ஞாயிறு, ஜனவரி 06, 2013

தென்றலின் கனவு-ஒரு பார்வை


தென்றலின் கனவு-ஒரு பார்வை 



நான் படிக்கும் பதிவோ கதையோ கவிதையோ  எனக்கு பிடித்து  விட்டால் உடனே கருத்துரையிட்டு  பாராட்டி விடுவது வழக்கம். தென்றல் வலைப்பூ வில் எழுதி வரும் இணைய பதிவர் திருமதி சசிகலா சங்கர் அவர்கள், பதிவர் திருவிழாவில் திரு.பட்டுகோட்டை பிரபாகர் அவர்களால்  வெளியிட்ட தென்றலின் கனவு என்ற அவரது கவிதை நூலை படித்த போது  எனது தளத்தில் ஒரு பகிர்வாய் தரலாமே என்று தோன்றியது. 

இது குறித்து நண்பர் அரசனிடம் பேசிய போது அவரும் எழுதுங்கள் சார் அவர்களுக்கு இது இன்னும் ஊக்கம் தருமே என்றார்.

இந்தியராய் பிறப்பது ஒரு இனிமையான வரம்  என்றும்,  தமிழராய் ஜனித்தது பெரும் பேறு என்றும்  பெருமை கொள்ளும்அவரது இக் கவிதை நூலை நான்  இயற்கை,குடும்பம், காதல்,சமூக அவலங்கள் நட்பு ஐந்து  பகுதிகளாக எடுத்து கொண்டு ஒரு பகிர்வாய் இங்கே தந்திருக்கிறேன் 

பிறைநிலவு ஒன்று வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது பௌர்ணமி யாவதற்கு என்று சொல்லும் இவரது தென்றலின் கனவை கண்டு நட்பு பாராட்டுவோம் வாருங்களேன்.


இயற்கை 

ஒரு சில கவிதைகள் பார்க்கும் போது அட நமக்கெல்லாம்  இப்படி தோணவில்லையே என்ற எண்ணம் வரும் . எனக்கு அந்த எண்ணத்தை கொண்டு வந்தது இந்த கவிதை

"எந்த விருந்தினருக்காக
என் வீட்டு வாழைமரத்தில்
இலை கழுவி கொண்டிருக்கிறது
மழை"

அழகை பற்றி  பட்டியலிடுகையில், " மானுடம் அழகு அதில் உள்ள மனிதநேயமழகு ரசிக்க மனமிருப்பின் பாலையும் கூட அழகு தான்" என்றுரைக்கிறார்  

வேரின் வலிகளை  பற்றி சொல்லும் கவிதையில்," விளம்பரத்திற்காய் உயிர் பெறும் சாலையோர தாவரங்கள்" என்று குறிப்பிட்டு, "வாடி நிற்கும் எங்களை கண்டால் பிடுங்கி எரியும் மனிதன் வாடிய  முகத்தோடு இருக்கும் மனிதரை எல்லாம் என்ன செய்கின்றான் " என்று கேள்வி யால் சாடுகிறார் 

பறவைகள் வாழ்வை கண்ணுற்று அது பற்றி சொல்லுகையில், "சிறகு முளைத்த மகவுகளைப் பறக்க வைக்கும் முயற்சி யே ஒரு தனி கவிதை" என்பதுடன்  அவைகளை வாழ விடுமாறு கவிதையால் வேண்டுகோள் விடுக்கிறார் 

"தான் விடுப்பில்  இல்லை என்பதை  அவ்வப்போது  வந்து உறுதி செய்யும் சூரியன்", என்று இருந்தும் இல்லாமல் இருப்பதன் அவஸ்தையை ஒரு கவிதையில் சுட்டுகிறார் 


"ஏர் மாடு பூட்டி எதிர்காலம் வாழத் தேயும் உழவர்களும்" என்று
பிறந்த மண்ணுக்கும்  இங்கு கவிதையால் மரியாதை செய்கிறார் தன் வரிகளில் 


