வணக்கம் நண்பர்களே இந்த இடுகை எனது எழுபத்தைந்தாவது இடுகையாக மலர்கிறது . இந்த எழுபதைந்தை நான் எட்டியதற்கு இறைவனின் அருளுடன் கூட ,உங்கள் அனைவரின் ஊக்கம் மற்றும் கருத்துரைகள் மூலமே இது சாத்தியமாயிற்று உங்கள் அனைவருக்கும் நன்றி

இந்த தீபாவளி ஸ்பெஷல் இடுகையை கொஞ்சம் வித்தியாசமாக நம்ம கவுண்டமணி அவர்கள் தொகுத்து வழங்குவது போல் எழுதியுள்ளேன்
ஸ்டார்ட் மியூசிக் ............
மகா ஜனங்களே
எல்லாருக்கும் வணக்கம்பா எப்படியிருக்கீங்க
நம்ம சரவணன் தீபாவளி ஸ்பெஷல் இடுகையை
நீங்கள் தொகுத்து வழங்கணும்னு கேட்டுக்கிட்டார் இது ஆவறதில்லை னு
நான் சொன்னேன். ஆனா பாருங்க மேட்டுக்குடி படத்திலே கார்த்திக்
நான் உங்க தம்பி மாதிரி னு சொல்வாரே அதே போல்
ஒரே அழுகாச்சி வேற வழி இதோ வந்துட்டேன்
இந்த தீபாவளி ஸ்பெஷல் இடுகையிலே எல்லாத்தையும்
கலந்து கட்டி கதம்பமா சரவணன் எழுதியிருக்காரு.
இந்த இடுகையை இணைந்து வழங்குவதற்கு விளம்பரதாரர் யாரும் வராததால் நாம நேரடியா நிகழ்ச்சிக்கு போயிடலாம்
முதலில் சரவணனோட பையன் ஹர்ஷவர்தன் ஓவியம் மூலமா தீபாவளி வாழ்த்து சொல்றாரு உங்களுக்கு பாருங்க

அடுத்து சரவணன் ஒரு ஜோக் சொல்றாரு கேளுங்க
மாப்பிள்ளை என்னம்மா பாடிக்கிட்டு இருக்காரு
அது ஒன்னும் இல்லப்பா தலை தீபாவளிக்கு நீங்க சீர் வரிசை செஞ்சது போல் மற்ற தீபாவளிக்கு எல்லாம் நீங்க சரியா செய்யலையாம்
அதனாலே தல போல வருமா என்று பாடுறாரு
ஜோக் சிரிப்பு வந்துச்சா வரலீனா அதுக்கு நான் பொறுப்பில்லை
அப்புறம் அவனவன் கொசு கடியிலே தூக்கம் வராமே அல்லாடறான் இவர் என்னடான்னா கவிதை எழுதறாரு கவிதையை படிங்க
கவிதை நல்லாருந்தா சொல்லுங்க கல் வெட்டில் செதுக்கி வச்சிட்டு பக்கத்திலேயே அவரை உட்கார வச்சிடுவோம் என்ன
அன்பே
நிசப்தமான இரவில்
சப்திக்கும் உன் காற்சதங்கைகளின் ஒலி
என் உறக்கதிற்க்கான தாலாட்டா
எனை கிறங்க வைப்பதற்கான அழைப்பா
என்று சிந்திப்பதிலேயே
என் இரவு பொழுது கரைகிறது
அடுத்து ஒரு எகத்தாளம் பிடிச்சவனை
பத்தி ஒரு சம்பவம் சொல்றாரு கேளுங்க
ஒருத்தன் சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷன் லேருந்து கிளம்ப இருந்த அரக்கோணம் வண்டியிலே வந்து உட்கார்ந்தான் .
