திங்கள், நவம்பர் 10, 2014

தெர்மக்கோல் தேவதைகள்- கேபிள் சங்கர்






தெர்மக்கோல் தேவதைகள்-  கேபிள் சங்கர் 

பதிவுலக நண்பர்  தொட்டால் தொடரும் பட இயக்குனர் திரு,கேபிள் சங்கர், எனது  சில சில நொடி சிநேகம் குறும்படம் ரெடியான உடன்  பார்ப்பதற்காக தன் வீட்டுக்கே அழைத்திருந்தார்.  படம் பார்த்த பின் அது தொடர்பாக தொடங்கிய எங்கள் பேச்சு அப்படியே சினிமா புத்தகங்கள் ரசிப்பு தன்மை என்று 2 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது. பின் விடைபெற்று கிளம்பும் போது அவர் தனது தெர்மக்கோல் தேவதைகள் சிறுகதை தொகுப்பை பரிசளித்து  படிச்சிட்டு சொல்லுங்க என்றார். நான் ( பாட்டாவே படிச்சிட்டேன்)  பதிவாவே எழுதிட்டேன்


நாவலை விட சிறுகதை தொகுப்பை படிப்பது கொஞ்சம் சுலபமானது.  
காரணம் ஒரு சிறுகதை முடிந்தவுடன்  மூடி வைத்து விடலாம். ஆனால் நாவல் அப்படியல்ல சுவாரஸ்யமாக தொடர தோன்றும்.  
இதோ இந்த பக்கத்துடன் மூடி வைத்து விடலாம் என்று ஒவ்வொரு 
பக்கம் திருப்பும் போதும் நினைக்க தோன்றும்.நாவல் ஒரே பேருந்தில் பயணிப்பது போல. ஏறியது முதல்  இறங்கும் வரை அதே மனிதர்கள் அதே பேருந்து தான். சிறுகதை தொகுப்பு பேருந்து பேருந்தாக மாறி பயணிப்பது
போன்றது வெவ்வேறு பேருந்துகள். வெவ்வேறு மனிதர்கள். 

இந்த சிறுகதை தொகுப்பில் ஒரு பக்க கதை இரு பக்க கதை சில பக்க கதை என்று பதினெட்டு சிறுகதைகள் உள்ளன. இதில் வேறுபட்ட மனிதர்கள் பலரை சந்திக்கலாம். 

வாங்க பார்ப்போம். 

ஜன்னல் என்ற சிறுகதை எதிர் வீட்டில் எந்நேரமும் மூடியிருக்கும்  ஜன்னலை நோட்டமிடும் ஒரு உதவி இயக்குனர்  பற்றியது. அந்த வீட்டில் நடைபெறும் நிழலான விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்ளும் ஆர்வம். படிக்கும் நமக்கும் தொற்றுகிறது. நான் எப்படியும் கதை முடியும் போது  புரட்டி போடும்  விஷயம் ஏதேனும்  இருக்கலாம் என்று நினைத்தேன். அப்படியில்லை.  நீ தப்பு பண்றியா கண்டு பிடிக்கிறது தான் முதல் வேலை. கண்டு பிடித்த பின்  தப்பை வெளியில் சொல்லாமல் இர்ருக்கணும் னா என்னையும்  கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ  என்ற மனிதனின் புத்தியை  தெளிவு படுத்துகிறது 



தலைமை பொறுப்பை எடுத்து கொண்டு செயலாற்றுவதை  விட ஈசியான வேலை,என்னய்யா இப்படி பொறுப்பில்லாமல் வேலை செய்றீங்க  என்று விமர்சன கல் விட்டு  செல்வது.. . இப்படிப்பட்ட மனிதனுக்கு  ஒரு சிறுவனின் செயலை கொண்டு பாடம்  கற்பிக்கிறது பொறுப்பு என்ற 
சிறுகதை .இதே போன்ற பார்மெட்டில்  இன்னொரு ஒரு பக்க சிறுகதையும் உண்டு அது ரோட் ரேஷ் 



