ஞாயிறு, ஆகஸ்ட் 31, 2014

திருமணத் தடை நீக்கும் ஒற்றை காலில் தவமிருக்கும் தபஸ் அம்மன்





திருமணத் தடை நீக்கும்  ஒற்றை காலில் தவமிருக்கும் தபஸ் அம்மன் 
(அருள்மிகு அமிர்தகலசநாத சுவாமி திருக்கோவில். திருகலயநல்லூர்) 


இறைவனை திருமணம் செய்து கொள்வதற்காக உமையம்மை ஒற்றை காலில் தவமிருக்க, அவர் தவம் கண்டு உவந்து அம்மைக்கு வரங்கொடுத்து திருமணம் புரிந்து கொண்டார் இறைவன். இது  நம்பியாரூரர் சுந்தரர் 
அவர்கள்  வணங்கி 

குரும்பைமுலை மலர்குழலி கொண்ட தவங் கண்டு 
         குரிப்பினோடுஞ் சென்றவள் தன் குணத்தினைநன் கறிந்து
விரும்புவரங் கொடுத்தவளை வேட்டருளிச் செய்த 
          விண்ணவர்கோன் கண்ணுதலோன் மேவியஊர் வினாவில் 
அரும்பருகே சுரும்பருவ அறுபதம்பண் பாட
           அணிமயில்கள் நடமாடும் அணிபொழில் சூழ் அயலின்
கரும்பருகே கருங்குவளை கண்வளரும் கழனிக்  
            கமலங்கள் முகமலருங் கலயநல்லூர் காணே


பாடியருளி இருக்கும் ஸ்தலம் இது. 
(இப் பதிகத்தின் காலம் 8 ஆம் நூற்றாண்டு)

இக் கோவில் கும்பகோணத்தில் இருந்து 3 கிலோ மீட்டரில், மன்னார்குடி செல்லும் சாலையில் அரிசிலாற்றின் தென்கரையில் உள்ள திருகலயநல்லூரில் உள்ளது.  (இந்த ஊர் இப்போது சாக்கோட்டை 
என்ற பெயரில் அழைக்கபடுகிறது)



இத் தலத்தை குறித்து மூன்று புராண வரலாறுகள் உள்ளது. ஒன்று ஊழிக் காலத்தில் உயிர்களை அடக்கிய கலசம் இங்கு தங்கியது அதனால் இது கலயநல்லூர் என்று வழங்கபடுகிறது. இரண்டாவது பிரம்மன் இங்கு இறைவனை பூஜித்து பேறு பெற்றான். மூன்றாவது இறைவன் உமையம்மையின் தவத்தினை கண்டு அம்மைக்கு வரம் கொடுத்து 
திருமணம் புரிந்து கொண்டார்.




இது கிழக்கு நோக்கிய சன்னிதியாக உள்ளது. பஞ்சமூர்த்தி சுதையுடன் 
கூடிய கோபுர வாயிலும் உள்ளன. 






நந்தியை வணங்கி விட்டு உள் நுழையும் போது சன்னதிக்கு மேல் சுதையாலாகிய மீனாட்சி திருகல்யாண காட்சி உள்ளது 
அமிர்தகலச நாதர்  கருவறையில் அருள் பாலிக்கிறார். சன்னதிக்கு 
இடப் புறம் அமிர்தவல்லிக்கு தனி சன்னதி உள்ளது. 







மகா மண்டப வாயில் வடபுறம் சிறிய அளவில் தண்டாயுதபாணி,
மேற்புற சுவரில் இலிங்கோத்பவர் உள்ளார் இரு புறமும் மாலும் அயனும் வணங்கி நிற்கின்றனர்.




மண்டபத்தில் மகாகணபதியும்,அடுத்து ப்ருதிவிலிங்கம்,அப்புலிங்கம், தேயுலிங்கம் என மூன்று இலிங்கங்களும்,சுப்பிரமணியர், அர்த்த நாரி, கஜலெட்சுமி,சப்தமாதர்கள் சிலைகள் சன்னதிகள் கொண்டுள்ளது. 





இப்போது அருள்மிகு தபசு அம்மன் பற்றி பார்ப்போம் 




தபஸ்விம்மன் என்ற பெயரில் சன்னதி உள்ளது. இத் தவக்கோல அன்னை வலது காலை மட்டும் தரையில் ஊன்றி இடக்காலை மடக்கி வலது தொடையில் ஏற்றி பொருந்திட மடக்கி பதிந்து பாதம் மேல் நோக்கிட நிற்கிறாள்.வலக் கரத்தினை உச்சி மீது உள்ளங்கை கவிழ வைத்து இடக் கரத்தினை திருவயிற்றின் கீழ் அங்கை மேல் நோக்க வைத்து நேராக நின்று தவமிருக்கின்றார். தவமிருந்து இறைவனை மணந்ததால், இந்த கோவிலில் இந்த சன்னதி தனி சிறப்பு கொண்டு விளங்குகிறது.

  3 பொர்ணமி தினங்களில் 48 அகல் விளக்குகள் ஏற்றி அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழி பட வேண்டும். இதனால் தாமதமாகும் திருமணங்கள் விரைவில் நடந்தேறும் என்பது ஐதீகம். 