நல்ல மதியான நேரம் புல்லா சாப்பிட்டுட்டு வந்தவனுக்கு வண்டி கிளம்புனவுடனே தூக்கம் வந்துச்சு வந்துச்சா அவன் பெரம்பூர் லே இறங்கனும் அதனாலே ஒரு ஐடியா பண்ணான் என்ன
அவனுக்கு பக்கத்திலே உட்கார்ந்தவன் கிட்டே பெரம்பூர் வந்தா கொஞ்சம் சொல்லுங்க நான் ஊருக்கு புதுசுன்னு சொன்னான் அதுக்கு அவனும் அதனாலென்ன சொல்றேன் னு சொன்னான்
இவன் அப்பாடா னு நிம்மதியா தூங்க ஆரம்பிச்சுட்டான் திடீர்னு வண்டி நிக்கிற சத்தம் கேட்டு கண் முழிச்சான். வண்டி நின்ன ஸ்டேஷன் வில்லிவாக்கம் அடடா ரெண்டு ஸ்டேஷன் தாண்டி வந்துட்டோமே னு பக்கத்திலே இருந்தவன் கிட்டே கேட்டான்
என்ன சார் பெரம்பூர் வந்துடுச்சான்னு
அவன் பெரம்பூர் தாண்டி வந்துட்டோமே என்று சொன்னான்
ஏன் என் கிட்டே சொல்லலைன்னு இவன் கேட்க போக
அவன் சொல்லனும்னு நினைச்சேன் ஆனா நீங்க தூங்கிகிட்டு இருந்தீங்களே
தூங்கினா என்ன எழுப்பி சொல்ல வேண்டியது தானே னு இவன் சொல்ல தூங்குறவங்களை எழுப்பறது பாவம் சார் என்று நிதானமாக சொன்னவனை
பார்த்த இவனது முகத்தில் ஈயாடவில்லை அப்படின்னு சொல்றது பழசு
அதனாலே எறும்பு ஆடவில்லை கொசு ஆடவில்லை இப்படி எது வேணும்னாலும் போட்டு நீங்க படிச்சுக்கலாம். ஹா ஹா
அடுத்து சரவணனோட மனம் கவர்ந்த பாடல் பத்தி சொல்றாரு கேளுங்க
எங்கே என் ஜீவனே.............
படம் உயர்ந்த உள்ளம்
நாயகன் நாயகி கமல் , அம்பிகா
பாடல் வைரமுத்து
இயக்கம் S.P.முத்துராமன்
இந்த பாடல் ஆரம்பிக்கும் போது ஜேசுதாஸ் ஆ...ஆ....ஆ... என்று ராகம்
இசைக்க கூடவே இளையராஜாவின் இசை சாரல் மெல்லிய பூந் தூறலாக ஆரம்பித்து அவரின் இசை மழை நம்மை நனைக்கும் நம் இதயம் வரை
இந்த இசை மழை, நம்மை, மரங்கள் அடர்ந்த ஒரு பசுமை வெட்டவெளியில் நம் துணையுடன் ஊஞ்சல் ஆட விட்டிருக்கும்.
ஜேசுதாஸ் ஜானகி குரல்கள், தரும் சுகானுபவம் என்னவென்றால் தென்றலை தொட்டு மயில் தோகையால் ஊஞ்சல் ஆடும் நம்மை விசிறி விடுவது போல் தோன்றும்.ஒரு அனுபவம்
ராக தேவன் தரும் இந்த இன்பத்தை வர்ணிக்க வார்த்தைகள் புதிதாய் தேட
வேண்டும்
அடுத்து சிறுகதை இதை படிங்க மனசிலே நிக்கிற கதையா இல்லை
ரெண்டுநிமிஷம் பட்டாம்பூச்சி போல் மின்னுட்டு போற கதையான்னு
முடிவு பண்ணுங்க பார்ப்போம்

தீபாவளிக்கு வந்த வி ஐ பி
இந்த தீபாவளிக்கு நம்ம வீட்டுக்கு ஒரு வி ஐ பி யை அழைச்சிட்டு வரபோறேன் என்று சொன்ன கார்த்திக்கை அவன் மனைவி உமா ,மகன், மகள், ஆகியோர் ஆச்சரியமாய் பார்த்தனர்.