சுந்தர் கடை ஒருவன் தன் திறமை என்ன என்பது  தெரியாமல் கஷ்டபடுவதையும் அது அவருக்கு தெரியும் போது நல்லா வந்திருவார் என்பதை சொல்கிறது. இது   சிறுகதை பார்மெட் தில் அடங்கவில்லை 
என்றே தோன்றுகிறது. ஒரு அனுபவத்தை  சொன்னது போல் இருக்கிறது 


தனக்கென்று வரும் போது மனிதனின் செயல்பாடு எப்படியிருக்கும் என்பதை  சொல்லும் ஒரு பக்க  சிறுகதையில் முழுக்கவே 
வசனமில்லாமல் கொண்டு சென்று  கடைசியில்  வசனத்தோடு நச் என்று முடித்திருக்கும் விதத்தில் சிறப்பு பெறுகிறது நேற்று வரை 

மீனாட்சி சாமான் நிக்கோலா தலைப்புக்கேற்றார் போல் கொஞ்சம் 
சிரிப்பை உள்ளடக்கிய கதை. ஏழு கடல் ஏழு மலை தாண்டி கொண்டு வைத்திருக்கும் விட்டலாச்சார்யா போல் ஒரு சின்ன ரகசியத்தை கடைசி வரியில் வைத்திருக்கிறார் ஒரு சின்ன  ட்விஸ்ட்டாக .
அது நம்மளை புன்னகைக்க  வைக்கும்

ஒரு டிராபிக் போலிஸ் காரரின் பார்வையில் சொல்லப்படும்  சிறுகதையில் 

வண்டிகளை மடக்குவதற்கு சரியான இடம் பார்த்து நிற்க வேண்டும்.எங்கு
ப்ரீ இல்லையோ அங்கு கண்களுக்கு தெரிகிறார் போல் நிற்க கூடாது.
யாருமில்லை என்ற நினைப்புடன் வண்டியோட்டுபவன் சல் லென வண்டியை ஸ்லோ செய்து திரும்புவான். 

இப்படி அவர்களின் வேலையை குறிப்பிடுபவர்  
அதற்கு ஒரு கேரக்டரின் மூலம் கண்டனம் எழுப்புகிறார் 

"பொறுப்பு இருக்கிறவர் கிராசிங்கில் நிற்க வேண்டியது தானே. ஓரமா ஒளிஞ்சிட்டு நிக்கறீங்க ? போலிசோட வேலை குற்றம் நடக்காம தடுக்கிறது தான்.நீங்க நடக்கவுட்டு பிடிக்கிறீங்க"

எகிறுபவனை விட்டு விட்டு கெஞ்சுபவனை எகிறும் நிகழ்வில் 
 கருணை எப்படி  வருகிறது என்பதை சொல்கிறது சிறுகதை 

 கஷ்டம் வரும் போது, அந்த கஷ்டம் இதனால் தான் வந்தது அதை 
போக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்ற தூண்டுதலை ஏற்படுத்தியும்  செய்யாவிட்டால்  என்று மிரட்டலையும் ஏற்படுத்தும் சில போலி ஜோசியர்களை பற்றி சொல்கிறது ஆதிமூலகிருஷ்ணனின் செய்வினை 

"அய்யா நான் சொல்றதை நல்லா கேட்டுக்குங்க வேற யார் கிட்டேயும் இந்த கையை  காட்டாதீங்க  அவ்வளவு உயர்வான கையி இது ஆனா என்ன தான் உசந்த கையானாலும் ஒண்ணும் பெரிசா விளங்க மாட்டேங்குதே பத்து காசு சம்பாரிச்சா, நாலுகாசு சேர்க்க முடியலையேன்னு ஒரு ஆதங்கம் உங்க மனசுல ஓடுது. இத நான் சொல்லல ரேகை சொல்லுது"

என்று  வசனங்கள் அச்சு அசலாக அப்படியே வந்திருப்பது ஆச்சரியம். 
போலி மனிதர்களின் முக மூடியை கிழித்தெறிய முயற்சிக்கும்  இதன் முடிவும் நச்.  