சமூக அவலம்

சமூக அவலங்களை  அவர் தன் வரிகள் எனும் வாளால் கூறு போடுகிறார் 

" உடலூனம் தவறில்லை உள்ள ஊனம் பெருங்கேடு" என்று சாட்டை  சொடுக்குகிறார் 

சமூகத்தில் பெண்ணுரிமை பேச்சில் மட்டுமே என்று சொல்லுகையில்,
"மலடியென பட்டம் சூட்டி மனங்களை தீயிட்டு படைப்பின் குறைபாட்டுக்கு பெண்ணை பலியாக்கி நடத்தும் நாடகத்தின் பெயர் சமூக நீதியா" என்று 
எள்ளி நகையாடுகிறார் 

தாய் செய் நல பிரிவு தரும் அவஸ்தையை, "ஒரு பெண்ணின் கருச்சிதைவை பார்த்த படி நிகழும் மற்றொரு பெண்ணின் தலை பிரசவம்"
என்று  வலிகளில் தோய்த்த  வரிகளும் தருகிறார் 


காதல்

கவிதை என்று வந்து விட்டால்  காதல் என்ற அத்தியாயம் இல்லாமலா இதோ இங்கே பட்டியலிடுகிறார் 

"நீ சொல்லெரியாத போதெல்லாம் மனம் கல்லெறி பட்டதாய் காயப்படுகிறது"
என்று காதலின் அவஸ்தையை குறிப்பிடுவதுடன் 

"வீட்டு வேலைகளை நிறுத்தி விட்டு, வாசலில் மனதை நிறுத்தி
கணவன் திரும்பி பார்த்து போகும் ஒரு ஒற்றை பார்வைக்கு  காத்திருப்பதை"
பற்றியும் 

"அழைக்க மாட்டாய் என தெரிந்தும் நொடிக்கொரு முறை அலைபேசியை எடுத்து  பார்க்கும்" காதலின் விந்தையை பற்றியும் சொல்கிறார் 

"அறை கூட்டும் போதெல்லாம் உறக்கத்தில் நீ  உதிர்த்த வார்த்தைகளை எடுத்து பத்திரபடுத்துகிறேன்" என்று சொல்ல்பவர்,

"கண்ணாடி கூட விடை கொடுக்க மறுக்கும் அதிசயம்" பற்றியும் 
சொல்லி தன் வரிகளால் அலங்காரம் செய்கிறார் 

குடும்பம்

"இறைவனிடம் கேட்டு கொண்டு  அறை நாள் விடுப்பில்  வருமாறு அம்மாவை அழைக்கும்" தாய் பாசமும் 

"சண்டையே போட்டிராத அக்காவின் மேல்  கோபம் கொள்வதை குறிப்பிடும் அவர்,"சகோதர சகோதரிக்காக  வீட்டின் குட்டி திண்ணையில்  கவிதையுடன் காத்திருப்பதை" சொல்லும் போது  பிரிவின் வலியுடன் பாசத்தின் வலிமையையும் நம்மால் நன்குணர முடிகிறது   


நாளைய பள்ளி சீருடைக்காய் நனைந்து கொண்டிருக்கிறேன் கிணற்றடியில்,என்று எந்திர உலகை  நமக்கு காட்சிபடுத்தும் உணர்வுள்ள 
கவிதையும் உண்டு 

ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே வந்து பிரிவெளுதிப் போகும்  சந்ததிகளுக்காக காத்திருக்கும் முதுமையை அரவணைக்க சொல்லி முதுமையை தாலாட்டுகிறார் 


பிறந்த கூட்டுக்கு பிரிவெழுதி,என்று ஒரு பெண்ணின் திருமணத்திற்கு பின்னான வாழ்க்கையை அது கொடுக்கும்  பயத்தை,  கவிதையின்  துணை கொண்டு போக்கி நிம்மதி அடைவதை குறிப்பிடுவது பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ள துணை நிற்கிறது 


நட்பு

"ஒன்றாய் கை கோர்த்து நாம்  நடந்து தேய்ந்த  சாலைகள் சரிசெய்யபடுகிறதாம் இப்போது பார்த்து வரலாம் வா" ,

என்று  அன்பு தோழிக்கு அழைப்பு விடுக்கும் வரிகள் உன்னத நட்பை 
நமக்கு தெளிவாக்குகிறது 


. இப்படி எங்கு நோக்கிலும் வார்த்தைகளின் அணிவகுப்பில் கவிதைகள்  இருந்தாலும் எல்லாவற்றையும் ஒரே புத்தகத்தில் கொண்டு வராமல் 