 எங்கள் வீட்டுக்கு பக்கத்தில் இருப்பவர்கள் இது போல் வழிபட்டு உடனே அவர்களுக்கு வரன் தேடி வந்தது. அதை பற்றி எங்களிடம் சொன்ன போது தான் எங்களுக்கு இக் கோவில் பற்றி தெரிந்தது. நாங்களும் உறவினர் பெண்ணுக்காக வழி பட இந்த கோவில் சென்றிருந்தோம். அந்த பெண்ணுக்கும் திருமணம் நடந்து விட்டது. வெளியூரில் இருப்பவர்கள் கூட வழிபட வந்திருந்தார்கள் 






பெண்ணோ பையனோ திருமணம் தடைபட்டு வந்தால் இந்த வழிபாடு கை கொடுக்கும். மேலும் இக் கோவில் அறுபதாம் திருமணத்திற்கு உகந்த ஸ்தலம் என்றும் இக் கோவிலின் அர்ச்சகர் திரு. ஆனந்த குருக்கள் சொன்னார். ஏதேனும் தகவல்கள் வேண்டுமென்றால் அவரது செல் நம்பரில் தொடர்பு கொண்டு பேசலாம். CELL NO.9788202923

வடபால் கருவறை சுவரில் நான்முகன் இருக்கின்றார்.கீழ்ப்பால் உள்ள மண்டபத்தில் சுமார் ஒன்றரரி அடியுள்ள பைரவர், பிட்சாடனர், சூரியன்,சனி பகவான், சிற்பங்கள் சன்னதி உள்ளது.

இராஜராஜனுக்கு முன்னர் இக் கோயில் கற்றளியாக கட்டப்பட்டது.என்றாலும் பின்னர் 12 ஆம் நூற்றாண்டின் இறுதியில் மூன்றாம் குலோத்துங்கனின் காலத்தில் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் 16 அல்லது 17 ஆம் நூற்றாண்டில் தஞ்சை நாயக்கமன்னர்கள் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக தெரிகிறது.

இறைவன்         : அருள்மிகு அமிர்தகலசநாதர்

இறைவி             : அருள்மிகு அமிர்தவல்லி

தல விருட்சம்  : வன்னி 

தலதீர்த்தம்        : அமிர்ததீர்த்தம்

பாடியவர்           :  சுந்தரர் 




பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் மகாமகத்தின் 
தீர்த்தவாரிக்கு செல்லும் பன்னிரண்டு சைவ திருக்கோவில்களில்  
இதுவும் ஒன்று.







பழங்காலத்தில்  இக் கோயிலை சுற்றி பெரிய கோட்டை இருந்தது என்பதால் தான் இன்றும் மக்கள் இக் கோவிலை கோட்டை சிவன் கோவில் என்று அழைக்கின்றனர். 

FINAL TOUCH 


நான் இக் கோவில் சென்று இந்த தபஸ் அம்மனை வழிபட்ட போது 
பகதர்களின்  திருமணம் கை கூட அவர் தவமிருப்பது போல் ஒரு பிரமை எழுந்தது.பேருந்து செல்லும் மெயின் ரோட்டுக்கு அருகிலேயே இக் கோவில் இருந்தாலும் இதன் உள்ளே கிடைக்கும் அமைதி மனதுக்குள் ஒரு 
திருப்தியை தந்தது என்னவோ நிஜம் 

ஓம் நமச்சிவாய

ஆர்.வி.சரவணன் 

11 கருத்துகள்:

  1. நல்லதொரு கோவிலைப் பற்றி அறியத் தந்தீர்கள் அண்ணா...

    பதிலளிநீக்கு
  2. அருமையான பதிவு பாஸ்!

    பதிலளிநீக்கு
  3. சிறப்பான ஆலயம் பற்றி அருமையான பகிர்வுகள்.பாராட்டுக்கள்.!

    பதிலளிநீக்கு
  4. சொந்தமாகக் குறும்படம் எடுக்கும் எண்ணமுள்ளவர்கள் இந்தக் கோயிலை 17 முறை வலம்வந்தால் நல்லவகையில் எடுக்கமுடியும் என்றும் சிலர் சொல்கிறார்களே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் குறும்பான பேச்சும், எழுத்தும் நான் அறிந்ததே. இருந்தும் கடவுள் பற்றிய இந்த பதிவிலுமா. பரவாயில்லை அவனன்றி ஓர் அணுவும் அசையாது.இதை உறுதியாக நம்புகிறவன் நான். உங்களின் இந்த கருத்தையும் எழுத வைத்திருப்பவன்.அவன் தான். கடவுள் நம் அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும். நன்றி

      நீக்கு
  5. இன்றைய ‘செல்லப்பா தமிழ் டயரி’ யில் புதிய பதிவு ‘அபுசி-தொபசி-45’ வெளிவந்துள்ளது. அதில் தங்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. அன்புகூர்ந்து படிக்க வேண்டுகிறேன்.

    கீழ்க்கண்ட இணைப்பைச் சொடுக்கவும்:
    http://chellappatamildiary.blogspot.com/2014/09/107-45.html

    படித்து, கருத்துரை வழங்கினால் மகிழ்ச்சியடைவேன்.

    அன்புடன்,
    இராய செல்லப்பா

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்