காசு கொடுத்து வாங்கிய பிரியாணி வீணாகாமல் யாருக்கேனும் தர்மம் செய்ய அலையும் ஒருவனின் கதை. இதில் போகிற போக்கில் 

சில பேர் பார்க்க டீசண்டாய் இருந்து கொண்டு சார் ஒரு பத்து ரூபாய் ஹெல்ப் செய்ய முடியுமா என்று ஸ்டைலான ஆங்கிலத்தில் ஸ்பென்சர் பிளாசாவின் வாசலில் பிச்சை எடுத்ததையும் நான் பார்திருக்கிறேன் 

என்று சொல்பவர்  யாருக்கு வேணும் உன் தர்மம் என்பதை  ஒரு சிறுவன் மூலம் பதிலடி கொடுத்திருக்கிறார். 

ஒரு வயதான பாட்டி தான் சாகும் நேரம் வந்து விட்டது என்று தடாலடி செய்வதும் வீட்டில் உள்ளவர்கள்  அதை சாதாரணமாக எடுத்து கொள்வதும் 
அவர் சொல்வது போன்றே நடக்கிறதா என்பதை அதகளமான வசனங்கள் மூலம் சேச்சு பாட்டி சுவாரஸ்ய படுத்துகிறார். 

தெர்மாகோல் தேவதைகளின் வரிசையை இனி பார்ப்போம் 

"ஐம் இன் லவ் வித் பிரகாஷ் எல்லாமே சட்டென்று நடந்து விட்டது. மூன்றே மீட்டிங்கில் காதல் வருமா. எனக்கு வந்து விட்டது. ஐம் ஜஸ்ட் த்ரில்ட்"
 என்று சொன்ன  ஜெயா "யா இட்ஸ் அபவுட் ஹர்.ரோஷ்ணி. என் மச்சினி.முளைத்து முணு இல்லை விடவில்லை காதலாம். பைனல் இயர் படிக்கிறதுக்குள்ள என்ன காதல் வேண்டியிருக்கு" என்று சொல்லும் நிலைக்கு வந்து விடுகிறார் நடுவில் நடந்தது என்ன என்பது  ஜெயா சிறுகதை 


ராஜலக்ஷ்மி என்ற அழகில்லாத கேரக்டர்,
"எல்லாரையும் விட என்னால் காதலிக்கப்படும் ஆணுக்கு அன்பையும் காதலையும் கொடுக்க முடியும்.அதில் அவன் திக்கு முக்காடி போவான்"
 என்று தன்னை பற்றி தன்னம்பிக்கையுடன் சொல்பவளுக்கு  ஆண் துணை கிடைத்ததா என்பதை சொல்கிறது கதை. இதன் முடிவு வலி தருகிறது.

ராஜி  சிறுகதையில், அக்காக்கள் கல்யாணம் செய்து கொண்டு கணவர்களிடம் வதைபடுகிறார்கள். அதனால் எனக்கு கல்யாணம் வேண்டாம் என்று சொல்பவள், தோழியின் கல்யாணம் அவரது சந்தோஷம் பார்த்து கல்யாணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள். கதை கல்யாணத்துக்கு மறுப்பதில் ஆரம்பித்து சம்மதிக்கும் வரை உள்ள அந்த பெண்ணின் மன நிலை 
மாற்றங்களை சொல்லிய விதத்தில் நம்மிடம் சபாஷ் வாங்கி கொண்டு   வலியை தந்து விடுகிறது.


பிரியா (எ) பிரியதர்ஷினி என்ற இந்த பெண்ணின்  
தோற்றம் பற்றிய வர்ணனை சிறுகதையில் இப்படி வருகிறது. 