நறுக்கு தெறித்த கவிதைகளை மட்டும் பட்டியலிட்டு இன்னும்  மெருகெற்றி வெளியிட்டிருந்தால்  நன்றாக இருந்திருக்கும்.ஒரு கவிதையே  மீண்டும் இன்னொரு பக்கத்தில் வந்திருப்பதை கவனித்து சரி செய்திருக்கலாம். 
மேலும் பாடல்கள் போன்ற கவிதைகள் நம்மை சுவாரஸ்யபடுத்தினாலும்,  சிறு கவிதைகள் தான் நம் கவனம் ஈர்த்து  நினைவில் நின்று கொள்கிறது.அத்தகைய சிறு  கவிதைகளில் இன்னும் நிறைய கவனம் செலுத்தலாம் என்பது எனது கருத்து.

கவிதை நூலை, முன் பக்க உள் அட்டையில் தாய் தந்தை க்கு சமர்ப்பித்து சிறப்பு சேர்ப்பதுடன், பின் பக்க உள் அட்டையில் கணவர் மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் படம் சேர்த்து அழகு சேர்க்கிறார் 






திருமதி சசிகலா சங்கர் அவர்கள் ஓரிடத்தில் இப்படி குறிப்பிடுகிறார் 


"நல் நோக்கத்தை மனமணிந்து ஆக்கத்தை உழைப்பாக்கி அன்போடு சீராட்டின்  நாளை அகிலமே வணங்கி நிற்கும் கனவு நாம் காண்கின்றோம்"

என்கின்ற இவரின் இக் கனவு நனவாக வேண்டும் என்று உளமார வாழ்த்துவோம்

ஆர்.வி.சரவணன் 





5 கருத்துகள்:

  1. பிறைநிலவு ஒன்று வளர்பிறையாய் வளர்ந்து கொண்டிருக்கிறது பௌர்ணமி யாவதற்கு என்று சொல்லும் இவரது தென்றலின் கனவை கண்டு நட்பு பாராட்டுவோம் ..
    நாளை அகிலமே வணங்கி நிற்கும் கனவு நனவாக வாழ்த்துகள்..!

    பதிலளிநீக்கு
  2. என்னிடம் ஒரு புத்தகத்தை கொடுத்து விமர்சனம் எழுதச்சொன்னால் இயலாத காரியமே . என்ன ஒரு அழகாக தனித்தனியாக பிரித்து தங்கள் கருத்தையும் இணைத்து விமர்சித்த விதம் மிகவும் மகிழ்வளித்தது. தங்களுக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

    முதல் புத்தகம் என்பதால் அனுபவம் எதுவும் தெரியாமல் அதுவும் பதிவர் சந்திப்பில் வெளியிட வேண்டும் என்கிற ஆவலிலும் அவரசத்தில் வெளியான நூல் ஆதலால் சில அல்ல பல குறைகள் இருக்கவே செய்கிறது. எனினும் தங்களைப் போல நண்பர்களின் விமர்சனங்களைப் பார்க்கும் போது அழகான அசத்தலான கவிதை தொகுப்பை அடுத்த புத்தகமாக வெளியிட ஆசை எழுகிறது. மீண்டும் நன்றி கூறி விடைபெறுகிறேன்.

    பதிலளிநீக்கு
  3. கவிதையீல் கருத்துக்கள் தந்த சசிகலா அவர்களுக்கு பாராட்டுக்கள்.

    அதன் நிறை(ய) மற்றும் சில குறைகளை விமர்சித்த விதம் அழகு.

    பதிலளிநீக்கு
  4. எளிமையாக இருந்தாலும் கச்சிதமாக இருந்தது உங்கள் பதிவு தென்றலின் கவிதையை போலவே ..
    வாழ்த்துக்கள் அக்கா ..(அப்படியே உங்களுக்கும் சார் )

    பதிலளிநீக்கு

  5. வணக்கம்!

    தமிழன் தமிழனைப் பாராட்ட வேண்டும்!
    அமிழ்தின் சுவையை அளித்து

    கவிஞா் கி. பாரதிதாசன்
    பிரான்சு

    பதிலளிநீக்கு

உங்கள் கருத்துரைகள் என் படைப்புகளுக்கான சுவாசம்