உடனே எழுந்து அருகில் வந்த அவன் பையன் லேட்டஸ்ட் பட்டாசு எதுனா வாங்கிட்டு வர போறீங்க அதானே என்றான்
இல்லடா
பின்னே சினிமா பிரபலம் யாராவது டிவி ஷோ மூலமாவீட்டுக்கு வர்றாங்களா இது அவன் மகள்
அதுவும் இல்லை
பின்னே எதை சொல்றீங்க என்ற அவன் மனைவி உமா , ஏங்க நீங்க பாட்டுக்கு யாரவது கேர்ள் பிரண்டை அழைச்சிட்டு வந்து மானத்தை வாங்காதீங்க என்றாள்.
சீ அப்படில்லாம் இல்லே
பின்னே யார் அந்த வி ஐ பி சொல்லுங்க என்று மூவரும்கோரசாய் கத்தவும்
கார்த்திக் அது suspence என்றான் சிரித்து கொண்டே
தீபாவளி முதல் நாள் கார்த்திக் அழைத்து வந்தான் ஏழெட்டு வயதுள்ள
ஒரு சிறுவன் ஒரு சிறுமியை
மூவரும் குழப்பமாய் கார்த்திக்கை பார்க்க
அவன் சொன்னான் .
இந்த தீபாவளி பிறந்த நாள் வரும்போது எல்லோரும் அனாதை ஆசிரமம் போய் ஒரு வேலை சாப்பாடு போடுவாங்க இந்த நடைமுறையில் எனக்கு உடன்பாடில்லை .அவர்கள் அனாதை என்றே முத்திரை குத்தியது போல் தொன்றுகிறது எனக்கு .
எனவே நான் அனாதை ஆசிரமத்தில் இருந்து ஒரு பையன் பெண்ணை
ஒரு வாரத்திற்கு அனுமதி வாங்கி அழைச்சிட்டு வந்துட்டேன் இந்த தீபாவளிக்கு இவங்க தான் நம்ம சீப் கெஸ்ட்
அவங்களும் நம்ம பிள்ளைகள் தான். நல்லா உபசரிக்கணும் நீங்க ஓகே என்ற கார்த்திக்கை பார்த்த அவன் மனைவி உமா உங்களை நினைத்தால் பெருமையா இருக்குங்க என்றாள். கார்த்திக் அவளது தோளை தட்டி கொடுத்தான்.
கார்த்திக்கின் மகன் மகள் இருவரும் உங்களை போலவே எல்லா அப்பா அம்மாவும் இது போல் செய்ய ஆரம்பித்தால் நம் நாட்டில் அனாதையே இல்லாமல் போய் விடுவார்கள் இல்லையா என்றனர்.
ஆம் என்று தலையாட்டினார்கள் கார்த்திக்கும் உமாவும் .
அவர்களின் மகனும் மகளும் அந்த சிறுவர் சிறுமியின் அருகில் சென்று வெல்கம் என்று சொல்லி கை பிடித்து வரவேற்றனர்.
அப்பாடா என்ன முடிஞ்சுடிச்சா ஏதோ என் ரசிகர் சொன்னாரேன்னு வந்தேன்
உங்க எல்லாரையும் மீட் பண்ணதிலே ரொம்ப சந்தோசம் .
நீங்க படிச்சதெல்லாம்
நல்லா இருந்துதா இல்லையா னு அவர்கிட்டே சொல்லுங்க
எல்லாரும் தீபாவளியை அவரவர் இஷ்டபடி கொண்டாடுங்க நான் வரேன்
எங்கள் வீட்டு function இல் இடப்பட்ட கோலங்களை கிளிக்கியது நான்
ஆர்.வி.சரவணன்