ப்ரியா அழகி பாப் பாகவும் இல்லாமல் நீளமாகவும் இல்லாமல் சாகசமாய் முடியை வெட்டியிருப்பாள். காம்பஸ் ரவுண்டு முகம், சுண்டினால் ரத்தம் தெரியும் ஈரானியச் சிவப்புடன் செர்ரி நிற உதடுகள். 

இப்படி அவள் அழகை பற்றி சொல்லுகையில் அவளது கேரக்டர் பற்றி இப்படி சொல்லபடுகிறது.

நம்மை போன்ற பெண்களால் வளர்க்கப்பட்ட மேல் ஷாவனிஸ்ட் புத்தி ஆட்கள் அவளோடு வாழ்க்கை நடத்த முடியாது. அவளின் ஆளுமை ஆக்ரமிப்பு பிடிக்காமல் போய் பித்து பிடித்து வாழ்வதை விட கொஞ்சம் தூரத்திலிருந்து ஆராதிக்க பழகி கொள்ளலாம் அல்லவா  

இந்த பெண்ணின் பிடிவாததையும்  பின் அவள் தன்னை எப்படி மாற்றி கொள்கிறாள் என்பதை சொல்கிறது சிறுகதை.  




தேவதைகள் கதைகளுடன்  மற்ற கதைகளை சேர்த்து படிக்கும் போது,
 சைவ சாப்பாட்டுடன் டிபன் வெரைட்டி யையும் சேர்த்து சாப்பிட்டது 
போல் ஓர் எண்ணம். சில இடங்களில் விரசம் எட்டி பார்ப்பதை  அது கதையின் போக்கு மற்றும் கேரக்டரின் தன்மை என்று எடுத்து கொண்டாலும் அதையும் கொஞ்சம் வெளிபடையாக இல்லாமல் வார்த்தைகளுக்குள் அடக்கி தந்திருக்கலாம்.என்று தோன்றுகிறது. பன்முகம் கொண்ட  கேபிள் சங்கர் இயக்குனராகவும் வெற்றி பெற வாழ்த்துக்கள்.




வெளியீடு  உ பதிப்பகம் 
விலை ரூ  50 


FINAL TOUCH 


இதன் தலைப்பு பற்றி  அவர் என்னிடம் சொல்லும்போது தெர்மாக்கோல் எளிதில் உடையும் தன்மை  கொண்டது. ஆனால் அது தான் பொருட்களை பாதுகாப்பாக கொண்டு செல்ல உதவுகிறது. இந்த முரண்பாட்டை கொண்டவர்கள் தான் இந்த தெர்மக்கோல் தேவதைகள்  என்று 
குறிப்பிட்டார்.

 ஆர்.வி. சரவணன் 

7 கருத்துகள்:

  1. மிகத் துல்லியமானதொரு பார்வை....
    அருமை அண்ணா...
    கேபிள் அண்ணாவுக்கும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. அருமை கேபிள் சங்கருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. பொதுவான தலைப்பைப் பார்த்துத் தாண்டிச்செல்லும் புத்தகங்களில், இதுபோல விமர்சனங்களைப் படித்தபின் அதன் மேல் ஒரு கருத்து உருவாகிறது. இப்படியான பதிவுகளே பல நூல்களை நமக்கு அறிமுகம் செய்கின்றன.

    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு
  4. இன்னும் படிக்கவில்லை. சீக்கிரம் படிக்கணும்..

    பதிலளிநீக்கு
  5. வாங்கி வச்சு ரெண்டு வருஷம் ஆச்சு.... இன்னும் படிக்கலை.. படிக்கிறேன்...

    பதிலளிநீக்கு
  6. ஒவ்வொரு கதையையும் பற்றி 4 வரிகள்...
    சுவையாக இருந்தது.

    பதிலளிநீக்கு
  7. நல்ல விமர்சனம் சார்! நல்ல பகிர்வும் கூட! சுவைபடச் சொல்லி இருக்கின்/ரீர்கள்!

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்