலையும்  குழைத்து கொள்கிறது. இப்படியான வரிகள் தான் பாடலெங்கும் சமுதாய அவலத்தை தொட்டு பாடல் முழுக்க தொடர்கிறது.பாடலை கேட்டு முடித்த பின் பாடலின் இடையே நான்கு பேர் கோரஸ் பாடும் ஹோ ஹோ என்பது போல் நம்மையும் சொல்ல வைக்கிறது என்றால் அது மிகையல்ல. தொட்டால் தொடரும் படத்தின் பீவரை ஆரம்பித்து வைத்திருக்கும் இந்த பாடல் படத்திற்கு கிடைத்திருக்கும் நல்ல ஒப்பனிங்.


பெண்ணே பெண்ணே 

எனக்கு மேலோடி சாங் எப்போதுமே ரொம்ப பிடிக்கும் உதாரணமாக ரஜினி ஷங்கர் படங்களில் ஏதாவதொரு மெலடி சாங் கண்டிப்பாக இருக்கும். அவர்கள் பட ஆடியோ வெளி வரும் போது இதை கவனிப்பேன். இந்த படத்தில் மனதை மயக்கும் மெலடிக்காக ஆர்வமாய் காத்திருக்க,
பெண்ணே பெண்ணே என்ற இந்த மெலடி  பாடல் ஏனிந்த மயக்கம் 
என்ற கேள்வியுடன் என் இப்போதைய ஹம்மிங்காக இருக்கிறது.  

யாருடா மச்சான் 

இந்த பாடலில் ஒலிக்கும் குரல்களின் இனிமை எனை கவர்ந்தது. இப் பாடலில் ஒரு வரி வருகிறது. உன்னை ஒரு முறை பார்த்தால் ஒரு நாள் ஆயுள் கிடைக்கும் என்று. இந்த பாடல் கேட்கும் போது மீண்டும் ஒரு முறை கேட்கும் ஆர்வம் நமக்கு போனசாக கிடைக்கும்.

பூ போல பூ போல  

இந்த பாடல் கொஞ்சம் பாஸ்ட் ஆக இருந்தாலும் இதில் வரும் சரணங்களின் ராகம் எனக்கு பிடித்திருக்கிறது.  

kiss of the fate 

இசையமைப்பாளர் பாடியுள்ள இரண்டு நிமிட பாடல் இது 


நல்லதொரு விமர்சகராக ஹிட் அடித்த  கேபிள் தன் முதல் படமான இதிலும் ஹிட் கொடுக்க வேண்டும்.  எவ்வளவு உயரம் சென்றாலும் அவரது  சிம்பிளாக பழகும் இந்த தன்மையும் தொடர வேண்டும்.

FINAL PUNCH 

சொல்றது எல்லாம் சொல்லிட்டே இன்னும்  என்ன இருக்கு னு கேட்றீங்களா சொல்றேன். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் பேசும் போது  வீடியோ ஷாப் நடத்தி கொண்டிருந்த ராம்கோபால் வர்மா படங்கள் பார்த்து கற்று கொண்டு இன்று பெரிய இயக்குனர் ஆகியிருக்கிறார்  என்றும் கே.ஆர்  பேசும் போது  ஏற்கனவே இவர் பெயரில் ஒரு பெரிய இயக்குனர் சங்கர் இருக்கிறார் என்றும் மேற்கோள் காட்டி அது போல் இவர் வெற்றி பெற வேண்டும் என்றும் பேசினார்கள்.  

இனி வர போகும் புது இயக்குனர்களுக்கு உதாரணமாக யாரையேனும் குறிப்பிட வேண்டும், மேற்கோள் காட்ட வேண்டும் என்றால்  கேபிள் சங்கரை குறிப்பிட வேண்டும்  என்று ஒரு நண்பராக விரும்புகிறேன். வாழ்த்துகிறேன் 

 படங்கள் சத்யம் அரங்கில் நான் க்ளிக்கியது 

ஆர்.வி.சரவணன்